Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்தப் புத்தகம் அறிவியலோடு ஒத்துப்போகிறதா?

இந்தப் புத்தகம் அறிவியலோடு ஒத்துப்போகிறதா?

இந்தப் புத்தகம் அறிவியலோடு ஒத்துப்போகிறதா?

மதம் அறிவியலை தன் நண்பனாக எப்போதும் கருதியது கிடையாது. சென்ற நூற்றாண்டுகளில், சில பாதிரிமார் தாங்கள் தந்த பைபிள் விளக்கத்திற்கு எதிராக அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாக நினைத்தபோது அவற்றை எதிர்த்தார்கள். ஆனால், பைபிள் உண்மையில் அறிவியலின் விரோதியா?

பைபிள் எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் மிகப் பரவலாக நிலவிய அறிவியல் கருத்துக்களை மாத்திரம் அவர்கள் தப்பித்தவறி எழுதிவிட்டிருந்தால், அறிவியலுடன் ஒத்துவராத பிழைகள் நிறைந்த ஒரு புத்தகம் என்ற வரிசையில் பைபிள் இடம் பிடித்திருக்கும். ஆனால், அந்த எழுத்தாளர்கள் அத்தகைய அறிவியல் அல்லாத தவறான கருத்துக்களை ஆதரிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் எழுதிய எண்ணற்ற கூற்றுகள் அறிவியல் ரீதியில் மிக திருத்தமாக இருந்ததோடு, அவர்கள் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு முற்றிலும் வித்தியாசமாகவும் இருந்தன.

பூமியின் வடிவம் என்ன?

இந்தக் கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதரை பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கியது. பூமி தட்டையாக இருக்கிறது என்பதுதான் பண்டைய காலங்களில் இருந்த ஒரு பொதுவான கருத்து. உதாரணத்திற்கு, இந்தப் பிரபஞ்சம் ஒரு பெட்டிமாதிரி அல்லது ஓர் அறைமாதிரி இருக்கிறது என்றும், அதற்கு பூமி தரையாக உள்ளது என்றும் பாபிலோனியர்கள் நம்பினார்கள். பூமி தட்டை என்றும் அதனுடைய ஒரேவொரு பக்கத்தில் மாத்திரம் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றும் இந்தியாவில் இருந்த வேதம் கற்ற பூசாரிகள் கற்பனைசெய்தனர். ஆசியாவைச் சேர்ந்த ஒரு பழங்குடியினர், தேனீர் அளிக்க பயன்படுத்தும் ஒரு தட்டு போல் பூமி இருப்பதாக தங்கள் மனதில் சித்திரம் தீட்டி வைத்திருந்தனர்.

பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, கிரேக்க தத்துவஞானி பித்தாகோரஸ், சந்திரனும் சூரியனும் கோள வடிவத்தில் இருப்பதால் பூமியும் கோளவடிவில்தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். பிறகு இந்தக் கருத்தை அரிஸ்டாட்டில் (பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில்) ஏற்றுக்கொண்டார். பூமி கோள வடிவத்தில் இருப்பதை சந்திர கிரகணம் நிரூபித்துவிட்டதாக விளக்கம் அளித்தார். சந்திரனில் பூமியின் நிழல் வளைவாக விழுந்திருந்தது.

ஆனால், பூமி தட்டையாக இருக்கிறது (அதன் மேற்பரப்பில் மாத்திரம் குடியிருக்கிறார்கள்) என்ற கருத்து முழுமையாக மறையவில்லை. பூமி உருண்டை என்ற கோட்பாட்டுடன் தொடர்புடைய தர்க்கரீதியான கருத்தை, அதாவது கோளகையின் எதிரெதிர் நிலைகள் (antipodes) a என்ற கோட்பாட்டை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் கருத்தை பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த, கிறிஸ்தவ சமயத்திற்காக வாதிட்ட (apologist) லாக்டான்டீயுஸ் என்பவர் கேலிசெய்தார். அவர் இவ்வாறு காரணம் காட்டினார்: ‘மனிதர்கள் தலைகீழாக நடக்கமுடியும் என்று நம்பும் அளவுக்கு முட்டாள்கள் யாராவது இருக்கிறார்களா? . . . பயிர்களும், மரங்களும் எங்கேயாவது கீழ்நோக்கி வளருமா? பனியும், கல்மழையும் எங்கேயாவது மேல்நோக்கி விழுமா?’2

