Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது

கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

மேசியானிய அரசாங்கத்தின் பிறப்புக்காக கடவுளுடைய மக்கள் தயார்படுத்தப்பட்ட விதம்

1, 2. உலக சரித்திரத்திலேயே மிக முக்கியமான சம்பவம் எது, அது மனிதர்களின் பார்வைக்கு மறைவாக நடந்ததில் ஏன் ஆச்சரியம் இல்லை?

 சரித்திரத்தில் நடந்த பல சம்பவங்கள் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படியொரு சம்பவத்தை நேரில் பார்க்க முடிந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிறைய பேர் அப்படி யோசித்திருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அந்தச் சமயத்தில் உயிரோடு இருந்திருந்தால்கூட அந்தச் சம்பவம் நடப்பதற்குக் காரணமாக இருந்த விஷயங்களை உங்களால் நேரில் பார்க்க முடிந்திருக்குமா? முடிந்திருக்காது. உதாரணத்துக்கு, பெரிய பெரிய ஆட்சிகள் கவிழ்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் பொது மக்களின் பார்வைக்கு மறைவாகத்தான் நடந்திருக்கின்றன. ஒரு விதத்தில், சரித்திரத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் நான்கு சுவருக்குள் நடந்திருக்கின்றன. அரசவைகளிலும், ரகசிய ஆலோசனை மன்றங்களிலும், அரசாங்க அலுவலகங்களிலும்தான் நடந்திருக்கின்றன. ஆனாலும், அப்படிப்பட்ட சம்பவங்கள் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

2 உலகச் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான ஒரு சம்பவத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? அது லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவமும் மக்களின் பார்வைக்கு மறைவாகத்தான் நடந்திருக்கிறது. அதுதான், கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்பட்ட சம்பவம். சாத்தானுடைய உலகத்துக்குச் சீக்கிரத்தில் முடிவைக் கொண்டுவரப்போகிற இந்த மேசியானிய அரசாங்கத்தைப் பற்றி ரொம்பக் காலத்துக்கு முன்பே வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. (தானியேல் 2:34, 35, 44, 45-ஐ வாசியுங்கள்.) இந்த முக்கியமான சம்பவத்தை மக்கள் பார்க்காததால், யெகோவா அதை மக்களிடமிருந்து மறைத்துவிட்டாரா? அல்லது, இந்தச் சம்பவத்துக்காக தன்னுடைய மக்களை முன்னதாகவே தயார்படுத்தினாரா? இதைப் பற்றிப் பார்க்கலாம்.

‘என்னுடைய தூதுவர் . . . எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார்’

3-5. (அ) மல்கியா 3:1-ல் சொல்லப்பட்ட ‘ஒப்பந்தத்தின் தூதுவர்’ யார்? (ஆ) ‘ஒப்பந்தத்தின் தூதுவர்’ ஆலயத்துக்கு வருவதற்கு முன் என்ன நடக்கும்?

3 பூர்வ காலத்திலிருந்தே, மேசியானிய அரசாங்கத்தின் பிறப்புக்காக யெகோவா தன் மக்களைத் தயார்படுத்தினார். உதாரணத்துக்கு, மல்கியா 3:1-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள்: “இதோ, நான் என்னுடைய தூதுவரை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார். நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார். நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்கிற ஒப்பந்தத்தின் தூதுவரும் வருவார்.”

4 நம் நாளில், ‘உண்மையான எஜமானாகிய’ யெகோவா, தன் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் சேவை செய்துகொண்டிருந்தவர்களைச் சோதனையிட எப்போது வந்தார்? ‘ஒப்பந்தத்தின் தூதுவரோடு’ அவர் வருவார் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. அந்தத் தூதுவர் யார்? மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்துதான்! (லூக். 1:68-73) புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜாவான அவர் பூமியிலுள்ள கடவுளுடைய மக்களைச் சோதனையிடுவார், புடமிடுவார்.—1 பே. 4:17.

5 ஆனால், மல்கியா 3:1-ன் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ள ‘தூதுவர்’ யார்? மேசியானிய ராஜாவின் பிரசன்னத்துக்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே இந்தத் தூதுவர் வருவார் என்று அந்த வசனம் சொன்னது. 1914-க்கும் பல வருஷங்களுக்கு முன்பே, மேசியானிய ராஜாவுக்காக யாராவது ‘வழியைத் தயார்படுத்தினார்களா’?

6. முன்னறிவிக்கப்பட்ட ‘தூதுவராக’ இருந்தவர்கள் யார்?

6 இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை, யெகோவாவின் நவீன கால மக்களுடைய சுவாரஸ்யமான சரித்திரத்திலிருந்து தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நமக்கு உதவும். அவர்களுடைய சரித்திரத்தின்படி, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஏராளமான போலிக் கிறிஸ்தவர்களுக்கு நடுவே ஒரு சிறிய தொகுதியினர் உண்மைக் கிறிஸ்தவர்களாக வளர ஆரம்பித்தார்கள். அவர்கள் பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களைத் தலைமைதாங்கி நடத்திய சார்ல்ஸ் டி. ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும்தான் முன்னறிவிக்கப்பட்ட ‘தூதுவராக’ இருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய மக்களுக்கு ஆன்மீக வழிநடத்துதலைத் தந்து, எதிர்கால சம்பவங்களுக்காகத் தயார்படுத்தினார்கள். அப்படி அவர்களைத் தயார்படுத்திய நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம்.

பைபிள் சத்தியத்தின்படி கடவுளை வணங்குதல்

7, 8. (அ) ஆத்துமா அழியாது என்ற போதனை பொய் என்று 1800-களில் அம்பலப்படுத்தியவர்கள் யார்? (ஆ) சி. டி. ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் வேறு என்ன பொய்ப் போதனைகளை அம்பலப்படுத்தினார்கள்?

