Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

10. கிறிஸ்தவம்கடவுளிடம் செல்ல இயேசு வழியாக இருந்தாரா?

10. கிறிஸ்தவம்கடவுளிடம் செல்ல இயேசு வழியாக இருந்தாரா?

அதிகாரம் 10

கிறிஸ்தவம்—கடவுளிடம் செல்ல இயேசு வழியாக இருந்தாரா?

யூத மதத்தை தவிர, புராணவியலை பெருமளவு அடைப்படையாக கொண்ட முக்கிய மதங்களைப் பற்றி இதுவரை சிந்தித்தோம். மனிதவர்க்கத்தைக் கடவுளிடம் வழிநடத்துவதாக சொல்கிற மற்றொரு மதத்தைப் பற்றி இப்போது நாம் ஆராயலாம். அதுவே கிறிஸ்தவம். கிறிஸ்தவ மதத்திற்கு எது அடிப்படை​—புராணக்கதையா சரித்திர உண்மையா?

யுத்தங்களுக்கும் ஒடுக்குமுறை விசாரணைகளுக்கும் சிலுவைப் போர்களுக்கும் மத மாய்மாலத்திற்கும் பேர்போன கிறிஸ்தவமண்டலம் a கிறிஸ்தவத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. இறைப்பற்றுமிக்க முஸ்லிம்களும் மற்றவர்களும் மேற்கே “கிறிஸ்தவ” உலகில் காணப்படும் ஒழுக்கச் சீர்குலைவையும் சீரழிவையும் சுட்டிக்காட்டி கிறிஸ்தவத்தை நிராகரிக்கின்றனர். ஆம், கிறிஸ்தவ நாடுகள் என சொல்லிக்கொள்பவை ஒழுக்கம் எனும் சுக்கானை தொலைத்துவிட்டு அவிசுவாசம், பேராசை, சுகபோகம் என்ற பாறைகளில் மோதி கப்பற்சேதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

2ஆரம்ப கால உண்மை கிறிஸ்தவத்தின் தராதரங்கள் இன்று காணப்படுகிற கட்டுப்பாடில்லா பழக்கவழக்கங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஆதாம், ஏவாள், சர்ப்பம் என்று தலைப்பிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் எலேன் பேஜல்ஸ் என்ற பேராசிரியை இதற்கு சான்றளிக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “முதல் நான்கு நூற்றாண்டுகளில் வாழ்ந்துவந்த பல கிறிஸ்தவர்கள் தாங்கள் கடைப்பிடித்து வந்த பாலியல் கட்டுப்பாட்டைக் குறித்து சந்தோஷப்பட்டனர்; பலதார மணம், மணவிலக்கு ஆகிய பழக்கங்களை யூத பாரம்பரியம் அனுமதித்திருந்தது. ஆனால் கிறிஸ்தவர்களோ அவற்றை அடியோடு தவிர்த்தனர்; அதுமட்டுமல்ல, கள்ளக்காதல், விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி ஆகியவை அக்காலத்தில் வாழ்ந்துவந்த புறமதத்தினர் மத்தியில் சர்வசாதாரணமாக காணப்பட்டன, ஆனால் கிறிஸ்தவர்களோ அவற்றை அறவே வெறுத்தனர்.”

3ஆகவே கிறிஸ்தவமண்டலத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய ஒழுக்க நிலையையும் பார்க்கையில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அது உண்மையில் பின்பற்றுகிறதா என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. இயேசு எப்படிப்பட்ட மனிதராக இருந்தார்? மனிதவர்க்கம் கடவுளிடம் நெருங்கி செல்ல அவர் உதவினாரா? எபிரெய தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்த வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அவர்தானா? இந்த அதிகாரத்தில் நாம் சிந்திக்கப் போகும் சில கேள்விகளே இவை.

இயேசு​—அவருக்குரிய சான்றுகள் யாவை?

4உலகிலுள்ள ஏறக்குறைய எல்லா பிரபல மதங்களிலும் புராணக்கதைகள் முக்கிய பங்கு வகித்திருப்பதை இப்புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களில் நாம் பார்த்தோம். ஆனால் முந்தைய அதிகாரத்தில், யூத மதம் தோன்றிய விதத்தை சிந்திக்கையில் புராணத்தின் அடிப்படையில் நாம் சிந்திக்க ஆரம்பிக்கவில்லை; மாறாக ஆபிரகாம், அவருடைய முற்பிதாக்கள், அவருடைய சந்ததியார் என உண்மையில் வாழ்ந்தவர்களைப் பற்றிய வரலாற்று விவரங்களோடு ஆரம்பித்தோம். அதே விதமாக இப்போது கிறிஸ்தவத்தையும் அதன் ஸ்தாபகராகிய இயேசுவையும் பற்றி சிந்திக்கையில் புராணத்தை அல்ல, ஆனால் உண்மையில் வாழ்ந்த ஒருவரைப் பற்றிய வரலாற்று விவரத்தோடுதான் நாம் ஆரம்பிக்கப் போகிறோம்.​—பக்கம் 237-லுள்ள பெட்டியைக் காண்க.

5புதிய ஏற்பாடு (பக்கம் 241-லுள்ள பெட்டியைக் காண்க) என பொதுவாக அழைக்கப்படும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதல் வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு.” (மத்தேயு 1:1) வரிவசூலிக்கும் யூதராக இருந்தவரும், இயேசுவின் சீஷராக மாறியவரும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான மத்தேயு இவ்வாறு சொன்னது ஆதாரமற்றதா? இல்லை. அதைத் தொடர்ந்துவரும் 15 வசனங்கள் ஆபிரகாமின் வம்சத்தினரைப் பற்றி யாக்கோபு வரையாக குறிப்பிட்டுவிட்டு, இந்த யாக்கோபு “மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவனிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்” என்று சொல்கிறது. ஆக, இயேசு உண்மையிலேயே ஆபிரகாம், யூதா, தாவீது ஆகியோரின் சந்ததியில் வந்தவர்; இவ்வாறு அவர் ஆதியாகமம் 3:15-லும் ஆபிரகாமிடமும் முன்னறிவிக்கப்பட்ட “வித்து”க்குரிய மூன்று சான்றுகளை உடையவராக இருந்தார்.​—ஆதியாகமம் 22:18; 49:10; 1 நாளாகமம் 17:11.

6மேசியானிய வித்துவைப் பற்றிய மற்றொரு சான்று அவருடைய பிறப்பிடம். இயேசு எங்கே பிறந்தார்? ‘ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தார்’ என்பதாக மத்தேயு நமக்குச் சொல்கிறார். (மத்தேயு 2:1) வைத்தியனான லூக்காவின் பதிவு இதை உறுதிப்படுத்துகிறது; இயேசுவின் வளர்ப்பு தந்தையைக் குறித்து அவர் இவ்வாறு சொல்கிறார்: ‘யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.’​—லூக்கா 2:4, 5.

7இயேசு நாசரேத்திலோ வேறொரு பட்டணத்திலோ பிறப்பதற்கு பதிலாக பெத்லகேமில் பிறப்பது ஏன் முக்கியமாக இருந்தது? எபிரெய தீர்க்கதரிசியாகிய மீகா பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டிலே உரைத்த ஒரு தீர்க்கதரிசனம்தான் இதற்கு காரணம்: “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.” (மீகா 5:2) இவ்வாறு இயேசு தாம் பிறந்த இடத்தின் காரணமாக வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகவும் மேசியாவாகவும் இருப்பதற்குரிய மற்றொரு சான்றைப் பெற்றிருந்தார்.​—யோவான் 7:42.

8சொல்லப்போனால், எபிரெய வேதாகமத்திலுள்ள இன்னும் அநேக தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றினார். இதனால் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இருப்பதற்குத் தேவையான எல்லா சான்றுகளும் தமக்கு இருப்பதை நிரூபித்தார். சிலவற்றை நீங்களே பைபிளிலிருந்து பார்த்து தெரிந்துகொள்ளலாம். (பக்கம் 245-ல் உள்ள பெட்டியைக் காண்க.) b இப்போது, இயேசுவின் செய்தியையும் அவருடைய ஊழியத்தையும் பற்றி சுருக்கமாக சிந்திக்கலாம்.

