Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீயோனில் நீதி முளைக்கிறது

சீயோனில் நீதி முளைக்கிறது

அதிகாரம் இருபத்து இரண்டு

சீயோனில் நீதி முளைக்கிறது

ஏசாயா 61:1-11

விடுதலை அறிவிக்கப்படட்டும்! தம்முடைய ஜனங்களை விடுவித்து அவர்களுடைய முன்னோர்களது தேசத்திலே மீண்டும் நிலைநாட்ட யெகோவா உறுதிபூண்டிருக்கிறார். மழைத்துளி மண்ணில் விழ, விதை எப்படி முளைத்து துளிர்க்கிறதோ அப்படியே மெய் வணக்கமும் மீண்டும் துளிர்க்கும். அந்த நாள் வருகையில், மனமுறிவுக்குப் பதிலாக மகிழ்ச்சியின் துதி கேட்கப்படும்; துக்கத்திற்கு அடையாளமாக முன்பு சாம்பலால் நிறைந்திருந்த தலைகள் தெய்வீக அங்கீகாரம் எனும் கிரீடத்தை சூடிக்கொள்ளும்.

2இந்த அற்புத மாற்றத்தை யார் கொண்டு வருவார்? யெகோவா ஒருவரே இதைக் கொண்டுவர முடியும். (சங்கீதம் 9:19, 20; ஏசாயா 40:25) தீர்க்கதரிசியாகிய செப்பனியா தீர்க்கதரிசனமாக இவ்வாறு கட்டளையிட்டார்: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றிவிட்டார்.’ (செப்பனியா 3:14, 15) எவ்வளவு சந்தோஷமான நேரம் அது! பொ.ச.மு. 537-⁠ல், பாபிலோனிலிருந்து ஒரு சிறு தொகுதியினரை யெகோவா மீண்டும் கூட்டிச்சேர்க்கையில், கனவு நனவாகியது போல அது இருக்கும்.​—சங்கீதம் 126:⁠1.

3மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பற்றி ஏசாயா 61-⁠ம் அதிகாரம் முன்னறிவிக்கிறது. பொ.ச.மு. 537-⁠ல் இத்தீர்க்கதரிசனம் முதலில் நிறைவேறியது என்றாலும் பிற்காலத்தில் அது இன்னும் பெரிய அளவில் நிறைவேறுகிறது. இந்த விலாவாரியான நிறைவேற்றம் முதல் நூற்றாண்டில் இயேசுவையும் அவரைப் பின்பற்றியவர்களையும், நவீன காலங்களில் யெகோவாவின் ஜனங்களையும் உட்படுத்துகிறது. அப்படியானால், எவ்வளவு முக்கியமானவை இந்த ஏவப்பட்ட வார்த்தைகள்!

‘அநுக்கிரக வருஷம்’

4ஏசாயா எழுதுகிறார்: “யெகோவாவாகிய ஆண்டவரின் ஆவி என்மேல் இருக்கிறது, தரித்திரருக்குச் [“சாந்தகுணமுள்ளவர்களுக்கு,” NW] சுவிசேஷத்தை அறிவிக்க யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினாரே; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையாயிற்றென்றும் கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்க்கப்பட்டதென்றும் கூறவும் [என்னை அனுப்பியிருக்கிறார்].” (ஏசாயா 61:1, தி.மொ.) சுவிசேஷத்தை அறிவிக்க யாருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது? முதல் சந்தர்ப்பத்தில், அது ஏசாயாவாக இருந்திருக்கலாம்; பாபிலோனிய சிறையிருப்பில் இருப்போருக்காக நற்செய்தியைப் பதிவு செய்ய அவர் கடவுளால் ஏவப்படுகிறார். என்றாலும், ஏசாயாவின் வார்த்தைகளை இயேசு தமக்குப் பொருத்திக் காட்டியபோது, இத்தீர்க்கதரிசனத்தின் மிக முக்கியமான நிறைவேற்றத்தை சுட்டிக்காட்டினார். (லூக்கா 4:16-21) ஆம், சாந்தகுணமுடையோருக்கு நற்செய்தியை அறிவிக்க இயேசு அனுப்பப்பட்டார்; இதற்காக, முழுக்காட்டப்பட்டபோது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டார்.​—மத்தேயு 3:16, 17.