7 பைபிள் மாணாக்கர்கள் பைபிளைப் படிக்கும்போது வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள். பிறகு தெளிவான பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்து அதைத் தொகுத்து வெளியிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டலம் ஆன்மீக இருளில் மூழ்கியிருந்தது. அதன் பெரும்பாலான போதனைகள் மற்ற மதப் போதனைகளின் அடிப்படையில் இருந்தன. அதற்கு ஒரு முக்கிய உதாரணம், ஆத்துமா அழியாது என்ற போதனை. 1800-களில் பைபிளை ஆழமாகப் படித்த சிலர் அந்தப் போதனையை அலசி ஆராய்ந்து, அது பைபிள் போதனை அல்ல என்பதைக் கண்டுபிடித்தார்கள். சாத்தான் பரப்பிய அந்தப் பொய்ப் போதனையை ஹென்றி க்ரூ, ஜார்ஜ் ஸ்டெட்சன், ஜார்ஜ் ஸ்டார்ஸ் ஆகியவர்கள் தைரியமாக அம்பலப்படுத்தினார்கள். அது சம்பந்தமாகக் கட்டுரைகளை எழுதினார்கள், பேச்சுகளைக் கொடுத்தார்கள். a அவை, பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள சி. டி. ரஸலுக்கும் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உதவியாக இருந்தன.

8 ஆத்துமா அழியாது என்ற போதனையோடு சம்பந்தப்பட்ட மற்ற போதனைகளும் குழப்பமான பொய்ப் போதனைகள் என்பதை அந்த பைபிள் மாணாக்கர்கள் கண்டுபிடித்தார்கள். உதாரணத்துக்கு, நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போகிறார்கள், கெட்டவர்களின் ஆத்துமாக்களைக் கடவுள் நரகத்தில் என்றென்றும் வதைக்கிறார் போன்ற போதனைகள் பொய் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அதையெல்லாம் ஏராளமான கட்டுரைகளில், புத்தகங்களில், சிற்றேடுகளில், துண்டுப்பிரதிகளில், செய்தித்தாள்களில் தைரியமாக அம்பலப்படுத்தினார்கள்.

9. திரித்துவப் போதனை பொய் என்பதை காவற்கோபுரம் எப்படி அம்பலப்படுத்தியது?

9 அதேபோல், நிறைய பேர் பயபக்தியோடு நம்பிவந்த திரித்துவப் போதனையும் பொய் என்பதை பைபிள் மாணாக்கர்கள் அம்பலப்படுத்தினார்கள். 1887-ல் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “யெகோவாவும் நம் எஜமானாகிய இயேசுவும் தனித்தனி நபர்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் இரண்டு பேருக்கும் இருக்கிற உறவுமுறை பற்றியும் வசனங்கள் மிகத் தெளிவாகச் சொல்கின்றன.” அதோடு, “திரித்துவக் கடவுளைப் பற்றிய போதனை, அதாவது மூன்று கடவுள்கள் சேர்ந்து ஒரே கடவுளாக இருப்பதாகவும் ஒரு கடவுளுக்குள் மூன்று கடவுள்கள் இருப்பதாகவும் கற்பிக்கப்படும் போதனை, பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்தளவுக்குப் பிரபலமாகியிருப்பது” மிக ஆச்சரியமான விஷயம் என்று அந்தக் கட்டுரை சொன்னது. அதேசமயத்தில், “சர்ச்சுகள் எந்தளவுக்கு ஆன்மீகத் தூக்கத்தில் இருந்திருந்தால், எதிரி பரப்பிய பொய் இந்தளவுக்கு பிரபலமாகியிருக்கும்” என்றும் குறிப்பிட்டது.

10. 1914, ஒரு முக்கிய வருஷமாக இருக்குமென்று காவற்கோபுரம் எப்படிச் சுட்டிக்காட்டியது?

10 சீயோனின் காவற்கோபுரமும் கிறிஸ்துவின் பிரசன்னத்துடைய அறிவிப்பும் என்பதுதான் அந்தப் பத்திரிகையின் முழுப் பெயர். அந்தப் பெயர் காட்டுகிறபடி, கிறிஸ்துவின் பிரசன்னத்தோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களை அந்தப் பத்திரிகை அலசி ஆராய்ந்தது. அந்தப் பத்திரிகைக்காக கட்டுரைகளை எழுதிய பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், தானியேல் தீர்க்கதரிசனத்திலுள்ள ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொண்டார்கள். அதாவது, அந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள “ஏழு காலங்கள்,” மேசியானிய அரசாங்கம் நிறுவப்படும் காலத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள். அந்த ஏழு காலங்கள் 1914-ல் முடிவடையும் என்பதை 1870-களிலேயே அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். (தானி. 4:25; லூக். 21:24) ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்த சகோதரர்கள், அந்த வருஷத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும், தங்களுக்குத் தெரிந்ததை எல்லா இடங்களிலும் அறிவித்தார்கள். அதன் பலனை இன்றுவரை நம்மால் உணர முடிகிறது.

11, 12. (அ) பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்ததற்கான பெருமை யாருக்குச் சேரும் என்று ரஸல் சொன்னார்? (ஆ) 1914-க்கும் முன்பே பல வருஷங்களாக, ரஸலும் அவருடைய நண்பர்களும் செய்த வேலை எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்தது?

11 ரஸலும் சரி, அவருடைய நண்பர்களும் சரி, அந்த முக்கியமான பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்ததற்கான பெருமையைத் தங்களுக்குத் தேடிக்கொள்ளவில்லை. ரஸல், தனக்கு முன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்றவர்களுக்கே அந்தப் பெருமை சேரும் என்று சொன்னார்; எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவுக்குத்தான் எல்லா பெருமையும் சேரும் என்று சொன்னார். ஏனென்றால், தன்னுடைய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அவர்தான் சரியான நேரத்தில் கற்றுக்கொடுக்கிறார். பொய்களிலிருந்து உண்மையைப் பிரித்தெடுக்க ரஸலும் அவருடைய நண்பர்களும் செய்த முயற்சியை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. காலம் செல்லச் செல்ல, அவர்கள் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

சகோதரர் ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் பைபிள் சத்தியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்கள்

