Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறது

மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறது

அதிகாரம் இருபத்து ஒன்று

மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறது

ஏசாயா 60:1-22

ஏசாயா 60-⁠ம் அதிகாரம் விறுவிறுப்பாகவும் தத்ரூபமான நாடக பாணியிலும் எழுதப்பட்டுள்ளது. ஆரம்ப வசனங்களில் விவரிக்கப்படும் நெஞ்சைத் தொடும் காட்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர, கிளர்ச்சியூட்டும் முடிவுக்கு நம்மை கொண்டு செல்கின்றன. பூர்வ எருசலேமில் மெய் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதையும் இன்று மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கப்படுவதையும் இந்த அதிகாரம் அழகிய வார்த்தைகளில் படம்பிடித்துக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, கடவுளின் உத்தம வணக்கத்தார் அனைவரும் அனுபவிக்கப் போகும் நித்திய ஆசீர்வாதங்களையும் சுட்டிக்காட்டுகிறது. ஏசாயா தீர்க்கதரிசனத்தின் கருத்தைக் கவரும் இந்தப் பகுதியின் நிறைவேற்றத்தில் நாம் ஒவ்வொருவருமே பங்கு கொள்ளலாம். எனவே, அதை மிகவும் கவனமாக ஆராய்வோமாக!

இருளில் ஒளி பிரகாசிக்கிறது

2ஏசாயா புத்தகத்தின் இந்த அதிகாரத்தில் காணப்படும் ஆரம்ப வார்த்தைகள் சோகமயமான நிலையிலிருக்கும் ஒரு ஸ்திரீக்கு சொல்லப்படுகின்றன. கும்மிருட்டில் தரையில் குப்புறக் கிடக்கிறாள் அந்த ஸ்திரீ. ஏசாயா மூலம் யெகோவா பின்வரும் அழைப்பு விடுக்க, திடீரென அந்த இருட்டை ஒளி ஊடுருவுகிறது: “ஸ்திரீயே, எழுந்து ஒளியைப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதித்திருக்கிறது.” (ஏசாயா 60:⁠1, NW) ஆம், இந்த “ஸ்திரீ” எழுந்து கடவுளுடைய மகிமையை பிரகாசிக்க வேண்டும்! இது ஏன் உடனடியாக செய்யப்பட வேண்டும்? தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் [“யெகோவா,” NW] உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” (ஏசாயா 60:⁠2) தன்னைச் சுற்றிலும் இருளில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருப்போரின் நன்மைக்காக, அந்த “ஸ்திரீ” கட்டாயம் “ஒளியைப் பிரகாசி”க்க வேண்டும். அதன் பலன் என்னவாக இருக்கும்? “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும் [“தேசங்களும்,” NW], உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.” (ஏசாயா 60:3) தொடர்ந்து வரும் வசனங்கள் விவரமாக விளக்கும் விஷயத்தை​—⁠அதாவது, மெய் வணக்கம் உலகளாவ விரிவடைய வேண்டும் என்பதை​—⁠இந்த ஆரம்ப வார்த்தைகள் இரத்தின சுருக்கமாக தெரிவிக்கின்றன.

3எதிர்காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுகிறபோதிலும், ஒளி “வந்துவிட்டது” என யெகோவா அந்த ‘ஸ்திரீயிடம்’ சொல்கிறார். இத்தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதியை இது அளிக்கிறது. இந்த “ஸ்திரீ” சீயோனை அல்லது யூதாவின் தலைநகராகிய எருசலேமை குறிக்கிறாள். (ஏசாயா 52:1, 2; 60:14) அந்த நகரம் முழு தேசத்திற்குமே படமாக இருக்கிறது. இத்தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில், அந்த “ஸ்திரீ” இருட்டில் தரையில் வீழ்ந்து கிடக்கிறாள். பொ.ச.மு. 607-⁠ல் எருசலேம் அழிக்கப்பட்டது முதற்கொண்டு அவள் அவ்வாறு கிடக்கிறாள். என்றாலும், பொ.ச.மு. 537-⁠ல், நாடுகடத்தப்பட்ட யூதர்களில் விசுவாசமுள்ள சிறிய தொகுதியினர் எருசலேமுக்குத் திரும்பி மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுகின்றனர். இறுதியில், தம்முடைய ‘ஸ்திரீயின்மேல்’ ஒளி பிரகாசிக்கும்படி யெகோவா செய்கிறார். அதனால், ஆவிக்குரிய இருளில் கிடக்கும் தேசங்களுக்கு மத்தியில் அவருடைய ஜனங்கள் புத்தொளியின் ஊற்றுமூலமாக திகழ்கின்றனர்.

பெரிய நிறைவேற்றம்

4இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் பூர்வ எருசலேமின்மேல் மட்டுமல்ல, அதற்குப் பின்பும் நிறைவேறுவதால் நம் ஆர்வத்திற்குரியவை. இன்று யெகோவாவின் பரலோக ‘ஸ்திரீயை’ பூமியிலுள்ள ‘தேவனுடைய இஸ்ரவேல்’ பிரதிநிதித்துவம் செய்கிறது. (கலாத்தியர் 6:16) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் உருவானது முதல் இன்று வரை, இந்த ஆவிக்குரிய தேசத்தில் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மொத்தம் 1,44,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிபுரியும் நம்பிக்கையோடு “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட”வர்கள். (வெளிப்படுத்துதல் 14:1, 3) நவீனகாலத்தைப் பொறுத்தவரை, ஏசாயா 60-⁠ம் அதிகாரம் இந்தக் “கடைசி நாட்களில்” 1,44,000 பேரில் பூமியில் மீந்திருப்போர் மீது நிறைவேறுகிறது. (2 தீமோத்தேயு 3:1) அபிஷேகம் பண்ணப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களின் கூட்டாளிகளாகிய ‘திரள் கூட்டமாகிய’ ‘வேறே ஆடுகளிலும்’ இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.​—வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:11, 16.

5சிறிது காலத்திற்கு 1900-களின் ஆரம்பத்தில், தேவனுடைய இஸ்ரவேலில் பூமியில் இருந்தோர் இருட்டில் தரையில் வீழ்ந்து கிடந்ததுபோல் இருந்தனர். முதல் உலக யுத்தம் முடிவுறுகையில், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடையாள அர்த்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிலைமை அவர்களுக்கு வந்தது. அதாவது, ‘சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் மாநகரின் தெருக்களில்’ அவர்களுடைய பிணங்கள் கிடந்தன. (வெளிப்படுத்துதல் 11:8, பொ.மொ.) என்றாலும், 1919-⁠ல் யெகோவா தம் ஒளியை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்தார். அதன் விளைவாக, அவர்கள் எழுந்து கடவுளுடைய ஒளியை பிரகாசித்தனர்; கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை தைரியமாக அறிவித்தனர்.​—மத்தேயு 5:14-16; 24:⁠14.

6‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளின்’ தலைவனாகிய சாத்தானுடைய தூண்டுதலால், “உலகத்திற்கு ஒளி”யாய் விளங்கும் இயேசு கிறிஸ்துவின் ராஜரிக வந்திருத்தலை பற்றிய அறிவிப்பை பொதுவாக முழு மனிதவர்க்கமும் புறக்கணித்திருக்கிறது. (எபேசியர் 6:12; யோவான் 8:12; 2 கொரிந்தியர் 4:3, 4) என்றபோதிலும், யெகோவாவின் ஒளியினிடமாக இன்று லட்சக்கணக்கானோர், அதாவது “ராஜாக்களும்” (பரலோக ராஜ்யத்தின் அபிஷேகம் பண்ணப்பட்ட அரசர்களும்) “தேசங்களும்” (வேறே ஆடுகளாகிய திரள் கூட்டத்தினரும்) கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகரிப்பால் மனமார்ந்த களிப்பு

7ஏசாயா 60:3-⁠ல் சொல்லப்பட்டுள்ள கருப்பொருளை விரிவாக்கும் வகையில், ‘ஸ்திரீக்கு’ மற்றொரு கட்டளையை யெகோவா கொடுக்கிறார்: “சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப் பார்.” இதற்கு அந்த “ஸ்திரீ” கீழ்ப்படிகையில், இருதயத்திற்கு மகிழ்வூட்டும் காட்சியைக் காண்கிறாள்​—⁠அவளுடைய பிள்ளைகள் மீண்டும் வீடு திரும்புகின்றனர்! “அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடம் வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வருகிறார்கள், உன் குமாரத்திகள் இடுப்பிலே தூக்கப்பட்டு வருகிறார்கள்.” (ஏசாயா 60:⁠4, தி.மொ.) 1919-⁠ல் ராஜ்ய அறிவிப்பு உலகம் முழுவதிலும் துவங்கியது. இதனால் அபிஷேகம் செய்யப்பட்ட ‘குமாரரிலும்’ ‘குமாரத்திகளிலும்’ ஆயிரக்கணக்கானோர் தேவனுடைய இஸ்ரவேலோடு சேர்ந்தனர். இவ்விதமாக, கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப் போகிறவர்களாக முன்னறிவிக்கப்பட்ட 1,44,000 பேரின் எண்ணிக்கை முழுமையடைய யெகோவா நடவடிக்கைகள் எடுத்தார்.​—வெளிப்படுத்துதல் 5:9, 10.

8இந்த அதிகரிப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “அப்பொழுது, நீ அதைக் கண்டு முகமலர்வாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்; சமுத்திரத்தின் ஐஸ்வரியம் உன் வசம் திரும்பும். ஜாதியாரின் செல்வம் உன்னிடம் வரும்.” (ஏசாயா 60:5, தி.மொ.) 1920-களிலும் 1930-களிலும் அபிஷேகம் செய்யப்பட்டோர் கூட்டிச் சேர்க்கப்பட்டது தேவனுடைய இஸ்ரவேலருக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. என்றாலும், அவர்களுக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தர மற்றொரு காரணமும் இருந்திருக்கிறது. முக்கியமாக 1930-களின் மத்திபத்திலிருந்து, கடவுளை விட்டுவிலகிய மனிதவர்க்கம் எனும் ‘கடலின்’ பாகமாக இருந்த ஜனங்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு சேர்ந்து கடவுளை வணங்க எல்லா தேசத்திலிருந்தும் வந்திருக்கின்றனர். (ஏசாயா 57:20; ஆகாய் 2:7) இவர்கள் அவரவருக்கு இஷ்டமான வழிகளில் கடவுளை சேவிக்காமல், கடவுளுடைய ‘ஸ்திரீயிடம்’ வந்து கடவுளுடைய ஐக்கியப்பட்ட மந்தையின் பாகமாக ஆகின்றனர். அதன் விளைவாக, கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் மெய் வணக்கத்தை விஸ்தரிப்பதில் கலந்து கொள்கின்றனர்.

தேசங்கள் எருசலேமுக்கு கூடிவருதல்

9ஏசாயாவின் நாட்களில் வாழ்பவர்களுக்கு நன்கு தெரிந்த உதாரணங்களை பயன்படுத்தி யெகோவா விஸ்தரிப்பை விவரிக்கிறார். சீயோன் மலையில் மிகவும் அனுகூலமான இடத்திலிருந்து அந்த “ஸ்திரீ” முதலாவது கிழக்கு திசையிலுள்ள தொடுவானத்தை கூர்ந்து பார்க்கிறாள். எதை பார்க்கிறாள்? “ஒட்டகங்களின் திரளும் மீதியான் ஏப்பாத் தேசங்களின் ஒட்டகக் குட்டிகளும் உன் நாட்டை மூடும்; அவர்கள் யாவரும் ஷேபாவிலிருந்து வருகிறார்கள்; பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவருவார்கள்; யெகோவாவின் புகழை நற்செய்தியாகக் கூறுவார்கள்.” (ஏசாயா 60:⁠6, தி.மொ.) வித்தியாசமான பழங்குடியைச் சேர்ந்த வணிகர்களுடைய ஒட்டகக் கூட்டம், எருசலேமை நோக்கிச் செல்லும் சாலைகளில் பிரயாணம் செய்கின்றன. (ஆதியாகமம் 37:25, 28; நியாயாதிபதிகள் 6:1, 5; 1 இராஜாக்கள் 10:1, 2) தேசத்தை வெள்ளம் மூடுவதுபோல எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒட்டகங்கள்தான்! இந்த ஒட்டகக் கூட்டங்கள் விலையுயர்ந்த காணிக்கைகளை கொண்டு வருகின்றன. சமாதான நோக்கத்தோடுதான் வணிகர்கள் வருகின்றனர் என்பதற்கு அதுவே அடையாளம். அவர்கள் யெகோவாவை வணங்க விரும்புகின்றனர்; மேலும், தங்களிடம் உள்ளதில் சிறந்ததை அவருக்கு அளிக்கின்றனர்.

10அந்த அணிவகுப்பில் இருப்பது வணிகர்கள் மட்டுமல்ல. “கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவி[க்கும்].” ஆம், மேய்ப்பர் கூட்டங்களும் எருசலேமுக்கு பிரயாணம் பண்ணுகின்றன. அந்த மேய்ப்பர்கள் தங்களிடம் இருப்பதிலேயே மிகவும் மதிப்பு மிக்கவற்றை, அதாவது ஆட்டு மந்தைகளை காணிக்கையாக கொண்டு வந்து, தங்களையே ஊழியர்களாக அர்ப்பணிக்கின்றனர். யெகோவா இவர்களை எப்படி ஏற்றுக்கொள்வார்? அவரே சொல்கிறார்: “அங்கீகரிக்கப்பட்டதாய் [அவை] என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.” (ஏசாயா 60:7) யெகோவா அவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார். அவை மெய் வணக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.​—ஏசாயா 56:7; எரேமியா 49:28, 29.

11இப்போது மேற்கு திசையிலுள்ள தொடுவானத்தை பார்க்கும்படி யெகோவா அந்த ‘ஸ்திரீயிடம்’ சொல்லி, பின்வரும் கேள்வியை கேட்கிறார்: “மேகம் போலவும் தங்கள் கூடுகளுக்கு விரையும் புறாக்கள் போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?” யெகோவாவே பதிலையும் சொல்கிறார்: “எனக்குக் காத்திருக்கிற தீவுகளிலுள்ளவர்கள் தூரத்திலிருந்து உன் பிள்ளைகளையும் அவர்களோடேகூட அவர்கள் வெள்ளியையும் அவர்கள் பொன்னையும் தர்ஷீஸ் கப்பல்களிலே முதல் முதல் ஏற்றி உன் கடவுளாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் கொண்டு வருகிறார்கள்; அவர் உன்னை மகிமைப்படுத்தினாரே.”​—ஏசாயா 60:8, 9, தி.மொ.

12நீங்களும் அந்த ‘ஸ்திரீயுடன்’ சேர்ந்து நின்றுகொண்டு, மகா சமுத்திரமிருக்கும் திசையில் மேற்கு நோக்கி கூர்ந்து பார்ப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மேகம் போன்ற வெள்ளைப் புள்ளிகள் தண்ணீர்மேல் தொலைவிலிருந்து நீந்தி வருவதுபோல் தெரிகிறது. தூரத்தில் அவை பறவைகளைப் போல் காட்சியளிக்கின்றன. ஆனால் பக்கத்தில் வரும்போதோ, பாய்மரம் விரிக்கப்பட்ட கப்பல்கள் என தெரிந்துகொள்கிறீர்கள். அவை “தூரத்திலிருந்து” வருகின்றன. a (ஏசாயா 49:12) சீயோனை நோக்கி அவ்வளவு அநேக கப்பல்கள் வருவதால், கூட்டை நோக்கி பறக்கும் புறா கூட்டத்தைப்போல் அவை காட்சியளிக்கின்றன. இந்தக் கப்பல்கள் ஏன் இப்படி விரைந்து வருகின்றன? தொலைதூர துறைமுகங்களிலிருந்து வரும் யெகோவாவின் வணக்கத்தாரை இறக்கிவிடவே அவ்வளவு ஆர்வத்தோடு வருகின்றன. புதிதாக வரும் அனைவரும்​—⁠கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் தூரத்திலிருந்தும் அருகிலிருந்தும் வரும் இஸ்ரவேலரும் அந்நியருமாகிய அனைவரும்​—⁠தங்களுக்குரிய அனைத்தையும் தங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயருக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்கு விரைகின்றனர்.​—ஏசாயா 55:⁠5.

13இருள் சூழ்ந்த இந்த உலகில் யெகோவாவின் “ஸ்திரீ” ஒளி வீசத் துவங்கியதிலிருந்து உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை ஏசாயா 60:4-9 வரையுள்ள வசனங்கள் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றன! முதலாவதாக, பரலோக சீயோனின் ‘குமாரரும்’ ‘குமாரத்திகளுமாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டனர். 1931-⁠ல், இவர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டனர். பிறகு, ‘ஜாதியாரின் செல்வமும்’ ‘சமுத்திரத்தின் ஐஸ்வரியமுமான’ மேகம் போன்ற திரளான சாந்தகுணமுள்ளவர்கள், கிறிஸ்துவின் சகோதரர்களில் மீதியானோரை சேர்ந்துகொள்ள விரைந்தனர். b இன்று உலகின் நான்கு மூலைகளிலிருந்தும் பலவிதமான வாழ்க்கைப் பின்னணிகளிலிருந்தும் வரும் யெகோவாவின் இந்த ஊழியர்கள் அனைவரும் தேவனுடைய இஸ்ரவேலோடு ஒன்று சேர்கின்றனர். சர்வவல்ல தேவனாகிய யெகோவாவை துதிப்பதிலும் பிரபஞ்சத்திலேயே அவருடைய பெயரே மிகவும் மகத்தானது என்று புகழ்ந்து போற்றுவதிலும் அவர்களோடு சேர்ந்துகொள்கின்றனர்.

14எல்லா தேசங்களிலிருந்தும் புதிதாக வரும் இவர்கள் ‘[கடவுளுடைய] பலிபீடத்தின்மேல் ஏறுவர்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? பொதுவாக, பலிபீடத்தின்மீது பலி செலுத்தப்படும். “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, . . . உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என எழுதியபோது, பலியை குறிக்கும் பதத்தை அப்போஸ்தலனாகிய பவுல் உபயோகித்தார். (ரோமர் 12:1) உண்மை கிறிஸ்தவர்கள் தங்களையே அளிக்க மனமுள்ளவர்களாக இருக்கின்றனர். (லூக்கா 9:23, 24) அவர்கள் தங்கள் நேரம், சக்தி, திறமைகள் அனைத்தையும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். (ரோமர் 6:13) இவ்வாறு செய்வதால், கடவுளுக்கு உகந்த துதியின் பலிகளை செலுத்துகின்றனர். (எபிரெயர் 13:15) இளைஞரும் முதியோருமான லட்சக்கணக்கான யெகோவாவின் வணக்கத்தார் கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலாவதாக வைத்து, சொந்த ஆசைகளையும் விருப்பங்களையும் இரண்டாவதாக வைப்பதைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! அவர்கள் சுயதியாக மனப்பான்மையை இருதயப்பூர்வமாக காண்பிக்கின்றனர்.​—மத்தேயு 6:33; 2 கொரிந்தியர் 5:⁠15.

