Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’

‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’

அதிகாரம் பதினொன்று

‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’

இயேசு கலிலேயாவில் 1,900 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த சொற்பொழிவில், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என கூட்டத்தாரை உந்துவித்தார். ஆனால் அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்? ராஜ்ய அதிகாரத்தைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்புதானே கிறிஸ்து பெறவிருந்தார்? ஆம், ஆனால் யெகோவா தம்முடைய பேரரசுரிமையை நிரூபிப்பதற்கும், பூமிக்கான தம் மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் மேசியானிய ராஜ்யமே வழியாக இருந்தது. இவற்றின் முக்கியத்துவத்தை உண்மையில் புரிந்துகொண்டவர்கள் ராஜ்யத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பர். முதல் நூற்றாண்டிலேயே அது அந்தளவுக்கு முக்கியமானதாக இருந்திருந்தால் இப்போது கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்பட்டிருக்கிற காலத்தில் அது எந்தளவுக்கு முக்கியமானது! ஆகவே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: நான் கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவதை என்னுடைய வாழ்க்கை முறை காட்டுகிறதா?​—மத்தேயு 6:33.

2சொல்லப்போனால், இன்று உலகம் முழுவதிலும் லட்சோபலட்சம் பேர் ராஜ்யத்தை முதலில் தேடுகிறார்கள். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் ராஜ்யத்திற்கு தங்கள் ஆதரவை காட்டுகிறார்கள். மறுபட்சத்தில் மனிதகுலத்தில் பெரும்பான்மையோர் இவ்வுலகக் காரியங்களை தேடுவதில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதிலும் சொத்துக்கள் சேர்ப்பதிலும் பணம் கொடுத்து இன்பங்களை வாங்குவதிலுமே மக்கள் குறியாக இருக்கிறார்கள். அல்லது தங்கள் வேலையில் முன்னேற கடினமாக முயலுகிறார்கள். தங்களையும் பொருள்களையும் இன்பங்களையும் பற்றிய விஷயங்களிலேயே மூழ்கியிருப்பதை அவர்களுடைய வாழ்க்கை முறை காட்டுகிறது. அவர்களுக்கு ஒருவேளை கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அவருக்கு இரண்டாவது இடத்தையே கொடுக்கிறார்கள்.​—மத்தேயு 6:31, 32.

3ஆனால், “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்” என்று இயேசு தமது சீஷர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். இவை எதுவுமே நிலையானவை அல்ல என்பதால் யெகோவாவை சேவிப்பதன் மூலம் “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று அவர் சொன்னார். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சிந்தையையும் சக்தியையும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் தங்களுடைய கண்களை ‘எளிமையாக’ (NW) வைக்கும்படி இயேசு தம் சீஷர்களை அறிவுறுத்தினார். “தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது” என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளுக்காக என்ன செய்வது? “கவலைப்படாதிருங்கள்” என்று இயேசு அறிவுரை கூறினார். பறவைகளிடமாக அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்; அவற்றிற்கு கடவுள் உணவளிக்கிறார். பூக்களிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்; அவற்றை கடவுள் உடுத்துவிக்கிறார். இவற்றில் எதையும்விட யெகோவாவின் புத்திக்கூர்மையுள்ள மனித ஊழியர்கள் அதிக விசேஷித்தவர்கள் அல்லவா? “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [தேவையானவைகளெல்லாம்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:19-34) நீங்கள் அதை நம்புவதை உங்களுடைய செயல்கள் காட்டுகின்றனவா?

ராஜ்ய சத்தியத்தை நெருக்கிப்போட அனுமதிக்காதீர்கள்

4தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய பொருளாதார தேவைகளைக் குறித்து கவலைப்படுவது சரியானதே. ஆனால், பொருளாதார காரியங்களுக்காக அளவுக்குமீறி கவலைப்பட்டால் அதன் பாதிப்புகள் நாசகரமானதாக இருக்கும். ராஜ்யத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக ஒருவர் சொல்லிக் கொண்டாலும் இருதயத்தில் மற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பாராகில் அவை ராஜ்ய சத்தியத்தை நெருக்கிப்போட்டு விடும். (மத்தேயு 13:18-22) உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் பணக்கார இளம் அதிபதி ஒருவர் இயேசுவிடம் இவ்வாறு கேட்டார்: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்”? அவர் ஒழுக்க சீலராக வாழ்ந்தார், மற்றவர்களையும் நல்ல விதத்தில் நடத்தினார்; ஆனால் தன்னுடைய பொருளுடைமைகளில் அவர் மட்டுக்குமீறி ஆசை வைத்திருந்தார். கிறிஸ்துவின் சீஷனாவதற்கு அவற்றை விட்டுக்கொடுக்க அவரால் முடியவில்லை. ஆகவே பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய வழி செய்திருக்கும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார். அச்சந்தர்ப்பத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.”​—மாற்கு 10:17-23.

