Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கும் ஆறுதலான தீர்க்கதரிசன வார்த்தைகள்

உங்களுக்கும் ஆறுதலான தீர்க்கதரிசன வார்த்தைகள்

அதிகாரம் இரண்டு

உங்களுக்கும் ஆறுதலான தீர்க்கதரிசன வார்த்தைகள்

ஏசாயா 41:1-29

ஏசாயா தன் பெயர் தாங்கிய இப்புத்தகத்தை எழுதி ஏறத்தாழ 3,000 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருந்தாலும், இப்புத்தகம் இன்று நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பதிவு செய்திருக்கும் சரித்திர சம்பவங்களிலிருந்து நாம் இன்றியமையா நியமங்களை கற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் நாமத்தில் எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களைப் படித்து நம் விசுவாசத்தையும் பலப்படுத்திக் கொள்ளலாம். ஆம், ஏசாயா ஜீவனுள்ள கடவுளின் தீர்க்கதரிசி. சரித்திரத்தை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு​—⁠நடக்கப்போகும் சம்பவங்களை அவை நடப்பதற்கு முன்பே விவரிப்பதற்கு​—⁠யெகோவா அவரை ஏவினார். இவ்வாறாக, எதிர்காலத்தை முன்னறிவிக்கவும் வடிவமைக்கவும் முடியும் என்பதை யெகோவா மெய்ப்பித்துக் காட்டினார். ஏசாயா புத்தகத்தைப் படித்தப்பின், யெகோவா தம் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என உண்மை கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

2ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசனத்தை எழுதி முடிப்பதற்குள் எருசலேம் ஒருவழியாக அசீரியர்களின் அச்சுறுத்தலிலிருந்து தப்பியிருந்தது. ஆலயம் இன்னும் நிலைத்திருந்தது, மக்களும் எவ்வித மாறுதலுமின்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தபடியே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இந்த நிலை மாறும். யூத ராஜாக்கள் சேர்த்து வைத்த செல்வம் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும் காலம் வரும், யூத வாலிபர்களோ அந்த நகரத்தில் அரசவை வேலைக்காரராக சேவை செய்வார்கள். a (ஏசாயா 39:6, 7) இது, நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகள் கடந்த பிறகே சம்பவிக்கும்.​—2 இராஜாக்கள் 24:12-17; தானியேல் 1:19.

3ஏசாயாவின் வாயிலாக உரைக்கப்பட்ட கடவுளுடைய செய்தி வெறுமனே அழிவின் செய்தி அல்ல. இப்புத்தகத்தின் 40-⁠ம் அதிகாரத்தின் முதல் வசனமே “ஆற்றுங்கள்” என கூறுகிறது. b தாங்களோ தங்கள் பிள்ளைகளோ தாயகம் திரும்ப முடியும் என்ற வாக்குறுதியால் யூதர்கள் ஆறுதலளிக்கப்படுவார்கள். 41-⁠ம் அதிகாரத்தில் இந்த ஆறுதலின் செய்தி தொடர்கிறது; அதோடு, தெய்வீக சித்தத்தை நிறைவேற்றுவதற்கு சக்திவாய்ந்த ராஜாவை யெகோவா எழுப்புவார் என்ற செய்தியையும் அது முன்னறிவிக்கிறது. இந்த அதிகாரத்தில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அடங்கியுள்ளன, இது கடவுளிடம் நம்பிக்கை வைப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறது. புறஜாதிகள் நம்பியிருக்கும் பொய் கடவுட்களுக்கு எந்த வல்லமையும் இல்லை என்பதையும் இந்த அதிகாரம் அம்பலப்படுத்துகிறது. இவை அனைத்தும் ஏசாயாவின் நாளில் வாழ்ந்தவர்களுடைய விசுவாசத்தையும் நம் விசுவாசத்தையும் அதிகம் பலப்படுத்துவதாய் இருக்கின்றன.