விஸ்தரிப்பில் புதியவர்களின் பங்கு

15புதிதாக வருவோர் தங்களுக்குரிய எல்லாவற்றையும், அதாவது உடமைகளையும் உழைப்பையும் கொடுத்து யெகோவாவின் ‘ஸ்திரீயை’ ஆதரிக்கின்றனர். “அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.” (ஏசாயா 60:10) பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் எருசலேமின் கட்டுமான பணிகளில் அந்நியர் உதவி செய்தபோது யெகோவாவின் இரக்கம் வெளிக்காட்டப்பட்டது. (எஸ்றா 3:7; நெகேமியா 3:26) இன்றைய பெரிய நிறைவேற்றத்தில், மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கு ‘அந்நியராகிய’ திரள் கூட்டத்தார் ஆதரவு அளிக்கின்றனர். தங்கள் பைபிள் மாணாக்கர்கள் கிறிஸ்தவ குணங்களை வளர்ப்பதற்கு இவர்கள் உதவி செய்வதன் மூலம் கிறிஸ்தவ சபைகளை கட்டியமைக்கின்றனர், யெகோவாவுடைய அமைப்பின் நகரத்திற்கு ஒத்த “மதில்களை” உறுதிப்படுத்துகின்றனர். (1 கொரிந்தியர் 3:10-15) ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், பெத்தேல் வளாகங்கள் ஆகியவற்றை கட்டுவதில் கடினமாக உழைப்பதன் மூலம் சொல்லர்த்தமாகவும் கட்டுகின்றனர். இவ்வாறாக, விரிவடைந்துகொண்டே போகும் யெகோவாவுடைய அமைப்பின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களோடு சேர்ந்துகொள்கின்றனர்.​—ஏசாயா 61:⁠5.

16ஆவிக்குரிய கட்டுமான திட்டத்தின் காரணமாக, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான ‘அந்நியர்’ யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொள்கின்றனர். இன்னும் அநேகர் அமைப்புக்குள் வர வழி திறந்திருக்கிறது. யெகோவா சொல்கிறார்: “உன்னிடத்துக்கு ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] பலத்த சேனையைக் [“ஐசுவரியத்தைக்,” தி.மொ.] கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.” (ஏசாயா 60:11) என்றாலும், தேசங்களின் ஐசுவரியத்தை சீயோனுக்கு கொண்டு வருவதில் முன்நிற்கும் ‘ராஜாக்கள்’ யார்? பூர்வ காலங்களில், சீயோனை ‘சேவிக்க’ சில அரசர்களின் இருதயங்களை யெகோவா உந்துவித்தார். உதாரணமாக, யூதர்கள் மீண்டும் எருசலேமுக்கு சென்று ஆலயத்தை திரும்பக் கட்டுவதற்கு கோரேசு உதவினார். பின்னர், அர்தசஷ்டா அதற்காக பொருளுதவி அளித்தார்; மேலும், எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டுவதற்காக நெகேமியாவையும் அனுப்பினார். (எஸ்றா 1:2, 3; நெகேமியா 2:1-8) ஆம், “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது.” (நீதிமொழிகள் 21:1) பூமியின் வல்லமை வாய்ந்த ராஜாக்களும் தம்முடைய சித்தத்திற்கு இசைவாக நடக்கும்படி நம் கடவுளால் உந்துவிக்க முடியும்.

17நவீன காலங்களில், அநேக ‘ராஜாக்கள்’ அல்லது அரசாங்கங்கள், யெகோவாவுடைய அமைப்பின் ‘வாசல்களை’ மூட முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் மற்றவையோ, அந்த ‘வாசல்களை’ திறந்தே வைப்பதற்கு ஏற்ற தீர்மானங்களை எடுப்பதன் மூலம் சீயோனை சேவித்திருக்கின்றன. (ரோமர் 13:4) ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டையும் அவரது தோழர்களையும் அநியாயமாக சிறையில் அடைத்த அரசாங்கங்கள் 1919-⁠ல் அவர்களை விடுவித்தன. (வெளிப்படுத்துதல் 11:13) பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட பிறகு சாத்தான் கொண்டு வந்த துன்புறுத்துதல் எனும் வெள்ளப்பெருக்கை மனித அரசாங்கங்கள் “விழுங்கின.” (வெளிப்படுத்துதல் 12:16) சில அரசாங்கங்கள் மத சகிப்புத்தன்மையை​—⁠சிலசமயங்களில், குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக​—⁠முன்னேற்றுவித்திருக்கின்றன. திறந்திருக்கும் “வாசல்கள்” வழியாக சாந்தகுணமுடைய கூட்டத்தார் யெகோவாவின் அமைப்புக்குள் வருவதை இந்த விதமான சேவை சுலபமாக்கி இருக்கிறது. இந்த ‘வாசல்களை’ மூடுவதற்கு முயலும் எதிரிகளைக் குறித்து என்ன சொல்லலாம்? அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள். அவர்களைப் பற்றி யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.” (ஏசாயா 60:12) கடவுளுடைய ‘ஸ்திரீக்கு’ எதிராக போரிடும் எல்லாரும், தனிநபர்களாக இருந்தாலும்சரி அமைப்புகளாக இருந்தாலும்சரி, வரப்போகும் அர்மகெதோன் யுத்தத்தில் அழிவார்கள்.​—வெளிப்படுத்துதல் 16:14, 16.

