Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 23

பார்வோனின் கனவுகள்

பார்வோனின் கனவுகள்

இரண்டு வருஷம் ஓடிவிடுகிறது, யோசேப்பு இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அவரைப் பற்றிய நினைப்பே பானபாத்திரக்காரனுக்கு வரவில்லை. பின்பு ஒருநாள் பார்வோன் இரண்டு விசேஷ கனவுகளைக் காண்கிறான். அவற்றின் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான். பார்வோன் அங்கே தூங்கிக் கொண்டிருப்பதை நீ பார்க்கிறாயா? அடுத்த நாள் காலையில் அவன் தன்னுடைய ஞானிகளை வரவழைத்து கனவுகளில் பார்த்த காரியங்களை அவர்களுக்குச் சொல்கிறான். ஆனால் அந்தக் கனவுகளின் அர்த்தத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை.

கடைசியில், பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பின் ஞாபகம் வருகிறது. அவன் பார்வோனிடம்: ‘நான் சிறையில் இருந்தபோது கனவுகளின் அர்த்தத்தைச் சொல்கிற ஒரு ஆள் அங்கிருந்தார்’ என்று சொல்கிறான். உடனடியாக யோசேப்பைச் சிறையிலிருந்து அழைத்து வரும்படி பார்வோன் உத்தரவிடுகிறான்.

யோசேப்பிடம் பார்வோன் தன் கனவுகளைச் சொல்கிறான்: ‘ஏழு கொழுத்த அழகிய பசுக்களைப் பார்த்தேன், பின்பு, எலும்பும் தோலுமாயிருந்த ஏழு மெலிந்த பசுக்களையும் நான் பார்த்தேன். இந்த மெலிந்த பசுக்கள் அந்தக் கொழுத்தப் பசுக்களை விழுங்கிவிட்டது போல் கண்டேன்.

‘என்னுடைய இரண்டாவது கனவில் செழுமையாய் முற்றியிருந்த ஏழு தானியக் கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டேன். பின்பு காய்ந்து போயிருந்த ஏழு தானியக் கதிர்களைக் கண்டேன். காய்ந்து போயிருந்த தானியக் கதிர்கள் அந்த ஏழு நல்ல தானியக் கதிர்களை விழுங்கத் தொடங்கியது போல் கண்டேன்.’

யோசேப்பு பார்வோனிடம்: ‘இந்த இரண்டு கனவுகளும் ஒரே காரியத்தைக் குறிக்கின்றன. அந்த ஏழு கொழுத்தப் பசுக்களும் அந்த ஏழு செழுமையான தானியக் கதிர்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. அந்த ஏழு மெலிந்த பசுக்களும் அந்த ஏழு காய்ந்த தானியக் கதிர்களும் அதற்கு அடுத்து வரும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. எகிப்தில் ஏழு வருஷம் ஏராளமான உணவு இருக்கும். அதன் பின்பு ஏழு வருஷத்திற்கு பஞ்சம் இருக்கும்’ என்று சொல்கிறார்.

‘எனவே, அந்த ஏழு நல்ல வருஷத்தில் உணவைச் சேர்த்து வைக்கும் பொறுப்பை ஒரு ஞானமுள்ள ஆளுக்கு கொடும். அப்போதுதான் அடுத்து வரும் அந்த ஏழு வருட பஞ்சத்தின்போது மக்கள் பட்டினியால் வாட மாட்டார்கள்’ என்றும் பார்வோனிடம் சொல்கிறார்.

பார்வோனுக்கு இந்த ஆலோசனை ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் உணவைச் சேகரித்து, அதைச் சேமித்து வைக்கும் பொறுப்பை யோசேப்புக்கே அளிக்கிறான். பார்வோனுக்கு அடுத்த மிக முக்கியமான ஸ்தானம் யோசேப்புக்குக் கிடைக்கிறது.

எட்டு வருஷத்திற்குப் பின், பஞ்ச காலத்தின்போது சில ஆட்கள் தன்னிடம் வருவதை யோசேப்பு பார்க்கிறார். அவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? அவருடைய 10 அண்ணன்மாரே அவர்கள்! கானானில் அவர்கள் வீட்டில் உணவு குறைந்துவிட்டதால் அவர்களது அப்பா யாக்கோபு அவர்களை எகிப்துக்கு அனுப்பியிருக்கிறார். யோசேப்பு தன்னுடைய அண்ணன்மாரை அடையாளம் கண்டுகொள்கிறார், ஆனால் அவர்களுக்கு யோசேப்பை அடையாளம் தெரியவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் யோசேப்பு பெரியவராக வளர்ந்துவிட்டார், அதோடு, வித்தியாசமான உடைகளை உடுத்தியிருந்தார்.

தான் சிறுவனாக இருக்கையில், தன்னுடைய சகோதரர்கள் தனக்கு முன் தலைகுனிந்து வணங்குவது போல் தான் கண்ட கனவு அவருடைய நினைவுக்கு வருகிறது. இதைப் பற்றி வாசித்தது உனக்கு நினைவிருக்கிறதா? எனவே, ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் கடவுள் தன்னை எகிப்துக்கு அனுப்பியிருக்கிறார் என்பதை யோசேப்பு புரிந்துகொள்கிறார். யோசேப்பு என்ன செய்வார் என்று நீ நினைக்கிறாய்? நாம் பார்க்கலாம்.