தேசங்களுக்கு யெகோவா சவால் விடுகிறார்

4யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் இவ்வாறு உரைக்கிறார்: “தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.” (ஏசாயா 41:1) தம்முடைய ஜனங்களை எதிர்க்கும் தேசங்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறி யெகோவா சவால் விடுகிறார். அவருக்கு முன்பாக நின்று பேசுவதற்கு அவர்கள் தயாராகட்டும்! நாம் பிற்பாடு பார்க்கப்போகிற விதமாக, நீதிமன்றத்தில் வீற்றிருக்கும் ஒரு நியாயாதிபதியைப் போல, யெகோவா இந்த தேசங்களிடம் அவர்களுடைய விக்கிரகங்கள் உண்மையான கடவுட்களா என்பதை நிரூபிக்க சொல்கிறார். இந்தக் கடவுட்கள் தங்களை வழிபடுவோருக்கு இரட்சிப்பு வருமென்றோ அவர்களுடைய எதிரிகளுக்கு நியாயத்தீர்ப்பு வருமென்றோ முன்னறிவிக்க முடியுமா? அப்படியே முன்னறிவித்தாலும், அந்தத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற முடியுமா? முடியவே முடியாது என்பதே பதில். யெகோவாவால் மட்டுமே இவற்றை செய்ய முடியும்.

5ஏசாயா தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திக்கையில், மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் போலவே இதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறைவேற்றங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. பொ.ச.மு. 607-⁠ல் யூதா பாபிலோனிய சிறையிருப்புக்குள் போய்விடும். இருந்தாலும், சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலரை யெகோவா விடுவிப்பார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனம் தெரிவிக்கிறது. இச்சம்பவம் பொ.ச.மு. 537-⁠ல் நடைபெறுகிறது. இந்த விடுதலைக்கு இணையான சம்பவம் 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்தது. முதல் உலகப் போரின்போது பூமியிலிருந்த அபிஷேகம் பண்ணப்பட்ட யெகோவாவின் ஊழியர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்தனர். 1918-⁠ல் சாத்தானிய உலகத்தின் அழுத்தத்தால், அதாவது மகா பாபிலோனின் முக்கிய பாகமான கிறிஸ்தவமண்டலத்தின் தூண்டுதலால், ஒழுங்கமைக்கப்பட்ட பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது. (வெளிப்படுத்துதல் 11:5-10) உவாட்ச் டவர் சொஸைட்டியின் முக்கிய அலுவலர்கள் சிலர் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். கடவுளுடைய ஊழியர்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்த உலகம் வெற்றி பெற்றதுபோல் தோன்றியது. அந்தச் சமயத்தில், பொ.ச.மு. 537-⁠ல் நடந்ததுபோல் எதிர்பாராத விதமாக யெகோவா அவர்களை விடுவித்தார். சிறையிலிடப்பட்ட அலுவலர்கள் 1919-⁠ல் விடுவிக்கப்பட்டார்கள், பின்னர் அவர்கள் மீதிருந்த குற்றச்சாட்டுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. செப்டம்பர் 1919-⁠ல் சீடர் பாய்ன்ட், ஒஹாயோவில் நடந்த மாநாடு, ராஜ்யத்தை பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை மீண்டும் தொடர யெகோவாவின் ஊழியர்களுக்கு தெம்பூட்டியது. (வெளிப்படுத்துதல் 11:11, 12) அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் பிரசங்க வேலையின் பரப்பெல்லை குறிப்பிடத்தக்க விதத்தில் விரிவடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஏசாயா உரைத்த அநேக வார்த்தைகள் வரப்போகும் பரதீஸிய பூமியில் மகத்தான விதத்தில் நிறைவேறும். ஆகவே, ஏசாயாவின் வார்த்தைகள் வெகு காலத்திற்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றுள்ள எல்லா தேசங்களையும் மக்களையும் உட்படுத்துகின்றன.

மீட்பர் வரவழைக்கப்படுகிறார்

6கடவுளுடைய ஜனங்களை பாபிலோனியரிடமிருந்து காப்பாற்றி அதேசமயம் எதிரிகளுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கப்போகும் வெற்றிவீரரைப் பற்றி ஏசாயாவின் மூலம் யெகோவா முன்னறிவிக்கிறார். யெகோவா இவ்வாறு கேட்கிறார்: “கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்? அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.”​—ஏசாயா 41:2-4.

