Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 72

எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்

எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்

யெகோவாவிடம் இந்த நபர் எதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? யெகோவாவின் பலிபீடத்திற்கு முன் இந்தக் கடிதங்களை இவர் ஏன் வைத்திருக்கிறார்? இவருடைய பெயர் எசேக்கியா. இவர் இஸ்ரவேலின் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தின் ராஜா. இவர் பயங்கரமான பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ஏன்?

ஏனென்றால் அசீரியப் படைகள் 10 கோத்திர வடக்கு ராஜ்யத்தை ஏற்கெனவே அழித்து விட்டன. ஜனங்கள் மிக மோசமானவர்களாக இருந்ததால் யெகோவா அதை அனுமதித்தார். இப்போது அசீரியப் படைகள் இந்த இரண்டு கோத்திர ராஜ்யத்துடன் போர் செய்ய வந்திருக்கின்றன.

அசீரிய ராஜா இப்போதுதான் எசேக்கியா ராஜாவுக்குக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதங்களையே கடவுளுக்கு முன்பாக அவர் வைத்திருக்கிறார். அந்தக் கடிதங்களில் யெகோவாவைப் பற்றி கேலியாக எழுதப்பட்டிருக்கிறது, எசேக்கியா சரணடையும்படியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவர் யெகோவாவை நோக்கி: ‘யெகோவா தேவனே, அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், அப்போது நீர் ஒருவரே கடவுள் என்று எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்’ என்று ஜெபிக்கிறார். எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளிப்பாரா?

எசேக்கியா ஒரு நல்ல ராஜா. இஸ்ரவேலின் 10 கோத்திர ராஜ்யத்தின் கெட்ட ராஜாக்களைப் போன்றவர் அல்ல. தன்னுடைய கெட்ட அப்பாவான ஆகாஸ் ராஜாவைப் போன்றவரும் அல்ல. யெகோவாவின் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் எசேக்கியா கவனமாக கீழ்ப்படிந்திருக்கிறார். அதனால், எசேக்கியா ஜெபித்து முடித்ததும் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா ஒரு செய்தியை அவருக்கு அனுப்புகிறார், அதாவது: ‘அசீரிய ராஜா எருசலேமுக்குள் வர மாட்டான். அவனுடைய படைவீரர்களில் ஒருவனும் எருசலேமின் அருகில்கூட வர மாட்டார்கள். நகரத்தின் மீது ஒரு அம்பையும் எய்ய மாட்டார்கள்!’

இங்குள்ள படத்தைப் பார். செத்துப் போயிருக்கும் இந்தப் படைவீரர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? இவர்கள் அசீரியர்கள். யெகோவா ஒரு தேவதூதனை அனுப்பினார், அந்தத் தேவதூதன் ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய படைவீரர்களைக் கொன்று போட்டார். அதனால் அசீரிய ராஜா போர் செய்யாமல் தன் தேசத்துக்கே திரும்பிப் போய் விட்டான்.

இப்படியாக, இரண்டு கோத்திர ராஜ்யம் பாதுகாக்கப்பட்டது, சிறிது காலத்திற்கு ஜனங்கள் சமாதானமாக வாழ்ந்தார்கள், ஆனால் எசேக்கியா இறந்த பின்பு அவருடைய மகன் மனாசே ராஜாவாக ஆகிறார். மனாசேயும் அவருடைய மகன் ஆமோனும் மிக மோசமான ராஜாக்கள். அதனால் மறுபடியும் தேசத்தில் பயங்கர குற்றச்செயல்களும் வன்முறையும் அதிகரிக்கிறது. ஆமோன் ராஜாவை சொந்த வேலைக்காரர்களே கொலை செய்துவிடுகிறார்கள், பிறகு அவருடைய மகன் யோசியா இரண்டு கோத்திர ராஜ்யத்தின் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார்.