கோளகையின் எதிரெதிர் நிலைகள் என்ற கோட்பாடு சில பாதிரிமாருக்குக் குழப்பத்தைத் தந்தது. அப்படியே ஒருவேளை கோளத்திற்கு அடிப்பக்கத்தில் மக்கள் வாழ்ந்திருந்தாலும் இந்தப் பக்க மக்களோடு அவர்களுக்கு அறிமுகமாக வாய்ப்பில்லை என்று சில கோட்பாடுகள் கற்பித்தன. ஏனென்றால் கடற்பயணம் மேற்கொள்ளலாம் என்றால், கடலோ பரந்து விரிந்து கிடக்கிறது அல்லது நிலநடுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளை கடந்து வரலாம் என்றால் அவை பயணம் செய்ய முடியாத அளவுக்கு உஷ்ணம் மிகுந்த வெப்பமண்டலத்தில் மாட்டிக்கொண்டன. ஆகவே, கோளத்தின் அடுத்த பக்கத்திலுள்ளவர்கள் யாராவது எப்படி வந்திருக்க முடியும்? குழம்பிப்போனவர்களாய், சில பாதிரிமார்கள், கோளத்திற்கு அடிப்பக்கத்தில் யாருமே இல்லை என்று நம்ப முடிவு செய்தார்கள். அல்லது லாக்டான்டீயுஸ் வாதிட்டதுபோலவே இந்தப் பூமி கோள வடிவத்தில் இருக்கவே முடியாது என்றார்கள்!

இருந்தபோதிலும், பூமி கோள வடிவத்தில் இருக்கிறது என்ற கருத்து தொடர்ந்தது, நாளடைவில் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 20-ம் நூற்றாண்டில், விண்வெளி யுகம் உதயமான பிறகே, மனிதர்கள் விண்வெளியில் வெகுதூரம் பயணம் செய்து, பூமி கோள வடிவில் b இருக்கிறது என்ற உண்மையை நேரடியாக பார்த்து உறுதிசெய்ய முடிந்தது.

இந்த விவாதத்தில் பைபிளின் கருத்து என்ன? பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், பூமி தட்டை என்ற கருத்து நிலவிய காலத்திலேயே, அதாவது பூமி ஒருவேளை கோளமாக இருக்கலாம் என்ற கோட்பாடுகளை கிரேக்க தத்துவஞானிகள் உருவாக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மனிதர் விண்வெளிசென்று பூமி உருண்டையை காண்பதற்கு முன்பே, எபிரெய தீர்க்கதரிசி ஏசாயா வியப்பூட்டும் விதத்தில் எளிதாக இவ்வாறு கூறிவிட்டார்: ‘அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.’ (ஏசாயா 40:22) இங்கு “உருண்டை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள சூக் (chugh) என்ற எபிரெய வார்த்தையை “கோளம்” என்றும் குறிப்பிடலாம்.3மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் இவ்வாறு சொல்கின்றன, “பூமி கோளம்” (டூயே வர்ஷன்), “வட்ட பூமி.”—மொஃபெட். c

பூமியைப் பற்றி பரவலாக இருந்த கட்டுக்கதைகளை பைபிள் எழுத்தாளர் ஏசாயா தவிர்த்துவிட்டார். அதற்கு மாறாக, விஞ்ஞான முன்னேற்றங்கள் செய்த கண்டுபிடிப்புகளால் பாதிக்கப்படாத கூற்றை எழுதினார்.

பூமியைத் தாங்கி நிற்பது எது?

