Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விடுதலையை முன்னறிவிக்கிறார் மெய்க் கடவுள்

விடுதலையை முன்னறிவிக்கிறார் மெய்க் கடவுள்

அதிகாரம் ஐந்து

விடுதலையை முன்னறிவிக்கிறார் மெய்க் கடவுள்

ஏசாயா 44:1-28

‘மெய்க் கடவுள் யார்?’ இந்தக் கேள்வி காலங்காலமாக கேட்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏசாயாவின் ஏட்டில் யெகோவாவே இக்கேள்வியை கேட்பது எவ்வளவு ஆச்சரியம்! ‘யெகோவா மட்டும்தான் மெய்க் கடவுளா? அல்லது அவருடைய ஸ்தானத்தை எதிர்த்து சவால்விடும் வேறு யாராவது இருக்கிறார்களா?’ என யோசிக்கும்படி மனிதரிடத்தில் அவர் கேட்கிறார். இந்த உரையாடலை ஆரம்பித்த பின், மெய்க் கடவுள் யார் என்ற விவாதத்தை தீர்ப்பதற்கு நியாயமான அடிப்படையை யெகோவாவே அளிக்கிறார். எடுத்துரைக்கப்படும் இந்த நியாயங்கள், மறுக்க முடியாத ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள நேர்மையானவர்களின் நெஞ்சங்களை தூண்டுகின்றன.

2ஏசாயாவின் நாட்களில் உருவ வழிபாடு ஊடுருவி பரவியிருந்தது. ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் 44-⁠ம் அதிகாரத்தில் ஒளிவுமறைவின்றி தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில், உருவ வழிபாடு எந்தளவுக்கு வீணான செயல் என காட்டப்பட்டுள்ளது! ஆனாலும், கடவுளுடைய ஜனங்களே விக்கிரகங்களை வழிபடும் கண்ணிக்குள் சிக்கிக்கொண்டனர். ஆகவே, முந்தின அதிகாரங்களில் பார்த்தபடி, இஸ்ரவேலர் கடுமையான தண்டனையை பெறுவதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு யெகோவா நம்பிக்கையூட்டுகிறார்; எப்படியெனில், பாபிலோனியர் தம்முடைய ஜனங்களை அடிமைகளாக கொண்டு செல்ல அனுமதித்தாலும், குறித்த காலத்தில் அவர்களை விடுவிப்பதாக அன்போடு உறுதியளிக்கிறார். அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவதையும் மெய் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதையும் பற்றிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் யெகோவாவே மெய்க் கடவுள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும். அதேசமயத்தில், இந்த நிரூபணம் புறஜாதியாருடைய உயிரற்ற கடவுட்களை வழிபடுவோருக்கு பெருத்த அவமானத்தைக் கொண்டுவரும்.

3ஏசாயா புத்தகத்தின் இப்பகுதியிலுள்ள தீர்க்கதரிசனங்களும் அவற்றின் பூர்வகால நிறைவேற்றங்களும் இன்றைய கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலப்படுத்துகின்றன. அதோடு, ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நம்முடைய நாளிலும் எதிர்காலத்திலும்கூட நிறைவேறும். அந்தச் சம்பவங்களின்போதும், விடுவிப்பாளர் ஒருவர் இருப்பார். அவ்விடுதலை கடவுளுடைய பூர்வகால ஜனங்களுக்கு முன்னறிவிக்கப்பட்ட விடுதலையைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும்.

