Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும்

கடவுளுடைய பெயரும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும்

கடவுளுடைய பெயரும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும்

இயேசுவும் அவரைப் பின்பற்றினோரும் முன்னறிவித்த கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு வீழ்ந்துபோதல், இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அப்போஸ்தலரில் கடைசியாக உயிருடன் இருந்தவர் மரித்தபின்பு வெகு மும்முரமாய்த் தொடங்கினது. புறமத தத்துவவியல்களும் கோட்பாடுகளும் சபைக்குள் படிப்படியாக உட்புகுந்து பரவின; உட்கட்சிகளும் பிரிவுகளும் எழும்பின, அந்த மூல விசுவாசத்தின் தூய்மைக் கெடுக்கப்பட்டது. கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது நின்றுவிட்டது.

இந்த விசுவாசத்துரோகக் கிறிஸ்தவம் பரவினபோது, பைபிளை அதன் மூல மொழிகளாகிய எபிரெயுவிலிருந்தும் கிரேக்குவிலிருந்தும் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும்படியான தேவை எழும்பியது. மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைத் தங்கள் மொழிபெயர்ப்புகளில் எவ்வாறு மொழிபெயர்த்தனர்? பொதுவாக, “கர்த்தர்” என்பதற்குச் சமமானதைப் பயன்படுத்தினர். அந்தச் சமயத்தில் வெகு செல்வாக்குச் செலுத்தின ஒரு மொழிபெயர்ப்பு லத்தீன் வல்கேட் (Latin Vulgate) ஆகும், இது ஜெரோம் என்பவர் அன்றாட பேச்சுவழக்கிலிருந்த லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்த ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு. ஜெரோம் டெட்ரக்ராமட்டனுக்குப் (ய்ஹ்வ்ஹ் [YHWH]) பதிலாக டொமினஸ், “கர்த்தர்” என்பதை அதனிடத்தில் மொழிபெயர்த்து வைத்தார்.

கடைசியாக, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானியமொழி போன்ற புதிய மொழிகள் ஐரோப்பாவில் வெளிப்பட்டுத்தோன்றத் தொடங்கின. எனினும், இந்தப் புதிய மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவதைக் கத்தோலிக்க சர்ச் ஊக்கங்கெடுத்துத் தடைசெய்தது. இவ்வாறு, மூல எபிரெயு மொழியில் பைபிளைப் பயன்படுத்திக்கொண்டிருந்த யூதர்கள், கடவுளுடைய பெயரைக் காண்கையில் அதை உச்சரிக்க மறுத்தபோது, “கிறிஸ்தவர்கள்” பெரும்பான்மையர், அந்தப் பெயரைப் பயன்படுத்தாத லத்தீன் மொழிபெயர்ப்புகளிலிருந்தே பைபிள் வாசிக்கப்படுவதைக் கேட்டார்கள்.

காலப்போக்கில், கடவுளுடைய பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. அது 1278-ல், ஸ்பானிய துறவி ஒருவரான, ரேமண்டஸ் மார்ட்டினி இயற்றிய, Pugio fidei (விசுவாசத்தின் குத்துவாள்) என்ற நூலில், லத்தீன்மொழியில் தோன்றினது. ரேமண்டஸ் மார்ட்டினி யொஹோவா (Yohoua) என்ற எழுத்துக்கூட்டைப் பயன்படுத்தினார். a இதன்பின் சீக்கிரத்திலேயே, 1303-ல், போர்ச்செட்டஸ் டி ஸல்வாட்டிக்கிஸ் என்பவர் Victoria Porcheti adversus impios Hebraeos (தேவபக்தியற்ற எபிரெயர்களுக்கு எதிராக போர்ச்செட்டஸின் வெற்றி) என்ற தலைப்புடைய ஒன்றை இயற்றி முடித்தார். இதில் அவருங்கூட, கடவுளுடைய பெயரைக் குறிப்பிட்டார்; அதை, யோஹோவாஹ், (Iohouah) யேஹோவா (Iohoua), யஹோவா (Ihouah) என்ற பல்வேறு முறையில் எழுத்துக்கூட்டினார். பின்பு, 1518-ல், பெட்ரஸ் கலாட்டினஸ் என்பவர் De arcanis catholicae veritatis (எல்லாருக்கும் பொதுவான சத்தியத்தின் இரகசியங்களைக் குறித்து) என்ற தலைப்பையுடைய ஒரு புத்தகத்தைப் பிரசுரித்தார், இதில் கடவுளுடைய பெயரை யெஹோவா (Iehoua) என எழுத்துக்கூட்டுகிறார்.

