Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்

ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்

அதிகாரம் இருபத்து ஒன்பது

ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்

ஏசாயா 36:1–39:8

யூதாவின் ராஜாவானபோது எசேக்கியாவுக்கு வயது 25. அவர் எப்படிப்பட்ட ராஜாவாக இருப்பார்? தன் தகப்பன் ஆகாஸ் ராஜாவைப்போல் மக்களை பொய்க் கடவுட்களைப் பின்பற்றி சோரம்போகும்படி தூண்டுவாரா? அல்லது தன் முற்பிதாவாகிய தாவீதைப்போல், மக்களை யெகோவாவின் வணக்கத்தில் வழிநடத்துவாரா?​—2 இராஜாக்கள் 16:⁠2.

2‘யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்ய’ உறுதியாய் இருந்தார் என்பது அவர் அரியணை ஏறிய உடனேயே மிகத் தெளிவாகியது. (2 இராஜாக்கள் 18:2, 3) தான் ஆட்சிக்கு வந்த முதல் வருஷத்திலேயே, யெகோவாவின் ஆலயம் பழுதுபார்க்கப்படவும் ஆலய சேவை மறுபடியும் துவக்கப்படவும் ஆணை பிறப்பித்தார். (2 நாளாகமம் 29:3, 7, 11) பிறகு, பிரமாண்டமான பஸ்கா பண்டிகைக்கு ஏற்பாடு செய்தார். அதற்கு இஸ்ரவேல் தேசத்தார் அனைவரையும் அழைத்தார். பத்து கோத்திர வடதிசை ராஜ்யமாகிய இஸ்ரவேலையும் அழைத்தார். நினைவிலிருந்து நீங்காத மாபெரும் விருந்து! சாலொமோன் ராஜாவின் நாட்களுக்குப் பிறகு அவ்விதமாக ஒருபோதும் கொண்டாடப்படவில்லை.​—2 நாளாகமம் 30:1, 25, 26.

3பஸ்கா பண்டிகை முடிந்ததும், வந்திருந்தவர்கள் விக்கிரகங்களை உடைத்தெறிந்தனர்; விக்கிரகத் தோப்புகளை வெட்டி, பொய்க் கடவுட்களுக்காக கட்டிய மேடைகளையும் பீடங்களையும் இடித்து, தகர்த்துப் போட்டனர். உண்மைக் கடவுளை சேவிக்கும் உறுதியான தீர்மானத்தோடு அவரவர் தங்கள் பட்டணங்களுக்கு திரும்பிச் சென்றனர். (2 நாளாகமம் 31:1) அவர்களுடைய முந்தைய மனநிலைக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! ‘சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடாது’ எனும் முக்கியமான பாடத்தை இன்று உண்மை கிறிஸ்தவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூடிவருவது, உள்ளூர் சபைக் கூட்டங்களாகவோ அல்லது பெரிய அளவில் நடக்கும் அசெம்பிளிகளாகவோ, மாநாடுகளாகவோ இருக்கலாம். உற்சாகமூட்டுதலைப் பெறுவதில் இவை முக்கிய பாகம் வகிக்கின்றன. மேலும், கடவுளுடைய பரிசுத்த ஆவியும் சகோதரத்துவமும் அவர்களை ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுகின்றன.’​—எபிரெயர் 10:23-25.

விசுவாசம் சோதிக்கப்படுதல்

4எருசலேமுக்கு கடும் சோதனைகள் காத்திருக்கின்றன. விசுவாசமற்ற ஆகாஸ் அசீரியர்களோடு ஒப்பந்தம் செய்திருந்தான். அந்த ஒப்பந்தத்தை எசேக்கியா முறித்துவிடுகிறார். அசீரியர்களின் கூட்டாளிகளாகிய பெலிஸ்தரை முறியடிக்கிறார். (2 இராஜாக்கள் 18:7, 8) இது அசீரியாவின் ராஜாவுக்கு கோபத்தை மூட்டுகிறது. எனவே, “எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்” என வாசிக்கிறோம். (ஏசாயா 36:1) கொடூரமான அசீரியப் படைகளின் உடனடி தாக்குதலிலிருந்து எருசலேமைப் பாதுகாக்க எண்ணி, முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சனகெரிப்புக்கு கப்பம் கட்ட எசேக்கியா ஒத்துக்கொள்கிறார். a​—⁠2 இராஜாக்கள் 18:⁠14.