7சூரியன் உதிக்கும் திசையாகிய கிழக்கிலிருந்து வரப்போகிறவர் யார்? மேதிய பெர்சிய நாடுகளும் ஏலாமும் பாபிலோனுக்கு கிழக்கே அமைந்திருக்கின்றன. அங்கிருந்துதான் பெர்சியனாகிய கோரேசு தன்னுடைய பலத்த சேனைகளுடன் வருகிறார். (ஏசாயா 41:25; 44:28; 45:1-4, 13; 46:11) கோரேசு யெகோவாவை வணங்குபவர் அல்ல. இருந்தாலும் அவருடைய செயல்கள் நீதியுள்ள கடவுளாகிய யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருக்கின்றன. கோரேசு ராஜாக்களை அடக்குகிறார், இந்த ராஜாக்கள் அவருக்கு முன்பாக பறந்து போகும் தூசியைப் போல இருக்கிறார்கள். போரிட்டு கைப்பற்றும் நோக்கத்தோடு வழக்கத்திற்கு மாறான பாதையில் ‘சமாதானத்துடன்’ அல்லது பாதுகாப்பாக சென்று எல்லா தடைகளையும் கோரேசு மேற்கொள்கிறார். பொ.ச.மு. 539-⁠ற்குள், அவர் பலத்த நகரமாகிய பாபிலோனை அடைந்து அதை தோற்கடிக்கிறார். இதன் விளைவாக, எருசலேமுக்கு வந்து தூய வணக்கத்தை திரும்பவும் நிலைநாட்டுவதற்கு கடவுளுடைய ஜனங்கள் விடுதலையாக்கப்படுகிறார்கள்.​—எஸ்றா 1:1-7. c

8இவ்வாறு, கோரேசுவின் எழுச்சியை அவருடைய பிறப்புக்கு வெகு காலத்திற்கு முன்பே ஏசாயாவின் வாயிலாக யெகோவா முன்னறிவிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை உண்மையான கடவுளால் மட்டுமே திருத்தமாக முன்னுரைக்க முடியும். புறஜாதியாரின் பொய் கடவுட்களில் யெகோவாவுக்கு நிகர் எதுவுமில்லை. ஆகவேதான், யெகோவா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என் மகிமையை வேறொருவனுக்கும் . . . கொடேன்.” யெகோவாவால் மட்டுமே இவ்வாறு உரிமையோடு சொல்ல முடியும்: “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லை.”​—ஏசாயா 42:8; 44:6, 7.

கதிகலங்கிப்போன ஜனங்கள் விக்கிரகங்களை நம்புகிறார்கள்

9வெற்றிவாகை சூடப்போகிறவரைப் பற்றி தேசங்கள் எப்படி உணரும் என்பதை ஏசாயா இப்போது விவரிக்கிறார்: “தீவு நாட்டினர் . . . பார்த்து அஞ்சினர்; உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்; எனவே அவர்கள் ஒருங்கே கூடிவந்தனர். ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்; தம் அடுத்தவரிடம், ‘திடன்கொள்’ என்கின்றார். கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்; சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பது பற்றி, ‘நன்று’ என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்; அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.”​—ஏசாயா 41:5-7, பொ.மொ.

10சுமார் 200 வருடங்களுக்குப் பின் வரவிருக்கும் உலகக் காட்சியை யெகோவா கண்ணோட்டமிடுகிறார். எதிரிகள் அனைவரையும் தோற்கடிப்பதற்காக கோரேசுவின் பலத்த சேனை மிக வேகமாக செல்கிறது. உலகின் கடைக்கோடியில், அதாவது தீவுகளில் வாழ்பவர்களும் இவருடைய வருகையைக் கண்டு நடுநடுங்குகிறார்கள். கதிகலங்கிப்போன அவர்கள், நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற யெகோவா கிழக்கிலிருந்து வரவழைத்தவரை எதிர்க்க ஒன்றுகூடுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் “திடன்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டுவதற்கு பிரயாசப்படுகிறார்கள்.

11ஜனங்களை விடுவிப்பதற்காக விக்கிரக தெய்வங்களை உருவாக்குவதில் கைவினைஞர்கள் ஒன்று சேர்ந்து உழைக்கிறார்கள். தச்சன் மரச்சட்டத்தை வடிவமைத்து, அதை உலோகத் தகட்டால், ஒருவேளை பொன்தகட்டால் மூடும்படி தட்டானிடம் சொல்கிறான். சிற்பி அந்த உலோகத்தை மிருதுவாக அடித்து, அதை நன்றாக பற்ற வைத்திருப்பதாக பாராட்டுகிறான். யெகோவாவின் பெட்டிக்கு முன்பு தாகோனின் சிலை விழுந்ததுபோல் இதுவும் விழுந்துவிடக் கூடாது அல்லது வலுவிழந்துவிடக் கூடாது என்பதற்காக ஆணிகளால் இறுக்குவதைப் பற்றி சற்று கிண்டலாக சொல்லப்பட்டிருக்கலாம்.​—1 சாமுவேல் 5:4.

அஞ்சாதே!