யெகோவாவுக்குச் சொந்தமானவர்களுக்கு நம்பிக்கை

4இஸ்ரவேலரை கடவுள், சுற்றியுள்ள தேசத்தாரிலிருந்து பிரித்து தமக்கு ஊழியராக தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நினைப்பூட்டி 44-⁠ம் அதிகாரம் நம்பிக்கையான குறிப்போடு ஆரம்பிக்கிறது. அந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள். உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.” (ஏசாயா 44:1, 2) இஸ்ரவேலர் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, அதாவது எகிப்திலிருந்து வந்த பின் ஒரு தேசமாக உருவான சமயத்திலிருந்தே யெகோவா அவர்களை அதிக அக்கறையுடன் பராமரித்து வந்திருக்கிறார். தம்முடைய ஜனங்களை அவர் ஒட்டுமொத்தமாக ‘யெஷூரன்’ என அழைக்கிறார். அதன் அர்த்தம், “உத்தமன்” என்பதாகும்; இது பாசத்தையும் கனிவான இரக்கத்தையும் வெளிப்படுத்தும் பதம். இஸ்ரவேலர் உத்தமராய் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும் இப்பெயர் நினைப்பூட்டுதலாக இருக்கிறது. அவர்களோ இந்த விஷயத்தில் அடிக்கடி தவறியிருக்கின்றனர்.

5அடுத்து யெகோவா கூறுவது எவ்வளவு இதமாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும் உள்ளது! அவர் கூறுகிறார்: “தாகமுள்ளவன் மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப்போல வளருவார்கள்.” (ஏசாயா 44:3, 4) வறண்ட, உஷ்ணமான பிரதேசத்திலும்கூட தண்ணீர் இருந்தால் மரங்கள் நன்றாக தழைத்தோங்கும். யெகோவா சத்தியத்தின் ஜீவ தண்ணீரை அளித்து தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றும்போது, நீர்பாசன கால்வாய்களின் ஓரங்களிலுள்ள மரங்களைப்போல இஸ்ரவேலர் அதிகளவில் தழைத்தோங்குவார்கள். (சங்கீதம் 1:3; எரேமியா 17:7, 8) யெகோவாவே உண்மையான கடவுள் என தங்கள் பங்கில் சாட்சி பகருவதற்கு யெகோவா அவர்களுக்கு பலம் அருளுவார்.

6இவ்வாறு பரிசுத்த ஆவியை ஊற்றுவதன் ஒரு விளைவு, இஸ்ரவேலரில் சிலர் யெகோவாவோடுள்ள உறவுக்கு மீண்டும் போற்றுதலைக் காட்டுவதாகும். அதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான், ஒருவன் யாக்கோபின் பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன் தன் கையில் யெகோவாவினுடையவனென எழுதிவைப்பான், இஸ்ரவேல் என்பதை தன் சிறப்புப் பெயராகத் தரித்துக்கொள்வான்.” (ஏசாயா 44:5, தி.மொ.) யெகோவா மட்டுமே மெய்க் கடவுளாக நிரூபிக்கப்பட இருப்பதால் அவருடைய பெயரை தரித்துக் கொள்வது உண்மையில் மதிப்புக்குரியதாக இருக்கும்.

தெய்வங்களுக்கு ஒரு சவால்

7மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி, அடிமைப்பட்டிருக்கும் ஒருவர் மீட்கப்படலாம். அவரை மீட்பவர் பொதுவாக அவருக்கு நெருங்கிய குடும்ப உறவினராக இருப்பார். (லேவியராகமம் 25:47-54; ரூத் 2:20) யெகோவா இப்போது, தம்மையே இஸ்ரவேலரின் மீட்பராக அடையாளம் காட்டுகிறார். அதாவது, பாபிலோனும் அதன் எல்லா பொய்க் கடவுட்களும் வெட்கப்படும் வண்ணம் அவர் அத்தேசத்தாரை மீட்பார். (எரேமியா 50:34) பொய்க் கடவுட்களுக்கும் அவற்றை வழிபடுபவர்களுக்கும் எதிராக அவர் இவ்வாறு சவால்விடுகிறார்: “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும். நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.”​—ஏசாயா 44:6-8.