இயேசுவின் வாழ்க்கை வழி காட்டுகிறது

9இயேசு மற்ற யூத பிள்ளைகளைப் போலவே சாதாரணமாக வளர்க்கப்பட்டார் என்றும், உள்ளூர் ஜெபாலயத்துக்கும் எருசலேமிலிருந்த ஆலயத்துக்கும் சென்று வந்தார் என்றும் பைபிள் பதிவு நமக்கு சொல்கிறது. (லூக்கா 2:41-52) 30 வயதானபோது அவர் தம்முடைய ஊழியத்தை தொடங்கினார். மனந்திரும்புதலுக்கு அடையாளமாக யோர்தான் நதியில் யூதர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்த தம் உறவினரான யோவானிடம் முதலில் அவர் சென்றார். லூக்காவின் பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது: “ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன்; உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”​—லூக்கா 3:21-23; யோவான் 1:32-34.

10கடவுளுடைய அபிஷேகம் பெற்ற மைந்தனாக இயேசு தமது ஊழியத்தை உரிய காலத்தில் ஆரம்பித்தார். கலிலேயா, யூதேயா முழுவதிலுமாக பிரயாணம் செய்து தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியைப் பிரசங்கித்தார், அதோடு வியாதியஸ்தரைக் குணப்படுத்தியது போன்ற அற்புதங்கள் பலவற்றையும் புரிந்தார். இதற்கு ஜனங்களிடமிருந்து அவர் பணம் வாங்கவில்லை, செல்வத்தையோ பேர் புகழையோகூட நாடவில்லை. சொல்லப்போனால், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதிலே அதிக சந்தோஷம் என கூறினார். அதுமட்டுமல்ல, எப்படி பிரசங்கிப்பது என்பதையும் தம்முடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.​—மத்தேயு 8:20; 10:7-13; அப்போஸ்தலர் 20:35.

11இயேசு பிரசங்கித்த செய்தியையும் அவர் பயன்படுத்திய முறைகளையும் கூர்ந்து ஆராய்கையில், கிறிஸ்தவமண்டல பிரசங்கிமார்களுடைய பாணியிலிருந்து அவருடைய பாணி முற்றிலும் வித்தியாசமாயிருப்பதைக் காண்கிறோம். கேவலமான விதத்தில் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்க வைத்தோ நரக அக்கினியைப் பற்றி பேசி பயமுறுத்தியோ அவர்களை தம்மிடம் ஈர்த்துக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக எளிமையான நியாய விவாதத்தையும் தினசரி வாழ்க்கையில் கண்டவற்றை பற்றிய உவமைகளையும் மனதை சுண்டியிழுக்கும் விதத்தில் அவர் பயன்படுத்தினார். அவருடைய போதனைகளுக்கும் போதனை முறைகளுக்கும் தலைசிறந்த உதாரணம் பிரசித்தி பெற்ற மலைப்பிரசங்கமாகும். அவர் கற்பித்த பரமண்டல ஜெபமும் அந்தப் பிரசங்கத்தில் உள்ளது. அந்த ஜெபத்தில், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அவர் முதலிடம் கொடுத்தார்; இதன் மூலம் ஒரு கிறிஸ்தவன் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டினார். (பக்கங்கள் 258-9-ல் உள்ள பெட்டியைக் காண்க.)​மத்தேயு 5:1–7:29; 13:3-53; லூக்கா 6:17-49.

12தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் மட்டுமல்ல, பொதுமக்களிடம்கூட இயேசு அன்போடும் கரிசனையோடும் நடந்துகொண்டார். (மாற்கு 6:30-34) கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் அவர் அன்பையும் மனத்தாழ்மையையும் வெளிக்காட்டினார். இதன் காரணமாகவே இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன் அவரால் தம் சீஷர்களிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) ஆக, நியமத்தின் அடிப்படையிலான சுய தியாக அன்பை வெளிக்காட்டுவதே கிறிஸ்தவத்தின் சாராம்சமாகும். (மத்தேயு 22:37-40) நடைமுறையில் இது எதை அர்த்தப்படுத்துகிறது? ஒரு கிறிஸ்தவன் தன் சத்துருக்களின் பொல்லாத செயல்களை வெறுத்தாலும் அவர்களை வெறுக்கக் கூடாது, மாறாக அவர்களை நேசிக்க வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. (லூக்கா 6:27-31) உண்மையில் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்டினால் இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்!​—ரோமர் 12:17-21; 13:8-10.

13ஆனால், கன்பூசியஸும் லாவொட்ஸேயும் கற்பித்தது போன்ற வெறும் ஒரு நன்னெறியை அல்லது தத்துவத்தை இயேசு போதிக்கவில்லை. மேலும், புத்தர் கற்பித்ததைப் போல அறிவினாலும் ஞானோதயத்தினாலும் ஒருவர் தானாகவே இரட்சிப்பை அடைந்துவிட முடியும் எனவும் அவர் கற்பிக்கவில்லை. அதற்கு பதிலாக, கடவுளே இரட்சிப்புக்கு மூலகாரணர் என அவர் சுட்டிக்காட்டினார்; அவர் சொன்னதாவது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”​—யோவான் 3:16, 17.

14தம்முடைய தந்தையின் அன்பை இயேசு சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டினார்; இதன் மூலம் மக்களை அந்தத் தந்தையிடமாக நெருங்கிவரச் செய்தார். அதனால்தான் அவரால் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். . . . என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார். . . . நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” (யோவான் 14:6-28) ஆம், மெய்க் கடவுளான தம் பிதாவாகிய யெகோவாவிடம் அக்காலத்து யூத மக்கள் திரும்பி வருவதற்கு இயேசு உதவியதால் அவரே “வழியும் சத்தியமும் ஜீவனு”மாயிருந்தார் என்று சொல்லலாம். ஆகவே, இயேசுவின் வருகை கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடுதலை திடீரென சூடுபிடிக்க வைத்தது. ஏனென்றால் ஜனங்களை தம்மிடம் வழிநடத்த இயேசுவை கடவுள் இப்பூமிக்கு அனுப்பி வைத்திருந்தார்; ஆம், தமது அளவுகடந்த அன்பின் காரணமாக ஒளி மற்றும் சத்தியத்தின் வழிகாட்டியாய் அவரை இங்கே அனுப்பி வைத்திருந்தார்.​—யோவான் 1:9-14; 6:44; 8:31, 32.

15இயேசு செய்த ஊழியத்தையும் அவருடைய முன்மாதிரியையும் அடிப்படையாகக் கொண்டே ஏதன்ஸ் நகரத்திலிருந்த கிரேக்கர்களிடம் மிஷனரியான பவுலால் பிற்பாடு இவ்வாறு சொல்ல முடிந்தது: “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:26-28) ஆம், கடவுளைத் தேட ஒருவருக்கு மனமிருந்தால் நிச்சயம் அவரை கண்டுபிடித்து விடலாம். (மத்தேயு 7:7, 8) கணக்குவழக்கில்லா உயிர் வகைகளை பேணிக் காக்கும் ஒரு பூமியை அளித்திருப்பதன் வாயிலாக, கடவுள் தமது பிரசன்னத்தையும் தமது அன்பையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நல்லவர்களுக்கும் சரி, கெட்டவர்களுக்கும் சரி, தேவையானவற்றையெல்லாம் அவர் அளித்து வருகிறார். தம்முடைய வார்த்தையான பைபிளை தந்திருக்கிறார், தம்முடைய மைந்தனையும் மீட்கும் பலியாக அளித்திருக்கிறார். c அதுமட்டுமல்ல, மக்கள் தம்மிடம் அண்டி வருவதற்கான வழியைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.​—மத்தேயு 5:43-45; அப்போஸ்தலர் 14:16, 17; ரோமர் 3:23-26.

