Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் கரம் ஓங்குகிறது

யெகோவாவின் கரம் ஓங்குகிறது

அதிகாரம் இருபத்து ஒன்று

யெகோவாவின் கரம் ஓங்குகிறது

ஏசாயா 25:1–27:⁠13

யெகோவாவிடம் ஏசாயா ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார். அவரை துதிப்பதில் அதிக ஆனந்தமடைகிறார். அதனால்தான் அவர் இப்படி சொல்கிறார்: “கர்த்தாவே [“யெகோவாவே,” NW], நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்.” தன்னைப் படைத்தவரிடம் இப்படிப்பட்ட மதிப்பை காட்டுவதற்கு ஏசாயா தீர்க்கதரிசிக்கு எது உதவுகிறது? யெகோவாவைக் குறித்தும் அவருடைய செயல்களைக் குறித்தும் நன்கு அறிந்திருப்பதே. இதையே அடுத்த வசனம் காட்டுகிறது: “நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.” (ஏசாயா 25:1) யெகோவா உண்மையுள்ளவர், நம்பத்தகுந்தவர் என்பதை அவருக்கு முன் வாழ்ந்த யோசுவா நன்றாக அறிந்திருந்தார். அதைப்போலவே, ஏசாயாவும் யெகோவாவைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். மேலும், அவருடைய “ஆலோசனைகள்” அதாவது அவருடைய நோக்கங்கள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.​—யோசுவா 23:⁠14.

2இந்த ஆலோசனைகளில், இஸ்ரவேலர்களின் எதிரிகளுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு அறிவிப்புகளும் அடங்கும். அவற்றில் ஒன்றைத்தான் ஏசாயா இங்கே அறிவிக்கிறார்: “நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை [“கோட்டையை,” பொ.மொ.] ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.” (ஏசாயா 25:2) பெயர் குறிப்பிடாத இந்த நகரம் எது? நீண்ட காலமாக கடவுளுடைய ஜனங்களோடு பகையுடன் இருந்து வந்த மோவாபின் ஆர் பட்டணத்தை ஒருவேளை ஏசாயா இங்கு குறிப்பிட்டிருக்கலாம். a அல்லது இன்னொரு பலமான நகரமாகிய பாபிலோனையும்கூட ஒருவேளை அவர் குறிப்பிட்டிருக்கலாம்.​—ஏசாயா 15:1; செப்பனியா 2:8, 9.

3தங்களுடைய அரணான பட்டணங்களுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் நிறைவேறும்போது அவருடைய எதிரிகள் என்ன செய்வார்கள்? “பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.” (ஏசாயா 25:3) சர்வவல்ல கடவுளுடைய எதிரிகள் நிச்சயம் கலங்குவார்கள் என்பது உறுதி. ஆனால், அவரை எப்படி மகிமைப்படுத்துகிறார்கள்? தங்கள் பொய்க் கடவுட்களை விட்டுவிட்டு தூய வணக்கத்தை ஏற்றுக்கொள்வார்களா? அது கனவில்கூட எதிர்பார்க்க முடியாதது! மாறாக, வார்த்தைகளால் விவரிக்க முடியாத யெகோவாவின் மகத்துவத்தையும் உன்னதத்தையும், பார்வோனும் நேபுகாத்நேச்சாரும் அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது அவர்கள் யெகோவாவை துதித்தார்கள் அல்லவா, அதுபோலவே இவர்களும் செய்வார்கள்.​—யாத்திராகமம் 10:16, 17; 12:30-33; தானியேல் 4:⁠37.

4இன்று, “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எனப்படுவது “பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற,” பொய் மதத்தின் உலகப் பேரரசாக விளங்கும் “மகா பாபிலோன்.” (வெளிப்படுத்துதல் 17:5, 18) இந்தப் பேரரசின் முக்கிய பாகமாக இருப்பது கிறிஸ்தவமண்டலமே. கிறிஸ்தவமண்டலத்தின் குருமார்கள் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்கள்? அவருடைய சாட்சிகள் சார்பாக யெகோவா நடப்பித்திருக்கும் அற்புதங்களை வேண்டாவெறுப்போடு ஒத்துக்கொள்வதன் மூலம் யெகோவாவைத் துதிக்கிறார்கள். குறிப்பாக 1919-⁠ல், யெகோவா தம்முடைய ஊழியர்களை மகா பாபிலோனின் கொடிய கரங்களிலிருந்து விடுவித்தார். ஆவிக்குரிய சிறையிருப்பில் இருந்த அவர்கள் சுறுசுறுப்போடும் துடிப்புடனும் செயல்பட விடுவிக்கப்பட்டார்கள். அப்போது, கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் “பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”​—வெளிப்படுத்துதல் 11:⁠13. b

5யெகோவா, தம் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார். ஆனால், அவரை சாந்தத்தோடும் மனத்தாழ்மையோடும் சேவிக்க விரும்புகிறவர்களுக்கோ கோட்டையாக திகழ்கிறார். உண்மை வணக்கத்தாரின் விசுவாசத்தை முறிக்க மத மற்றும் அரசியல் கொடுங்கோலர்கள் எல்லா விதமான அஸ்திரங்களையும் எய்து பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றனர். ஏன்? ஏனென்றால் உண்மை வணக்கத்தார் யெகோவாவின்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முடிவில், அவர் தம் எதிரிகளை சுலபமாக அழித்துவிடுகிறார். தகிக்கும் பாலைவன சூரியனை கார்மேகம் மூடி தணிப்பதுபோலவும், பொங்கிவரும் பெருவெள்ளத்தை அணை அடக்கி தடுத்து நிறுத்துவதுபோலவும் மிக எளிதில் அவர் அழித்துவிடுகிறார்.​—ஏசாயா 25:4, 5-ஐ வாசிக்கவும்.

