Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

5. இந்து மதம்மோட்சத்தைத் தேடி

5. இந்து மதம்மோட்சத்தைத் தேடி

அதிகாரம் 5

இந்து மதம்—மோட்சத்தைத் தேடி

“அதிகாலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அருகிலுள்ள ஆற்றில் அல்லது வீட்டில் ஸ்நானம் செய்வது இந்துக்களின் வழக்கம். அப்படி செய்வது தங்களைப் புனிதமாக்குகிறது என்பது அவர்களது மத நம்பிக்கை. அதற்குப் பின் எதுவும் சாப்பிடாமல் அருகிலுள்ள கோவிலுக்குப் போய் தெய்வத்துக்கு பூ பழங்களைப் படைப்பார்கள். சிலர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிப்பார்கள்.

“ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தாரின் இஷ்ட தெய்வத்திற்கென்று ஓர் இடம் அல்லது பூஜை அறை இருக்கிறது. சில இடங்களில் கஜமுகனான கணபதியை அநேகர் வழிபடுகிறார்கள். அவர் எல்லா கஷ்டங்களையும் நீக்குகிற கடவுள் என்று நம்புவதால் அதிர்ஷ்டத்திற்காக அவரிடம் வேண்டுகிறார்கள். மற்ற இடங்களிலுள்ள ஜனங்கள் கிருஷ்ணர், இராமர், சிவன், துர்கை போன்றவர்களை முக்கிய தெய்வங்களாக வழிபடுகிறார்கள்.”​—தாரா சி., காட்மாண்டு, நேபாளம்.

இந்து மதம் என்பது என்ன? மேற்கத்தியர் நினைப்பது போல, விலங்குகளை வழிபடுவது, கங்கையில் ஸ்நானம் செய்வது, ஜாதிகளாக பிரிக்கப்பட்டிருப்பது ஆகிய அம்சங்களை மட்டுமே கொண்ட ஒரு மதமா? அல்லது அதில் இன்னும் அதிக விஷயங்கள் இருக்கின்றனவா? அதில் இன்னும் அதிக விஷயங்கள் இருக்கின்றன என்பதே பதில். மேற்கத்தியரின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் வாழ்க்கையை பார்ப்பதே இந்து மதம். எப்படியெனில், வாழ்க்கையை காலவரிசையில் நடைபெறும் வரலாற்று நிகழ்ச்சிகளாகவே மேற்கத்தியர் பார்க்கிறார்கள். ஆனால் இந்துக்களோ வாழ்க்கையை முடிவற்ற ஒரு சுழற்சியாகப் பார்க்கிறார்கள்; மனித வரலாற்றிற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

2இந்து மதத்தை விளக்குவது அத்தனை சுலபமல்ல. ஏனென்றால் அதில் திட்டவட்டமான மத கோட்பாடுகளோ, குருவர்க்கமோ, அதாவது குருமாரின் ஆட்சி அமைப்போ கிடையாது. என்றாலும் சுவாமிகள் (ஆசான்கள்) மற்றும் குருக்கள் (ஆன்மீக வழிகாட்டிகள்) உள்ளனர். இந்துக்களின் ‘பழமையான (மிகப் புனிதமான) வேதங்கள் தோன்றியது முதற்கொண்டு இன்று வரை தோன்றியுள்ள பலதரப்பட்ட நம்பிக்கைகளும் பழக்கங்களும் ஒருசேர அமையப் பெற்றதே’ இந்து மதம் என பொதுப்படையாக வரையறுக்கலாம் என்று ஒரு சரித்திரப் புத்தகம் சொல்கிறது. மற்றொரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “விஷ்ணு, சிவன், சக்தி, அவர்களது அவதாரங்கள், ரூபங்கள், மணத்துணைகள், பிள்ளைகள் ஆகியோரில் ஒருவரை நம்புவது அல்லது வழிபடுவதுதான் இந்து மதம் என்று நாம் சொல்லலாம்.” இதில் (விஷ்ணுவின் அவதாரங்களான) இராமர் மற்றும் கிருஷ்ணர், (சிவனின் மனைவியான) துர்கை, (சிவனின் மைந்தர்களான) கந்தன் மற்றும் கணேசன் ஆகியோரை வழிபடும் உட்பிரிவுகளும் அடங்கும். இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அந்த மதத்தில் பல-தெய்வ வழிபாடு இல்லை என்றே கூறப்படுகிறது. அது எப்படி?

3இந்திய எழுத்தாளர் ஏ. பார்த்தசாரதி இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்: “இந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுகிறவர்கள் கிடையாது. இந்து மதம் ஒரே கடவுளைப் பற்றித்தான் பேசுகிறது. . . . இந்து மதத்தில் காணப்படும் எல்லா தெய்வங்களும் தேவிகளும் ஒரே முழுமுதற் கடவுளின் பல்வேறு சக்திகளின் பிரதிபிம்பங்களாகவும், அவருடைய செயல்பாடுகளின் பிரதிபிம்பங்களாகவுமே இருக்கின்றனர்.”

4இந்துக்கள் தங்கள் மதத்தை சநாதன தர்மம் என்றழைக்கின்றனர். நித்திய சட்டம் அல்லது ஒழுங்கு என்பதே அதன் அர்த்தம். ஹின்டூயிஸம் a (இந்து மதம்) என்பது பரந்த அர்த்தங்கொண்ட பதம். சிக்கலான பண்டைய இந்து மத புராணக்கதைகளிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக தோன்றி வளர்ந்திருக்கும் அநேக மதங்களையும் உட்பிரிவுகளையும் அது குறிக்கிறது. அந்தப் புராணக்கதைகள் மிக மிக சிக்கல் வாய்ந்தவையாக இருப்பதால் நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி இவ்வாறு கூறுகிறது: “உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியாத அடர்ந்த ஒரு காட்டைப் போன்றது இந்து புராணவியல். அதனுள் நுழையும்போது வெளிச்சத்தை இழந்துவிடுவீர்கள்; திக்குத்தெரியாமல் இருப்பது போலவும் உணர்வீர்கள்.” என்றபோதிலும், இந்து மதத்தின் சில அம்சங்களையும் போதனைகளையும் இக்கட்டுரை ஆராயும்.

இந்து மதத்தின் ஆரம்பம்

5மற்ற முக்கிய மதங்களின் அளவுக்கு இந்து மதம் எங்கும் காணப்படாவிட்டாலும், அதைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டிற்குள் சுமார் 80 கோடி பேராக, அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் எட்டில் ஒரு பகுதியினராக (13 %) ஆனது. இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில்தான் உள்ளனர். ஆனால், இந்து மதம் இந்தியாவில் மட்டும் இந்தளவுக்குப் பரவலாக காணப்படுவது எப்படி, ஏன் என கேட்பது நியாயமானது.

6வெளிர் நிற மேனியுள்ள ஆரியர்கள் 3,500 ஆண்டுகளுக்கு முன் வடமேற்கிலிருந்து வந்து, சிந்து சமவெளியில் (தற்போது முக்கியமாக பாகிஸ்தான் மற்றும் இந்திய பகுதிகளில்) குடியேறினர். அப்போதுதான் இந்து மதம் தோன்றியது என சரித்திராசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். அங்கிருந்து அவர்கள் கங்கை சமவெளிகளிலும் இந்தியா முழுவதிலும் பரவினர். இவ்வாறு குடியேறியவர்களின் சமய கருத்துகள் பண்டைய ஈரானிய, பாபிலோனிய போதனைகளின் அடிப்படையில் இருந்தன என்று நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். பல கலாச்சாரங்களில் காணப்படுகிற ஜலப்பிரளயத்தைப் பற்றிய பழங்கதை இந்து மதத்திலும் உள்ளது.​—பக்கம் 120-ல் உள்ள பெட்டியைக் காண்க.

7ஆனால் ஆரியர்கள் வருவதற்கு முன் சிந்து சமவெளியில் என்ன வகையான மதம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது? புதைபொருள் ஆய்வாளரான சர் ஜான் மார்ஷல் இவ்வாறு சொல்கிறார்: “‘மகா தெய்வத் தாய்’ வணங்கப்பட்டாள்; அவள் கருவுற்றிருப்பது போன்ற உருவச்சிலைகள் காணப்பட்டன; அவற்றில் பெரும்பாலானவை நிர்வாணமாகவும் கழுத்துப் பட்டைகளோடும் தலைப்பாகையோடும் காணப்பட்டன.. . அடுத்து ‘ஆண் தெய்வம்.’ இவர் ‘பிரசித்தி பெற்ற சிவபெருமானின் ஆரம்ப வடிவம் என்பதை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.’ உள்ளங்கால்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க (யோகாசன நிலையில்), விடைத்து நிற்கும் மர்ம உறுப்புடன் (லிங்க [மர்ம உறுப்பு] வழிபாட்டை நினைவுபடுத்துகிறது), விலங்கினங்கள் சூழ காணப்படுகிறார் (‘விலங்கினங்களுக்கு பெருமான்’ என்ற சிவனின் பட்டப்பெயரை இது நினைவுபடுத்துகிறது). கல்லால் செதுக்கப்பட்ட ஆண், பெண் பிறப்புறுப்பு சின்னங்கள் ஏராளம் காணப்படுகின்றன. . . . இவை சிவனின் லிங்கமும் அவருடைய துணைவியின் யோனியும் வழிபாட்டுக்குரியவையாக இருந்ததைக் காட்டுகின்றன.” (உலக மதங்கள்​—பண்டைய வரலாறு முதல் இன்று வரை) சிவன் கருவள தெய்வமாக, மர்ம உறுப்பாகிய லிங்கத்தின் கடவுளாக இன்று வரை வணங்கப்பட்டு வருகிறார். நந்தி என்ற ரிஷபம் அவருடைய வாகனம்.

8இந்து மத கல்விமான் சுவாமி சங்கரானந்தா, மார்ஷலுடைய விளக்கத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் வழிபடப்பட்ட கற்களில் சில சிவலிங்கம் என அழைக்கப்பட்டன. இந்த சிவலிங்கங்கள், “ஆகாயத்து அக்கினியான சூரியனுடைய அடையாளங்களாகவும் சூரியனின் அக்கினியான அதன் கதிர்களுடைய அடையாளங்களாகவும் இருந்தன” என கூறுகிறார். (த ரிக்வேதிக் கல்ச்சர் ஆஃப் த ப்ரீ-ஹிஸ்டாரிக் இண்டஸ்) “ஆரம்பகால மதம் . . . செக்ஸ் வழிபாடாக இருக்கவில்லை. பிற்பாடே அது அவ்வாறு ஆனது. ஆரம்பத்திலிருந்த நம்பிக்கை சீரழிந்து இப்படி ஆகிவிட்டது. புரிந்துகொள்ளக் கடினமாக இருப்பவற்றை தாங்கள் புரிந்துகொள்ளும் மட்டத்திற்கு மக்கள்தான் கொண்டு வந்திருக்கிறார்கள்” என அவர் காரணம் காட்டுகிறார். மேலும், புறமத சின்னமான​—மர்ம உறுப்பின் சின்னமான—சிலுவையைக் கிறிஸ்தவர்கள் வழிபடுவதை வைத்துப் பார்த்தால் “கிறிஸ்தவர்கள்தான் . . . செக்ஸ் வழிபாட்டு பக்தர்கள்” என்று சொல்லி, இந்து மதத்தை விமர்சித்த மேற்கத்திய நாட்டவருக்கு அவர் பதிலடி கொடுக்கிறார்.

9காலம் செல்லச் செல்ல இந்தியர்களின் நம்பிக்கைகளும் புராணங்களும் பழங்கதைகளும் எழுத்தில் வடிக்கப்பட்டன. இவையே இன்று இந்து மதத்தின் புனித நூல்களாக உருவாகியிருக்கின்றன. இந்தப் பரிசுத்த புத்தகங்கள் ஏராளமாக இருந்தாலும், ஒருமித்த ஒரே இந்துமத கோட்பாட்டை உரைக்க அவை முயலுவதில்லை.

இந்து மத புனித நூல்கள்

10மிகப் பழமையான நூல்கள் வேதங்களாகும். இவை பிரார்த்தனைகளும் துதிகளும் அடங்கிய தொகுப்பாகும். இவை ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம் என அழைக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக இவை இயற்றப்பட்டு சுமார் பொ.ச.மு. 900-ல் முடிக்கப்பட்டன. இந்த வேதங்களோடு பிற நூல்களும் பின்னால் சேர்க்கப்பட்டன. இதில் பிராமணங்களும் உபநிடதங்களும் அடங்கும்.