12யெகோவா இப்போது தம்முடைய ஜனங்களிடம் கவனத்தை திருப்புகிறார். உயிரற்ற விக்கிரகங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கும் புறஜாதிகள் பயப்படுவதுபோல் உண்மை கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பயப்பட வேண்டியதில்லை. தம்முடைய சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியாரே இஸ்ரவேலர் என்ற நினைப்பூட்டுதலுடன் யெகோவாவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகள் ஆரம்பிக்கின்றன. மிகுந்த கனிவோடு யெகோவாவின் வார்த்தைகளை ஏசாயா அறிவிக்கிறார்: “என் தாசனாகிய [“ஊழியனாகிய,” NW] இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன் [“ஊழியன்,” NW], நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்து விடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”​—ஏசாயா 41:8-10.

13அந்நிய தேசத்திற்கு நாடுகடத்தப்பட்ட உண்மையுள்ள யூதர்களுக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்! சிறைபிடிக்கப்பட்டவர்களாகவும் பாபிலோன் ராஜாவின் அடிமைகளாகவும் இருந்த சமயத்தில் “என் ஊழியன்” என யெகோவா தங்களை அழைப்பதை கேட்கும்போது எவ்வளவாக ஊக்கமூட்டப்படுவார்கள்! (2 நாளாகமம் 36:20) அவர்களுடைய உண்மையற்ற போக்கின் காரணமாக யெகோவா தண்டனை கொடுத்தாலும் அவர்களை அடியோடு ஒதுக்கிவிட மாட்டார். இஸ்ரவேலர் பாபிலோனுக்கு அல்ல, யெகோவாவுக்கே சொந்தமானவர்கள். வெற்றிவாகை சூடப்போகும் கோரேசுவின் வருகையை குறித்து கடவுளுடைய ஊழியர்கள் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியமில்லை. யெகோவா தமது மக்களுக்கு உதவ அவர்களோடு இருப்பார்.

14நம் நாளைய கடவுளுடைய ஊழியர்களுக்கும் இந்த வார்த்தைகள் ஆறுதலையும் பலத்தையும் அளித்திருக்கின்றன. 1918-⁠ல் தங்களைக் குறித்ததில் யெகோவாவின் சித்தம் என்ன என்பதை அறிந்துகொள்ள அவர்கள் அதிக ஆவலாய் இருந்தார்கள். ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றும்கூட, சாத்தானாலும் இந்த உலகத்தாலும் நம் அபூரணத்தன்மையாலும் வரும் அழுத்தங்களிலிருந்து விடுதலை கிடைக்காதா என நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தம்முடைய ஜனங்களின் சார்பாக எப்போது, எப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது யெகோவாவுக்கு நன்றாக தெரியும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். எதையும் சமாளிக்க அவர் நமக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையில், சிறு குழந்தைகளைப் போன்று நாம் அவருடைய பலத்த கரத்தை பற்றிக்கொள்கிறோம். (சங்கீதம் 63:7, 8) தம்மை சேவிப்போரை யெகோவா உயர்வாக மதிக்கிறார். 1918-19-⁠ன் கடினமான காலத்தில் வாழ்ந்த தம் ஜனங்களுக்கும் பூர்வ காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள இஸ்ரவேலருக்கும் அவர் உறுதுணையாக இருந்தது போலவே இன்றும் நம்மை ஆதரித்து வருகிறார்.

15ஏசாயாவின் மூலம் அடுத்து யெகோவா என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்: “உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர். உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்துபோவர். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக் கையைப் பற்றிப் பிடித்து, ‘அஞ்சாதே, உனக்குத் துணையாயிருப்பேன்’ என்று உன்னிடம் சொல்பவரும் நானே. ‘யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாயிருப்பேன்,’ என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.”​—ஏசாயா 41:11-14, பொ.மொ.