‘சகல ஜனங்களுக்கும் விருந்து’

6அன்புள்ள தகப்பனைப்போல, யெகோவா தம் பிள்ளைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக ஆவிக்குரிய விதத்தில் நன்றாக போஷிக்கவும் செய்கிறார். 1919-⁠ல், தம் மக்களை ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுவித்த பிறகு, அவர்களுக்காக மாபெரும் வெற்றி விருந்தை ஆயத்தப்படுத்தினார். அதாவது அபரிமிதமான ஆவிக்குரிய உணவை அவர்களுக்காக தயாராக்கினார்: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.”​—ஏசாயா 25:⁠6.

7யெகோவாவின் “மலையிலே” இந்த விருந்து பரிமாறப்படுகிறது. எது அந்த மலை? அது ‘யெகோவாவுடைய ஆலயமாகிய மலை.’ “கடைசி நாட்களில்” எல்லா தேசத்தாரும் அதனிடத்திற்கு ஓடிவருவார்கள். அது யெகோவாவின் ‘பரிசுத்த மலை.’ அங்கே அவருடைய உண்மையுள்ள வணக்கத்தார் தீங்கு செய்யவும் மாட்டார்கள்; கேடு செய்யவும் மாட்டார்கள். (ஏசாயா 2:2, NW; 11:9) எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்ட இந்த வணக்க ஸ்தலத்திலே, உண்மையுள்ளோருக்காக கொழுமையான பதார்த்தங்களை யெகோவா ஆயத்தப்படுத்துகிறார். இப்போது அபரிமிதமாக வழங்கப்படும் ஆவிக்குரிய ஈவுகள், உலகெங்கும் ஒரே அரசாங்கமாக திகழப்போகும் கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்கையில் கிடைக்கப்போகும் சரீர ஈவுகளுக்குப் படமாக இருக்கின்றன. அப்போது பஞ்சம் இராது. ‘பூமியிலே தானியம் ஏராளமாக இருக்கும்; மலைகளின் உச்சிகளில் நிரம்பி வழியும்.’​—சங்கீதம் 72:8, 16, NW.

8கடவுள் கொடுக்கும் ஆவிக்குரிய பெருவிருந்தில் இப்பொழுதே கலந்துகொள்ளும் அனைவருக்கும் மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது. அடுத்ததாக ஏசாயா சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள். பாவத்தையும் மரணத்தையும் மூச்சு முட்ட வைக்கும் ‘துகிலுக்கு’ அல்லது ‘முக்காட்டிற்கு’ ஒப்பிட்டு ஏசாயா சொல்வதாவது: “மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் [யெகோவா] அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்.”​—ஏசாயா 25:7, 8அ, பொ.மொ.

9இனிமேலும் பாவமோ, மரணமோ இராது! (வெளிப்படுத்துதல் 21:3, 4) அதுமட்டுமா, ஆயிரக்கணக்கான வருடங்களாக யெகோவாவின் ஊழியர்கள் சகித்து வந்த பொய்ப் பழிகளும் இனி இராது. “தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.” (ஏசாயா 25:8ஆ) இது எப்படி நிறைவேறும்? பழிகளுக்கெல்லாம் காரணமாக இருக்கும் சாத்தானையும் அவனுடைய வித்தையும் யெகோவா நீக்கிவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3) அப்போது கடவுளுடைய ஜனங்கள் இப்படித்தான் மகிழ்ச்சியாக கூக்குரலிடுவார்கள்: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர் [“யெகோவா,” NW] இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.”​—ஏசாயா 25:⁠9.

செருக்குள்ளவர்கள் அழிக்கப்படுதல்

10தம் மக்களிலும் மனத்தாழ்மையை காட்டுவோரை மட்டுமே யெகோவா காக்கிறார். ஆனால், இஸ்ரவேலின் அண்டை நாடாகிய மோவாப் அகந்தையோடு இருக்கிறது. அகந்தையை யெகோவா அருவருக்கிறார். (நீதிமொழிகள் 16:18) எனவே, மோவாப் அழிவுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. “கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம். நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தம் கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும் [“செருக்கையும்,” NW], அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார். அவர் உன் மதில்களுடைய உயர்ந்த அரணைக்கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.”​—ஏசாயா 25:10-12.

11மோவாபின் மலையிலே யெகோவாவின் கரம் “தங்கும்.” அதன் விளைவு என்ன? செருக்குமிக்க மோவாப், அடிக்கப்பட்டு, “எருக்களத்தில்” மிதிக்கப்படுவதுபோல் மிதிக்கப்படும். ஏசாயாவின் நாட்களில், குப்பைக்கூளங்கள் சாணத்தோடு சேர்த்து மிதித்து எருவாக்கப்படும். ஆகவே, உயர்ந்த இடத்திலே பாதுகாப்பான அரண்களையுடையதாய் இருந்தாலும் மோவாப் தாழ்த்தப்படும் என்பதை ஏசாயா முன்னறிவிக்கிறார்.