பண்டைய காலங்களில், பிரபஞ்சத்தைப் பற்றிய பின்வரும் மற்ற கேள்விகளால் மனிதர்கள் குழம்பிப்போய் இருந்தார்கள்: பூமி எதன்மீது ஆதாரம் கொண்டிருக்கிறது? சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தாங்கிப் பிடித்து நிற்பது எது? பிரபஞ்ச நிறையீர்ப்பு விசையின் (universal gravitation) விதியைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. அதனை சர் ஐசக் நியூட்டன் உருவாக்கி, 1687-ல் வெளியிட்டார். வான் கோள்கள் எல்லாம் வெற்றிடத்தில் தொங்குகின்றன என்ற கருத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவேதான், உறுதியான பொருட்கள் அல்லது வஸ்துக்கள் இந்தப் பூமியையும் மற்ற விண்கோள்களையும் உயரே தாங்கிப் பிடித்திருக்கின்றன என்ற எண்ணத்தையே அவர்கள் கொடுத்த விளக்கங்கள் அடிக்கடி உணர்த்தின.

உதாரணத்திற்கு, பூமியைச் சுற்றி தண்ணீர் இருக்கிறது என்றும் இந்தத் தண்ணீரிலேயே அது மிதக்கிறது என்றும் ஒரு பண்டைய கோட்பாடு சொல்கிறது. அநேகமாக இக்கோட்பாடு தீவில் வாழ்ந்திருந்த மக்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக பல ஆதாரங்கள் பூமியைத் தாங்கி நிற்கின்றன என்று இந்துக்கள் நினைத்திருந்தனர். பூமியை நான்கு யானைகள் தாங்கிப் பிடித்திருந்தன, அந்த யானைகள் ஒரு பிரமாண்டமான ஆமையின்மேல் நின்றிருந்தன. அந்த ஆமையோ மகா பிரமாண்டமான ஒரு பாம்பின்மீது நின்றிருந்தது. சுருண்டு படுத்திருந்த அந்தப் பாம்பு பிரபஞ்சம் என்னும் தண்ணீரில் மிதந்தது. இந்தப் பூமி ஒரு சுழற்காற்றில் நின்று கொண்டிருப்பதாகவும், விண்கோள்கள் அசைய இந்தச் சுழற்காற்றுதான் காரணம் என்றும் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த எம்பெடகிலிஸ் என்ற கிரேக்க தத்துவஞானி நம்பினார்.

அதிக செல்வாக்குச் செலுத்திய கருத்துக்களில் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களே முதல் இடத்தில் இருந்தன. பூமி கோளமாக இருக்கிறது என்ற கோட்பாட்டை அவர் உருவாக்கினாலும், அது வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஆன் தி ஹெவன்ஸ் என்ற தன்னுடைய ஆய்வு கட்டுரையில், தண்ணீரின்மேல் பூமி நின்றுகொண்டிருக்கிறது என்ற கருத்து தவறு என்று நிரூபிக்க அவர் இவ்வாறு கூறினார்: “காற்றில் அந்தரத்திலே தொங்கிக்கொண்டிருப்பது தண்ணீரின் தன்மை அல்ல. அது பூமியின் தன்மையும் அல்ல: அது கண்டிப்பாக ஏதோ ஒன்றின்மீது நின்றுகொண்டிருக்க வேண்டும்.”4ஆகவே, பூமி எதன்மீது “நின்றுகொண்டிருந்தது”? சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒளிபுகும் கோள வடிவ உறைகளில், உறுதியான தளத்தில் பொருத்தப்பட்டுள்ளன என்று அரிஸ்டாட்டில் கற்பித்தார். நடுவில் பூமியை வைத்து, அது அசைய முடியாதபடி ஓர் உறையினுள் இன்னொரு உறை, இன்னொரு உறையினுள் இன்னொரு உறை என்று நெருக்கமாக அமைந்துள்ளன என்றும்; இந்தக் கோள உறைகள் ஒன்றுக்குள் ஒன்று சுற்றும்போது, அவற்றின்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், இன்னும் மற்ற கோள்கள் வானத்தின் குறுக்கே நகர்கின்றன என்றும் அவர் கற்பித்தார்.