8அந்தத் தெய்வங்கள் தங்கள் தெய்வத்துவத்தை நிரூபிக்கும்படி யெகோவா சவால்விடுகிறார். வருங்கால சம்பவங்களை ஏற்கெனவே நடப்பதுபோல் அவ்வளவு திருத்தமாக முன்னறிவிக்க அவற்றால் முடியுமா? எல்லாப் பொய் தெய்வங்களும் உருவாவதற்கு முன்னும் அவை அழிந்து மறைந்துவிட்ட பின்னும் இருப்பவராகிய ‘முந்தினவரும் பிந்தினவருமானவரால்’ மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியும். கன்மலைப் போன்று உறுதியாகவும் நிலையாகவும் இருப்பவராகிய யெகோவாவின் ஆதரவு இஸ்ரவேலருக்கு இருப்பதால் அவர்கள் இந்தச் சத்தியத்தைக் குறித்து சாட்சி சொல்ல பயப்பட வேண்டிய அவசியமில்லையே!​—உபாகமம் 32:4; 2 சாமுவேல் 22:31, 32.

உருவ வழிபாடு வீணே!

9பொய்த் தெய்வங்களிடம் யெகோவா விடுத்த சவால் பத்து கட்டளைகளில் இரண்டாம் கட்டளையை மனதிற்குக் கொண்டுவருகிறது. அந்தக் கட்டளை தெளிவாக இவ்வாறு குறிப்பிட்டது: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” (யாத்திராகமம் 20:4, 5) இஸ்ரவேலர், கடவுளுடைய படைப்புகளை அழகிற்காக உருவங்களாக செதுக்குவது தவறு என இது அர்த்தப்படுத்தவில்லை. தாவரங்கள், மிருகங்கள், கேருபீன்கள் ஆகியவற்றின் உருவங்களை ஆசரிப்புக் கூடாரத்தில் வைக்கும்படி யெகோவாதாமே கட்டளையிட்டார். (யாத்திராகமம் 25:18; 26:31) இருந்தாலும், இவற்றிற்கு மரியாதையோ வணக்கமோ செலுத்தக்கூடாது. இந்த உருவங்களை நோக்கி யாருமே ஜெபம் செய்யக்கூடாது, அவற்றிற்கு பலி செலுத்தவும் கூடாது. ஏனென்றால், வணக்கத்திற்காக எவ்வகையான உருவங்களையும் உண்டாக்குவதை தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கட்டளை தடைசெய்தது. உருவங்களை வழிபடுவது அல்லது அதற்கு மரியாதை செலுத்தும் வண்ணம் தலைகுனிவது விக்கிரக ஆராதனையாகும்.​—1 யோவான் 5:21.

10உயிரற்ற உருவங்கள் ஒன்றுக்கும் உதவாதவை, அவற்றை உண்டாக்குபவர்களுக்கு அவமானமே காத்திருக்கிறது என்பதை ஏசாயா இப்போது விவரிக்கிறார்: “விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.”​—ஏசாயா 44:9-11.

11இந்த உருவங்களை எல்லாம் கடவுள் ஏன் வெட்கத்துக்குரியவையாக கருதுகிறார்? முதலாவதாக, மனிதனால் உண்டாக்கப்பட்டவை சர்வவல்லமையுள்ளவருக்கு ஒருகாலும் ஒப்பாக முடியாது. (அப்போஸ்தலர் 17:29) அதோடு, சிருஷ்டிகருக்கு பதிலாக சிருஷ்டியை வழிபடுவது மெய்க் கடவுளான யெகோவாவை அவமதிக்கும் செயலாகும். அதுமட்டுமல்ல, “தேவசாயலாக” படைக்கப்பட்ட மனிதனுக்கே அது மதிப்புக் குறைவாக இருக்காதா?​—ஆதியாகமம் 1:27; ரோமர் 1:23, 25.

12சடப்பொருளை வணக்கத்திற்கு பயன்படுத்தும் ஒன்றாக வடிவமைத்திருப்பதால் அது பரிசுத்தத்தன்மையை அடைந்துவிடுமா? வெறும் மனித முயற்சியின் படைப்பே ஒரு உருவம் என ஏசாயா நமக்கு நினைப்பூட்டுகிறார். எந்தவொரு கைவினைஞனும் பயன்படுத்தும் அதே கருவிகளையும், நுட்பங்களையுமே உருவங்களை வடிவமைப்பவரும் பயன்படுத்துகிறார்: “கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷ ரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான்.”​—ஏசாயா 44:12, 13.