இந்தப் பெயர், உவில்லியம் டின்டேல், பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களின் மொழிபெயர்ப்பு ஒன்றைப் பிரசுரித்தபோது, 1530-ல் ஆங்கில பைபிளில் முதலாவது காணப்பட்டது. இதில், பல வசனங்களில், b கடவுளுடைய பெயர் பொதுவாய் யெஹோவா (Iehouah) என எழுத்துக்கூட்டப்பட்டதாக அவர் அமைத்தார். மேலும் இந்தப் பதிப்பிலிருந்த ஒரு கவனக்குறிப்பில் அவர் பின்வருமாறு எழுதினார்: “யெஹோவா என்பது கடவுளுடைய பெயர் . . . மேலும் கர்த்தர் (LORD) என்பதைப் பெரிய எழுத்துக்களில் நீங்கள் காணும்போதெல்லாம் (அச்சடிப்பில் ஏதாவது பிழை இருந்தால் தவிர) அது எபிரெயுவில் யெஹோவா என்றுள்ளது.” இதிலிருந்து யெகோவாவின் பெயரைச் சில வசனங்களில் மாத்திரமே பயன்படுத்தி, எபிரெயு மூலவாக்கியத்தில் டெட்ரக்ராமட்டன் தோன்றும் பெரும்பான்மையான இடங்களில் “கர்த்தர்” அல்லது “கடவுள்” என்று எழுதும் பழக்கம் எழும்பினது.

மிக அதிக விரிவாய்ப் பயன்படுத்தும் ஆங்கில மொழிபெயர்ப்பாகிவிட்ட ஆதரைஸ்ட் வர்ஷன் 1611-ல் பிரசுரிக்கப்பட்டது. இதில், இந்தப் பெயர் அதன் உடற்பகுதியில் நான்கு தடவைகள் காணப்பட்டது. (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:18; ஏசாயா 12:2; 26:4) அந்தப் பெயரின் செய்யுள் முறையான சுருக்கமாகிய “ஜா” (“யா”) என்பது சங்கீதம் 68:4-ல் காணப்பட்டன. மேலும், “ஜெஹோவாஜீரே” (“யெகோவா யீரே”) போன்ற இடப்பெயர்களில், இந்தப் பெயர் முழுமையாகக் காணப்பட்டது. (ஆதியாகமம் 22:14; யாத்திராகமம் 17:15; நியாயாதிபதிகள் 6:24) எனினும், டின்டேலின் முன்மாதிரியைப் பின்பற்றி, இந்த மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் கடவுளுடைய பெயருக்குப் பதிலியாக “கர்த்தர்” (“LORD”) அல்லது “கடவுள்” (“GOD”) என்பவற்றை அமைத்தனர். ஆனால் கடவுளுடைய பெயர் நான்கு வசனங்களில் காணப்படலாமென்றால், மூலமொழி எபிரெயுவில் அது அடங்கியுள்ள மற்ற ஆயிரக்கணக்கான வசனங்களிலும் அது ஏன் காணப்படக்கூடாது?

இதைப்போன்ற ஒன்று ஜெர்மன் மொழியிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. மார்ட்டின் லூத்தர் மூல மொழிகளில் தான் ஆதாரங்கொண்டு மொழிபெயர்த்தத் தன் முழு பைபிள் மொழிபெயர்ப்பை, 1534-ல் பிரசுரித்தார். ஏதோ காரணத்தினிமித்தம் கடவுளின் பெயரை அவர் உள்ளடக்காமல், ஹெர் (HERR [“கர்த்தர்”]) போன்ற பதிலிகளைப் பயன்படுத்தினார். எனினும் அவர் கடவுளுடைய அந்தப் பெயரைத் தெரிந்திருந்தார், எவ்வாறெனில், 1526-ல், எரேமியா 23:1-8-ன்பேரில் அவர் கொடுத்தப் பிரசங்கத்தில்: “இந்தப் பெயர் யெகோவா, கர்த்தர், தனிப்பட உண்மையான கடவுளுக்கு மாத்திரமே உரியது,” என்று கூறினார்.

லூத்தர் 1543-ல் குறிப்பிடத்தக்க வெளிப்படையான முறையில் பின்வருமாறு எழுதினார்: “அவர்கள் [யூதர்கள்] ஜெஹோவா என்ற இந்தப் பெயரை உச்சரிக்கத்தகாததென இப்பொழுது வாதிடுகின்றனர், தாங்கள் பேசுவதைப்பற்றி அவர்கள் அறியாதிருக்கிறார்கள் . . . பேனாவையும் மையையுங்கொண்டு அதை எழுதலாமென்றால், அதைப் பேசுவது ஏன் கூடாது, இது பேனாவையும் மையையுங்கொண்டு எழுதப்படுவதைப் பார்க்கிலும் மிக மேலானதாயிருக்குமே? அது எழுதப்படக்கூடாதது, வாசிக்கப்படக்கூடாதது அல்லது சிந்திக்கப்படக்கூடாதது என்றும் அவர்கள் ஏன் அதை அழைக்கக்கூடாது? எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கையில், அங்கே ஏதோ நேர்மைக்கேடு உள்ளது.” எனினும் லூத்தர், தான் மொழிபெயர்த்த பைபிள் மொழிபெயர்ப்பில் காரியங்களைச் சரிசெய்யவில்லை. எனினும், பிற்பட்ட ஆண்டுகளில், மற்ற ஜெர்மன் பைபிள்கள் யாத்திராகமம் 6:3-ன் வசனத்தில் அந்தப் பெயரை நிச்சயமாகவே கொண்டிருந்தன.