அரிஸ்டாட்டிலின் விளக்கம் அறிவுக்கு ஏற்றதாகத் தோன்றியது. வான்கோள்கள் ஏதோ ஒன்றின்மீது உறுதியாக பிணைக்கப்படாதிருந்தால், அவை உயரே வானில் எப்படி இருக்க முடியும்? மதிப்பிற்குரிய அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் உண்மை என்று சுமார் 2,000 வருடங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வது போல, 16-ம், 17-ம் நூற்றாண்டுகளில், அரிஸ்டாட்டிலின் போதனைகள் சர்ச்சின் பார்வையில் “சமய கொள்கையின் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன.”5

தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, வானவியலாளர்கள் அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டைக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஆனாலும், கோள்கள் எல்லாம் வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன; கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, அதாவது ஈர்ப்பு விசை (gravity) அவற்றை அவற்றின் அச்சில் பிடித்து வைத்திருக்கிறது என்ற விளக்கத்தை சர் ஐசக் நியூட்டன் தரும் வரை அவர்கள் விடை கிடைக்காமல் திண்டாடினார்கள். அவரது விளக்கம் உண்மையென நம்பமுடியாததாய் தோன்றியது. விண்வெளி வெற்றிடமாய், பெரும்பாலும் திண்மையான பொருட்கள் இன்றி வெறுமையாய் இருக்கிறது என்பதை நம்ப நியூட்டனுடன் பணிபுரிந்த சிலருக்கே கஷ்டமாக இருந்தது. d6

இந்தக் கேள்விக்கு பைபிள் தந்த பதில்தான் என்ன? இந்தப் பூமி “அந்தரத்திலே” தொங்கிக்கொண்டிருக்கிறது என்று சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பே பைபிள் மிகவும் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டது. (யோபு 26:7) ‘அந்தரத்தில்’ என்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய மூல வார்த்தை பெலிமா (beli-mahʹ) என்பதற்கு அப்படியே அர்த்தம் எடுத்தால் “ஒன்றுமே இல்லாமல்” என்று பொருள்.7“காலியான விண்வெளியில்” என்ற சொற்றொடரை காண்டம்பரரி இங்லிஷ் வர்ஷன் பயன்படுத்துகிறது.

அக்கால மக்களில் பெரும்பான்மையோர் பூமியைப் பற்றி தங்கள் மனங்களில் நினைத்திருந்தது, “காலியான விண்வெளியில்” ஒரு கோளமாக பூமி தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி அல்ல. ஆனாலும், எவ்வளவோ காலத்திற்குமுன், பைபிள் எழுத்தாளர் எழுதிய கூற்று விஞ்ஞான ரீதியில் அசைக்க முடியாத உண்மையாக உள்ளது.

பைபிளும் மருத்துவ அறிவியலும்—ஒத்துப்போகின்றனவா?

நோய்கள் பரவுவதைப் பற்றியும், தடுப்பதைப் பற்றியும் நவீன மருத்துவ அறிவியல் நமக்கு எவ்வளவோ கற்றுத்தந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் மருத்துவ முன்னேற்றங்கள், கிருமிகளைத் தடுக்கும் (antisepsis) மருத்துவ முறையை, அதாவது நோய்த் தொற்றுவதை குறைக்கும் சுகாதார முறையை அறிமுகம் செய்தன. அதன் பலன் அபாரமாக இருந்தது. தொற்றுநோயும், அகால மரணமும் வியப்பூட்டும் அளவில் குறைந்தன.

ஆனால், பண்டைய மருத்துவர்களுக்கு நோய் எப்படி பரவுகிறது என்று முழுமையாக புரியவில்லை. நோயைத் தடுப்பதில் சுகாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்களுடைய மருத்துவ முறைகள் பல, நவீன மருத்துவ தராதரங்களோடு ஒப்பிடுகையில் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