18இந்த நியாயத்தீர்ப்பு எச்சரிக்கைக்குப் பிறகு, தீர்க்கதரிசனம் மீண்டும் களிப்பையும் செழுமையையும் பற்றி வாக்குறுதி அளிக்கிறது. தம்முடைய ‘ஸ்திரீயிடம்’ பேசுவதுபோல், யெகோவா சொல்கிறார்: “என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னை மரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.” (ஏசாயா 60:13) வனப்புமிக்க மரங்கள் அழகையும் செழுமையையும் அடையாளப்படுத்துகின்றன. (ஏசாயா 41:19; 55:13) இந்த வசனத்தில் வரும் ‘பரிசுத்த ஸ்தானம்,’ ‘என் பாதஸ்தானம்’ எனும் பதங்கள் எருசலேம் ஆலயத்தைக் குறிக்கின்றன. (1 நாளாகமம் 28:2; சங்கீதம் 99:5) ஆனால் எருசலேமில் இருந்த ஆலயம் கிறிஸ்துவினுடைய பலியின் அடிப்படையில் யெகோவாவை வணக்கத்தில் அணுகுவதற்குரிய ஏற்பாடாகிய ஆவிக்குரிய பெரிய ஆலயத்திற்குப் படமாக இருந்தது என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (எபிரெயர் 8:1-5; 9:2-10, 23) ஆவிக்குரிய இந்தப் பெரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரமாகிய ‘தம் பாதஸ்தானத்தை’ யெகோவா இன்று மகிமைப்படுத்துகிறார். இது அவ்வளவு சிங்காரமாக இருப்பதால் உண்மை வணக்கத்தில் கலந்துகொள்ள எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் அதனிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.​—ஏசாயா 2:1-4; ஆகாய் 2:⁠7.

19இப்போது எதிரிகள் மீது தம்முடைய கவனத்தை திருப்பி, யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.” (ஏசாயா 60:14) கடவுளுடைய ஆசீர்வாதத்தால் வரும் அபரிமிதமான அதிகரிப்பையும் அவருடைய ஜனங்கள் அனுபவிக்கும் மேம்பட்ட வாழ்க்கை முறையையும் கண்டு எதிரிகளில் சிலர் தாழக் குனியும் கட்டாயத்திற்கு ஆளாவார்கள், அதோடு அந்த ‘ஸ்திரீயை’ நோக்கி குரலெழுப்புவர். அதாவது, அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் அவர்களுடைய கூட்டாளிகளும் ‘யெகோவாவின் நகரமும் இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோனுமாகிய’ கடவுளுடைய பரலோக அமைப்பை உண்மையிலேயே பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதை​—⁠கடைசியாக அர்மகெதோன் யுத்தத்திலாவது​—⁠அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள்.

கிடைக்கும் வளங்களை பயன்படுத்துதல்

20சூழ்நிலையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை யெகோவாவின் “ஸ்திரீ” அனுபவிக்கிறாள்! யெகோவா சொல்கிறார்: “நீ கைவிடப்பட்டும் வெறுக்கப்பட்டுமிருந்தாய், எவரும் உன் வழியாய்க் கடந்துபோகவில்லை. அப்படியிருந்த உன்னை நித்திய மாட்சிமைக்கும் தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய இடமாக வைப்பேன். நீ ஜாதிகளுக்குரிய [“தேசங்களுக்குரிய,” NW] பாலைக் குடித்து, ராஜாக்களுக்குரிய முலைப்பாலையுண்பாய்; யெகோவாவாகிய நானே உனக்கு ரட்சிப்பவரென்றும், யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவரென்றும் அறிந்துகொள்வாய்.”​—ஏசாயா 60:15, 16, தி.மொ.

21பூர்வ எருசலேம் எழுபது வருடங்களுக்கு சரித்திரத்தின் ஏடுகளில் இல்லாமல் போயிற்று என சொல்லலாம்; ‘எவரும் அதன் வழியாய்க் கடந்துபோகவில்லை.’ ஆனால் பொ.ச.மு. 537 முதல், அந்த நகரத்தை யெகோவா மறுபடியும் குடியேற்றி ‘மாட்சிமைக்குரியதாக்குகிறார்.’ அதுபோலவே, முதல் உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில், தேவனுடைய இஸ்ரவேலரும் பாழ்க்கடிப்பின் காலத்தை அனுபவித்தனர். அப்போது முற்றிலும் ‘கைவிடப்பட்டவர்களாக’ உணர்ந்தனர். ஆனால் 1919-⁠ல், அபிஷேகம் செய்யப்பட்ட தம் ஊழியர்களை சிறையிருப்பிலிருந்து யெகோவா மீட்டார். அதுமுதல் என்றுமில்லாத அளவுக்கு அதிகரிப்பையும் ஆவிக்குரிய செழுமையையும் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். அவருடைய ஜனங்கள் “தேசங்களுக்குரிய பாலை” பருகியிருக்கின்றனர்; அதாவது, மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு தேசங்களின் வளங்களை உபயோகித்திருக்கின்றனர். உதாரணமாக, நவீன தொழில்நுட்பத்தை ஞானமாக பயன்படுத்தி பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்த்து பிரசுரித்திருக்கின்றனர். இதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து வருகின்றனர். மேலும், தங்களுடைய இரட்சகரும் மீட்பரும் யெகோவாவே என்பதையும் கிறிஸ்துவின் மூலம் தெரிந்துகொள்கின்றனர்.​—அப்போஸ்தலர் 5:31; 1 யோவான் 4:⁠14.

அமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள்

22யெகோவாவின் ஜனங்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அமைப்பு சார்ந்த முன்னேற்றங்களும் ஏற்படுகின்றன. யெகோவா சொல்கிறார்: “நான் வெண்கலத்துக்குப் [“செம்புக்குப்,” NW] பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும் [“செம்பையும்,” NW], கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.” (ஏசாயா 60:17) செம்புக்கு பதிலாக பொன்னை மாற்றுவது மேம்பாட்டைக் குறிக்கிறது. இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மற்ற உலோகங்களைப் பொருத்ததிலும் இதுவே உண்மை. இதற்கிசைய, இந்தக் கடைசி நாட்கள் முழுவதிலும், அமைப்பு சார்ந்த முன்னேற்றங்களை யெகோவாவின் ஜனங்கள் அனுபவித்து வந்திருக்கின்றனர்.