16இஸ்ரவேலின் விரோதிகள் வெற்றிபெற மாட்டார்கள். இஸ்ரவேலுக்கு எதிராக ஆவேசம் அடைபவர்கள் அவமானப்பட்டு போவார்கள். அதை எதிர்த்து போராடுகிறவர்கள் நாசமடைவார்கள். சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர், புழுதியில் நெளிந்து செல்லும் பெலனற்ற, தற்காப்பற்ற புழுவைப் போல் இருந்தாலும் அவர்களுக்கு யெகோவா பக்கதுணையாய் இருப்பார். இந்தக் ‘கடைசி நாட்கள்’ பூராவும் இவ்வுலகத்தாரிடமிருந்து கடும் பகைமையை எதிர்ப்பட்டிருக்கிற உண்மை கிறிஸ்தவர்களுக்கு இது எவ்வளவாய் உற்சாகத்தை தந்திருக்கிறது! (2 தீமோத்தேயு 3:1) “கோகு தேசத்தானான மாகோகு” என தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படும் சாத்தானின் தாக்குதல் நெருங்கிவருவதை எண்ணிப் பார்க்கையில் யெகோவாவின் வாக்குறுதி எவ்வளவாக பலமூட்டுகிறது! கோகுவின் மூர்க்கமான தாக்குதலின்போது யெகோவாவின் ஜனங்கள் தற்காப்பற்ற புழுவைப் போல, அதாவது ‘மதில்களில்லாமல் குடியிருக்கிறவர்கள்’ போலவும் ‘தாழ்ப்பாள்களும் கதவுகளும்’ இல்லாதவர்கள் போலவும் காணப்படுவார்கள். ஆனாலும் யெகோவாவை நம்பியிருப்பவர்கள் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை விடுவிப்பதற்காக சர்வவல்லவர் தாமே போரிடுவார்.​—எசேக்கியேல் 38:2, 12, 14-16, 21-23; 2 கொரிந்தியர் 1:3.

இஸ்ரவேலருக்கு ஆறுதல்

17யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு தொடர்ந்து ஆறுதலளிக்கிறார்: “இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்.”​—ஏசாயா 41:15, 16.

18நடவடிக்கை எடுக்க இஸ்ரவேலுக்கு பலம் அளிக்கப்படும்; ஆவிக்குரிய கருத்தில், மலைபோல தோன்றும் எதிரிகளை அடக்குவதற்கு வேண்டிய பலமும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் சிறையிருப்பிலிருந்து திரும்பி வரும்போது, ஆலயத்தையும் எருசலேமின் மதில்களையும் திரும்ப கட்டுவதை தடை செய்ய முயலும் எதிரிகளின்மீது வெற்றிசிறக்கும். (எஸ்றா 6:12; நெகேமியா 6:16) இருந்தாலும், யெகோவாவின் வார்த்தைகள் ‘தேவனுடைய இஸ்ரவேலரிடத்தில்’ மகத்தான விதத்தில் நிறைவேறும். (கலாத்தியர் 6:16) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இயேசு இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 2:26, 27) அந்தக் காலம் கண்டிப்பாக வரும். அப்போது, பரலோக மகிமைக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவின் சகோதரர்கள் யெகோவா தேவனுடைய எதிரிகளை அழிப்பதில் பங்குகொள்வார்கள்.​—2 தெசலோனிக்கேயர் 1:6-8; வெளிப்படுத்துதல் 20:4, 6.

19தம்முடைய ஜனங்களுக்கு விடுதலை அளிக்கப்போவதைப் பற்றிய வாக்குறுதியை யெகோவா இப்போது அடையாள அர்த்தத்தில் மறுபடியும் உறுதிப்படுத்துகிறார். ஏசாயா அதை இவ்வாறு எழுதுகிறார்: “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க் கேணிகளுமாக்கி, வனாந்தரத்திலே கேதுரு மரங்களையும், சீத்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நட்டு, அவாந்தர வெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மர விருட்சங்களையும், புன்னை மரங்களையும் உண்டுபண்ணுவேன். கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.”​—ஏசாயா 41:17-20.

20சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் செல்வச் சிறப்புடைய உலக வல்லரசின் தலைநகரில் குடியிருந்தபோதிலும், அது அவர்களுக்கு தண்ணீரற்ற வனாந்தரம் போல்தான் இருக்கிறது. அரசனாகிய சவுலுக்குப் பயந்து தலைமறைவாக இருந்தபோது தாவீது உணர்ந்த விதமாகவே இவர்களும் உணர்கிறார்கள். பொ.ச.மு. 537-⁠ல் யெகோவா வழியை திறக்கிறார்; ஆகவே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து ஆலயத்தை மறுபடியும் கட்டி, இவ்வாறாக தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுகின்றனர். இதற்காக யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார். பின்னர் சொன்ன தீர்க்கதரிசனத்தில் ஏசாயா இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தர வெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.” (ஏசாயா 51:3) யூதர்கள் தங்கள் தாயகம் திரும்பிய பின்பு இது உண்மையிலேயே நடக்கிறது.