5மேலும், சுவிசேஷகர்களாக அல்லது நற்செய்தியை பிரசங்கிக்கிறவர்களாக இருக்கும்படி இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்குக் கற்பித்தார். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில், இவர்களில் சுமார் 120 பேர் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஆனார்கள். (அப்போஸ்தலர் 2:1-4, 14-42; ரோமர் 8:14-16) சாந்தகுணமுள்ளோருக்கும் இருதயம் நொறுங்குண்டவர்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க அவர்களுக்கும் கட்டளை கொடுக்கப்பட்டது. 1,44,000 பேரில் இந்த 120 பேரே இவ்விதமாக முதலில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். இந்த எண்ணிக்கையில் இறுதியாக மீந்திருப்பவர்கள் இன்றும் பூமியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, சுமார் 2,000 வருடங்களாக, “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் பிரசங்கித்து வருகின்றனர்.​—அப்போஸ்தலர் 20:⁠21.

6பாபிலோனில் இருந்த மனந்திரும்பிய யூதர்களுக்கு ஏசாயாவின் ஏவப்பட்ட செய்தி நிம்மதி அளித்தது. இயேசு மற்றும் அவருடைய சீஷர்களின் நாட்களிலோ, இருதயம் நொறுங்குண்ட யூதர்களுக்கு அது துயர் தீர்க்கும் செய்தியாக இருந்தது; அப்போது, முதல் நூற்றாண்டு யூத மதம் பொய் மத பாரம்பரியங்களில் உழன்று கொண்டிருந்ததாலும் இஸ்ரவேலில் துன்மார்க்கம் தழைத்தோங்கி இருந்ததாலும் இவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். (மத்தேயு 15:3-6) இன்று லட்சக்கணக்கானோர் கிறிஸ்தவமண்டலத்தின் பொய்மத சடங்குகளிலும் கடவுளை அவமதிக்கும் பாரம்பரியங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர். அந்த மதங்களில் செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் அவர்கள் ‘பெருமூச்சுவிட்டு அழுகின்றனர்.’ (எசேக்கியேல் 9:4) நற்செய்திக்கு செவிகொடுப்போர் இப்படிப்பட்ட வருந்தத்தக்க நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். (மத்தேயு 9:35-38) யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்ள கற்றுக்கொள்கையில் அவர்களுடைய அறிவுக்கண்கள் திறக்கப்படுகின்றன.​—யோவான் 4:⁠24.

7நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஓர் அட்டவணை உள்ளது. இயேசுவுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது: “யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தையும் நமது கடவுள் பழிவாங்கும் நாளையும் பிரசித்தப்படுத்தவும், துயரப்பட்ட அனைவரையும் தேற்றவும் [வேண்டும்].” (ஏசாயா 61:2, தி.மொ.) ஒரு வருடம் என்பது நீண்ட காலம்தான். ஆனால் அதற்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. விடுதலையைப் பற்றிய அறிவிப்பிற்கு செவிகொடுக்க சாந்தகுணமுள்ளோருக்கு யெகோவா வாய்ப்பைத் தரும் காலமே அவரது ‘அநுக்கிரக வருஷம்.’

8முதல் நூற்றாண்டில், பொ.ச. 29-⁠ல் இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்தபோது, யூதர்களுக்கு அநுக்கிரக வருஷம் துவங்கியது. யூதர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.” (மத்தேயு 4:17) அந்த அநுக்கிரக வருஷம் யெகோவாவின் ‘பழிவாங்கும் நாள்’ வரை நீடித்தது. அதாவது, பொ.ச. 70-⁠ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் ரோம சேனைகள் அழிப்பதற்கு யெகோவா அனுமதித்தபோது அநுக்கிரக வருஷம் முடிவுற்றது. (மத்தேயு 24:3-22) இன்று, மற்றொரு அநுக்கிரக வருஷத்தில் நாம் வாழ்கிறோம். இது, 1914-⁠ல் கடவுளுடைய ராஜ்யம் பரலோகங்களில் ஸ்தாபிக்கப்பட்டபோது ஆரம்பித்தது. இந்த அநுக்கிரக வருஷமும் மற்றுமோர் நாளில், மிகப் பெரிய பழிவாங்கும் நாளில் முடிவுறும். அப்போது ‘மிகுந்த உபத்திரவத்தில்’ இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை முழுவதையும் யெகோவா அழிப்பார்.​—மத்தேயு 24:⁠21.

9கடவுளுடைய அநுக்கிரக வருஷத்திலிருந்து இன்று யார் நன்மை அடைகின்றனர்? ராஜ்ய செய்தியை ஏற்று, மனத்தாழ்மையைக் காட்டி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி “சகல தேசத்தாருக்கும்” வைராக்கியத்தோடு பிரசங்கிப்போரே. (மாற்கு 13:10, NW) நற்செய்தி உண்மையிலேயே ஆறுதலைத் தருவதை இப்படிப்பட்ட ஜனங்கள் உணருகின்றனர். ஆனால் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளாமல் யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தை பயன்படுத்திக்கொள்ள மறுப்பவர்கள் வெகு சீக்கிரத்தில் அவருடைய பழிவாங்குதலின் நாளை எதிர்ப்பட்டாக வேண்டும்.​—2 தெசலோனிக்கேயர் 1:6-10.