கிடைக்கக்கூடிய மிகப் பழமையான மருத்துவ புத்தகங்களில் ஒன்று எபர்ஸ் பப்பைரஸ் ஆகும். எகிப்தியர் அறிந்திருந்த மருத்துவ முறைகளைப் பற்றி சேகரிக்கப்பட்ட ஒரு தொகுப்பு அது. அதன் காலம் ஏறக்குறைய பொ.ச.மு. 1550. இந்தச் சுருளில், “முதலை கடி முதல், கால் நகம் வலி வரை” சுமார் 700 வகை வியாதிகளுக்கு நிவாரணங்கள் அடங்கி உள்ளன.8 தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்த மருத்துவர்களின் அறிவு முழுக்க முழுக்க அனுபவத்தையும், பெருமளவில் மந்திரத்தையும் சார்ந்திருந்தது. அறிவியலை கொஞ்சம்கூட சாராமல் இருந்தது.”9பெரும்பாலான நிவாரணிகள் ஒன்றுக்கும் உதவாதவை மாத்திரம் அல்ல, அவற்றில் சில பயங்கர ஆபத்தானவையும்கூட. காயத்திற்கு சிகிச்சையளிக்க பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளில் ஒன்று, மனித மலத்தை வேறுசில பொருட்களோடு கலந்து பூசுவதாகும்.10

எகிப்திய மருத்துவ நிவாரணிகள் அடங்கிய இப்புத்தகம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில், பைபிளின் ஆரம்ப புத்தகங்களும் எழுதப்பட்டன. அவற்றுள் மோசேயின் நியாயப்பிரமாணமும் உள்ளடங்கும். மோசே, பொ.ச.மு. 1593-ல் பிறந்து, எகிப்தில் வளர்ந்தார். (யாத்திராகமம் 2:1-10) பார்வோன் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்பட்ட அவருக்கு, ‘எகிப்தியரின் எல்லா ஞானமும் கற்பிக்கப்பட்டது.’ (அப்போஸ்தலர் 7:22, தி.மொ.) அவருக்கு எகிப்திய ‘வைத்தியரைப்’ பற்றி நன்றாகவே தெரியும். (ஆதியாகமம் 50:1-3) அவர்களுடைய ஒன்றுக்கும் உதவாத அல்லது ஆபத்தான மருத்துவ முறைகள் அவர் எழுதியவற்றை பாதித்தனவா?

இல்லை. அதற்குமாறாக, சுகாதாரத்தைப் பற்றி மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருந்த சட்டங்கள், அக்காலத்தில் இருந்த நிலைமையிலிருந்து மிகவும் முன்னேறி இருந்தன. உதாரணத்திற்கு, இராணுவ முகாமிடுவோர், முகாமிலிருந்து வெகு தூரத்தில் மலத்தை கழித்துவிட்டு, அதனை மூடிவிட்டு வரவேண்டும் என்று சட்டம் வலியுறுத்தியது. (உபாகமம் 23:13) இது மிகவும் முன்னேற்றமடைந்திருந்த நோய்த்தடுப்பு முறையாக இருந்தது. இது தண்ணீர் மாசுப்படாமல் தடுத்தது. ஈக்களால் பரவும் ஷிகெலோஸில் என்ற வியாதியிலிருந்தும், இன்னும் வேறுசில வயிற்றுப்போக்கு வியாதிகளிலிருந்தும் பாதுகாப்பை அளித்தது. இன்றும்கூட சுகாதார நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும் நாடுகளில் இவ்வியாதிகள் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலிவாங்குகின்றன.

மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இன்னும் மற்ற சுகாதார சட்டங்களும் இருந்தன. அவை தொற்றுநோய் பரவுவதிலிருந்து இஸ்ரவேலர்களைப் பாதுகாத்தன. ஒரு ஆளுக்கு தொற்றுவியாதி இருந்தாலோ அல்லது இருக்கலாம் என்று சந்தேகம் வந்தாலோ அவரை தனியே ஒதுக்கி வைத்துவிடுவர். (லேவியராகமம் 13:1-5) (அநேகமாக வியாதியினால்) ஒரு மிருகம் இறந்துபோனால், அந்த மிருகம் பட்ட துணியோ அல்லது பாத்திரத்தையோ மறுபடியும் உபயோகிப்பதற்குமுன் துவைக்க வேண்டும் அல்லது கழுவவேண்டும் அல்லது அவற்றை அழித்துவிட வேண்டும். (லேவியராகமம் 11:27, 28, 32, 33) ஒரு நபர் ஒரு பிணத்தைத் தொட்டால், அவர் அசுத்தமாக எண்ணப்படுவார். அவர் சுத்திகரிக்கும் சடங்கை அனுசரிக்க வேண்டும். அது அவருடைய துணிகளை துவைப்பதையும், அவர் குளிப்பதையும் உள்ளடக்கியது. அசுத்தமாக இருக்கும் அந்த ஏழு நாட்களுக்கு மற்றவர்களை அவர் தொடக்கூடாது.—எண்ணாகமம் 19:1-13.