5இந்த கப்பத்தை கட்ட போதிய அளவு பொன்னும் வெள்ளியும் அரசாங்க கஜானாவில் இல்லாததால், எசேக்கியா ஆலயத்திலிருந்து எந்தளவு பொன்னும் வெள்ளியும் எடுக்க முடியுமோ அந்தளவு எடுக்கிறார். ஆலயக் கதவுகளிலும் நிலைகளிலும் இருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவற்றை சனகெரிப்புக்கு அனுப்புகிறார். இது அந்த அசீரிய ராஜாவை திருப்திப்படுத்துகிறதா? வெகு குறுகிய காலத்திற்கே. (2 இராஜாக்கள் 18:15, 16) அசீரிய ராஜா எருசலேமை வெகு காலத்திற்கு விட்டுவைக்க மாட்டான் என்பதை எசேக்கியா உணருகிறார். எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். படையெடுத்து வரும் அசீரியர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்படி மக்கள் எல்லா ஊற்றுகளையும் ஓடைகளையும் தூர்த்துப் போடுகிறார்கள். எருசலேமின் இடிந்துபோன மதிலை எல்லாம் கட்டி, எசேக்கியா கோட்டையை பலப்படுத்துகிறார். “திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் பண்ணி” படைக்கலக் கருவிகளை சேர்க்கிறார்.​—2 நாளாகமம் 32:4, 5.

6என்றாலும், அதிபுத்திசாலித்தனமான போர் தந்திரங்களிலோ அல்லது கோட்டைக் கொத்தளங்களிலோ எசேக்கியா தன் நம்பிக்கையை வைக்கவில்லை. மாறாக, சேனைகளின் யெகோவா மீதே தன் நம்பிக்கையை வைக்கிறார். ‘திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே’ என்று தன் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்துகிறார். இதைக் கேட்ட மக்கள், ‘யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் . . . நம்பிக்கை வைக்கின்றனர்.’ (2 நாளாகமம் 32:7, 8) இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை ஏசாயா 36 முதல் 39 அதிகாரங்களிலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை பரிசீலிக்கையில் உங்கள் மனக்கண்களில் கற்பனை செய்து பாருங்கள்.

ரப்சாக்கேயின் வாதம்

7ரப்சாக்கேயையும் (தனிப்பட்ட ஒருவருடைய பெயரல்ல, ராணுவப் பட்டம்) இன்னும் இரண்டு உயர் அதிகாரிகளையும் சனகெரிப் எருசலேமுக்கு அனுப்புகிறான். எருசலேமை சரணடைந்துவிடும்படி கேட்க இவர்களை அனுப்புகிறான். (2 இராஜாக்கள் 18:17) இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் எனும் அரமனை விசாரிப்புக்காரன், செப்னா என்னும் சம்பிரதி [குமாஸ்தா], ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கன் ஆகிய மூவரும் எசேக்கியாவின் பிரதிநிதிகளாக அனுப்பப்படுகின்றனர். இவர்கள் ரப்சாக்கேயையும் அவனோடு வந்தவர்களையும் நகரத்தின் மதில்களுக்கு வெளியே சந்திக்கின்றனர்.ஏசாயா 36:2, 3.

8சண்டை போடாமலே எருசலேமை சரணடையச் செய்வதே ரப்சாக்கேயின் நோக்கம். எனவே, “நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? . . . நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?” என எபிரெய பாஷையில் முதலில் கூக்குரலிடுகிறான். (ஏசாயா 36:4, 5) பின்னர், அவர்கள் உதவி ஏதுமின்றி தன்னந்தனியாக இருக்கின்றனர் என சொல்லி பயந்து நடுங்கும் யூதர்களை நிந்திக்கிறான். ஆதரவுக்காக அவர்கள் எங்கே செல்வார்கள்? “நெரிந்த நாணல்கோலாகிய” எகிப்திடமா? (ஏசாயா 36:6) அந்த சமயம், எகிப்து முறிந்த நாணல்கோலாக இருக்கிறது. அதாவது, உலகப் பேரரசாக திகழும் எகிப்தை, எத்தியோப்பியா தற்காலிகமாக முறியடித்திருக்கிறது. அப்போது எகிப்தின் பார்வோனாக இருக்கும் ராஜா திராக்கா, எகிப்தியன் அல்ல, எத்தியோப்பியன். அவனும் அசீரியாவால் முறியடிக்கப்பட இருக்கிறான். (2 இராஜாக்கள் 19:8, 9) எகிப்து தன்னையே காத்துக்கொள்ள முடியாத நிலையில், யூதாவுக்கு எவ்விதத்திலும் உதவ முடியாது.

9யெகோவா தம் மக்களை வெறுக்கிறபடியால் அவர்களுக்காக போரிட மாட்டார் என ரப்சாக்கே இப்போது வாதாடுகிறான். ரப்சாக்கே சொல்கிறதாவது: ‘நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை [“யெகோவாவை,” NW] நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றினான்?’ (ஏசாயா 36:7) ஆனால் உண்மை அதுவல்ல. உயரமான இடங்களில் இருந்த மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றியதால், யூதர்கள் மீண்டும் யெகோவாவிடம் திரும்பியுள்ளனர்.

