Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

14. இன்றைய அவநம்பிக்கைதேடல் தொடர வேண்டுமா?

14. இன்றைய அவநம்பிக்கைதேடல் தொடர வேண்டுமா?

அதிகாரம் 14

இன்றைய அவநம்பிக்கை—தேடல் தொடர வேண்டுமா?

“இப்போதெல்லாம் மனிதர்களுக்கு கடவுள் மீது ஈடுபாடே கிடையாது. அன்றாட வாழ்வில் அல்லது ஏதாவது தீர்மானம் எடுக்கையில் அவரைப் பற்றி நினைப்பது குறைந்து கொண்டே வருகிறது. . . . வருமானமும், பொருளாசையும் கடவுளின் இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. மனிதர்களுடைய எல்லா நடவடிக்கைகளுக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார் என ஒரு காலத்தில் நம்பப்பட்டது, ஆனால் இன்றோ வரலாறு எனும் இரகசியக் கிடங்கில்தான் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. . . . மனிதர்களின் எண்ணங்களிலிருந்து கடவுள் மறைந்தே போய்விட்டார்.”​—நவீன நாத்திகத்தின் ஆரம்பங்கள் (ஆங்கிலம்).

கொஞ்ச காலம் முன்பு வரை மேற்கத்தியவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளுக்கு உண்மையிலேயே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஒருவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதென காட்டினால் மட்டுமே அவர் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தனது நம்பிக்கைக்கு ஏற்ப அவர் வாழ்கிறாரா இல்லையா என்பதெல்லாம் முக்கியமானவையாக கருதப்படவில்லை. ஏதாவது சந்தேகங்களோ கேள்விகளோ எழும்பினால் அவை ஞானமாக மனதிற்குள்ளேயே வைத்துப் பூட்டப்பட்டன. அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது அதிர்ச்சியூட்டும் செயல் என்பதாக கருதப்பட்டது, ஏன், எல்லாருடைய கண்டனத்திற்கும்கூட ஆளாக்கியது.

2ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உறுதியான மத நம்பிக்கைகளை உடைய ஒருவரை குறுகிய மனப்பான்மை உடையவர், பிடிவாதக்காரர், மத வெறியர் என்றெல்லாம் அநேகர் முத்திரை குத்துகின்றனர். கடவுளைக் குறித்தும், மதத்தைக் குறித்தும் ஓர் அலட்சியப் போக்கு அல்லது அக்கறையின்மை இப்போது அநேக நாடுகளில் நிலவி வருகிறது. இன்று பெரும்பாலோர் கடவுளைத் தேடுவதில்லை. இதற்கு காரணம் அவர் இருக்கிறார் என்பதை அவர்கள் நம்புவதில்லை அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா என்பதைக் குறித்து அவர்களுக்கு நிச்சயமாய் தெரிவதில்லை. சொல்லப்போனால், நமது காலத்தை “கிறிஸ்தவமற்ற சகாப்தம்” என்றே சிலர் விவரிக்கின்றனர். ஆகவே சில கேள்விகள் கேட்கப்பட வேண்டும்: மக்களுடைய வாழ்க்கையிலிருந்து கடவுளைப் பற்றிய கருத்துகள் எப்படி இந்தளவுக்கு மாறிப்போயின? இந்த மாற்றத்திற்கு காரணமான சக்திகள் யாவை? கடவுளைத் தேடுவதைத் தொடர நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா?

சீர்திருத்த இயக்கத்தின் பின்விளைவு

3பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தின் விளைவாக மத அதிகாரங்களைப் பற்றியும் மற்ற அதிகாரங்களைப் பற்றியும் மக்களுக்கு இருந்த கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க விதத்தில் மாறியதைக் குறித்து பதிமூன்றாம் அதிகாரத்தில் நாம் கவனித்தோம். ஒத்துவாழ்வது, பணிந்துபோவது என்ற நிலை மாறி உரிமைக்குரல் எழுப்புவது, பேச்சுரிமையை நிலைநாட்டுவது என்ற நிலை உருவானது. பெரும்பாலோர் தங்கள் பாரம்பரிய மதத்திலேயே இருந்துவிட்டாலும், சிலர் முற்போக்கு கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்; காலங்காலமாக இருந்துவரும் சர்ச்சுகளின் கோட்பாடுகள், அடிப்படை போதனைகள் ஆகியவற்றின் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினர். ஆரம்ப காலத்திலிருந்தே, போர்களுக்கும் துன்பங்களுக்கும் அநீதிகளுக்கும் சர்ச் துணைபோன விதத்தை கவனித்த வேறு சிலர் தங்களுக்கு மதமே வேண்டாம் என்று ஒட்டு மொத்தமாக ஒதுங்கிவிட்டனர்.

4 இங்கிலாந்தின் தற்போதைய நிலைமை பற்றிய ஆய்வு (ஆங்கிலம்) என்ற தலைப்புடைய ஓர் அறிக்கை 1572-ம் ஆண்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டது: “இங்கிலாந்தின் ராஜ்யம் மூன்று கூறுகளாக பிரிவுற்றிருக்கிறது, அதாவது போப்பின் ஆதரவாளர்கள், நாத்திகர்கள், புராட்டஸ்டன்டுகள் என மூன்றாக பிரிவுற்றிருக்கிறது. இந்த மூன்று பிரிவினருக்கும் ஒரேயளவு ஆதரவு இருக்கிறது: முதலாவது, இரண்டாவது பிரிவுகளில் அதிகமானோர் இருப்பதால் நாம் அவர்களுடைய கோபத்தை சம்பாதிக்காதிருப்போமாக.” மற்றொரு கணக்கெடுப்பு, பாரிஸ் நகரில் 1623-ல் 50,000 நாத்திகர்கள் இருந்ததாக குறிப்பிட்டதென்றாலும், அப்போது நாத்திகர் என்ற பதம் பலருக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. எது எப்படியிருந்தாலும், போப்பின் அதிகாரத்தை ஒழிப்பதற்காக தோன்றிய சீர்திருத்த இயக்கம், ஸ்தாபிக்கப்பட்ட மதங்களை எதிர்த்த அனைவரையும் பகிரங்கப்படுத்தியது என்பது தெளிவாக தெரிகிறது. நாகரிகத்தின் கதை: பகுதி 7​—பகுத்தறிவு சகாப்தத்தின் விடியல் (ஆங்கிலம்) என்ற நூலில் வில் மற்றும் ஏரியல் டூரன்ட் இவ்வாறு கூறுகின்றனர்: “ஐரோப்பிய அறிஞர்கள், அதாவது ஐரோப்பிய முன்னணி சிந்தனையாளர்கள், இனியும் போப்பின் அதிகாரத்தைப் பற்றி விவாதிக்கவில்லை; கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றியே அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.”