21இதற்கு ஒப்பான ஒன்று நவீன காலங்களில் நடந்தது. பெரிய கோரேசாகிய கிறிஸ்து இயேசு, தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்களை ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுவித்தார். இந்த உண்மையுள்ளவர்களுக்கு அடையாள அர்த்தமுள்ள ஏதேன் தோட்டம் போன்ற செழுமையான ஆவிக்குரிய பரதீஸ் கொடுக்கப்பட்டது. (ஏசாயா 11:6-9; 35:1-7) விரைவில், கடவுள் தம்முடைய எதிரிகளை அழிக்கிறபோது, கழுமரத்தில் அறையப்பட்டிருந்த குற்றவாளியிடம் இயேசு வாக்குறுதியளித்த விதமாக இந்த முழு பூமியும் பூத்துக்குலுங்கும் பரதீஸாக மாறும்.​—லூக்கா 23:43.

இஸ்ரவேலின் எதிரிகளுக்கு விடுக்கப்படும் சவால்

22தேசங்களிடமும் அவற்றின் விக்கிரக கடவுட்களிடமும் யெகோவா மீண்டும் கவனத்தை திருப்புகிறார்: “உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; உங்கள் நியாயங்களை எடுத்துக்காட்டுங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். அவர்கள் அவைகளை எடுத்துக்காட்டிச் சம்பவிக்கப் போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; முன் அறிவித்திருக்கிறவைகள் எவை? அவற்றை நமக்கு அறிவிக்கட்டும்; நாம் அவற்றைச் சிந்தித்து நிகழ்ந்தன இன்னவென்று அறிவோம், அன்றேல் வரப்போகிறவற்றை நமக்குத் தெரிவிக்கட்டும். இனி வரப்போகிறவற்றை அறிவிக்கட்டும், அறிவித்தால் நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; நாங்கள் எல்லாரும் திகைப்புற்றுப் பார்க்கும்படி, நன்மையோ தீமையோ, ஏதாவது செய்யுங்கள். இதோ, நீங்கள் ஒன்றுமில்லை, உங்கள் செயல்கள் சுத்த சூனியமே, உங்களைத் தெரிந்துகொள்வோன் அருவருப்பே.” (ஏசாயா 41:21-24, திருத்திய மொழிபெயர்ப்பு) புறதேசத்தாரின் கடவுட்கள் அவ்வளவு நுட்பமாக தீர்க்கதரிசனம் உரைத்து அதன் மூலம் அசாதாரண அறிவு பெற்றிருப்பதை நிரூபிக்க முடியுமா? அப்படி முடியுமென்றால், அதற்கு நிரூபணமாக நன்மையோ தீமையோ ஏதோவொன்று நடக்க வேண்டும். ஆனால், இந்த விக்கிரக கடவுட்களால் எதையும் சாதிக்க முடிகிறதில்லை, இவை சூனியத்திலும் சூனியமே.

23ஏசாயா மூலமாகவும் அவருடைய சக தீர்க்கதரிசிகள் மூலமாகவும் யெகோவா விக்கிரக வழிபாட்டின் முட்டாள்தனத்தை கண்டித்து பேசுவதற்கு ஏன் இவ்வளவு நேரத்தை செலவிட்டார் என நம்முடைய நாளில் சிலர் நினைக்கலாம். மனிதனால் உண்டாக்கப்பட்ட விக்கிரகங்கள் எதற்கும் உதவாது என்பது இன்றுள்ள அநேகருக்கு தெளிவாக தெரியலாம். இருந்தாலும், இந்தப் பொய் நம்பிக்கை வேர்கொண்டு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, அந்த நம்பிக்கையை அவர்கள் மனதிலிருந்து வேரோடு எடுத்துப்போடுவது சுலபமல்ல. உயிரற்ற உருவங்களெல்லாம் நிஜ கடவுட்களே என்ற நம்பிக்கையைப் போலவே முட்டாள்தனமான பல நம்பிக்கைகள் இப்போதும் இருக்கின்றன. அவை தவறானவை என்பதை நம்பவைக்கும் விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜனங்கள் அப்படிப்பட்ட நம்பிக்கைகளில்தான் ஊறிப்போய் இருக்கிறார்கள். சத்தியத்தை மறுபடியும் மறுபடியுமாக கேட்பதன் மூலம் மட்டுமே சிலருக்கு யெகோவாவை நம்பியிருப்பது எவ்வளவு ஞானமான காரியம் என்பது புரிகிறது.