5பல ஆண்டுகளுக்குப்பின், செல்வ செழிப்புமிக்க வர்த்தக மையமான எபேசுவில் அப்போது வாழ்ந்த தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கடிதம் எழுதினார். அதில், “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை. . . . உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என பவுல் அவருக்கு நினைப்பூட்டினார். ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ‘உணவையும் உடையையும்’ அளிப்பதற்காக உழைப்பது சரியானதே. ஆனால் பவுல் எச்சரித்ததாவது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” சாத்தான் சூழ்ச்சிக்காரன். முதலில் அவன் ஒருவரை சிறிய வழிகளில் கவர்ந்திழுக்கலாம். அதைத் தொடர்ந்து மிகுந்த அழுத்தத்தை கொண்டுவரலாம்; ஒருவேளை பதவி உயர்வுக்கான அல்லது கைநிறைய சம்பாத்தியம் கிடைக்கும் வேலைக்கான வாய்ப்பை முன் வைக்கலாம்; ஆனால் அது ஆவிக்குரிய காரியங்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் நேரத்தை பறித்துவிடலாம். நாம் ஜாக்கிரதையாக இராவிட்டால், இந்தப் “பண ஆசை” அதிமுக்கியமான ராஜ்ய அக்கறைகளை நெருக்கிப் போட்டுவிடும். பவுல் அதை இவ்வாறு குறிப்பிட்டார்: “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”​—1 தீமோத்தேயு 6:7-10.

6கிறிஸ்தவ சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்த உண்மையான அன்பின் காரணமாக “இவைகளை விட்டோடி,” “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு” என பவுல் அவருக்கு அறிவுறுத்தினார். (1 தீமோத்தேயு 6:11, 12) நம்மைச் சுற்றியுள்ள உலகத்தாரின் பொருளாசைமிக்க வாழ்க்கை நம்மை கவர்ந்திழுப்பதை தவிர்க்க நாம் ஊக்கமாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நம்முடைய விசுவாசத்திற்கு இசைய கடுமையாக போராடினால் யெகோவா ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை ஒருபுறமிருந்தாலும், உண்மையில் தேவையானவற்றை நாம் பெறும்படி அவர் பார்த்துக்கொள்வார். “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் [கடவுள்] சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே” என பவுல் எழுதினார். (எபிரெயர் 13:5, 6) தாவீது ராஜாவும் இவ்வாறு எழுதினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.”​—சங்கீதம் 37:25.

ஆரம்ப கால சீஷர்களின் மாதிரி

7இயேசு தம் அப்போஸ்தலர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்த பின்பு, நற்செய்தியை பிரசங்கிக்கவும் “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என அறிவிக்கவும் இஸ்ரவேலரிடத்திற்கு அவர்களை அனுப்பினார். அது எந்தளவு பூரிப்பளிக்கும் செய்தியாக இருந்தது! மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் இருந்தார். அப்போஸ்தலர்கள் கடவுளுடைய சேவைக்கு தங்களை அர்ப்பணித்திருந்ததால் அவர் தங்களை கவனித்துக்கொள்வார் என்பதில் உறுதியான நம்பிக்கையோடு இருக்கும்படி இயேசு அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆகவே, “வழிக்குத் தடியையாவது பையையாவது [“உணவுப் பையையாவது,” NW] அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போக வேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டு போகவும் வேண்டாம். எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்” என அவர் சொன்னார். (மத்தேயு 10:5-10; லூக்கா 9:1-6) அந்நியரை உபசரிப்பது இஸ்ரவேலரின் பழக்கம்; ஆகவே இவர்களுடைய தேவைகளை அந்த சக இஸ்ரவேலர் கவனித்துக் கொள்ளும்படி யெகோவா பார்த்துக்கொள்வார்.