இந்தச் சுகாதார விதிமுறை, அக்காலத்தில் இஸ்ரவேலை சுற்றி இருந்த மற்ற தேசங்களின் மருத்துவர்களிடம் இல்லாத ஞானத்தை வெளிப்படுத்தியது. நோய் பரவும் முறைகளைப் பற்றி மருத்துவ அறிவியல் கற்றுக்கொள்வதற்கு பல ஆயிர வருடங்களுக்கு முன்பே, நோய்கள் வராமல் காக்க, நியாயமான தடுக்கும் முறைகளை பைபிள் அளித்தது. தன் காலத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் பொதுவாகவே 70 முதல் 80 வயது வரை வாழ்ந்தார்கள் என்று மோசே சொன்னதில் ஆச்சரியம் ஏதுமில்லை. eசங்கீதம் 90:10.

மேற்சொல்லப்பட்ட பைபிள் கூற்றுகள் அறிவியல் ரீதியில் திருத்தமானவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியாத வேறுசில கூற்றுகளும் பைபிளில் உள்ளன. அப்படியென்றால், பைபிள் அறிவியலோடு ஒத்துப்போவதில்லை என்பதா இதன் அர்த்தம்?

நிரூபிக்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுதல்

நிரூபிக்க முடியாத ஒரு கூற்று பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. போதுமான அத்தாட்சியைக் கண்டுபிடிக்கவும், தகவலுக்கு சரியான விளக்கம் அளிக்கவும் மனிதனுக்கு எவ்வளவு திறன் இருக்கிறதோ அதற்கு ஏற்ப அறிவியல் நிரூபணமும் மட்டுப்படுகிறது. ஆனால், அத்தாட்சியை பாதுகாத்து வைக்காததால் சில உண்மைகளை நிரூபிக்க முடிவதில்லை. ஒருவேளை அத்தாட்சி மறைந்துபோயிருக்கும் அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும். அல்லது ஒரு சுமூகமான தீர்மானம் எடுக்க அறிவியல் செயல்திறமைகளும் நிபுணத்துவமும் போதாமல் இருக்கும். தனியே கண்ணுக்குத் தெரியும் அத்தாட்சி இல்லாத ஒருசில பைபிள் கூற்றுகளுக்கும் இதேநிலை ஏற்பட்டிருக்கும் இல்லையா?

உதாரணத்திற்கு, ஆவி ஆட்கள் குடியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத லோகத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதனை நிரூபிக்க முடியாது அல்லது அறிவியல் ரீதியிலும் தவறு என்றும் நிரூபிக்க இயலாது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அற்புத நிகழ்ச்சிகளுக்கும் இதுவே பொருந்தும். நோவாவின் நாளில் உலகளாவிய வெள்ளம் வந்தது என்பதற்கு, சிலரை திருப்தி செய்யும் அளவிற்கு போதுமான, தெளிவான மண்ணியல் (geologic) ஆதாரம் இல்லை. (ஆதியாகமம், அதிகாரம் 7) அது ஏற்படவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமா? காலமும், ஏற்படும் மாற்றமும் வரலாற்று சம்பவங்களை மறைத்துவிடலாம். ஆகவே, வெள்ளம் வந்ததற்கான பெருவாரியான ஆதாரத்தை ஆயிரக்கணக்கான வருடங்களாக மண்ணில் ஏற்பட்ட மாற்றம் அழித்திருக்கும் என்ற சாத்தியம் இருக்கிறது அல்லவா?

