Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடுதல்’

‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடுதல்’

அதிகாரம் எட்டு

‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடுதல்’

பொல்லாத ஆவிகளைப் பற்றிய கருத்தை பலரும் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் இது விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. ஜனங்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, பொல்லாத ஆவிகள் இருப்பது உண்மை; அவை ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்க முயலுகின்றன. யெகோவாவின் வணக்கத்தாரும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், அவர்களே முக்கிய குறி. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து இவ்வாறு எச்சரிக்கிறார்: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, [காணக்கூடாத] துரைத்தனங்களோடும் [“அரசாங்கங்களோடும்,” NW], அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் [“ஆட்சியாளர்களோடும்,” NW], வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12) நம்முடைய நாளில் பொல்லாத ஆவி சேனைகளால் கொண்டுவரப்படும் கஷ்டங்கள் ஒருபோதுமில்லாத அளவுக்கு உச்சநிலையை எட்டியுள்ளன. பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட சாத்தான், தனக்குக் கொஞ்சக் காலம் மாத்திரமே இருப்பதை அறிந்து கடும் கோபாவேசத்துடன் இருப்பதே அதற்குக் காரணம்.​—வெளிப்படுத்துதல் 12:12.

2மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆவி சேனைகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது சாத்தியமா? சாத்தியமே, ஆனால் யெகோவாவில் முழுமையாக சார்ந்திருந்தால் மட்டும். நாம் அவருக்கு செவிகொடுத்து அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். அப்போது சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவர்கள் அனுபவிக்கிற சரீர, ஒழுக்க, உணர்ச்சி சம்பந்தப்பட்ட தீங்குகளை நாம் பெருமளவு தவிர்க்கலாம்.​—யாக்கோபு 4:7.

வானமண்டலங்களிலுள்ள உலக ஆட்சியாளர்கள்

3யெகோவா பரலோகங்களிலிருந்து உலக சூழ்நிலையை பார்த்து அதை நமக்கு தத்ரூபமாக விவரிக்கிறார். அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அவர் காண்பித்த தரிசனத்தில், ‘சிவப்பான பெரிய வலுசர்ப்பமாக’ சாத்தான் சித்தரித்துக் காட்டப்பட்டான். 1914-⁠ல் கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் முடிந்தால் அதை விழுங்கிவிடுவதற்கும் அவன் தயாராக இருந்தான். அம்முயற்சி தோல்வியடையவே, சாத்தான் அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரதிநிதிகளுக்கு விரோதமாக கொடூரமான எதிர்ப்பை கிளப்பிவிட்டான். (வெளிப்படுத்துதல் 12:3, 4, 13, 17) இந்தப் போரை சாத்தான் எப்படி நடத்துவான்? தன்னுடைய மனித பிரதிநிதிகளை உபயோகித்தே நடத்துவான்.

4அடுத்ததாக யோவானுக்கு, ‘ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதிகாரம் கொடுக்கப்பட்ட’ ஒரு மிருகம், அதாவது ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உடைய ஒரு மூர்க்க மிருகம் காட்டப்பட்டது. அந்த மிருகம் உலகளாவிய அரசியல் அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. “வலுசர்ப்பமானது [பிசாசாகிய சாத்தான்] தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது” என யோவானுக்கு அறிவிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 13:1, 2, 7) ஆம், மனித அரசாங்கங்களின் பலத்திற்கும் அதிகாரத்திற்கும் காரணகர்த்தா சாத்தானே. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய விதமாக, உண்மையில் ‘உலக ஆட்சியாளர்களாக’ இருப்பவர்கள் ‘வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்தான்’; அவையே மனித அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வருகின்றன. யெகோவாவை வணங்குபவர்கள் அனைவரும் அதன் முழு கருத்தையும் புரிந்துகொள்வது அவசியம்.​—லூக்கா 4:5, 6.