12 1914-க்கும் முன்பே பல வருஷங்களாக, பைபிள் சத்தியங்களை அறிவிப்பதில் அந்த உண்மையுள்ள சகோதரர்கள் எடுத்த முயற்சி வியக்க வைக்கிறது! காவற்கோபுரமும் கிறிஸ்துவின் பிரசன்னத்துடைய அறிவிப்பும் என்ற பத்திரிகையின் நவம்பர் 1, 1917 இதழ் இப்படிச் சொன்னது: “எரிநரகம் போன்ற பொய்ப் போதனைகளால், பயத்தின் பிடியில் சிக்கியிருந்த லட்சக்கணக்கானோர் இப்போது விடுபட்டிருக்கிறார்கள். . . . நாற்பது வருஷங்களுக்கு முன்பு அலைபோல் எழும்பிய சத்தியம், இன்றும் உயர்ந்துகொண்டே வருகிறது, இந்த முழு பூமியையும் நிரப்பும்வரை அது உயர்ந்துகொண்டே இருக்கும். அந்தச் சத்தியம் பூமி முழுவதும் பரவுவதைத் தடுப்பதற்கு எதிரிகள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீண்தான். சொல்லப்போனால், சீறிப் பாய்ந்துவரும் பெருங்கடலின் அலைகளைச் சாதாரண துடைப்பத்தால் கடலுக்குள் திரும்பத் தள்ளிவிட முயற்சி செய்வது போலதான் அது இருக்கும்.”

13, 14. (அ) ‘தூதுவராக’ இருந்தவர்கள், மேசியானிய ராஜாவுக்காக எப்படி வழியைத் தயார்படுத்தினார்கள்? (ஆ) நூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த நம் சகோதரர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 இதை யோசித்துப் பாருங்கள்: இயேசுவுக்கும் அவருடைய தகப்பனான யெகோவாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாதவர்களால் கிறிஸ்துவின் பிரசன்னத்துக்குத் தயாராக இருந்திருக்க முடியுமா? சாவாமை என்பது கிறிஸ்துவைப் பின்பற்றுகிற சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நம்பாமல், அது எல்லாருக்கும் தானாகக் கிடைத்துவிடும் என்று நம்பியவர்களால் அதற்குத் தயாராக இருந்திருக்க முடியுமா? மக்களைக் கடவுள் எரிநரகத்தில் என்றென்றும் வதைக்கிறார் என்று நினைத்தவர்களால் அதற்குத் தயாராக இருந்திருக்க முடியுமா? நிச்சயம் முடிந்திருக்காது. அப்படியென்றால், ‘தூதுவராக’ இருந்தவர்கள் மேசியானிய ராஜாவுக்காக வழியைத் தயார்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

14 இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? நூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் சகோதரர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாமும் கடவுளுடைய வார்த்தையை நன்றாக ஆராய்ந்து படிக்க வேண்டும். (யோவா. 17:3) பொருளாசை பிடித்த இந்த உலக மக்கள் ஆன்மீக விதத்தில் வாடி வதங்கிக்கொண்டே போகிறார்கள். ஆனால், நமக்கு ஆன்மீக உணவு ஏராளமாகக் கிடைக்கிறது. அந்த உணவின்மீது நமக்கு இருக்கும் பசி அதிகமாகிக்கொண்டே போக வேண்டும்!1 தீமோத்தேயு 4:15-ஐ வாசியுங்கள்.

“என் மக்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்”

15. பைபிள் மாணாக்கர்கள் எதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

15 சர்ச்சுகளைவிட்டு விலகி இருப்பது அவசியம் என்பதை பைபிள் மாணாக்கர்கள் கற்றுக்கொடுத்தார்கள். 1879-ல் வெளிவந்த ஒரு காவற்கோபுரம் “பாபிலோனின் சர்ச்” பற்றிக் குறிப்பிட்டது. அது ரோமன் கத்தோலிக்க சர்ச்சை மட்டும்தான் குறிப்பிட்டதா? ரோமன் கத்தோலிக்க சர்ச்சைக் குறிப்பதற்காகத்தான் பாபிலோன் என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்தியிருக்கிறது என்று புராட்டஸ்டன்ட் பிரிவுகள் பல நூற்றாண்டுகளாக நம்பிவந்தன. ஆனால், நவீன கால “பாபிலோன்,” கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த எல்லா சர்ச்சுகளையுமே குறிக்கிறது என்று பைபிள் மாணாக்கர்கள் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள். ஏனென்றால், எல்லா சர்ச்சுகளுமே நாம் மேலே கவனித்த பொய்ப் போதனைகளைக் கற்றுக்கொடுத்தன. b காலம் செல்லச் செல்ல, ‘பாபிலோனின் சர்ச்சுகளில்’ இருந்த உண்மையுள்ள ஆட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் பிரசுரங்கள் நேரடியாகவே சொல்ல ஆரம்பித்தன.

16, 17. (அ) பாபிலோனைவிட்டு விலக வேண்டுமென்று ஆயிரமாண்டு உதயம் புத்தகத்தின் 3-ஆம் தொகுதியும் காவற்கோபுரமும் எப்படி உற்சாகப்படுத்தின? (ஆ) ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட இதுபோன்ற எச்சரிப்புகள் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

16 உதாரணத்துக்கு, நவீன கால பாபிலோனைக் கடவுள் ஒதுக்கித்தள்ளிவிட்டதாக 1891-ல் ஆயிரமாண்டு உதயம் என்ற ஆங்கிலப் புத்தகத்தின் 3-ஆம் தொகுதி சொன்னது. அதோடு, “அவளுடைய போதனைகளும் பழக்கவழக்கங்களும் பொய் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் அவளைவிட்டு விலக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்றும் சொன்னது.