8ஆனால் அதற்குப் பின்பு, எதிர்காலத்தில் மாறுபட்ட சூழ்நிலையில் அப்போஸ்தலர்கள் வேலை செய்யப்போவதைக் குறித்து இயேசு தம் மரணத்திற்குச் சற்று முன்பு அவர்களை எச்சரித்தார். அவர்களுடைய ஊழியத்துக்கு அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதால் இஸ்ரவேலில் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக உபசரிப்பு கிடைக்காமல் போகலாம். அதோடு சீக்கிரத்தில் அவர்கள் புறதேசத்தாரிடமும் ராஜ்யத்தின் செய்தியை பிரசங்கிப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் ‘பணப் பையையும்’ ‘உணவுப் பையையும்’ (NW) தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும், தேவையான உணவையும் உடையையும் பெறுவதற்கான தங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு முதலாவது அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தொடர்ந்து தேடுவது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.​—லூக்கா 22:35-37.

9இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்றியவர்களில் அப்போஸ்தலனாகிய பவுலும் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். பவுலின் வாழ்க்கையில் பிரசங்க வேலை மிக முக்கிய இடத்தை வகித்தது. (அப்போஸ்தலர் 20:24, 25) பிரசங்கிப்பதற்காக பவுல் ஒரு பிராந்தியத்திற்கு சென்றபோது தனது பொருளாதார தேவைகளை தானே கவனித்துக்கொண்டார்; கூடாரத் தொழிலையும் செய்தார். தன்னுடைய தேவைகளை மற்றவர்கள் பார்த்துக்கொள்ளும்படி அவர் எதிர்பார்க்கவில்லை. (அப்போஸ்தலர் 18:1-4; 1 தெசலோனிக்கேயர் 2:9) இருந்தாலும், மற்றவர்கள் உபசரிப்பினாலும் பரிசுகளினாலும் அன்பைக் காட்டியபோது அவற்றை நன்றியோடு ஏற்றுக்கொண்டார். (அப்போஸ்தலர் 16:15, 34; பிலிப்பியர் 4:15-17) பிரசங்கிப்பதற்காக கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பப் பொறுப்புகளை அசட்டை பண்ணாமல், பல்வேறு கடமைகளையும் சமநிலையுடன் கவனிக்கும்படி பவுல் அவர்களை ஊக்குவித்தார். வேலை செய்யும்படியும், குடும்பத்தை நேசிக்கும்படியும், பிறருக்குக் கொடுத்து உதவும்படியும் அவர்களுக்கு அறிவுரை கூறினார். (எபேசியர் 4:28; 2 தெசலோனிக்கேயர் 3:7-12) பொருளுடைமைகளில் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கும்படியும், அதி முக்கியமான காரியங்களை உண்மையிலேயே புரிந்திருப்பதை காட்டும் விதத்தில் வாழும்படியும் அவர்களை அறிவுறுத்தினார். இயேசுவின் போதனைகளுக்கு இணங்க கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலில் தேடுவதையே அது அர்த்தப்படுத்தியது.​—பிலிப்பியர் 1:9-11.

வாழ்க்கையில் ராஜ்யத்தை முதலிடத்தில் வையுங்கள்

10ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் நாம் எந்தளவுக்கு ஈடுபடுகிறோம்? இது ஓரளவுக்கு நமது சூழ்நிலைகளையும் நமது போற்றுதலின் அளவையும் பொறுத்தது. ‘உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லாதபோது ராஜ்யத்தை தேடுங்கள்’ என இயேசு சொல்லவில்லை என்பதை நினைவில் வையுங்கள். ராஜ்யத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவராய் அவர் தம் பிதாவின் சித்தத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “தேவனுடைய ராஜ்யத்தையே [“தொடர்ந்து,” NW] தேடுங்கள்.” (லூக்கா 12:31) நம்மில் பலர் நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது உண்மைதான்; ஆனால் நமக்கு விசுவாசம் இருந்தால் கடவுள் கொடுத்த ராஜ்ய வேலையே நம் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். அதே நேரத்தில், நம் குடும்ப உத்தரவாதங்களையும் கவனிப்போம்.​—1 தீமோத்தேயு 5:8.

11ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதில் சிலரால் மற்றவர்களைவிட அதிக நேரம் செலவிட முடிகிறது. ஆனால் பல்வகை நிலங்களைப் பற்றிய உவமையில், நல்ல நிலத்தைப் போன்ற இருதயமுள்ள அனைவரும் கனி கொடுப்பார்கள் என இயேசு சொன்னார். எந்தளவுக்கு அவர்கள் கனிகொடுப்பார்கள்? ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன. வயது, ஆரோக்கியம், குடும்பப் பொறுப்புகள் ஆகியவை சில காரணிகள். ஆனால் உள்ளப்பூர்வமான போற்றுதல் இருக்கும்போது நிறையவே சாதிக்கலாம்.​—மத்தேயு 13:23.