12ஏன் இப்படிப்பட்ட கடுமையான தண்டனையை யெகோவா மோவாபுக்கு மட்டும் சொல்கிறார்? ஆபிரகாமின் உறவினனாகிய லோத்துவின் சந்ததியினர்தான் இந்த மோவாபியர்கள். லோத்து யெகோவாவை வணங்கியவர். எனவே, அவர்கள் கடவுளுடைய உடன்படிக்கையின் தேசமாகிய இஸ்ரவேலுக்கு அண்டை நாட்டினர் மட்டுமல்ல, உறவினர்களும்கூட. என்றாலும், பொய்க் கடவுட்களை வணங்குகிறார்கள். இஸ்ரவேலர்களை கடுமையாக பகைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த முடிவு வேண்டியதுதான். இந்த விதத்தில், இன்று யெகோவாவின் ஊழியர்களுடைய எதிரிகளை மோவாபிற்கு ஒப்பிடலாம். முக்கியமாக, கிறிஸ்தவமண்டலத்திற்கு அதை ஒப்பிடலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்து தோன்றியதாக பெருமை பாராட்டிக்கொண்டாலும், ஏற்கெனவே சிந்தித்ததுபோல், அது மகா பாபிலோனின் முக்கிய பாகமாக இருக்கிறது.

இரட்சிப்பின் பாட்டு

13கடவுளுடைய ஜனங்களைப் பற்றியதென்ன? யெகோவாவின் தயவையும் பாதுகாப்பையும் பெற்றவர்களாக, உரத்த தொனியில் ஒரு பாடலை உணர்ச்சிப்பொங்க பாடுகிறார்கள். “அக்காலத்திலே யூதா தேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.” (ஏசாயா 26:1, 2) இந்த வார்த்தைகள் அனைத்தும் பூர்வ காலங்களில் முற்றிலும் நிறைவேறின. இன்றும் அதன் நிறைவேற்றத்தை நாம் தெளிவாக காண்கிறோம். ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கு, அதாவது யெகோவாவின் ‘நீதியுள்ள ஜாதிக்கு,’ அரணான பட்டணத்தைப்போன்ற பலமான, பாதுகாப்பான அமைப்பு ஒன்று உள்ளது. இது களிகூருவதற்கும், ஆனந்தப் பாடலுக்குமான காரணமல்லவா!

14இந்த ‘நகரத்திற்குள்’ எப்படிப்பட்ட ஜனங்கள் வருகிறார்கள்? அதற்கான விடையை அந்தப் பாடலே தருகிறது: “உம்மை [கடவுளை] உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” (ஏசாயா 26:3, 4) யெகோவாவையே நம்பி, அவருடைய நீதியான நியமங்களுக்கு கீழ்ப்படிய விரும்பும் ‘மனதுடையோரை’ யெகோவா ஆதரிக்கிறார். இந்த உலகின் வியாபார, மத, அரசியல் சேற்றில் உழன்று கொண்டிருப்பதை அவர் விரும்புகிறதில்லை. நம்பத்தகுந்த பாதுகாப்பின் கன்மலை ‘யெகோவாவே.’ யெகோவாவில் முழுமையாய் நம்பிக்கை வைப்பவர்கள் அவருடைய பாதுகாப்பை பெறுவர். அதோடு, ‘பூரண சமாதானத்தையும்’ அனுபவிப்பர்.​—நீதிமொழிகள் 3:5, 6; பிலிப்பியர் 4:6, 7.

15கடவுளுடைய எதிரிகளுக்கு சம்பவிப்பதற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! “அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.” (ஏசாயா 26:5, 6) மோவாபின் ‘உயர்ந்த நகரத்தைக்’ குறித்து ஏசாயா மறுபடியும் இங்கே சொல்லியிருக்கலாம். அல்லது மேட்டிமையால் உயர்ந்து விளங்கிய பாபிலோன் போன்ற மற்ற நகரத்தையும்கூட அவர் ஒருவேளை குறிப்பிட்டிருக்கலாம். எந்தப் பட்டணத்தை அவர் குறிப்பிட்டிருந்தாலும்சரி, ‘உயர்ந்த நகரத்தின்’ மேட்டிமையை யெகோவா குலைக்கிறார். ‘சிறுமையானவர்களும் எளிமையானவர்களும்’ அந்த நகரத்தை மிதிக்கின்றனர். இந்த தீர்க்கதரிசனம் மகா பாபிலோனுக்கு, முக்கியமாக கிறிஸ்தவமண்டலத்திற்கு இன்று வெகுவாக பொருந்துகிறது. 1919-⁠ல், இந்த ‘உயர்ந்த நகரம்’ யெகோவாவின் மக்களை வேறுவழியின்றி, கட்டாயத்தின்பேரில் விடுவித்தது. அது உண்மையிலேயே அந்த நகரத்திற்கு மாபெரும் வீழ்ச்சி. இப்படியாக மேட்டிமையான அந்த நகரம் தாழ்த்தப்பட்டது. அதேசமயம், கடவுளுடைய ஜனங்கள் தங்களை சிறைபிடித்திருந்த அந்த நகரத்தை மிதிக்க ஆரம்பிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:8) எப்படி? வரவிருக்கும் யெகோவாவின் பழிவாங்குதலை பகிரங்கமாக அறிவிப்பதன் மூலம் மிதிக்க ஆரம்பிக்கிறார்கள்.​—வெளிப்படுத்துதல் 8:7-12; 9:14-19.