அறிவியலும் தத்துவங்களும் ஏற்படுத்திய தாக்கம்

5ஏற்கெனவே கிறிஸ்தவமண்டலம் உடைந்து சிதறிக் கிடந்தது, போதாததற்கு மற்ற சக்திகளும் அதை மேலும் பலவீனமாக்கின. அறிவியல், தத்துவம், மத சார்பின்மை, பொருளாசை போன்ற சக்திகள் கடவுளையும் மதத்தையும் குறித்த சந்தேகங்களை மக்கள் மனதில் விதைத்தன, அதோடு அவநம்பிக்கையையும் ஏற்படுத்தின.

6அறிவியல் ஞானம் பெருகியபோது, சர்ச்சின் அநேக போதனைகள் மீது​—பைபிளின் சில பகுதிகளை தவறாக புரிந்துகொண்டதன் அடிப்படையில் அமைந்திருந்த சர்ச்சின் அநேக போதனைகள் மீது​—சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. உதாரணமாக, கோப்பர்னிக்கஸ் மற்றும் கலிலியோவின் விண்வெளி கண்டுபிடிப்புகள், அண்டத்தின் மையத்திலேதான் பூமி இருக்கிறது என்ற சர்ச்சின் போதனை தவறென்பதை அப்பட்டமாக நிரூபித்தன. அதுமட்டுமல்ல, அறிவியல் வளர்ச்சியினால் பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிற இயற்கை நிகழ்வுகளை, அதாவது இடி, மின்னல், சில நட்சத்திரங்கள் மற்றும் வால்நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றுவதற்கான உண்மைக் காரணங்களை மனிதர் புரிந்துகொண்டனர். எனவே அந்த நிகழ்வுகளுக்கு கடவுளைக் காரணம் காட்டும் அவசியம் இனிமேல் இல்லாமல் போனது. “அற்புதங்கள்” நடைபெறுவது பற்றியும் மனித விவகாரங்களில் “தெய்வீக தலையீடு” இருப்பது பற்றியும் சந்தேகங்கள் எழும்பின. திடீரென்று அநேகருக்கு கடவுள், மதம் என்பதெல்லாம் காலத்திற்கு ஒத்துவராத விஷயங்களாயின. காலத்தோடு ஒன்றி வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் கடவுளுக்கு புறமுதுகு காட்டி அறிவியல் என்ற புனிதப் பசுவை வழிபட திரண்டு சென்றனர்.

7மதத்தை மிகக் கடுமையாக தாக்கியது பரிணாமக் கோட்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. 1859-ல் சார்லஸ் டார்வின் (1809-82) என்ற இங்கிலாந்து நாட்டின் உயிரியல் அறிஞர் உயிரினங்களின் ஆரம்பம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்; கடவுளே அனைத்தையும் படைத்தார் என்ற பைபிளின் போதனையை அதில் நேரடியாக தாக்கி எழுதினார். இதற்கு சர்ச்சுகள் எவ்வாறு பிரதிபலித்தன? முதலில் இங்கிலாந்திலும் மற்ற இடங்களிலும் இருந்த பாதிரிமார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விரைவில் அந்த எதிர்ப்பு படிப்படியாக குறைந்துபோனது. சந்தேகங்களை மனதில் இரகசியமாக வைத்திருந்த அநேக பாதிரிமாருக்கு டார்வினின் ஊகங்கள் அவர்கள் தேடிக் கொண்டிருந்த சாக்குப்போக்குகளாக அமைந்தன. இதனால் டார்வின் காலத்திற்குள்ளாகவே, “சிந்தனையிலும் பேச்சிலும் வல்லவர்களான பாதிரிமார், புதிதாக வெளிப்பட்டிருக்கும் வேதாகமத்தின் உண்மைக்கு பரிணாமம் முற்றிலும் இசைவாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்” என மத கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) கூறுகிறது. பைபிளை ஆதரிப்பதற்குப் பதிலாக கிறிஸ்தவமண்டலம் அறிவியலின் கருத்துக்கு அடிபணிந்து, பிரபலமான கருத்துகளோடு ஒத்துப்போனது. இப்படி செய்ததன் மூலம் கிறிஸ்தவமண்டலமானது கடவுள் நம்பிக்கையையே அற்றுப்போகும்படி செய்தது.​—2 தீமோத்தேயு 4:3, 4.

8பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவை நெருங்கியபோது, மத விமர்சகர்கள் இன்னுமதிக துணிச்சலோடு மதத்தை தாக்க ஆரம்பித்தனர். சர்ச்சின் குறைபாடுகளை மட்டுமே எடுத்துச் சொல்வதோடு திருப்தியடையாமல், மதத்தின் அஸ்திவாரத்தைக் குறித்தே சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்தனர். கடவுள் என்றால் என்ன? கடவுளுக்கான அவசியம் என்ன? கடவுள் நம்பிக்கை மனித சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? போன்ற கேள்விகளை எழுப்பினர். லுட்விக் ஃபாயர்பேக், கார்ல் மாக்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட், ஃபிரெட்ரிக் நீஷீ போன்றோர் தத்துவவியல், உளவியல், சமூகவியல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் விவாதங்களை எடுத்துரைத்தனர். சர்ச்சுகளின் மந்தமான கோட்பாடுகளையும் தெளிவில்லாத பாரம்பரியங்களையும் மட்டுமே அப்போதைய ஜனங்கள் அறிந்திருந்தனர்; இவற்றோடு ஒப்பிட, ‘மனிதனின் கற்பனையில் உருவானவரே கடவுள்,’ ‘மக்களுடைய போதை மருந்தே மதம்,’ ‘கடவுள் மரித்துவிட்டார்’ போன்ற தத்துவங்கள் புதுமையாகவும் எழுச்சியூட்டுவதாகவும் இருந்தன. அநேகர் தங்களுடைய அடிமனதில் புதைந்து கிடந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு ஒரு வழியை கடைசியாக கண்டுபிடித்துவிட்டார்கள் போல தெரிந்தது. ஒரு புதிய சுவிசேஷ சத்தியமென இந்தக் கருத்துகளை ஜனங்கள் சட்டென்று ஆவலோடு ஏற்றுக்கொண்டனர்.

மாபெரும் சமரசம்

9அறிவியல், தத்துவவியல் ஆகியவற்றின் தாக்குதலுக்கும் ஆய்வுக்கும் சர்ச்சுகள் ஆளானபோது அவை என்ன செய்தன? பைபிளின் போதனைகள் உண்மையென்று அடித்துக் கூறுவதற்கு பதிலாக அத்தகைய அழுத்தத்திற்கும் தாக்குதலுக்கும் இடமளித்து, அவை இணங்கிச் சென்றன. சொல்லப்போனால், படைப்பு, பைபிளின் நம்பகத்தன்மை போன்ற விசுவாசத்தின் அடிப்படை விஷயங்களையும் அவை விட்டுக்கொடுத்தன. விளைவு? கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிடம் மக்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் மறைந்துபோனது; ஆம், மக்கள் தங்கள் விசுவாசத்தையே இழக்க ஆரம்பித்தனர். சர்ச்சுகள் தங்களுடைய நம்பிக்கைகளை காத்துக்கொள்ளத் தவறியபோது மக்கள் திரள்திரளாக சர்ச்சை விட்டு வெளியேறினர். பலருக்கு மதம் என்பது தங்கள் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை, அதாவது பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை நினைவுபடுத்தும் ஒரு சமூக நினைவுச்சின்னமாக மாத்திரமே ஆனது. இதனால் அநேகர் உண்மையான கடவுளைத் தேடுவதை கைவிட்டுவிட்டனர் என்றே சொல்லலாம்.

10இதையெல்லாம் பார்க்கும்போது, பின்வருமாறு கேட்பது நியாயமாக உள்ளது: அறிவியலும் தத்துவவியலும் சேர்ந்து கடவுள் நம்பிக்கைக்கு சாவு மணி அடித்துவிட்டனவா? சர்ச்சுகள் தோல்வி அடைந்ததால், அவர்கள் போதிப்பதாக உரிமைபாராட்டுகிற பைபிளும் தோல்வி அடைந்ததென அர்த்தமாகுமா? கடவுளுக்கான தேடுதலில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டுமா? இந்த விஷயங்களை இப்போது சுருக்கமாக ஆராயலாம்.

கடவுளை நம்புவதற்கு ஆதாரம்

11கடவுள் என்ற ஒருவர் இருப்பதை இரண்டு புத்தகங்கள் நமக்கு விளக்குகின்றன​—ஒன்று படைப்பு என்ற “புத்தகம்,” அதாவது நம்மை சுற்றியுள்ள இயற்கை; மற்றொன்று பைபிள். அன்றும் சரி இன்றும் சரி, கோடிக்கணக்கானோர் கடவுள் மீது நம்பிக்கை வைக்க இவையே ஆதாரமாக இருந்திருக்கின்றன. உதாரணமாக, பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அரசன் விண்மீன்கள் நிறைந்த வானத்தை கூர்ந்து கவனித்தார்; அதில் தனது மனதைப் பறிகொடுத்து இப்படி ஒரு கவிதையை எழுதினார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” (சங்கீதம் 19:1) 20-ம் நூற்றாண்டில், ஒரு விண்வெளி வீரர் சந்திரனை சுற்றி வந்த விண்வெளிக் கலத்திலிருந்தவாறே பூமியைப் பார்த்து பிரமிப்படைந்தார். இந்தக் காட்சியில் லயித்தவராக, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்ற பைபிளின் வார்த்தைகளை அப்படியே சொன்னார்.​—ஆதியாகமம் 1:1.

12கடவுளை நம்பாதவர்கள் இந்த இரண்டு புத்தகங்களையும் கடுமையாக சாடுகிறார்கள். நம்மை சுற்றியுள்ள உலகம் புத்திக்கூர்மையுள்ள படைப்பினால் அல்ல, ஆனால் தற்செயலாகவும் சீரற்ற பரிணாம மாற்றத்தாலுமே தோன்றியதென அறிவியல் ஆய்வு காட்டுவதாக அவர்கள் சொல்கின்றனர். ஆகவே படைப்பாளர் என யாரும் இல்லை என்றும், கடவுளைப் பற்றிய கேள்வியே வீணானது என்றும் அவர்கள் வாதாடுகின்றனர். மேலும், பைபிள் நடைமுறைக்கு பொருந்தாதது, முன்னுக்குப் பின் முரணானது, ஆகவே அதில் நம்பிக்கை வைப்பது வீண் என்றும் அவர்களில் அநேகர் நினைக்கின்றனர். இதனால் அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கு இனி எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் சரிதானா? உண்மைகள் எதை வெளிப்படுத்துகின்றன?

தற்செயல் நிகழ்வா, வடிவமைக்கப்பட்டதா?