23சபைகளில் மூப்பர்களும் டீக்கன்களும் 1919-⁠ல் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வருடம் முதல், சபையின் வெளி ஊழிய நடவடிக்கைகளை கண்காணிக்க ஊழிய இயக்குநர் (service director) ஒருவர் தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்பட்டார். ஆனால், சில சபைகளில் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்கள் இந்த ஊழிய இயக்குநர்களை எதிர்த்தனர். 1932-⁠ல், நிலைமை மாறிவிட்டது. மூப்பர்களையும் டீக்கன்களையும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதை நிறுத்தும்படி காவற்கோபுரம் பத்திரிகை வாயிலாக சபைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஊழிய இயக்குநரோடு சேர்ந்து செயல்பட ஊழியக்குழு ஒன்றை ஏற்படுத்தும்படி சபைகள் அறிவுறுத்தப்பட்டன. அது உண்மையிலேயே மிகப் பெரிய முன்னேற்றம்.

24இன்னும் அதிகமான ‘பொன்’ 1938-⁠ல் கொண்டு வரப்பட்டது. அதாவது, சபையில் பொறுப்பு வகிக்கும் எல்லா ஊழியர்களுமே தேவராஜ்ய முறைப்படித்தான் நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. சபையை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனி ஊழியர் (பின்னர், சபை ஊழியர் என அறியப்பட்டார்) மற்றும் அவருக்கு உதவியாக செயல்படும் அனைத்து ஊழியர்களுடைய பொறுப்பானது. c இவர்கள் அனைவருமே ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின்’ மேற்பார்வையில் நியமிக்கப்பட்டனர். (மத்தேயு 24:45-47, NW) என்றாலும், 1972-⁠ல், சபையின் காரியங்களை ஒரு தனிநபரல்ல, ஒரு மூப்பர் குழு கண்காணிப்பதே வேதாகம முறை என்பது புரிந்துகொள்ளப்பட்டது. (பிலிப்பியர் 1:1) சபையை பொருத்ததிலும் ஆளும் குழுவை பொருத்ததிலும் இன்னும் பல மாற்றங்களும் செய்யப்பட்டன. உவாட்ச் டவர் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியா மற்றும் அதன் பிற சொஸைட்டிகளின் இயக்குநர்களாக இருந்த ஆளும் குழுவின் உறுப்பினர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததாக அக்டோபர் 7, 2000-⁠ல் அறிவிக்கப்பட்டது. இது, ஆளும் குழுவில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு ஓர் உதாரணமாகும். இவ்விதமாக, உண்மையும் விவேகமுள்ள அடிமையை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் குழுவினர் ‘தேவனுடைய சபை’ மற்றும் அதனோடு கூட்டுறவு கொள்ளும் வேறே ஆடுகளின் ஆவிக்குரிய தேவைக்கு அதிக கவனம் செலுத்த முடியும். (அப்போஸ்தலர் 20:28) இந்த எல்லா ஏற்பாடுகளுமே அமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள். இவை அனைத்தும் யெகோவாவின் அமைப்பை பலப்படுத்தி, அவருடைய வணக்கத்தாருக்கு ஆசீர்வாதங்களைத் தந்திருக்கின்றன.

25இந்த முன்னேற்றங்கள் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தது யார்? சில மனிதருடைய அதிபுத்திசாலித்தனத்தால் அல்லது அமைப்பை நிர்வகிக்கும் திறமையால் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டனவா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், ‘பொன்னை வரப்பண்ணுவேன்’ என யெகோவா சொன்னார். எனவே, இந்த முன்னேற்றங்கள் எல்லாம் தெய்வீக வழிநடத்துதலினால் ஏற்பட்டவையே. யெகோவாவின் ஜனங்கள் அவருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்பட்டு மாற்றம் செய்து கொள்கையில், நன்மைகளை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் சமாதானம் நிலவுகிறது. நீதியின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு, கடவுளுக்கு சேவை செய்ய அவர்களை தூண்டுகிறது.

26கடவுள் அருளும் சமாதானம் வியத்தகு மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்பட மாட்டாது; உன் மதில்கள் இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.” (ஏசாயா 60:18) இது எவ்வளவு உண்மை! மெய் கிறிஸ்தவர்களை சிறப்பித்துக் காட்டுவது சமாதானமே என்பதை எதிரிகளும் ஒத்துக்கொள்கின்றனர். (மீகா 4:3) தேவனோடும் யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவரோடும் சமாதானம் நிலவுகிறது. பாலைவனம் போன்ற இந்த வன்முறைமிக்க உலகில், கிறிஸ்தவ கூட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடத்தையும் புத்துயிரூட்டும் சோலையாக மாற்றுவதும் இந்த சமாதானமே. (1 பேதுரு 2:17) பூமியின் குடிகள் அனைவரும் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டவர்களாக’ இருக்கும்போது நிலவப்போகும் அளவிலா சமாதானத்திற்கு இது ஓர் சிறிய எடுத்துக்காட்டு.​—ஏசாயா 11:9; 54:⁠13; NW.

தெய்வீக அங்கீகாரம் எனும் மகத்தான ஒளி

27எருசலேமின் மீது வீசும் ஒளிப்பிரவாகத்தைப் பற்றி விவரிக்கையில் யெகோவா பின்வருமாறு சொல்கிறார்: “பகலிலே வெளிச்சம் தரச் சூரியன் இனி உனக்குத் தேவையில்லை, தன் பிரகாசத்தினால் உனக்கு வெளிச்சம் தரச் சந்திரனும் தேவையில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் கடவுளே உனக்கு மகிமையுமாவார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை; உன் சந்திரன் தேய்வதுமில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமாவார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்.” (ஏசாயா 60:19, 20, தி.மொ.) தம்முடைய ‘ஸ்திரீக்கு’ யெகோவா தொடர்ந்து ‘நித்திய வெளிச்சமாயிருப்பார்.’ அவர் ஒருபோதும் சூரியனைப்போல் ‘அஸ்தமிக்க மாட்டார்’ அல்லது சந்திரனைப்போல் ‘தேய்ந்துபோக மாட்டார்.’ d கடவுளுடைய ‘ஸ்திரீயின்’ மனித பிரதிநிதிகளாகிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது அவருடைய அங்கீகாரத்தின் ஒளி எப்போதும் பிரகாசிக்கிறது. திரள் கூட்டத்தாரோடு சேர்ந்து இவர்கள் ஆவிக்குரிய ஒளிப்பிரவாகத்தை அனுபவித்து மகிழ்கின்றனர். அது அந்தளவு பிரவாகிப்பதால் உலகின் அரசியல் அல்லது பொருளாதார காரிருளால் எந்தவிதத்திலும் மங்காது. யெகோவா அவர்களுக்காக வைத்திருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தில் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.​—ரோமர் 2:7; வெளிப்படுத்துதல் 21:3-5.