யெகோவாவின் ‘நினைவுச்சின்னத்தையும்’ நீதியையும் நேசித்தல்

16இந்த வெற்றிப் பாட்டிற்குப் பிறகு, தன் பக்தியின் ஆழத்தையும் நீதியின் கடவுளை சேவிப்போர் பெறும் பலன்களையும் ஏசாயா மிக அழகாக விவரிக்கிறார். (வாசிக்கவும்: ஏசாயா 26:7-9, NW.) ‘யெகோவாவில் நம்பிக்கை வைப்பதிலும்,’ யெகோவாவின் ‘பெயருக்கும்’ அவருடைய ‘நினைவுச்சின்னத்திற்கும்’ ஆழ்ந்த அன்பு காட்டுவதிலும் ஏசாயா தீர்க்கதரிசி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். யெகோவாவின் நினைவுச்சின்னம் என்ன? யாத்திராகமம் 3:15 (NW) இதற்கு பதிலளிக்கிறது: “யெகோவா . . . என்றைக்கும் இதுவே என் பெயர், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் நினைவுச்சின்னம்.” யெகோவாவின் பெயரையும் அவருடைய நீதியான தராதரங்கள், வழிகள் உட்பட அந்த பெயர் எவற்றையெல்லாம் அர்த்தப்படுத்துகிறதோ அவை எல்லாவற்றையும் ஏசாயா பொக்கிஷமாக போற்றுகிறார். யெகோவாவுக்காக இப்படிப்பட்ட அன்பை வளர்த்துக்கொள்ளும் அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதம் கிடைப்பது உறுதி.​—சங்கீதம் 5:8; 25:4, 5; 135:13; ஓசியா 12:⁠5.

17என்றாலும், எல்லாருமே யெகோவாவையும் அவருடைய உன்னதமான தராதரங்களையும் நேசிப்பதில்லை. (ஏசாயா 26:10-ஐ வாசிக்கவும்.) நீதியைக் கற்றுக்கொண்டு, ‘நீதியுள்ள தேசத்திற்குள்’ செல்ல அழைத்தாலும், துன்மார்க்கர் பிடிவாதமாக மறுத்துவிடுகின்றனர். ஒழுக்க ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் நேர்மையாய் வாழும் யெகோவாவின் ஊழியர்கள் இருக்கும் இந்த தேசத்திற்குள் வர அவர்கள் மறுத்துவிடுகின்றனர். எனவே, அவர்கள் ‘யெகோவாவின் மகத்துவத்தை கவனியாதேபோகிறார்கள்.’ யெகோவாவின் பெயர் மகிமைப்படுத்தப்பட்ட பிறகு, மனிதகுலத்திற்கு வரவிருக்கும் ஆசீர்வாதங்கள் எதையுமே அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். பூமி முழுவதுமே ‘நீதியுள்ள தேசமாக’ மாறும் புதிய உலகிலும்கூட, சிலர் யெகோவாவின் இரக்கத்தை உதாசீனப்படுத்தலாம். அப்படிப்பட்டவர்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட மாட்டாது.​—ஏசாயா 65:20; வெளிப்படுத்துதல் 20:12, 15.

18‘யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக் கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.’ (ஏசாயா 26:11) ஏசாயாவின் நாட்களில், தம் எதிரிகளுக்கு எதிராக செயல்பட்டு, தம் ஜனங்களை பாதுகாக்கையில், யெகோவாவின் கரம் ஓங்கியிருந்திருக்கிறது. ஆனால், அதை பெரும்பாலானோர் அறியவில்லை. ஆவிக்குரிய இருளிலே உழன்றுகொண்டிருக்க பிரியப்படும் இப்படிப்பட்ட ஆட்கள், யெகோவாவுடைய வைராக்கியத்தின் அக்கினியால் பட்சிக்கப்படும்போது அவருடைய கரத்தின் வல்லமையை கட்டாயம் ‘காணுவார்கள்’ அல்லது ஒப்புக்கொள்வார்கள். (செப்பனியா 1:18) எசேக்கியேலிடம் பின்னர் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: ‘நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’​—எசேக்கியேல் 38:⁠23.