11வீட்டிலும் பொதுவிடங்களிலும் எவ்வாறு சடங்குகளை செய்வது, எவ்வாறு பலிகளைச் செலுத்துவது என்றெல்லாம் பிராமணங்கள் குறிப்பிடுகின்றன; அதோடு அவற்றின் ஆழமான அர்த்தத்தை விவரமாக விளக்கவும் செய்கின்றன. அவை சுமார் பொ.ச.மு. 300-ல் அல்லது அதற்குப் பின்னர் எழுத்தில் வடிக்கப்பட்டன. வேதாந்தம் என்று அழைக்கப்படுகிற உபநிடதங்கள் (சொல்லர்த்தமான அர்த்தம், “குருவின் பாதபடியில் பயிலுதல்”) சுமார் பொ.ச.மு. 600-300-ல் எழுத்தில் வடிக்கப்பட்டன. இவை எல்லா சிந்தனைக்கும் செயலுக்கும் விளக்கமளிக்கும் சாஸ்திரங்களென இந்து தத்துவம் சொல்கிறது. சம்சாரம் என்ற கோட்பாடும் (ஆன்மா மறுபிறவி எடுத்தல்) கர்மம் என்ற கோட்பாடும் (முற்பிறவியில் செய்த வினைப்பயனை இப்பிறவியில் ஒருவர் அனுபவிக்கிறார் என்ற நம்பிக்கை) இந்நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.

12இதைத் தவிர புராணங்கள் என்றழைக்கப்படும் நூல்களும் உண்டு. இவை தெய்வங்களையும் தேவிகளையும் இந்து வீரப்புருஷர்களையும் பற்றிய கற்பனையான நீண்ட நீதிக் கதைகளாகும். இந்து மதத்தின் இப்பரந்த நூலகத்தில் இராமாயணம், மகாபாரதம் என்ற பெருங்காப்பியங்களும் இடம் பெறுகின்றன. இராமாயணம் என்பது “வேத இலக்கியங்களில் காணப்படும் எல்லா கதாபாத்திரங்களிலும் மிக அற்புத கதாபாத்திரமாகிய . . . இராமரின்” கதை என ஏ. பார்த்தசாரதி கூறுகிறார். இந்துக்களின் அதிக பிரசித்திப் பெற்ற நூல்களில் இராமாயணம் ஒன்றாகும். இது சுமார் பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டில் எழுதப்பட்டது. இராமர், அதாவது இராமச்சந்திரர் என்ற நாயகனைப் பற்றிய கதை இது. இந்துக்கள் இவரை ஓர் இலட்சிய புதல்வனாக, இலட்சிய சகோதரனாக, இலட்சிய புருஷனாக கருதுகின்றனர். இவர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படுகிறார். இவர் பெயரைச் சொல்லி மற்றவர்களுக்கு வணக்கம் சொல்வது வழக்கத்தில் இருக்கிறது.

13அகில உலக கிருஷ்ண பக்தி கழகத்தின் ஸ்தாபகரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “[மகாபாரதம் என்ற காப்பியத்தின் பாகமாகிய] பகவத் கீதை மிக உன்னத ஒழுக்கநெறியாகும். பகவத் கீதையின் உபதேசங்கள் உன்னதமான சமய நெறியையும் ஒழுக்கநெறியையும் உள்ளடக்குகின்றன. . . . கிருஷ்ணரிடம் சரணடைந்துவிடு என்ற கீதையின் கடைசி உபதேசமே எல்லா ஒழுக்கத்துக்கும் சமயத்துக்கும் முடிவான வாக்கு.”​—BG.

14 பகவத் கீதையை (தெய்வீக பாடல்) “இந்தியாவின் ஆன்மீக ஞானத்தின் இரத்தினம்” என்று சிலர் கருதுகின்றனர். “பரம்பொருளான கிருஷ்ணபிரானுக்கும் அவருடைய உற்ற நண்பனும் பக்தனுமாகிய அர்ஜுனனுக்கும் இடையே போர்க்களத்தில் நடந்த உரையாடலாகும். அர்ஜுனன் ஆத்ம ஞானம் பெறுவதைப் பற்றி அப்போது கிருஷ்ணர் உபதேசித்தார்.” ஆனால் பகவத் கீதை என்பது கணக்கு வழக்கில்லா இந்து மத புனித நூல்களில் ஒன்று மட்டுமே. இந்த நூல்களில் சில (அதாவது வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள்) ஸ்ருதி, அதாவது “காதால் கேட்டு” பெறப்பட்டவை என கருதப்படுகின்றன; எனவே, இவை கடவுளிடமிருந்து நேரடியாக கேட்டுப் பெறப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. பெருங்காப்பியங்கள், புராணங்கள் போன்ற மற்றவையோ, ஸ்மிருதி, அதாவது “நினைவில் வைக்கப்பட்டவை” என கருதப்படுகின்றன; எனவே, இவற்றை கடவுளே வெளிப்படுத்தியிருந்தாலும் மனிதர்கள் இயற்றியதாக கருதப்படுகின்றன. இதற்கு ஓர் உதாரணம் மனு ஸ்மிருதி என்பதாகும். இது, இந்து மதத்திற்கும் அதன் சமுதாயத்திற்குமான சட்டங்களை அளிப்பதோடு ஜாதிப் பிரிவுகளுக்கான அடிப்படையையும் விளக்குகிறது. இத்தகைய இந்து மத நூல்களிலிருந்து தோன்றிய சில நம்பிக்கைகள் யாவை?

உபதேசங்களும் செயல்களும்—அகிம்சையும் வர்ணப் பாகுபாடும்

15ஒருவருடைய சிந்தனையின் மீதும் அன்றாட செயல்கள் மீதும் செல்வாக்கு செலுத்துகிற சில அடிப்படை கருத்துகள் மற்ற மதங்களைப் போலவே இந்து மதத்திலும் இருக்கின்றன. இதில் முதன்மை வாய்ந்த ஒன்று அகிம்சை (சமஸ்கிருதம், அஹின்சா) அல்லது வன்முறையிலிருந்து விலகியிருத்தல். மகாத்மா என்றழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி (1869-1948) இதற்கு பிரபலமானவர். (பக்கம் 113-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இந்தத் தத்துவத்தின் அடிப்படையில், இந்துக்கள் மற்ற உயிரினங்களைக் கொல்லவோ அவற்றிற்கு தீங்கு செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. பசுக்கள், பாம்புகள், குரங்குகள் போன்ற சில விலங்குகளை அவர்கள் வழிபடுவதற்கு இதுவும் ஒரு காரணமானது. அகிம்சை, உயிருக்கு மரியாதை போன்ற உபதேசங்களை மிக உறுதியாக கடைப்பிடிப்பவர்கள் (பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய) சமண மதத்தவர்கள்; அவர்கள் வெறுங்காலிலேயே நடந்து செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு பூச்சியைக்கூட தெரியாமல் விழுங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு துணியால் வாயைக் கட்டிக்கொள்கிறார்கள். (பக்கம் 104-ல் உள்ள பெட்டியையும், பக்கம் 108-ல் உள்ள புகைப்படத்தையும் காண்க.) இதற்கு நேர்மாறாக, சீக்கியர்கள் வழிவழியாய் போர்வீரர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களது பெயருக்குப் பின்னால் பொதுவாக சேர்த்துக்கொள்ளப்படும் சிங் என்ற வார்த்தையின் அர்த்தம் சிங்கம் ஆகும்.​—பக்கங்கள் 100-101-ல் உள்ள பெட்டியைக் காண்க.

16இந்து மதத்தில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் வர்ணப் பாகுபாடாகும், அதாவது ஜாதிப் பிரிவாகும். இது சமுதாயத்தை திட்டவட்டமான பல வகுப்புகளாக பிரிக்கிறது. (பக்கம் 113-ல் உள்ள பெட்டியைக் காண்க.) புத்தர்களும் சமணர்களும் இத்தகைய ஜாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளியபோதிலும் இந்து சமுதாயம் இன்னமும் அவ்வாறு பிரிக்கப்பட்டிருப்பதை பார்க்கத்தான் செய்கிறோம். அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் எவ்வாறு இன வேற்றுமை இன்னும் ஒழியவில்லையோ அது போலவே இந்தியாவில் ஜாதி பேதமும் ஒழிந்தபாடில்லை. இது, பிரிட்டனிலும் மற்ற நாடுகளிலும் இன்றுகூட ஓரளவு காணப்படுகிற வகுப்பு பேதத்திற்கு ஒத்திருக்கிறது. (யாக்கோபு 2:1-9) இந்தியாவில் பிறக்கும் ஒருவர் கட்டாயம் ஏதோவொரு ஜாதியை சேர்ந்தவராகிறார், வேறு வழியே இல்லை. அப்படி வேறு ஒரு வழியைத் தேடவும் அவர் விரும்புவதில்லை. இதை முன் தீர்மானிக்கப்பட்டதாகவும், வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமாகவும், பூர்வ ஜென்ம வினை, அதாவது கர்மத்தின் பலன் என்பதாகவும் அவர் கருதுகிறார். ஆனால் ஜாதிப் பிரிவுகள் எவ்வாறு தோன்றின? பதிலைப் பெற நாம் மறுபடியுமாக இந்து புராணங்களை கவனிக்க வேண்டும்.

17இந்து புராணங்களின்படி, மனிதகுலத்தின் ஆதி தந்தையான பரமபுருஷனின், அதாவது பிரமனின் உடல் பாகங்களிலிருந்து நான்கு முக்கிய ஜாதிகள் தோன்றின. ரிக் வேதத்தின் பாசுரங்கள் இவ்வாறு சொல்கின்றன:

“பரமபுருஷனின் உடலை அவர்கள் பிரித்தபோது அவை எத்தனை பாகங்களாயின?

அவருடைய திருவாயையும் அவருடைய கைகளையும் அவர்கள் என்னவென்று அழைக்கிறார்கள்? அவருடைய தொடைகளையும் பாதங்களையும் என்னவென்று அழைக்கிறார்கள்?

[மிக உயர்ந்த ஜாதியான] பிராமணர் அவருடைய திருவாயிலிருந்தும் சத்ரியர் அவருடைய இரு கைகளிலிருந்தும் தோன்றினர்.

அவருடைய தொடைகளிலிருந்து வைசியரும் அவருடைய பாதங்களிலிருந்து சூத்திரரும் பிறந்தனர்.”​—உலகின் பைபிள்.

18ஆகையால், உயர்ந்த ஜாதியான புரோகித வர்க்கத்தைச் சேர்ந்த பிராமணர் பரமபுருஷனின் வாயிலிருந்து, அதாவது அவருடைய உயர்ந்த பாகத்திலிருந்து தோன்றினார்கள் என சொல்லப்படுகிறது. ஆளுகை செய்கிற அல்லது போர்புரிகிற வகுப்பினர் (சத்ரியர் அல்லது ரஜன்யர்) அவருடைய கைகளிலிருந்து தோன்றினார்கள். வணிக அல்லது வேளாண்மை வகுப்பினரான வைசியர், அல்லது வைஷ்யர் அவருடைய தொடையிலிருந்து தோன்றினார்கள். தாழ்ந்த ஜாதியினரான சூத்திரர், அதாவது தொழிலாளர் வகுப்பினர் அவரது உடலின் கீழ்ப் பகுதியான காலிலிருந்து தோன்றினார்கள்.

19நூற்றாண்டுகள் கடந்தபோது, இன்னும் தாழ்ந்த ஜாதியினரான ஒதுக்கப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களும் தோன்றினார்கள். இவர்களை மகாத்மா காந்தி மிகவும் கண்ணியமாக அரிஜனர், அதாவது “ஹரிக்கு சொந்தமான ஜனங்கள்” என்று அழைத்தார். 1948 முதற்கொண்டு தீண்டாமை இந்தியாவில் சட்டவிரோதமாக இருந்து வருகிறபோதிலும் தீண்டத்தகாதவர்களின் பாடு இன்னும் திண்டாட்டமாகவே உள்ளது.