5அரசியல் ஆட்சியாளர்கள் பலரும் தங்களை மதப்பற்றுடையவர்கள் என சொல்லிக்கொண்டாலும் எந்தவொரு தேசமும் யெகோவாவின் ஆட்சிக்கு கீழ்ப்படிவதில்லை அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதில்லை. அனைவரும் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமலிருக்க கடுமையாக போராடுகிறார்கள். வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள பதிவு காட்டுகிறபடி, “பிசாசுகளால் ஏவப்பட்ட கூற்றுகள்” (NW) இன்று உலக ஆட்சியாளர்களை அர்மகெதோனில் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு கூட்டிச் சேர்க்கின்றன.’​—வெளிப்படுத்துதல் 16:13, 14, 16; 19:17-19.

6மனித குடும்பத்தை சின்னாபின்னமாக்கும் அரசியல், சமுதாயம், பொருளாதாரம், மதம் சம்பந்தப்பட்ட மோதல்களால் மக்களின் வாழ்க்கை தினம் தினம் பாதிக்கப்படுகிறது. இந்த மோதல்களின்போது மக்கள் தங்களுடைய தேசத்தாரை, இனத்தாரை, மொழியினரை அல்லது சமுதாயத்தினரை சொல்லிலோ செயலிலோ ஆதரிப்பது இயல்பு. இந்த சச்சரவுகள் சிலவற்றில் மக்கள் நேரடியாக இறங்காவிட்டாலும் அவர்கள் பொதுவாக ஏதாவதொரு தரப்பினரை ஆதரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த நபரை அல்லது கொள்கையை ஆமோதித்தாலும் சரி, உண்மையில் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள்? பைபிள் தெளிவாகவே இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) அப்படியானால், மற்ற மனிதரால் மோசம்போக்கப்படுவதை ஒருவர் எப்படி தவிர்க்கலாம்? கடவுளுடைய ராஜ்யத்தை முழுமையாய் ஆதரிப்பதன் மூலமும் இந்த உலக சச்சரவுகளில் முற்றிலும் நடுநிலைமையை காத்துக்கொள்வதன் மூலமும் மட்டுமே தவிர்க்கலாம்.​—யோவான் 17:15, 16.

பொல்லாங்கனின் மறைமுக சூழ்ச்சிகள்

7தனி நபர்களை மெய் வணக்கத்திலிருந்து திசைதிருப்புவதற்கு சரித்திரம் முழுவதிலும் சாத்தான் வசைச் சொற்களையும் துன்புறுத்துதலையும் பயன்படுத்தியிருக்கிறான். சூட்சுமமான வழிமுறைகளையும், அதாவது வஞ்சகமான மற்றும் மறைமுகமான சூழ்ச்சிகளையும் அவன் கையாண்டிருக்கிறான். அவன் பொய் மதத்தை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக மனிதகுலத்தில் பெரும்பாலோரை அறியாமைக்குள் தள்ளியிருக்கிறான்; இப்படி தாங்கள் கடவுளை வணங்குவதாக எண்ணும்படி செய்திருக்கிறான். கடவுளை பற்றிய திருத்தமான அறிவும் சத்தியத்தின் பேரில் அன்பும் இல்லாததால், அவர்கள் மனதை மயக்கும் உணர்ச்சிப்பூர்வ மத ஆராதனைகளிலும் மனம் நெகிழ்ந்து போய்விடலாம் அல்லது அற்புதங்களைக் கண்டு மனம் கவரப்படலாம். (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) ஒரு சமயம் மெய் வணக்கத்தாராக இருந்தவர்களில் “சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து . . . விலகிப்போவார்கள்” எனவும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. (1 தீமோத்தேயு 4:1) அது எப்படி நேரிடலாம்?