10அடுத்ததாக, யூதர்களுடைய ராணுவ பலம் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றது என்பதை ரப்சாக்கே நினைவுபடுத்துகிறான். அகம்பாவத்தோடு விவாதிக்கிறான்: ‘நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமா?’ (ஏசாயா 36:8) ஆனால், உண்மையில் யூதாவின் திறமைவாய்ந்த படையாட்கள் அதிகம்பேரா அல்லது கொஞ்சம்பேரா என்பதா முக்கியம்? இல்லவே இல்லை. ஏனென்றால், யூதாவின் இரட்சிப்பு சிறந்த ராணுவ பலத்தின்மீது சார்ந்ததல்ல. இந்த விஷயத்தை நீதிமொழிகள் 21:31 மிகத் தெளிவாக விளக்குகிறது: ‘குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ யெகோவாவால் வரும்.’ யெகோவாவின் ஆசீர்வாதம் அசீரியர்களுக்குத்தான் இருக்கும், யூதர்களுக்கல்ல என்று ரப்சாக்கே வாதிடுகிறான். யெகோவா அசீரியர் பக்கம் இல்லையென்றால், யூதாவின் எல்லைக்குள்ளே இவ்வளவு தூரம் அவர்கள் முன்னேறி வந்திருக்க முடியுமா என கேட்கிறான்.ஏசாயா 36:9, 10.

11நகரத்தின் மதில்மேல் இருக்கும் ஆண்கள் ரப்சாக்கேவின் வாதத்தைக் கேட்டு என்ன ஆவார்களோ என்பதே எசேக்கியாவின் பிரதிநிதிகளுடைய கவலை. எனவே, அந்த யூத அதிகாரிகள் இவ்வாறு வேண்டுகின்றனர்: “உம்முடைய அடியாரோடே சீரிய [“அரமேய,” பொ.மொ.] பாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூத பாஷையிலே பேச வேண்டாம்.” (ஏசாயா 36:11) ஆனால், ரப்சாக்கேவுக்கு சீரிய பாஷையில் பேச வேண்டுமென்கிற எண்ணமே இல்லை. சந்தேகம் மற்றும் பயத்தின் விதையை யூதர்களின் மனங்களில் விதைக்க வேண்டுமென்பதே அவன் விருப்பம். அப்போதுதான் யூதர்கள் சரணடைவர், சண்டை போடாமலேயே எருசலேமை வென்றுவிடலாம்! (ஏசாயா 36:12) எனவேதான், அந்த அசீரியன் மீண்டும் “யூத பாஷையிலே” பேசுகிறான். எருசலேமின் குடிகளை எச்சரிக்கிறான்: “எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்க மாட்டான்.” இதையடுத்து, அசீரிய ஆட்சியில் யூதர்கள் என்னவிதமான சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதை விவரித்து அவர்களை வஞ்சிக்க முயலுகிறான்: “நீங்கள் என்னோடே ராஜியாகி [“சமாதானமாகி,” பொ.மொ.], காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள். நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத் தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்ச ரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக் கொண்டு போகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச் செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.”​—ஏசாயா 36:13-17.

12அந்த வருடம் யூதர்களுக்கு அறுவடை இருக்காது. அசீரியப் படையெடுப்பின் காரணமாக, அவர்கள் பயிரிடவே இல்லை. நல்ல சதைப்பற்றும் சாரும் உள்ள திராட்சைப் பழங்களும் குளிர்ந்த தண்ணீரும் அவர்களுடைய ஆசையைத் தூண்டும். ஆனால், யூதர்களை கோழையாக்க ரப்சாக்கே தொடுத்த கணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.

13வாதங்கள் எனும் ஆயுதங்களை சரமாரியாக வீசிய ரப்சாக்கே, அடுத்ததாக மற்றொரு வாதக்கணையை ஏவுகிறான். ‘யெகோவா நம்மைத் தப்புவிப்பார்’ என்று சொல்லும் எசேக்கியாவின் வார்த்தைகளை நம்பும் யூதர்களை எச்சரிக்கிறான். பத்து கோத்திர ராஜ்யமாகிய சமாரியாவை அதன் கடவுட்கள், அசீரியர்களின் கைகளிலிருந்து தப்புவிக்கவில்லை என்பதையும் யூதர்களுக்கு அவன் நினைப்பூட்டுகிறான். அசீரியா தோற்கடித்த மற்ற தேசங்களின் கடவுட்களைப் பற்றியதென்ன? “ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பார்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?” என எகத்தாளமாக வினவுகிறான்.ஏசாயா 36:18-20.

14விசுவாச துரோக சமாரியாவுக்கும் எசேக்கியாவின் ஆட்சியின்கீழ் இருக்கும் எருசலேமுக்கும் உள்ள மலைபோன்ற வித்தியாசத்தை, பொய்க் கடவுட்களை வணங்கும் ரப்சாக்கே தெரிந்திருக்க நியாயமில்லை. பத்து கோத்திர ராஜ்யமாகிய சமாரியாவைக் காக்க அதன் பொய்க் கடவுட்களுக்கு சக்தியில்லை. (2 இராஜாக்கள் 17:7, 17, 18) மறுபட்சத்தில், எசேக்கியாவின் ஆட்சியில் எருசலேம் பொய்க் கடவுட்களை விட்டு விலகி, யெகோவாவை சேவிக்க மீண்டும் திரும்பியிருக்கிறது. என்றாலும், அந்த மூன்று யூதேய பிரதிநிதிகள் இதை ரப்சாக்கேவுக்கு விளக்க முயலவில்லை. ஏன்? “அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்ல வேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.” (ஏசாயா 36:21) எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகிய மூவரும் எசேக்கியாவிடம் திரும்பிச் சென்று, ரப்சாக்கேவின் வார்த்தைகளை அறிவிக்கின்றனர்.ஏசாயா 36:⁠22.

எசேக்கியாவின் தீர்மானம்

15எசேக்கியா ராஜா இப்போது முக்கியமான ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எருசலேம் அசீரியர்களிடம் சரணடைந்துவிட வேண்டுமா? எகிப்தோடு கூட்டு சேருவதா? அல்லது தனித்திருந்து போரிடுவதா? எசேக்கியா மிக இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்படுகிறார். அவர் யெகோவாவின் ஆலயத்திற்கு செல்கிறார். அதேசமயம், ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க எலியாக்கீமையும் செப்னாவையும் மற்றும் ஆசாரியர்களின் மூப்பரையும் ஏசாயாவிடம் அனுப்புகிறார். (ஏசாயா 37:1, 2) ராஜாவின் பிரதிநிதிகள் இரட்டு உடுத்தியவர்களாக ஏசாயாவிடம் சென்று, சொல்வதாவது: “இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அனுபவிக்கிற நாள்; . . . ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரிய ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்.” (ஏசாயா 37:3-5) அசீரியர்கள் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கின்றனர்! அவர்களுடைய நிந்தைகளுக்கு யெகோவா பதிலளிப்பாரா? ஏசாயா மூலமாக யெகோவா யூதர்களுக்கு உறுதியளிக்கிறார்: “அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன்.”​—ஏசாயா 37:6, 7.

16இதற்கிடையே, லிப்னாவுக்கு எதிராக போர் தொடுக்கும் சனகெரிப்புக்கு பக்கபலமாக இருப்பதற்காக ரப்சாக்கே திரும்பி அழைக்கப்படுகிறான். சனகெரிப், எருசலேமைப் பிறகு பார்த்துக்கொள்வான். (ஏசாயா 37:8) இருந்தாலும், ரப்சாக்கே திரும்பிச் சென்றது எந்தவிதத்திலும் எசேக்கியாவின் பிரச்சினையைக் குறைத்துவிடவில்லை. சரணடைய மறுத்தால், எருசலேம் குடிகளின் கதி என்னவாகும் என்பதை விவரிக்கும் மிரட்டல் கடிதங்களை சனகெரிப் அனுப்புகிறான். ‘அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? என் பிதாக்கள் அழித்துவிட்ட . . . தேசத்தாரை அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே?’ (ஏசாயா 37:9-13) மொத்தத்தில், அவர்களை எதிர்ப்பது முட்டாள்தனம், எதிர்த்தால் மிஞ்சுவது பிரச்சினைகள்தான்! இதைத்தான் அந்த அசீரியன் வலியுறுத்துகிறான்.

17தான் எடுக்கும் தீர்மானங்களின் விளைவுகளைப் பற்றிய கவலை எசேக்கியாவை மிகவும் வாட்டி வதைக்கிறது. எனவே, சனகெரிப்பின் கடிதங்களை ஆலயத்தில் யெகோவாவின் சமுகத்திற்குமுன் எசேக்கியா விரித்து வைக்கிறார். (ஏசாயா 37:14) அசீரியனின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும்படி எசேக்கியா மனதுருகி யெகோவாவிடம் கெஞ்சுகிறார். தன் ஜெபத்தை இந்த வார்த்தைகளோடு முடிக்கிறார்: ‘இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவன் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும்.’ (ஏசாயா 37:15-20) தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல; ஆனால் அசீரியா எருசலேமை தோற்கடித்தால் அது யெகோவாவின் பெயருக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்பதே எசேக்கியாவின் முக்கிய கவலை. இது அவரது வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறதல்லவா?

18ஏசாயா மூலம் யெகோவா எசேக்கியாவின் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். எருசலேம் அசீரியாவிடம் சரணடைய வேண்டாம்; தாக்குதலை எதிர்த்து நிற்க வேண்டும். அந்த அசீரியனின் நிந்தைக்கு யெகோவா தந்த பதிலை, சனகெரிப்பிடம் சொல்லுவதுபோல ஏசாயா தைரியமாக சொல்கிறார்: “சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம் பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே [ஏளனமாக] தலையைத் துலுக்குகிறாள்.” (ஏசாயா 37:21, 22) யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை நிந்திக்க நீ யார்? உன் செயல்களை நான் அறிவேன். நீ செருக்குடன் இருந்தாய்; மேட்டிமையாய் பேசினாய். உன் இரதங்களின் திரளில் நம்பிக்கை வைத்து, அநேக தேசங்களை வென்றாய். ஆனாலும் நீ வெல்ல முடியாதவனல்ல. உன் திட்டங்களை நான் முறிப்பேன். உன்னை நான் வெல்வேன். நீ மற்றவர்களுக்கு செய்ததுபோல நான் உனக்கு செய்வேன். உன் மூக்கிலே துறட்டைப் போட்டு, உன்னை மறுபடியும் அசீரியாவுக்கே போகப்பண்ணுவேன்!’ஏசாயா 37:23-29.

“உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்”

19ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு என்ன உத்தரவாதம் எசேக்கியாவுக்கு இருக்கிறது? யெகோவாவே பதிலளிக்கிறார்: “உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.” (ஏசாயா 37:30) நகரத்திற்குள் சிக்கிக்கிடந்த யூதர்களுக்கு யெகோவா உணவளிப்பார். அசீரியர்களின் முற்றுகையால் அவர்களால் விதை விதைக்க முடியாவிட்டாலும், முந்தின வருட அறுவடையில் மீந்திருப்பதை சாப்பிடுவார்கள். அடுத்த வருடம், ஓய்வு வருடம். எனவே, மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அவர்கள் நிலத்தில் பயிரிடாமல் அதை சும்மா விடவேண்டும். (யாத்திராகமம் 23:11) ஜனங்கள் தம் வார்த்தைக்கு செவிகொடுத்தால், அவர்களுக்கு போதிய அளவு தானியம் விளையும் என யெகோவா வாக்குறுதி கொடுக்கிறார். அதற்கடுத்த வருடம், எப்போதும்போல் அவர்கள் பயிரிட்டு, தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கலாம்.

20சீக்கிரத்தில் பிடுங்கி எறிய முடியாத ஒரு மரத்திற்கு யெகோவா தம் மக்களை இப்போது ஒப்பிடுகிறார்: “யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள்.” (ஏசாயா 37:31, 32) யெகோவாவில் நம்பிக்கை வைப்போர் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பது உறுதி. தேசத்தில் அவர்களும் அவர்களுடைய வம்சத்தாரும் நிலைத்திருப்பர்.

21எருசலேமுக்கு எதிராக வந்த அசீரியனின் மிரட்டல்கள் என்னவாகும்? யெகோவா பதிலளிக்கிறார்: “அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்த வழியே திரும்பிப் போவான்.” (ஏசாயா 37:33, 34) எருசலேமுக்கும் அசீரியாவுக்கும் இடையே போர் நடக்காது. வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், போரிடாமலேயே தோற்றுப்போகப் போவது யூதர்களல்ல, அசீரியர்கள்தான்.

22யெகோவா சொன்னதுபோலவே, ஒரு தூதனை அனுப்பி, சனகெரிப்பின் படையிலே பராக்கிரமசாலிகளான வீரர்கள் 1,85,000 பேரை கொன்று குவிக்கிறார். இது லிப்னாவில் நடக்கிறது. தூக்கத்திலிருந்து எழுந்த சனகெரிப், தன் படையின் தலைவர்கள், தளபதிகள், பராக்கிரமசாலிகள் பிணமாக கிடப்பதைக் காண்கிறான். அவமானம் தாங்காமல், சனகெரிப் நினிவேக்கு திரும்பிப் போகிறான். ஆனால், படுதோல்வியை தழுவியபோதிலும், பொய்க் கடவுளாகிய நிஸ்ரோகுக்குத்தான் தொடர்ந்து பக்தியை காட்டுகிறான். சில வருடங்களுக்குப் பிறகு, நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய குமாரர்களில் இருவர் அவனைப் பட்டயத்தினால் கொன்று போடுகிறார்கள். மீண்டும், உயிரற்ற நிஸ்ரோக்கால் அவனை காப்பாற்ற முடியவில்லை.ஏசாயா 37:35-38.

எசேக்கியாவின் விசுவாசம் மேலும் பலப்படுத்தப்படுகிறது

23யூதாவுக்கு எதிராக சனகெரிப் முதன்முறையாக படையெடுத்து வந்த சமயத்தில், எசேக்கியா மரணப்படுக்கையில் விழுகிறார். அவர் இறந்துவிடுவார் என ஏசாயா அவரிடம் சொல்கிறார். (ஏசாயா 38:1) 39 வயதே நிரம்பிய அந்த ராஜாவை துக்கம் வாட்டுகிறது. தன்னுடைய உடல் நலனைப் பற்றி மட்டுமல்ல, மக்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் அதிக கவலைப்படுகிறார். அசீரியர்களால் தாக்கப்படும் அபாயத்தில் யூதாவும் எருசலேமும் இருக்கிறது. எசேக்கியா இறந்துவிட்டால், யார் போரை முன்நின்று நடத்த முடியும்? அப்போது, எசேக்கியாவுக்கு அடுத்ததாக ஆட்சிக்கு வர அவருக்கு குமாரர் எவரும் இல்லை. தன்மீது இரக்கம் காட்டும்படி, எசேக்கியா யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடுகிறார்.ஏசாயா 38:2, 3.

24ஏசாயா அரமனை முற்றத்தைவிட்டு, வெளியே வருவதற்கு முன்னரே, மற்றொரு செய்தியோடு மரணப்படுக்கையிலிருக்கும் ராஜாவிடம் யெகோவா அவரை மீண்டும் அனுப்புகிறார்: “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.” (ஏசாயா 38:4-6; 2 இராஜாக்கள் 20:4, 5) தம் வாக்குறுதியை அசாதாரணமான ஓர் அடையாளத்தால் யெகோவா உறுதிப்படுத்துவார். “இதோ, ஆகாசுடைய படிக்கட்டில் இறங்கின படிகளின் நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புவேன்.”​—ஏசாயா 38:7, 8அ, NW.

25யூத சரித்திராசிரியர் ஜோஸிஃபஸின் கருத்துப்படி, அரண்மனை உள்ளே ஒரு படிக்கட்டு இருந்தது, அதன் அருகே ஒரு தூண் இருந்திருக்கலாம். சூரிய ஒளி அந்தத் தூண்மீது படும்போது, அதன் நிழல் படிகள்மேல் விழும். படிகளில் விழும் இந்த நிழலை வைத்து ஒருவர் நேரத்தை கணக்கிட முடியும். இப்போது யெகோவா ஓர் அற்புதத்தை நடப்பிக்கிறார். வழக்கமாக, நிழல் படிகள்மீது பட்டு மெதுமெதுவாக இறங்கியபின், அதைப் பத்துப் படிகள் பின்னோக்கித் திருப்புகிறார். இப்படிப்பட்ட காரியத்தை யாராவது அதுவரை கேள்விப்பட்டிருப்பார்களா? பைபிள் குறிப்பிடுகிறது: “அப்படியே படிக்கட்டில் இறங்கியிருந்த நிழல் பத்துப்படிகள் பின்னிட்டுத் திரும்பிற்று.” (ஏசாயா 38:8ஆ, NW) இது நடந்து சிறிது காலத்திலேயே, எசேக்கியா தன் வியாதியிலிருந்து குணமடைகிறார். இந்தச் செய்தி பாபிலோன் வரை பரவுகிறது. பாபிலோன் ராஜா இதைக் கேள்விப்பட்டதும், இது உண்மைதானா என தெரிந்துகொள்ள எருசலேமிற்கு தூதுவர்களை அனுப்புகிறான்.

26எசேக்கியா அற்புதமாக குணமாக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய முதல் குமாரன் மனாசே பிறக்கிறான். மனாசே வளர்ந்து பெரியவனாகையில், கடவுளுடைய இரக்கத்தை மதிக்கத் தவறுகிறான். கடவுள் இரக்கம் காண்பித்திராவிட்டால் அவன் பிறந்திருக்கவே முடியாது என்பதை மறந்துவிடுகிறான்! அதை மதிப்பதற்கு மாறாக யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதையே தன் வாழ்நாளில் பெருமளவில் செய்கிறான்.​—2 நாளாகமம் 32:24; 33:1-6.

தவறுதலான நடவடிக்கை

27தன் முற்பிதாவாகிய தாவீதைப்போல், எசேக்கியாவும் விசுவாசமுள்ள மனிதன். அவர் கடவுளுடைய வார்த்தையை பொக்கிஷமாக கருதுகிறார். நீதிமொழிகள் 25:1-⁠ன்படி, இப்போது நீதிமொழிகள் 25 முதல் 29 வரையான அதிகாரங்களிலுள்ள வார்த்தைகளைத் தொகுத்தவர் இவரே. 119-⁠ம் சங்கீதத்தை இயற்றியவரும் இவரே என சிலர் நம்புகின்றனர். எசேக்கியா குணமடைந்தபின் எழுதிய மனதை உருக வைக்கும் நன்றியின் பாடல், அவரது உணர்ச்சிகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. “எங்கள் ஜீவநாளெல்லாம்” யெகோவாவின் ஆலயத்தில் அவரை துதிப்பதே, வாழ்க்கையில் மிக முக்கியமான காரியம் என சொல்லி அந்தப் பாடலை முடிக்கிறார். (ஏசாயா 38:9-20) மெய் வணக்கத்தைக் குறித்து நாம் எல்லாருமே அதேமாதிரி நினைப்போமாக!

28விசுவாசமுள்ள எசேக்கியாவும் அபூரண மனிதன்தான். அவரை யெகோவா குணப்படுத்திய பின், சிறிது காலத்தில் மிக மோசமான ஒரு தவறு செய்கிறார். ஏசாயா விளக்குகிறார்: “அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷ சாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷ சாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.”​—ஏசாயா 39:1, 2. b

29யெகோவாவின் தூதனால் படுமோசமாக தோல்வியைத் தழுவிய பிறகும், பாபிலோன் உட்பட பல நாடுகளை அசீரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் கூட்டு சேரும் சாத்தியத்தைக் கருதி, பாபிலோனிய ராஜாவைப் பிரியப்படுத்த ஒருவேளை எசேக்கியா விரும்பியிருக்கலாம். என்றாலும், தங்கள் எதிரிகளோடு யூதாவின் குடிகள் கூட்டுசேருவதை யெகோவா விரும்பவில்லை; தம்மை நம்பும்படியே அவர் விரும்புகிறார்! எதிர்காலத்தில் நடக்க இருப்பதை தம் தீர்க்கதரிசி ஏசாயா மூலம் யெகோவா எசேக்கியாவுக்குத் தெரிவிக்கிறார்: “நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும். நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள்.” (ஏசாயா 39:3-7) எந்த தேசத்தின் ராஜாவைப் பிரியப்படுத்த எசேக்கியா விரும்பினாரோ, அந்த தேசம் எருசலேமின் பொக்கிஷங்களை கொள்ளையடித்து, அதன் குடிகளை அடிமைகளாக கொண்டுபோகும். பாபிலோனியர்களுக்கு தன் பொக்கிஷங்களை எசேக்கியா காட்டுவது, அவர்களுடைய பேராசைத் தீயை இன்னும் அதிகமாக கொழுந்துவிட்டெரியச் செய்கிறது.

30பாபிலோனியர்களுக்கு தன் பொக்கிஷத்தை எல்லாம் எசேக்கியா காட்டிய சம்பவத்தை 2 நாளாகமம் 32:26 இவ்வாறு விவரிக்கிறது: “எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.”

31குறைபாடுகள் இருந்தபோதிலும், எசேக்கியா விசுவாசமுள்ள மனிதனாக இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா, உணர்ச்சிகளையுடைய ஓர் உண்மையான நபர் என்பதை அறிந்திருந்தார். எனவே, பிரச்சினைகள் நெருக்கும்போது யெகோவாவிடத்தில் மனதுருகி ஜெபித்தார். யெகோவா அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்தார். உயிரோடிருந்த நாளெல்லாம் அவருக்கு மனசமாதானத்தை யெகோவா தேவன் அருளினார். அதற்கு எசேக்கியா நன்றியுடையவராக இருந்தார். (ஏசாயா 39:8) அதைப்போலவே, இன்று நமக்கும் யெகோவா உண்மையான நபராக இருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது, சமாளிக்கவும் அதற்கான ஞானத்திற்காகவும் எசேக்கியாவைப் போலவே நாமும் யெகோவாவை நாடுவோமாக! ஏனென்றால், ‘அவர் யாவருக்கும் சம்பூரணமாயும் ஒருவரையும் கடிந்துகொள்ளாமலும் கொடுக்கிறவர்.’ (யாக்கோபு 1:5) பொறுமையோடு தொடர்ந்து சகித்திருந்து, யெகோவாவில் விசுவாசத்தைக் காட்டினால், இப்போதும் எதிர்காலத்திலும் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்” என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.​—எபிரெயர் 11:⁠6.

[அடிக்குறிப்புகள்]

a இதன் தற்போதைய மதிப்பு 95,00,000 (யு.எஸ்.) டாலருக்கும் அதிகம்.

b சனகெரிப்பின் தோல்விக்குப்பின், சுற்றியிருந்த நாடுகள் எசேக்கியாவுக்கு பொன்னையும், வெள்ளியையும், மற்ற விலையுயர்ந்த பொருட்களையும் அனுப்பின. 2 நாளாகமம் 32:22, 23, 27-⁠ல் இப்படி வாசிக்கிறோம்: “எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது.” மேலும், “அவன் . . . சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.” அசீரியர்களுக்கு கப்பம் கட்டியபோது காலியான அவருடைய கஜானாவை மீண்டும் நிரப்ப இந்த வெகுமதிகள் உதவியிருக்கலாம்.

[கேள்விகள்]

1, 2. ஆகாஸைவிட நல்ல ராஜாவாக எசேக்கியா எப்படி நிரூபித்தார்?

3. (அ) எசேக்கியா ஏற்பாடு செய்த பஸ்கா பண்டிகைக்கு வந்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் குடிகள் என்ன செய்தார்கள்? (ஆ) பஸ்காவிற்கு வந்தவர்கள் எடுத்த உறுதியான நடவடிக்கையிலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்கின்றனர்?

4, 5. (அ) அசீரியாவோடு கூட்டு வைத்துக்கொள்ளவில்லை என்பதை எசேக்கியா எப்படி காட்டுகிறார்? (ஆ) யூதாவுக்கு எதிராக என்ன ராணுவ நடவடிக்கையை சனகெரிப் எடுக்கிறான், எருசலேமின்மேல் வரும் உடனடி தாக்குதலை தவிர்க்க எசேக்கியா என்ன செய்கிறார்? (இ) அசீரியர்களிடமிருந்து எருசலேமை காக்க எசேக்கியா செய்கிற ஏற்பாடுகள் யாவை?