20காலம் செல்லச் செல்ல ஜாதிகள் பெருகின, இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு வாழ்க்கைத் தொழிலுக்கும் கைத்தொழிலுக்கும் ஏற்ப அவை பெருகின. ஒவ்வொருவரையும் சமுதாயத்தில் அவரவருக்குரிய இடத்தில் வைக்கும் இந்தப் பழமையான ஜாதிப் பிரிவு உண்மையில் இனப் பிரிவாகவும் இருக்கிறது. “[சிவந்த மேனியுடைய] ஆரியரிலிருந்து [கருத்த மேனியுடைய] திராவிடருக்கு முன்னான காலத்தவர் வரை வித்தியாச வித்தியாசமான இனத்தவர் இதில் அடங்குவர்.” வர்ணம்​—அதாவது ஜாதி​—என்பதன் அர்த்தம் “நிறம்.” “முதல் மூன்று ஜாதி பிரிவினர் சிவந்த மேனியுடைய ஆரியர்கள்; கருத்த நிறமுடைய நான்காவது ஜாதி ஆரியரல்லாத பழங்குடியினர்.” (மித்ஸ் அண்டு லெஜண்ட்ஸ் சீரீஸ்​—இண்டியா, டோனால்ட் ஏ. மெக்கன்ஸி எழுதியது) பூர்வஜென்ம வினை பற்றிய மதப் போதனையால் வேரூன்றப்பட்ட ஜாதிப் பிரிவினைகள் லட்சக்கணக்கான இந்தியர்களை தீரா வறுமையிலும் அநீதியிலும் சிறைப்படுத்தி வைத்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

வாழ்க்கை சுழற்சியின் விரக்தி

21இந்துக்களின் நன்னெறிகளையும் நடத்தையையும் பாதிக்கும் அதிமுக்கியமான மற்றொரு அடிப்படை நம்பிக்கை கர்ம உபதேசம் ஆகும். ஒவ்வொரு வினைக்கும் நல்ல அல்லது கெட்ட விளைவு இருக்கிறது என்ற நியமம் இது; ஒவ்வொரு முறையும் ஆன்மா வேறொரு உடலுக்குள் புகுவதை அல்லது மறுபிறவி எடுப்பதை இது தீர்மானிக்கிறது. கருட புராணம் விளக்கும் விதமாக:

“மனிதனே தன் விதியை நிர்ணயித்துக் கொள்கிறான். கருவில் இருக்கும்போதே பூர்வ ஜென்ம வினைகளின் பாதிப்புக்கு ஆளாகிறான். கோட்டை போன்ற மலையில் ஒளிந்தாலும், கடலின் ஆழத்தில் பதுங்கினாலும், தாயின் மடியில் பாதுகாப்பாய் இருந்தாலும், அல்லது தாய் அவனைத் தன் தலைமேல் தூக்கி வைத்தாலும் பூர்வ ஜென்ம கர்மங்களிலிருந்து ஒரு மனிதன் தப்பிக்கவே முடியாது. . . . அவனுக்கு இன்ன வயதில், இன்ன நேரத்தில் என்ன நடக்க வேண்டுமோ அந்த வயதில் அந்த நேரத்தில் அது நடந்தே தீரும்.”

கருட புராணம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது:

“முற்பிறவியில் ஒரு மனிதன் பெற்றுக்கொண்ட அறிவும் அவன் செய்த தானதர்மங்களும் மற்ற செயல்களும் அவனுடைய வாழ்க்கை பயணத்தில் அவன் ஆன்மாவை முந்திச் செல்லும்.”

22இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? ஆன்மா அழியாது என்ற நம்பிக்கை கர்மம் பற்றிய உபதேசத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த உபதேசம்தான் ஆன்மாவைப் பற்றிய இந்து மத கருத்தையும் கிறிஸ்தவமண்டல கருத்தையும் வேறுபடுத்துகிறது. ஒவ்வொரு ஆன்மாவும், அதாவது ஜீவன் அல்லது பிராண் b பல ஜென்மங்களை எடுக்கிறது, ஒருவேளை அது “நரகத்திற்கும்” செல்லலாம் என்பது இந்து மத நம்பிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த ஆன்மா, பிரமம் (இந்து மத கடவுளாகிய பிரம்மாவுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது) என்று அழைக்கப்படுகிற “பரம்பொருளுடன்” கலந்துவிட கடும் முயற்சியெடுக்க வேண்டுமென்பதும் அதன் நம்பிக்கையாக இருக்கிறது. மறுபட்சத்தில், பரலோகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம், லிம்போ என ஏதோவொரு இடத்தை ஒருவருடைய ஆன்மா சென்றடையுமென கிறிஸ்தவமண்டல கோட்பாடுகள் கற்பிக்கின்றன.​—பிரசங்கி 9:5, 6, 10; சங்கீதம் 146:4.

23இந்துக்கள் கர்ம உபதேசத்தை நம்புவதால் எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்கிறார்கள். ஒருவருடைய தற்போதைய நிலை அவருடைய முற்பிறவியின் பலன் என்றும், நல்லதோ கெட்டதோ அது அவருக்கு தகுந்ததே என்றும் நம்புகிறார்கள். தன்னுடைய அடுத்த பிறவியாவது நல்லபடியாக அமைவதற்கு அவர் இந்தப் பிறவியில் நல்ல விதமாக வாழ முயலலாம் என்றும்கூட அவர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஓர் இந்து தனக்கு அமைந்த வாழ்க்கையை மேற்கத்திய நாட்டவரைவிட அதிக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முற்பிறவியின் பலன்கள் என்பதாகவே கருதுகிறார். முற்பிறவியின் பயனை இப்பிறவியில் அனுபவித்தாக வேண்டும் என்ற நியதியை ஏற்றுக்கொள்கிறார். இந்தக் கருத்துகளெல்லாம், சாவாமையுள்ள ஆன்மா வேறொரு மனிதனாகவோ விலங்காகவோ மரஞ்செடியாகவோ மறுபிறவி எடுக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.

24அப்படியானால் இந்து மதத்தின் முடிவான குறிக்கோள் என்ன? முக்தி அடைவதே அல்லது மோட்சத்தை அடைவதே, அதாவது மறுபிறப்பு என்ற விரக்தியான சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே அதன் குறிக்கோளாகும். இது உடலோடு வாழ்வதிலிருந்து விடுபட்டுவிடும் நிலையாகும், இந்த விடுதலை உடலுக்கு அல்ல, ஆனால் “ஆன்மா”வுக்கே கிடைக்கிறது. “மோட்சம் அடைவது, அதாவது பல பிறவிகள் எடுப்பதிலிருந்து விடுபடுவது ஒவ்வொரு இந்துவின் குறிக்கோளாக இருப்பதால், அவரது வாழ்க்கையில் நிகழ்கிற சம்பவங்களிலேயே மிக முக்கிய சம்பவம் அவருடைய மரணம்தான்” என்று கருத்துரையாளர் ஒருவர் சொல்கிறார். பல்வேறு மார்க்கங்களை, அதாவது வழிகளை பின்பற்றுவதன் மூலம் மோட்சம் அடைய முடியுமென்று நம்பப்படுகிறது. (பக்கம் 110-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இந்த மத போதனை, ஆன்மா சாகாது என்ற பூர்வ பாபிலோனிய கருத்தின் மீது எவ்வளவாய் சார்ந்திருக்கிறது!

25ஆனாலும் பைபிளின்படி, இந்த உலக வாழ்க்கையை வெறுப்பதும் இகழ்வதும், மனிதவர்க்கத்திற்கான யெகோவா தேவனின் ஆதி நோக்கத்துக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. முதல் மனித ஜோடியை அவர் படைத்தபோது, அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் பூமியில் வாழும்படியே ஆசீர்வதித்தார். பைபிள் பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது:

“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். . . . அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:27-31)

சமாதானமும் நீதியும் வாசமாயிருக்கும் ஒரு சகாப்தம் விரைவில் வரப்போகிறதென பைபிள் முன்னறிவிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக ஒரு நல்ல வீடும் பரிபூரண ஆரோக்கியமும் கிடைக்கப் போகிற ஒரு சகாப்தமாக அது இருக்கும். அதுமட்டுமல்ல, மனிதர்கள் நித்திய நித்தியமாக வாழப்போகிற சகாப்தமாகவும் அது இருக்கும்.​—ஏசாயா 65:17-25; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.

26பதிலளிக்கப்பட வேண்டிய அடுத்த கேள்வி, ஓர் இந்து மறுபிறவியில் நற்பயனடைய இந்தப் பிறவியில் எந்தெந்த தெய்வங்களைப் பிரியப்படுத்த வேண்டும்?

இந்து மத தெய்வங்கள்

27இந்து மதத்தில் கோடானுகோடி தேவர்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், இம்மதத்தின் பல்வேறு பிரிவினரால் முக்கியமாக வழிபடப்படும் குறிப்பிட்ட சில இஷ்ட தெய்வங்களும் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வங்களில் திருமூர்த்திகள், அதாவது மும்மூர்த்திகள் உட்பட்டிருக்கின்றனர்.​—மற்ற இந்து மத கடவுட்களைப் பற்றிய விவரங்களை பக்கங்கள் 116-17-ல் உள்ள பெட்டியில் காண்க.

28படைப்பவரான பிரம்மாவும், காப்பவரான விஷ்ணுவும், அழிப்பவரான சிவனுமே அந்த மும்மூர்த்திகள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு மனைவியாவது அல்லது துணைவியாவது உண்டு. பிரம்மாவின் மனைவி கலைமகளான சரஸ்வதி. விஷ்ணுவின் மனைவி திருமகளான லட்சுமி. சிவனின் முதல் மனைவி சதி. இவள் வேள்வித் தீக்குள் அக்கினிப் பிரவேசம் செய்தாள்; ஆம், உடன்கட்டை ஏறிய முதல் பெண் இவள். இந்தப் பழக்கம் இப்பொழுது சட்டவிரோதமாக இருப்பினும், புராணத்திலுள்ள இவளுடைய மாதிரியைப் பின்பற்றி பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைச் சேர்ந்த விதவைகள் தங்கள் கணவன்மாரின் சிதையில் இறங்கி உயிரை மாய்த்திருக்கின்றனர். பல்வேறு பெயர்களையும் பட்டங்களையும் கொண்ட மற்றொரு மனைவியும் சிவனுக்கு உண்டு. அருள் வடிவிலிருக்கையில் பார்வதி, உமையாள், பொன்னரசியான கெளரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்; உக்கிர வடிவில் துர்கை அல்லது காளி என்று அழைக்கப்படுகிறாள்.

29இந்து புராணங்களில் பிரம்மா மையமானவராக இருந்தாலும், ஒரு சராசரி இந்துவின் வழிபாட்டில் அவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால், படைப்பாளர் என்று அழைக்கப்படும் அவருக்கு அவ்வளவாய் கோவில்களே இல்லை. ஆனால், ஓம் என்ற புனித மந்திரத்தால் அடையாளப்படுத்தப்படுகிற பரம்பொருள், ஆதிமூலம், அல்லது பிரமம் என்பதுதான் இந்தப் பிரபஞ்சத்தை படைத்ததென்று இந்து புராணவியல் கூறுகிறது. மும்மூர்த்திகள் அந்தப் “பரம்பொருளின்” அங்கமாகவும், மற்ற எல்லா கடவுட்களும் பல்வேறு அம்சங்களாகவும் கருதப்படுகின்றனர். பரம்பொருளாக வணங்கப்படுகிற தெய்வமே சர்வ சக்திகளையும் உள்ளடக்கியவராய் கருதப்படுகிறார். அதனால்தான் பெரும்பாலான இந்துக்கள் கோடிக்கணக்கான தெய்வங்களை பகிரங்கமாக வழிபட்டு வந்தாலும் ஒரேவொரு உண்மையான கடவுள்தான் இருக்கிறார் என நம்புகின்றனர்; அதாவது ஆணாக, பெண்ணாக, அல்லது ஒரு விலங்காகக்கூட உருமாற முடிகிற ஒரே உண்மையான கடவுள்தான் இருக்கிறார் என அவர்கள் நம்புகின்றனர். ஆகவே இந்து மதம் உண்மையில் பல-தெய்வ வழிபாடு அல்ல, ஒரே-தெய்வ வழிபாடு என்பதை இந்து மத அறிஞர்கள் மறுயோசனையின்றி சொல்கின்றனர். ஆனால், பிற்பாடு தோன்றிய வேதங்கள் பரம்பொருள் என்ற அந்தக் கருத்தையே நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக உருவமும் குணமுமற்ற மெய்ப்பொருள் என்ற கருத்தை புகுத்தின.

30அண்டசராசரத்திற்கும் ஆண்டவனாக கருதப்படும் அருள் வடிவான விஷ்ணு, வைஷ்ணவர்களின் முக்கிய தெய்வம். இராமர், கிருஷ்ணர் என மொத்தம் பத்து அவதாரங்களில் அவர் தோன்றுகிறார்; பிற்காலத்தில் அந்த அவதாரங்களில் புத்தரும் ஒருவராக சேர்க்கப்பட்டிருக்கிறார். c மற்றொரு அவதாரம் விஷ்ணு நாராயணன். “பாற்கடலில் சுருண்டு படுத்திருக்கும் பாம்பாகிய ஆதிசேஷன் அல்லது அனந்தன் மீது இவர் மனித உருவில் பள்ளிகொண்டிருக்க, இவருடைய மனைவி மகாலட்சுமி இவரது பாதத்திற்கு அருகே அமர்ந்திருக்க, விஷ்ணுவின் நாபிக்கொடியிலிருந்து செல்லும் ஒரு கமலத்தில் பிரம்மா தோன்றுவது போல சித்தரிக்கப்படுகிறார்.”​—உலக மதங்களின் கலைக்களஞ்சியம்.