8மறைமுகமாக, சாத்தான் நம்முடைய பலவீனங்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான். மனித பயம் இன்னும் நம்மை ஆட்டிப்படைக்கிறதா? அப்படியானால், பொய் மத பழக்கவழக்கங்களில் பங்குகொள்ள உறவினரோ அயலகத்தாரோ வற்புறுத்துகையில் நாம் இணங்கிவிட நேரிடலாம். நாம் பெருமையுள்ளவர்களா? அப்படியென்றால், நமக்கு ஆலோசனை கொடுக்கப்படுகையில் அல்லது நம் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதிருக்கையில் நாம் கோபப்படலாம். (நீதிமொழிகள் 15:10; 29:25; 1 தீமோத்தேயு 6:3, 4) நம்முடைய நோக்குநிலையை கிறிஸ்துவின் மாதிரிக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கு பதிலாக, பைபிளை வாசித்து, நல்லவர்களாக வாழ்ந்தாலே போதும் என்று சொல்லி ‘நம் காதுக்கு இனிமையூட்டுகிறவர்களின்’ மனப்பான்மையை நாமும் ஏற்கலாம். (2 தீமோத்தேயு 4:3, NW) யெகோவா தமது வார்த்தையின் வாயிலாகவும் அமைப்பின் வாயிலாகவும் காண்பிக்கிற வழியில் அவரை வணங்காத வரையில், நாம் வேறொரு மதத்தில் சேர்ந்தாலும் சரி நம்முடைய மதத்தையே பெயரளவுக்கு பற்றிக்கொண்டிருந்தாலும் சரி, அது சாத்தானுக்கு ஒரு பொருட்டே அல்ல.

9மக்கள் தங்களின் இயல்பான ஆசைகளை தகாத வழிகளில் திருப்தி செய்வதற்கும்கூட சாத்தான் தந்திரமாக தூண்டுகிறான். பாலுறவு ஆசையை பொறுத்ததில் அவன் இப்படித்தான் தூண்டியிருக்கிறான். உலகத்திலுள்ள பலரும் பைபிளின் ஒழுக்க நெறியை ஓரங்கட்டி விட்டு, மணம் முடிக்காமலேயே பாலுறவு கொள்வது இன்பம் அனுபவிப்பதற்கு முறையான வழி என்றோ வயது வந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான வழி என்றோ கருதுகிறார்கள். மணமானவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அநேகர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தங்களுடைய இல்லற வாழ்க்கையில் எவ்வித நம்பிக்கை துரோகமும் நிகழாத போதிலும் மற்றொருவருடன் வாழ்க்கை நடத்துவதற்காக அநேகர் மணவிலக்கு செய்கிறார்கள் அல்லது பிரிந்து போகிறார்கள். இப்போதே வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டுதலை அளிப்பதே சாத்தானுடைய சூட்சுமமான அணுகுமுறை; ஆகவே தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும், மிக முக்கியமாக யெகோவாவோடும் அவருடைய குமாரனோடும் உள்ள உறவுக்கும் ஏற்படும் பெரும் பாதிப்புகளுக்கு அவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படி அவன் செய்கிறான்.​—1 கொரிந்தியர் 6:9, 10; கலாத்தியர் 6:7, 8.

10நம்முடைய இயல்பான ஆசைகளில் மற்றொன்று பொழுதுபோக்கு. பயனுள்ள பொழுதுபோக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் உணர்ச்சிக்கும் புத்துயிர் அளிக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்முடைய சிந்தனையை கடவுளுக்கு எதிராக திருப்பிவிட சாத்தான் புத்திசாலித்தனமாக முயலுகையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? உதாரணமாக, பாலுறவு ஒழுக்கக்கேட்டையும் வன்முறையையும் யெகோவா வெறுக்கிறார் என்பது நமக்கு தெரியும். திரைப்படங்களிலோ டிவி நிகழ்ச்சிகளிலோ அல்லது வேறெந்த கலை நிகழ்ச்சிகளிலோ இப்படிப்பட்ட காரியங்கள் காட்டப்படுகையில் நாம் கண்கொட்டாமல் தொடர்ந்து பார்க்கிறோமா? சாத்தான் அபிஸுக்குள் தள்ளப்படும் நாள் நெருங்கி வருவதால் இப்படிப்பட்ட காரியங்கள் இன்னும் படுமோசமடையும்படி அவன் பார்த்துக்கொள்வான் என்பதையும் நினைவில் வையுங்கள்; ஏனெனில், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:13; வெளிப்படுத்துதல் 20:1-3) ஆகையால் சாத்தானின் திட்டங்களுக்கு எதிராக நம்மை எப்போதுமே காத்துக்கொள்வது அவசியம்.​—ஆதியாகமம் 6:13, NW; சங்கீதம் 11:5, NW; ரோமர் 1:24-32.