12ராஜ்ய ஊழியத்தில் நம் பங்கை அதிகரிப்பதற்கு உதவும் இலக்குகளை வைப்பது சிறந்தது. வைராக்கியமுள்ள இளம் கிறிஸ்தவனாகிய தீமோத்தேயுவின் மிகச் சிறந்த உதாரணத்தை இளைஞர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். (பிலிப்பியர் 2:19-22) அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தபின் முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதுதான் மிகச் சிறந்த பணியாக இருக்க முடியும்? வயதானவர்களும்கூட பயனுள்ள ஆவிக்குரிய இலக்குகளை வைக்கையில் நன்மையடையலாம்.

13மற்றவர்களால் இன்னும் நிறைய செய்ய முடியும் என சொல்லி குறைகூறாமல் தனிப்பட்ட விதத்தில் முன்னேறுவதற்கு எல்லா முயற்சியும் செய்ய நம் விசுவாசம் நம்மைத் தூண்ட வேண்டும்; அப்போதுதான் நமது சூழ்நிலையைப் பொறுத்து முழுமையாக கடவுளை சேவிக்க முடியும். (ரோமர் 14:10-12; கலாத்தியர் 6:4, 5) யோபுவின் விஷயத்தில் காட்டப்பட்டதுபோல், சொத்து சுகங்கள், வசதி வாய்ப்புகள், சொந்த நலன் இவையே நம்முடைய முக்கிய அக்கறைக்குரியவை என்றும் கடவுளை சேவிப்பது சுயநலத்திற்காகவே என்றும் சாத்தான் வாதிடுகிறான். ஆனால், நாம் உண்மையிலேயே ராஜ்யத்தை முதலாவது தேடுகையில், சாத்தான் முழுப் பொய்யன் என்பதை நிரூபிப்பதில் நாமும் ஒரு பங்கை கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையில் முதலிடம் வகிப்பது கடவுளுடைய சேவையே என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறோம். இவ்வாறாக, நாம் யெகோவாவுக்கு ஆழ்ந்த அன்பையும், அவருடைய பேரரசுரிமைக்கு பற்றுமாறா ஆதரவையும், சக மனிதரிடத்தில் அன்பையும் காட்டுவதை சொல்லிலும் செயலிலும் நிரூபிக்கிறோம்.​—யோபு 1:9-11; 2:4, 5; நீதிமொழிகள் 27:11.

14அட்டவணை போடுவது, சாதாரணமாக செய்வதைக் காட்டிலும் அதிகத்தை செய்ய உதவும். யெகோவாவும்கூட தமது நோக்கத்தை நிறைவேற்ற ‘ஒரு காலத்தைக் குறித்திருக்கிறார்.’ (யாத்திராகமம் 9:5, NW; மாற்கு 1:15, NW) முடிந்தால், ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தடவையோ அதற்கும் அதிகமாகவோ குறித்த காலங்களில் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது நல்லது. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் துணை பயனியர்களின் அணியில் சேர்ந்துகொண்டு நாளொன்றுக்கு சுமார் இரண்டு மணிநேரம் நற்செய்தியை பிரசங்கிப்பதில் செலவிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான மற்றவர்கள் ஒழுங்கான பயனியர்களாக ஒரு நாளில் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ராஜ்ய செய்தியை அறிவிக்கிறார்கள். விசேஷித்த பயனியர்களும் மிஷனரிகளுமோ அதைவிட அதிக நேரத்தை ராஜ்ய சேவையில் செலவழிக்கிறார்கள். எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல், செவிசாய்க்கும் அனைவரிடமும் ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்க நாம் வாய்ப்புகளை தேடலாம். (யோவான் 4:7-15) சூழ்நிலைகளைப் பொறுத்து அந்த வேலையில் முழுமையாக பங்கெடுப்பதே நம்முடைய ஆவலாக இருக்க வேண்டும்; ஏனெனில், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என இயேசு முன்னறிவித்தார்.​—மத்தேயு 24:14; எபேசியர் 5:15-17.

15யெகோவாவின் சாட்சிகள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும்சரி, பூமியின் மூலை முடுக்கெல்லாம் ஒற்றுமையுடன் இந்த அரும்பெரும் சேவையில் ஈடுபடுகிறார்கள். பின்வரும் ஆலோசனையை அவர்கள் தங்களுக்கு பொருத்துகிறார்கள்: “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”​—1 கொரிந்தியர் 15:58.