‘யெகோவா எவரை நேசிக்கிறாரோ, அவர்களை சிட்சிக்கிறார்’

19தன் தேசத்தார் அனுபவிக்கும் சமாதானமும் செழிப்பும் யெகோவாவின் ஆசீர்வாதத்தால்தான் என்பது ஏசாயாவுக்கு தெரியும். “கர்த்தாவே [“யெகோவாவே,” NW], எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.” (ஏசாயா 26:12) இப்படியாக யெகோவாவின் ஆசீர்வாதங்களை அத்தேசத்தார் அனுபவிக்கின்றனர்; “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்” ஆகும் வாய்ப்பை யெகோவா அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்; என்றபோதிலும், யூதாவின் சரித்திரத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இடம் பெறுகின்றன. (யாத்திராகமம் 19:6) மறுபடியும் மறுபடியும், யூதாவின் மக்கள் பொய் வணக்கத்திற்கு திரும்புகின்றனர். அதன் விளைவாக, அவ்வப்போது அவர்கள் சிட்சிக்கப்படுகிறார்கள். என்றாலும், அப்படிப்பட்ட சிட்சிப்பு யெகோவாவின் அன்பிற்கு ஓர் அத்தாட்சியே. ஏனென்றால், ‘யெகோவா எவரை நேசிக்கிறாரோ, அவர்களை சிட்சிக்கிறார்.’​—எபிரெயர் 12:⁠6, NW.

20தம் மக்களை, “வேறு தலைவர்கள்” (பொ.மொ.) அதாவது மற்ற தேசங்கள் ஆளும்படி அனுமதித்து, யெகோவா அவர்களை அடிக்கடி சிட்சிக்கிறார். (ஏசாயா 26:13-ஐ வாசிக்கவும்.) பொ.ச.மு. 607-⁠ல், பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்து செல்ல யெகோவா அனுமதிக்கிறார். இது அவர்களுக்கு ஏதாவது நன்மையளிக்கிறதா? வெறுமனே கஷ்டங்களை அனுபவிப்பது மட்டுமே ஒருவருக்கு எந்தவித நன்மையையும் தந்துவிடாது. ஆனால், தான் அனுபவித்த கஷ்டங்களிலிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, மனந்திரும்பி, யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை காட்டினால், அப்போதுதான் அவர் நன்மையடைய முடியும். (உபாகமம் 4:25-31) அப்படிப்பட்ட மனந்திரும்புதலை யூதர்களில் யாராவது காட்டுவார்களா? ஆம்! ஏசாயா அதை இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “இனி உம்மைமாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.” பொ.ச.மு. 537-⁠ல் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின், அவர்கள் விக்கிரகங்களை வணங்கி பாகால் வணக்கத்திற்கு இரையாகவில்லை. என்றாலும், மற்ற பாவங்களுக்காக யூதர்கள் அடிக்கடி சிட்சிக்கப்படுகிறார்கள்.

21யூதாவின் குடிகளை சிறைபிடித்தவர்களைப் பற்றியதென்ன? “அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் நிழல்கள் உயிர்பெற்றெழ மாட்டா; ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்; அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாதொழித்தீர்.” (ஏசாயா 26:14, பொ.மொ.) தமக்கென்று யெகோவா தேர்ந்தெடுத்த தேசத்தை கொடுமைப்படுத்தியதற்காக பாபிலோன் துன்பத்தை அனுபவிக்கும். அகங்காரமாய் இருந்த பாபிலோனை யெகோவா மேதிய-பெர்சியர்களால் அழித்து, தம் மக்களை விடுவிப்பார். பலமான பட்டணமாய் திகழ்ந்த பாபிலோன் பெலனற்று செத்ததுபோலாகும். முடிவில், அந்த நகரம் இருந்த தடமே இல்லாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும்.

22நவீன கால நிறைவேற்றமாக, 1919-⁠ல் புடமிடப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானவர்கள் மகா பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு, யெகோவாவின் சேவையில் மறுபடியும் புதுத்தெம்போடு ஈடுபட ஆரம்பித்தனர். மீண்டும் உயிர் பெற்றவர்களாக, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையில் முழுமூச்சாய் இறங்கினர். (மத்தேயு 24:14) யெகோவாவின் ஆசீர்வாதத்தால், பலன் பெருகி வருகிறது. திரள்கூட்டமான “வேறே ஆடுகளும்” அவர்களோடு சேர்ந்து யெகோவாவை சேவிக்க கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகின்றனர். (யோவான் 10:16) “இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர். கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.”​—ஏசாயா 26:15, 16.

“எழுந்திருப்பார்கள்”

23யூதாவின் குடிகள் பாபிலோனில் சிறையிருந்த சமயத்திற்கே ஏசாயா மறுபடியும் நம்மை அழைத்து செல்கிறார். உதவுவதற்கு எவருமின்றி பிரசவ வேதனையில் துடிதுடிக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த தேசத்தை ஒப்பிடுகிறார். (ஏசாயா 26:17, 18-ஐ வாசிக்கவும்.) பொ.ச.மு. 537-⁠ல் அந்த உதவி கிடைக்கிறது. யெகோவாவின் மக்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்புகின்றனர். ஆலயத்தை மறுபடியும் கட்டி, தூய வணக்கத்தை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியாக, அந்த தேசம் மரித்த நிலையிலிருந்து எழுப்பப்படுகிறது. “மரித்துப்போன உமது ஜனங்கள் பிழைப்பார்கள், பிரேதமான என்னுடைய ஜனங்கள் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே படுத்திருக்கிறவர்களே விழித்துக் கெம்பீரியுங்கள்; உமது பனி ஒளிவீசும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி திரும்ப வரச்செய்யும்.” (ஏசாயா 26:19, தி.மொ.) யெகோவாவின் வல்லமைக்கு என்னே மகத்தான ஓர் எடுத்துக்காட்டு! மேலும், 1919-⁠ல் இந்த வார்த்தைகள் ஆவிக்குரிய ரீதியில் நிறைவேற்றம் அடைந்தது அவரது வல்லமைக்கு இன்னொரு சான்றாக விளங்கியதல்லவா! (வெளிப்படுத்துதல் 11:7-11) இந்த வார்த்தைகள், புதிய உலகில் சொல்லர்த்தமாக நிறைவேற்றம் அடையும் அந்த காலத்திற்காக நாம் வெகு ஆவலாய் எதிர்நோக்கி இருக்கிறோமல்லவா! அதோடு, கல்லறைகளில் செயலற்றவர்களாக இருக்கும் மரித்தோர் ‘இயேசுவின் குரலைக் கேட்டு, வெளியே வரும் நேரத்திற்காக’ மிக வாஞ்சையாய் இருக்கிறோமல்லவா!​—யோவான் 5:28, 29.