11குறி சொல்லுதல், பில்லிசூனியம், மரித்தோருடன் தொடர்புகொள்ள முயலுதல் போன்ற எந்தவித ஆவியுலகத் தொடர்புக்கும் இடமளிப்பவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். (உபாகமம் 18:10-12) அதை அறிந்தவர்களாக ஆவி மத்தியஸ்தர்களிடம் அறிவுரை கேட்பதை எண்ணியும் பார்க்க மாட்டோம், பேய்த்தன வித்தைகளை செய்ய அவர்களை நம் வீட்டிற்கு நிச்சயம் அழைக்கவும் மாட்டோம். ஆனால் டிவியிலோ இன்டர்நெட்டிலோ இப்படிப்பட்ட காரியங்கள் காட்டப்படுகையில் நாம் அவற்றை கவனிப்போமா? சிகிச்சைக்காக ஒருபோதும் நாம் ஒரு சூனியக்காரரிடம் செல்லாதபோதிலும் பிறந்த குழந்தையை ஏதாவதொரு விதத்தில் தீங்கிலிருந்து பாதுகாக்கும் என நினைத்து அதன் கையில் சரடு கட்டுவோமா? மற்றவர்களை வசியம் செய்வதை பைபிள் கண்டனம் செய்கிறதென அறிந்தும், ஹிப்நாட்டிஸம் செய்கிறவர்கள் நம்முடைய மனதை கட்டுப்படுத்த நாம் அனுமதிப்போமா?​—கலாத்தியர் 5:19-21.

12வேசித்தனத்தையோ வேறெந்த அசுத்தத்தையோ, (கெட்ட உள்நோக்கத்துடன்) குறிப்பிடவும் கூடாது என பைபிள் கூறுகிறது. (எபேசியர் 5:3-5) ஆனால் இந்த விஷயங்கள் இனிமையான ராகத்துடனோ மனதை மயக்கும் தாளத்துடனோ அல்லது சந்தத்துடனோ இழையோடி வந்தால் என்ன செய்வோம்? மணமாகாமலே பாலுறவு கொள்வதை, இன்பத்துக்காக போதைப்பொருட்களை பயன்படுத்துவதை, இன்னும் பல பாவ செயல்களை பெருமையாக போற்றி புகழும் பாடல்களை திரும்பத் திரும்ப பாட ஆரம்பிப்போமா? அல்லது இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றக்கூடாது என்பதை அறிந்திருந்தும் அவர்களுடைய நடை உடை பாவனைகளையும் பேச்சையும் பின்பற்றுவதன் மூலம் நம்மை அவர்களில் ஒருவராக காட்ட முயலுவோமா? தன்னுடைய வக்கிர புத்திக்கு ஏற்ப செயல்படும்படி மனிதரை தூண்டுவிப்பதற்கு சாத்தான் உபயோகிக்கிற முறைகள்தான் எத்தனை நயவஞ்சகமானவை! (2 கொரிந்தியர் 4:3, 4) அவனுடைய வஞ்சக வலையில் வீழ்ந்துவிடாதிருக்க, உலகம் போகும் போக்கில் செல்வதை நாம் தவிர்க்க வேண்டும். ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்’ யார் என்பதை அறிந்து அவர்களின் செல்வாக்குக்கு எதிராக ஊக்கமாக போராடுவது அவசியம்.​—1 பேதுரு 5:8.

ஜெயிப்பதற்கு தயாராதல்

13இயேசு மரிப்பதற்கு முன்பாக தம் அப்போஸ்தலர்களிடம், “திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என சொன்னார். (யோவான் 16:33) அவர்களும் ஜெயிக்க முடியும். சுமார் 60 வருடங்களுக்குப் பின்பு அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?” (1 யோவான் 5:5) இத்தகைய விசுவாசம், இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் அவரைப் போலவே கடவுளுடைய வார்த்தையை சார்ந்திருப்பதன் மூலமும் காண்பிக்கப்படுகிறது. வேறு எதுவும் தேவைப்படுகிறது? இயேசு கிறிஸ்துவை தலைவராக கொண்ட சபையுடன் நாம் நெருங்கியிருப்பதும் தேவைப்படுகிறது. நாம் தவறு செய்கையில் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி இயேசுவின் பலியின் அடிப்படையில் கடவுளிடம் மன்னிப்பை நாட வேண்டும். இவ்வாறாக அபூரணராகவும் தவறு செய்கிறவர்களாகவும் இருந்தாலும் நாமும் ஜெயிப்பவர்களாக இருக்க முடியும்.​—சங்கீதம் 130:3, 4.