31மகேஸ்வரன் (சர்வேஸ்வரன்) என்றும் மகாதேவன் (உன்னத தேவன்) என்றும் பொதுவாக அழைக்கப்படுகிற பரமசிவன் இந்து மதத்தின் இரண்டாவது மிகப் பெரிய கடவுளாவார். இவரை வழிபடும் முறைமைக்கு சைவம் என்று பெயர். இவர் “இமய மலைச் சரிவில், உடலெங்கும் சாம்பல் பூசி ஜடாமுடியோடு கடுந்தவம் புரியும் மாமுனியாக” வருணிக்கப்படுகிறார். “கருவள தெய்வமாக இருப்பதால் காம உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு” பெயர் பெற்றவராகவும் “படைப்பின் தலையாய கடவுளான மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.” (உலக மதங்களின் கலைக்களஞ்சியம்) லிங்கம், அதாவது மர்ம உறுப்பின் உருவத்தை வைத்து சிவனை மக்கள் வழிபடுகிறார்கள்.​—பக்கம் 99-ல் உள்ள புகைப்படங்களைக் காண்க.

32உலகின் மற்ற மதங்களைப் போலவே, இந்து மதத்திலும் மகாதேவியின் வழிபாடு இருக்கிறது. அவள் அருள் வடிவிலும் இருக்கலாம், உக்கிர வடிவிலும் இருக்கலாம். சாந்த வடிவில் பார்வதியாகவும் உமையாளாகவும் இருக்கிறாள். உக்கிர வடிவில் துர்கையாக அல்லது காளியாக, பலிகளில் இன்பம் காணும் இரத்த வேட்கையுடைய தேவியாக காட்சி அளிக்கிறாள். தெய்வத் தாயாக கருதப்படும் காளியம்மன் (கருமை நிற பூமி மாதா) சக்தி என்ற மதப்பிரிவினரின் முக்கிய தெய்வம். இடுப்பு வரை நிர்வாணமாகவும் சவங்களையும் பாம்புகளையும் மண்டை ஓடுகளையும் அணிந்திருப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறாள். தகி என்றழைக்கப்பட்ட அவளுடைய பக்தர்கள், முற்காலங்களில் ஆட்களின் கழுத்தை நெரித்து கொன்று அவளுக்குப் பலி செலுத்தினர். தகி என்ற வார்த்தையிலிருந்துதான் மூர்க்கக் கொலைகாரன் என அர்த்தப்படுத்தும் “தக்” (thug) என்ற ஆங்கில வார்த்தை தோன்றியது.

இந்து மதமும் கங்கை நதியும்

33இந்து மதத்தின் தெய்வங்களைப் பற்றி பேசுகையில் அதன் மகா புனித நதியான கங்கை நதியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்து புராணக்கதைகளில் பெரும்பாலானவை கங்கை நதியோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன; இந்நதியை பக்தர்கள் கங்கா மாதா என்றழைக்கின்றனர். (பக்கம் 123-ல் உள்ள வரைபடத்தைக் காண்க.) ஒரு சுலோகத்தில் இந்நதிக்கு 108 வித்தியாசமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்து பக்தர்கள் கங்கை நதியை இந்தளவு பூஜிப்பது ஏன்? அவர்களுடைய தினசரி வாழ்வோடும் அவர்களுடைய பூர்வகாலத்து புராணங்களோடும் இந்நதி பெருமளவில் சம்பந்தப்பட்டிருப்பதே அதற்கு காரணம். அது முற்காலங்களில் பால்வீதியாக வானங்களில் இருந்ததென அவர்கள் நம்புகின்றனர். அப்படியானால் அது எப்படி ஒரு நதியானது?

34அதை பெரும்பாலான இந்துக்கள் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகின்றனர்: சகரன் என்ற மகாராஜாவுக்கு 60,000 மைந்தர்கள் இருந்தார்கள், இவர்களை விஷ்ணுவின் ஓர் அம்சமான கபிலர் என்பவருடைய அக்கினி கொன்றுபோட்டது. கங்கா தேவி வானத்திலிருந்து இறங்கி வந்து அவர்களைத் தூய்மைப்படுத்தி சாப விமோசனம் அளித்தாலொழிய அவர்களுடைய ஆன்மாக்கள் நரக தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆகவே மகாராஜாவான சகரனின் கொள்ளுப்பேரனாகிய பகீரதன் புனித கங்கை பூலோகத்துக்கு வர வேண்டும் என்று பிரம்மாவிடம் வேண்டிக்கொண்டான். தொடர்ந்து என்ன நடந்ததென ஒரு பதிவு இவ்வாறு சொல்கிறது: “‘நான் பலம்படைத்த மகா நதியாயிற்றே; நான் கீழே வந்தால் பூமியின் அஸ்திவாரங்களெல்லாம் தூள்தூளாகிவிடுமே’ என்று சொன்னாள் கங்கை. ஆகவே [பகீரதன்] ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தான், பிறகு மாமுனியான சிவபெருமானிடம் சென்று பூமியில் இமய மலையின் பாறைகளுக்கும் பனிக்கட்டிகளுக்கும் மத்தியில் மிக உயரத்தில் நிற்கும்படி அவரை வற்புறுத்தினான். ஜடாமுடி தரித்த சிவனும் கங்கையை ஆகாயத்திலிருந்து தன் மயிர்க்கற்றையின் வழியாக திமுதிமுவென்று கொட்ட அனுமதித்தார், இப்படியாக பூமிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அபாயகரமான அதிர்வை அந்த மயிர்க்கற்றை தாங்கிக் கொண்டது. அதன் பின்னர் கங்கை நதி பூமியின் மீது மென்மையாக இறங்கி, மலைகளிலிருந்து கீழே நெளிந்துவந்து, சமவெளிகளின் வழியாக ஓடி இவ்விதமாக வறண்ட பூமிக்கு நீரைக் கொடுத்து உயிரூட்டியது.”​—சமுத்திரத்திலிருந்து ஆகாயம் வரை (ஆங்கிலம்), சர் எட்மண்ட் ஹில்லரி எழுதியது.

35கங்கை நதி எவ்வாறு ஆரம்பமானது என்பதற்கு விஷ்ணு அடியார்கள் ஓரளவு வித்தியாசமான விளக்கத்தை தருகின்றனர். விஷ்ணு புராணம் என்ற பண்டைய நூலின்படி, அவர்கள் அதை இவ்வாறு விளக்குகிறார்கள்:

“இந்த இடத்திலிருந்து [விஷ்ணு வீற்றிருக்கும் பரமபதத்திலிருந்து] கங்கா தேவி உற்பத்தியாகிறாள். எல்லா பாபங்களையும் அவள் நீக்கிவிடுகிறாள். . . . விஷ்ணு பகவானின் இடது பாத கட்டைவிரல் நகத்திலிருந்து பிரவாகிக்கிறாள்.”

இதைத்தான் விஷ்ணுவின் பக்தர்கள் சமஸ்கிருதத்தில் “விஷ்ணு-பாதப்ஜ-சம்பூத்தா” என்று சொல்கின்றனர். இதன் அர்த்தம் “விஷ்ணுவின் கமல பாதத்திலிருந்து பிறந்தவள்.”

36பக்தர்களுக்கு விமோசனம் அளித்து, அவர்களை புனிதமாக்கி, சுத்திகரித்து, குணப்படுத்தும் சக்தி கங்கைக்கு உண்டு என்று இந்துக்கள் நம்புகின்றனர். விஷ்ணு புராணம் இவ்வாறு சொல்கிறது:

“இந்நதியில் ஸ்நானம் செய்து சுத்திகரிக்கப்பட்டு, கேசவன் [விஷ்ணு] மீது பயபக்தியாயிருக்கும் புனிதர்கள் இறுதியில் மோட்சம் பெறுகிறார்கள். கங்கையைப் பற்றி கேட்டாலோ, அங்கு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலோ, தரிசனம் செய்தாலோ, நீரை ஸ்பரிசித்தாலோ, ஸ்நானம் செய்தாலோ, அல்லது பஜனைகள் பாடினாலோ, இவற்றில் எதைச் செய்தாலும் கங்கா தேவி எல்லாரையும் தினம் தினம் புனிதமாக்குகிறாள்; வெகு தூரத்தில் இருந்தாலும் . . . ‘கங்கா கங்கா’ என்று எவன் உச்சாடனம் செய்கிறானோ அவனுடைய மூன்று ஜன்ம பாபங்களும் மன்னிக்கப்பட்டு, பாபவிமோசனம் பெறுவான்.”

பிரமானந்த புராணம் இவ்வாறு சொல்கிறது:

“கங்கையின் புனித நீரில் பக்தி சிரத்தையோடு ஒரு முறை நீராடுபவர்களின் குலங்களை அவள் ஆயிரமாயிரம் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறாள். தலைமுறை தலைமுறையாக சேர்ந்துவிட்ட அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஒழிந்துவிடுகின்றன. கங்கையில் நீராடினாலே போதும், ஒருவர் உடனடியாக புனிதமாகிவிடுகிறார்.”

37இந்தியர்கள் இந்நதிக்குத் திரண்டு சென்று பூஜை செய்கிறார்கள், மலர்களை அர்ச்சித்து, சுலோகங்களைச் சொல்லி அதை வழிபட்டு பூசாரி கொடுக்கும் மஞ்சள், குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகு புனித நீராட தண்ணீருக்குள் இறங்குகிறார்கள். இதன் தண்ணீர் சாக்கடை நீராலும் இரசாயனப் பொருட்களாலும் சடலங்களாலும் பயங்கரமாக மாசடைந்திருக்கிறபோதிலும் அநேகர் அதைப் பருகவும் செய்கிறார்கள். கங்கை நதி மீது அந்தளவு ஆன்மீகப் பற்று இருப்பதால் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான இந்துக்கள், ‘இப்புனித நதி’ மாசுபட்டிருக்கிறதோ இல்லையோ, ஒருமுறையாவது இதில் ஸ்நானம் செய்துவிட வேண்டுமென்று பேராவலுடன் இருக்கிறார்கள்.

38இன்னும் சிலர் தங்களுக்குப் பிரியமானவர்களின் சடலங்களை இங்கே கொண்டு வந்து ஆற்றங்கரையோரத்தில் எரித்து, சாம்பலை இந்நதியில் தூவிவிடுகிறார்கள். பிரிந்துபோன ஆன்மாவுக்கு நித்திய பேரின்பம் கிட்டுவதற்கு இது உத்தரவாதமளிக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஈமச்சடங்கு செய்யக்கூட வசதியற்ற ஏழைகள் போர்வை சுற்றப்பட்ட சடலத்தை அப்படியே இந்நதிக்குள் போட்டு விடுகிறார்கள். பிணந்தின்னும் கழுகுகள் அதை கொத்தித் தின்றுவிடுகின்றன, அல்லது அது அப்படியே அழுகிப் போகிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது: நாம் ஏற்கெனவே சிந்தித்த விஷயங்கள் போக, மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி இந்து மதம் என்ன கற்பிக்கிறது?

இந்து மதமும் ஆத்மாவும்

39 பகவத் கீதை இதற்கு இவ்வாறு பதிலளிக்கிறது:

“ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும், இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது.”​—அத்தியாயம் 2, சுலோகம் 13.

40இந்து உரையாசிரியர் ஒருவர் மேற்கண்ட வசனத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஜீவாத்மா ஏற்கும் இந்த உடலுக்கு முதலில் இளமைப் பருவமும் பிறகு வாலிபமும் இறுதியில் முதுமையும் வருவதைப் போல ஓர் உடல் நைய்ந்து கெட்டதும் புதிய உடல் கிடைக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி ஆத்மா என்பதால் ஒவ்வொன்றும் தனது உடலை ஒவ்வொரு கணமும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் சிறுவனாகவும், சில சமயம் இளைஞனாகவும், இன்னும் சில சமயம் முதியோனாகவும் மாற்றுகிறது. இருப்பினும் ஆத்மா எவ்வித மாற்றமும் அடையாமல் அதேபோல் இருக்கின்றது. இந்தத் தனி ஆத்மா, இறுதியாக மரணத்தின்போது அந்த உடலை விட்டு வெளியேறி வேறொரு உடலுக்குள் புகுகின்றது. அடுத்த பிறவியில்​—உடல்சார்ந்த அல்லது ஆன்மீக வாழ்வில்​—வேறொரு உடலை அடையப்போவது உறுதி என்பதால் மரணத்திற்காக அர்ஜுனன் வருந்த வேண்டிய அவசியமில்லை.”