கைவசம் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் ஆதாரத்தால் நிரூபிக்க முடியாத அல்லது இல்லை என்று மறுக்க முடியாத கூற்றுகள் பைபிளில் அடங்கியுள்ளன என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. ஆனால், அது நமக்கு ஆச்சரியம் தரவேண்டுமா? பைபிள் ஒன்றும் அறிவியல் புத்தகம் அல்ல. ஆனால், இது சத்திய புத்தகம். இதன் எழுத்தாளர்கள் உண்மையுள்ளவர்கள், நேர்மையுள்ளவர்கள் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரத்தை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அவர்கள் அறிவியல் சம்பந்தமான விஷயத்தை சொல்லும்போது, அவர்களுடைய வார்த்தைகள் மிகத் துல்லியமாக இருந்தன. மேலும் அக்காலத்து “அறிவியல்” கோட்பாடுகள் என்று கருதிய விஷயங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. அந்தக் கோட்பாடுகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்று பிறகு தெரியவந்தன. இவ்வாறாக, அறிவியல் பைபிளின் விரோதி அல்ல. பைபிள் என்ன சொல்கிறது என்பதை திறந்த மனதோடு சிந்தித்துப்பார்க்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

[அடிக்குறிப்புகள்]

a “கோளகையின் எதிரெதிர் நிலைகள் என்பது . . . பூமியின்கண் நேர் எதிரெதிராக அமைந்துள்ள இரு இடங்கள் ஆகும். அவற்றிற்கு இடையே ஒரு நேர் கோடு வரைந்தால் பூமியின் நடுவே செல்லும். கோளகையின் எதிரெதிர் நிலைகள் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில், பாதத்திலிருந்து பாதம்வரை என்று அர்த்தம். கோளகையின் எதிரெதிர் நிலைகளில் நின்றுகொண்டிருக்கும் இரண்டு ஆட்கள் உள்ளங்கால்களில்தான் மிக கிட்டத்தில் இருப்பார்கள்.”1—தி உவர்ல்டு புக் ஆஃப் என்ஸைக்ளோப்பீடியா.

b நுட்பமாக சொல்லவேண்டுமென்றால், தட்டையான துருவங்களையுடைய கோள வடிவில் பூமி இருக்கிறது. அதன் துருவப் பகுதிகளில் பூமி இலேசாக தட்டையாக இருக்கிறது.

c கோள வடிவில் இருக்கும் ஒரு பொருள் மாத்திரம், எந்தவொரு கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரு வட்டம் போலவே தெரியும். தட்டையான ஒரு வட்டத்தட்டு பெரும்பாலும் ஒரு நீள்வட்டமாக (oval) தோன்றுமே ஒழிய வட்டமாக தோன்றாது.

d இந்தப் பிரபஞ்சம் திரவத்தால் நிரம்பியிருக்கிறது, அதாவது காஸ்மிக் “சூப்”பால் (cosmic soup) நிரம்பியிருக்கிறது. இந்தத் திரவத்தில் உண்டாகும் சுழற்காற்று கோளங்களை சுற்றிவரச்செய்கிறது என்ற கருத்து நியூட்டனின் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.

e 1900-ல் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐக்கிய மாகாணங்களிலும் மக்களின் ஆயுட்காலம் 50-க்கும் குறைவாக இருந்தது. அன்று முதல் கிடுகிடுவென்று இது உயர்ந்தது. நோயைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட மருத்துவ முன்னேற்றம் மாத்திரம் அல்ல இந்த உயர்வுக்கு காரணம். ஆனால், நல்ல சுகாதாரமும், வாழ்க்கை தரங்களும்கூட இந்த உயர்வுக்கு காரணங்களாகும்.

[பக்கம் 18-ன் படம்]

மனிதர் விண்வெளிக்குப் போய், பூமி உருண்டையாக இருக்கிறது என்று பார்ப்பதற்கு பல ஆயிரவருடங்களுக்கு முன்பே, ‘பூமி உருண்டை’ என்று பைபிள் சொல்லிவிட்டது

[பக்கம் 20-ன் படம்]

கோள்களை, அவற்றின் அச்சுப் பாதையில் பிடித்து வைத்திருப்பது ஈர்ப்பு விசையே என்று சர் ஐசக் நியூட்டன் விளக்கம் தந்தார்.

[பக்கம் 21-ன் படம்]

நிரூபிக்கப்படாத ஒரு கூற்று, பொய்யாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை