Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அநுக்கிரக காலம்’

‘அநுக்கிரக காலம்’

அதிகாரம் பத்து

‘அநுக்கிரக காலம்’

ஏசாயா 49:1-26

உண்மையுள்ள மனிதர் அனைவரும் நீண்ட காலமாகவே கடவுளுடைய அங்கீகாரத்தையும் அரவணைப்பையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள். ஆனால், யெகோவா தம்முடைய அநுக்கிரகத்தை கண்மூடித்தனமாக அனைவருக்கும் அள்ளி வழங்குவதில்லை. இந்த ஒப்பற்ற ஆசீர்வாதத்தை அனுபவிக்க ஒருவர் தகுதிபெற வேண்டும். ஏசாயா இத்தகுதியைப் பெற்றிருந்தார். அவருக்கு கடவுளுடைய தயவு இருந்தது, தம்முடைய சித்தத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க யெகோவா அவரை ஒரு கருவியாகவும் பயன்படுத்தினார். இதற்கு ஓர் உதாரணம், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் 49-⁠ம் அதிகாரத்தில் முற்பகுதியிலுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2ஆபிரகாமின் வித்துவுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வார்த்தைகளே இவை. இதன் முதல் நிறைவேற்றத்தில், ஆபிரகாமின் வழிவந்த இஸ்ரவேல் தேசத்தாரே அந்த வித்து. ஆனால் அந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள பெரும்பாலான வார்த்தைகள் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த ஆபிரகாமின் வித்துவாகிய வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவுக்கே பொருந்துகின்றன. தேவ ஆவியால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் மேசியாவின் ஆவிக்குரிய சகோதரர்களுக்கும் பொருந்துகின்றன. இவர்கள் ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்துவின் பாகமாகவும் ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ பாகமாகவும் ஆகிறார்கள். (கலாத்தியர் 3:7, 16, 29; 6:16) குறிப்பாக, யெகோவாவுக்கும் அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையிலான விசேஷித்த உறவை ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி விளக்குகிறது.​—ஏசாயா 49:26.

யெகோவாவால் நியமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுதல்

3மேசியா கடவுளுடைய அநுக்கிரகத்தை அல்லது அங்கீகாரத்தைப் பெறுகிறார். தம்முடைய வேலையை நிறைவேற்ற யெகோவா அவருக்கு அதிகாரத்தையும் தகுதிகளையும் அளிக்கிறார். ஆகவேதான் வருங்கால மேசியா இவ்வாறு கூறுவது பொருத்தமாக இருக்கிறது: “தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, [“மக்களினங்களே,” பொ.மொ.] கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.”​—ஏசாயா 49:1.

4இங்கு மேசியா, “தூரத்திலிருக்கிற” ஜனங்களிடம் பேசுகிறார். மேசியா யூத ஜனங்களுக்கென்று வாக்குப்பண்ணப்பட்டவராக இருந்தாலும் அவருடைய ஊழியத்தால் சகல ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். (மத்தேயு 25:31-33) ‘தீவுகளும்’ ‘மக்களினங்களும்’ யெகோவாவுடன் உடன்படிக்கை செய்யாதபோதிலும் இஸ்ரவேலின் மேசியாவுக்குச் செவிசாய்க்க வேண்டும். ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் இரட்சிப்பை அருளவே அவர் அனுப்பப்படுகிறார்.

5மேசியா மனிதனாக பிறப்பதற்கு முன்பே யெகோவா அவருக்கு பெயர் சூட்டுவார் என தீர்க்கதரிசனம் கூறுகிறது. (மத்தேயு 1:21; லூக்கா 1:31) இயேசு பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே “அருமையான ஆலோசனைக் கர்த்தா” (NW), “வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். (ஏசாயா 9:6) இம்மானுவேல்​—⁠ஒருவேளை ஏசாயாவின் குமாரனுடைய பெயர்​—⁠மேசியாவின் தீர்க்கதரிசன பெயராகவும் இருக்கிறது. (ஏசாயா 7:14; மத்தேயு 1:21-23) இயேசு என்ற பெயரில் மேசியா அறியப்படுவார் என்பதும் அவருடைய பிறப்புக்கு முன்னரே அறிவிக்கப்படுகிறது. (லூக்கா 1:30, 31) “யெகோவாவே இரட்சிப்பு” என்ற அர்த்தமுடைய எபிரெய வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் பிறக்கிறது. ஆகவே இயேசு, தாமாகவே நியமனம் செய்துகொண்ட கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகிறது.

6மேசியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் தொடர்கின்றன: “அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான [“பளபளப்பான,” பொ.மொ.] அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியிலே மூடிவைத்தார்.” (ஏசாயா 49:2) பொ.ச. 29-⁠ல் யெகோவாவின் மேசியா தம் பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பிக்கும் சமயம் வருகையில் அவருடைய சொல்லும் செயலும் உண்மையிலேயே கேட்போரின் இதயத்தை துளைத்திடும் கூர்மையான, பளபளக்கும் ஆயுதங்களைப் போன்றே இருக்கின்றன. (லூக்கா 4:31, 32) அவருடைய சொல்லும் செயலும் யெகோவாவின் மிகப் பெரிய விரோதியாகிய சாத்தான் மற்றும் அவனுடைய கையாட்களின் கோபத்தைக் கிளறிவிடுகின்றன. இயேசுவின் பிறப்பு முதற்கொண்டே, சாத்தான் அவரை கொலை செய்ய முயலுகிறான். ஆனால் இயேசுவோ யெகோவாவின் அம்பறாத் தூணியிலே மறைத்து வைக்கப்பட்டுள்ள அம்பு போன்று இருக்கிறார். a ஆகவே தம் தகப்பனுடைய பாதுகாப்பு தமக்கு எப்போதும் இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கலாம். (சங்கீதம் 91:1; லூக்கா 1:35) குறிக்கப்பட்ட காலத்தில் மனிதகுலத்திற்காக இயேசு தம்முடைய ஜீவனையே கொடுக்கிறார். ஆனால் வித்தியாசமான கருத்தில், ஆயுதம்பூண்ட வல்லமையுள்ள பரலோக போர்வீரனாக நடவடிக்கை எடுக்கும் காலம் வரும்போது அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படும். இங்கு குறிப்பிடப்படும் பட்டயம், யெகோவாவின் எதிரிகளுக்கு வரும் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கவும் செயல்படுத்தவும் இயேசுவுக்கு இருக்கும் அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.​—வெளிப்படுத்துதல் 1:16.

கடவுளுடைய ஊழியனின் உழைப்பு வீணல்ல

7இப்பொழுது யெகோவா பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளை பேசுகிறார்: “நீ என் தாசன் [“ஊழியன்,” NW]; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன்.” (ஏசாயா 49:3) இஸ்ரவேல் ஜனத்தை யெகோவா தம்முடைய ஊழியன் என குறிப்பிடுகிறார். (ஏசாயா 41:8, NW) ஆனால், இயேசு கிறிஸ்துவே கடவுளுடைய பிரதான ஊழியர். (அப்போஸ்தலர் 3:13, NW) இயேசுவைத் தவிர வேறெந்த சிருஷ்டியாலும் யெகோவாவின் ‘மகிமையை’ அந்தளவுக்கு சிறப்பாக பிரதிபலிக்க முடியாது. ஆகவே, இஸ்ரவேலை சொல்லர்த்தமாகவே அவ்வாறு அழைத்தாலும், இந்த வார்த்தைகள் உண்மையில் இயேசுவுக்கே பொருந்துகின்றன.​—யோவான் 14:9; கொலோசெயர் 1:15.

8ஆனால் இயேசு தம்முடைய சொந்த ஜனங்களில் அநேகரால் இகழப்பட்டதும் புறக்கணிக்கப்பட்டதும் உண்மையல்லவா? ஆம். இயேசுவே கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியன் என்பதை இஸ்ரவேல் தேசத்தில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை. (யோவான் 1:11) இயேசு பூமியில் இருக்கையில் செய்யும் காரியங்களெல்லாம் அப்போது வாழ்பவர்களுக்கு அற்பமானதாக, முக்கியமற்றதாகக்கூட தோன்றலாம். அடுத்து, அவருடைய ஊழியத்தில் ஏற்படும் இந்தத் தோல்வியைப் பற்றி மேசியா குறிப்பிடுகிறார்: “விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்.” (ஏசாயா 49:4அ) மேசியா மனச்சோர்வடைந்ததால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறதில்லை. அடுத்து அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “என்னை நியாயந்தீர்ப்பது யெகோவா, எனக்கு கூலி கொடுப்பது என் கடவுள்.” (ஏசாயா 49:4ஆ, NW) மேசியாவுடைய உழைப்பின் பலன்கள் மனிதரால் அல்ல, ஆனால் கடவுளாலே தீர்மானிக்கப்படுகின்றன.

9கடவுளுடைய அங்கீகாரம் அல்லது அநுக்கிரகத்தில்தான் இயேசு முக்கியமாக அக்கறை காட்டுகிறார். ஆகவே, தீர்க்கதரிசனத்தில் மேசியா இவ்வாறு கூறுகிறார்: “யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல் கர்த்தர் தமக்குத் தாசனாக [“ஊழியனாக,” NW] என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதே போகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.” (ஏசாயா 49:5) இஸ்ரவேல் புத்திரருடைய இதயங்களை மீண்டும் பரலோகத் தகப்பனிடம் திருப்புவதற்கே மேசியா வருகிறார். பெரும்பாலானோர் அவருக்குச் செவிகொடுப்பதில்லை, ஆனால் சிலர் செவிசாய்க்கிறார்கள். இருந்தாலும், அவருடைய உண்மையான உழைப்புக்கு கூலி யெகோவா தேவனிடம் இருக்கிறது. அவருடைய உழைப்பெல்லாம் மனித தராதரங்களின்படி அல்ல, ஆனால் யெகோவாவின் தராதரங்களின்படி அளக்கப்படுகின்றன.

10இன்று, கஷ்டப்பட்டு உழைத்தும் எந்த பிரயோஜனமும் இல்லாதது போல் இயேசுவைப் பின்பற்றுவோர் சில சமயங்களில் உணரலாம். சில இடங்களில், உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் ஊழியத்தில் கிடைக்காதது போல் தோன்றலாம். இருந்தாலும் அவர்கள் சகித்து, இயேசுவின் முன்மாதிரியால் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளாலும் அவர்கள் பலப்படுத்தப்படுகிறார்கள். அவர் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”​—1 கொரிந்தியர் 15:58.

“ஜாதிகளுக்கு ஒளி”

11ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில், தம்முடைய ஊழியனாக இருப்பது ‘அற்ப காரியம்’ அல்ல என்பதை யெகோவா மேசியாவுக்கு நினைப்பூட்டி உற்சாகப்படுத்துகிறார். இயேசு, “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும்” போகிறார். யெகோவா மேலும் இவ்வாறு விளக்குகிறார்: “பூமியின் கடைசி பரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்.” (ஏசாயா 49:6) இயேசுவின் பூமிக்குரிய ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே மட்டுப்பட்டதாயிருக்கும்போது எப்படி “பூமியின் கடைசி பரியந்தமும்” உள்ள ஜனங்களுக்கு அவர் ஒளியாக இருப்பார்?

12இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை முடிவுற்றவுடன் கடவுளுடைய “ஜாதிகளுக்கு ஒளி” அணைந்துவிடவில்லை என பைபிள் பதிவு காட்டுகிறது. இயேசுவின் மரணத்திற்கு சுமார் 15 வருடங்களுக்குப்பின் மிஷனரிகளாகிய பவுலும் பர்னபாவும் ஏசாயா 49:6-⁠ல் உள்ள தீர்க்கதரிசனத்தை குறிப்பிட்டு அதை இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களாகிய சீஷர்களுக்கு பொருத்தினார்கள். அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: “நீர் பூமியின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கி[றார்].” (அப்போஸ்தலர் 13:47) பவுல் தன்னுடைய மரணத்திற்கு முன்பு, இரட்சிப்பின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். (கொலோசெயர் 1:6, 23) இன்று கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களில் மீதியானோர் இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள். லட்சோப லட்ச ‘திரள்கூட்டத்தாரின்’ ஆதரவோடு அவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள 230-⁠க்கும் மேற்பட்ட தேசங்களில் “ஜாதிகளுக்கு ஒளியாக” சேவிக்கிறார்கள்.​—வெளிப்படுத்துதல் 7:9.

13யெகோவா தம்முடைய ஊழியனாகிய மேசியாவுக்கும், அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களுக்கும், அவர்களோடு சேர்ந்து நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கித்து வரும் திரள் கூட்டத்தாருக்கும் உண்மையில் பக்க பலமாக இருந்திருக்கிறார். இயேசுவை போன்றே அவருடைய சீஷர்களும் அவமானத்தையும் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறார்கள். (யோவான் 15:20) ஆனால் யெகோவா தம்முடைய உரிய காலத்தில் உண்மை பற்றுறுதியுள்ள ஊழியர்களை இரட்சித்து பலனளிப்பதற்காக எப்போதுமே சூழ்நிலைகளை தலைகீழாக மாற்றுகிறார். ‘மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவருமாகிய’ மேசியாவைக் குறித்து யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர் நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள்.”​—ஏசாயா 49:7.

14சூழ்நிலைமைகள் தலைகீழாக மாறுமென முன்னறிவிக்கப்பட்டதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பிற்பாடு எழுதினார். கழுமரத்தில் அவமானப்படுத்தப்பட்டவரை தேவன் உயர்த்தினார் என இயேசுவைப் பற்றி அவர் விவரித்தார். யெகோவா தம்முடைய ஊழியனை “எல்லாவற்றிற்கும் மேலாக . . . உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படி . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:8-11) கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களுக்கும் துன்புறுத்துதல் வரும் என்ற எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேசியாவுக்கு உறுதியளிக்கப்பட்டது போலவே இவர்களுக்கும் யெகோவாவின் அநுக்கிரகம் கிடைக்கும் என உறுதியளிக்கப்படுகிறது.​—மத்தேயு 5:10-12; 24:9-13; மாற்கு 10:29, 30.

“மிகவும் ஏற்கத்தகுந்த காலம்”

15மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிவிப்புடன் ஏசாயா தீர்க்கதரிசனம் தொடர்கிறது. மேசியாவிடம் யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன். . . . நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.” (ஏசாயா 49:8அ, 9) இதுபோன்ற தீர்க்கதரிசனம் சங்கீதம் 69:13-18-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கீதக்காரன் ‘ஏற்கத்தகுந்த காலம்’ (NW) என்ற சொற்றொடரை பயன்படுத்தி ‘அநுக்கிரக காலத்தை’ குறிப்பிடுகிறார். யெகோவாவின் அநுக்கிரகமும் பாதுகாப்பும் விசேஷித்த விதத்தில் கொடுக்கப்படுவதையே இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கும் குறுகிய காலத்திற்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.