16உண்மைதான், கிறிஸ்தவ அன்பு வெறும் வார்த்தைகளில் அல்ல, ஆனால் செயல்களில் வெளிப்பட வேண்டும்; அதுவே முக்கியம். ஆகையால்தான் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”​—1 கொரிந்தியர் 13:4-8.

17பரலோக ராஜ்யத்தை, அதாவது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் மீதான கடவுளுடைய ஆட்சியை பற்றி அறிவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இயேசு மிகத் தெளிவாக காட்டினார்.​—மத்தேயு 10:7; மாற்கு 13:10.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் சுவிசேஷகன்

18சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்கு முன்னால் பிரகாசிக்கும் பொறுப்பு ஜனங்களுக்கு இருக்கிறதென இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் வலியுறுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:14-16) ஊர் ஊராக சென்று ஊழியம் செய்கையில் எப்படி பிரசங்கிப்பது, எப்படி போதிப்பது என்பதையெல்லாம் சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். அவர்கள் என்ன செய்தியை பிரசங்கிக்க வேண்டியிருந்தது? இயேசு எந்த செய்தியை பிரசங்கித்தாரோ அதே செய்தியையே, அதாவது பூமியை நீதியோடு ஆட்சி செய்யப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியே அவர்கள் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. ஒரு சமயம் இயேசு தாமே இவ்வாறு விளக்கினார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக்கா 4:43; 8:1; 10:1-12) கடைசி நாட்களுக்குரிய அடையாளத்தின் ஒரு பாகமாக “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்பதாகவும் அவர் சொன்னார்.​—மத்தேயு 24:3-14.

19உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பொ.ச. 33-ல் பரலோகத்துக்கு செல்வதற்கு முன்பு, தம்முடைய சீஷர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:18-20) கிறிஸ்தவர்கள் ஆரம்பத்திலிருந்தே மதம் மாற்றும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததற்கு இது ஒரு காரணமாகும். புராணக்கதைகளின் அடிப்படையில் உருவாயிருந்த கிரேக்க, ரோம மதங்களைப் பின்பற்றியவர்களின் கோபத்தையும் பொறாமையையும் தூண்டிவிட்டதும் இதுவே. எபேசு பட்டணத்தில் பவுல் துன்புறுத்தப்பட்டது இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது.​—அப்போஸ்தலர் 19:23-41.

20இப்போது சில கேள்விகள் எழுகின்றன: தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி மரித்தோரைப் பற்றி என்ன சொல்கிறது? மரித்தோருக்கு என்ன எதிர்கால நம்பிக்கை இருப்பதாக கிறிஸ்து பிரசங்கித்தார்? தம்மை விசுவாசிக்கிறவர்கள் மரித்த பின், அவர்களுடைய “சாவாமையுள்ள ஆத்மாக்களை” “நரக அக்கினி”யிலிருந்து இரட்சிக்கப் போவதாக சொன்னாரா? அல்லது அவர்களுக்கு வேறொரு நம்பிக்கை இருப்பதாக சொன்னாரா?​—மத்தேயு 4:17.

நித்திய ஜீவ நம்பிக்கை

21இயேசு மரித்தோருக்கு என்ன நம்பிக்கை இருப்பதாக பிரசங்கித்தார் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள அவருடைய நண்பன் லாசரு மரித்தபோது அவர் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். லாசருவின் மரணத்தை இயேசு எப்படி கருதினார்? லாசருவின் வீட்டுக்குப் புறப்படுகையில் இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன்.” (யோவான் 11:11) இயேசு, லாசருவின் மரணத்தை நித்திரைக்கு ஒப்பிட்டு பேசினார். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் நாம் எதையும் அறிய மாட்டோம். இது எபிரெயுவில் எழுதப்பட்ட பிரசங்கி 9:5-ல் உள்ள வார்த்தைகளுக்கு இசைவாக உள்ளது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”

22லாசரு மரித்து நான்கு நாட்கள் கடந்திருந்தது; என்றாலும், இயேசு என்ன சொன்னார் என்பதை கவனித்தீர்களா? லாசருவுடைய ஆத்மா பரலோகத்திலோ நரகத்திலோ உத்தரிக்கும் ஸ்தலத்திலோ இருப்பதாக அவர் எதையுமே குறிப்பிடவில்லை! இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது அவரை சந்திக்க வந்த லாசருவின் சகோதரி மார்த்தாளிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று சொன்னார். அதற்கு அவள் எவ்வாறு பதிலளித்தாள்? ஏற்கெனவே லாசரு பரலோகத்துக்குச் சென்றுவிட்டதாக சொன்னாளா? இல்லை, “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்றே சொன்னாள். ஆம், பூமியில் உயிர்த்தெழுதல் நடைபெறுகையில் மரித்தவர்கள் திரும்ப உயிரடைவார்கள் என்றுதான் அச்சமயத்திலிருந்த யூதர்கள் நம்பினார்கள்.​—யோவான் 11:23, 24, 38, 39.

23இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா” என்று கேட்டார். (யோவான் 11:25, 26) தமது குறிப்பை நிரூபிப்பதற்காக லாசருவின் கல்லறைக்கு அருகே சென்றார், பிறகு அவரை எழுந்து வரும்படியாக உரத்த குரலில் சொன்னார். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் கண்ணாரக் காணும்படி அவர்களுக்கு முன்னால் லாசருவை உயிர்த்தெழுப்பினார். பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். . . . அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.” (யோவான் 11:45; 12:17) அவர் செய்த அற்புதத்தை அவர்கள் நேரில் கண்டார்கள், நம்பினார்கள். அதுமட்டுமல்ல, அது உண்மையிலேயே நடந்ததென்று யாவருக்கும் சொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவின் மத எதிரிகளும்கூட இந்தச் சம்பவத்தை நம்பியிருக்க வேண்டும், ஏனென்றால் “இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே” என்று சொல்லிதான் பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் இயேசுவை கொலை செய்ய ஆலோசனை செய்தார்கள் என்று பதிவு நமக்கு சொல்கிறது.​—யோவான் 11:30-53.

24மரித்திருந்த அந்த நான்கு நாட்களும் லாசரு எங்கே இருந்தார்? எங்குமே இல்லை. அவர் உணர்வற்றவராக கல்லறையில் நித்திரையடைந்த நிலையில் இருந்தார், உயிர்த்தெழுப்பப்படுவதற்காக காத்திருந்தார். பிறகு இயேசு அவரை அற்புதமாக உயிர்த்தெழுப்பினார்; இப்படி செய்ததன் மூலம் மரித்திருந்த லாசருவை அவர் ஆசீர்வதித்தார். ஆனால் யோவானின் பதிவின்படி, அந்த நான்கு நாட்கள் தான் பரலோகத்திலோ நரகத்திலோ உத்தரிக்கும் ஸ்தலத்திலோ இருந்ததாக லாசரு சொல்லவே இல்லை. ஏன் சொல்லவில்லை? ஏனென்றால் சாவாமையுள்ள ஆத்மா என்ற ஒன்று அவருக்குள் இல்லவே இல்லை. dயாத்திராகமம் 12:15; எசேக்கியேல் 18:4.

25ஆகவே இயேசு இரு அர்த்தங்களில் நித்திய ஜீவனைப் பற்றி குறிப்பிட்டார்; அதாவது, சாவாமையுள்ள ஆவி ஆளாக மாற்றப்பட்டு பரலோகத்தில் அவருடைய ராஜ்யத்தில் உடன் அரசராக வாழ்கிற வாழ்க்கையையும், ராஜ்ய ஆட்சியின்கீழ் பரதீஸிய பூமியில் மனிதர்களாக அனுபவிக்கப் போகிற வாழ்க்கையையும் அர்த்தப்படுத்தினார். e (லூக்கா 23:43; யோவான் 17:3) கடவுளுடைய வாக்குறுதியின்படி, அடையாள அர்த்தத்தில் அவர் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தோடு வாசம் செய்வது பூமிக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். ஆனால் இவை அனைத்தும் இயேசு உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டு அவரால் அங்கீகரிக்கப்பட்டாரா என்பதன் பேரிலேயே சார்ந்திருக்கின்றன.​—லூக்கா 22:28-30; தீத்து 1:1, 3; வெளிப்படுத்துதல் 21:1-4.

