Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 36

பொன் கன்றுக்குட்டி

பொன் கன்றுக்குட்டி

ஐயையோ! இந்த ஜனங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்! ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

மோசே மலைக்கு ஏறிப் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது, அதனால் இந்த ஜனங்கள்: ‘மோசேக்கு என்ன நடந்துவிட்டதோ தெரியவில்லை. இந்தத் தேசத்திலிருந்து நம்மை வெளியே நடத்திக்கொண்டு செல்ல ஒரு கடவுளை நாம் உண்டாக்கிக் கொள்ளலாம், வாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.

மோசேயின் அண்ணன் ஆரோனும் அதற்கு ‘சரி’ என்று சொல்கிறார். ‘உங்கள் தங்கத் தோடுகளைக் கழற்றி, என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்கிறார். அந்த ஜனங்கள் அவற்றை ஆரோனிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்; அப்போது, அவற்றை உருக்கி ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்கிறார். ‘எகிப்திலிருந்து எங்களை வழிநடத்தி வந்த எங்கள் கடவுள் இதுவே’ என்று அந்த ஜனங்கள் சொல்கிறார்கள். பின்பு அந்த இஸ்ரவேலர் பெரிய ஒரு விருந்து கொண்டாடி, அந்தக் கன்றுக்குட்டியை வணங்குகிறார்கள்.

இதை யெகோவா பார்த்து மிகவும் கோபமடைகிறார். அதனால் அவர் மோசேயிடம்: ‘சீக்கிரமாய்க் கீழே போ, இந்த ஜனங்கள் ரொம்ப மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். என் சட்டங்களை மறந்து ஒரு பொன் கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்.

மோசே அவசர அவசரமாக மலையிலிருந்து கீழே இறங்குகிறார். கூடாரம் போட்டுள்ள இடத்தை நெருங்குகையில் அங்கே அவர் என்ன பார்க்கிறார் தெரியுமா? அந்தப் பொன் கன்றுக்குட்டியைச் சுற்றி அந்த ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்! உடனே மோசேக்கு பயங்கர கோபம் வருகிறது, சட்டங்கள் எழுதப்பட்ட அந்த இரண்டு தட்டையான கற்களைக் கீழே தூக்கிப்போடுகிறார். அவை சுக்கல் சுக்கலாகி விடுகின்றன. பின்பு அந்தப் பொன் கன்றுக்குட்டியை உருக்கி அதை பொடியாக்கி விடுகிறார்.

இந்த ஜனங்கள் ரொம்பவும் மோசமான காரியத்தைச் செய்து விட்டார்கள். அதனால் மோசே சில ஆட்களைப் பார்த்து: ‘அந்தப் பொன் கன்றுக்குட்டியை வணங்கிய கெட்ட மக்களை உங்கள் பட்டயங்களால் வெட்டிப் போடுங்கள்’ என்று சொல்கிறார். அவர் சொன்னபடியே 3,000 பேரை அந்த ஆட்கள் வெட்டிக் கொல்கிறார்கள்! எந்தப் பொய்க் கடவுட்களையும் வணங்கக் கூடாது, யெகோவாவை மாத்திரமே நாம் வணங்க வேண்டும் என்று இது காட்டுகிறது அல்லவா?