16இந்த அநுக்கிரக காலம் எப்பொழுது? ஆரம்பத்தில் இந்த வார்த்தைகள் திரும்ப நிலைநாட்டப்படுவதை குறித்த தீர்க்கதரிசனத்தின் பாகமாக இருந்தன. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருவதையும் இவை முன்னறிவித்தன. இஸ்ரவேல் தேசம் ‘பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க் கிடக்கிற இடங்களை’ மீண்டும் சுதந்தரித்தபோது இந்த அநுக்கிரக காலத்தை அனுபவித்தது. (ஏசாயா 49:8ஆ) அவர்கள் இனிமேலும் பாபிலோனில் ‘கைதிகளாக’ (NW) இருக்கவில்லை. தாயகம் திரும்பியபோது அவர்கள் ‘பசியாகவோ’ ‘தாகமாகவோ’ செல்லாமலும், ‘உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள் மேல் படாமல்’ இருக்கும்படியும் யெகோவா பார்த்துக் கொண்டார். சிதறுண்டிருந்த இஸ்ரவேலர் ‘தூரத்திலிருந்தும் . . . வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்’ தங்கள் தாயகத்திற்கு மறுபடியும் திரண்டு வந்தார்கள். (ஏசாயா 49:9-12) ஆச்சரியமான இந்த முதல் நிறைவேற்றத்தோடு நின்றுவிடாமல் இத்தீர்க்கதரிசனத்திற்கு மேலுமான நிறைவேற்றங்களும் இருக்கின்றன என பைபிள் காண்பிக்கிறது.

17முதலில், இயேசு பிறந்த சமயத்தில், சமாதானமும் கடவுளுடைய அநுக்கிரகமும் அல்லது தயவும் மனுஷர்மேல் உண்டாவதாக என தேவதூதர்கள் அறிவித்தார்கள். (லூக்கா 2:13, 14, NW) இந்த அநுக்கிரகம் எல்லா மனிதருக்கும் அல்ல, ஆனால் இயேசுவை விசுவாசிப்போருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பிற்பாடு, ஏசாயா 61:1, 2-⁠ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இயேசு எல்லாருக்கும் முன்பாக வாசித்து, ‘யெகோவாவின் ஏற்கத்தகுந்த வருஷத்தை’ அறிவிப்பவராக அதை தமக்கு பொருத்தினார். (லூக்கா 4:17-21, NW) கிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில் யெகோவாவின் விசேஷித்த பாதுகாப்பை பெற்றதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (எபிரெயர் 5:7-9) ஆகவே இங்கே சொல்லப்படும் அநுக்கிரக காலம், இயேசு மனித வாழ்க்கையின்போது கடவுளிடமிருந்து பெற்ற தயவையே குறிக்கிறது.

18என்றபோதிலும், இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு மேலுமான பொருத்தமும் இருக்கிறது. அநுக்கிரக காலம் சம்பந்தமாக ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய பின்பு பவுல் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “இதுவே மிகவும் ஏற்கத்தகுந்த காலம், இதுவே இரட்சிப்பின் நாள்.” (2 கொரிந்தியர் 6:2, NW) இயேசு இறந்து 22 வருடங்களுக்குப்பின் பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களைச் சேர்ப்பதற்காக யெகோவா தம்முடைய அநுக்கிரக வருஷத்தை நீடிக்கச் செய்தார் என அத்தாட்சி காட்டுகிறது.

19கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாக அபிஷேகம் பண்ணப்படாத இயேசுவின் இன்றைய சீஷர்களைப் பற்றியென்ன? பூமிக்குரிய நம்பிக்கையுடையோர் இந்த ஏற்கத்தகுந்த காலத்தால் நன்மை அடைவார்களா? ஆம், நன்மை அடைவார்கள். பரதீஸிய பூமியில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வோருக்கு​—⁠“மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வரும் திரள் கூட்டத்தாருக்கு​—⁠யெகோவா அளிக்கும் அநுக்கிரக காலம் இதுவே என பைபிளில் வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 7:13-17) ஆகவே, அபூரண மனிதருக்கு இந்தக் குறுகிய காலப்பகுதியில் யெகோவா அளிக்கும் அநுக்கிரகத்தை கிறிஸ்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

20அப்போஸ்தலனாகிய பவுல் யெகோவாவின் ஏற்கத்தகுந்த காலத்தைப் பற்றிய அறிவிப்பை ஓர் எச்சரிப்புடன் துவங்கினார். “கடவுளுடைய தகுதியற்ற தயவை ஏற்று, அதன் நோக்கத்தை வீணாக்கக் கூடாது” என அவர் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொண்டார். (2 கொரிந்தியர் 6:1, NW) இதற்கிசைவாக, கடவுளைப் பிரியப்படுத்தி அவருடைய சித்தத்தைச் செய்வதற்குக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (எபேசியர் 5:15, 16) பவுலின் பின்வரும் அறிவுரையை அவர்கள் பின்பற்றுவது நல்லது: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.”​—எபிரெயர் 3:12, 13.