24யெகோவா மறுபடியும் கோரேசுவைப் பற்றி குறிப்பிடுகிறார்: “நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப் பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப் போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பது போலவும் மிதிப்பான்.” (ஏசாயா 41:25) d புறஜாதிகளின் கடவுட்களைப் போல் அல்லாமல், யெகோவாவால் எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியும். கோரேசுவை கிழக்கிலிருந்து, அதாவது “சூரியோதய திசையிலிருந்து” கடவுள் அழைத்து வரும்போது, தம்மால் முன்னறிவிக்கவும் முடியும் அது நிறைவேறும்படி வருங்காலத்தை வடிவமைக்கவும் முடியும் என்பதை நிரூபிப்பார்.

25இந்த வார்த்தைகள், நம்முடைய நாட்களில் எழவிருக்கும் ராஜாக்களைப் பற்றிய அப்போஸ்தலனாகிய யோவானின் தீர்க்கதரிசன விவரிப்பை நம்முடைய நினைவுக்குக் கொண்டு வருகின்றன. வெளிப்படுத்துதல் 16:12-⁠ல் “சூரியன் உதிக்குந் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு” வழி ஆயத்தமாக்கப்படும் என நாம் வாசிக்கிறோம். யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவுமே இந்த ராஜாக்கள். வெகு காலத்திற்கு முன்பு கடவுளுடைய ஜனங்களை கோரேசு விடுவித்தது போலவே, இந்த மகா வல்லமை வாய்ந்த ராஜாக்களும் யெகோவாவின் விரோதிகளை நொறுக்கி நிர்மூலமாக்கி அவருடைய ஜனங்களை மிகுந்த உபத்திரவத்திலிருந்து நீதியுள்ள புதிய பூமிக்கு வழிநடத்துவார்கள்.​—சங்கீதம் 2:8, 9; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 7:14-17.

யெகோவா உன்னதமானவர்!

26தாமே மெய்யான கடவுள் என்ற உண்மையை யெகோவா மறுபடியும் அறிவிக்கிறார். அவர் இவ்வாறு கேட்கிறார்: “நாம் அதை அறியும்படியாக முன்னமே தெரிவித்தவன் யார்? அவன் தெரிவித்தது மெய்யென்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவித்தவன் ஒருவனும் இல்லையே, உரைத்தவனும் இல்லையே; நீங்கள் அதைப் பற்றிப் பேசக் கேட்டவனும் இல்லையே.” (ஏசாயா 41:26, தி.மொ.) எந்த விக்கிரகக் கடவுளும் தன்னை நம்பியிருப்போரை விடுவிக்க வெற்றிவீரர் வருவாரென அறிவிக்கவில்லை. இந்தத் தெய்வங்கள் எல்லாம் உயிரற்றவை, ஊமையானவை. அவை தெய்வங்களே அல்ல.

27மனதைத் தொடும் யெகோவாவின் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை அறிவித்த பின் ஏசாயா ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்திக் காட்டுகிறார்: “முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன். நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை. இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.”​—ஏசாயா 41:27-29.

28யெகோவாவே முதலானவர், உன்னதமானவர். தம்முடைய ஜனங்களுக்கு விடுதலையை அறிவித்து நற்செய்தியை கொடுக்கும் மெய் கடவுள் அவரே. அவருடைய சாட்சிகள் மட்டுமே அவருடைய மேன்மையை புறதேசத்தாருக்கு அறிவிக்கிறார்கள். விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கை வைப்போரை யெகோவா இகழ்ந்து கண்டனம் செய்கிறார், அவர்களுடைய விக்கிரகங்களோ “காற்றும் வெறுமையுந்தானே” என்று சொல்லி ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். மெய் கடவுளை உறுதியாக பற்றிக் கொள்வதற்கு இது என்னே ஒரு சிறந்த காரணம்! யெகோவாவே நம்பிக்கையோடு சார்ந்து இருப்பதற்கு தகுதியானவர்.

[அடிக்குறிப்புகள்]

a ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I புத்தகத்தின் 29-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

b ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I புத்தகத்தில் 30-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

c 1919-⁠ல் ‘தேவனுடைய இஸ்ரவேலரை’ ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பெரிய கோரேசு இயேசு கிறிஸ்துவே. அவர் 1914 முதல் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் அரசராக வீற்றிருக்கிறார்.​—⁠கலாத்தியர் 6:16.

d கோரேசுவின் தாய்நாடு பாபிலோனுக்கு கிழக்கே இருந்தாலும், பாபிலோன் மீது கடைசி தாக்குதல் நடத்தியபோது அவர் ஆசியா மைனரிலிருந்து, அதாவது வடக்கே இருந்து வந்தார்.