கடவுளுடைய அங்கீகாரம்​—புராணம் அல்ல, நிஜம்

26இயேசுவுக்கு கடவுளுடைய அங்கீகாரம் இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்? முதலாவதாக, இயேசு முழுக்காட்டப்பட்டபோது “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மத்தேயு 3:17) பின்னர் இந்த அங்கீகாரம் மற்ற சாட்சிகளுக்கு முன்பாக உறுதிசெய்யப்பட்டது. கலிலேயாவில் முன்பு மீனவர்களாக இருந்த பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இயேசுவோடுகூட ஓர் உயரமான மலைக்கு சென்றனர் (ஒருவேளை அது எர்மோன் மலையாக இருந்திருக்கலாம், அது 9,232 அடி உயரமுள்ளது). அங்கே அவர்கள் கண்களுக்கு முன்னால் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் நடந்தது: “அவர்களுக்கு முன்பாக [இயேசு] மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். . . . இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.”​—மத்தேயு 17:1-6; லூக்கா 9:28-36.

27கடவுள் இவ்வாறு உறுதியளித்ததை கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்ட பேதுருவுக்கு விசுவாசம் மிகவும் பலப்பட்டது, ஏனெனில் அவர் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் [கிரேக்கில்: மித்தாயிஸ், புராணங்கள்] பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.” (2 பேதுரு 1:16-18) யூத சீஷர்களான பேதுருவும் யாக்கோபும் யோவானும் உண்மையில் இயேசு மறுரூபமான அந்த அற்புதக் காட்சியை நேரில் கண்டார்கள், பரலோகங்களிலிருந்து கடவுள் அவரை அங்கீகரித்ததையும் காதாரக் கேட்டார்கள். அவர்களுடைய விசுவாசத்துக்கு ஆதாரமாக இருந்தது புராணக்கதைகளோ “யூதருடைய கட்டுக்கதை”களோ அல்ல, மாறாக அவர்கள் கண்ணால் கண்டதும் காதால் கேட்டதுமான உண்மை விஷயங்களே. (பக்கம் 237-ல் உள்ள பெட்டியைக் காண்க.)​மத்தேயு 17:9; தீத்து 1:13, 14. f

இயேசுவின் மரணமும் மற்றொரு அற்புதமும்

28பொ.ச. 33-ஆம் ஆண்டில், இயேசு தம்மை கடவுளுடைய குமாரன் என்று சொன்னதற்காக தேவதூஷணம் கூறியதாய் அவர் மீது யூத மதத் தலைவர்கள் பொய்க் குற்றஞ்சாட்டி அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். (மத்தேயு 26:3, 4, 59-67) ரோம அரசாங்க அதிகாரிகள் அவரை கொலை செய்ய வேண்டும் என்று அந்த யூதர்கள் விரும்பியதால் அவரை பிலாத்துவினிடம் அனுப்பி அவர் மீது மறுபடியும் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். இராயனுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று சொன்னதாகவும் தம்மை ராஜா என்று சொன்னதாகவும் இந்த முறை குற்றஞ்சாட்டினார்கள்.​—மாற்கு 12:14-17; லூக்கா 23:1-11; யோவான் 18:28-31.

29ஆட்சியாளர்கள் அவரை மாறிமாறி அங்கும் இங்குமாக அனுப்பினார்கள்; பிறகு, மத எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட ஜனக்கூட்டத்தின் வற்புறுத்துதலுக்கு இணங்கி, ரோம அதிபதி பொந்தியு பிலாத்து அவருக்கு மரண தண்டனை அளித்தான். விளைவு? இயேசு கழுமரத்தில் அவமானத்துக்குரிய விதத்தில் மரிக்க வேண்டியிருந்தது. அவருடைய உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. என்றாலும், மூன்றாம் நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கடும் துக்கத்திலிருந்த சீஷர்களை பெரும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் விசுவாசிகளாகவும் வைராக்கியமான சுவிசேஷகர்களாகவும் ஆக்கியது.​—யோவான் 19:16-22; கலாத்தியர் 3:13.

30இயேசுவின் சீஷர்கள் தந்திரமாக எதையாவது செய்துவிடுவார்கள் என்று மதத் தலைவர்கள் சந்தேகித்து, பிலாத்துவிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டனர்: “ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரை போட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.” (மத்தேயு 27:62-66) அது எந்தளவு பத்திரமாக இருந்தது?

31இயேசு மரித்த மூன்றாம் நாளிலே அவரது உடலுக்கு நறுமணத் தைலமிட மூன்று பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள் கண்டது என்ன? “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப் பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.” (மாற்கு 16:1-7; லூக்கா 24:1-12) மதத் தலைவர்கள் சிறப்புக் காவலர்களை நியமித்திருந்தபோதிலும் இயேசுவை அவருடைய பரம பிதா உயிர்த்தெழுப்பியிருந்தார். அது கட்டுக்கதையா அல்லது சரித்திரப்பூர்வ உண்மையா?

32இந்தச் சம்பவம் நடந்து சுமார் 22 ஆண்டுகளான பின்பு, பவுல் என்பவர்​—கிறிஸ்தவர்களை முன்பு துன்புறுத்திக் கொண்டிருந்தவர்—கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற நம்பிக்கை தனக்கு எப்படி வந்தது என்பதை பின்வருமாறு எழுதி விளக்கினார்: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:3-7) ஆம், உயிர்த்தெழுப்பப்பட்டிருந்த இயேசுவுக்காக தன் உயிரை பணயம் வைக்க பவுலுக்கு உண்மையான ஆதாரம் இருந்தது, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை நேரில் பார்த்திருந்த சுமார் 500 பேரின் அத்தாட்சியும் இருந்தது! (ரோமர் 1:1-4) ஆம், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதை பவுல் நம்பினார். அப்படி நம்புவதற்கு இன்னும் வலுவான ஒரு காரணமும் அவருக்கு இருந்தது. அவரே அதை விளக்குகிறார்: “எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.”​—1 கொரிந்தியர் 15:8, 9; அப்போஸ்தலர் 9:1-19.

33ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ரோம அரங்குகளில் இரத்த சாட்சிகளாய் மரிக்கவும் மனமுள்ளவர்களாக இருந்தனர். ஏன்? ஏனென்றால் தங்களுடைய விசுவாசத்துக்கு புராணக்கதைகள் அல்ல, ஆனால் சரித்திரப்பூர்வமான உண்மை சம்பவங்களே ஆதாரமாக இருந்தன என்பதை அறிந்திருந்தனர். ஆம், இயேசுவே தீர்க்கதரிசனங்களில் வாக்குப்பண்ணப்பட்டிருந்த கிறிஸ்து, அதாவது மேசியா, கடவுள் அவரை பூமிக்கு அனுப்பியிருந்தார், கடவுளுடைய அங்கீகாரத்தை அவர் பெற்றிருந்தார், உத்தமத்தைக் காத்துக்கொண்ட புத்திரனாக கழுமரத்தில் மரித்தார், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் ஆகிய விஷயங்களெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையானவை.​—1 பேதுரு 1:3, 4.