6. எசேக்கியா யார்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறார்?

7. ரப்சாக்கே யார், அவன் ஏன் எருசலேமுக்கு அனுப்பப்படுகிறான்?

8. எருசலேமின் எதிர்ப்பை முறியடிக்க ரப்சாக்கே எப்படி முயற்சி செய்கிறான்?

9. யெகோவா தம் மக்களை கைவிட்டு விடுவார் என்ற முடிவுக்கு ரப்சாக்கே வர காரணம் என்ன, ஆனால் உண்மை என்ன?

10. யூதாவின் படையாட்கள் அதிகமா அல்லது கொஞ்சமா என்பது ஏன் முக்கியமல்ல?

11, 12. (அ) ரப்சாக்கே ஏன் “யூத பாஷையிலே” பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்களின் ஆசையை தூண்ட எப்படி முயலுகிறான்? (ஆ) ரப்சாக்கேவின் வார்த்தைகள் யூதர்களை எப்படி பாதிக்கக்கூடும்?

13, 14. ரப்சாக்கே எவ்வளவுதான் விவாதித்தாலும், சமாரியாவுக்கு ஏற்பட்ட நிலை யூதாவை ஏன் எவ்விதத்திலும் பாதிக்காது?

15. (அ) எசேக்கியா இப்போது என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்? (ஆ) யெகோவா தம் மக்களுக்கு என்ன உறுதியளிக்கிறார்?

16. சனகெரிப் என்ன கடிதங்களை அனுப்புகிறான்?

17, 18. (அ) பாதுகாப்புக்காக யெகோவாவிடம் எசேக்கியா மன்றாடுவதன் நோக்கம் என்ன? (ஆ) ஏசாயா மூலம் யெகோவா அசீரியனுக்கு எப்படி பதிலளிக்கிறார்?

19. எசேக்கியாவுக்கு என்ன அடையாளத்தை யெகோவா தருகிறார், அதன் அர்த்தம் என்ன?

20. அசீரிய தாக்குதலை தப்புவோர் எந்த விதத்தில் “கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள்”?

21, 22. (அ) சனகெரிப்பைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது? (ஆ) சனகெரிப்பைக் குறித்த யெகோவாவின் வார்த்தைகள் எப்படி, எப்போது நிறைவேறுகின்றன?

23. யூதாவுக்கு எதிராக சனகெரிப் முதன்முறையாக படையெடுத்து வருகையில், எசேக்கியா என்ன பிரச்சினையில் இருக்கிறார், அதன் விளைவுகள் என்ன?

24, 25. (அ) எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா எப்படி பரிவோடு பதிலளிக்கிறார்? (ஆ) ஏசாயா 38:7, 8-⁠ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, யெகோவா என்ன அற்புதத்தை நடப்பிக்கிறார்?

26. எசேக்கியாவின் வாழ்நாளைக் கூட்டுவதால் ஏற்படும் ஒரு பலன் என்ன?

27. யெகோவாவுக்கு எப்படியெல்லாம் எசேக்கியா மதிப்பைக் காட்டுகிறார்?

28. அற்புதமாக குணமடைந்த சிறிது காலத்திற்குப் பின் என்ன தவறை எசேக்கியா செய்கிறார்?

29. (அ) பாபிலோனிய தூதுவர்களுக்கு தன் பொக்கிஷத்தை என்ன நோக்கத்தோடு எசேக்கியா காட்டியிருக்கலாம்? (ஆ) எசேக்கியாவின் தவறான தீர்மானத்தின் விளைவு என்னவாகும்?

30. எசேக்கியா நல்ல மனநிலையை எப்படி காட்டினார்?

31. எசேக்கியாவின் வாழ்க்கையில் என்ன சம்பவங்கள் நடந்தன, இவை நமக்கு எதை கற்பிக்கின்றன?

[பக்கம் 383-ன் படம்]

பலம்வாய்ந்த அசீரியப் படைகளை எதிர்ப்படுகையில் எசேக்கியா ராஜா யெகோவாவையே நம்புகிறார்

[பக்கம் 384-ன் முழுபக்க படம்]

[பக்கம் 389-ன் படம்]

யெகோவாவின் ஆலோசனையைக் கேட்க, ராஜா பிரதிநிதிகளை ஏசாயாவிடம் அனுப்புகிறார்

[பக்கம் 390-ன் படம்]

அசீரியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, யெகோவாவின் பெயர் மகிமைப்பட வேண்டுமென எசேக்கியா ஜெபிக்கிறார்

[பக்கம் 393-ன் படம்]

1,85,000 அசீரியர்களை யெகோவாவின் தூதன் சங்கரிக்கிறார்