கடவுளை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய கனி

10பாபிலோனிலிருந்து திரும்பும் யூதர்கள், யெகோவா தங்கள் சார்பாக மகத்தான செயலை செய்திருக்கிறார் என்பதை உணருகின்றனர். சிறைக் கைதிகளாக துக்கித்துக்கொண்டிருந்த அவர்கள் இப்போது இறுதியாக விடுதலை பெற்றுவிட்டதால் களிகூர்ந்து கடவுளுக்கு துதியை ஏறெடுக்கின்றனர். இப்படியாக ஏசாயா தனது தீர்க்கதரிசன பணியை நிறைவேற்றுகிறார். “சீயோனிலே [“சீயோனைக் குறித்து,” NW] துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் [“பெரிய,” NW] விருட்சங்களென்னப்படுவார்கள்.”​—ஏசாயா 61:⁠3.

11முதல் நூற்றாண்டில், பொய் மத அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட யூதர்களும் தங்கள் சார்பாக கடவுள் நடப்பித்த மகத்தான செயலுக்காக அவரை துதித்தனர். ஆவிக்குரிய விதத்தில் மரித்த நிலையில் இருந்த தேசத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டபோது, ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக “துதியின் உடையை” பெற்றனர். இப்படிப்பட்ட மாற்றத்தை முதலாவது இயேசுவின் சீஷர்கள் அனுபவித்தனர். உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தர் பரிசுத்த ஆவியால் அவர்களை அபிஷேகம் செய்தபோது, அவரது மரணத்தைக் குறித்த துக்கம் களிகூருதலாக மாறியது. அதன்பின் விரைவில், அதே விதமான மாற்றத்தை சாந்தகுணமுள்ள 3,000 பேர் அனுபவித்தனர். புதிதாக அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய பிரசங்கத்திற்கு செவிகொடுத்து, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் இவர்கள் முழுக்காட்டுதல் பெற்றனர். (அப்போஸ்தலர் 2:41) யெகோவாவின் ஆசீர்வாதம் கிட்டும் என நம்பிக்கையாய் இருந்தது எவ்வளவு சிறந்தது! ‘சீயோனைக் குறித்து துயரப்படுவதற்கு’ பதிலாக அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர். யெகோவாவின் அளவிலா ஆசீர்வாதத்தைப் பெறுவோரின் களிகூருதலை அடையாளப்படுத்தும் “ஆனந்த தைலத்தினால்” புத்துணர்ச்சி அடைந்தனர்.​—எபிரெயர் 1:⁠9.

12யெகோவா தம் ஜனங்களை ‘நீதியின் பெரிய விருட்சங்களால்’ ஆசீர்வதிக்கிறார். இந்தப் பெரிய விருட்சங்கள் யார்? பொ.ச.மு. 537-ஐ தொடர்ந்து வந்த வருடங்களில், கடவுளுடைய வார்த்தையைப் படித்து, தியானித்து, யெகோவாவின் நீதியான தராதரங்களை வளர்த்துக் கொண்டவர்களே. (சங்கீதம் 1:1-3; ஏசாயா 44:2-4; எரேமியா 17:7, 8) எஸ்றா, ஆகாய், சகரியா மற்றும் பிரதான ஆசாரியனாகிய யோசுவா போன்றோர் தனிச்சிறப்புமிக்க ‘பெரிய விருட்சங்களாக’ நிரூபித்தனர். இவர்கள் சத்தியத்தின் தூண்களாகவும் தேசத்தில் ஆவிக்குரிய தூய்மைக்கேட்டை எதிர்ப்பவர்களாகவும் விளங்கினர்.

13பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு, இதே போன்ற ‘நீதியின் பெரிய விருட்சங்களை,’​—⁠தைரியமுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை​—⁠தம்முடைய புதிய ஆவிக்குரிய தேசமாகிய ‘தேவனுடைய இஸ்ரவேலில்’ கடவுள் நாட்டினார். (கலாத்தியர் 6:16) பல நூற்றாண்டுகளினூடே, இந்த ‘விருட்சங்கள்’ 1,44,000 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கின்றன. யெகோவா தேவனுக்கு மகிமையை அல்லது மேன்மையை அளிக்கும் நீதியின் கனியை அவை பிறப்பித்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 14:3) 1919 முதல், இந்தக் கம்பீரமான ‘விருட்சங்களின்’ கடைசி உறுப்பினர்கள் தழைத்தோங்குகின்றனர். அதாவது, தேவனுடைய இஸ்ரவேலில் மீதியானோரை அவர்களுடைய தற்காலிகமான செயலற்ற நிலையிலிருந்து யெகோவா புத்துயிரூட்டியது முதல் இது நிறைவேறுகிறது. ஆவிக்குரிய தண்ணீரை அபரிமிதமாக அருளுவதால், நீதியான, கனி தரும் மரங்கள் அடங்கிய ஒரு காட்டையே யெகோவா பிறப்பித்திருக்கிறார்.​—ஏசாயா 27:⁠6.

