Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 74

பயப்படாத ஒரு மனிதன்

பயப்படாத ஒரு மனிதன்

இந்த வாலிபனைக் கேலி செய்யும் ஆட்களைப் பார். இவர் யார் என்று உனக்குத் தெரியுமா? இவர் எரேமியா. கடவுளுடைய முக்கியமான ஒரு தீர்க்கதரிசி.

யோசியா ராஜா விக்கிரகங்களைத் தேசத்திலிருந்து அழித்துப்போடத் தொடங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு, யெகோவா எரேமியாவைத் தீர்க்கதரிசியாக இருக்கச் சொல்கிறார். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க தனக்கு வயது போதாதென்று எரேமியா நினைக்கிறார். ஆனால் அவருக்கு யெகோவா உதவி செய்வதாகக் கூறுகிறார்.

கெட்ட காரியங்களை விட்டுவிடும்படி இஸ்ரவேலருக்கு எரேமியா சொல்கிறார். ‘மற்ற தேசத்து ஜனங்கள் வணங்குகிற கடவுட்களெல்லாம் பொய்க் கடவுட்கள்’ என்று அவர் சொல்கிறார். என்றாலும் இஸ்ரவேலரில் பலர், உண்மையான கடவுளான யெகோவாவைவிட, விக்கிரகங்களையே வணங்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கெட்ட நடத்தைக்காக கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று எரேமியா அந்த ஜனங்களுக்குச் சொல்கிறபோது அவர்கள் ஏளனமாக சிரிக்கிறார்கள்.

பல ஆண்டுகள் கடந்து செல்கின்றன. யோசியா மரிக்கிறார், மூன்று மாதங்களுக்குப் பிறகு அவருடைய மகன் யோயாக்கீம் ராஜாவாகிறார். எரேமியா ஜனங்களைப் பார்த்து: ‘நீங்கள் உங்களுடைய கெட்ட வழிகளை விட்டுவிடாவிட்டால் இந்த எருசலேம் நகரம் அழிக்கப்படும்’ என்ற செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதனால் ஆசாரியர்கள் அவரைப் பிடித்து: ‘இப்படிச் சொன்னதற்காக நீ கொல்லப்பட வேண்டும்’ என்று கத்துகிறார்கள். பிறகு, இஸ்ரவேலின் பிரபுக்களிடம்: ‘எரேமியா நம்முடைய நகரத்துக்கு விரோதமாகப் பேசியதால் அவனைக் கொல்ல வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.

எரேமியா இப்போது என்ன செய்யப் போகிறார்? அவர் பயப்படுவதில்லை! ‘இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லச் சொல்லி யெகோவாதான் என்னை அனுப்பினார். உங்களுடைய கெட்ட வாழ்க்கையை விட்டு நீங்கள் மாறாவிட்டால் எருசலேமை யெகோவா அழித்துப்போடுவார். நீங்கள் என்னைக் கொல்கிறீர்கள் என்றால், எந்தத் தப்பும் செய்யாத ஒரு அப்பாவியைத்தான் கொல்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்’ என்று சொல்கிறார்.

அந்தப் பிரபுக்கள் எரேமியாவை கொல்லாமல் விட்டுவிடுகிறார்கள், ஆனால் இஸ்ரவேலர் தங்கள் கெட்ட வழிகளை விட்டுவிடவில்லை. பிற்பாடு பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு விரோதமாய் போர் செய்து, இஸ்ரவேலரைத் தன்னுடைய வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்கிறான். ஆயிரக்கணக்கானோரை அவன் பாபிலோனுக்குக் கொண்டு போகிறான். முன்பின் தெரியாத ஜனங்கள் உன்னை உன் வீட்டிலிருந்து பிரித்து வேறொரு நாட்டுக்குக் கொண்டு போனால் உனக்கு எப்படியிருக்குமென்று சற்று யோசித்துப் பார்!