24என்றாலும், ஏசாயா மூலமாக வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை உண்மையுள்ளவர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் யெகோவாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:20, 21; செப்பனியா 1:14-ஐ ஒப்பிடுக.) இந்த வார்த்தைகளின் முதல் நிறைவேற்றம் பொ.ச.மு. 539-⁠ல், கோரேசு ராஜாவின்கீழ் வந்த மேதிய-பெர்சிய படைகள் பாபிலோனை வீழ்த்துகையில் நடந்தேறுகிறது. கோரேசு பாபிலோனுக்குள் வருகையில், யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கட்டளையிடுகிறான்; ஏனென்றால், “வெளியில் இருப்பவர்கள் எல்லாரையும் வெட்டி வீழ்த்தும்படியான ஆணை” அவனுடைய வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கிரேக்க சரித்திராசிரியர் ஸெனஃபன் குறிப்பிடுகிறார். இந்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘அறைகள்,’ இன்று எதை அர்த்தப்படுத்துகின்றன? உலகம் முழுவதிலும் இருக்கும் யெகோவாவின் மக்களுடைய ஆயிரக்கணக்கான சபைகளை அர்த்தப்படுத்துகின்றன. நம் வாழ்க்கையிலும், ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைப்பதிலும் இந்த சபைகள் மிக முக்கிய பாகம் வகிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 7:14) ஆகவே, சபையைக் குறித்து நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும், தவறாமல் கூட்டங்களுக்கு செல்வதும் மிக முக்கியம்!​—எபிரெயர் 10:24, 25.

25சாத்தானின் உலகம் மிக விரைவில் முடிவுறும். யெகோவாவினுடைய கோபாக்கினை வெளிப்படும் அந்த பயங்கரமான சமயத்தில் அவர் தம் மக்களை எப்படி பாதுகாப்பார் என்பது நமக்கு தெரியாது. (செப்பனியா 2:3) என்றாலும், யெகோவாவில் விசுவாசத்தோடு இருந்து, நம் உத்தமத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினால் இரட்சிப்பு கிட்டும் என்பது உறுதி.

26அந்த சமயத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: ‘அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.’ (ஏசாயா 27:1) இத்தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில், “லிவியாதான்” என்பது பாபிலோன், எகிப்து, அசீரியா போன்ற நாடுகளை குறிக்கிறது. இந்த நாடுகளில்தான் இஸ்ரவேலர்கள் அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கின்றனர். குறித்த காலத்தில், யெகோவாவின் மக்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வருவதை இந்த தேசங்களால் தடுக்க முடியாது. அப்படியானால், நம்முடைய காலத்தில் யார் இந்த லிவியாதான்? “பழைய பாம்பாகிய” சாத்தானும், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களுக்கு எதிராக போரிட அவன் பயன்படுத்தும் பொல்லாத ஒழுங்குமுறையுமே. (வெளிப்படுத்துதல் 12:9, 10; 13:14, 16, 17; 18:24) கடவுளுடைய மக்கள்மீது “லிவியாதான்” செலுத்தி வந்த ஆதிக்கம் 1919-⁠ல் முடிவுக்கு வந்தது. மிக சீக்கிரத்தில், யெகோவா ‘சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.’ அப்போது லிவியாதான் இல்லாமல் போய்விடுவான். இதற்கிடையே, யெகோவாவின் மக்களுக்கு எதிராக “லிவியாதான்” எடுக்கும் எந்த முயற்சியுமே வெற்றி அடையாது.​—ஏசாயா 54:⁠17.

‘இன்ப இரசம் தரும் திராட்சைத்தோட்டம்’

27விடுதலை பெற்ற யெகோவாவின் மக்கள் அனுபவிக்கும் நன்மைகளை மற்றொரு பாடல் வாயிலாக ஏசாயா இப்போது வெகு அழகாக விவரிக்கிறார்: “அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் [“இன்ப இரசம் தரும்,” கத்.பை.] திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.” (ஏசாயா 27:2, 3) ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானவர்களும் அவர்களோடு சேர்ந்து கடுமையாக உழைக்கும் அவர்களது கூட்டாளிகளும் இந்த பூமி முழுவதையுமே ஆவிக்குரிய கனிகளால் நிரப்பியுள்ளனர். குதூகலமாக கொண்டாடவும், ஆனந்தமாக பாடவும் இது சிறந்த காரணமல்லவா! ஆனால், இதற்கான பெருமை யெகோவாவையே சாரும். ஏனென்றால், அவரது திராட்சைத் தோட்டத்தை அருமையாக பராமரிப்பவர் அவரே.​—யோவான் 15:1-8-ஐ ஒப்பிடுக.