34உயிர்த்தெழுதலைப் பற்றி பவுல் என்ன நம்பினார் என்பதையும் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு அது ஏன் இன்றியமையாதது என்பதையும் புரிந்துகொள்ள கொரிந்தியர்களுக்கு அவர் எழுதின முதல் கடிதத்தில் 15-ஆம் அதிகாரத்தை நீங்கள் முழுவதுமாக வாசிக்கும்படி சிபாரிசு செய்கிறோம். அவருடைய செய்தியின் சாராம்சத்தை இந்த வார்த்தைகளில் நாம் காணலாம்: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் [ஆதாமால்] மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”​—1 கொரிந்தியர் 15:20-22.

35ஆகவே, கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு ஒரு நோக்கமிருக்கிறது, இந்த நோக்கம் கடைசியில் முழு மனிதவர்க்கத்திற்கும் நன்மையானதாய் இருக்கும். g எஞ்சியிருந்த மேசியானிய தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றுவதையும் இது சாத்தியமாக்கியது. காணக்கூடாத பரலோகங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் அவருடைய நீதியுள்ள ஆட்சி சுத்திகரிக்கப்பட்ட பூமிக்கு சீக்கிரத்தில் வரும். அப்போது, பைபிள் விவரிக்கிறபடி, ‘புதிய வானமும் புதிய பூமியும்’ உண்டாயிருக்கும். அச்சமயத்தில் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்ற வாக்குறுதி நிறைவேறும்.​—வெளிப்படுத்துதல் 21:1-4.

விசுவாசதுரோகமும் துன்புறுத்தலும் எதிர்பார்க்கப்பட்டன

36இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் சற்று பின்பு மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் செய்த பிரசங்க வேலைக்கு அது பலத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. அதாவது, பொ.ச. 33-ஆம் ஆண்டில் பெந்தெகொஸ்தே நாளன்று கடவுள் பரலோகத்திலிருந்து அவருடைய பரிசுத்த ஆவியை, அதாவது செயல்நடப்பிக்கும் சக்தியை எருசலேமில் கூடிவந்திருந்த சுமார் 120 கிறிஸ்தவர்கள் மீது ஊற்றினார். விளைவு? “அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” (அப்போஸ்தலர் 2:3, 4) படிப்பறிவில்லாதவர்களாக கருதப்பட்ட அந்த கலிலேய யூதர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதைக் கேட்டு எருசலேமிலிருந்த அயல்மொழி பேசிய யூதர்கள் அப்படியே அசந்துபோனார்கள். இதன் விளைவாக அநேகர் விசுவாசிகளானார்கள். புதிதாக மதம் மாறிய இந்த யூத விசுவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியபோது கிறிஸ்தவத்தைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது.​—அப்போஸ்தலர் 2:5-21.

37ஆனால், எதிர்ப்பு எனும் புயல் மேகங்கள் விரைவில் திரண்டன. விக்கிரகங்களைப் பயன்படுத்தாததால் கடவுள் நம்பிக்கையற்றவர்களைப் போல தோன்றிய இந்தப் புதிய மதத்தினரைக் குறித்து ரோமர்கள் கலக்கமடைந்தனர். பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் அரசன் நீரோ தொடங்கி பல ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் மீது பயங்கரமான துன்புறுத்தலை கொண்டு வந்தனர். h வேடிக்கை பார்க்க வந்த, இரத்த வெறிபிடித்த அரசர்களையும் ஜனக்கூட்டத்தையும் திருப்தி செய்யும் விதத்தில், வழக்கமாக அரங்குகளில் கைதிகள் காட்டு மிருகங்களிடம் தூக்கி எறியப்பட்டனர்; இதே முறையில்தான் அநேக கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

38அமைதியைக் குலைக்கும் விதமாக அந்த ஆரம்ப நாட்களில் மற்றொரு காரியம் நிகழ்ந்தது; அதை அப்போஸ்தலர்கள் ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார்கள். உதாரணத்திற்கு, பேதுரு இவ்வாறு சொன்னார்: “கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப் பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்ளுவார்கள்.” (2 பேதுரு 2:1-3) விசுவாசதுரோகம்! அதாவது உண்மை வணக்கத்திலிருந்து வீழ்ந்துபோதல். ஆம், கிரேக்க தத்துவங்களாலும் சிந்தனைகளாலும் ஊறிப்போயிருந்த ரோமாபுரியின் அன்றைய மதப்போக்குடன் கிறிஸ்தவம் இரண்டற கலந்தது. இது எவ்வாறு நிகழ்ந்தது? எமது அடுத்த அதிகாரம் இதற்கும் இது சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.​—அப்போஸ்தலர் 20:30; 2 தீமோத்தேயு 2:16-18; 2 தெசலோனிக்கேயர் 2:3.

[அடிக்குறிப்புகள்]

a “கிறிஸ்தவமண்டலம்” என்று சொல்கையில் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் மத உட்பிரிவுகள் அனைத்தையும் ஒரு தொகுதியாக குறிக்கிறோம். “கிறிஸ்தவம்” என்பது ஆரம்பத்தில் இருந்த உண்மையான வணக்கமுறையையும் இயேசு கிறிஸ்து கற்பித்த முறையில் கடவுளை வணங்குவதையும் குறிக்கிறது.

b 1988-ல் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த வேதாகமத்தின்பேரில் உட்பார்வை ஆங்கில புத்தகம், தொகுதி 2-ல் பக்கங்கள் 385-9, “மேசியா” என்ற தலைப்பின் கீழும் காண்க.

c மீட்கும் பொருள், அதன் முக்கியத்துவம் பற்றிய பைபிளின் போதனை அதிகாரம் 15-ல் தெளிவாக விளக்கப்படும்.

d “சாவாமையுள்ள ஆத்மா” என்ற சொற்றொடர் பைபிளில் எந்த இடத்திலும் காணப்படுவதில்லை. “சாவாமையுள்ள,” “சாவாமை” என மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை மூன்று தடவை மாத்திரமே காணப்படுகிறது. இது தரித்துக்கொள்ளப்படும் அல்லது பெற்றுக்கொள்ளப்படும் ஒரு புதிய ஆவி உடலைக் குறிக்கிறது, உள்ளியல்பாக இருக்கும் ஒன்றை அல்ல. கிறிஸ்துவும் அவரோடு பரலோக ராஜ்யத்தில் உடன் அரசர்களாக ஆட்சி செய்யப்போகும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் மாத்திரமே இதைப் பெற்றுக்கொள்வர்.​—1 கொரிந்தியர் 15:53, 54; 1 தீமோத்தேயு 6:16; ரோமர் 8:17; எபேசியர் 3:3; வெளிப்படுத்துதல் 7:4; 14:1-5.

e இந்த ராஜ்ய ஆட்சியைப் பற்றிய விவரமான கலந்தாலோசிப்புக்கு அதிகாரம் 15-ஐ காண்க.

f தரிசனத்தில் வந்த “மோசே”யும் “எலியா”வும் இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களுக்கு அடையாளமாக இருந்தார்கள். மறுரூபக் காட்சியைப் பற்றிய கூடுதலான விளக்கத்துக்கு காவற்கோபுரம், 1997, மே 15, பக்கங்கள் 11, 12-ஐ காண்க.

g இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள 1989-ல் யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட பைபிள்​—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கங்கள் 78-86-ஐ காண்க.

h நீரோவின் ஆட்சிக்காலத்தில், “தீங்கிழைக்கும் புதிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் . . . தண்டிக்கப்பட்டனர்” என பண்டைய ரோமில் வாழ்ந்துவந்த வாழ்க்கை வரலாற்றறிஞர் சுட்டோனியஸ் (சுமார் பொ.ச. 69-140) பதிவு செய்தார்.

[கேள்விகள்]

1. (அ) கிறிஸ்தவமண்டலத்தின் சரித்திரத்தைப் பார்த்த சிலர் ஏன் கிறிஸ்தவத்தை நிராகரிக்கிறார்கள்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

2, 3. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் நடத்தையும் நவீனகால கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்தவர்களின் நடத்தையும் எப்படி நேர்மாறாக உள்ளது? (ஆ) பதிலளிக்கப்பட வேண்டிய சில கேள்விகள் யாவை?