14இந்த ‘விருட்சங்களின்’ வேலையை சிறப்பித்து, ஏசாயா தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.” (ஏசாயா 61:⁠4) பெர்சிய அரசனாகிய கோரேசுவின் ஆணைப்படி, பாபிலோனிலிருந்து திரும்பிய விசுவாசமுள்ள யூதர்கள் வெகு காலமாய் பாழாய்க்கிடந்த எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்ப கட்டினார்கள். மீண்டும் நிலைநாட்டப்படுதலின் திட்டங்கள் பொ.ச. 33 மற்றும் 1919-ஐ தொடர்ந்து வரும் வருடங்களை குறித்துக் காட்டும்.

15பொ.ச. 33-⁠ல், இயேசு கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, மரித்தபோது அவருடைய சீஷர்கள் மிகவும் துக்கமடைந்தனர். (மத்தேயு 26:31) ஆனால் உயிர்த்தெழுப்பப்பட்டு அவர்களுக்கு காட்சி அளித்தபோது அவர்களுடைய கண்ணோட்டம் மாறியது. பரிசுத்த ஆவி அவர்கள்மேல் ஊற்றப்பட்டபோதோ, “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்” நற்செய்தியை பிரசங்கிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட ஆரம்பித்தனர். (அப்போஸ்தலர் 1:8) இவ்வாறு, மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ஆரம்பித்தனர். இதைப் போலவே 1919 முதற்கொண்டு இயேசு கிறிஸ்து, ‘தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான’ ஸ்தலங்களை அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய சகோதரர்களில் மீதியானோர் புதுப்பிக்கச் செய்தார். பல நூற்றாண்டுகளாக, யெகோவாவைப் பற்றிய அறிவை பகிர்ந்தளிக்க கிறிஸ்தவமண்டல குருமார்கள் தவறிவிட்டனர்; அதற்கு பதிலாக, மனித பாரம்பரியங்களையும் வேதப்பூர்வமற்ற கோட்பாடுகளையுமே கற்பித்து வந்திருக்கின்றனர். மெய் வணக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பொய்மத கறைபடிந்த பழக்கங்களை அறவே ஒதுக்கித்தள்ளி சபைகளை சுத்தப்படுத்தினர். மேலும், இந்த உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சாட்சி கொடுக்கும் பணியைத் துவக்கினர்.​—மாற்கு 13:⁠10.

16அது மாபெரும் பணியாகும். இவ்வளவு பிரமாண்டமான வேலையை தேவனுடைய இஸ்ரவேலில் மீந்திருக்கும் சிறுபான்மையோர் எப்படி நிறைவேற்ற முடியும்? ஏசாயா இவ்வாறு அறிவிப்பதற்கு யெகோவா அவரை ஏவினார்: “அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்; வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும் திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.” (ஏசாயா 61:⁠5, பொ.மொ.) அடையாள அர்த்தத்தில் இந்த அன்னியரும் வேற்று நாட்டு மக்களும் யார்? இயேசுவின் ‘வேறே ஆடுகளாகிய’ ‘திரள் கூட்டத்தாரே.’ a (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:11, 16) இவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கை உள்ளவர்கள். (வெளிப்படுத்துதல் 21:3, 4) இருந்தாலும், இவர்கள் யெகோவாவை நேசிக்கின்றனர்; ஆவிக்குரிய மேய்க்கும் வேலை, பண்ணை வேலை, திராட்ச தோட்ட வேலை போன்ற பொறுப்புகள் இவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவை தாழ்வான வேலைகளல்ல. தேவனுடைய இஸ்ரவேலில் மீதியானோர் கொடுக்கும் வழிநடத்துதலில், ஜனங்களை மேய்த்தல், போஷித்தல், அறுவடை செய்தல் போன்ற வேலைகளில் இவர்கள் உதவி செய்கின்றனர்.​—லூக்கா 10:2; அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 5:2; வெளிப்படுத்துதல் 14:15, 16.