21யெகோவாவுக்கும் மேசியாவுக்கும் இடையிலான தீர்க்கதரிசன உரையாடல் முடிவுக்கு வருகையில், ஏசாயா இப்போது ஒரு சந்தோஷமான அறிக்கையை கூறுகிறார்: “வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.” (ஏசாயா 49:13) பூர்வகால இஸ்ரவேலர்களுக்கும் யெகோவாவின் மிகச் சிறந்த ஊழியராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அதோடுகூட யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட இன்றைய ஊழியருக்கும் அவர்களுடைய தோழர்களாகிய வேறே ஆடுகளுக்கும் ஆறுதலளிக்கும் எப்பேர்ப்பட்ட அருமையான வார்த்தைகள்!​—யோவான் 10:⁠16.

தம் ஜனங்களை யெகோவா மறப்பதில்லை

22ஏசாயா இப்போது யெகோவாவின் பிரகடனங்களை தொடர்ந்து அறிவிக்கிறார். நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர் சோர்வடைந்து நம்பிக்கை இழந்துவிடும் நிலையில் இருப்பார்கள் என அவர் முன்னறிவிக்கிறார். ஏசாயா அதை இவ்வாறு கூறுகிறார்: “சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்கிறாள்.” (ஏசாயா 49:14, தி.மொ.) இது உண்மைதானா? தம்முடைய ஜனங்களை யெகோவா கைவிட்டு அவர்களை மறந்துவிட்டாரா? யெகோவாவின் பிரதிநிதியாக செயல்படும் ஏசாயா தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “ஒரு ஸ்திரீ தான் பெற்ற பிள்ளைக்கு இரங்காமல், பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளோ? இவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” (ஏசாயா 49:15, தி.மொ.) யெகோவா கொடுக்கும் அன்பான பதிலைப் பாருங்கள்! ஒரு தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பைவிட கடவுள் தம்முடைய ஜனங்களிடம் காட்டும் அன்பு பெரிது. அவர் எப்போதும் தம்முடைய உண்மையுள்ள ஜனங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுடைய பெயர்களை தம்முடைய உள்ளங்கைகளில் பொறித்திருப்பது போல் அவர்களை அவர் நினைவுகூருகிறார்: “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.”​—ஏசாயா 49:16, பொ.மொ.

23கலாத்தியருக்கு எழுதிய தன்னுடைய நிருபத்தில் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:9) எபிரெயர்களுக்கு இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளை அவர் எழுதினார்: “உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) யெகோவா தம்முடைய ஜனங்களை மறந்துவிட்டார் என நாம் ஒருபோதும் நினைக்காதிருப்போமாக. பூர்வ சீயோனைப் போலவே, கிறிஸ்தவர்களும் களிகூர்ந்து யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அவர் உடன்படிக்கையின் நிபந்தனைகளையும் வாக்குறுதிகளையும் உறுதியாக கடைப்பிடிக்கிறவர்.

24ஏசாயாவின் வாயிலாக ஆறுதலின் செய்தியை யெகோவா தொடர்ந்து அளிக்கிறார். ‘[சீயோனை] அழித்தவர்கள்’ பாபிலோனியரோ விசுவாசமற்ற யூதரோ யாராக இருந்தாலும் சரி அவர்கள் இனிமேலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள். யெகோவாவிடம் உண்மை பற்றுறுதியோடிருந்த நாடுகடத்தப்பட்ட யூதர்களான சீயோனின் “குமாரர்கள்” “விரைந்து வருவார்கள்.” அவர்கள் “ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.” தங்களுடைய தலைநகரமாகிய எருசலேமுக்குத் தீவிரித்துச் செல்லும் யூதர்கள், “மணமகள்” “ஆபரணங்களை” அணிந்து கொள்வதுபோல் தங்கள் பட்டணத்திற்கு ஆபரணங்களாக இருப்பார்கள். (ஏசாயா 49:17, 18, NW) சீயோனின் இடங்கள் ‘பாழாக்கப்பட்டிருக்கின்றன.’ நெரிசல் ஏற்படும் அளவுக்கு திடீரென அநேக ஜனங்கள் திரண்டிருப்பதைப் பார்த்து சீயோன் ஆச்சரியப்படுவதை சற்று எண்ணிப்பாருங்கள். (ஏசாயா 49:19, 20-ஐ வாசிக்கவும்.) இந்தப் பிள்ளைகள் எங்கிருந்து வருபவர்கள் என அவள் ஆச்சரியத்தோடு கேட்கிறாள்: “‘இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து இவர்கள் வந்தார்கள்?’ என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வாய்.” (ஏசாயா 49:21, பொ.மொ.) மலடியாயிருந்த சீயோனுக்கு இப்பொழுது எவ்வளவு மகிழ்ச்சி!

25இந்த வார்த்தைகளுக்கு நவீன கால நிறைவேற்றமும் இருக்கிறது. முதல் உலகப் போரின் கடினமான வருடங்களில் ஆவிக்குரிய இஸ்ரவேல் பாழ்க்கடிப்பையும், அடிமைத்தனத்தையும் எதிர்ப்பட்டது. ஆனால் அது மீண்டுமாக நிலைநாட்டப்பட்டு ஆவிக்குரிய பரதீஸுக்குள் கொண்டுவரப்பட்டது. (ஏசாயா 35:1-10) ஒருசமயம் பாழ்க்கடிக்கப்பட்டிருந்த நகரத்தைப் பற்றி ஏசாயா விவரித்த விதமாக, ஆவிக்குரிய இஸ்ரவேலும் யெகோவாவின் சந்தோஷமுள்ள, சுறுசுறுப்பான வணக்கத்தாரால் நிறைந்திருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது.