28யெகோவாவின் உக்கிரம், இப்போது ஆனந்தமாக மாறியுள்ளது! “உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்; இல்லாவிட்டால் அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்.” (ஏசாயா 27:4, 5) தம்முடைய திராட்சைத் தோட்டம் தொடர்ந்து ‘இன்ப இரசத்தை’ அமோகமாக தருவதற்காக, அந்தத் தோட்டத்தைக் கெடுக்கும் களைபோன்ற எந்த செல்வாக்கையும் யெகோவா வெட்டி வீழ்த்தி, சுட்டெரித்துவிடுகிறார். எனவே, கிறிஸ்தவ சபையின் அமைதியான சூழலை யாரும் கெடுக்காதிருப்பார்களாக! மாறாக, அனைவரும் ‘யெகோவாவின் பெலனைப் பற்றிக்கொண்டு’ அவருடைய தயவையும் பாதுகாப்பையும் தேடுவார்களாக. அப்படி செய்தால், கடவுளோடு சமாதானமாக இருக்க முடியும். இது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருப்பதால்தான் ஏசாயா அதைப்பற்றி இருமுறை குறிப்பிடுகிறார். விளைவு என்ன? “யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.” (ஏசாயா 27:6) c இந்த வசனத்தின் நிறைவேற்றம் யெகோவாவின் வல்லமைக்கோர் மகத்தான சான்றல்லவா! 1919 முதல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பூமியை “பலனால்,” அதாவது போஷாக்கான ஆவிக்குரிய உணவால் நிரப்பியுள்ளனர். அதன் விளைவாக, உத்தமமுள்ள வேறே ஆடுகள் லட்சக்கணக்கில் அவர்களோடு சேர்ந்து, ‘இரவும் பகலும் [கடவுளுக்கு] பரிசுத்த சேவை செய்கின்றனர்.’ (வெளிப்படுத்துதல் 7:15, NW) ஒழுக்கங்கெட்ட இந்த உலகில், இவர்கள் அவருடைய உயர்ந்த தராதரங்களை சந்தோஷத்தோடே கடைப்பிடித்து வருகிறார்கள். யெகோவாவும் அவர்களுடைய வேலையை ஆசீர்வதித்து பெருகப் பண்ணுகிறார். ஆகவே அந்தப் ‘பலனில்’ பங்குகொள்ளும் மாபெரும் பாக்கியத்தை நாம் ஒருபோதும் குறைவாக எடைபோடாதிருப்போமாக! மற்றவர்களோடு இந்தப் பலனை பகிர்ந்துகொள்ள, நம் துதியின் குரல் ஓங்கட்டும்!

[அடிக்குறிப்புகள்]

a ஆர் என்ற பெயரே “நகரம்” என்ற அர்த்தத்தை ஒருவேளை குறிக்கலாம்.

b வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கம் 170-ஐக் காண்க.

c ஏசாயா 27:7-13 வரையுள்ள வசனங்களின் விளக்கத்தை, பக்கம் 285-⁠ல் உள்ள பெட்டியில் காண்க.

[கேள்விகள்]

1. ஏசாயா ஏன் யெகோவாவுக்கு மதிப்பைக் காட்டுகிறார்?

2. யெகோவாவின் என்ன ஆலோசனையை ஏசாயா அறிவிக்கிறார், அந்த ஆலோசனையின் நோக்கம் என்னவாக இருக்கலாம்?

3. யெகோவாவின் எதிரிகள் எந்த விதத்தில் அவரை மகிமைப்படுத்துகிறார்கள்?

4. இன்றிருக்கும் “கொடூரமான ஜாதிகளின் நகரம்” எது, அந்த நகரமும் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டியிருக்கிறது?

5. யெகோவாவை முழுமையாக நம்புவோரை அவர் எப்படி பாதுகாக்கிறார்?

6, 7. (அ) என்ன வகையான விருந்தை யெகோவா ஆயத்தப்படுத்துகிறார், யாருக்காக? (ஆ) ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்த விருந்து எதற்கு படமாக இருக்கிறது?

8, 9. (அ) மனிதவர்க்கத்தின் எந்த இரண்டு பெரும் எதிரிகள் நீக்கப்படும்? விளக்கவும். (ஆ) தம்முடைய மக்களின் நிந்தையை அகற்ற கடவுள் என்ன செய்வார்?

10, 11. என்ன கடுமையான தண்டனையை யெகோவா மோவாபுக்காக வைத்திருக்கிறார்?

12. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு அறிவிப்புகள் ஏன் தனியே மோவாபுக்கு மட்டும் சொல்லப்படுகிறது?

13, 14. இன்று கடவுளுடைய மக்களுக்கு என்ன “பெலனான நகரம்” இருக்கிறது, அதன் உள்ளே செல்ல யார் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்?

15. ‘உயர்ந்த நகரம்’ இன்று எப்படி தாழ்த்தப்பட்டிருக்கிறது, ‘சிறுமையானவர்களின் கால்’ அதை எந்த விதத்தில் மிதிக்கிறது?