13படைப்பாளர் ஒருவர் இல்லையென்றால், உயிர் தற்செயலாக, தானாகவே தோன்றியிருக்க வேண்டும். உயிர் அப்படி தோன்றுவதற்கு தகுந்த வேதிப்பொருட்களும் போதுமான வெப்பமும் அழுத்தமும் அதைக் கட்டுப்படுத்துகிற மற்ற காரணிகளும் சரியான அளவுகளில் எப்படியோ ஒன்றுசேர்ந்திருக்க வேண்டும். அவை அனைத்தும் சரியான காலம்வரை பராமரிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். மேலும், இப்படி உலகில் உயிர் தோன்றி தொடர்ந்து காக்கப்படுவதற்கு இத்தகைய தற்செயல் நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான தடவை திரும்பத் திரும்ப நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட சம்பவம் ஒரேவொரு முறை நிகழ்வதற்குக்கூட எந்தளவு சாத்தியம் இருக்கிறது?

14சரியான அணுக்களும் சரியான மூலக்கூறுகளும் தகுந்த வரிசையில் அமைந்து ஒரேவொரு எளிய புரத மூலக்கூறு உண்டாக வேண்டுமென்றால் அதற்கான சாத்தியம் 10113-ல் 1, அதாவது 1 என்ற எண்ணைத் தொடர்ந்து 113 பூஜ்ஜியங்களில் 1 என்பதை பரிணாமவாதிகள் ஒப்புக்கொள்கின்றனர். இப்பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள மொத்த அணுக்களின் தோராயமான எண்ணிக்கையைவிட இது அதிகமாகும்! 1050-ல் 1 என்றாலே அப்படிப்பட்ட ஒன்று தோன்றுவதற்கு சாத்தியமே இல்லை என கணிதவியல் வல்லுநர்கள் அடித்து சொல்கின்றனர். என்றாலும், உயிர் தோன்றுவதற்கு ஓர் எளிய புரத மூலக்கூறு இருந்தால் மட்டும் போதாது. ஒரு செல் தன் செயல்களை நடப்பிப்பதற்கு சுமார் 2,000 வித்தியாசமான புரதங்கள் அதற்கு தேவைப்படுகின்றன, இவையெல்லாம் தற்செயலாக நிகழ வேண்டுமென்றால் அதற்கு சாத்தியம் 1040,000-ல் 1 ஆகும்! “பூமியில் உயிர் தானாகவே தோன்றியது என்ற சமுதாயத்தின் கருத்தையோ அறிவியல் அறிவையோ ஒருவர் நம்பி, தப்பெண்ணத்தை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், இந்த எளிய கணக்கு உயிர் [தானாக] தோன்றியது என்ற எண்ணத்தை அந்நபரின் மனதிலிருந்து அடியோடு நீக்கிவிடும்” என ஃபிரெட் ஹாய்ல் என்ற வானவியலாளர் கூறுகிறார்.

15மறுபட்சத்தில், மிகச் சிறிய நுண் அணு முதல் பரந்து விரிந்த நட்சத்திர மண்டலங்கள் வரை எல்லாம் சில அடிப்படை சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவதாக சடப்பொருள் உலகை ஆராயும் அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். வேறு வார்த்தையில் சொன்னால், பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்திலும் மாறாத நியதியும் விதிமுறையும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்; இந்த மாறாத நியதியையும் விதிமுறையையும் எளிய கணித மொழியிலும் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். “இந்த விதிகளில் காணப்படும் மிகுந்த எளிமையையும் செம்மையையும் கவனிக்கும் எந்த அறிவியல் அறிஞரும் அவற்றில் தன் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையில் இயற்பியல் பேராசிரியர் பால் டேவிஸ் எழுதுகிறார்.

16என்றாலும், இந்த விதிகள் சம்பந்தமாக ஆச்சரியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் நாம் அறிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் நிலைத்திருக்க சில காரணிகளின் மதிப்பு துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதே. பின்வருபவை இந்த அடிப்படை மாறிலிகளில் அடங்கும்: புரோட்டானில் மின்னேற்றத்தின் அலகு, சில அடிப்படை துகள்களின் நிறை, பொதுவாக G என்ற எழுத்தால் குறிக்கப்படும் நியூட்டனின் பொது ஈர்ப்பு மாறிலி (universal constant of gravitation) ஆகியவை. இதைக் குறித்து பேராசிரியர் டேவிஸ் இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார்: “இவற்றில் சிலவற்றினுடைய மதிப்பில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது பிரபஞ்சத்தின் தோற்றத்தையே மாற்றிவிடலாம். உதாரணமாக, நியூக்ளியான்களின் (புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்) இடையே உள்ள விசை சில விழுக்காடுகள் அதிகமாக இருந்தால்கூட பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனே இருந்திருக்காது. சூரியன் போன்ற நட்சத்திரங்களும் தண்ணீரும்கூட இருந்திருக்காது. இப்போது நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் எந்த உயிரினமும் இருந்திருக்காது. G-ன் மதிப்பில் இதைவிட மிகச் சிறிய மாற்றங்கள் இருந்தால்கூட அது எல்லா நட்சத்திரங்களையும் ஊதா ராட்சத விண்மீன்களாக அல்லது சிவப்பு ராட்சத விண்மீன்களாக மாற்றிவிடும், இதுவும் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும்.” ஆகவே, டேவிஸ் இவ்வாறு முடிக்கிறார்: “இப்படிப் பார்த்தால் ஒரேவொரு பிரபஞ்சம் மாத்திரமே இருக்க முடியும் என்று புரிகிறது. அப்படியானால், நாம் உயிருடனும் உணர்வுடனும் இருப்பதற்கு மாறாத நியதியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.”​—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.

17இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? முதலாவதாக, பிரபஞ்சம் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறதென்றால், இந்தச் சட்டங்களை இயற்றிய அல்லது ஸ்தாபித்த புத்திக்கூர்மையுள்ள ஒருவர் இருக்க வேண்டும். மேலுமாக, பிரபஞ்சத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் ஜீவராசிகள் வாழ்வதற்கும், உயிர் காக்கப்படுவதற்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இயற்றப்பட்டது போல தோன்றுவதால் இதில் ஏதோவொரு நோக்கம் உட்பட்டிருப்பது தெளிவாக இருக்கிறது. வடிவமைப்பும் நோக்கமும்​—இவை குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சியின் விளைவுகள் அல்ல; புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர் ஒருவரால் மட்டுமே இந்தப் பண்புகளை வெளிக்காட்ட முடியும். இந்த உண்மையைத்தான் பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாகவே விளங்கிற்று; அதை கடவுளே அவர்களுக்குத் தெளிவாக்கியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்​—அதாவது, என்றும் நிலைக்கும் அவருடைய வல்லமையும் கடவுள் தன்மையும்​—உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன.”​—ரோமர் [உரோமையர்] 1:19, 20, பொது மொழிபெயர்ப்பு; ஏசாயா 45:18; எரேமியா 10:12.

நம்மை சுற்றியுள்ள ஏராளமான அத்தாட்சிகள்

18வடிவமைப்பையும் நோக்கத்தையும் பிரபஞ்சத்தின் சீரான இயக்கங்களில் மாத்திரமே காண்கிறோமா? இல்லை. சிறிய உயிரினங்களும் சிக்கலான உயிரினங்களும் அவற்றின் அன்றாட வேலைகளை செய்யும் விதத்திலிருந்தும் இதை காண்கிறோம்; அதுமட்டுமல்ல, அவை ஒன்றோடொன்றும் சுற்றுச்சூழலோடும் ஒத்துப்போகிற முறையிலிருந்துகூட இதை நாம் காண்கிறோம். நமது உடலின் ஒவ்வொரு பாகமும் வடிவமைப்பை பறைசாற்றுகிறது. உதாரணமாக, மூளை, கண், காது, கை போன்றவை நவீன அறிவியலால் முழுமையாக விளக்க முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளையும் தாவரங்களையும் நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. வருடந்தோறும் சில பறவைகள் நில மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆயிரக்கணக்கான மைல் தூரம் இடப்பெயர்ச்சி செய்வது, தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை, கருத்தரித்த ஒரு முட்டையிலிருந்து கோடிக்கணக்கில் வித்தியாசமான செல்கள் உருவாகி விசேஷித்த செயல்களைப் புரிந்து சிக்கலான ஓர் உயிரினமாக உருவாகும் அதிசயம்​—இவை எல்லாமே புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்புக்கு குறிப்பிடத்தக்க அத்தாட்சிகளாகும். a

19அதிசயமான இந்தக் காரியங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதற்கு பெருகி வரும் அறிவியல் ஞானம் நமக்கு விளக்கங்களை அளித்திருக்கிறதே என சிலர் வாதாடலாம். ஒரு காலத்தில் புதிராக இருந்த அநேக காரியங்களுக்கு அறிவியல் ஓரளவு விளக்கங்களை அளித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கடிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பதை ஒரு சிறுவன் கண்டுபிடித்துவிட்டான் என்பதற்காக அந்தக் கடிகாரத்தை யாருமே வடிவமைக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது. அதே விதமாக, உலகிலுள்ள பல காரியங்கள் எவ்வாறு அதிசயமான முறைகளில் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதற்காக புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர் ஒருவர் அவற்றை உண்டாக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது. இதற்கு நேர்மாறாக, நம்மை சுற்றியுள்ள உலகைப் பற்றி அதிகமதிகமாக தெரிந்துகொள்கையில் புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர், அதாவது கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கு அநேக அத்தாட்சிகள் கிடைக்கின்றன. ஆகவே நாம் திறந்த மனதோடு சங்கீதக்காரன் சொல்வதை ஒப்புக்கொள்வோம்: ‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.’​—சங்கீதம் 104:24.

பைபிள்​—அதை நீங்கள் நம்பலாமா?

20கடவுள் இருக்கிறார் என்று நம்புவது மட்டுமே அவரைத் தேட வேண்டுமென்ற தூண்டுதலை அளிப்பதில்லை. கடவுளை முற்றிலும் புறக்கணிக்காமல் அவரை ஓரளவு நம்புகிறவர்கள் இன்று கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் எல்லாருக்குமே கடவுளைத் தேட வேண்டுமென்ற தூண்டுதல் ஏற்படுவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கருத்துக் கணிப்பாளராகிய இளையவர் ஜார்ஜ் காலப் இவ்வாறு சொல்கிறார்: “ஏமாற்றுவது, வரி ஏய்ப்பது, பொருட்களைத் திருடுவது போன்ற விஷயங்களில் சர்ச்சுக்கு செல்பவர்களுக்கும் செல்லாதவர்களுக்கும் அதிக வித்தியாசமே இல்லை. ஏனெனில், இன்று உலகப்பிரகாரமான மதங்கள் ஏராளம் இருப்பதே அதற்கு முக்கிய காரணம். தங்களுக்கு செளகரியமாக இருக்கிற, தங்களுக்குப் பரவசமூட்டுகிற, தங்களிடம் அதிகத்தை எதிர்பார்க்காத ஒரு மதத்தையே அநேகர் உருவாக்கிக் கொள்கின்றனர். ஹோட்டலில் மெனு கார்டில் ஐட்டங்களை தேர்ந்தெடுப்பது போல மத நம்பிக்கைகளைத் தங்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் என ஒருவர் சொல்கிறார். இன்று, இந்த நாட்டில் [அமெரிக்காவில்] கிறிஸ்தவத்தின் முக்கியமான பலவீனமே இதுதான்: இங்கே ஒருவருக்கும் திடமான நம்பிக்கையே இல்லை.”