‘ஜனங்களுக்கு ஒரு கொடி’

26தீர்க்கதரிசன அர்த்தத்தில், தம்முடைய ஜனங்கள் பாபிலோனிலிருந்து விடுதலை பெறப்போகும் காலத்திற்கு இப்பொழுது ஏசாயாவை யெகோவா கொண்டு செல்கிறார். அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை பெறுவார்களா? யெகோவா பதிலளிக்கிறார்: “இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் [“மார்பில்,” பொ.மொ.] ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள்.” (ஏசாயா 49:22) பூர்வகாலத்தில் ஆட்சிபீடமும், யெகோவாவின் ஆலயமும் இருந்த இடமான எருசலேமே முதல் நிறைவேற்றத்தில் யெகோவாவின் ‘கொடியாக’ அல்லது சின்னமாக இருக்கிறது. இஸ்ரவேலர் தங்கள் தாயகத்திற்குத் திரும்பிச் செல்கையில் “அரசர்கள்” மற்றும் “அரசியர்” போன்ற மற்ற தேசத்து பிரபலமானவர்களும் செல்வாக்குமிக்கவர்களும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். (ஏசாயா 49:23அ, பொ.மொ.) இப்படி ஒத்தாசையாக இருப்பவர்களில், பெர்சிய அரசர்களாகிய கோரேசும் அர்தசஷ்டா லாங்கிமானஸும் அவர்களுடைய வீட்டாரும் அடங்குவர். (எஸ்றா 5:13; 7:11-26) ஏசாயாவின் வார்த்தைகளுக்கு மேலுமான ஒரு பொருத்தமும் உண்டு.

27ஏசாயா 11:10 ‘ஜனங்களின் கொடியைப்’ பற்றி பேசுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை கிறிஸ்து இயேசுவுக்குப் பொருத்தினார். (ரோமர் 15:8-12) ஆகவே, அதன் பெரிய நிறைவேற்றத்தில் இயேசுவும், ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட உடன் அரசர்களுமே யெகோவாவின் ‘கொடியாக’ இருக்கிறார்கள். இந்தக் கொடியிடம் ஜனங்கள் திரண்டு செல்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:1) உரிய காலத்தில் பூமியிலுள்ள சகல ஜனங்களும்​—⁠இன்று ஆளுகை செய்பவர்களும்​—⁠மேசியாவின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டியிருக்கும். (சங்கீதம் 2:10, 11; தானியேல் 2:44) அதன் விளைவு? யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “நானே யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கத்துக்காளாவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.”​—ஏசாயா 49:23ஆ, தி.மொ.

‘இப்பொழுது நம் இரட்சிப்பு அதிக சமீபமாயிருக்கிறது’

28‘இஸ்ரவேலர் விடுவிக்கப்படுவது உண்மையில் நடக்கிற காரியமா என்ன?’ என பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டவர்களில் சிலர் யோசிக்கலாம். ஆனால் இக்கேள்வியை யெகோவா கருத்தில் கொண்டு இவ்வாறு கேட்கிறார்: “பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளைப் பறிக்கலாகுமோ? ஜெயித்தவன் கையில் சிறையானவர்களை விடுவிக்கலாகுமோ?” (ஏசாயா 49:24, தி.மொ.) முடியும் என்பதே பதில். அவர்களுக்கு யெகோவா இவ்வாறு உறுதியளிக்கிறார்: “பராக்கிரமசாலியிடம் சிறையானவர்களைப் பறிக்கலாகும், கொடியவன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை விடுவிக்கலாகும்.” (ஏசாயா 49:25அ, தி.மொ.) என்னே ஆறுதலளிக்கும் வார்த்தைகள்! யெகோவா தம் ஜனங்களுக்கு அநுக்கிரகம் செய்வதோடு அவர்களை காப்பாற்றும் உறுதியான வாக்குறுதியையும் அளிக்கிறார். அவர் உறுதியோடு இவ்வாறு கூறுகிறார்: “உன்னுடைய விரோதிகளை நானே எதிர்த்து, உன் பிள்ளைகளை நானே ரட்சித்துக்கொள்ளுவேன்.” (ஏசாயா 49:25ஆ, தி.மொ.) இந்த உறுதிமொழி எல்லா காலத்திற்கும் பொருந்துகிறது. சகரியா 2:8-⁠ல் (பொ.மொ.) பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என யெகோவா தம் ஜனங்களிடம் கூறுகிறார். பூமியின் ஜனங்களெல்லாரும் ஆவிக்குரிய சீயோனிடமாக ஒன்று சேருவதற்கு வாய்ப்பளிக்கும் அநுக்கிரக காலத்தை நாம் இப்போது அனுபவித்து மகிழ்கிறோம். என்றாலும் இந்த அநுக்கிரக காலம் முடிவுக்கு வரும்.