13மெய்க் கடவுள், மனிதன் உட்பட எல்லா ஜீவராசிகளையும் இந்த பூமியிலே படைத்தார். யெகோவாவே மெய்க் கடவுள் என்பதற்கு புலனுணர்வுள்ள ஜீவிகளே அருமையான அத்தாட்சி. ஆனால், உண்மையில் யெகோவா படைத்த எல்லாமே அவருக்குக் கீழ்ப்பட்டதுதான். அப்படியிருக்க, அவற்றைக் காட்டிலும் மேம்பட்ட ஒன்றை மனிதனால் படைக்க முடியுமா? தனக்கும் மேலான ஒன்றை, அதுவும் தான் வணங்குவதற்கு ஏற்ற ஒன்றை அவனால் உருவாக்க முடியுமா? மனிதன் ஒரு உருவத்தை வடிக்கையில், பசியும் தாகமும் சோர்வும் அடைகிறான். இவை மனிதனுக்கு இருக்கும் வரம்புகள், ஆனாலும் மனிதன் உயிரோடிருப்பதையாவது இவை சுட்டிக் காட்டுகின்றன. மனிதன் வடிக்கும் உருவம் மனிதனைப் போலவே இருக்கலாம். அது மிக அழகாகவும் இருக்கலாம். ஆனால் அது உயிரற்றது. எந்த விதத்திலும் உருவங்களுக்கு தெய்வத்தன்மை இல்லை. வடிக்கப்பட்ட எந்த உருவமும், சாதாரண மனிதனைவிட மேலான தோற்றுமூலத்திலிருந்து வந்தது என்பதுபோல் “வானத்திலிருந்து விழுந்த”து கிடையாது.​—⁠அப்போஸ்தலர் 19:35.

14சிலை வடிப்பவர்கள் யெகோவா படைத்த இயற்கை சக்திகளையும் பொருட்களையுமே முழுமையாக சார்ந்து இருக்கிறார்கள் என ஏசாயா தொடர்ந்து காண்பிக்கிறார்: “அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருத மரத்தையாவது ஒரு கர்வாலி மரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோக மரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து; ஆ ஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரக தெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.”​—ஏசாயா 44:14-17.

15எரிக்கப்படாத ஒரு விறகுத் துண்டு யாரையாவது விடுவிக்க முடியுமா? முடியவே முடியாது. மெய்க் கடவுளால் மட்டுமே விடுதலையளிக்க முடியும். அப்படியானால், ஜடப் பொருட்களை ஜனங்கள் எப்படி வழிபாட்டுக்குரிய ஒன்றாக உருவாக்க முடியும்? பிரச்சினை உண்மையில் ஒருவருடைய இருதயத்திலேயே இருப்பதாக ஏசாயா காட்டுகிறார்: “அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.” (ஏசாயா 44:18-20) விக்கிரகங்களை வழிபடுவதால் நன்மையுண்டு என நினைப்பது, சத்துள்ள உணவுக்கு பதில் சாம்பலை உண்பது போன்றது.

16பரலோகங்களில், சாத்தானாக மாறிய வல்லமையுள்ள ஆவி சிருஷ்டி, யெகோவாவுக்கு மட்டுமே உரிய வணக்கத்தின்மீது எப்போது கண் வைத்தானோ அப்போதுதான் உருவ வழிபாடு ஆரம்பமானது. சாத்தானுடைய ஆசை அவ்வளவு பலமாக இருந்ததால் அது அவனை கடவுளுக்கு விரோதியாக்கிற்று. உண்மையில் அதுவே விக்கிரகாராதனையின் ஆரம்பமாகும்; ஏனென்றால் பேராசை விக்கிரகாராதனைக்கு ஒப்பாக இருப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கிறாரே. (ஏசாயா 14:12-14; எசேக்கியேல் 28:13-15, 17; கொலோசெயர் 3:5, NW) தங்களுடைய சுயநல ஆசைகளை முதலிடத்தில் வைக்கும்படி முதல் மனித தம்பதிகளை சாத்தான் தூண்டினான். “உங்கள் கண்கள் திறக்கப்படும் . . . நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என சாத்தான் சொன்னதும் ஏவாளுடைய ஆசை இன்னும் அதிகமானது. பேராசை இருதயத்தில் பிறக்கிறது என இயேசு குறிப்பிட்டார். (ஆதியாகமம் 3:5; மாற்கு 7:20-23, NW) இருதயங்கள் மாசுப்பட்டதாக இருந்தால், அதுவே விக்கிரகாராதனைக்கு வழிவகுத்துவிடுகிறது. யெகோவாவுக்கு உரிய இடத்தை வேறு யாரும் அல்லது எதுவும் அபகரித்துவிடாதபடி நாம் அனைவருமே ‘நம்முடைய இருதயங்களைக் காத்துக்கொள்வது’ எவ்வளவு முக்கியம்!​—நீதிமொழிகள் 4:23; யாக்கோபு 1:14.