41“ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி ஆத்மா” என அந்த உரை சொல்வதைக் கவனியுங்கள். இந்தக் குறிப்பு ஆதியாகமம் 2:7-ல் பைபிள் பின்வருமாறு சொல்வதற்கு இசைவாக உள்ளது:

‘தேவனாகிய யெகோவா மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.’

ஆனால் முக்கியமான ஒரு வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டும், அதாவது எல்லா செயல்பாடுகளும் திறமைகளும் கொண்ட மனிதன் ஓர் உயிருள்ள ஆத்மாவாக இருக்கிறானா அல்லது உடல் செயல்பாடுகளுக்கு புறம்பான ஓர் ஆத்மாவை உடையவனாக இருக்கிறானா? மனிதனே ஆத்மாவா அல்லது அவனுக்குள் ஓர் ஆத்மா இருக்கிறதா? பின்வரும் மேற்கோள் இந்து மத கருத்தை தெளிவுபடுத்துகிறது.

42 பகவத் கீதை அத்தியாயம் 2, சுலோகம் 17, 18 இவ்வாறு சொல்கிறது:

“இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அறிவற்றதென்றறி; இது கேடற்றது; இதனையழித்தல் யார்க்கும் இயலாது. ஆத்மா நித்தியன்; அழிவற்றான்.”

இந்த சுலோகத்திற்கு பின்வரும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது:

“ஒவ்வொரு உடலுக்கும் ஓர் ஆத்மா உண்டு. மேலும் ஒரு நபருடைய பிரக்ஞையே அந்த ஆத்மா இருப்பதற்கான அறிகுறி.”

ஆக, மனிதன்தானே ஆத்மாவாக இருக்கிறான் என பைபிள் போதிக்கையில், மனிதன் ஓர் ஆத்மாவை உடையவனாக இருக்கிறான் என இந்து மதம் போதிக்கிறது. இவற்றிற்கு இடையே மாபெரும் வேறுபாடு உள்ளது. இதனால் இவற்றோடு சம்பந்தப்பட்ட போதனைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.​—லேவியராகமம் 24:17, 18, NW.

43ஆத்மா சாகாது என்ற போதனை பண்டைய பாபிலோனின் மத கருத்துகளின் தொகுதியிலிருந்தே வந்திருக்கிறது. அது, ‘மரணத்துக்குப் பின் வாழ்க்கை’ என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்திருக்கிறது என்ற நியாயமான முடிவுக்கு வரலாம்; இந்த நம்பிக்கையானது மறு அவதாரம், மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம், லிம்போ போன்ற அநேக மதங்களிலுள்ள போதனைகளுக்கு அடிப்படையாக ஆகியிருக்கிறது. சொர்க்கமும் நரகமும் ஆத்மா மறுபிறவி எடுப்பதற்கு முன் காத்திருக்க வேண்டிய இடங்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நரகத்தைப் பற்றிய இந்து மத கருத்து விசேஷ அக்கறைக்குரியது.

நரகத்தைப் பற்றிய இந்து மத போதனை

44 பகவத் கீதையின் ஒரு சுலோகம் இவ்வாறு சொல்கிறது:

“கண்ணா, . . . ஜநார்த்தனா, குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.”​—அத்தியாயம் 1, சுலோகம் 44.

பொருளுரை ஒன்று இவ்வாறு சொல்கிறது: “எப்போதும் தீயச் செயல்களில் ஈடுபடும் ஒருவன் நரக உலகங்களில் வித்தியாசமான தண்டனைகளை அனுபவிக்கப்போவது நிச்சயம்.” என்றாலும், இந்தப் போதனைக்கும் எரிநரகத்தில் நித்திய வாதனை இருக்குமென்ற கிறிஸ்தவமண்டலத்தாரின் போதனைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது: “இந்த தண்டனை . . . நித்தியமானதல்ல” என இந்து மதம் கற்பிக்கிறது. அப்படியென்றால் இந்து மதம் கற்பிக்கிற நரகம்தான் என்ன?

45 மார்கண்டேயர் புராணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறிப்பு ஒரு பாவிக்கு என்ன நேரிடும் என்பதைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறது:

“அதற்குப் பின் எமதர்ம ராஜனின் [மரண தேவனின்] தூதர்கள் அவனை படுபயங்கர பாசக் கயிறுகளினால் வேகமாக கட்டி பிரம்பால் அவனை அடித்து நொறுக்கியவாறே தென்திசைக்கு இழுத்துக்கொண்டு செல்கின்றனர். அது, கூஸா [செடி], முட்கள், எறும்பு புற்றுகள், கூர்மையான ஊசிகள், கற்கள் ஆகியவை நிரம்பிய கரடுமுரடான பாதை. ஆங்காங்கே குழிகள், கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, இவற்றோடு அனல் கக்கும் தரை. இவ்வழியில் பயங்கரமாக கத்தி ஓலமிட்டவாறே எமதர்மனின் தூதர்கள் இவனை இழுத்துக்கொண்டு வருகின்றனர். எமதர்மனின் தூதர்கள் இழுத்துச் செல்ல, நூற்றுக்கணக்கான நரிகள் கடித்துக் குதற, அச்சமூட்டும் பாதை வழியாய் பாவி எமலோகத்துக்குச் செல்கிறான். . . .

“தீயில் சுட்டெரிக்கப்படும்போது அவன் உடல் முழுவதும் பயங்கரமாய் எரிகிறது. அவனது உடலை அடிக்கும்போது அல்லது வெட்டும்போது வலியால் துடிதுடித்துப் போகிறான்.

“இப்படியாக அவன் உடல் அழிக்கப்படுகிறது; ஒரு ஜீவஜந்துவாக அவன் மற்றொரு உடலுக்குள் புகுந்துகொள்ள இருந்தாலும் அவனுடைய சொந்த பொல்லாப்பின் நிமித்தமாக நித்திய வாதனையை அனுபவிக்கிறான். . . .

“பின்பு அவன் பாவங்கள் கழுவப்படுவதற்காக அதைப் போன்ற மற்றொரு நரகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான். எல்லா நரகங்களுக்கும் சென்று வந்தபின் விலங்கினமாக பிறக்கிறான். புழு, பூச்சி, ஈ, மாமிசப்பட்சிணி, வண்டு, யானை, மரம், குதிரை, மாடு என்று இன்னும் பல்வேறு மோசமான, பாவப்பட்ட வாழ்க்கைகளைக் கடந்து, பின்னர் மனித பிறவிக்கு வரும்போது கூன் விழுந்தவனாக அல்லது அவலட்சணமாக அல்லது குள்ளனாக அல்லது சண்டாள புருஷனாக பிறக்கிறான்.”

46இதையும், இறந்தோரைப் பற்றி பைபிள் சொல்லும் பின்வரும் விஷயத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்:

“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”​—பிரசங்கி 9:5, 6, 10.

47பைபிள் சொல்வது போல, மனிதன் ஆத்மா என்ற ஒன்றை உடையவனாக இல்லாமல் அவன்தானே ஆத்மாவாக இருக்கிறான் என்றால் மரணத்துக்குப் பின் உணர்வோடு வாழும் வாழ்க்கை என்பது இல்லை; இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. ஆக, “மறுமையைப்” பற்றி ஒன்றுக்கொன்று முரண்படுகிற குழப்பமான எல்லாவித கருத்துகளும் வலுவிழந்துவிடுகின்றன. d

இந்து மதத்திற்கு எதிராக

48இந்து மதமானது ஒரே-தெய்வ வழிபாட்டை ஆதாரமாக கொண்ட பல-தெய்வ வழிபாடு என்பதை இச்சுருக்கமான கலந்தாலோசிப்பு காட்டியிருக்கிறது, அதாவது ஓம் என்ற பிரணவத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற பல்வேறு உருவங்களையும் அம்சங்களையும் உடைய பரம்பொருளாகிய பிரமமில் நம்பிக்கை வைப்பதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மதமாகவும் விலங்கினங்களுக்கு அன்பு காட்டுவதை ஊக்குவிக்கும் மதமாகவும் இருக்கிறது.

49மறுபட்சத்தில், இந்து மதத்தில் கர்ம உபதேசம், ஜாதிப் பிரிவுகளின் அநீதிகள் போன்ற சில அம்சங்களும், அதோடு விக்கிரகாராதனையும் ஒன்றோடொன்று முரண்படுகின்ற புராணக்கதைகளும் இருப்பதால், சிந்தனையாளர் சிலர் இந்த மதத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இப்படி சந்தேகித்தவரில் ஒருவர் சுமார் பொ.ச.மு. 560-ஆம் ஆண்டில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தோன்றினார். அவர்தான் சித்தார்த்த கெளதமர். அவர் புதிய ஒரு மதத்தைத் தோற்றுவித்தார், அது இந்தியாவில் தழைத்தோங்கவில்லை என்றாலும் மற்ற இடங்களில் தழைத்தோங்கியது. அந்தப் புதிய மதம் புத்த மதமாகும். அதைப் பற்றி எமது அடுத்த கட்டுரை விளக்கமளிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a ஹின்டூயிஸம் என்ற வார்த்தை ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்பு.

b சமஸ்கிருதத்தில், “ஆன்மா” என்பது ஆத்மா, அல்லது ஆத்மன் என்பதிலிருந்து பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால், “ஆவி” என்பது அதைவிட திருத்தமான மொழிபெயர்ப்பாகும்.​—இந்து மதத்தின் ஓர் அகராதி​—அதன் புராணம், பழக்கவழக்கங்கள் மற்றும் வளர்ச்சி கி.மு. 1500​—கி.பி. 1500 (ஆங்கிலம்), பக்கம் 31-ஐயும் 1986-ல் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த மரணத்தின்மேல் வெற்றி​—உங்களுக்குச் சாத்தியமா? என்ற சிறு புத்தகத்தையும் காண்க.

c பத்தாவதும் எதிர்காலத்தில் எடுக்கப்போவதுமான அவதாரம் கல்கி அவதாரமாகும். இதில் “அவர் மாவீரராக பெரிய வெள்ளைக் குதிரையில், எரி நட்சத்திரம் போன்ற பட்டயத்தோடு சவாரி செய்து நாலா பக்கமும் சாவையும் அழிவையும் உண்டுபண்ணுபவராக சித்தரித்துக் காட்டப்படுகிறார்.” “அவர் வரும்போது பூமியில் மறுபடியுமாக நீதி நிலைநாட்டப்படும், தூய்மை நிறைந்த மாசற்ற ஒரு சகாப்தம் திரும்பும்.”​—இந்தியாவின் மதங்கள்; இந்து மத அகராதி (ஆங்கிலம்).​வெளிப்படுத்துதல் 19:11-16-ஐ ஒப்பிடுக.

d இறந்தோரின் உயிர்த்தெழுதல் பற்றிய பைபிளின் போதனைக்கும் சாவாமையுள்ள ஆத்மா பற்றிய கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதிகாரம் 10-ஐக் காண்க.

[கேள்விகள்]

1. (அ) இந்துக்களின் சில பழக்கவழக்கங்களை விவரிக்கவும். (ஆ) மேற்கத்திய கண்ணோட்டத்திற்கும் இந்து மத கண்ணோட்டத்திற்கும் உள்ள சில வேறுபாடுகள் யாவை?

2, 3. (அ) இந்து மதத்தை விளக்குவது ஏன் எளிதல்ல? (ஆ) இந்திய எழுத்தாளர் ஒருவர் இந்து மதத்தையும் பல-தெய்வ வழிபாட்டையும் எவ்வாறு விளக்குகிறார்?

4. “ஹின்டூயிஸம்” என்ற வார்த்தை எதை உட்படுத்துகிறது?

5. இந்து மதம் எந்தளவுக்கு பரவலாக காணப்படுகிறது?

6, 7. (அ) சில சரித்திராசிரியர்களின்படி, இந்து மதம் எவ்வாறு இந்தியாவை வந்தடைந்தது? (ஆ) இந்து மதத்தின் ஜலப்பிரளய பழங்கதை என்ன? (இ) புதைபொருள் ஆய்வாளர் மார்ஷல் சொல்கிற பிரகாரம், ஆரியர்கள் வருவதற்கு முன்னால் சிந்து சமவெளியில் என்ன வகையான மதம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது?

8, 9. (அ) இந்து மத கல்விமான் ஒருவர் மார்ஷலுடைய கோட்பாட்டை எவ்வாறு மறுக்கிறார்? (ஆ) இந்து மற்றும் “கிறிஸ்தவ” மத வழிபாட்டு சின்னங்களைப் பற்றி எவ்வாறு விவாதிக்கப்படுகிறது? (இ) இந்து மத புனித நூல்கள் எவ்வாறு உருவாயின?