பின்வந்த நூற்றாண்டுகளில், பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த இரண்டு வழிகளில் ஏதோவொன்றில் சென்றனர். கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதைச் சிலர் தவிர்த்தனர், அதேசமயத்தில் மற்றவர்கள் அதை ஜெஹோவா என்ற வகையில் அல்லது யாவே என்ற வகையில், எபிரெய வேதவாக்கியங்களில் விரிவாய்ப் பயன்படுத்தினர். இந்தப் பெயரைத் தவிர்த்த இரண்டு மொழிபெயர்ப்புகளை நாம் சிந்தித்து, அவற்றின் மொழிபெயர்ப்பாளர்கள் சொல்வதன்படி, அவ்வாறு ஏன் செய்யப்பட்டதென்பதைக் காணலாம்.

அவர்கள் அதை ஏன் விட்டுவிட்டனர்

J. M. பவிஸ் ஸ்மித்தும் எட்கார் J. குட்ஸ்பீடும் 1935-ல் பைபிளின் தற்கால மொழிபெயர்ப்பு ஒன்றை (ஆங்கிலத்தில்) உண்டாக்கியபோது, கடவுளுடைய பெயருக்குப் பதிலியாக கர்த்தர் (LORD) மற்றும் கடவுள் (GOD) பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்தியிருப்பதை வாசகர்கள் கண்டனர். அதற்குக் காரணம் ஒரு முகவுரையில் பின்வருமாறு விளக்கப்பட்டிருந்தது: “இந்த மொழிபெயர்ப்பில் வைதீக யூதப் பாரம்பரியத்தை நாங்கள் பின்பற்றி, ‘யாவே’ என்ற பெயருக்கு ‘கர்த்தர்’ என்பதையும், ‘கர்த்தராகிய யாவே’ என்ற சொற்றொடருக்கு ‘கர்த்தராகிய கடவுள்’ என்பதையும் பதிலிகளாகப் பயன்படுத்தியிருக்கிறோம். மூல எழுத்தில் ‘யாவே’ என்பதை ‘கர்த்தர்’ அல்லது ‘கடவுள்’ குறித்துநிற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், சிறியவடிவில் பேரெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.”

பின்பு, ய்ஹ்வ்ஹ் (YHWH) என்பதை வாசித்து ஆனால் அதை “கர்த்தர்” (“Lord”) என உச்சரித்த யூதர்களின் பாரம்பரியத்தை அசாதாரணமான முறையில் நேர்மாறாக மாற்றி, அந்த முகவுரை பின்வருமாறு கூறுகிறது: “ஆகையால், மூலவாக்கியத்தின் கலைச்சுவையைக் காத்துவைக்க விரும்பும் எவரும், கர்த்தர் அல்லது கடவுள் என தான் காண்கிற இடமெல்லாம் ‘யாவே’ என வாசிக்க வேண்டியதே”!

இதை வாசிக்கையில், பின்வரும் கேள்வி உடனடியாக மனதுக்கு வருகிறது: “கர்த்தர்” என்பதற்குப் பதிலாக “யாவே” என வாசிப்பது “மூலவாக்கியத்தின் கலைச்சுவையைக் காத்துவைக்கிறது” என்றால், இந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் தங்கள் மொழிபெயர்ப்பில் “யாவே” என்பதைப் பயன்படுத்தவில்லை? அவர்கள் ஏன், தங்கள் சொந்த வார்த்தையில் சொல்கிறபடி, கடவுளுடைய பெயருக்கு “கர்த்தர்” என்ற சொல்லைப் ‘பதிலியாக வைத்து’ இவ்வாறு மூலவாக்கியத்தின் கலைச்சுவையை மூடிமறைத்தனர்?

தாங்கள் வைதீக யூத பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாக அந்த மொழிபெயர்ப்பாளர்கள் சொல்கின்றனர். எனினும் கிறிஸ்தவனுக்கு அது ஞானமானதா? வைதீக யூத பாரம்பரியத்தைப் பாதுகாத்து வைத்தவர்களான பரிசேயரே இயேசுவை ஏற்க மறுத்தனர், அவர்களுக்கே அவர் பின்வருமாறு கூறினார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “உங்கள் பாரம்பரை முறைமையினிமித்தம் கடவுள் வார்த்தையை அவமாக்கினீர்கள்.” (மத்தேயு 15:6, தி.மொ.) இத்தகைய பதிலீடுசெய்வது மெய்யாகவே கடவுளுடைய வார்த்தையின் ஆற்றலைக் குறைக்கிறது.