யெகோவா இருதயங்களிடம் வருந்திக் கேட்கிறார்

17அடுத்து, இஸ்ரவேலர்கள் பாக்கியம் பெற்றவர்களாக பொறுப்புள்ள ஸ்தானத்தில் இருப்பதை நினைவுகூரும்படி யெகோவா வருந்திக் கேட்கிறார். அவர்கள் அவருடைய சாட்சிகள்! அவர் இவ்வாறு கூறுகிறார்: “யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன் [“ஊழியன்,” NW]; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன் [“ஊழியன்,” NW]; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.”​—ஏசாயா 44:21-23.

18இஸ்ரவேல் யெகோவாவை உருவாக்கவில்லை. அவர் மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுள் அல்ல. மாறாக, யெகோவாதாமே இஸ்ரவேலை தம்முடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியனாக உருவாக்கினார். இஸ்ரவேல் தேசத்தை விடுவிக்கும்போது தாமே மெய்க் கடவுள் என்பதை மீண்டுமாக நிரூபிப்பார். அவர் தம்முடைய ஜனங்களை பாசத்துடன் அழைத்து, அவர்கள் மனந்திரும்புவார்களாகில் அவர்களுடைய பாவங்களை முற்றிலுமாக மூடிவிடுவதாகவும் அவர்களுடைய மீறுதல்களை அடர்ந்த மேகங்களுக்குப் பின்னாக மறைத்துவிடுவதாகவும் உறுதியளிக்கிறார். இஸ்ரவேலர் களிகூருவதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்! யெகோவாவின் முன்மாதிரி, நவீன நாளைய ஊழியர்கள் அவருடைய இரக்கத்தைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது. தவறிழைத்தவர்களுக்கு உதவுவதன் மூலம், அதாவது முடிந்தவரை ஆவிக்குரிய விதத்தில் அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயலுவதன் மூலம் அவர்கள் இதைச் செய்யலாம்.​—கலாத்தியர் 6:1, 2.

மெய்க் கடவுள் யார் என்ற பரீட்சையின் உச்சக்கட்டம்

19யெகோவா தம்முடைய சட்டப்பூர்வ விவாதத்தை வலிமையான உச்சக்கட்டத்திற்குக் கொண்டு செல்கிறார். மெய்க் கடவுள் யார் என்ற கடுமையான பரீட்சைக்கு தம்முடைய சொந்த பதிலை அளிக்க இருக்கிறார்; வருங்காலத்தைக் குறித்து திருத்தமாக முன்னறிவிக்கும் திறமையை நிரூபிக்க இருக்கிறார். ஒரு பைபிள் அறிஞர், ஏசாயா 44-⁠ம் அதிகாரத்தின் அடுத்த ஐந்து வசனங்களை, ஒரே சிருஷ்டிகரும், வருங்காலத்தையும் இஸ்ரவேலின் விடுதலைக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரே கடவுளுமான “இஸ்ரவேல் தேவனுடைய ஈடிணையற்ற செயலின் கவிதை” என அழைத்தார். இந்தத் தேசத்தாரை பாபிலோனிலிருந்து விடுவிக்கப்போகிறவருடைய பெயரை அறிவிப்பதன் மூலம் இந்த வசனங்கள் படிப்படியாக உச்சக்கட்டத்தை அடைகின்றன.