17 சிலர் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் உறுப்பினர் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களை நீக்காமலேயே இருந்தார்கள். ஆனாலும், “நான் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறேன், சர்ச் கூட்டங்களுக்கும் போவதே இல்லை” என்று சொல்லி தங்களை நியாயப்படுத்தினார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக ஜனவரி 1900-ல் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பாபிலோனைவிட்டு முழுமையாக வெளியே வராதது சரியாக இருக்குமா? இதுதான் கடவுள் எதிர்பார்க்கிற கீழ்ப்படிதலாக இருக்குமா? . . . இது அவருக்குப் பிடிக்குமா? அவர் ஏற்றுக்கொள்வாரா? கண்டிப்பாக இல்லை! அந்த நபர் [சர்ச் உறுப்பினர்] அவருடைய சர்ச்சில் சேர்ந்தபோது அதனோடு வெளிப்படையாக ஒரு ஒப்பந்தம் செய்திருப்பார்; அதனால், இனி அதன் உறுப்பினராக இருக்கப்போவதில்லை என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கும்வரை . . . அந்த ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் வாழ வேண்டும்.” காலம் செல்லச் செல்ல இந்த அறிவுரை இன்னும் அதிகமாக வலியுறுத்தப்பட்டது. c யெகோவாவின் ஊழியர்கள் பொய் மதத்தோடு இருக்கும் எல்லா தொடர்பையும் அறுத்துக்கொள்ள வேண்டும்.

18. மக்கள் மகா பாபிலோனைவிட்டு வெளியே வருவது ஏன் அவசியமாக இருந்தது?

18 மகா பாபிலோனைவிட்டு வெளியே வரும்படி இதுபோல் அடிக்கடி அறிவுரை கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், கிறிஸ்து ராஜாவானபோது இந்தப் பூமியில் பரலோக நம்பிக்கையுள்ள ஊழியர்களின் ஒரு தொகுதி அவருக்காகத் தயாராக இருந்திருக்குமா? கண்டிப்பாக இருந்திருக்காது. ஏனென்றால், பாபிலோனைவிட்டு முழுமையாக வெளியே வந்த கிறிஸ்தவர்களால்தான் யெகோவாவை “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” வணங்க முடியும். (யோவா. 4:24) இன்று நாமும் பொய் மதத்தைவிட்டு முழுமையாக வெளியே வரத் தீர்மானமாக இருக்கிறோமா? “என் மக்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்ற கட்டளைக்கு நாம் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும்.வெளிப்படுத்துதல் 18:4-ஐ வாசியுங்கள்.

வணக்கத்துக்காக ஒன்றுகூடிவருதல்

19, 20. வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும்படி காவற்கோபுரம் எப்படிக் கடவுளுடைய மக்களை உற்சாகப்படுத்தியது?

19 வணக்கத்துக்காகக் கூடிவர முடிந்த இடங்களில் முடிந்தவரை எல்லாரும் ஒன்றுகூடி வர வேண்டுமென்று பைபிள் மாணாக்கர்கள் கற்றுக்கொடுத்தார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் பொய் மதத்தைவிட்டு வெளியே வந்தால் மட்டும் போதாது, சரியான வழியில் கடவுளை வணங்குவதும் அவசியம். வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும்படி ஆரம்பத்திலிருந்தே காவற்கோபுரம் வாசகர்களை உற்சாகப்படுத்தி வந்திருக்கிறது. உதாரணத்துக்கு, பல இடங்களில் பேச்சு கொடுத்ததைப் பற்றி சகோதரர் ரஸல் சொன்னபோது, அந்தக் கூட்டங்கள் எந்தளவு உற்சாகம் தந்தன என்று ஜூலை 1880, காவற்கோபுரத்தில் விளக்கினார். அதன் பிறகு, ஒன்றுகூடி வரும் விஷயத்தில் செய்யப்படும் முன்னேற்றத்தை எழுதி அனுப்பும்படி வாசகர்களை உற்சாகப்படுத்தினார். அவற்றில் சில, காவற்கோபுரத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அதற்கான காரணத்தையும் இப்படிக் குறிப்பிட்டார்: “எஜமான் உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்று . . . நாங்கள் எல்லாரும் தெரிந்துகொள்ள முடியும்; உங்களைப் போலவே அருமையான விசுவாசத்தைக் கொண்ட மற்றவர்களோடு தவறாமல் ஒன்றுகூடி வருகிறீர்களா என்றும் தெரிந்துகொள்ள முடியும்.”

1909-ல், டென்மார்க்கிலுள்ள கோபன் ஹாகனில் பைபிள் மாணாக்கர்களின் ஒரு தொகுதி

20 1882-ல், “ஒன்றுகூடிவருதல்” என்ற தலைப்பில் காவற்கோபுரத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. கிறிஸ்தவர்கள் “ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும்” கூட்டங்களை நடத்த வேண்டுமென்று அது சொன்னது. அதோடு, “உங்கள் மத்தியில் பெரிய அறிவாளிகளோ திறமைசாலிகளோ இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய பைபிளையும், பேப்பரையும், பென்சிலையும் கொண்டுவர வேண்டும். பைபிள் வார்த்தைகளின் விளக்கப் பட்டியலை (கன்கார்டன்ஸ்), . . . முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தியின் உதவிக்காக ஜெபம் செய்யுங்கள். பிறகு, வசனங்களை வாசியுங்கள், அவற்றைப் பற்றி யோசியுங்கள், ஒரு வசனத்தை இன்னொரு வசனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது, கண்டிப்பாக சத்தியத்தைப் புரிந்துகொள்வீர்கள்” என்றும் சொன்னது.

21. ஒன்றுகூடி வருவதிலும், சகோதரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்துவதிலும் அலிகென்னியில் இருந்த சகோதரர்கள் என்ன முன்மாதிரி வைத்தார்கள்?

21 பைபிள் மாணாக்கர்களின் தலைமை அலுவலகம் அமெரிக்காவிலுள்ள பென்ஸில்வேனியாவில் அலிகென்னி என்ற இடத்தில் இருந்தது. எபிரெயர் 10:24, 25-ல் (வாசியுங்கள்) கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒன்றுகூடி வருவதில் அங்குள்ள பைபிள் மாணாக்கர்கள் நல்ல முன்மாதிரி வைத்தார்கள். சார்ல்ஸ் கேப்பன் என்ற வயதான சகோதரர் அப்போது ஒரு சிறுவனாக அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அதைப் பற்றி அவர் இப்படி எழுதினார்: “நம்முடைய அமைப்பின் மாநாட்டு மன்றத்தின் சுவரில், ‘ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்; நீங்கள் எல்லாரும் சகோதரர்கள்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. அந்த வசனத்தை என்னால் மறக்கவே முடியாது, அது அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. யெகோவாவின் மக்கள் மத்தியில் குருமார்கள்-பாமர மக்கள் என்ற வேறுபாடு கிடையாது.” (மத். 23:8) கூட்டங்களில் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைத்ததாகவும் சகோதரர் கேப்பன் குறிப்பிட்டார். அதோடு, சகோதரர் ரஸல் அதிக முயற்சி எடுத்து, சபையிலுள்ள ஒவ்வொருவரையும் சந்தித்து உற்சாகப்படுத்தியதைப் பற்றியும் குறிப்பிட்டார்.

22. கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டபோது விசுவாசமுள்ளவர்கள் என்ன செய்தார்கள், அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

22 விசுவாசமுள்ளவர்கள் அலிகென்னியில் இருந்த சகோதரர்களின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைக் கடைப்பிடித்தார்கள். ஒஹாயோ, மிச்சிகன் போன்ற இடங்களிலும், அதன் பிறகு வட அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் சபைகள் உருவாயின. இதை யோசித்துப் பாருங்கள்: வணக்கத்துக்காக ஒன்றுகூடி வர வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய, விசுவாசமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்றால் கிறிஸ்துவின் பிரசன்னத்துக்குத் தயாராக இருந்திருப்பார்களா? நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டார்கள்! இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். சக விசுவாசிகளோடு சேர்ந்து கடவுளை வணங்கவும் ஒருவரை ஒருவர் பலப்படுத்தவும் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பாகப் பிரசங்கித்தல்

23. பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் சத்தியத்தைப் பற்றிப் பிரசங்கிக்க வேண்டுமென்று காவற்கோபுரம் எப்படி நேரடியாகச் சொன்னது?

23 பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் சத்தியத்தைப் பற்றிப் பிரசங்கிக்க வேண்டுமென்று பைபிள் மாணாக்கர்கள் கற்றுக்கொடுத்தார்கள். 1885-ல் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பரலோக நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருமே பிரசங்கிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் (ஏசா. 61:1), ஊழியம் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.” 1888-ல் ஒரு காவற்கோபுரம் இந்த அறிவுரையைத் தந்தது: “நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை ரொம்பத் தெளிவாக இருக்கிறது . . . அதை நாம் அலட்சியம் செய்துவிட்டு, சாக்குப்போக்கு சொன்னால், கண்டிப்பாக சோம்பேறித்தனமான ஊழியர்களாக இருப்போம். நாம் பெற்றுக்கொண்ட பெரிய பாக்கியத்துக்குத் தகுதி இல்லாதவர்களாக ஆகிவிடுவோம்.”

24, 25. (அ) சகோதரர் ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும், பிரசங்கிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தியதோடு வேறு எதையும் செய்தார்கள்? (ஆ) கார் வசதி அவ்வளவாக இல்லாத காலத்தில் செய்த ஊழியத்தைப் பற்றி ஒரு பயனியர் என்ன சொன்னார்?

24 சகோதரர் ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும், பிரசங்கிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்கள். அதோடு, துண்டுப்பிரதிகளையும் வெளியிட ஆரம்பித்தார்கள். அவை ஆரம்பத்தில் பைபிள் மாணாக்கர்களின் துண்டுப்பிரதிகள் என்று அழைக்கப்பட்டன, பிற்பாடு பண்டைய இறையியல் காலாண்டு என்று அழைக்கப்பட்டன. காவற்கோபுரத்தின் வாசகர்கள் அந்தத் துண்டுப்பிரதிகளை விலையில்லாமல் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

‘என் வாழ்க்கையில் நான் ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்கிறேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்

25 சிலர் முழுநேர ஊழியம் செய்தார்கள்; இன்று அப்படி ஊழியம் செய்கிறவர்கள் பயனியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். முன்பு குறிப்பிட்ட சார்ல்ஸ் கேப்பன் என்ற சகோதரரும் ஒரு பயனியராக இருந்தார். பிற்பாடு அவர் இப்படிச் சொன்னார்: “அமெரிக்க அரசாங்க நில இயல் துறை வெளியிட்ட வரைபடங்களைப் பயன்படுத்தி, பென்ஸில்வேனியாவிலுள்ள பகுதிகளில் பிரசங்கித்தேன். அந்த வரைபடங்கள் எல்லா சாலைகளையும் காட்டின. அதனால், எல்லா பகுதிகளுக்கும் நடந்தே போய் ஊழியம் செய்ய முடிந்தது. சிலசமயம், மூன்று நாட்களுக்கு கிராம பகுதிகளில் ஊழியம் செய்தேன். வேதாகமத்தில் படிப்புகள் என்ற புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பியவர்களிடம் ஆர்டர்களை வாங்கினேன். பிறகு, அந்தப் புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுக்க ஒரு குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்தேன். இப்படி ஊழியம் செய்தபோது நிறைய தடவை விவசாயிகளோடு ராத்திரியில் தங்கினேன். அந்தக் காலத்தில் அவ்வளவாக காரெல்லாம் கிடையாது.”

ஒரு குதிரை வண்டியின் பக்கத்தில் நிற்கும் பயனியர். அந்த வண்டியின் ஒரு பக்கத்தில் “காலங்களின் வரைபடம்” காணப்படுகிறது

26. (அ) கிறிஸ்துவின் பிரசன்னத்துக்குத் தயாராக இருக்க கடவுளுடைய மக்கள் ஏன் பிரசங்க வேலை செய்ய வேண்டியிருந்தது? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

26 இப்படி ஊழியம் செய்வதற்கு தைரியமும் பக்திவைராக்கியமும் ரொம்பவே தேவைப்பட்டன. பிரசங்க வேலை எந்தளவு முக்கியம் என்று உண்மைக் கிறிஸ்தவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்துக்குத் தயாராக இருந்திருப்பார்களா? நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டார்கள்! அந்த வேலைதான் கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் மிக முக்கியமான அம்சம்! (மத். 24:14) கடவுளுடைய மக்கள், உயிர்காக்கும் அந்த வேலைக்கு தங்கள் வாழ்க்கையில் முதலிடம் தர தயாராக இருக்க வேண்டியிருந்தது. இன்று நாமும் நம்மை இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என் வாழ்க்கையில் நான் ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்கிறேனா? ஊழியத்தில் முழுமையாக ஈடுபடுவதற்காக நான் தியாகங்கள் செய்கிறேனா?’

கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது!

27, 28. அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் எதைப் பார்த்தார், மேசியானிய அரசாங்கம் பிறந்தபோது சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் என்ன செய்தார்கள்?

27 கடைசியில், ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 1914-ஆம் வருஷம் வந்தது. இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் நாம் பார்த்தபடி, பரலோகத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களை மனிதர்கள் யாரும் பார்க்கவில்லை. ஆனாலும், அடையாள அர்த்தத்தில் அந்தச் சம்பவங்களை விவரித்த ஒரு தரிசனம் அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டப்பட்டது. இதைக் கற்பனை செய்து பாருங்கள்: பரலோகத்தில் ‘ஒரு பெரிய அடையாளத்தை’ யோவான் பார்க்கிறார். அதில், “ஒரு பெண்,” கர்ப்பமாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த “பெண்,” தேவதூதர்கள் அடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பைக் குறிக்கிறாள். அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்ட அந்தக் குழந்தை சீக்கிரத்தில், ‘எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கும்.’ அந்தக் குழந்தை பிறந்ததுமே, ‘கடவுளிடமும் அவருடைய சிம்மாசனத்திடமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.’ அப்போது பரலோகத்திலிருந்து ஒரு உரத்த குரல், “இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது! அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது! அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது!” என்று சொல்கிறது.—வெளி. 12:1, 5, 10.

28 மேசியானிய அரசாங்கம் பிறந்ததைத்தான் யோவான் அந்தத் தரிசனத்தில் பார்த்தார். அது மிக முக்கியமான ஒரு சம்பவமாக இருந்தது. ஆனாலும், அந்தச் சம்பவம் எல்லாரையுமே சந்தோஷப்படுத்தவில்லை. சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் மிகாவேலாகிய கிறிஸ்துவோடும் அவருடைய உண்மையுள்ள தேவதூதர்களோடும் போர் செய்தார்கள். அதன் விளைவு? “உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—வெளி. 12:7, 9.

1914-ல், கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் அடையாளத்தை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்

29, 30. மேசியானிய அரசாங்கம் பிறந்த பிறகு நிலைமைகள் எப்படி மாறின: (அ) பூமியில்? (ஆ) பரலோகத்தில்?

29 1914-ல் கஷ்ட காலம் ஆரம்பிக்கும் என்று பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களுக்கு முன்பே சொன்னார்கள். ஆனால், அது எந்தளவுக்குத் துல்லியமாக நிறைவேறும் என்பதை அவர்களாலும் கற்பனை செய்திருக்க முடியாது. அந்த வருஷத்திலிருந்து சாத்தான் மனிதர்களை இன்னும் அதிகமாக ஆட்டிப்படைக்க ஆரம்பிப்பான் என்பதை யோவானின் தரிசனம் காட்டியது. “பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்” என்று அதில் சொல்லப்பட்டது. (வெளி. 12:12) 1914-ல், முதல் உலகப் போர் ஆரம்பமானது. அதோடு, கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்ததற்கான அடையாளம் பூமி முழுவதும் நிறைவேற ஆரம்பித்தது. அந்தச் சமயத்திலிருந்து, இந்த உலகத்தின் ‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாயின.—2 தீ. 3:1.

30 ஆனால், பரலோகத்தில் இருந்தவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஏனென்றால், சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் அங்கிருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்டார்கள். “இதன் காரணமாக, பரலோகங்களே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷப்படுங்கள்!” என்று யோவானின் பதிவு சொல்கிறது. (வெளி. 12:12) இப்படிப் பரலோகம் சுத்தம் செய்யப்பட்டு, இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டதால் பூமியிலுள்ள கடவுளுடைய மக்களின் சார்பாக செயல்பட மேசியானிய அரசாங்கம் தயாராக இருந்தது. முதலில் அது என்ன செய்யும்? இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் நாம் பார்த்தபடி, ‘ஒப்பந்தத்தின் தூதுவரான’ கிறிஸ்து பூமியிலுள்ள கடவுளுடைய மக்களைப் புடமிடுவார். எப்படி?

சோதனைக் காலம்

31. புடமிடப்படும் காலத்தைப் பற்றி மல்கியா எதை முன்னறிவித்தார், அது எப்படி நிறைவேற ஆரம்பித்தது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

31 புடமிடப்படும் காலம் அவ்வளவு சுலபமாக இருக்காது என்று மல்கியா முன்னறிவித்தார். “அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே” என்று மல்கியா எழுதினார். (மல். 3:2) அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக இருந்தன! 1914-ஆம் வருஷத்திலிருந்து, கடவுளுடைய மக்கள் பெரிய சோதனைகளையும் கஷ்டங்களையும் அடுத்தடுத்து அனுபவிக்க ஆரம்பித்தார்கள். முதல் உலகப் போர் ஆரம்பித்த பிறகு, பைபிள் மாணாக்கர்கள் பலர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள், சிறையிலும் தள்ளப்பட்டார்கள். d

32. 1916-க்குப் பின் அமைப்புக்குள் என்ன பிரச்சினை எழும்பியது?

32 அமைப்புக்குள்ளும் பல பிரச்சினைகள் எழுந்தன. 1916-ல், 64 வயதிலேயே சகோதரர் ரஸல் இறந்துபோனார். கடவுளுடைய மக்கள் பலருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சிலர் அந்த முன்மாதிரியுள்ள மனிதருக்கு, அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பதை அவருடைய மரணம் காட்டியது. அவர்கள் அவரை ஒரு தெய்வம்போல் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சகோதரர் ரஸல் உயிரோடு இருந்த காலத்தில் அந்த மாதிரி எதையும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவரை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் அதற்குமேல் வெளிப்படுத்தப்படாது என்று நிறைய பேர் நினைத்தார்கள். அமைப்பு தொடர்ந்து முன்னேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். அதனால், விசுவாசதுரோகம் அமைப்புக்குள் நுழைந்தது, அமைப்பு பிளவுபட்டது.

33. எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனது, கடவுளுடைய மக்களுக்கு எப்படி ஒரு சோதனையாக இருந்தது?

33 எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனது இன்னொரு சோதனையாக இருந்தது. 1914-ல் மற்ற தேசத்தாரின் காலம் முடிவடையும் என்று காவற்கோபுரம் சரியாகச் சொல்லியிருந்தாலும், அந்த வருஷத்தில் என்ன நடக்குமென்று சகோதரர்களுக்குப் புரியாமல் இருந்தது. (லூக். 21:24) 1914-ல் கிறிஸ்து தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்ய பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை எடுத்துக்கொள்வார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. பிற்பாடு, 40 வருஷ அறுவடைக் காலம் 1918-ன் ஆரம்பத்தில் முடிவடையும் என்று 1917-ல் காவற்கோபுரம் சொன்னது. ஆனால், பிரசங்க வேலை அப்போது முடிவடையவில்லை. அதற்குப் பிறகும் அது தொடர்ந்து மும்முரமாக நடந்தது. அறுவடை முடிந்துவிட்டதாகவும், கதிர் பொறுக்கும் காலம்தான் மீந்திருந்ததாகவும் அந்தப் பத்திரிகை சொன்னது. இருந்தாலும், நிறைய பேர் ஏமாற்றம் அடைந்து, யெகோவாவை விட்டு விலகிப்போய்விட்டார்கள்.

34. 1918-ல் என்ன பெரிய சோதனை வந்தது, கடவுளுடைய மக்கள் “இறந்துவிட்டதாக” கிறிஸ்தவமண்டலம் ஏன் நினைத்தது?

34 1918-ல் ஒரு பெரிய சோதனை வந்தது. சி. டி. ரஸலுக்குப் பிறகு கடவுளுடைய மக்களை வழிநடத்திய ஜே. எஃப். ரதர்ஃபர்டும், முக்கியப் பொறுப்பிலிருந்த இன்னும் ஏழு சகோதரர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு அநியாயமாக நீண்ட கால சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியாவின் அட்லாண்டா நகரத்தில் இருந்த சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். கொஞ்சக் காலத்துக்கு, கடவுளுடைய மக்களின் வேலை முடங்கிப்போனதுபோல் தெரிந்தது. கிறிஸ்தவமண்டல குருமார்கள் பலர் சந்தோஷப்பட்டார்கள். பைபிள் மாணாக்கர்களின் “தலைவர்கள்” சிறையில் தள்ளப்பட்டதாலும், புருக்லினில் இருந்த அவர்களுடைய தலைமை அலுவலகம் மூடப்பட்டதாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரசங்க வேலை கடுமையாக எதிர்க்கப்பட்டதாலும் அவர்கள் “இறந்துவிட்டதாக” அந்தக் குருமார்கள் நினைத்தார்கள். அதாவது, அவர்களுடைய தொல்லை ஒழிந்துவிட்டதாக நினைத்தார்கள். (வெளி. 11:3, 7-10) ஆனால், அந்தக் குருமார்கள் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்.

புத்துயிர் பெறும் காலம்!

35. கஷ்டங்களை அனுபவிப்பதற்கு இயேசு தன் மக்களை ஏன் அனுமதித்தார், அவர்களுக்கு எப்படி உதவி செய்தார்?

35 இந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இயேசு தன் மக்களை ஏன் அனுமதித்தார் என்பது எதிரிகளுக்குத் தெரியவில்லை. உண்மையில், யெகோவா அப்போது “புடமிடுகிறவரைப் போலவும், வெள்ளியைச் சுத்தப்படுத்துகிறவரைப் போலவும்” உட்கார்ந்திருந்ததால்தான் அதை அனுமதித்தார். (மல். 3:3) நெருப்பு போன்ற அந்தச் சோதனைகள் உண்மையுள்ளவர்களைப் புடமிட்டு, சுத்தப்படுத்தி, ராஜாவின் சேவைக்கு இன்னும் தகுதியுள்ளவர்களாக ஆக்கும் என்பதில் யெகோவாவும் இயேசுவும் உறுதியாக இருந்தார்கள். எது நடக்கவே நடக்காது என்று எதிரிகள் நினைத்தார்களோ அது 1919-ல் நடக்க ஆரம்பித்தது; கடவுளுடைய சக்தியினால் உண்மையுள்ளவர்கள் புத்துயிர் பெற்றார்கள்! (வெளி. 11:11) அந்தச் சமயத்தில்தான், கடைசி நாட்களுடைய அடையாளத்தின் ஒரு முக்கியமான அம்சத்தைக் கிறிஸ்து நிறைவேற்றினார். ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ அவர் நியமித்தார். அதாவது, ஏற்ற வேளையில் ஆன்மீக உணவைக் கொடுத்து தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய தொகுதியை நியமித்தார்.—மத். 24:45-47.

36. கடவுளுடைய மக்கள் ஆன்மீக விதத்தில் புத்துயிர் பெற்றுவந்ததை எது காட்டியது?

36 சகோதரர் ரதர்ஃபர்டும் மற்ற சகோதரர்களும் மார்ச் 26, 1919-ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். சீக்கிரத்திலேயே ஒரு மாநாடுக்கு ஏற்பாடு செய்தார்கள். அது செப்டம்பர் மாதத்தில் நடந்தது. த கோல்டன் ஏஜ் என்ற இன்னொரு பத்திரிகையை வெளியிடுவதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்தன. ஊழியத்தில் காவற்கோபுர பத்திரிகையோடு சேர்த்து கொடுப்பதற்காக இந்தப் பத்திரிகை தயாரிக்கப்பட்டது. e அதே வருஷத்தில் புலட்டின் (இப்போது நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்) வெளியிடப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே அது ஊழியம் செய்வதற்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது. 1919-ஆம் வருஷத்திலிருந்து வீட்டுக்கு வீடு ஊழியம் மும்முரமாகச் செய்யப்பட்டு வருகிறது.

37. 1919-க்குப் பிறகு, உண்மையில்லாமல் போன சிலர் என்ன செய்தார்கள்?