ஆங்கிலத்தில் 1951-ல் எபிரெய வேதவாக்கியங்களின் ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன் பிரசுரிக்கப்பட்டது, இந்தப் பைபிளும் கடவுளுடைய பெயருக்குப் பதிலிகளைப் பயன்படுத்தினது. இது கவனிக்கத்தக்கதாக இருந்தது, ஏனெனில் இது எதிலிருந்து திருத்தப்பட்டதோ அந்த முதல் பதிப்பாகிய அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் எபிரெய வேதவாக்கியங்கள் முழுவதிலும் ஜெஹோவா என்ற பெயரைப் பயன்படுத்தினது. ஆகவே, அந்தப் பெயர் விடப்பட்டுள்ளது முனைப்பான விலகுதல் ஆகும். ஏன் இது செய்யப்பட்டது?

ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷனின் முகவுரையில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “இரண்டு காரணங்களினிமித்தம் இந்தக் குழு, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பின் நன்றாய்ப் பழக்கப்பட்ட உபயோகத்துக்குத் திரும்பியுள்ளது [அதாவது, கடவுளுடைய பெயரை விட்டுவிடுவது]: (1‘ஜெஹோவா’ என்ற இந்தச் சொல் எபிரெயுவில் எப்போதாயினும் பயன்படுத்தின எந்த வகையான பெயரையும் திருத்தமாய்ப் பிரதிநிதித்துவம் செய்கிறதில்லை; மேலும் (2மற்ற கடவுட்கள் இருக்கின்றன அவற்றிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதுபோல், ஒரே ஒருவரான கடவுளுக்கு எந்தத் தனிப் பெயரையாவது பயன்படுத்துவது, கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முன்னதாகவே யூத மதத்தில் நிறுத்திவிடப்பட்டது மற்றும் கிறிஸ்தவ சர்ச்சின் உலகளாவிய விசுவாசத்துக்கு முற்றிலும் பொருத்தமற்றது.”

இவை நேர்மையான விவாதங்களா? முன்னால் கலந்தாராய்ந்தபடி, இயேசுவைப் பின்பற்றுவோர் பயன்படுத்தும் இயேசு என்ற பெயர், கடவுளின் குமாரனுடைய பெயரின் அந்த மூல வகையைத் திருத்தமாய்ப் பிரதிநிதித்துவம் செய்கிறதில்லை. எனினும் இது, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, “மத்தியஸ்தர்” அல்லது “கிறிஸ்து” போன்ற பட்டப்பெயரைப் பயன்படுத்தும்படி இந்தக் குழுவைத் தூண்டவில்லை. இந்தப் பட்டப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் இயேசுவின் பெயரோடுகூட பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன, அதற்குப் பதிலாக அல்ல.

உண்மையான கடவுளை அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு வேறு எந்தக் கடவுட்களும் இல்லை என்ற விவாதத்தைக் குறித்ததில், அது முற்றிலும் உண்மை அல்ல. லட்சக்கணக்கான கடவுட்கள் மனிதவர்க்கத்தால் வணங்கப்படுகின்றன. ‘அநேக தேவர்கள் உண்டு’ என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 8:5; பிலிப்பியர் 3:19) நிச்சயமாகவே, பவுல் தொடர்ந்து சொல்வதுபோல், உண்மையான கடவுள் ஒரே ஒருவரே இருக்கிறார். ஆகையால், அந்த உண்மையான கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதன் ஒரு பெரும் நற்பயனானது, பொய்க் கடவுட்கள் எல்லாவற்றினின்றும் அது அவரைத் தனிப்படுத்தி வைக்கிறது. அல்லாமலும், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது “முற்றிலும் பொருத்தமற்றது” என்றால், மூல எபிரெய வேதவாக்கியங்களில் அது ஏன் ஏறக்குறைய 7,000 தடவைகள் காணப்படுகிறது?