17தேவனுடைய இஸ்ரவேலைப் பற்றியதென்ன? ஏசாயாவின் வாயிலாக யெகோவா இவ்வாறு உரைக்கிறார்: “நீங்களோ யெகோவாவின் ஆசாரியரெனப்படுவீர்கள்; நமது கடவுளுடைய பணிவிடைக்காரரென பேர்பெறுவீர்கள்; நீங்கள் ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] செல்வத்தை அனுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மை பாராட்டுவீர்கள்.” (ஏசாயா 61:⁠6, தி.மொ.) பூர்வ இஸ்ரவேலில், தங்களுக்காகவும் உடன் இஸ்ரவேலர்களுக்காகவும் பலிசெலுத்துவதற்கு லேவியர்களின் ஆசாரியத்துவத்தை யெகோவா ஏற்பாடு செய்திருந்தார். என்றாலும், பொ.ச. 33-⁠ல், இந்த லேவிய ஆசாரியத்துவத்தை யெகோவா முடிவுக்கு கொண்டுவந்து, அதைவிட மேம்பட்ட ஓர் ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். மனிதகுலத்தின் பாவங்களுக்காக இயேசுவின் பரிபூரண ஜீவனை பலியாக ஏற்றுக்கொண்டார். அதுமுதல், வேறே எந்த பலியும் தேவைப்படவில்லை. இயேசுவின் பலியே என்றென்றும் மதிப்புள்ளது.​—யோவான் 14:6; கொலோசெயர் 2:13, 14; எபிரெயர் 9:11-14, 24.

18அப்படியென்றால், தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்கள் எப்படி ‘யெகோவாவின் ஆசாரியர்களாக’ இருக்கின்றனர்? அபிஷேகம் செய்யப்பட்ட உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு எழுதினார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) எனவே, ஒரு குழுவாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஓர் ஆசாரியக்கூட்டமாக இருக்கின்றனர்; தேசங்களுக்கு யெகோவாவின் மகிமையை அறிவிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. யெகோவாவுக்கு சாட்சிகளாகவும் அவர்கள் இருக்க வேண்டும். (ஏசாயா 43:10-12) கடைசி நாட்கள் முழுவதும், இந்த முக்கியமான கட்டளையை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உண்மைத்தன்மையோடு நிறைவேற்றி வந்திருக்கின்றனர். இதன் விளைவாக, யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி சாட்சி கொடுக்கும் வேலையை அவர்களோடு சேர்ந்து இப்போது லட்சக்கணக்கானோர் செய்து வருகின்றனர்.

19மேலும், தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்கள் இன்னொரு வகையிலும் ஆசாரியர்களாக சேவிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் இறந்த பிறகு, அழியாமையுடைய ஆவி சிருஷ்டியாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவர். அங்கு இயேசு கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் அரசர்களாக மட்டுமல்ல, தேவனுடைய ஆசாரியர்களாகவும் சேவை செய்வர். (வெளிப்படுத்துதல் 5:10; 20:6) இவ்வாறு, பூமியிலுள்ள விசுவாசமுள்ள மனிதகுலத்திற்கு இயேசுவின் மீட்கும் பலியின் நன்மைகளை அளிக்கும் பாக்கியத்தை பெறுவர். வெளிப்படுத்துதல் 22-⁠ம் அதிகாரத்தில் பதிவாகியுள்ள அப்போஸ்தலனாகிய யோவானின் தரிசனத்தில், இவர்கள் ‘விருட்சங்களாக’ மறுபடியும் விவரிக்கப்பட்டுள்ளனர். இந்த 1,44,000 ‘விருட்சங்களும்’ பரலோகத்தில் இருப்பதாக காட்டப்படுகிறது; அவை அனைத்தும் ‘பன்னிரண்டுவிதமான கனிகளை . . . மாதந்தோறும் கொடுக்கும். . . . [அவ்விருட்சங்களின்] இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகளாக இருக்கும்’ என்றும் சொல்லப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 22:1, 2) என்ன அற்புதமான ஆசாரிய சேவை இது!

வெட்கம், அவமானம், பின்பு மகிழ்ச்சி

20யெகோவாவின் அநுக்கிரக வருஷம் 1914-⁠ல் துவங்கியது முதல், இந்த ராஜரீக ஆசாரியக்கூட்டம் கிறிஸ்தவமண்டல குருமாரிடமிருந்து கடும் எதிர்ப்பையே சந்தித்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:17) என்றபோதிலும், நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்படும் எல்லா முயற்சிகளும் கடைசியில் தோல்வியைத்தான் தழுவியுள்ளன. இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசனமும் முன்னறிவிக்கிறது: “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் [“அவமானத்திற்குப்,” NW] பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.”​—ஏசாயா 61:⁠7.