10. இந்து மதத்தின் மிகப் பழமையான சில நூல்கள் யாவை?

11. (அ) பிராமணங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (ஆ) உபநிடதங்களில் என்ன கோட்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன?

12. இராமர் யார், அவருடைய கதை எங்கே காணப்படுகிறது?

13, 14. (அ) பகவத் கீதைக்குத் தரப்படும் விளக்கம் என்ன? (ஆ) ஸ்ருதி மற்றும் ஸ்மிருதியின் அர்த்தம் என்ன, மனு ஸ்மிருதி என்பது என்ன?

15. (அ) அகிம்சை என்பது என்ன, அதை சமண மதத்தினர் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை விளக்கவும். (ஆ) அகிம்சையை காந்தி எவ்வாறு கருதினார்? (இ) சீக்கியர்கள் எவ்வாறு இந்துக்களிலிருந்தும் சமணர்களிலிருந்தும் வேறுபடுகின்றனர்?

16. (அ) பெரும்பாலான இந்துக்கள் ஜாதிப் பிரிவை எவ்வாறு கருதுகின்றனர்? (ஆ) ஜாதிப் பிரிவுகளைப் பற்றி காந்தியின் கருத்து என்ன?

17, 18. இந்து புராணத்தின்படி, ஜாதிப் பிரிவுகள் எவ்வாறு தோன்றின?

19. வேறு எந்த ஜாதியினர் தோன்றினார்கள்?

20. ஜாதிப் பிரிவின் மற்ற அம்சங்கள் யாவை?

21. கருட புராணத்தின்படி, ஒருவர் செய்த கர்மம் அவருடைய விதியை எவ்வாறு நிர்ணயிக்கிறது?

22. (அ) மரணத்துக்குப் பின் ஆன்மாவின் நிலையைப் பற்றிய இந்து மத போதனைக்கும் கிறிஸ்தவமண்டல போதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (ஆ) ஆன்மாவைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

23. கர்மம் எவ்வாறு வாழ்க்கையைப் பற்றிய இந்துக்களின் கண்ணோட்டத்தைப் பாதிக்கிறது? (கலாத்தியர் 6:7-10-ஐ ஒப்பிடுக.)

24. மோட்சம் என்பது என்ன, அதை எவ்வாறு அடையலாம் என இந்துக்கள் நம்புகிறார்கள்?

25. வாழ்க்கையைப் பற்றிய இந்து மதத்தின் கருத்தும் பைபிளின் கருத்தும் எவ்வாறு வேறுபடுகின்றன?

26. இப்பொழுது எந்தக் கேள்விக்கு பதில் தேவை?

27, 28. (அ) இந்து மதத்தின் மும்மூர்த்திகள் யாவர்? (ஆ) அவர்களது மனைவிகள் அல்லது துணைவிகள் யாவர்? (இ) இந்து மதத்திலுள்ள வேறு சில தெய்வங்கள் மற்றும் தேவிகளின் பெயர்களைக் குறிப்பிடவும்.

29. பிரம்மாவை இந்துக்கள் எவ்வாறு கருதுகின்றனர்? (அப்போஸ்தலர் 17:22-31-ஐ ஒப்பிடுக.)

30. விஷ்ணுவின் சில அவதாரங்கள் யாவை?

31. பரமசிவன் எப்படிப்பட்ட கடவுள்?

32. (அ) காளியின் வடிவங்கள் யாவை? (ஆ) காளியின் வழிபாட்டிலிருந்து எவ்வாறு ஓர் ஆங்கில வார்த்தை தோன்றியது?

33. கங்கை நதியை இந்துக்கள் புனிதமாக கருதுவது ஏன்?

34. இந்து புராணக்கதை ஒன்று கங்கை நதி தோன்றியதை எப்படி விளக்குகிறது?

35. விஷ்ணு பக்தர்கள் அந்த நதியின் ஆரம்பத்தைக் குறித்து என்ன சொல்கின்றனர்?

36. கங்கை நீரின் சக்தியைக் குறித்து இந்துக்கள் நம்புவது என்ன?

37, 38. லட்சக்கணக்கான இந்துக்கள் கங்கைக்குத் திரண்டு செல்வது ஏன்?

39, 40. இந்து உரையாசிரியர் ஒருவர் ஆத்மாவைப் பற்றி என்ன சொல்கிறார்?

41. பைபிளின் பிரகாரம், ஆத்மாவைப் பற்றிய எந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்?

42. ஆத்மாவைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் இந்து மதமும் பைபிளும் எவ்வாறு வேறுபடுகின்றன?

43. (அ) ஆத்மா சாகாது என்ற போதனை எங்கிருந்து தோன்றியது? (ஆ) அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை?

44. நரகமானது ஒருவர் உயிரோடு வதைக்கப்படுகிற இடமென இந்து மதம் கற்பிப்பது நமக்கு எப்படி தெரியும்?

45. இந்து மதத்தில் நரக வாதனைகள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றன?

46, 47. இறந்தோரின் நிலைமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

48, 49. (அ) இந்து மத போதனைகள் சில யாவை? (ஆ) இந்து மதத்தின் நம்பகத்தன்மையைச் சிலர் ஏன் சந்தேகித்திருக்கிறார்கள்? (இ) இந்து மத போதனைகளை எதிர்த்தவர் யார்?

[பக்கம் 100,101-ன் பெட்டி/படங்கள்]

சீக்கிய மதம்​—ஒரு சீர்திருத்த மதம்

மூன்று வாள்களையும் ஒரு வட்டத்தையும் சின்னமாக கொண்ட சீக்கிய மதம் 1.7 கோடிக்கும் அதிகமான ஆட்களுடைய மதமாகும். இவர்களில் பெரும்பான்மையர் பஞ்சாபில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு செயற்கை ஏரியின் மத்தியில் அமைந்துள்ள சீக்கியருடைய பொற்கோவில் அவர்களுடைய புனித நகரமாகிய அமிர்தசரசில் உள்ளது. நீலம், வெள்ளை, அல்லது கறுப்பு நிற தலைப்பாகை அணிந்திருப்பதை வைத்து சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆண்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தலைமுடியை நீளமாக வளர்ப்பதும் தலைப்பாகை அணிவதும் அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய மத பழக்கங்களாகும்.

சிக் என்ற ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் “சீடர்” என்பதாகும். சீக்கியர்கள் தங்கள் மதத்தைத் தோற்றுவித்த குருநானக் என்பவரின் சீடர்கள். இவர்கள் பத்து குருக்களுடைய (குருநானக் மற்றும் அவருடைய ஒன்பது வாரிசுகளுடைய) உபதேசங்களின்படி நடப்பவர்கள். இவர்களுடைய போதனைகளை சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்-ல் காணலாம். இந்து மதத்திலும் இஸ்லாமிலும் உள்ள மிகச் சிறந்த கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து, ஐக்கியப்பட்ட ஒரு மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் விரும்பினார். இப்படியாக 16-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றியதே சீக்கிய மதம்.

குருநானக்கின் சமயப் பணியை ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்: “கடவுள் ஒருவரே, அவரே நம்மெல்லாருக்கும் தந்தை, எனவே நாம் அனைவருமே சகோதரர்களாக இருக்க வேண்டும்.” முஸ்லிம்களைப் போலவே சீக்கியரும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைக்கிறார்கள், விக்கிரக வழிபாட்டைக் கண்டனம் செய்கிறார்கள். (சங்கீதம் 115:4-9; மத்தேயு 23:8, 9) சாவாமையுள்ள ஆத்துமா, மறுபிறவி, கர்மம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து இந்து மத பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள். சீக்கியரின் வழிபாட்டு இடம் குருதுவாரா என்றழைக்கப்படுகிறது.​—ஒப்பிடுக: சங்கீதம் 103:12, 13; அப்போஸ்தலர் 24:15.

குருநானக்கின் மிக முக்கிய கட்டளைகளில் ஒன்று: “எப்போதும் இறைவனை நினைத்துக்கொள், அவருடைய பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்.” இறைவன் “மெய்யானவர்” என இம்மதம் சொல்கிறதென்றாலும், எந்தப் பெயரையும் அவருக்குக் கொடுப்பதில்லை. (சங்கீதம் 83:16-18) மற்றொரு கட்டளை: “உன்னிடமிருப்பதைக் குறைவுள்ளவனோடு பகிர்ந்துகொள்.” இதற்கிசைவாக, சீக்கியரின் கோவில்கள் ஒவ்வொன்றிலும் எல்லா வகையான ஆட்களும் வந்து தாராளமாக உணவருந்தி செல்வதற்கென ஒரு லங்கர் அல்லது இலவச உணவுக்கூடம் காணப்படுகிறது. பயணிகள் இரவில் கட்டணமின்றி தங்குவதற்கென அறைகளும் உள்ளன.​—யாக்கோபு 2:14-17.

கடைசி குருவான கோவிந்த் சிங் (1666-1708) சீக்கியர்களின் சகோதரத்துவம் ஒன்றை நிறுவினார், அது கால்சா என்றழைக்கப்படுகிறது; இதைச் சேர்ந்தவர்கள் ‘க’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் ஐந்து காரியங்களைக் கடைப்பிடிக்கின்றனர்: கேஷ், வெட்டப்படாத தலைமுடி, ஆன்மீகத்துக்கு அடையாளம்; கங்கா, தலைமுடியில் வைத்திருக்கும் சீப்பு, ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடையாளம்; கிர்பான், வாள், கண்ணியத்திற்கும் தைரியத்திற்கும் தன்னல தியாகத்திற்கும் அடையாளம்; கடா, ஸ்டீல் காப்பு, இறைவனோடு ஒன்றியிருப்பதற்கு அடையாளம்; கச்சா, உள்ளுடுப்பான அரைக் கால்சட்டை, அடக்கத்திற்கும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கும் அடையாளம்.​—உலக மதங்களின் கலைக்களஞ்சியம், பக்கம் 269-ஐக் காண்க.

[படம்]

இந்தியாவிலுள்ள பஞ்சாபில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில்

[படங்கள்]

நீல நிற தலைப்பாகை, தப்பெண்ணத்துக்கே இடமில்லாத ஆகாயத்தைப் போன்ற பரந்த மனதைக் குறிக்கிறது

வெள்ளை நிற தலைப்பாகை, புனித நபராக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது

கறுப்பு நிற தலைப்பாகை, 1919-ல் சீக்கியர்களை ஆங்கிலேயர் துன்புறுத்தியதை நினைவுபடுத்துகிறது

மற்ற நிறங்கள் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன

[படம்]

மத சம்பிரதாய நிகழ்ச்சி ஒன்றில் சீக்கிய குரு புனித ஆயுதங்களின் வரலாற்றினை எடுத்துரைக்கிறார்

[பக்கம் 104-ன் பெட்டி/படங்கள்]

சமண மதம்​—ஆசாபாசங்களைத் துறந்து அகிம்சையைக் கடைப்பிடித்தல்

செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த நாட்டபுட்டா வர்த்தமானர் என்ற ஓர் இந்திய இளவரசர் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் இம்மதத்தைத் தோற்றுவித்தார். இவர் வர்த்தமானர் மகாவீரர் என நன்கு அறியப்பட்டவர். இவர் தோற்றுவித்த மதத்தின் சின்னம் பண்டைய இந்தியரின் சுவஸ்திக் சின்னம். இவர் ஆசாபாசங்களைத் துறந்து சன்னியாசம் பூண்டார். “பிறப்பு, மரணம், மறுபிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெற விரும்பி மத்திய இந்தியாவின் கிராமங்கள் வழியாகவும் சமவெளிகள் வழியாகவும்” அறிவைத் தேடிக்கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றார். (ஜான் பி. நாஸ் எழுதிய மனிதனின் மதங்கள்) ஆசைகளை அறவே ஒழித்து, சுயகட்டுப்பாட்டோடு, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் அகிம்சையைக் கடைப்பிடிப்பதன் மூலமாகத்தான் ஆத்மாவுக்கு முக்தி கிடைக்குமென அவர் நம்பினார். வழியிலிருக்கும் எந்தப் பூச்சியையும் மெதுவாக தள்ளிவிட அவர் ஒரு மென்மையான துடைப்பத்தை எடுத்துச் செல்லும் அளவுக்கு அகிம்சையைக் கடைப்பிடித்தார். உயிருக்கு அவர் காட்டிய இந்தளவு மரியாதைக்குக் காரணம், அவருடைய சொந்த ஆத்மாவின் தூய்மையையும் நேர்மையையும் காத்துக்கொள்ளத்தான்.