28எருசலேமின் குடிகளைக் குறித்து யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: “உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் [“தேசத்தை,” NW] சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.” (ஏசாயா 60:21) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து திரும்பியபோது, அவர்கள் ‘தேசத்தை சுதந்தரித்துக் கொண்டனர்.’ ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் “என்றைக்கும்” என்பது பொ.ச. முதல் நூற்றாண்டு வரையே நீடித்தது. அப்போது ரோம சேனை எருசலேமையும் யூத ஒழுங்குமுறையையும் அழித்தது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோர் 1919-⁠ல் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து வெளியேறி ஆவிக்குரிய தேசத்தை சுதந்தரித்துக் கொண்டனர். (ஏசாயா 66:8) இந்தத் தேசத்தில் அல்லது செயல்படும் பிராந்தியத்தில் என்றுமே செழுமை குன்றாத ஆவிக்குரிய பரதீஸ் நிலவுகிறது. பூர்வ இஸ்ரவேலரைப் போல அல்லாமல், இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஒரு குழுவாக உண்மைத்தன்மையைக் காத்துக் கொள்வார்கள். மேலும், ஏசாயாவின் இத்தீர்க்கதரிசனம் சொல்லர்த்தமாகவும் நிறைவேறும். ‘மிகுந்த சமாதானம்’ நிலவும் சொல்லர்த்தமான பூங்காவனமாக இந்தப் பூமி மாறும்போது இது நிறைவேறும். அப்போது பூமியில் வாழும் நம்பிக்கையுடைய நீதிமான்கள் தேசத்தை என்றென்றும் சுதந்தரித்துக் கொள்வர்.​—சங்கீதம் 37:11, 29.

29ஏசாயா 60-⁠ம் அதிகாரம் பிரமிப்பூட்டும் ஒரு வாக்குறுதியோடு முடிவுறுகிறது. அதை தம்முடைய பெயரிலேயே யெகோவா உறுதி அளிக்கிறார். அவர் சொல்வதாவது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான் [“தேசமாவான்,” NW]; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) சிதறிக்கிடந்த அபிஷேகம் செய்யப்பட்டோரை 1919-⁠ல் மீண்டும் செயல்பட செய்தபோது அவர்கள் ‘சின்னவர்களாக’ இருந்தனர். e ஆனால், ஆவிக்குரிய இஸ்ரவேலரில் இன்னும் மீதியானோரை கூட்டிச் சேர்க்கையில் அவர்களுடைய எண்ணிக்கை பெருகியது. திரள் கூட்டத்தார் கூட்டிச் சேர்க்கப்படுவது ஆரம்பிக்கவே இந்த அதிகரிப்பு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உயர்ந்தது.

30கடவுளுடைய ஜனங்களிடையே நிலவும் சமாதானமும் நீதியும் நல்லிருதயம் படைத்தோர் அநேகரை கவர்ந்திழுத்தன. இவ்வகையில், சொல்லர்த்தமாகவே ‘சிறியவன் பலத்த தேசமானான்.’ உலகிலுள்ள பல தன்னாட்சி நாடுகளைச் சேர்ந்த ஜனங்களின் தொகையைக் காட்டிலும் தற்பொழுது இந்தத் ‘தேசம்’ அதிகமாக பெருகியுள்ளது. இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா தேவன் இந்த ராஜ்ய வேலையை வழிநடத்தி, அபரிமிதமான அதிகரிப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மெய் வணக்கம் உலகம் முழுவதிலும் விஸ்தரிப்பதைக் காண்பதும் அதில் பங்குகொள்வதும் பூரிக்க வைக்கிறது அல்லவா! ஆம், இதைப் பற்றி வெகு காலத்திற்கு முன்பே முன்னுரைத்த யெகோவா தேவனுக்கு இந்த அதிகரிப்பு மகிமை சேர்க்கிறது என்பதை அறிவது சந்தோஷத்தைத் தருகிறது.

[அடிக்குறிப்புகள்]

a இப்போது ஸ்பெய்ன் என அறியப்படும் பகுதியில் ஒருவேளை தர்ஷீஸ் இருந்திருக்கலாம். என்றாலும், சில புத்தகங்களின்படி, “தர்ஷீஸ் கப்பல்கள்” என்ற வார்த்தைகள் கப்பல்களின் வகையை​—⁠அதாவது, “பெருங்கடல்களில் பயணிக்கும் உயரமான பாய்மர கப்பல்களை”​—⁠குறிக்கின்றன. வேறு வார்த்தையில் சொன்னால், அவை “தர்ஷீஸுக்கு செல்ல ஏற்றவை,” தூரத்திலுள்ள துறைமுகங்களுக்கு நீண்ட பிரயாணம் செய்ய ஏற்ற கப்பல்கள்.​—⁠1 இராஜாக்கள் 22:⁠48.

b 1930-⁠க்கு முன்னரே, பூமிக்குரிய நம்பிக்கையுடைய சுறுசுறுப்பும் வைராக்கியமும் மிக்க கிறிஸ்தவர்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவு கொண்டிருந்தனர். என்றாலும், 1930-களிலேயே அவர்களுடைய எண்ணிக்கை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.

c சபைகள் அந்த சமயத்தில் கம்பெனிகள் என்று அழைக்கப்பட்டன.

d 1,44,000 பேர் பரலோக மகிமையில் இருப்பதைக் குறிக்கும் ‘புதிய எருசலேமை’ பற்றி விவரிக்கையில் அப்போஸ்தலனாகிய யோவான் இதே மாதிரியான பதங்களைத்தான் உபயோகிக்கிறார். (வெளிப்படுத்துதல் 3:12; 21:10, 22-26) இது பொருத்தமானதே; ஏனெனில், பரலோக மகிமையில் இருக்கும் தேவனுடைய இஸ்ரவேலர் அனைவரையும் ‘புதிய எருசலேம்’ குறிக்கிறது. இவர்கள் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து ‘மேலான எருசலேமாகிய’ கடவுளுடைய ‘ஸ்திரீயின்’ பிரதான பாகமாக ஆகின்றனர்.​—⁠கலாத்தியர் 4:⁠26.

e 1918-⁠ல், மாதந்தோறும் பிரசங்க வேலையில் கலந்து கொண்டவர்களின் சராசரி எண்ணிக்கை 4,000-⁠க்கும் குறைவாகவே இருந்தது.