21முதல் உலக யுத்தத்தின்போது, அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர், தேசப்பற்று மிக்க கிறிஸ்தவமண்டலத்தின் பிடியில் வெட்கத்தையும் அவமானத்தையும் அனுபவித்தனர். புரூக்ளினிலுள்ள தலைமை அலுவலகத்தில் சேவை செய்த விசுவாசமுள்ள எட்டு சகோதரர்கள்மீது தேசதுரோகம் என்ற பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியவர்களில் குருமார்களும் அடங்குவர். இந்த சகோதரர்கள் அநியாயமாக ஒன்பது மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியாக 1919 இளவேனில் காலத்தில், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மேல் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளும் பிற்பாடு விலக்கப்பட்டன. பிரசங்க வேலையை நிறுத்த வேண்டுமென தீட்டப்பட்ட சதித்திட்டம் எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியது. தம் வணக்கத்தார் நிரந்தரமாக அவமானப்பட யெகோவா அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்களை விடுவித்து, ‘அவர்களுடைய தேசமாகிய’ ஆவிக்குரிய பரதீஸில் மீண்டும் நிலைநாட்டினார். அங்கே, அவர்கள் இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைப் பெற்றனர். அவர்கள் பட்ட பாடுகள் அனைத்தையும் பெருமளவில் மிஞ்சிவிடும் வண்ணம் யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். சந்தோஷத்தோடே ஆர்ப்பரிக்க அது உண்மையிலேயே சிறந்த காரணம் அல்லவா!

22யெகோவா அடுத்ததாக சொல்வது இன்று கிறிஸ்தவர்கள் களிகூருவதற்கு மற்றொரு காரணத்தை கொடுக்கிறது: “ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்; கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்; அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்; அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொள்வேன்.” (ஏசாயா 61:⁠8, பொ.மொ.) பைபிளை படிப்பதன் வாயிலாக, நியாயத்தை நேசிக்கவும் துன்மார்க்கத்தை வெறுக்கவும் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் கற்றுக்கொண்டனர். (நீதிமொழிகள் 6:12-19; 11:20) மேலும், அவர்கள் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடிக்க கற்றுக்கொண்டு, போர்களிலும் அரசியல் புரட்சிகளிலும் நடுநிலைமை வகித்தனர். (ஏசாயா 2:4) பழிதூற்றுதல், விபசாரம், திருடுதல், குடித்து வெறித்தல் போன்ற கடவுளை அவமதிக்கும் பழக்கங்களையும் அவர்கள் விட்டுவிட்டனர்.​—கலாத்தியர் 5:19-21.

23அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் படைப்பாளரைப் போலவே நியாயத்தை நேசிப்பதால் “அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை” யெகோவா கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ‘கைம்மாறில்’ ஒன்றுதான் முடிவில்லா உடன்படிக்கையாகிய புதிய உடன்படிக்கை. இயேசு, தம் மரணத்திற்கு முந்தைய இரவு இந்த உடன்படிக்கையைத்தான் தம் சீஷர்களுக்கு அறிவித்தார். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் கடவுளுடைய விசேஷ ஜனங்களாக, ஆவிக்குரிய தேசமாக ஆனார்கள். (எரேமியா 31:31-34; லூக்கா 22:20) இதன் வாயிலாக, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுடைய பாவங்களையும் விசுவாசம் காண்பிக்கும் மற்ற அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பது உட்பட, இயேசுவின் மீட்கும் பலியினால் வரும் நன்மைகள் அனைத்தையும் யெகோவா மனிதகுலத்திற்கு அளிப்பார்.

யெகோவாவின் ஆசீர்வாதங்களில் களிகூருதல்

24யெகோவா தம் ஜனங்களை ஆசீர்வதிப்பதை பிற தேசத்தார் சிலரும் உணர்ந்திருக்கின்றனர். யெகோவாவின் வாக்குறுதி இதை முன்னறிவித்தது: “அவர்கள் சந்ததி ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] நடுவிலும் அவர்கள் சந்தானம் புறதேசத்தார் நடுவிலும் மதிப்புப் பெறும்; அவர்களைப் பார்க்கிற யாவரும், அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.” (ஏசாயா 61:⁠9, தி.மொ.) தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்களாகிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தின்போது தேசங்களில் சுறுசுறுப்பாக பிரசங்கித்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய ஊழியத்திற்கு செவிகொடுத்திருப்போரின் எண்ணிக்கை இன்று லட்சக்கணக்கில் உள்ளது. தேவனுடைய இஸ்ரவேலரோடு நெருங்கி சேவை செய்வதால், தேசங்களிலிருந்து வருவோரும் ‘யெகோவாவால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததி’ ஆகும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். அவர்கள் சந்தோஷமாக இருப்பது மனிதகுலத்தார் யாவருக்குமே தெளிவாக தெரிகிறது.

25அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி வேறே ஆடுகளாக இருந்தாலும்சரி, எல்லா கிறிஸ்தவர்களுமே யெகோவாவை நித்தியத்திற்கும் துதிக்க ஆவலாய் காத்திருக்கின்றனர். ஆவியால் ஏவப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி சொல்லும் வார்த்தைகளை அவர்கள் மனதார ஏற்றுக்கொள்கின்றனர்: “யெகோவாவுக்குள் மிகவும் மகிழுகிறேன்; என் கடவுளுக்குள் என் ஆத்துமா களிகூருகிறது, மணவாளன் அலங்காரப்பாகை தரித்துக் கொள்ளுகிறதற்கும் மணவாட்டி நகைகளைத் தரித்துத் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும் ஒப்பாக அவர் இரட்சணியம் என்னும் வஸ்திரத்தை எனக்கு உடுத்தி, நீதி என்னும் அங்கியை எனக்குத் தரிப்பித்தார்.”​—ஏசாயா 61:⁠10, தி.மொ.

26“நீதி என்னும் அங்கியை” அணிந்தவர்களாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் யெகோவாவின் முன்னிலையில் தூய்மையாகவும் கறைகள் எதுவும் இல்லாமலும் இருக்க உறுதிப்பூண்டிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:1, 2) பரலோக வாழ்க்கையை சுதந்தரிக்கும் நீதிமான்களாக யெகோவா இவர்களை அறிவித்திருப்பதால், எதிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த மகா பாபிலோனின் பாழான நிலைக்கு இனி ஒருபோதும் திரும்ப மாட்டார்கள். (ரோமர் 5:9; 8:30) இரட்சிப்பின் வஸ்திரங்கள் இவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை. இவர்களைப் போலவே, இவர்களது கூட்டாளிகளான வேறே ஆடுகளும் யெகோவா தேவன் அருளியிருக்கும் மெய் வணக்கத்தின் உயர்ந்த தராதரங்களை கடைப்பிடிக்க உறுதியாய் இருக்கின்றனர். இவர்கள் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருப்பதால்’ நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தையும்’ தப்பிப்பிழைப்பர். (வெளிப்படுத்துதல் 7:14; யாக்கோபு 2:23, 25) அதுவரை, தங்களுடைய கூட்டாளிகளாகிய அபிஷேகம் செய்யப்பட்டோரைப் பின்பற்றி, மகா பாபிலோனின் கறைகள் எதுவுமே தங்களை கெடுக்காதபடி ஜாக்கிரதையாய் இருக்கின்றனர்.

27இன்று, யெகோவாவின் வணக்கத்தார் ஆவிக்குரிய பரதீஸில் இருப்பதில் ஆனந்தப்படுகின்றனர். வெகு சீக்கிரத்தில், சொல்லர்த்தமான விதத்திலும் அவர்கள் பரதீஸை அனுபவிப்பார்கள். அந்த நாளை நாம் எல்லாருமே மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இது ஏசாயா 61-⁠ம் அதிகாரத்தின் முடிவான வசனங்களில் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது: “பூமி முளைகளை வெளிக்கிளம்பச் செய்வது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைக்கச் செய்வது போலவும், யெகோவாவாகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கச் செய்வார்.” (ஏசாயா 61:11, தி.மொ.) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, பூமியில் ‘நீதி முளைக்கும்.’ மனுஷர் யாவரும் வெற்றிக் களிப்போடு ஆர்ப்பரிப்பர். மேலும், பூமி முழுவதிலும் நீதி பெருகும். (ஏசாயா 26:9) என்றாலும், எல்லா தேசத்தாருக்கும் முன்பாக கடவுளை துதிப்பதற்காக அந்த மகத்தான நாள் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இப்போதே, லட்சக்கணக்கானோர் மத்தியில் நீதி முளைக்கிறது. இவர்கள் பரலோகத்தின் தேவனுக்கு மகிமை செலுத்துகின்றனர்; அதோடு, அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும் அறிவிக்கின்றனர். இப்போதே, நம் கடவுளுடைய ஆசீர்வாதங்களில் களிகூர நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் நல்ல காரணங்களை அளிக்கின்றன.

[அடிக்குறிப்பு]

a ஏசாயா 61:5, பூர்வ காலங்களில் நிறைவேற்றம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் யூதர்களோடு சேர்ந்து யூதரல்லாதவர்களும் எருசலேமுக்கு சென்றனர்; தேசத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர்கள் உதவி செய்திருக்கலாம். (எஸ்றா 2:43-58) என்றாலும், 6-⁠ம் வசனத்திலிருந்து சொல்லப்படுகிற தீர்க்கதரிசனம் தேவனுடைய இஸ்ரவேலருக்கு மட்டுமே பொருந்துகிறது.