21பைபிளைப் பற்றிய அறிவும் அதில் விசுவாசமும் குறைவுபடுவதே அந்த ‘முக்கியமான பலவீனத்துக்கு’ காரணம். ஆனால் பைபிளை நம்புவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? முதலாவதாக பைபிளின் சரித்திரத்தை நாம் கவனிக்கலாம். பைபிளைப் போல வேறெந்த புத்தகமும் காலங்காலமாக இவ்வளவு அநியாயமாய் விமர்சிக்கப்பட்டதோ பழிதூற்றப்பட்டதோ வெறுக்கப்பட்டதோ தாக்கப்பட்டதோ கிடையாது. என்றாலும், இவை அனைத்தையும் தாண்டி உலகிலேயே மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட புத்தகமாக அது திகழ்கிறது. பைபிள் பிரபலமிக்க புத்தகமாக திகழ்வதற்கு இது ஒன்றே நல்ல அத்தாட்சியை அளிக்கிறது. என்றாலும், பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது, அது நமது நம்பிக்கைக்கு பாத்திரமானது என்பதற்கான சான்றுகளும் அத்தாட்சிகளும் ஏராளம் உள்ளன.​—பக்கங்கள் 340-1-ல் உள்ள பெட்டியைக் காண்க.

22பைபிள் அறிவியல்பூர்வமானது அல்ல என்றும், முரண்பாடுகளை உடையது என்றும், காலத்துக்கு ஒவ்வாதது என்றும் அநேகர் நினைக்கின்றனர்; ஆனால் அத்தாட்சிகளோ இந்தக் கூற்றுகள் தவறு என்பதை காண்பிக்கின்றன. ஈடிணையற்ற அதன் நூலாசிரியர், துல்லியமான அதன் வரலாற்று மற்றும் அறிவியல் குறிப்புகள், இம்மியும் பிசகாத அதன் தீர்க்கதரிசனங்கள் ஆகிய அனைத்தும் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு வர நம்மை வழிநடத்துகின்றன: பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகமே. அப்போஸ்தலன் பவுல் சொன்னதைப் போலவே: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—2 தீமோத்தேயு 3:16, 17.

அவநம்பிக்கையின் சவாலை சந்தித்தல்

23படைப்பு என்ற ‘புத்தகத்திலிருந்தும்’ பைபிளிலிருந்தும் அத்தாட்சிகளை ஆராய்ந்த பின், நாம் என்ன முடிவுக்கு வரலாம்? எப்போதும் போல இப்போதும் அவை நம்பகமானவையே என்ற முடிவுக்கு நாம் வரலாம். ஏற்கெனவே உள்ள அபிப்பிராயத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக திறந்த மனதுடன் உண்மைகளை ஆராய நாம் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் எந்த ஆட்சேபணையையும் நியாயமான முறையில் மேற்கொள்ள முடியும் என்பதை காணலாம். பதில்கள் இருக்கின்றன, ஆனால் அவற்றைக் கண்டுபிடிக்க நமக்கு மனம்தான் வேண்டும். “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்” என்று இயேசு சொன்னார்.​—மத்தேயு 7:7; அப்போஸ்தலர் 17:11.

24அநேகர் கடவுளைத் தேடும் முயற்சியைக் கைவிட்டதற்குக் காரணம், பைபிளை ஆராய்ந்து பார்த்து அது உண்மையல்ல என்று கண்டதால் அல்ல, ஆனால் கிறிஸ்தவமண்டலம் பைபிளின் உண்மையான கடவுளை மக்களுக்கு சரியாக காண்பிக்காததாலேயே அநேகர் திசைமாறிச் சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி பிரெஞ்சு எழுத்தாளர் பி. வலாடியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்தவ பாரம்பரியம் பிறப்பித்திருக்கும் கனியே இந்த நாத்திகம்; மக்களுடைய மனதில் கடவுளை கொன்றுபோட வழிநடத்தியிருப்பதும் இதுதான். ஏனென்றால், கிறிஸ்தவமண்டலம் கடவுளை நம்ப முடியாத விதத்தில் சித்தரித்துக் காட்டியிருக்கிறது.” எப்படியிருந்தாலும், அப்போஸ்தலன் பவுலின் வார்த்தை நமக்கு ஆறுதலளிக்கிறது: “சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்க மாட்டாது . . . தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.” (ரோமர் 3:3, 4) ஆம், உண்மையான கடவுளைத் தேடுவதைத் தொடர ஏராளமான காரணங்கள் நமக்கு இருக்கின்றன. இப்புத்தகத்தின் மீதமுள்ள அதிகாரங்களில், கடவுளுக்கான தேடுதல் எவ்வாறு வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் மனிதகுலத்துக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது என்பதையும் காண்போம்.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள உயிர்​—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தில் 142-78 பக்கங்களில் கடவுள் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக கொடுக்கப்பட்டிருக்கும் அநேக விவரங்களை காண்க.

[கேள்விகள்]

1. (முன்னுரையை சேர்த்துக் கொள்ளவும்.) (அ) இன்றைய மக்கள் மத்தியில் காணப்படும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி நவீன நாத்திகத்தின் ஆரம்பங்கள் என்ற நூல் எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) இன்றுள்ள அவநம்பிக்கை எவ்வாறு கொஞ்ச காலம் முன்புவரை இருந்த நிலைமைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது?

2. (அ) கடவுளைத் தேடுவதை ஏன் அநேகர் நிறுத்திவிட்டனர்? (ஆ) என்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும்?

3. புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கத்தால் விளைந்த ஒரு பாதிப்பு என்ன?

4. (அ) பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் நாத்திகம் எந்தளவு பரவியிருந்தது என்பதை அக்கால பதிவுகள் எவ்வாறு விவரித்தன? (ஆ) சீர்திருத்த இயக்கத்தின் காலத்தில் போப்பின் அதிகாரத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவாக பகிரங்கப்படுத்தப்பட்டவர்கள் யார்?

