Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 115

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

இந்தப் படத்திலுள்ள பெரிய பெரிய மரங்களையும், வண்ண வண்ண பூக்களையும் உயர உயரமான மலைகளையும் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது இல்லையா? ஒரு மான் இந்தச் சின்ன பையனுடைய கையிலிருந்து எப்படி வாங்கிச் சாப்பிடுகிறது பார். அந்தச் சிங்கங்களையும் பசும்புல்லில் நின்றுகொண்டிருக்கிற அந்தக் குதிரைகளையும் பார். இதுபோன்ற இடத்தில் வீடு கட்டி இருக்க ஆசைப்படுகிறாய் தானே?

பரதீஸாக மாற்றப்பட்ட பூமியில் நீ என்றென்றுமாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். இன்று ஜனங்களுக்கு இருக்கும் எந்த வலியும் வேதனையும் உனக்கு வரக்கூடாது என அவர் நினைக்கிறார். அந்தப் புதிய பரதீஸில் வாழப் போகிறவர்களுக்கு பைபிள் கொடுக்கிற வாக்கு இதுவே: ‘கடவுள் அவர்களோடு கூட இருப்பார். மரணமோ, அழுகையோ, வேதனையோ இனி இருக்காது, பழைய காரியங்களெல்லாம் ஒழிந்து போய்விட்டன.’

இந்த அற்புத மாற்றம் கண்டிப்பாக நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார். இது எப்பொழுது நடக்குமென்று உனக்குத் தெரியுமா? ஆம், எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் நீக்கிவிட்டு பூமியை அவர் சுத்தமாக்கிய பின்பே அது நடக்கும். இயேசு பூமியில் இருக்கும்போது எல்லா வகையான நோய்களிலிருந்தும் மக்களைச் சுகப்படுத்தினார், மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார் இல்லையா?

அதையெல்லாம் அவர் ஏன் செய்தார் தெரியுமா? கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது பூமி முழுவதிலும் தாம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டவே அவர் அதையெல்லாம் செய்தார். சற்று கற்பனை செய்து பார், பூமியில் அந்தப் புதிய பரதீஸ் எவ்வளவு அருமையாக இருக்கும்! இயேசு, தாம் தேர்ந்தெடுக்கிற சிலரோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அந்த ராஜாக்கள் பூமியிலுள்ள ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வார்கள், எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பார்கள். அந்தப் புதிய பரதீஸில் கடவுள் கொடுக்கப் போகிற நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதை இப்போது பார்க்கலாம்.