இன்று அவரது வழியில் நடப்பவர்கள் தங்கள் கர்ம வினையை மேம்படுத்துவதற்காக அதே போல ஆசாபாசங்களை அறவே ஒழித்து மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் மரியாதை காட்டுகிறார்கள். மனித ஆத்மா சாகாது என்ற நம்பிக்கை மனித வாழ்வில் செலுத்தும் பலமான செல்வாக்கை இம்மதத்திலும் காண்கிறோம்.

இன்று இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நாற்பது லட்சத்துக்கும் குறைவாக உள்ளனர், இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் மும்பையிலும் குஜராத்திலுமே இருக்கின்றனர்.

[படம்]

சமணர் ஒருவர் இந்தியாவில் கர்நாடகத்திலுள்ள புனித கோமடீஸ்வரரின் 57 அடி உயர உருவச்சிலையின் பாதத்தில் வழிபடுகிறார்

[பக்கம் 106, 107-ன் பெட்டி/படங்கள்]

இந்து மத சொற்களுக்கு எளிய விளக்கம்

அகிம்சை (சமஸ்கிருதத்தில் அஹின்சா)​உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை; எதற்கும் தீங்கிழைக்கவோ எதையும் கொல்லவோ கூடாது. இந்துக்கள் சைவ உணவை உண்பதற்கும் விலங்கினங்களை மதிப்பதற்கும் காரணம் இதுவே

அரிஜனர்​—தீண்டத்தகாத ஜாதியில் பிறந்தவர்கள்; “ஹரியின் ஜனங்கள்” என்று அர்த்தம் தரும் வகையில் மகாத்மா காந்தி இரக்கத்தோடு சூட்டிய பெயர்

அவதாரம்​—இந்து மத தெய்வம் ஏதேனும் ஓர் உருவத்தில் தோன்றுவது அல்லது பிறப்பது

ஆசிரமம்​—ஒரு குரு (ஆன்மீக வழிகாட்டி) உபதேசம் செய்யும் மடம் அல்லது ஓர் இடம்

ஆத்மன்​—ஆவி; சாவாமையோடு சம்பந்தப்பட்டது. அடிக்கடி ஆத்மா என தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. காண்க: ஜீவன்

உபநிடதங்கள்​—செய்யுள் நடையிலுள்ள இந்து மதத்தின் பழமையான புனித நூல்கள். வேதாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வேதங்களின் இறுதிப் பகுதி

ஓம்​—பிரம்மத்தை அடையாளப்படுத்தும், தியானத்திற்காக பயன்படுத்தப்படும் பிரணவம், ஒருவித அதிர்வுண்டாக்கும் ஓங்காரம், புனித மந்திரம்

கர்மம்​—முற்பிறவியின் ஒவ்வொரு வினையும், அடுத்த பிறவியில் நல்ல அல்லது கெட்ட பலன் தருமென்ற நியதி

குங்குமம்​—சுமங்கலிகள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் சிவப்பு நிற திலகம்

குரு​—ஆசான் அல்லது ஆன்மீக வழிகாட்டி

சக்தி​—ஒரு தெய்வத்தின் மனைவி, முக்கியமாக சிவனின் துணைவி

சத்ரியர்​—ஜாதி அமைப்பில் இரண்டாவது நிலை, தொழில்புரியும், அரசாளும், போர் செய்யும் வர்க்கம்

சம்சாரம்​—அழிக்க முடியாத நித்திய ஆன்மா மறுபிறவி எடுத்தல்

சாது​—சன்னியாசி, முனிவர், அல்லது யோகி

சிராத்தம்​—முன்னோர்களுக்கு மரியாதை செய்வதற்கும் பிரிந்துபோன ஆன்மாக்கள் மோட்சத்தை அடைவதற்கும் உதவ நடத்தப்படும் முக்கிய சடங்குகள்

சுவாமி​—குரு அல்லது உயர்ந்த ஆன்மீக விஷயங்களைப் போதிப்பவர்

சூத்திரர்​—தொழிலாளி வர்க்கம், நான்கு முக்கிய ஜாதிகளில் கீழ் ஜாதி

தர்மம்​—அனைத்து காரியங்களின் தீர்வான சட்டம்; செயல்கள் சரியா தவறா என்பதைத் தீர்மானிக்கிறது

திருமூர்த்திகள்​—பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள்

திலகம்​—நெற்றியில் இட்டுக்கொள்ளும் அடையாளம், எல்லா காரியங்களிலும் ஆண்டவனுடைய நினைவு தங்கியிருக்கிறது என்பதை அடையாளப்படுத்துகிறது

பக்தி​—தெய்வத்தின் மீது பற்று. இது விமோசனத்திற்கு வழிநடத்துகிறது

படித்துறை​—ஆற்றின் அருகேயுள்ள படிக்கட்டுகள் அல்லது மேடை

பரமாத்மா​—உலக-ஆவி; சர்வலோக ஆத்மா, அதாவது பிரம்மம்

பிராமணன்​—புரோகித வர்க்கம், ஜாதி பிரிவில் மிக உயர்ந்த ஜாதி

பூஜை​—வழிபாடு

மகாத்மா​—இந்து புனிதர், மகா அல்லது உயர்ந்த என்ற வார்த்தையும் ஆத்மா அல்லது ஆவி என்ற வார்த்தையும் சேர்ந்தது

மகான்​—புனிதர் அல்லது ஆசான்

மந்திரம்​—மாயசக்தியுள்ள புனித வார்த்தைகள்; பிரார்த்தனையாகவும் புனித வாசகமாகவும் திரும்பத் திரும்ப ஓதப்படுவது

மாயை​—உலகின் பொய்த் தோற்றம்

மோட்சம், அதாவது முக்தி​—மறுபிறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை; ஆன்மாவின் பயண முடிவு. நிர்வாண நிலை என்றும் அழைக்கப்படுகிறது, தனி நபரின் ஆத்துமா பரமாத்மாவோடு, பிரம்மமோடு ஐக்கியமாகிவிடுதல்

யோகம்​—யூஜ் என்ற மூல சொல்லிலிருந்து வந்தது; இதன் அர்த்தம் இணைவது அல்லது சேருவது ஆகும். தனிநபர் பரமாத்மாவோடு கலந்துவிடுவதை உட்படுத்துகிறது. உடலையும் சுவாசத்தையும் கட்டுப்படுத்துவதை உட்படுத்தும் ஒருவித தியானப் பயிற்சியாக பெரும்பாலும் அறியப்பட்டிருக்கிறது. அதோடு, இந்து மதத்தில் குறைந்தது நான்கு முக்கிய யோகங்கள், அதாவது மார்க்கங்கள் உள்ளன. பக்கம் 110-ஐக் காண்க

வேதங்கள்​—செய்யுள் நடையிலுள்ள மிகப் பழமையான இந்து மத புனித நூல்கள்

வைசியர்​—வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வர்க்கம்; ஜாதி அமைப்பின் மூன்றாவது பிரிவு

ஜபம்​—ஒரு தெய்வத்தின் பெயரை ஓதி வழிபடுவது; மாலை, அதாவது 108 மணிகள் கொண்ட ஒரு ஜெபமாலை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

ஜீவன் (அல்லது பிராண்)​—நபரின் ஆன்மா அல்லது உயிர்

[படங்கள்]

இடமிருந்து: இந்து மகான்; தியான நிலையில் நிற்கும் சாது; நேப்பாளத்தைச் சேர்ந்த குரு

[பக்கம் 110-ன் பெட்டி]

மோட்சத்தை அடைய நான்கு வழிகள்

மோட்சத்திற்கு அல்லது ஆத்மா முத்தி அடைவதற்கு குறைந்தபட்சம் நான்கு வழிகள் இருப்பதாக இந்து மதம் கூறுகிறது. மோட்சத்தை அடைவதற்கான இவ்வழிகள், யோகங்கள், அதாவது மார்க்கங்கள் என அழைக்கப்படுகின்றன.

1. கர்ம யோகம்​—“கர்ம யோகம், அதாவது செயல் மார்க்கம் என்பது செயல் கட்டுப்பாடு. அடிப்படையில், கர்ம மார்க்கம் என்பது அவரவர் வாழ்க்கைக்கேற்ப அவரவர் கடமைகளைச் செய்வதாகும். அகிம்சையைக் கடைப்பிடித்தல், மது குடிப்பதிலிருந்தும் மாம்சம் புசிப்பதிலிருந்தும் விலகியிருத்தல் போன்றவை அனைவருக்கும் உள்ள பொதுவான கடமைகள். அதேசமயம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமைகள் அவரவரின் ஜாதியையும் வாழ்க்கை நிலையையும் பொறுத்தே இருக்கின்றன.”​—பெரும் சிறப்பு வாய்ந்த ஆசிய மதங்கள்.

இந்தக் கர்ம யோகம் ஜாதியின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் செய்யப்படுகிறது. பூர்வ ஜென்ம வினையினால் தீர்மானிக்கப்பட்டபடி ஒருவர் எந்த ஜாதியில் பிறக்கிறாரோ அந்த ஜாதியை விட்டு வேறு ஜாதியில் மணம் செய்துகொள்ளாமல் அல்லது வேறு ஜாதியினர் வீட்டில் ஆகாரம் புசிக்காமல் இருப்பதன் மூலம் அதன் தூய்மை காக்கப்படுகிறது. எனவே ஒருவர் இன்ன ஜாதியில் பிறக்கிறார் என்பது அவருக்கு இழைக்கப்படும் அநீதியாக இல்லாமல் பூர்வ ஜென்ம பலனாகவே கருதப்படுகிறது. இந்து மத தத்துவத்தின்படி, ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் அல்ல. ஜாதி, பால், ஏன், நிறம் என்ற அடிப்படையிலும் அவர்கள் பிரிந்திருக்கின்றனர். பொதுவாக, அவர்களது மேனி எந்தளவு சிவப்பாக இருக்கிறதோ அந்தளவு உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

2. ஞான யோகம்​—“ஞான யோகம், அதாவது அறிவு மார்க்கம் என்பது அறிவு கட்டுப்பாடு. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இன்னின்ன கடமைகளைச் செய்ய வேண்டுமென கூறும் கர்ம யோகத்திற்கு, அதாவது செயல் மார்க்கத்திற்கு நேர்மாறாக ஞான மார்க்கம் தத்துவ ரீதியிலும் மனோ ரீதியிலும் தன்னைத் தானே அறிந்துகொள்ளவும் பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளவும் வழி காட்டுகிறது. எதையும் செய்யாமல் வாழ்வதே ஞான யோகத்தின் முக்கிய கொள்கை. [சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.] மிக முக்கியமாக, இந்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு இந்த வாழ்க்கையிலேயே மோட்சம் கிடைத்து விடுகிறது.” (பெரும் சிறப்பு வாய்ந்த ஆசிய மதங்கள்) இது சுய பரிசோதனை யோகாக்கள் செய்வதையும், உலகப் பற்றில்லாமல் துறவறம் கொள்வதையும் உட்படுத்துகிறது. இச்சையடக்கமும் ஆசைகளைத் துறப்பதும் இதில் அடங்கும்.

3. பக்தி யோகம்​—“இந்து மத சம்பிரதாயத்தில் இதுவே இன்று பெரும்பாலான மக்களை ஈர்த்துள்ளது. இது தெய்வப் பற்றின் வழி, பக்தி மார்க்கமாகும். கர்ம மார்க்கத்துக்கு நேர்மாறாக . . . இந்த வழி சுலபமானது, இயல்பானது, எந்த ஜாதியினராலும், வயதினராலும், ஆணாலும் பெண்ணாலும் பின்பற்ற முடிவது. . . . துறவறத்தால் மனித ஆசாபாசங்களை அடக்குவதற்கு பதிலாக அவற்றை தாராளமாக வெளிக்காட்ட [இது] அனுமதிக்கிறது . . . தெய்வீக பக்தியை மாத்திரமே [இது] கேட்கிறது.” வழிபடுவதற்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக பாரம்பரியம் கூறுகிறது. அதன்படி, தெய்வத்தை அறிவது அன்பு காட்டுவதை குறிக்கிறது. உண்மையில் பக்தி என்பது “ஒருவருடைய இஷ்ட தெய்வத்தின் மீது காட்டப்படுகிற உணர்ச்சிப்பூர்வ பற்றாகும்.”​—பெரும் சிறப்பு வாய்ந்த ஆசிய மதங்கள்.

4. ராஜ யோகம்​—“விசேஷமான அங்கநிலைகள், சுவாச முறைகள், சரியான மந்திரங்களைச் சீராக ஓதுதல்” ஆகியவை உட்படுகின்றன. (மனிதனின் மதங்கள்) இதில் எட்டு படிகள் உண்டு.