மறுபார்வை

• ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’ என்று இயேசு சொன்னபோது எதை இரண்டாவது இடத்தில் வைக்கும்படி அவர் குறிப்பிட்டார்?

• நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் தேவையானவற்றை கவனிப்பதைக் குறித்ததில் நாம் என்ன நோக்குநிலையுடன் இருக்க வேண்டும்? கடவுள் நமக்கு என்ன உதவியை அருளுவார்?

• ராஜ்ய சேவையின் எந்தெந்த அம்சங்களில் நாம் பங்குகொள்ளலாம்?

[கேள்விகள்]

1. (அ) ராஜ்யத்தை முதலாவது தேடும்படி கூட்டத்தாரை இயேசு ஏன் உந்துவித்தார்? (ஆ) என்ன கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

2. பொதுவாக ஜனங்கள் என்ன காரியங்களை நாடித் தேடுகிறார்கள்?

3. (அ) என்ன வகையான பொக்கிஷங்களைத் தேடும்படி இயேசு தமது சீஷர்களை உற்சாகப்படுத்தினார், ஏன்? (ஆ) பொருளாதார காரியங்களுக்காக ஏன் அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை?

4. ஒருவர் பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களில் மிதமிஞ்சி கவனம் செலுத்தினால் என்ன ஏற்படலாம்?

5. (அ) என்ன காரியங்களில் போதுமென்ற மனதுடன் இருக்கும்படி தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார், ஏன்? (ஆ) ‘பண ஆசையை’ அழிவுக்குரிய கண்ணியாக சாத்தான் எப்படி பயன்படுத்துகிறான்?

6. (அ) பொருளாசையில் சிக்கிக்கொள்ளாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) இன்றைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டாலும் என்ன நம்பிக்கையோடு நாம் இருக்கலாம்?

7. பிரசங்க வேலை சம்பந்தமாக என்ன அறிவுரைகளை இயேசு தம் சீஷர்களுக்கு வழங்கினார், அவை ஏன் பொருத்தமாக இருந்தன?

8. (அ) தமது மரணத்திற்கு சற்று முன்பு இயேசு ஏன் பிரசங்க வேலையைக் குறித்து புதிய அறிவுரைகளை கொடுத்தார்? (ஆ) இருந்தாலும் இயேசுவின் சீஷர்களுடைய வாழ்க்கையில் எது முதலிடம் வகிக்க வேண்டியிருந்தது?

9. பவுல் தன்னுடைய தேவைகளையும் கவனித்துக்கொண்டு அதே சமயத்தில் ராஜ்யத்தையும் எவ்வாறு முதலிடத்தில் வைத்தார், இந்த விஷயத்தின் பேரில் அவர் என்ன ஆலோசனையைக் கொடுத்தார்?

10. ‘ராஜ்யத்தை முதலில் தேடுவது’ எதைக் குறிக்கிறது?

11. (அ) ராஜ்ய செய்தியை எல்லாராலும் ஒரே அளவு பிரசங்கிக்க முடியாது என்பதை இயேசு எவ்வாறு விளக்கினார்? (ஆ) ஒருவரால் எந்தளவுக்கு செய்ய முடியும் என்பதில் உட்பட்டுள்ள காரணிகள் என்ன?

12. என்ன பயனுள்ள ஆவிக்குரிய இலக்கை பற்றி சிந்திக்கும்படி முக்கியமாக இளைஞர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்?

13. (அ) ராஜ்ய சேவையில் நம்மால் எந்தளவுக்கு செய்ய முடியும் என்பதை யார் தீர்மானிக்கிறார்? (ஆ) ராஜ்யத்தை உண்மையில் முதலாவது தேடுகிறோமென்றால் நாம் எதை நிரூபிக்கிறோம்?

14. (அ) வெளி ஊழியத்திற்காக அட்டவணை போடுவது ஏன் பயனுள்ளது? (ஆ) சாட்சிகள் பலரும் வெளி ஊழியத்தில் எந்தளவுக்கு ஈடுபடுகிறார்கள்?

15. நம்முடைய ஊழியம் சம்பந்தமாக, 1 கொரிந்தியர் 15:58-⁠ல் உள்ள ஆலோசனை ஏன் காலத்திற்கு ஏற்றது என நினைக்கிறீர்கள்?

[பக்கம் 107-ன் படம்]

முடிவு வருவதற்கு முன்பாக இன்று யெகோவாவின் சாட்சிகள் எல்லா நாடுகளிலும் நற்செய்தியை பிரசங்கிக்கிறார்கள்