5. கடவுள் மீது அவநம்பிக்கை வேகமாக வளருவதற்கு வித்திட்ட சக்திகள் யாவை?

6. (அ) அறிவியல் அறிவு பெருகியபோது சர்ச்சின் போதனைகள் பல எவ்வாறு தாக்கப்பட்டன? (ஆ) காலத்தோடு ஒன்றி வாழ விரும்பிய சிலர் என்ன செய்தனர்?

7. (அ) சந்தேகத்திற்கு இடமின்றி மதத்தை எது கடுமையாக தாக்கியது? (ஆ) டார்வினின் கோட்பாட்டுக்கு சர்ச்சுகள் எவ்வாறு பிரதிபலித்தன?

8. (அ) பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மத விமர்சகர்கள் எதை சந்தேகித்தனர்? (ஆ) மத விமர்சகர்கள் அறிமுகப்படுத்திய பிரபலமான கோட்பாடுகள் சில யாவை? (இ) மத எதிர்ப்பு கருத்துகளை அநேகர் சட்டென்று ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்ன?

9. (அ) அறிவியலும் தத்துவவியலும் சேர்ந்து தாக்கியபோது சர்ச்சுகள் என்ன செய்தன? (ஆ) சர்ச்சுகள் விட்டுக்கொடுத்து இணங்கிச் சென்றதால் என்ன விளைவுகள் ஏற்பட்டன?

10. என்ன கேள்விகளை அவசரத்தன்மையுடன் ஆராய வேண்டும்?

11. (அ) கடவுள் மீது நம்பிக்கை வைப்பதற்கு எந்த இரண்டு புத்தகங்கள் நெடுங்காலமாய் ஆதாரமாக இருந்திருக்கின்றன? (ஆ) இப்புத்தகங்கள் மனிதரை எப்படி பாதித்திருக்கின்றன?

12. படைப்பு எனும் புத்தகமும் பைபிளும் எவ்வாறு தாக்கப்பட்டிருக்கின்றன?

13. உயிர் தற்செயலாக தோன்றுவதற்கு என்னவெல்லாம் நடந்திருக்க வேண்டும்?

14. (அ) ஓர் எளிய புரத மூலக்கூறு தற்செயலாக உண்டாவதற்குரிய சாத்தியம் எத்தனை அரிது? (ஆ) உயிர் தானாக தோன்றியது என்ற கருத்தைப் பற்றி கணிதவியல் என்ன சொல்கிறது?

15. (அ) சடப்பொருள் உலகை ஆராய்கையில் அறிவியல் அறிஞர்கள் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர்? (ஆ) இயற்பியல் பேராசிரியர் ஒருவர் இயற்கையில் காணப்படும் விதிமுறைகளைக் குறித்து என்ன சொன்னார்?

16. (அ) இயற்கை விதிகளில் காணப்படும் சில அடிப்படை மாறிலிகள் யாவை? (ஆ) இந்த மாறிலிகளில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் என்ன நடக்கும்? (இ) இப்பிரபஞ்சத்தையும் நாம் உயிருடன் இருப்பதையும் குறித்து இயற்பியல் பேராசிரியர் ஒருவர் என்ன முடிவுக்கு வந்தார்?

17. (அ) பிரபஞ்சத்தில் காணப்படும் வடிவமைப்பும் நோக்கமும் எதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன? (ஆ) இதை பைபிள் எவ்வாறு உறுதி செய்கிறது?

18. (அ) வடிவமைப்பையும் நோக்கத்தையும் வேறு எதிலும் காணலாம்? (ஆ) புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்புக்கு வேறெந்த பரிச்சயமான உதாரணங்களை உங்களால் கொடுக்க முடியும்?

19. (அ) சில காரியங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றிய அறிவியல் விளக்கம் கிடைத்துவிட்டதால் புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்போ வடிவமைப்பாளரோ இல்லை என்று நிரூபணமாகிறதா? (ஆ) நம்மை சுற்றியுள்ள உலகை ஆய்வு செய்வதன் மூலம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

20. கடவுள் நம்பிக்கை இருப்பதால் மட்டுமே ஒருவர் அவரைத் தேடுவார் என சொல்ல முடியாதென்பதை எது காட்டுகிறது?

21, 22. (அ) பைபிள் பிரபலமிக்க புத்தகமாக திகழ்வதற்கு காரணம் என்ன? (ஆ) பைபிளின் நம்பகத்தன்மைக்கு முக்கியமான அத்தாட்சி என்ன? விளக்கவும்.

23. உண்மைகளை ஆராய்கையில் பைபிளைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

24. (அ) அநேகர் கடவுளைத் தேடும் முயற்சியைக் கைவிட்டது ஏன்? (ஆ) நமக்கு எது ஆறுதல் அளிக்கிறது? (இ) இப்புத்தகத்தின் கடைசி அதிகாரங்களில் எது சிந்திக்கப்படும்?

[பக்கம் 340, 341-ன் பெட்டி]

பைபிள் நம்பகமானது என்பதற்கு அத்தாட்சி

நூலாசிரியர் ஈடிணையற்றவர்: ஆதியாகமம் என்ற முதல் புத்தகம் தொடங்கி வெளிப்படுத்துதல் என்ற கடைசி புத்தகம் வரை பைபிளில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன. மிகவும் வித்தியாசப்பட்ட சமுதாய, கல்வி, தொழில் பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 40 எழுத்தாளர்கள் இதை எழுதினர். இது பொ.ச.மு. 1513 முதல் பொ.ச. 98 வரை 16 நூற்றாண்டு காலப் பகுதியில் எழுதி முடிக்கப்பட்டது. என்றாலும், இது ஒத்திசைவாகவும் கோர்வையாகவும் உள்ளது; முக்கிய கருப்பொருளை​—மேசியானிய ராஜ்யத்தின் மூலம் கடவுளும் அவருடைய நோக்கங்களும் நியாயநிரூபணம் செய்யப்படுவதை​—தர்க்கரீதியாக விளக்குகிறது.​—பக்கம் 241-லுள்ள பெட்டியைக் காண்க.