4. நாம் இதுவரை செய்த ஆய்வில் கிறிஸ்தவத்துக்கும் அதன் ஆரம்பத்திற்கும், உலகிலுள்ள பிரபல மதங்களுக்கும் இடையில் என்ன தெளிவான வித்தியாசத்தை கவனித்திருக்கிறோம்?

5. (அ) இயேசுவே ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” என்பதற்கான மூன்று சான்றுகள் யாவை? (ஆ) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதியவர்கள் யார்?

6, 7. இயேசுவின் பிறப்பிடம் ஏன் முக்கியமாக இருந்தது?

8. இயேசு நிறைவேற்றிய சில தீர்க்கதரிசனங்கள் யாவை?

9. (அ) இயேசு தம்முடைய ஊழியத்தை எவ்வாறு தொடங்கினார்? (ஆ) இயேசுவுக்கு கடவுளுடைய அங்கீகாரம் இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்?

10, 11. (அ) பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் இயேசு பயன்படுத்திய முறைகளுக்கே உரிய சில அம்சங்கள் யாவை? (ஆ) இயேசு தம்முடைய தந்தையின் பெயருக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்?

12. (அ) இயேசு எவ்வாறு தம்முடைய போதனைகளிலும் செயல்களிலும் அன்பை வெளிக்காட்டினார்? (ஆ) உண்மையில் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டினால் உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

13. இயேசுவின் போதனை எந்த விதத்தில் கன்பூசியஸ், லாவொட்ஸே, புத்தர் ஆகியோருடைய போதனையிலிருந்து வித்தியாசமாக இருந்தது?

14. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசுவால் ஏன் சொல்ல முடிந்தது?

15. (அ) கடவுளைக் கண்டுபிடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுளுடைய அன்புக்கு பூமியில் என்ன அத்தாட்சி இருக்கிறது?

16, 17. உண்மையான கிறிஸ்தவ அன்பு எவ்வாறு வெளிப்பட வேண்டும்?

18. (அ) இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் எது சிறப்பித்துக் காட்டப்பட்டது? (ஆ) ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது? (இ) ஊழியத்துக்காக தம் சீஷர்களை இயேசு எவ்வாறு தயார்படுத்தினார், அவர்கள் என்ன செய்தியை பிரசங்கிக்க வேண்டியிருந்தது?

19, 20. (அ) உண்மை கிறிஸ்தவம் ஏன் பிரசங்க வேலையில் மும்முரமாய் ஈடுபடும் ஒரு மதமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது? (ஆ) எந்த அடிப்படைக் கேள்விகளுக்கு இப்போது நமக்கு பதில்கள் தேவை?

21, 22. (அ) மரித்த லாசருவின் நிலையை இயேசு எதற்கு ஒப்பிட்டு பேசினார், ஏன்? (ஆ) மரித்த தன் சகோதரனின் சம்பந்தமாக மார்த்தாளுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?

23. இயேசு என்ன அற்புதத்தைச் செய்தார், பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?

24. (அ) லாசரு அந்த நான்கு நாட்கள் எங்கே இருந்தார்? (ஆ) சாவாமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

25. (அ) நித்திய ஜீவனைப் பற்றி பைபிள் பேசுகையில் அது எதைக் குறிக்கிறது? (ஆ) கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் ராஜ்யம் வருவது எதைச் சார்ந்திருக்கிறது?

26. சீஷர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடைய கண்களுக்கு முன்னால் என்ன குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்தது?

27. (அ) மறுரூபக் காட்சி சீஷர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? (ஆ) இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்?

28. பொ.ச. 33-ஆம் ஆண்டில் இயேசு எவ்வாறு பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டார்?

29. இயேசு எவ்வாறு மரித்தார்?

30. தந்திரமாக ஏமாற்றப்படுவதைத் தடுக்க மதத் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

31. விசுவாசமுள்ள பெண்கள் இயேசுவின் கல்லறைக்குச் சென்றபோது என்ன நடந்தது?

32. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதை நம்புவதற்கு பவுலுக்கு என்ன உறுதியான காரணங்கள் இருந்தன?

33. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் ஏன் இரத்த சாட்சிகளாய் மரிக்க மனமுள்ளவர்களாக இருந்தார்கள்?

34. அப்போஸ்தலன் பவுலின்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஏன் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு மிகவும் இன்றியமையாதது?

35. பூமிக்கும் மனிதகுலத்திற்கும் என்ன ஆசீர்வாதங்கள் வரும் என கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார்? (ஏசாயா 65:17-25)

36. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடந்தது, அதன் விளைவு என்ன?

37. புதிய மதத்தினரான கிறிஸ்தவர்களை ரோம ஆட்சியாளர்கள் சிலர் எவ்வாறு நடத்தினார்கள்?

38. ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் அமைதியைக் குலைக்கும் என்ன நிலைமை வருமென முன்னுரைக்கப்பட்டிருந்தது?

[பக்கம் 237-ன் பெட்டி/படம்]

இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரமா?

“கிறிஸ்தவத்தின் ஸ்தாபகருடைய வாழ்க்கை சரிதையானது மனித துயரம், கற்பனை, நம்பிக்கை ஆகியவற்றின் படைப்பா? கிருஷ்ணர், ஓசைரிஸ், அட்டிஸ், அதோனிஸ், டயோனிசஸ், மித்ராஸ் போன்றவர்களின் புராணக் கதைகளுக்கு ஒப்பான வெறும் கட்டுக்கதையா?” என்று சரித்திராசிரியர் வில் டூரன்ட் கேட்கிறார். கேட்டுவிட்டு அவரே பதிலளிக்கிறார்; முதல் நூற்றாண்டில், “புதிய கிறிஸ்தவ மதத்தை எதிர்த்த, எப்பேர்ப்பட்ட கசப்புணர்வுள்ள புறஜாதியாரும் சரி, யூத எதிரிகளும் சரி” கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததை “ஒருபோதும் மறுத்ததில்லை” என்கிறார்.​—நாகரிகத்தின் கதை: பகுதி III​—இராயனும் கிறிஸ்துவும் (ஆங்கிலம்).

ரோம சரித்திராசிரியர் சுட்டோனியஸ் (சுமார் பொ.ச. 69-140) பன்னிரண்டு இராயர்கள் என்ற தன் புத்தகத்தில் பேரரசன் கிளாடியஸைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்டஸின் [கிறிஸ்துவின்] தூண்டுதலின் பேரில் ரோமிலிருந்த யூதர்கள் தொடர்ந்து அமளி பண்ணிக் கொண்டிருந்ததால் அவர்களை நகரத்திலிருந்தே அவர் வெளியேற்றினார்.” இது சுமார் பொ.ச. 50-ம் ஆண்டில் நடந்தது. (அப்போஸ்தலர் 18:1, 2-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்து உண்மையில் இருந்தார் என்பதைக் குறித்து சுட்டோனியஸுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை என்பதை கவனியுங்கள். அந்த உண்மையின் அடிப்படையிலும், உயிருக்கு ஆபத்தான துன்புறுத்தலின் மத்தியிலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைக் குறித்து மிகவும் தீவிரமாக அறிவித்து வந்தார்கள். வெறும் ஒரு கட்டுக்கதையை நம்பி அவ்வாறு அவர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்திருப்பார்கள் என்று நினைப்பது கற்பனைகூட செய்ய முடியாத ஒன்று. இயேசு மரித்ததும் உயிர்த்தெழுப்பப்பட்டதும் அவர்களுடைய வாழ்நாள் காலத்தில் நடந்த சம்பவங்களே; அவர்களில் சிலர் இச்சம்பவங்கள் நடைபெற்றதை கண்கூடாகப் பார்த்திருந்தனர்.