[கேள்விகள்]

1. ஏசாயா தீர்க்கதரிசனத்தில் நாம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?

2. இத்தீர்க்கதரிசன புத்தகத்தை ஏசாயா எழுதிய சமயத்தில் எருசலேமின் நிலை என்ன, சீக்கிரத்தில் என்ன மாற்றம் நிகழும்?

3. ஏசாயா 41-⁠ம் அதிகாரத்தில் என்ன செய்தி காணப்படுகிறது?

4. என்ன வார்த்தைகளைக் கூறி தேசங்களிடம் யெகோவா சவால் விடுகிறார்?

5. ஏசாயா தீர்க்கதரிசனத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிறைவேற்றங்கள் இருக்கின்றன என்பதை விளக்குங்கள்.

6. வருங்கால வெற்றிவீரரைப் பற்றி தீர்க்கதரிசி எவ்வாறு விவரிக்கிறார்?

7. வரப்போகும் வெற்றிவீரர் யார், அவர் எதை சாதிக்கிறார்?

8. யெகோவாவால் மட்டுமே செய்ய முடிகிற காரியம் என்ன?

9-11. கோரேசுவின் வருகையைக் கண்டு தேசங்கள் எப்படி பிரதிபலிக்கின்றன?

12. இஸ்ரவேலிடம் என்ன ஆறுதலான வார்த்தைகளை யெகோவா சொல்கிறார்?

13. சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு யெகோவாவின் வார்த்தைகள் ஏன் ஆறுதலாக இருக்கும்?

14. இஸ்ரவேலருக்கு யெகோவா சொன்ன வார்த்தைகள் இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு எவ்வாறு ஆறுதலளிக்கின்றன?

15, 16. (அ) இஸ்ரவேலரின் எதிரிகளுக்கு என்ன நேரிடும், எந்த விதங்களில் இஸ்ரவேலர் புழுவைப் போல இருக்கிறார்கள்? (ஆ) வரப்போகும் எந்த தாக்குதலின் காரணமாக யெகோவாவின் வார்த்தைகள் இன்று குறிப்பாக ஊக்கமளிக்கின்றன?

17, 18. இஸ்ரவேல் பலப்படுத்தப்படுவதை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார், என்ன நிறைவேற்றத்தில் நாம் உறுதியாக இருக்கலாம்?

19, 20. இஸ்ரவேலர் அழகான தேசத்தில் மீண்டும் நிலைநாட்டப்படுவதைக் குறித்து ஏசாயா என்ன எழுதுகிறார், அது எவ்வாறு நிறைவேறுகிறது?

21. நவீன காலங்களில் எது மீண்டும் நிலைநாட்டப்பட்டது, வருங்காலத்தில் என்ன நடக்கும்?

22. மறுபடியும் யெகோவா தேசங்களிடம் எவ்வாறு சவால்விடுகிறார்?

23. யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகள் வாயிலாக விக்கிரகங்களைப் பற்றி ஏன் விடாது கண்டனம் செய்தார்?

24, 25. கோரேசுவை மறுபடியும் யெகோவா எவ்வாறு குறிப்பிடுகிறார், இது வேறு எந்த தீர்க்கதரிசனத்தை நம்முடைய நினைவுக்குக் கொண்டு வருகிறது?

26. யெகோவா இப்போது என்ன கேள்வியை கேட்கிறார், இதற்குப் பதிலளிக்கப்படுகிறதா?

27, 28. ஏசாயா 41-⁠ம் அதிகாரத்தின் முடிவான வசனங்கள் என்ன முக்கியமான உண்மையை வலியுறுத்துகின்றன, யார் மட்டுமே இதை அறிவிக்கிறார்கள்?

[பக்கம் 19-ன் படம்]

கோரேசு புறமதத்தவராயினும் கடவுளுடைய வேலையைச் செய்ய தேர்ந்தெடுக்கப்படுகிறார்

[பக்கம் 21-ன் படம்]

புறதேசத்தார் உயிரற்ற விக்கிரகங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள்

[பக்கம் 27-ன் படங்கள்]

‘போரடிக்கிற யந்தரத்தைப்’ போல் இஸ்ரவேலர் ‘மலைகளை நொறுக்கிப்’ போடுவார்கள்