சரித்திரப்பூர்வமாக திருத்தமானது: பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் நிரூபிக்கப்பட்ட சரித்திர உண்மைகளோடு முழுவதுமாக ஒத்திசைந்துள்ளன. ஒரு சட்ட நிபுணர் பைபிளை ஆராய்கிறார் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “காதல் கதைகளும் கட்டுக்கதைகளும் பொய் சாட்சியங்களும், சம்பவங்கள் எந்த இடத்தில் நடந்தன என்றோ எந்தத் தேதியில் நடந்தன என்றோ திட்டவட்டமாக சொல்லாமலேயே விட்டு விடுகின்றன, . . . ஆனால் பைபிளோ சம்பவங்கள் நிகழ்ந்த தேதி, இடம் போன்றவற்றை மிகவும் துல்லியமாக குறிப்பிடுகிறது.” (எசேக்கியேல் 1:1-3) புதிய பைபிள் அகராதி (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “[அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதியவர்] சம்பவங்களை அந்தக் கால சரித்திரப் பதிவுகளுக்கு இசைவாக எழுதியுள்ளார்; அவருடைய புத்தகத்தில் அதிகாரிகள், அதிபதிகள், தேசாதிபதிகள் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாக காணப்படுகின்றன, சம்பந்தப்பட்ட இடமும் காலமும் மிகவும் சரியாக இருப்பது திரும்பத் திரும்ப அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.”​—அப்போஸ்தலர் 4:5, 6; 18:12; 23:26.

அறிவியல்பூர்வமாக திருத்தமானது: தொற்றுநோய் பரவாமல் தடுக்க நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் சட்டம், சுகாதாரம் பற்றிய சட்டம் ஆகியவை லேவியராகமம் புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டன; அந்தக் காலத்தில் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அண்டை தேசத்தாருக்கு இப்பழக்கங்களைப் பற்றி கொஞ்சமும் தெரியாது. மழை பெய்வதையும், கடல் நீர் ஆவியாவதையும் உட்படுத்தும் நீர் சுழற்சி பற்றி பிரசங்கி 1:7-ல் விவரிக்கப்பட்டுள்ளது, ஆனால் பண்டைய காலங்களில் இவையெல்லாம் அறியப்படாதவை. பூமி உருண்டையானது, அது விண்வெளியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற அறிவியல் உண்மைகளை ஏசாயா 40:22 மற்றும் யோபு 26:7 குறிப்பிடுகின்றன, இவற்றை 16-வது நூற்றாண்டில்தான் அறிவியல் உறுதி செய்தது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டத்தைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு 2,200-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாகவே நீதிமொழிகள் 4:23 மனித இருதயத்தின் செயல்பாட்டினை காண்பித்துள்ளது. பைபிள் ஓர் அறிவியல் பாடநூலாக இல்லாவிட்டாலும் அறிவியல் உண்மைகளை மனிதன் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவற்றை வெளிப்படுத்திவிட்டது.

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்: பூர்வ தீருவின் அழிவு, பாபிலோனின் வீழ்ச்சி, எருசலேம் திரும்பக் கட்டப்படுதல், மேதிய-பெர்சிய, கிரீஸ் ராஜாக்களின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவை அத்தனை துல்லியமான விவரங்களோடு முன்னறிவிக்கப்பட்டதை அறிந்த விமர்சகர்கள், அவை நடந்த பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று வாதாடி தோற்றுப்போயினர். (ஏசாயா 13:17-19; 44:27–45:1; எசேக்கியேல் 26:3-7; தானியேல் 8:1-7, 20-22) இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் மிகவும் துல்லியமாக நிறைவேறின. (பக்கம் 245-ல் உள்ள பெட்டியைக் காண்க.) எருசலேமின் அழிவைப் பற்றி இயேசு தாமே சொன்ன தீர்க்கதரிசனங்களும் துல்லியமாக நிறைவேறின. (லூக்கா 19:41-44; 21:20, 21) இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் கடைசி நாட்களைப் பற்றி சொன்ன தீர்க்கதரிசனங்கள் நமது நாளில் நிறைவேறி வருவதை காண்கிறோம். (மத்தேயு 24; மாற்கு 13; லூக்கா 21; 2 தீமோத்தேயு 3:1-5) ஆனாலும் இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒரே ஊற்றுமூலத்திலிருந்தே, அதாவது யெகோவா தேவனிடமிருந்தே வந்தன என்று பைபிள் சொல்கிறது.​—2 பேதுரு 1:20, 21.

[பக்கம் 333-ன் படங்கள்]

டார்வின், மாக்ஸ், ஃபிராய்ட், நீஷீ போன்ற அநேகர் கடவுள் நம்பிக்கை அற்றுப்போகும்படி செய்த கோட்பாடுகளை உருவாக்கினர்

[பக்கம் 335-ன் படங்கள்]

படைப்பு எனும் ‘புத்தகமும்’ பைபிளும் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமளிக்கின்றன

[பக்கம் 338-ன் படங்கள்]

நம்மை சுற்றியுள்ள உலகைப் பற்றி அதிகமதிகமாக தெரிந்துகொள்கையில் புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கு அநேக அத்தாட்சிகள் கிடைக்கின்றன

[பக்கம் 337-ன் படம்/வரைப்படம்]

வடிவமைப்பின் சில காரணிகளில் ஒரு சிறிய பின்னம் மாறியிருந்தாலும் உயிரும் இந்தப் பிரபஞ்சமும் உருவாகியிருக்க முடியாது

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஹைட்ரஜன் அணுவின் கூறுகள்

எலக்ட்ரான் கூடு

புரோட்டான் + நியூக்ளியஸ்

எலக்ட்ரான் −