உண்மை என்னவெனில், அந்தப் பெயர், அதன் தற்கால உச்சரிப்புடன் பைபிளில் இருப்பது பொருத்தமற்றதென மொழிபெயர்ப்பாளர்கள் பலர் உணரவில்லை. அவர்கள் அதைத் தங்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ளடங்கச் செய்திருக்கின்றனர். இதன் பலன், பைபிளின் ஆசிரியருக்கு அதிக கனத்தைக் கொடுப்பதும் மூலவாக்கியத்துடன் மேலுமதிக உண்மையுடன் ஒத்திருப்பதுமான ஒரு மொழிபெயர்ப்பாக எப்பொழுதும் இருந்திருக்கிறது. இந்தப் பெயரைக் கொண்டுள்ள வெகு விரிவாய்ப் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளில் சில வல்லீரா மொழிபெயர்ப்பு (ஸ்பானிய மொழி, 1602-ல் பிரசுரிக்கப்பட்டது), அல்மேடா மொழிபெயர்ப்பு (போர்த்துகீஸ், 1681-ல் பிரசுரிக்கப்பட்டது), முதநூல் எல்பெர்ஃபெல்டர் மொழிபெயர்ப்பு (ஜெர்மன், 1871-ல் பிரசரிக்கப்பட்டது), மேலும் அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் (ஆங்கிலம், 1901-ல் பிரசுரிக்கப்பட்டது). சில மொழிபெயர்ப்புகள், குறிப்பிடத்தக்கதாய் தி ஜெரூசலம் பைபிள் போன்றவையும், நிலையாய்க் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகின்றன, ஆனால் யாவே என்ற உச்சரிப்பைப் பயன்படுத்துகின்றன.

இந்தப் பெயரைத் தங்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ளடக்கியிருக்கிற மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் குறிப்புரைகளை இப்பொழுது வாசித்து, அவர்களுடைய காரண நியாயத்தை அந்தப் பெயரை விட்டுவிட்டவர்களின் நியாயத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மற்றவர்கள் ஏன் அந்தப் பெயரை உள்ளடங்கச் செய்தனர்

அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் 1901-ன் மொழிபெயர்ப்பாளர்களுடைய குறிப்புரை இது: “கடவுளுடைய பெயர் உச்சரிப்பதற்கு மீறிய பரிசுத்தமானதெனக் கருதின, ஒரு யூத மூட நம்பிக்கை, ஆங்கிலத்திலாவது அல்லது பழைய ஏற்பாட்டின் வேறு எந்த மொழிபெயர்ப்பிலாவது இனிமேலும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற இந்த ஒருமித்த நம்பிக்கைத் தீர்ப்பு [இந்த மொழிபெயர்ப்பாளர்களால்] கொண்டுவரப்பட்டது . . . யாத். iii. 14, 15-ல் விளக்கப்பட்டு, அத்தகையதென பழைய ஏற்பாட்டின் மூலவாக்கியத்தில் மீண்டும் மீண்டுமாக அறிவுறுத்தப்படும் இந்த நினைவுகூரவேண்டிய பெயர், கடவுளைத் தம்முடைய ஜனத்தின் தனிப்பட்ட சொந்த கடவுளாக, உடன்படிக்கைக்குரிய கடவுளாக, வெளிப்படுத்துதலின் கடவுளாக, விடுதலைசெய்பவராக, நண்பராகக் குறிப்பிடுகிறது . . . இந்தச் சொந்த பெயர், அதன் நிறைவான பரிசுத்த இணைவுகளோடுகூட, பரிசுத்த வாக்கியத்தில் சந்தேகமில்லாமல் அதற்குரியதாயுள்ள இடத்தில் இப்பொழுது திரும்ப நிலைநாட்டப்பட்டுள்ளது.”

இவ்வாறே, முதநூல் ஜெர்மன் எல்பெர்ஃபெல்டர் பைபெல் ஆனதன் முகவுரையிலும் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “ஜெஹோவா. இஸ்ரவேலின் உடன்படிக்கை கடவுளுடைய இந்தப் பெயரை நாங்கள் நீக்காமல் வைத்திருக்கிறோம், ஏனெனில் வாசகர் பல ஆண்டுகளாக அதோடு பழக்கப்பட்டிருக்கிறார்.”

தி பைபிள் இன் லிவிங் இங்கிலிஷ் என்பதன் மொழிபெயர்ப்பாளர், ஸ்டீவென் T. பையிங்டன், கடவுளுடைய பெயரைத் தான் பயன்படுத்தும் காரணத்தை விளக்குகிறார்: “எழுத்துக்கூட்டும் உச்சரிப்பும் மிக அதிக முக்கியமானவையல்ல. இது தனிப்பட்டவரின் சொந்த பெயர் என்பதைத் தெளிவாக வைப்பதே மிக அதிக முக்கியமானது. இந்தப் பெயரை ‘கர்த்தர்’ என்ற பொதுப் பெயரால், அல்லது, இன்னுமதிக மோசமாக, விளக்கும் பெயரடை ஒன்றைக்கொண்டு [உதாரணமாக, நித்தியர் என] நாம் மொழிபெயர்த்தால் சரியாய்ப் புரிந்துகொள்ள முடியாதப் பல வசனங்கள் உள்ளன.”