ஆக, சரித்திராசிரியர் டூரன்ட் இந்த முடிவுக்கு வருகிறார்: “சில சாதாரண மனிதர்களால் ஒரு சந்ததிக்குள் அத்தனை வல்லமையான, வசீகரமான ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டுகிற ஒரு காட்சியையும் உருவாக்கிட முடியுமென்பது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிற எந்த அற்புதத்தைக் காட்டிலும் நம்ப முடியாத அற்புதமாகவே இருக்கும்.”

[படம்]

பண்டைய பலஸ்தீனாவில் இந்த கலிலேய பிராந்தியத்தில் இயேசு பிரசங்கம் செய்தார், அற்புதங்களையும் நடப்பித்தார்

[பக்கம் 241-ன் பெட்டி/படம்]

பைபிளை எழுதியது யார்?

பைபிளில், பழைய ஏற்பாடு என்று பலரால் அழைக்கப்படும் எபிரெய வேதாகமத்தின் (பக்கம் 220-லுள்ள பெட்டியை காண்க) 39 புத்தகங்களும் புதிய ஏற்பாடு என்றழைக்கப்படும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களும் இருக்கின்றன. i ஆகவே 1,600 ஆண்டு காலப் பகுதியில் (பொ.ச.மு. 1513 முதல் பொ.ச. 98 வரை) சுமார் 40 ஆட்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்கள் அடங்கிய ஒரு குட்டி நூலகமே பைபிள் எனலாம்.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நான்கு சுவிசேஷங்கள் இடம்பெறுகின்றன, இவற்றில் இயேசுவின் வாழ்க்கை சரிதையும் அவர் பிரசங்கித்த நற்செய்தியும் உள்ளன. இவற்றில் இரண்டு சுவிசேஷங்களை கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் இருவரான மத்தேயுவும் யோவானும் எழுதியுள்ளனர். மத்தேயு வரிவசூலிப்பவராகவும் யோவான் மீன் பிடிக்கிறவராகவும் இருந்தார். மற்ற இரண்டையும் ஆரம்பகால விசுவாசிகளான மாற்குவும், வைத்தியனான லூக்காவும் எழுதினர். (கொலோசெயர் 4:14) சுவிசேஷங்களைத் தொடர்ந்து வருவது அப்போஸ்தலர் நடபடிகளாகும்; ஆரம்பகால கிறிஸ்தவ மிஷனரி ஊழியம் சம்பந்தப்பட்ட இந்தப் பதிவை தொகுத்தவர் லூக்கா. அடுத்து வருவது, பல்வேறு தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் சபைகளுக்கும் அப்போஸ்தலன் பவுல் எழுதிய 14 கடிதங்கள். அதைத் தொடர்ந்து யாக்கோபும் பேதுருவும் யோவானும் யூதாவும் எழுதிய கடிதங்கள் வருகின்றன. கடைசி புத்தகம் வெளிப்படுத்துதல், இதை எழுதியவர் யோவான்.

பல்வேறு பின்னணிகளிலும் வித்தியாசமான காலங்களிலும் கலாச்சாரங்களிலும் வாழ்ந்த இத்தனை பேர் இப்பேர்ப்பட்ட ஒத்திசைவுள்ள புத்தகத்தைப் படைத்திருப்பது, பைபிள் மனிதனின் அறிவுப்பூர்வ படைப்பாக இல்லாமல் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு பலமான அத்தாட்சியாக உள்ளது. பைபிள் தானே இவ்வாறு சொல்கிறது: ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [“ஏவப்பட்டிருக்கிறது,” NW; சொல்லர்த்தமாக, “கடவுளால் ஊதப்பட்டிருக்கிறது,” Int.], உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது.’ ஆக, வேதவாக்கியங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியின் தூண்டுதலால்தான் எழுதப்பட்டது.​—2 தீமோத்தேயு 3:16, 17.

[படம்]

பொந்தியு பிலாத்துவின் பெயர் லத்தீனில் (இரண்டாவது வரி, “IVS PILATVS”) பொறிக்கப்பட்டுள்ள ரோம கல்வெட்டின் இந்தச் சிறு துண்டு, பலஸ்தீனாவில் அவர் பெரும் செல்வாக்குள்ளவராக இருந்தாரென பைபிள் சொல்வதை உறுதிசெய்கிறது

[அடிக்குறிப்பு]

i கத்தோலிக்க பைபிளில் தள்ளுபடியாகமம் என்ற கூடுதலான சில புத்தகங்கள் காணப்படுகின்றன, இப்புத்தகங்கள் உண்மையானவையென யூதர்களும் புராட்டஸ்டன்டினரும் ஏற்றுக்கொள்வதில்லை.

[பக்கம் 245-ன் பெட்டி]

பைபிள் தீர்க்கதரிசனத்தில் மேசியா

தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்

ஆதி. 49:10 யூதா கோத்திரத்தில் பிறந்தார் மத். 1:2-16; லூக். 3:23-33

சங். 132:11, 12; ஈசாயின் குமாரனான தாவீதின் மத். 1:1, 6-16; 9:27; 

ஏசா. 9:7 குடும்பத்தில் பிறந்தார் அப். 13:22, 23

மீ. 5:2 பெத்லகேமில் பிறந்தார் லூக். 2:4-11; யோவா. 7:42

ஏசா. 7:14 கன்னியின் வயிற்றில் பிறந்தார் மத். 1:18-23; லூக். 1:30-35

ஓசி. 11:1 எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார் மத். 2:15

ஏசா. 61:1, 2 பொறுப்பு அளிக்கப்பட்டார் லூக். 4:18-21

ஏசா. 53:4 நம்முடைய நோய்களைச் சுமந்தார் மத். 8:16, 17

சங். 69:9 யெகோவாவின் வீட்டைக் குறித்து மத். 21:12, 13;

வைராக்கியமாக இருந்தார் யோவா. 2:13-17

ஏசா. 53:1 விசுவாசிக்கப்படவில்லை யோவா. 12:37, 38;

ரோ. 10:11, 16

சக. 9:9; ராஜாவாகவும் மத். 21:1-9; மாற். 11:7-11

சங். 118:26 யெகோவாவின் பெயரில்

வருகிறவராகவும் வரவேற்கப்பட்டார்

ஏசா. 28:16; தள்ளப்பட்டார் ஆனாலும் மத். 21:42, 45, 46; 

சங். 118:22, 23 மூலைக்கல்லானார் அப். 3:14; 4:11; 1 பே. 2:7

சங். 41:9; அப்போஸ்தலன் ஒருவன் அவரைக் மத். 26:47-50; 

சங். 109:8 காட்டிக்கொடுத்தான் யோவா. 13:18, 26-30

சக. 11:12 30 வெள்ளிக்காசுகளுக்கு மத். 26:15; 27:3-10;

காட்டிக்கொடுக்கப்பட்டார் மாற். 14:10, 11

ஏசா. 53:8 விசாரிக்கப்பட்டு மத். 26:57-68;

கண்டனம் செய்யப்பட்டார் மத். 27:1, 2, 11-26

ஏசா. 53:7 குற்றஞ்சாட்டுகிறவர்களுக்கு முன்பாக மத். 27:12-14;

மெளனமாக இருந்தார் மாற். 14:61; 15:4, 5

சங். 69:4 காரணமின்றி பகைக்கப்பட்டார் லூக். 23:13-25;

யோவா. 15:24, 25

ஏசா. 50:6; அவரை அடித்தார்கள், மத். 26:67; 27:26, 30; 

மீ. 5:1 அவர் மீது துப்பினார்கள் யோவா. 19:3

சங். 22:18 வஸ்திரத்திற்காக சீட்டு போட்டார்கள் மத். 27:35;

யோவா. 19:23, 24

ஏசா. 53:12 பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் மத். 26:55, 56; 27:38;

லூக். 22:37

சங். 69:21 காடியும் கசப்பும் கொடுத்தார்கள் மத். 27:34, 48;

மாற். 15:23, 36

சங். 22:1 கடவுளால் கைவிடப்பட்டார் மத். 27:46; மாற். 15:34

சங். 34:20; எலும்புகள் முறிக்கப்படவில்லை யோவா. 19:33, 36

யாத். 12:46

ஏசா. 53:5; குத்தினார்கள் யோவா. 19:34, 37; 

சக. 12:10 வெளி. 1:7

ஏசா. 53:5, 8, பாவங்களைப் போக்க தன் மத். 20:28; யோவா. 1:29; 

ஏசா. 53:11, 12 உயிரை பலியாக கொடுத்தார் ரோ. 3:24; 4:25

ஏசா. 53:9 செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார் மத். 27:57-60;

யோவா. 19:38-42

யோனா 1:17; சுமார் மூன்று நாட்கள் கல்லறையில் மத். 12:39, 40; 16:21; 

யோனா 2:10 இருந்தார், பின்பு மத். 17:23; 27:64

உயிர்த்தெழுப்பப்பட்டார்

[பக்கம் 258, 259-ன் பெட்டி/படம்]

இயேசுவும் கடவுளுடைய பெயரும்

ஜெபிக்கும் விதத்தை சீஷர்களுக்கு கற்றுக்கொடுக்கையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”​—மத்தேயு 6:9, 10.