29யெகோவாவுக்கு கீழ்ப்படிய மறுப்பவர்களுக்கும் அவரை வணங்குபவர்களை துன்புறுத்துவோருக்கும் என்ன சம்பவிக்கும்? அவர் இவ்வாறு சொல்கிறார்: “உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக் கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்.” (ஏசாயா 49:26அ) பயங்கரமான எதிர்காலம்! பிடிவாதமாக இருக்கும் இப்படிப்பட்ட விரோதிகளுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. அவர்கள் அழிக்கப்படுவார்கள். இவ்வாறு யெகோவா தம்முடைய ஜனங்களைக் காப்பாற்றி அவர்களுடைய சத்துருக்களை அழிப்பதன் மூலம் தாமே இரட்சகர் என்பதை நிரூபிப்பார். “யெகோவாவாகிய நான் உன் ரட்சகர், யாக்கோபின் வல்லவர் உன்னை மீட்பவர் என்பதை மாம்சமான யாவரும் அறிந்து கொள்வார்கள்.”​—ஏசாயா 49:26ஆ, தி.மொ.

30யெகோவா தம்முடைய ஜனங்களை பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக கோரேசுவை பயன்படுத்திய சமயத்தில் அந்த வார்த்தைகள் முதன்முதலில் பொருந்தின. 1919-⁠ல் ஆவிக்குரிய அடிமைத்தனத்தினின்று தம்முடைய ஜனங்களை விடுவிப்பதற்காக முடிசூட்டப்பட்ட தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை யெகோவா பயன்படுத்தியபோதும் அந்த வார்த்தைகள் அதேவிதமாக பொருந்தின. ஆகவே, பைபிள் யெகோவாவையும் இயேசுவையும் இரட்சகர்கள் என குறிப்பிடுகிறது. (தீத்து 2:11-13; 3:4-6) யெகோவா நம்முடைய இரட்சகர், மேசியாவாகிய இயேசு அவருடைய “தலைமை பிரதிநிதி.” (அப்போஸ்தலர் 5:31, NW) உண்மையில் இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா அருளும் இரட்சிப்பின் செயல்கள் மிக அருமையானவை. நற்செய்தியின் மூலமாக யெகோவா நல்மனமுள்ளோரை பொய் மதத்தின் கட்டிலிருந்து விடுவிக்கிறார். மீட்கும் பலியின் மூலமாக பாவம் மற்றும் மரணத்தின் கட்டிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். 1919-⁠ல் அவர் இயேசுவின் சகோதரர்களை ஆவிக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுவித்தார். நெருங்கி வந்துகொண்டிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தின்போதும் உண்மையுள்ள திரள்கூட்டத்தாரை பாவிகளுக்கு வரும் அழிவிலிருந்து காப்பாற்றுவார்.

31அப்படியானால், கடவுளின் அநுக்கிரகத்தைப் பெறுபவர்களாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆகவே, நாம் அனைவரும் இந்த ஏற்கத்தகுந்த காலத்தை ஞானமாக பயன்படுத்துவோமாக. மேலும் ரோமர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகளுக்கு செவிசாய்த்து நம்முடைய காலத்தின் அவசரத்தன்மைக்கு இசைய செயல்படுவோமாக: “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்க வேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”​—ரோமர் 13:11-14.

32தம்முடைய ஆலோசனைக்கு கவனம் செலுத்துவோருக்கு யெகோவா தொடர்ந்து தயவு காட்டுவார். நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு வேண்டிய பலத்தையும் திறமைகளையும் அவர்களுக்கு அருளுவார். (2 கொரிந்தியர் 4:7) அவர்களுடைய தலைவர் இயேசுவை பயன்படுத்துவது போலவே ஊழியர்களான அவர்களையும் யெகோவா பயன்படுத்துவார். தம்முடைய ஊழியரின் வாய்களை ‘கூர்மையான பட்டயமாக்குவார்.’ அதன் மூலம் தாழ்மையுள்ளோரின் இதயங்களை நற்செய்தியால் கவர முடியும். (மத்தேயு 28:19, 20) அவர் தம்முடைய ஜனங்களை “தமது கரத்தின் நிழலினால்” பாதுகாப்பார். ‘பளபளப்பான அம்பு’ போன்று “தமது அம்பறாத் தூணியிலே” அவர்களை மூடிவைப்பார். நிச்சயமாகவே யெகோவா தம் ஜனங்களை கைவிடுவதில்லை!​—சங்கீதம் 94:14; ஏசாயா 49:2, 15.

[அடிக்குறிப்பு]

a “இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதையும், தன் தலையை நசுக்கப் போவதாக முன்னறிவிக்கப்பட்டவர் (ஆதி 3:15) என்பதையும் நன்கு அறிந்த சாத்தான் அவரை அழிப்பதற்கு தன்னாலான அனைத்தையும் செய்தான். மரியாளிடத்தில் இயேசு உருவாவதைப் பற்றி அறிவிக்கையில், காபிரியேல் தூதன் இவ்வாறு சொன்னார்: ‘பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.’ (லூ 1:35) யெகோவா தம்முடைய குமாரனை பாதுகாத்தார். குழந்தையாக இருக்கையில் இயேசுவை கொல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.”​—⁠உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கம் 868.