[கேள்விகள்]

1, 2. இஸ்ரவேலுக்கு என்ன மாற்றம் சம்பவிக்கப் போகிறது, அதை யார் கொண்டு வருவார்?

3. ஏசாயா 61-⁠ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு என்ன நிறைவேற்றங்கள் உண்டு?

4. ஏசாயா 61:1-⁠ன் முதல் நிறைவேற்றத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க யாருக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது, இரண்டாவதாக யாருக்கு?

5. சுமார் 2,000 வருடங்களாக நற்செய்தியை யார் பிரசங்கித்து வந்திருக்கின்றனர்?

6. பூர்வ காலங்களில், நற்செய்தி பிரசங்கிக்கப்படுகையில் அது யாருக்கு நிம்மதி அளித்தது, இன்று யாருக்கு நிம்மதி அளிக்கிறது?

7, 8. (அ) இரு ‘அநுக்கிரக வருஷங்கள்’ யாவை? (ஆ) யெகோவா ‘பழிவாங்கும் நாட்கள்’ எவை?

9. யெகோவாவின் அநுக்கிரக வருஷத்திலிருந்து இன்று யார் நன்மை அடைகின்றனர்?

10. பாபிலோனிலிருந்து திரும்பும் யூதர்கள் சார்பாக யெகோவா நடப்பிக்கும் மகத்தான செயல் அவர்களை எவ்விதம் பாதிக்கிறது?

11. முதல் நூற்றாண்டில், யெகோவாவின் மகத்தான செயலுக்காக துதிசெலுத்த யாருக்கு நல்ல காரணம் இருந்தது?

12, 13. (அ) பொ.ச.மு. 537-⁠ல், தாயகம் திரும்பிய யூதர்களில் ‘நீதியின் பெரிய விருட்சங்களாக’ இருந்தவர்கள் யார்? (ஆ) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதல், ‘நீதியின் பெரிய விருட்சங்களாக’ இருந்திருப்பவர்கள் யார்?

14, 15. (அ) பொ.ச.மு. 537-⁠ல், (ஆ) பொ.ச. 33-⁠ல், (இ) 1919-⁠ல் யெகோவாவின் விடுவிக்கப்பட்ட வணக்கத்தாரால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் யாவை?

16. மீண்டும் நிலைநாட்டப்படும் வேலையில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு யார் உதவிசெய்து வந்திருக்கின்றனர், என்ன வேலைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன?

17. (அ) தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்கள் என்னவென்று அழைக்கப்படுவர்? (ஆ) பாவ மன்னிப்புக்குத் தேவையான ஒரே பலி எது?

18. தேவனுடைய இஸ்ரவேலர் என்ன விதமான ஆசாரியக்கூட்டமாக இருக்கின்றனர், அவர்களுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?

19. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன சேவை செய்யும் பாக்கியம் பெறுவர்?

20. எதிர்ப்பின் மத்தியிலும், ராஜரீக ஆசாரியக்கூட்டம் என்ன ஆசீர்வாதங்களை எதிர்பார்த்திருக்கிறது?

21. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்படி ஆசீர்வாதங்களை இரண்டத்தனையாக பெற்றனர்?

22, 23. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்படி யெகோவாவை பின்பற்றியிருக்கின்றனர், அதற்காக அவர் என்ன பலனளித்திருக்கிறார்?

24. தேசங்களிலிருந்து யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறும் “சந்ததி” யார், அவர்கள் எப்படி “சந்ததி” ஆயினர்?

25, 26. ஏசாயா 61:10-⁠ல் உள்ள கருத்தை எப்படி எல்லா கிறிஸ்தவர்களும் எதிரொலிக்கின்றனர்?

27. (அ) ஆயிர வருட ஆட்சியின்போது, எது குறிப்பிடத்தக்க விதத்தில் ‘முளைக்கும்’? (ஆ) மனிதகுலத்தார் இடையே எப்படி நீதி ஏற்கெனவே முளைத்து வருகிறது?

[பக்கம் 323-ன் படம்]

யூத சிறைக் கைதிகளுக்கு அறிவிக்க ஏசாயாவிடம் நற்செய்தி இருக்கிறது

[பக்கம் 331-ன் படம்]

பொ.ச. 33 முதல் 1,44,000 ‘பெரிய விருட்சங்களை’ யெகோவா நாட்டியுள்ளார்

[பக்கம் 334-ன் படம்]

பூமியில் நீதி முளைக்கும்