14அதில் வெற்றிபெற, ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தின்’ ஒரு பாகத்தையும் விட்டுவிடாமல் அதை முழுமையாக தரித்துக்கொள்வது அவசியம். தயவுசெய்து உங்கள் பைபிளில் எபேசியர் 6:13-17 வரையுள்ள வசனங்களில் அந்த ஆயுதத்தைப் பற்றிய விவரிப்பை வாசியுங்கள். பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆயுதமும் அளிக்கும் பாதுகாப்பிலிருந்து நீங்கள் எப்படி நன்மையடையலாம் என்பதை சிந்தியுங்கள்.

‘சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டுவது’

நாம் சத்தியத்தை அறிந்திருந்தாலும், தவறாமல் பைபிளை வாசிப்பதும், அதன் சத்தியத்தை தியானிப்பதும் கூட்டத்திற்கு வருவதும் நம்மை எப்படி பாதுகாக்கின்றன? (1 கொரிந்தியர் 10:12, 13; 2 கொரிந்தியர் 13:5; பிலிப்பியர் 4:8, 9)

‘நீதியென்னும் மார்க்கவசம்’

இந்த நீதியின் தராதரம் யார் வகுத்தது? (வெளிப்படுத்துதல் 15:3)

யெகோவாவின் நீதியான வழிகளை பின்பற்றத் தவறுவது ஒருவரை எப்படி ஆவிக்குரிய தீங்குக்குள்ளாக்குகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள். (உபாகமம் 7:3, 4; 1 சாமுவேல் 15:22, 23)

‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தல்’

சமாதானத்திற்காக கடவுள் செய்துள்ள ஏற்பாடுகளைப் பற்றி ஜனங்களிடம் பேசுவதற்கு நம் பாதங்களை எப்போதும் பயன்படுத்துவது நமக்கு எப்படி பாதுகாப்பானது? (சங்கீதம் 73:2, 3; ரோமர் 10:15; 1 தீமோத்தேயு 5:13)

‘விசுவாசமென்னும் [“பெரிய,” NW] கேடகம்’

நமக்கு உறுதியான விசுவாசம் இருந்தால், சந்தேகத்தையோ பயத்தையோ ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் எப்படிப் பிரதிபலிப்போம்? (2 இராஜாக்கள் 6:15-17; 2 தீமோத்தேயு 1:12)

“இரட்சணியமென்னும் தலைச்சீரா”

சொத்து சுகங்களுக்காக மட்டுக்குமீறி கவலைகொள்ளும் கண்ணியில் சிக்காமலிருக்க இரட்சிப்பின் நம்பிக்கை ஒருவருக்கு எப்படி உதவி செய்கிறது? (1 தீமோத்தேயு 6:7-10, 19)

‘ஆவியின் பட்டயம்’

நம்முடைய அல்லது பிறருடைய ஆவிக்குரிய தன்மைக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகையில் நாம் எப்பொழுதும் எதைச் சார்ந்து இருக்க வேண்டும்? (சங்கீதம் 119:98; நீதிமொழிகள் 3:5, 6; மத்தேயு 4:3, 4)

ஆவிக்குரிய போரில் வெற்றி பெற வேறெதுவும் முக்கியம்? இதை நாம் எப்போதெல்லாம் செய்ய வேண்டும்? யார் சார்பாக செய்ய வேண்டும்? (எபேசியர் 6:18, 20)

15கிறிஸ்துவின் போர்வீரர்களாக நாமும் ஆவிக்குரிய போரில் ஈடுபடுகிற பெரிய சேனையின் பாகமாக இருக்கிறோம். நாம் விழிப்புடனிருந்து கடவுளுடைய சர்வாயுதவர்க்கத்தை நன்கு முழுமையாக பயன்படுத்தினால் இந்தப் போரில் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. மாறாக, நம் சக ஊழியர்களை பலப்படுத்துகிறவர்களாக இருப்போம். சாத்தான் கடுமையாக எதிர்க்கிற அந்தப் பரலோக அரசாங்கத்தின், அதாவது கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் நற்செய்தியை எங்கும் பிரசங்கிப்பதன் மூலம் நாம் உறுதியான நடவடிக்கை எடுக்க ஆயத்தமாயும் ஆர்வமாயும் இருப்போம்.