[கேள்விகள்]

1, 2. (அ) ஏசாயா அனுபவித்த ஆசீர்வாதம் என்ன? (ஆ) ஏசாயா 49-⁠ம் அதிகாரத்தின் முற்பகுதியிலுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளில் யாரெல்லாம் அடங்குவர்?

3, 4. (அ) மேசியாவுக்கு என்ன ஆதரவு இருக்கிறது? (ஆ) மேசியா யாரிடம் பேசுகிறார்?

5. மனிதனாக பிறப்பதற்கு முன்பே மேசியா எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

6. மேசியாவின் வாய் எவ்விதத்தில் கூர்மையான பட்டயம் போன்று உள்ளது, அவர் எவ்வாறு மறைத்து வைக்கப்படுகிறார் அல்லது மூடி வைக்கப்படுகிறார்?

7. ஏசாயா 49:3-⁠ல் உள்ள வார்த்தைகள் யாருக்குப் பொருந்துகின்றன, ஏன்?

8. மேசியாவின் சொந்த ஜனங்களே அவரிடம் எப்படி பிரதிபலிக்கிறார்கள், ஆனால் தம் உழைப்பின் பலன்களை தீர்மானிக்கும்படி அவர் யாரை எதிர்நோக்குகிறார்?

9, 10. (அ) யெகோவாவிடமிருந்து என்ன பொறுப்பை மேசியா பெறுகிறார், அவர் என்ன பலன்களை அடைகிறார்? (ஆ) மேசியாவின் அனுபவத்திலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு உற்சாகமடையலாம்?

11, 12. மேசியா எவ்வாறு “ஜாதிகளுக்கு ஒளியாக” இருந்திருக்கிறார்?

13, 14. (அ) மேசியாவுக்கும் அவரை பின்பற்றுகிறவர்களுக்கும் பிரசங்க வேலையில் என்ன பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறது? (ஆ) என்ன தலைகீழ் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன?

15. ஏசாயா தீர்க்கதரிசனத்தில் என்ன விசேஷித்த ‘காலம்’ குறிப்பிடப்படுகிறது, அது எதை அர்த்தப்படுத்துகிறது?

16. பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவாவின் அநுக்கிரக காலமாக இருந்தது எது?

17, 18. முதல் நூற்றாண்டில் என்ன அநுக்கிரக காலத்தை யெகோவா அளித்தார்?

19. யெகோவாவின் அநுக்கிரக காலத்திலிருந்து இன்றைய கிறிஸ்தவர்கள் எப்படி நன்மையடையலாம்?

20. யெகோவாவுடைய தகுதியற்ற தயவின் நோக்கத்தை வீணாக்குவதை கிறிஸ்தவர்கள் எவ்வழியில் தவிர்க்கலாம்?

21. ஏசாயா 49-⁠ம் அதிகாரத்தின் முதற்பகுதி என்ன மகிழ்ச்சியான வார்த்தைகளுடன் முடிவடைகிறது?

22. தம்முடைய ஜனங்களை ஒருபோதும் மறப்பதில்லை என்பதை யெகோவா எப்படி வலியுறுத்திக் காட்டுகிறார்?

23. யெகோவா தங்களை மறக்கமாட்டார் என்பதை நம்புவதற்கு பவுல் எவ்வாறு கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்?

24. எவ்விதத்தில் சீயோன் மீண்டும் நிலைநாட்டப்படும், என்ன கேள்விகளை அவள் கேட்பாள்?

25. நவீன நாட்களில், ஆவிக்குரிய இஸ்ரவேல் என்ன விதத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டது?

26. விடுவிக்கப்பட்ட தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா என்ன வழிநடத்துதலை தருகிறார்?

27. (அ) பெரிய நிறைவேற்றத்தில் எந்த ‘கொடியிடத்தில்’ ஜனங்கள் திரண்டு வருவார்கள்? (ஆ) எல்லா தேசத்தாரும் மேசியாவின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டியிருக்கையில் என்ன விளைவடையும்?

28. (அ) தம்முடைய ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதை என்ன வார்த்தைகளால் யெகோவா மீண்டும் உறுதிப்படுத்துகிறார்? (ஆ) யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு என்ன உறுதிமொழியை இன்னும் கொடுக்கிறார்?

29. யெகோவாவுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களுக்கு என்ன பயங்கரமான எதிர்காலம் காத்திருக்கிறது?

30. யெகோவா தம்முடைய ஜனங்களை இரட்சிப்பதற்காக நடப்பித்திருக்கும் செயல்கள் யாவை, அவர் விரைவில் என்ன செய்யப்போகிறார்?

31. கடவுளுடைய அநுக்கிரகத்தைப் பெறும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

32. கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன?

[பக்கம் 139-ன் படம்]

மேசியா, யெகோவாவின் அம்பறாத் தூணியிலே இருக்கும் ‘பளபளப்பான அம்பு’ போன்று இருக்கிறார்

[பக்கம் 141-ன் படம்]

மேசியா “ஜாதிகளுக்கு ஒளியாக” இருந்திருக்கிறார்

[பக்கம் 147-ன் படம்]

தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பிலும் கடவுள் தம் ஜனங்களிடம் காட்டும் அன்பு பெரிது