Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 52

கிதியோனும் அவருடைய 300 ஆட்களும்

கிதியோனும் அவருடைய 300 ஆட்களும்

இங்கே என்ன நடக்கிறதென்று உனக்குத் தெரிகிறதா? இவர்கள் எல்லோரும் இஸ்ரவேல் வீரர்கள். இவர்கள் குனிந்து கொண்டு தண்ணீர் குடிக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பது நியாயாதிபதி கிதியோன். அவர்கள் எப்படித் தண்ணீர் குடிக்கிறார்கள் என்பதை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் எப்படித் தண்ணீர் குடிக்கிறார்கள் என்று கவனமாகப் பார். சிலர் குனிந்தவாறு குடிக்கிறார்கள். ஆனால் ஒருவன் மட்டும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதற்காக தண்ணீரை கைகளில் அள்ளியெடுத்துக் குடிக்கிறான். இது முக்கியம், ஏனென்றால் தண்ணீர் குடிக்கையில்கூட உஷாராக இருக்கிற ஆட்களை மாத்திரமே தேர்ந்தெடுக்கும்படி யெகோவா கிதியோனிடம் கூறினார். மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விடும்படியும் கூறினார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

இஸ்ரவேலர் மறுபடியும் ஏகப்பட்ட பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதே அதற்குக் காரணம். மீதியான் தேசத்தார் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைக் கொடூரமாக நடத்துகிறார்கள். எனவே, யெகோவாவை நோக்கி அவர்கள் கதறுகிறார்கள். அவர்களுடைய கதறலைக் கேட்டு யெகோவா உதவி செய்கிறார்.

ஒரு படையைத் திரட்டும்படி கிதியோனிடம் யெகோவா சொல்கிறார். அவ்வாறே கிதியோன் 32,000 போர் வீரர்களைத் திரட்டுகிறார். ஆனால் எதிரிகளின் படையில் 1,35,000 ஆட்கள் இருக்கிறார்கள். என்றபோதிலும், யெகோவா கிதியோனிடம்: ‘உன்னிடம் அளவுக்கதிகமான ஆட்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். யெகோவா ஏன் அப்படிச் சொன்னார்?

இஸ்ரவேலர் போரில் வெற்றியடைந்தால், தங்கள் சொந்த பலத்தினால்தான் வெற்றி கிடைத்ததென்று ஒருவேளை நினைத்துவிடலாம். அதோடு வெற்றியடைய தங்களுக்கு யெகோவாவின் உதவி தேவைப்படவில்லை என்றும் நினைத்துவிடலாம். அதனால்தான் கிதியோனிடம் யெகோவா: ‘பயப்படுகிற எல்லா ஆட்களையும் வீட்டுக்குப் போய்விடச் சொல்’ என்று கூறுகிறார். கிதியோன் அப்படிச் சொன்னவுடன் 22,000 வீரர்கள் வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். இப்போது 1,35,000 போர் வீரருக்கு எதிராகப் போர் செய்ய 10,000 பேர் மாத்திரமே இருக்கிறார்கள்.

ஆனாலும் கிதியோனிடம் யெகோவா என்ன சொல்கிறார் என்று கேள்! ‘இன்னும் உன்னிடத்தில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். எனவே, நீரோடையிலிருந்து தண்ணீர் குடிக்குமாறு அந்த ஆட்களுக்குக் கட்டளையிடச் சொல்கிறார். யாரெல்லாம் குனிந்து தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிடச் சொல்கிறார். ‘சுற்றும் முற்றும் கவனித்தவாறே தண்ணீர் குடிக்கிற 300 ஆட்களை மட்டுமே வைத்து நான் உனக்கு வெற்றி கொடுப்பேன்’ என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார்.

போர் செய்யும் நேரம் வருகிறது. 300 ஆட்களை மூன்று பகுதிகளாக கிதியோன் நிறுத்துகிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எக்காளத்தையும் ஒவ்வொரு பானையையும் அதற்குள் தீவட்டியையும் கொடுக்கிறார். ஏறக்குறைய நடுராத்திரியில் எதிரிகளின் பாளயத்தைச் சுற்றிக் கூடுகிறார்கள். பின்பு, ஒரே சமயத்தில் அவர்கள் எல்லோரும் எக்காளம் ஊதி, பானைகளை உடைத்து: ‘யெகோவாவின் பட்டயம் கிதியோனின் பட்டயம்!’ என்று கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட எதிரிகள் எல்லோரும் என்ன நடக்கிறதென்று புரியாமல் குழம்பிப் போகிறார்கள், பயத்தில் தலைதெறிக்க ஓடிவிடுகிறார்கள். இப்படியாக இஸ்ரவேலருக்கு அந்த யுத்தத்தில் வெற்றி கிடைக்கிறது.

நியாயாதிபதிகள் 6-8 அதிகாரங்கள்.