37 இந்தப் பிரசங்க வேலை கிறிஸ்துவின் ஊழியர்களைத் தொடர்ந்து புடமிட்டது. ஏனென்றால், அவர்கள் மத்தியில் இருந்த பெருமைபிடித்தவர்களும் அகந்தையுள்ளவர்களும் இந்த வேலையை மதிப்புக் குறைவான வேலையாக நினைத்தார்கள். இந்த வேலையைச் செய்ய விரும்பாதவர்கள் உண்மையுள்ள ஊழியர்களைவிட்டு பிரிந்துபோனார்கள். 1919-க்குப் பிறகு, அவர்களில் சிலர் கோபத்தில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பினார்கள். அதுமட்டுமல்ல, அவர்களைத் துன்புறுத்தியவர்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள்.

38. கிறிஸ்துவின் ஊழியர்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் எதை நிரூபிக்கிறது?

38 இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், கிறிஸ்துவின் ஊழியர்கள் தொடர்ந்து ஆன்மீக வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்தார்கள். அந்தச் சமயத்திலிருந்து அவர்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது! கடவுள் தன்னுடைய மகனின் மூலமாகவும் மேசியானிய அரசாங்கத்தின் மூலமாகவும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அதனால்தான், இந்தச் சாதாரண மனிதர்களால் சாத்தானோடும் இந்தப் பொல்லாத உலகத்தோடும் போராடி வெற்றிக்கு மேல் வெற்றி அடைய முடிந்திருக்கிறது.ஏசாயா 54:17-ஐ வாசியுங்கள்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற சில மாதங்களில், சகோதரர் ரதர்ஃபர்ட் ஒரு மாநாட்டில் ஆர்வத்தைத் தூண்டும் பேச்சைக் கொடுக்கிறார்

39, 40. (அ) இந்தப் புத்தகத்தின் சில அம்சங்கள் என்ன? (ஆ) இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

39 கடவுளுடைய அரசாங்கம் சுமார் 100 வருஷங்களாகப் பரலோகத்தில் ஆட்சி செய்துவருகிறது. இந்தக் காலப்பகுதியில் அது இந்தப் பூமியில் என்னவெல்லாம் சாதித்திருக்கிறது என்பதை அடுத்த அதிகாரங்களில் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்தை விளக்கும். ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு மறுபார்வை பெட்டி இருக்கும்; நம் ஒவ்வொருவருக்கும் கடவுளுடைய அரசாங்கம் எந்தளவுக்கு நிஜமானதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும். எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கம் கெட்டவர்களை அழித்து இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும்போது நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இந்தப் புத்தகத்தின் கடைசி பகுதியில் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் நீங்கள் எப்படி நன்மை அடைவீர்கள்?

40 நீங்கள் கடவுளுடைய அரசாங்கத்தின்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை அழிக்க வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். ஆனால், அந்த விசுவாசத்தை அதிகரிக்க யெகோவா விரும்புகிறார். ஏனென்றால், அது உங்களைப் பாதுகாக்கும், பலப்படுத்தும். (எபே. 6:16) அதனால், இந்தப் புத்தகத்தை நன்றாகப் படியுங்கள். ‘கடவுளுடைய அரசாங்கம் எனக்கு நிஜமானதாக இருக்கிறதா?’ என்று எப்போதும் உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். இப்போது அது உங்களுக்கு எந்தளவுக்கு நிஜமானதாக இருக்கிறதோ அந்தளவுக்கு உண்மையாகவும் மும்முரமாகவும் அதைக் கடைசிவரை ஆதரிப்பீர்கள்; அதோடு, அது பூமியை ஆட்சி செய்வதைப் பார்க்கப்போகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்!

a க்ரூ, ஸ்டெட்சன், ஸ்டார்ஸ் ஆகியவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பக்கங்கள் 45-46-ஐப் பாருங்கள்.

b உலகத்தோடு நட்பு வைத்திருந்த மத அமைப்புகளைவிட்டு வெளியே வர வேண்டுமென்று பைபிள் மாணாக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும், அந்த மத அமைப்புகளின் பாகமாக இருந்த சில ஆட்களைத் தங்களுடைய கிறிஸ்தவச் சகோதரர்களாகத்தான் பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களாக நினைத்தார்கள். ஏனென்றால், அந்த ஆட்கள் மீட்புவிலையில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதாகவும் சொல்லிக்கொண்டார்கள்.

c ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட இதுபோன்ற எச்சரிப்புகள் கிறிஸ்துவின் சிறு மந்தையாகிய 1,44,000 பேருக்கு மட்டும்தான் பொருந்தியதாகச் சொல்லப்பட்டது. அதனால், அந்த எச்சரிப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் சொல்லப்பட்ட “திரள் கூட்டமான மக்கள்” கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைச் சேர்ந்த ஏராளமான ஆட்களைக் குறித்ததாக 1935-க்கு முன்பு நம்பப்பட்டது; அந்த ஆட்கள் முடிவு வருவதற்கு முன் கிறிஸ்துவுக்கு ஆதரவு தருவார்கள் என்றும், அதனால் பரலோக நம்பிக்கையுள்ள இரண்டாவது வகுப்பாராக இருப்பார்கள் என்றும் நம்பப்பட்டது. இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் விவரமாகப் பார்ப்போம்.

d போர்க்காலத்தில் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற இடங்களில் கடவுளுடைய மக்கள் துன்புறுத்தப்பட்ட பல சம்பவங்களைப் பற்றி செப்டம்பர் 1920-ல், த கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு!) பத்திரிகை விளக்கியது. அவற்றில் சில சம்பவங்கள் மிகவும் கொடூரமானவை. ஆனால், முதல் உலகப் போருக்கு முன்பெல்லாம் அப்படிப்பட்ட துன்புறுத்தல் மிகக் குறைவாகவே இருந்தது.

e முக்கியமாக சிறு மந்தையைச் சேர்ந்தவர்களைப் பலப்படுத்துவதற்காகத்தான் பல வருஷங்களாக காவற்கோபுரம் வெளியிடப்பட்டது.