[கேள்விகள்]

1. ஏசாயா 60-⁠ம் அதிகாரத்திலுள்ள உற்சாகமூட்டும் செய்தி என்ன?

2. கும்மிருட்டில் தரையில் கிடக்கும் ஸ்திரீக்கு என்ன கட்டளை கொடுக்கப்படுகிறது, அதற்கு அவள் ஏன் உடனடியாக கீழ்ப்படிய வேண்டும்?

3. (அ) அந்த “ஸ்திரீ” யார்? (ஆ) ஏன் அந்த “ஸ்திரீ” இருட்டில் தரையில் கிடக்கிறாள்?

4. பூமியில் இன்று ‘ஸ்திரீயை’ யார் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் யாருக்கும் பொருந்துகின்றன?

5. தேவனுடைய இஸ்ரவேலில் மீதியாய் இருப்போர் எப்பொழுது இருளில் தரையில் வீழ்ந்து கிடந்தனர், எப்பொழுது யெகோவாவின் ஒளி அவர்கள்மீது பிரகாசித்தது?

6. இயேசுவின் ராஜரிக வந்திருத்தலை பற்றிய அறிவிப்பிற்கு உலக ஜனங்கள் பொதுவாக எப்படி பிரதிபலித்திருக்கின்றனர், ஆனால் யெகோவாவின் ஒளியினிடத்திற்கு யார் கூட்டி சேர்க்கப்பட்டிருக்கின்றனர்?

7. இதயத்திற்கு மகிழ்வூட்டும் என்ன காட்சியை “ஸ்திரீ” காண்கிறாள்?

8. தேவனுடைய இஸ்ரவேல் 1919 முதல் மகிழ்ச்சியடைய என்ன காரணம் இருந்திருக்கிறது?

9, 10. எருசலேமுக்கு யார் கூடிவருகின்றனர், யெகோவா அவர்களை எப்படி ஏற்றுக்கொள்கிறார்?

11, 12. (அ) அந்த “ஸ்திரீ” மேற்கு நோக்கி கூர்ந்து பார்க்கையில் என்ன காட்சி தெரிகிறது? (ஆ) ஏன் எருசலேமுக்கு அநேகர் விரைகின்றனர்?

13. நவீன காலங்களில், ‘குமாரரும்’ ‘குமாரத்திகளும்’ யார், “ஜாதியாரின் செல்வம்” யார்?

14. புதிதாக வருபவர்கள் எப்படி ‘[கடவுளுடைய] பலிபீடத்தின்மேல் ஏறுகின்றனர்’?

15. (அ) பூர்வ காலங்களில், அந்நியருக்கு எவ்வாறு யெகோவா இரக்கம் காண்பித்தார்? (ஆ) நவீன காலங்களில், மெய் வணக்கத்தை கட்டிமைப்பதில் ‘அந்நியர்’ எவ்விதம் கலந்துகொண்டிருக்கின்றனர்?

16, 17. (அ) கடவுளுடைய அமைப்பின் “வாசல்கள்” எப்படி திறந்தே வைக்கப்பட்டு இருக்கின்றன? (ஆ) ‘ராஜாக்கள்’ எப்படி சீயோனுக்கு சேவை செய்திருக்கின்றனர்? (இ) யெகோவா திறந்து வைக்க விரும்பும் ‘வாசல்களை’ மூட முயல்வோருக்கு என்ன நேரிடும்?

18. (அ) இஸ்ரவேலில் மரங்கள் தழைத்தோங்கும் என்ற வாக்குறுதியின் அர்த்தம் என்ன? (ஆ) இன்று ‘யெகோவாவின் பாதஸ்தானம்’ எது?

19. எதிரிகள் எதை ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள், அதை கடைசியாக எப்போது உணர்ந்து கொள்வார்கள்?

20. சூழ்நிலையில் என்ன பெரிய மாற்றத்தை அந்த “ஸ்திரீ” அனுபவிக்கிறாள்?

21. (அ) எவ்வாறு பூர்வ எருசலேம் ‘மாட்சிமைக்குரியதாகிறது’? (ஆ) 1919 முதல் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர் அனுபவித்து வரும் ஆசீர்வாதங்கள் என்ன, எவ்வாறு ‘தேசங்களுக்குரிய பாலைப் பருகுகியிருக்கின்றனர்’?

22. என்ன விசேஷ முன்னேற்றத்தைக் குறித்து யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்?

23, 24. அமைப்பு சார்ந்த என்ன முன்னேற்றங்களை 1919 முதல் யெகோவாவின் ஜனங்கள் அனுபவித்து வந்திருக்கின்றனர்?

25. யெகோவாவின் ஜனங்களுடைய அமைப்பு சார்ந்த முன்னேற்றங்களுக்கு யார் காரணம், இதனால் அவர்கள் என்ன நன்மைகளை அனுபவிக்கின்றனர்?

26. உண்மை கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தும் எதை அவர்களுடைய எதிரிகளும் கவனிக்கின்றனர்?

27. யெகோவாவுடைய ‘ஸ்திரீயின்’ மீது என்ன ஒளிப்பிரவாகம் தொடர்ந்து பிரகாசிக்கிறது?

28. (அ) எருசலேமுக்குத் திரும்பும் அதன் குடிகளுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்படுகிறது? (ஆ) 1919-⁠ல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எதை சுதந்தரித்துக் கொண்டனர்? (இ) நீதிமான்கள் எவ்வளவு காலம் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வர்?

29, 30. “சின்னவன்” எவ்வாறு ‘ஆயிரமாகியிருக்கிறான்’?

[பக்கம் 305-ன் படம்]

‘எழும்பும்படியான’ கட்டளை ‘ஸ்திரீக்கு’ கொடுக்கப்படுகிறது

[பக்கம் 312313-ன் படம்]

‘தர்ஷீசின் கப்பல்கள்’ யெகோவாவின் வணக்கத்தாரை சுமந்து வருகின்றன