[பக்கம் 113-ன் பெட்டி/படம்]

மகாத்மா காந்தியும் ஜாதிப் பிரிவுகளும்

“வன்முறையிலிருந்து விலகியிருப்பதே என் நம்பிக்கையின் ஆரம்பம், அதுவே என் நம்பிக்கையின் முடிவு.”​—மகாத்மா காந்தி, மார்ச் 23, 1922.

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தருவதற்காக (1947-ல் வழங்கப்பட்டது) சத்தியாகிரகப் போராட்டத்தைத் தலைமை தாங்கியதற்குப் புகழ் பெற்றவரான மகாத்மா காந்தி, லட்சக்கணக்கான சக இந்துக்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கும்கூட பாடுபட்டார். இந்திய பேராசிரியர் எம். பி. ரெகி இவ்வாறு விளக்குகிறார்: “அகிம்சை (வன்முறையிலிருந்து விலகியிருத்தல்) என்பதே முக்கியமான ஒழுக்கநெறியென அவர் அறிவித்தார்; ஒவ்வொரு நபரின் கண்ணியத்தின் பேரிலும் நலனின் பேரிலும் அக்கறை காட்டுவதை அது அர்த்தப்படுத்துவதாக அவர் விளக்கினார். இந்து மத நூல்கள் அகிம்சைக்கு முரண்படும்போது அதை அவர் ஏற்க மறுத்தார், தீண்டாமையையும் ஜாதிப் பிரிவினைகளையும் ஒழிக்க அரும்பாடுபட்டார், அதுமட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.”

தீண்டத்தகாதவர்களின் நிலையைப் பற்றிய காந்தியின் கருத்து என்ன? ஜவஹர்லால் நேருவுக்கு மே 2, 1933 தேதியிட்டு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “அரிஜன இயக்கத்தை அறிவாற்றலால் மட்டுமே வென்றுவிட முடியாது. உலகில் இதைவிட மோசமானது வேறு எதுவுமே இல்லை. இருந்தாலும் என்னால் மதத்தைவிட்டு, இந்து மதத்தைவிட்டு விலக முடியாது. இந்து மதம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தால் என் வாழ்க்கையே எனக்குச் சுமையாகிவிடும். இந்து மதத்தின் மூலமாகத்தான் நான் கிறிஸ்தவம், இஸ்லாம், இன்னும் பிற மதங்களையும் நேசிக்கிறேன். . . . ஆனால் தீண்டாமையுடன் கூடிய இந்து மதத்தை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது.”​—தி எஸன்ஷியல் காந்தி.

[படம்]

மதிப்பிற்குரிய இந்து தலைவரும் அகிம்சைவாதியுமான மகாத்மா காந்தி (1869-1948)

[பக்கம் 116,117-ன் பெட்டி/படங்கள்]

இந்து மதம்​—சில தெய்வங்களும் தேவிகளும்

அக்கினி​—நெருப்பின் கடவுள்

அனுமான்​—வானர தெய்வம், ராமரின் தீவிர பக்தன்

ஆதித்தி​—தெய்வ மாதா; ஆகாய தேவி; எல்லையற்றவள்

இமயம்/இமவான்​—பனியின் இருப்பிடம், பார்வதியின் தந்தை

இராதை​—கிருஷ்ணரின் துணைவி

இராமர், இராமச்சந்திரர்​—விஷ்ணுவின் ஏழாவது அவதாரம். இராமாயண பெருங்காப்பியம் இராமரையும் அவருடைய மனைவி சீதையையும் பற்றிய கதையைக் கூறுகிறது

கங்கை​—தேவி, சிவனின் ஒரு மனைவி, கங்கை நதியாக உருவகப்படுத்தப்படுகிறாள்

கணேசன் (கணேஷன்)​—சிவனின் மைந்தன், யானை முகப் பெருமான், வினை தீர்க்கும் கடவுள், அதிர்ஷ்ட தெய்வம், கணபதி, கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்

காளி​—கருத்த மேனியுடைய, சிவனின் துணைவி (சக்தி). இரத்தத் தாகமுள்ளவள், அழிப்பவள். நீண்ட சிவந்த நாக்கு வெளியில் தொங்குவது போல பொதுவாக சித்தரிக்கப்படுகிறாள்

கிருஷ்ணர்​—லீலைகள் புரிபவர், விஷ்ணுவின் எட்டாவது அவதாரம், பகவத் கீதையில் வரும் தெய்வம். அவருடைய காதலிகள் கோபியர்கள், அதாவது ஆயர்குலப் பெண்கள்

சரஸ்வதி​—கலைமகள், படைப்பாளரான பிரம்மாவின் துணைவி

சஷ்டி​—பிள்ளை பிறப்பின்போது தாயையும் சேயையும் காக்கும் தேவி

சிவன்​—கருவளம், மரணம், அழிவு ஆகியவற்றின் தெய்வம்: திருமூர்த்திகளில் ஒருவர். திரிசூலம், லிங்கம் ஆகியவை இவரின் அடையாளச் சின்னங்கள்

சோமதேவன், சோமபானம்​—தெய்வம், அதேசமயம் பானம்; தீர்க்காயுசை தருவது

துர்கை​—சிவனின் மனைவி அல்லது சக்தி, காளியின் ஒரு வடிவம்

நடராஜர்​—எரிகிற அனற்கொழுந்து வட்டத்திற்குள் நடனமாடும் வடிவில் சிவபெருமான்

நந்தி​—காளை. சிவனின் வாகனம்

பரமபுருஷன்​—ஆதி தந்தை. அவருடைய உடம்பிலிருந்தே நான்கு முக்கிய ஜாதிகள் தோன்றின

பார்வதி அல்லது உமையாள்​—சிவனின் துணைவி. துர்கை அல்லது காளியின் அவதாரத்தையும் எடுக்கிறாள்

பிரமம்​—பரம்பொருள், பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்திருக்கிறவர், ஓம் என்ற புனித ஓங்காரத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார். (மேலேயுள்ள அடையாளக் குறியைக் காண்க.) ஆத்மன் என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்துக்கள் சிலருக்கு பிரமம் என்பது உருவமும் குணமுமற்ற மெய்ப்பொருள்

பிரம்மா​—படைப்பாளர், பிரபஞ்சம் உண்டாவதற்கு மூலகாரணர், திருமூர்த்திகளில் (முக்கடவுட்களில்) ஒருவர்

பிரஜாபதி​—பிரபஞ்சத்தின் படைப்பாளர், உயிரினங்களின் பெருமான், தெய்வங்களுக்கும் பேய்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் தந்தை. பிற்பாடு பிரம்மா என்று அறியப்பட்டார்

புத்தர்​—புத்த மதத்தை தோற்றுவித்த கெளதமர்; இந்துக்கள் சிலர் இவரை விஷ்ணுவின் ஓர் அவதாரமாக கருதுகின்றனர்

மனு​—முதல் மனிதர்; ஜலப்பிரளயத்தின்போது ஒரு பெரிய மீன் இவரை காப்பாற்றியது

மனோசா​—நாக தேவி

மித்ரா​—ஒளியின் தெய்வம். ரோமர்கள் மித்ராஸ் என்று அழைத்தனர்

லட்சுமி​—அழகுக்கும் செல்வத்திற்கும் திருமகள்; விஷ்ணுவின் துணைவி

விஷ்ணு​—உயிரைக் காக்கும் தெய்வம்; திருமூர்த்திகளில் ஒருவர்

[படத்திற்கான நன்றி]

(புராணங்கள்​—பட விளக்கங்கள் கொண்ட என்ஸைக்ளோப்பீடியா-வில் காணப்படும் தகவல்படி)

[படங்கள்]

மேலே இடமிருந்து வலம்: நடராஜர் (நடனமாடும் சிவன்), சரஸ்வதி, கிருஷ்ணர், துர்கை (காளி)

[பக்கம் 120-ன் பெட்டி]

ஜலப்பிரளயத்தைப் பற்றிய இந்து புராணம்

“அவர்கள் அன்று காலை மனுவுக்கு [மனிதகுலத்தின் முதல் மனிதன், முதன்முதலாக சட்டம் வழங்கினவர்] குளிக்க தண்ணீரைக் கொண்டு வந்தார்கள் . . . அவர் குளித்துக் கொண்டிருக்கையில் ஒரு மீன் [மச்ச அவதாரத்தில் விஷ்ணு] அவருடைய கையில் வந்தது.

“‘என்னை எடுத்து நீ வளர்த்தால் நான் உன்னைக் காப்பாற்றுவேன்!’ என்று அது சொன்னது. ‘எதிலிருந்து என்னை நீ காப்பாற்றுவாய்?’ என மனு கேட்டார். ‘இந்த எல்லா உயிரினங்களையும் ஒரு பெருவெள்ளம் வந்து வாரிக்கொண்டு போய்விடும்: அதிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்!’ என்று அது சொன்னது. ‘நான் எப்படி உன்னை வளர்ப்பது?’ என மனு கேட்டார்.”

தன்னை வளர்க்கும் முறை குறித்து மனுவுக்கு அந்த மீன் கட்டளைகளைக் கொடுத்தது. “அதன்பின் அது இவ்வாறு சொன்னது, ‘இன்ன ஆண்டில் பெருவெள்ளம் ஒன்று வரப்போகிறது. அப்போது நீ ஒரு கப்பலை ஆயத்தப்படுத்தி எனக்கு (என் அறிவுரைக்கு) செவிசாய்க்க வேண்டும்; ஜலம் மேலே வரும்போது நீ கப்பலுக்குள் சென்றுவிடு, அப்பொழுது நான் உன்னை அதிலிருந்து காப்பாற்றிவிடுவேன்.’”

அந்த மீன் சொன்ன அறிவுரைகளின்படியே மனு செய்தார், பெருவெள்ளத்தின்போது கப்பலை “வடக்கே இருந்த மலைக்கு” மீன் இழுத்துச் சென்றது. “பின்பு அது சொன்னது, ‘நான் உன்னை காப்பாற்றிவிட்டேன். கப்பலை ஒரு மரத்தோடு இழுத்துக் கட்டிவிடு; மலையின்மேல் இருக்கையில் தண்ணீர் உன்னை அடித்துக்கொண்டு போய்விடாதபடி பார்த்துக்கொள். தண்ணீர் வடிந்துவிடும்போது நீ மெதுவாய் கீழே வந்துவிடலாம்!’”​—சதபாத-பிராமணா; ஆதியாகமம் 6:9–8:22-ஐ ஒப்பிடுக.

[பக்கம் 123-ன் வரைப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கங்கை, இமயத்திலிருந்து கொல்கத்தாவுக்கும் வங்காள தேசத்திலுள்ள அதன் டெல்டா வரையாகவும் 1,500 மைலுக்கு மேல் பாய்ந்தோடுகிறது

இந்தியா

கொல்கத்தா

கங்கை நதி

[படங்கள்]

சிவபெருமானின் தலை மீதிருந்து அவருடைய ஜடாமுடி வழியாக இறங்கும் கங்கா மாதா

வாரனாசி அல்லது பனாரஸில் கங்கை படித்துறையில் ஸ்நானம் செய்யும் பக்தர்கள்

[பக்கம் 96-ன் படம்]

கணபதி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் விநாயகப் பெருமான்; சிவன், பார்வதி தம்பதியினரின் மைந்தன்

[பக்கம் 99-ன் படங்கள்]

இந்துக்கள் வழிபடும் லிங்கங்கள் (மர்ம உறுப்பு சின்னங்கள்). சிவனின் (கருவள தெய்வம்) உருவத்தையுடைய லிங்கம், மற்றொன்று சதுர்முக லிங்கம்

[பக்கம் 108-ன் படங்கள்]

பூச்சிகள் வாய்க்குள் சென்று செத்துப்போவதைத் தவிர்க்க சமண மத பெண் துறவிகள் முக்-வஸ்திரிக்கா அணிந்திருப்பதை, அதாவது ஒரு துணியால் வாயைக் கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்

[பக்கம் 108-ன் படம்]

பாம்பாட்டியுடன் காவல் தெய்வம், தமிழ்நாடு. விஷப்பாம்பிடமிருந்து பாதுகாக்கும் நாக தேவி மனோசாவை வங்காளத்தில் வழிபடுகின்றனர்

[பக்கம் 118-ன் படம்]

சுருண்டு படுத்திருக்கும் அனந்தசேஷன் என்ற பாம்பின் மீது விஷ்ணுவும் அவருடைய மனைவி மகாலட்சுமியும், விஷ்ணுவின் நாபிக்கொடியிலிருந்து செல்லும் ஒரு கமலத்தின் மீது நான்முக பிரம்மனும்