20“உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர். நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர். கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.”​—ஏசாயா 44:24-28.

21யெகோவாவுக்கு வருங்கால சம்பவங்களை முன்னறிவிக்கும் திறமை மட்டுமல்லாமல் தாம் வெளிப்படுத்தின நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வல்லமையும் இருக்கிறது. இந்த அறிவிப்பு இஸ்ரவேலருக்கு நம்பிக்கைக்கான ஆதாரத்தை அளிக்கும். பாபிலோனிய சேனைகள் தேசத்தை பாழாக்கினாலும், எருசலேமும் அதைச் சார்ந்த பட்டணங்களும் திரும்பவும் கட்டப்பட்டு மெய் வணக்கம் மறுபடியுமாக ஸ்தாபிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதத்தை இந்த அறிவிப்பு அளிக்கிறது. ஆனால் எப்படி?

22பொய் தீர்க்கதரிசிகளுக்கு அச்சுப்பிசகாமல் துல்லியமாக முன்னறிவிக்கும் அளவுக்கு துணிச்சல் இல்லை. ஏனென்றால் நிறைவேறும் தருணம் வரும்போது அது அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. அதற்கு நேர்மாறாக, தம்முடைய ஜனங்கள் தாயகத்திற்குத் திரும்பி எருசலேமையும் ஆலயத்தையும் திரும்பக்கட்டும்படி அவர்களை அடிமைத்தனத்தினின்று விடுவிக்க யாரை பயன்படுத்த இருக்கிறாரோ அவருடைய பெயரையும் ஏசாயாவின் மூலமாக யெகோவா வெளிப்படுத்துகிறார். அவருடைய பெயர் கோரேசு, பெர்சியாவின் மகா கோரேசு எனவும் அவர் அழைக்கப்படுகிறார். பிரமாண்டமாக திட்டமிட்டு கட்டப்பட்ட பாபிலோனின் பாதுகாப்பு அமைப்பை மீறி உள்ளே நுழைவதற்கு என்ன சூழ்ச்சிமுறையை கோரேசு உபயோகிப்பார் என்பதைப் பற்றிய தகவல்களையும் யெகோவா அளிக்கிறார். உயர்ந்தோங்கிய மதில்களும், நகரின் வழியாகவும் அதைச் சுற்றிலும் ஓடும் தண்ணீரும் பாபிலோனுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இந்தப் பாதுகாப்பு அமைப்புக்கு முக்கிய அம்சமாக இருக்கும் ஐப்பிராத்து நதியை கோரேசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார். பூர்வ சரித்திராசிரியர்களான ஹெரோடொட்டஸும், ஸெனோஃபனும் குறிப்பிடுகிறபடி, கோரேசு ஐப்பிராத்து நதியை பாபிலோனுக்குள் நுழைவதற்கு முன்பே திசைதிருப்பிவிட்டார்; அவரது படைவீரர்கள் நடந்துசெல்லும் அளவுக்கு நதியின் நீர் மட்டம் குறைந்தது. ஆக, பாபிலோனைப் பாதுகாக்கும் அதன் திறனைப் பொறுத்தவரை, மாபெரும் ஐப்பிராத்து நதி வற்றிப்போய்விடுகிறது.

23கோரேசு கடவுளுடைய ஜனங்களை விடுவித்து, எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அவர்கள் திரும்பக் கட்டும்படி பார்த்துக்கொள்வார் என்ற வாக்குறுதியைப் பற்றி என்ன சொல்லலாம்? கோரேசு தாமே விடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பானது: “பாரசீக ராஜாவாகிய கோரேஸ் சொல்வதைக் கேளுங்கள், பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா பூமியின் ராஜ்யங்களையெல்லாம் என் வசம் கொடுத்து யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் அனைவரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போகட்டும், அவனுடைய கடவுள் அவனோடிருப்பாராக; அவன் இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டக்கடவன்; அவரே எருசலேமில் இருக்கிற [“மெய்,” NW] தெய்வம்.” (எஸ்றா 1:2, 3, தி.மொ.) ஏசாயா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை முற்றிலுமாக நிறைவேறுகிறது!