மறுபார்வை

• இவ்வுலகின் சண்டை சச்சரவுகளில் யெகோவாவின் வணக்கத்தார் ஏன் முற்றிலும் நடுநிலைமையைக் காத்துக்கொள்கிறார்கள்?

• கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய அழிவைக் கொண்டுவர சாத்தான் உபயோகிக்கும் மறைமுக சூழ்ச்சிகளில் சில யாவை?

• கடவுள் தரும் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கம் நமது ஆவிக்குரிய போரில் நம்மை எப்படி பாதுகாக்கிறது?

[கேள்விகள்]

1. பொல்லாத ஆவிகளின் செயல்கள் குறிப்பாக நமக்கு ஏன் அதிக அக்கறைக்குரியதாய் இருக்கின்றன?

2. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆவிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியம்?

3. சாத்தான் யாரை கொடூரமாக எதிர்க்கிறான், எப்படி?

4. மனித அரசாங்கங்களின் பலத்திற்கு காரணகர்த்தா யார், அதை நாம் எப்படி அறிவோம்?

5. இன்று அரசியல் ஆட்சியாளர்கள் எதற்காக கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்?

6. சாத்தானிய ஒழுங்குமுறைக்கு ஆதரவு தரும் தந்திரமான வழியை தவிர்ப்பதற்கு ஏன் கவனமாயிருக்க வேண்டும்?

7. பொய் மதத்தை பயன்படுத்துவதில் சாத்தான் எப்படி புத்திசாலித்தனத்தை காட்டுகிறான்?

8. நாம் யெகோவாவை வணங்கி வந்தாலும் சாத்தான் எப்படி நம்மை பொய் வணக்கத்திற்குள் கவர்ந்திழுக்கலாம்?

9. சாத்தான் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்ற பாலுறவை எப்படி தந்திரமாக பயன்படுத்துகிறான்?

10. ஒழுக்கக்கேடு மற்றும் வன்முறையைப் பற்றிய நம் மனப்பான்மையை சாத்தான் எவற்றின் வாயிலாக குலைத்துப் போட முயலுகிறான்?

11. ஆவியுலகத் தொடர்பைப் பற்றிய சத்தியத்தை அறிந்திருப்பவரும்கூட ஜாக்கிரதையாக இராவிட்டால் என்ன வழிகளில் சிக்கிக்கொள்ளலாம்?

12. (அ) நாம் தவறென அறிந்திருக்கும் விஷயங்களை மனதில் அசைபோட இசை எப்படி பயன்படுத்தப்படுகிறது? (ஆ) ஒருவரின் நடை உடை பாவனையும் பேச்சும் எப்படி யெகோவா கண்டனம் செய்கிற வாழ்க்கை முறையை விரும்புவதை காட்டலாம்? (இ) சாத்தானின் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடாதிருக்க நம்முடைய பங்கில் என்ன தேவைப்படுகிறது?

13. சாத்தான் ஆளுகிற இந்த உலகத்தை, நம்முடைய அபூரணங்களின் மத்தியிலும் நம்மால் எப்படி ஜெயிக்க முடியும்?

14. எபேசியர் 6:13-17-ஐ வாசித்து, ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பாகமும் அளிக்கும் நன்மைகளை கலந்தாராய்வதற்கு இந்தப் பாராவில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும் கேள்விகளையும் பயன்படுத்துங்கள்.

15. இந்த ஆவிக்குரிய போரில் நாம் எப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கலாம்?

[பக்கம் 76-ன் படங்கள்]

அர்மகெதோன் யுத்தத்திற்கு தேசங்கள் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன