Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 49

சூரியன் அசையாமல் நிற்கிறது

சூரியன் அசையாமல் நிற்கிறது

யோசுவாவைப் பார். ‘சூரியனே அசையாமல் நில்!’ என்று அவர் சொல்கிறார். அவர் சொன்னபடியே சூரியனும் அசையாமல் நிற்கிறது. நடு வானத்தில் அதே இடத்தில் ஒரு நாள் பூராவும் நிற்கிறது. யெகோவாவே இப்படிச் செய்திருக்கிறார்! ஆனால் சூரியன் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டுமென யோசுவா ஏன் விரும்புகிறார்? நாம் பார்க்கலாம்.

கானான் தேசத்திலிருக்கிற அந்த ஐந்து கெட்ட ராஜாக்கள் கிபியோனியருடன் போர் செய்ய வருகிறார்கள்; உடனே கிபியோனியர் யோசுவாவிடம் உதவி கேட்டு ஆள் அனுப்புகிறார்கள். ‘சீக்கிரமாய் எங்களிடம் வாரும்! எங்களைக் காப்பாற்றும்! மலை தேசத்து ராஜாக்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு விரோதமாய் போர் செய்ய வந்திருக்கிறார்கள்’ என்று அந்த ஆள் சொல்கிறான்.

உடனடியாக யோசுவாவும் அவருடைய படை வீரர்களும் அங்கே போகிறார்கள். இரவு முழுவதும் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் கிபியோனுக்கு வந்து சேருகையில், அந்த ஐந்து ராஜாக்களின் போர் வீரர்கள் பயந்தோட ஆரம்பிக்கிறார்கள். அப்பொழுது வானத்திலிருந்து கல்மழை விழும்படி யெகோவா செய்கிறார். யோசுவாவின் படை வீரர்களால் கொல்லப்பட்டவர்களைவிட இந்தக் கல்மழையால் அதிகமானோர் கொல்லப்படுகிறார்கள்.

சூரியன் மறைந்து இருட்டாகி விட்டால் அந்தக் கெட்ட ராஜாக்களின் போர் வீரர்கள் தப்பி ஓடிவிடுவார்கள் என்பது யோசுவாவுக்குத் தெரியும். அதனால் அவர் யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு, ‘சூரியனே அசையாமல் நில்!’ என்று சொல்கிறார். சூரியன் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கையில், இஸ்ரவேலர் வெற்றிகரமாய் போர் செய்து முடிக்கிறார்கள்.

கடவுளுடைய ஜனங்களை வெறுக்கிற இன்னும் பல கெட்ட ராஜாக்கள் கானானில் இருக்கிறார்கள். அந்தத் தேசத்தில் 31 ராஜாக்களைத் தோற்கடிக்க யோசுவாவுக்கும் அவருடைய படைக்கும் ஏறக்குறைய ஆறு வருஷமாகிறது. அதன் பிறகு, யோசுவா கானான் தேசத்தைப் பிரித்து, இன்னும் இடம் தேவைப்படுகிற கோத்திரங்களுக்கு அதைக் கொடுக்கிறார்.

பல ஆண்டுகள் கடந்து செல்கின்றன. யோசுவா கடைசியாக 110-வது வயதில் மரிக்கிறார். யோசுவாவும் அவருடைய நண்பர்களும் உயிருடன் இருக்கும்வரை ஜனங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஆனால் இந்த நல்ல ஆட்கள் இறந்த பின் கெட்ட காரியங்களைச் செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு நிஜமாகவே கடவுளுடைய உதவி தேவைப்படுகிறது.