பிதாவின் பெயர் எவ்வளவு முக்கியம் என்பது இயேசுவுக்கு தெரிந்திருந்தது. ஆகவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் காரணமாகவே தம்முடைய மத எதிரிகளிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக் கொள்வீர்கள். . . . அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது.”​—யோவான் 5:43; 10:25; மாற்கு 12:29, 30.

இயேசு தம்முடைய தந்தையிடம் ஜெபிக்கையில், “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.”

பின்னால் ஒரு சமயம் இயேசு இவ்வாறு ஜெபித்தார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.”​—யோவான் 12:28; 17:6, 26.

யூதரான இயேசு தம்முடைய பிதாவின் பெயரை, அதாவது யெகோவா அல்லது யாவே என்ற பெயரை நன்கு அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் பின்வரும் இந்த வசனம் அவருக்கு தெரிந்திருந்தது: “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு. நானே அவரென்று நீங்கள் அறிந்து நம்பி உணர வேண்டும்; எனக்கு முன் உண்டான தெய்வம் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. . . . ஆகவே நீங்களே என் சாட்சிகள், நானே கடவுள்; இது யெகோவாவின் திருவாக்கு.”​—ஏசாயா 43:10, 12, திருத்திய மொழிபெயர்ப்பு.

ஆகவே, ஒரு தேசமாக யூதர்கள் யெகோவாவுக்கு சாட்சிகளாய் இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டனர். ஒரு யூதராய் இருந்தபடியால் இயேசுவும்கூட யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருந்தார்.​—வெளிப்படுத்துதல் 3:14.

முதலாம் நூற்றாண்டுக்குள் பெரும்பாலான யூதர்கள் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதை நிறுத்திவிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை பயன்படுத்திய ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அதில் எபிரெய நான்கெழுத்தை (Tetragrammaton) பார்த்திருப்பார்கள்; இதை சில கையெழுத்துப் பிரதிகள் நிரூபிக்கின்றன. மதம் மற்றும் எபிரெய மொழியின் பேராசிரியரான ஜார்ஜ் ஹாவார்ட் இவ்வாறு சொன்னார்: “புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் செப்டுவஜின்ட்டை பயன்படுத்தினார்கள், அதிலிருந்தே மேற்கோள் காட்டினார்கள்; அந்த செப்டுவஜின்ட்டில் கடவுளுடைய பெயரின் எபிரெய வடிவம் எந்த வசனங்களிலெல்லாம் காணப்பட்டதோ அந்த வசனங்களையெல்லாம் மேற்கோள் காட்டுகையில் அந்தப் பெயரை அப்படியே பயன்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் கடவுளுடைய பெயரின் எபிரெய வடிவம் [பிற்காலங்களில்] நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கிரேக்க பதங்கள் செப்டுவஜின்டில் பயன்படுத்தப்பட்டபோது புதிய ஏற்பாட்டிலுள்ள அதன் மேற்கோள்களிலிருந்தும்கூட அவை நீக்கப்பட்டுவிட்டன.”

ஆகவே, தமது சத்துருக்களுக்கு இயேசு எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டிய மத்தேயு 22:44 போன்ற வேத வசனங்களை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என பேராசிரியர் ஹாவார்ட் நியாயங்காட்டுகிறார். “முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், ‘ய்ஹ்வ்ஹ் (YHWH) என் ஆண்டவரை நோக்கி’ என்றே வாசித்திருப்பார்கள்; பிற்பாடுதான் ‘கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி’ என்பதாக அவ்வசனம் மாற்றப்பட்டது, . . . இது துல்லியமாக இல்லை, தெளிவாகவும் இல்லை” என ஹாவார்ட் கூறுகிறார்.​—சங்கீதம் 110:1.

இயேசு அற்புதங்களைச் செய்தது உண்மையென்றால், “அதற்கு காரணம் தந்திரசாலியாக கடவுளின் ‘மர்மப்’ பெயரை அவர் பயன்படுத்தியதே” என அவர் மரித்து பல நூற்றாண்டுகள் சென்ற பின் யூதர்கள் குற்றம்சாட்டினார்கள். இதிலிருந்து இயேசு கடவுளுடைய பெயரை பயன்படுத்தினார் என்பது உறுதியாகிறது.​—த புக் ஆஃப் ஜூயிஷ் நாலெட்ஜ்.

இயேசுவுக்கு கடவுளின் பிரத்தியேகமான பெயர் நிச்சயமாகவே தெரிந்திருந்தது. அப்போதிருந்த யூத பாரம்பரியத்தின் மத்தியிலும் இயேசு கட்டாயம் கடவுளுடைய பெயரை பயன்படுத்தியிருப்பார். மனித பாரம்பரியம் கடவுளுடைய சட்டத்தை ஓரங்கட்டிவிட அவர் அனுமதிக்கவில்லை.​—மாற்கு 7:9-13; யோவான் 1:1-3, 18; கொலோசெயர் 1:15, 16.

[படம்]

கிரேக்க செப்டுவஜின்ட் வாசகத்தில் கடவுளின் எபிரெய பெயரைக் காண்பிக்கும் (பொ.ச.மு. முதல் நூற்றாண்டு) நாணற்தாள் துண்டு

[பக்கம் 238-ன் படங்கள்]

இயேசு போதிக்கையில் அநேக உதாரணங்களைப் பயன்படுத்தினார்; அவற்றில் சில: விதை விதைப்பது, அறுவடை செய்வது, மீன் பிடிப்பது, ஒரு முத்தைக் கண்டுபிடிப்பது, மந்தைகளின் கலவை, திராட்சத்தோட்டம் (மத்தேயு 13:3-47; 25:32)

[பக்கம் 243-ன் படம்]

கடவுளுடைய வல்லமையின் உதவியால் இயேசு புயல் காற்றை அடக்கினார், வேறுபல அற்புதங்களையும் செய்தார்

[பக்கம் 246-ன் படம்]

திருநான்கெழுத்து, அதாவது நான்கு மெய்யெழுத்துக்கள் ய்ஹ்வ்ஹ் (யெகோவா)

[பக்கம் 251-ன் படம்]

லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டது பற்றிய பதிவில் அவருக்குள் சாவாமையுள்ள ஆத்மா ஒன்று இருந்ததாக சொல்லப்படவே இல்லை, அவ்வாறு மறைமுகமாகக்கூட குறிப்பிடப்படவில்லை

[பக்கம் 253-ன் படம்]

இயேசுவுக்கு கடவுளுடைய அங்கீகாரம் இருந்தது என்பதை பேதுருவும் யாக்கோபும் யோவானும் மறுரூபக் காட்சியில் கேட்டார்கள், கண்டார்கள்; எனவே அது கட்டுக்கதை அல்ல என அறிந்திருந்தார்கள்