இந்தப் புத்தகத்தில் என்ன அடங்கியுள்ளது
இந்தப் புத்தகத்தில் என்ன அடங்கியுள்ளது
ஒருவர் முதல் முறையாக ஒரு நூலகத்தில் நுழைகிறார் என்றால், அங்கே வரிசை வரிசையாக இருக்கும் புத்தகங்களைப் பார்த்ததும் ஒருவேளை அவருக்கு தலையே சுற்றும். ஆனால், புத்தகங்கள் எவ்வாறு வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கொஞ்சம் விளக்கம் தந்தால்போதும், எதை எங்கே காணலாம் என்பதை அவர் விரைவில் கற்றுக்கொள்வார். அதேபோல், பைபிளின் பொருளடக்கம் எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் போதும், பைபிளில் எதை எங்கே காணலாம் என்பது உங்களுக்கும் எளிதாகிவிடும்.
“பைபிள்” என்ற வார்த்தை “பிப்ளியா” (bi·bliʹa) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. “பப்பைரைஸ் சுருள்கள்” அல்லது “புத்தகங்கள்” என்பது இதன் அர்த்தம்.1உண்மையில் புத்தகங்களின் ஒரு தொகுப்பே பைபிள். அதாவது 66 தனி புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகம். அதனை எழுதும் பணி பொ.ச.மு. 1513 முதல் பொ.ச. 98 வரையாக சுமார் 1,600 வருடங்களுக்கு நீடித்தது.
முதல் 39 புத்தகங்கள், கிட்டத்தட்ட பைபிளின் முக்கால்வாசி, எபிரெய வேதாகமம் என்று அறியப்படுகின்றன. ஏனென்றால் பெரும்பாலும் அவை அம்மொழியிலேயே எழுதப்பட்டன. பொதுவாகவே, இப்புத்தகங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்: (1) வரலாறு, ஆதியாகமம் முதல் எஸ்தர் வரை, 17 புத்தகங்கள்; (2) கவிதை, யோபு முதல் உன்னதப்பாட்டு வரை, 5 புத்தகங்கள்; (3) தீர்க்கதரிசனம், ஏசாயா முதல் மல்கியா வரை, 17 புத்தகங்கள். பூமியின், மனிதகுலத்தின் ஆரம்ப வரலாறும், மேலும் தொடக்கம் முதல் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய இஸ்ரவேலருடைய வரலாறும் எபிரெய வேதாகமத்தில் அடங்கியுள்ளன.
மீதி இருக்கும் 27 புத்தகங்கள் அன்றைய சர்வதேச மொழியாக இருந்த கிரேக்க மொழியில் எழுதப்பட்டதால், அவை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்று அறியப்படுகின்றன. பொருளடக்கத்தின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தலாம்: (1) 5 வரலாற்று புத்தகங்கள்—சுவிசேஷங்கள் மற்றும் அப்போஸ்தலர், (2) 21 கடிதங்கள்; (3) வெளிப்படுத்துதல். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், பொ.ச. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவும் அவரது சீஷர்களும் செய்த போதனைகளிடமாகவும், நடவடிக்கைகளிடமாகவும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.