16. பக்திக்கான என்ன சிறந்த உதாரணத்தை ஏசாயா வைக்கிறார்?

17. என்ன ஆசீர்வாதங்களை துன்மார்க்கர் பெற முடியாது?

18. ஏசாயாவின் நாட்களில் இருந்த சிலர், என்ன விதத்தில் இருளில் இருக்க பிரியப்படுகின்றனர், அவர்கள் எப்போது யெகோவாவைக் கட்டாயமாக ‘காணுவார்கள்’?

19, 20. ஏன், எப்படி யெகோவா தம் மக்களை சிட்சிக்கிறார், அப்படிப்பட்ட சிட்சையிலிருந்து நன்மை அடைபவர்கள் யார்?

21. கடவுளுடைய மக்களை ஒடுக்குபவர்களுக்கு என்ன நேரிடும்?

22. நவீன காலங்களில், கடவுளுடைய மக்கள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்?

23. (அ) பொ.ச.மு. 537-⁠ல், யெகோவாவின் வல்லமை எப்படி மகத்தான முறையில் காட்டப்படுகிறது? (ஆ) பொ.ச. 1919-⁠ல், மறுபடியும் யெகோவாவின் வல்லமை எப்படி காட்டப்பட்டது?

24, 25. (அ) ஒளிந்துகொள்ளும்படி யெகோவா கொடுத்த கட்டளைக்கு பொ.ச.மு. 539-⁠ல் வாழ்ந்த யூதர்கள் எப்படி கீழ்ப்படிந்திருக்கலாம்? (ஆ) நவீன காலங்களில், ‘அறைகள்’ எவற்றை சுட்டிக்காட்டுகின்றன, இவற்றைக் குறித்து என்ன மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

26. ஏசாயாவின் நாட்களிலும் நம் நாட்களிலும், “லிவியாதான்” என்ன, ‘சமுத்திரத்தில் இருக்கும் இந்த வலுசர்ப்பத்திற்கு’ என்ன நேரிடுகிறது?

27, 28. (அ) யெகோவாவின் திராட்சைத் தோட்டம், பூமி முழுவதையும் எதனால் நிரப்பியுள்ளது? (ஆ) தம் திராட்சைத் தோட்டத்தை யெகோவா எப்படி பாதுகாக்கிறார்?

[பக்கம் 285-ன் பெட்டி]

“பெரிய எக்காளம்” விடுதலையை பறைசாற்றுகிறது

பொ.ச.மு. 607-⁠ல், வழிமாறிச் சென்ற தம் தேசத்தை சிறையிருப்பின் கோலால் யெகோவா தண்டிக்கையில் யூதாவின் வேதனை பெருகுகிறது. (வாசிக்கவும்: ஏசாயா 27:7-11, NW.) மிருக பலிகள் அந்த தேசத்தின் பாவங்களுக்கு பாவநிவாரணம் அளிக்கவே முடியாது. ஏனென்றால், அதன் பாவங்கள் அவ்வளவு மிகுதியாக இருக்கின்றன. எனவே, செம்மறியாடுகளை அல்லது வெள்ளாடுகளை ‘கத்தி பயமுறுத்தி விரட்டியடிப்பது’ போலவும், கடும் சூறைக்காற்றினால் இலைகளை ‘வீசித் தள்ளுவது’ போலவும் இஸ்ரவேலர்களை யெகோவா அவர்களுடைய நாட்டிலிருந்து வெளியேற்றுகிறார். அதன்பின், ஸ்திரீகளால் அடையாளப்படுத்தப்படும் பலவீனமான மக்கள் வந்து தேசத்தில் மீந்திருப்பதை கொள்ளையிடுகிறார்கள்.

என்றாலும், சிறையிருப்பிலிருந்து யெகோவா தம் மக்களை விடுவிக்கும் காலம் வருகிறது. மரத்தில் சிறைபட்டிருக்கும், அதாவது கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஒலிவ பழங்களை விவசாயி அடித்து உதிர்ப்பதைப்போல, யெகோவாவும் அவர்களை விடுவிக்கிறார். “அக்காலத்திலே, கர்த்தர் [ஐப்பிராத்து] ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி [“வாய்க்கால்முதல்,” பொ.மொ.] எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள். அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்து தேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.” (ஏசாயா 27:12, 13) பொ.ச.மு. 539-⁠ன் வெற்றிக்குப் பிறகு, அசீரியா, எகிப்து உட்பட, தன் பேரரசில் இருக்கும் எல்லா யூதர்களுக்கும் விடுதலை ஆணை ஒன்றை கோரேசு பிறப்பிக்கிறான். (எஸ்றா 1:1-4) அது, கடவுளுடைய மக்களின் சுதந்திர கீதத்தை எதிரொலிக்கும் “பெரிய எக்காளம்” முழங்குவதைப் போன்று இருக்கிறது.

[பக்கம் 275-ன் படங்கள்]

‘கொழுமையான பதார்த்தங்கள் நிறைந்த விருந்து’

[பக்கம் 277-ன் படம்]

முன்னாள் கைதிகளின் பாதங்களின்கீழ் பாபிலோன் மிதிக்கப்படுதல்

[பக்கம் 278-ன் படம்]

‘உன் அறைக்குள்ளே பிரவேசி’