J. B. ரோதர்ஹாம் என்பவர் செய்த மற்றொரு மொழிபெயர்ப்பின் காரியம் அக்கறையைத் தூண்டுவதாக உள்ளது. அவர் தன் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார், ஆனால் யாவே என்ற முறையை விரும்பித் தெரிந்துகொண்டார். எனினும், 1911-ல் பிரசுரிக்கப்பட்ட சங்கீதங்களில் ஆராய்ச்சி (Studies in the Psalms) என்ற பிந்திய ஒரு நூலில், ஜெஹோவா என்ற முறைக்கு அவர் திரும்பினார். ஏன்? அவர் பின்வருமாறு விளக்குகிறார்: “ஜெஹோவா (JEHOVAH)—இந்த நினைவுச்சின்ன பெயரின் (யாத். 3:18) இந்த ஆங்கில முறையைத் தற்போதைய சங்கீத புத்தக மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவது, மேலும் திருத்தமான உச்சரிப்பு, யாவே என்பதாக இருப்பதைக் குறித்து எந்தச் சந்தேகமாவது எழும்பினதால் அல்ல; இந்த வகையான காரியத்தில் பொதுமக்களின் செவியோடும் பார்வையோடும் தொடர்புவைக்கும் விருப்பத்தோடு, நடைமுறையான அத்தாட்சியிலிருந்து தனிப்பட்டு நானே தெரிந்துகொண்டதேயாகும், இதில் முதன்மையான காரியமானது, கருதப்பட்ட கடவுளுடைய பெயரை எளிதில் அடையாளம் கண்டுகொள்வதே.”

யெகோவாவை வணங்குவோர், சங்கீதம் 34:3-ல் (தி.மொ.) பின்வருமாறு அறிவுரை கூறப்படுகின்றனர்: “என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஏகோபித்து அவர் திருநாமத்தை உயர்த்துவோமாக.” கடவுளுடைய பெயரை விட்டுவிடும் பைபிள் மொழிபெயர்ப்புகளை வாசிப்போர் இந்த அறிவுரைக்கு எவ்வாறு முழுமையாகக் கீழ்ப்படிய முடியும்? எபிரெய வேதவாக்கியங்களை மொழிபெயர்த்தத் தங்கள் மொழிபெயர்ப்புகளில், சில மொழிபெயர்ப்பாளர்களாவது கடவுளுடைய பெயரைத் தங்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ளடங்கியிருக்கச் செய்து, இவ்வாறு “மூலவாக்கியத்தின் கலைச்சுவை” என ஸ்மித்தும் குட்ஸ்பீடும் அழைப்பதைப் பாதுகாத்து வைக்கத் தைரியம் கொண்டதால் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

எனினும், பெரும்பான்மையான மொழிபெயர்ப்புகள், எபிரெய வேதவாக்கியங்களில் கடவுளுடைய பெயரைக் கொண்டுள்ளபோதிலும், கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களான, ‘புதிய ஏற்பாட்டில்’ அதை விட்டுவிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? பைபிளின் இந்தக் கடைசி பகுதியில் கடவுளுடைய பெயரை உட்படுத்தியிருப்பதற்கு நியாயமான காரணம் ஏதாவது உண்டா?

[அடிக்குறிப்புகள்]

a இந்த நூலின் அச்சடிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கப்பால் செய்யப்பட்டதாகத் தேதி குறிப்பிடப்பட்டது, எனினும், கடவுளுடைய பெயர் ஜெஹோவா (Jehova) என்று எழுத்துக்கூட்டப்பட்டுள்ளது.

b ஆதியாகமம் 15:2; யாத்திராகமம் 6:3; 15:3; 17:16; 23:17; 33:19; 34:23; உபாகமம் 3:24. தி நியூ டெஸ்டமென்ட், ஆன்ட்வெர்ப், 1534-ன் முடிவில் கூட்டப்பட்ட தன்னுடைய மொழிபெயர்ப்புகளில் டின்டேல், எசேக்கியேல் 18:23-லும் 36:23-லுங்கூட கடவுளுடைய பெயர் அடங்கியிருக்கச் செய்தார்.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

ஆதரைஸ்ட் வர்ஷனின் மொழிபெயர்ப்பாளர்கள், கடவுளுடைய பெயர் ஜெஹோவா என்பதை நான்கு வசனங்களில் மாத்திரமே பாதுகாத்து வைத்து, மற்ற எல்லா இடங்களிலும் அதற்குப் பதிலாகக் கடவுள் மற்றும் கர்த்தர் என்பவற்றை வைத்துள்ளனர்

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது “முற்றிலும் பொருத்தமற்றது” என்றால், மூல எபிரெய வேதவாக்கியங்களில் அது ஏன் ஏறக்குறைய 7,000 தடவைகள் காணப்படுகிறது?

[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]

கடவுளுடைய பெயருக்குப் பகைமையா?

ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் (டச்சு பரம்பரையினரான தென் ஆப்பிரிக்கரால் பேசப்படுவது), கடவுளுடைய பெயரைக் கொண்டுள்ள பைபிளின் இந்நாளைய மொழிபெயர்ப்பு தற்போது இல்லை. இது ஆச்சரியமாயுள்ளது, ஏனெனில், அந்த நாட்டில் பேசப்படுகிற குல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள பல மொழிபெயர்ப்புகள் இந்தப் பெயரைத் தடையின்றி பயன்படுத்துகின்றன. இது எவ்வாறு நேரிட்டதென்பதை நாம் கவனித்துப் பார்க்கலாம்.

பைபிளின் ஒரு மொழிபெயர்ப்பு ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் செய்யப்பட வேண்டுமென்ற ஓர் உறுதியான வேண்டுதல், மெய்யான ஆப்பிரிக்கானரின் சங்கத்தின் ஒரு கூட்டத்தில் (G.R.A.), ஆகஸ்ட் 24, 1878-ல் செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கப்பால், இந்தக் காரியம் மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரப்பட்டு, முடிவில் மூல மொழிகளிலிருந்து பைபிளை மொழிபெயர்ப்பதைச் செய்யும்படி தீர்மானிக்கப்பட்டது. இந்த வேலை, டிரான்ஸ்வாலில் உள்ள கல்வி மேற்பார்வையாளர் S. J. டு டாய்ட் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

டு டாய்ட்டுக்குக் கொடுக்கப்பட்ட விவரக் கட்டளைக்குரிய ஒரு கடிதத்தில் பின்வரும் வழிகாட்டுக் கட்டளை அடங்கியதாக இருந்தது: “கர்த்தரின் சரியான பெயர், ஜெஹோவா அல்லது ஜாஹ்வே, மொழிபெயர்க்கப்படாமல் [அதாவது, கர்த்தர் அல்லது கடவுள் என பதிலீடு செய்யப்படாமல்] முழுவதிலும் விடப்பட வேண்டும்.” S. J. டு டாய்ட் ஏழு பைபிள் புத்தகங்களை ஆப்பிரிக்கான்ஸில் மொழிபெயர்த்தார், ஜெஹோவா என்ற பெயர் அவற்றில் முழுவதிலும் காணப்பட்டது.

தென் ஆப்பிரிக்கப் பிரசுரங்கள் மற்றவற்றிலுங்கூட, ஒரு காலத்தில் கடவுளுடைய பெயர் அடங்கியிருந்தது. உதாரணமாக, De Korte Catechismus (குறுகிய வினாவிடை இதழ்), J. A. மல்ஹெர்பி என்பவரால் 1914-ல் இயற்றப்பட்டதில் பின்வருவது காணப்பட்டது: “கடவுளுடைய ஒப்புயர்வற்ற பெயர் என்ன?” பதில்? “ஜெஹோவா, இது நம்முடைய பைபிள்களில் கர்த்தர் (LORD) என தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த [பெயர்] எந்தச் சிருஷ்டிக்கும் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை.”

Die Katkisasieboek என்பதில் (தென் ஆப்பிரிக்காவிலுள்ள டச்சு ரிஃபார்ம்ட் சர்ச்சின் கூட்டிணைக்கப்பட்ட ஞாயிறு பள்ளி செயற்குழுவால் பிரசுரிக்கப்பட்ட வினாவிடை நூல்) பின்வரும் இந்தக் கேள்வி காணப்பட்டது: “அவ்வாறெனில் ஜெஹோவா அல்லது கர்த்தர் என்ற பெயரை நாம் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதா? யூதர்கள் அதையே செய்கின்றனர் . . . அது அந்தக் கற்பனையின் உட்பொருள் அல்ல. . . . நாம் அவருடைய பெயரைப் பயன்படுத்தலாம், ஆனால் ஒருபோதும் வீணில் அல்ல.” சமீப காலம் வரையில், Die Halleluja (தேவத் துதிப்பாட்டுப்புத்தகம்) என்பதன் மறு அச்சடிப்புகளிலும், துதிப்பாடல்கள் சிலவற்றில் ஜெஹோவாவின் பெயர் இருந்தன.

எனினும், டு டாய்ட்டின் மொழிபெயர்ப்பு பொதுவிருப்பத்துக்குரியதாக இல்லை, மேலும், ஆப்பிரிக்கான்ஸ் பைபிள் உண்டாக்கப்படுவதைக் கவனிக்கும்படி 1916-ல் பைபிள் மொழிபெயர்ப்புக்காக ஒரு சிறப்புக்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு, பைபிளிலிருந்து யெகோவாவின் பெயரை விலக்கிவிடும் ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்தது. தென் ஆப்பிரிக்காவின் பைபிள் சங்கம், 1971-ல், ஆப்பிரிக்கான்ஸில் பைபிள் புத்தகங்கள் சிலவற்றின் “தேர்வு ஆராய்ச்சிக்கான மொழிபெயர்ப்பு” ஒன்றைப் பிரசுரித்தது. இந்த மொழிபெயர்ப்பின் முன்னுரையில் கடவுளுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்தபோதிலும், அந்த மொழிபெயர்ப்பின் பொருளுரையில் அது பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறே, 1979-ல் ‘புதிய ஏற்பாடும்’ சங்கீதங்களும் அடங்கிய ஒரு புதிய மொழிபெயர்ப்பு தோன்றியது, இதுவும் அவ்வாறே கடவுளுடைய பெயரை விட்டுவிட்டது.