ஏசாயா, கோரேசு, இன்றைய கிறிஸ்தவர்கள்

24ஏசாயா 44-⁠ம் அதிகாரம், யெகோவா மட்டுமே ஒரே மெய்க் கடவுள், பூர்வகால ஜனங்களின் மீட்பரும் அவரே என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது. அதோடு, இந்தத் தீர்க்கதரிசனம் இன்றுள்ள நம் அனைவருக்கும் ஆழமான அர்த்தம் பொதிந்ததாய் உள்ளது. எருசலேமின் ஆலயத்தைக் கட்டும்படி பொ.ச.மு. 538/537-⁠ல் கோரேசு பிறப்பித்த கட்டளை, சில சம்பவங்களுக்கு ஆரம்பமாக இருந்தது; இந்தச் சம்பவங்கள் மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் உச்சக்கட்டத்தை எட்டின. கோரேசுக்குப் பின் வந்த ஆட்சியாளராகிய அர்த்தசஷ்டாவும் முன்பு பிறப்பிக்கப்பட்ட கட்டளைப்படியே எருசலேம் பட்டணம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என கட்டளையிட்டார். “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை [பொ.ச.மு. 455-⁠ல்] வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும்,” 69 “வாரங்கள்” செல்லும் என தானியேல் புத்தகம் தெரிவித்தது. இதில் ஒவ்வொரு வாரமும் 7 வருடங்களைக் கொண்டவை. (தானியேல் 9:24, 25) இந்தத் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. கொஞ்சமும் கால தாமதமின்றி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அர்த்தசஷ்டாவின் கட்டளை நிறைவேறி 483 வருடங்களுக்குப் பின், அதாவது பொ.ச. 29-⁠ல், இயேசு முழுக்காட்டுதல் பெற்று தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்தார். a

25பாபிலோனின் வீழ்ச்சி நாடுகடத்தப்பட்ட உண்மையுள்ள யூதர்களின் விடுதலைக்கு வழிசெய்தது. 1919-⁠ல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்தினின்று பெற்ற விடுதலைக்கு அது முன்நிழலாக இருந்தது. அவர்கள் பெற்ற விடுதலை, மற்றொரு பாபிலோனின் வீழ்ச்சிக்கு​—⁠அதாவது, உலகின் எல்லா பொய் மதங்களையும் ஒட்டுமொத்தமாக குறிக்கும் வேசியாக வர்ணிக்கப்பட்டுள்ள மகா பாபிலோனின் வீழ்ச்சிக்கு⁠—⁠ஆதாரமாக இருந்தது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலனாகிய யோவான் அதன் வீழ்ச்சியை முன்னரே கண்டார். (வெளிப்படுத்துதல் 14:8) அதற்கு வரும் திடீர் அழிவையும் முன்பே கண்டார். விக்கிரகங்கள் நிறைந்த அந்த உலக பேரரசின் அழிவைக் குறித்த யோவானின் விவரிப்பு பூர்வ நகரமாகிய பாபிலோனை கோரேசு வென்றதைப் பற்றிய ஏசாயாவின் விவரிப்போடு ஓரளவு ஒத்துப்போகிறது. பாபிலோனுக்குப் பாதுகாப்பாக விளங்கிய தண்ணீர் கோரேசுவிடமிருந்து அதைக் காப்பாற்ற முடியாமல் போனதுபோல் மகா பாபிலோனுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் திகழும் ‘தண்ணீர்களாகிய’ மனிதகுலம் அதன் அழிவுக்கு முன்பாக ‘வற்றிப்போகும்.’ அந்த அழிவிற்கு அது தகுதியானதே!​—வெளிப்படுத்துதல் 16:12. b

26நாம் அறிந்தவரை, ஏசாயா இந்தத் தீர்க்கதரிசனத்தை அறிவித்து இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்றாலும், கடவுள் ‘தம்முடைய ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி’ வருவதை நாம் காண்கிறோம். (ஏசாயா 44:26) ஆகவே, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், பரிசுத்த வேதாகமத்திலுள்ள எல்லா தீர்க்கதரிசனங்களின் நம்பகத்தன்மைக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தில் 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தின் 35 மற்றும் 36-⁠ம் அதிகாரங்களைக் காண்க.