மேலும், 1970 முதற்கொண்டு ஜெஹோவா என்ற பெயரைக் குறிப்பிடுவது Die Halleluja என்ற பாட்டுப் புத்தகத்திலிருந்தும் நீக்கப்பட்டது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் டச்சு ரிஃபார்ம்ட் சர்ச் பிரசுரித்த Die Katkisasieboek என்ற திருத்திய பதிப்பின் ஆறாவது அச்சடிப்பும் இப்பொழுது அந்தப் பெயரை விட்டுவிடுகிறது.

உண்மையில், ஜெஹோவா என்பதை நீக்கிவிடுவதற்கான முயற்சிகள் புத்தகங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படுகிறதில்லை. பார்லில் டச்சு ரிஃபார்ம்ட் சர்ச் ஒன்று ஒரு மூலைக் கல்லை முன்பு கொண்டிருந்தது, அதன்மீது ஜெஹோவா ஜீரே (“ஜெஹோவா ஏற்பாடு செய்வார்”) என்ற சொற்கள் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சர்ச்சின் மற்றும் அதன் மூலைக்கல்லின் படமும் ஆப்பிரிக்கான்ஸ் மொழியிலுள்ள அவேக்! பத்திரிகையின் அக்டோபர் 22, 1974 வெளியீட்டில் தோன்றின. அதுமுதற்கொண்டு, அந்த மூலைக்கல் நீக்கப்பட்டு அதனிடத்தில் DIE HERE SAL VOORSIEN (“கர்த்தர் ஏற்பாடு செய்வார்”) என்ற வார்த்தைகளைக் கொண்ட மற்றொன்று வைக்கப்பட்டது. அந்தக் கல்லின்மீதிருந்த இந்த வேதவாக்கிய இடக்குறிப்பும் தேதியும் அவ்வாறே விடப்பட்டுள்ளன, ஆனால் ஜெஹோவா என்ற பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

ஆகவே, இன்று, ஆப்பிரிக்கானியர் பலர் கடவுளுடைய பெயரை அறியாதிருக்கின்றனர். அதை அறியாத சர்ச் உறுப்பினர்கள் அதைப் பயன்படுத்துவதிலிருந்து தயங்கி ஒதுங்குகின்றனர். சிலர் அதற்கு எதிராகவுங்கூட விவாதித்து, கடவுளுடைய பெயர் கர்த்தர் என்பதே என்று சொல்லி, ஜெஹோவா என்ற பெயரை யெகோவாவின் சாட்சிகள் புதிதாய்க் கற்பனைசெய்து உருவாக்கியுள்ளனரெனவும் அவர்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

[படங்கள்]

தென் ஆப்பிரிக்காவில் பார்லிலுள்ள ஒரு டச் ரிஃபார்ம்ட் சர்ச். தொடக்கத்தில், இந்த மூலைக்கல்லின்மீது (மேலே வலதுபுறம்) யெகோவா என்ற பெயர் செதுக்கப்பட்டிருந்தது. பின்னால், அது மாற்றீடு செய்யப்பட்டது (மேலே இடதுபுறம்)

[பக்கம் 18-ன் படம்]

பிரான்ஸில், பாரிஸிலுள்ள ஸ்டீ. ஜெனீவீவ் நூல்நிலையத்திலிருந்து வரும் (13-வது அல்லது 14-வது நூற்றாண்டுக்குரியதாகத் தேதி குறிப்பிட்டுள்ள) இந்தக் கையெழுத்துப் பிரதியில் (folio 162b) காண்கிறபடி, கடவுளுடைய பெயர் யொஹோவா (Yohoua) 1278-ல் Pugio fidei என்ற நூலில் காணப்பட்டது

[பக்கம் 19-ன் படம்]

1530-ல் பிரசுரித்த, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களாகிய தன் மொழிபெயர்ப்பில், உவில்லியம் டின்டேல் யாத்திராகமம் 6:3-ல் கடவுளுடைய பெயர் அடங்கியிருக்கச் செய்தார். அந்த மொழிபெயர்ப்புக்குரிய ஒரு குறிப்பில் அந்தப் பெயரைத் தான் பயன்படுத்தினதற்கு விளக்கத்தைக் கொடுத்தார் (புகைப்படம், நியூ யார்க்கிலுள்ள அமெரிக்கன் பைபிள் சொஸையிட்டி நூலகத்தின் அனுமதியின் பேரில்)

[படத்திற்கான நன்றி]

(Photograph courtesy of the American Bible Society Library, New York)