[கேள்விகள்]

1, 2. (அ) யெகோவா என்ன கேள்விகளை எழுப்புகிறார்? (ஆ) யெகோவா மட்டுமே மெய்க் கடவுள் என்பதை அவர் எப்படி நிரூபிப்பார்?

3. ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவுகின்றன?

4. இஸ்ரவேலரை யெகோவா எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்?

5, 6. இஸ்ரவேலருக்கு யெகோவா புத்துணர்ச்சியூட்டும் எவற்றை அளிக்கிறார், அதன் விளைவு என்ன?

7, 8. தேசத்தாரின் தெய்வங்களிடம் யெகோவா எவ்வாறு சவால்விடுகிறார்?

9. இஸ்ரவேலர் உயிருள்ளவற்றின் எவ்வித உருவங்களையாவது உண்டாக்குவது தவறா? விளக்கவும்.

10, 11. உருவங்களை எல்லாம் வெட்கத்துக்குரியவையாக யெகோவா ஏன் கருதுகிறார்?

12, 13. வணங்குவதற்கு ஏற்ற எந்தவொரு உருவத்தையும் ஏன் மனிதனால் உருவாக்க முடியாது?

14. சிலையை உருவாக்குபவர்கள் யெகோவாவையே முழுமையாக சார்ந்து இருப்பது எப்படி?

15. சிலைகளை உருவாக்குபவருக்கு கொஞ்சமும் அறிவில்லை என்பது எப்படி வெளிக்காட்டப்படுகிறது?

16. உருவ வழிபாடு எப்படி ஆரம்பமானது, அதற்கு வழிவகுப்பது எது?

17. இஸ்ரவேல் எதை மனதில் கொள்ள வேண்டும்?

18. (அ) இஸ்ரவேலர் களிகூருவதற்கு ஏன் தகுந்த காரணம் உள்ளது? (ஆ) இன்று யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய இரக்கத்தின் மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம்?

19, 20. (அ) எவ்வழியில் யெகோவா தம்முடைய வழக்கை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்? (ஆ) தெம்பூட்டும் என்ன காரியங்களை யெகோவா தம்முடைய ஜனங்களுக்காக தீர்க்கதரிசனம் உரைக்கிறார், இந்தக் காரியங்களை நிறைவேற்றப் போகிற அவருடைய பிரதிநிதி யார்?

21. யெகோவாவுடைய வார்த்தைகள் என்ன உத்தரவாதத்தை அளிக்கின்றன?

22. ஐப்பிராத்து நதி வற்றிப்போகும் விதத்தை விளக்கவும்.

23. இஸ்ரவேலரை கோரேசு விடுவிப்பார் என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பற்றி என்ன பதிவு உள்ளது?

24. “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான” அர்த்தசஷ்டாவின் கட்டளை வெளிப்படுவதற்கும் மேசியாவின் வருகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

25. கோரேசிடம் வீழ்ச்சியடைந்த பாபிலோன் நவீன காலங்களில் எதை குறித்துக் காட்டுகிறது?

26. ஏசாயா தீர்க்கதரிசனமும் அதன் நிறைவேற்றமும் நம்முடைய விசுவாசத்தை எப்படி பலப்படுத்துகின்றன?

[பக்கம் 63-ன் படம்]

எரிக்கப்படாத ஒரு விறகுத் துண்டு யாரையாவது விடுவிக்க முடியுமா?

[பக்கம் 73-ன் படம்]

ஈரான் அரசனின் பளிங்குத் தலை, ஒருவேளை கோரேசுவாக இருக்கலாம்

[பக்கம் 75-ன் படங்கள்]

ஐப்பிராத்து நதியை திசைதிருப்புவதன் மூலம் கோரேசு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்