Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 14

ஒன்றுசேர்ந்து முதியோராதல்

ஒன்றுசேர்ந்து முதியோராதல்

1, 2. (அ) முதிர்வயது நெருங்கிவருகையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? (ஆ) பைபிள் காலங்களில் வாழ்ந்துவந்த தேவபக்தியுள்ள மனிதர்கள் வயதான காலத்தில் எவ்வாறு திருப்தியடைந்தனர்?

 நாம் முதியோராகிக்கொண்டிருக்கையில் அநேக மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்சார்ந்த பலவீனம் நம் சக்தியை உறிஞ்சிவிடுகிறது. கண்ணாடியில் உற்றுப்பார்ப்பது, புதிய சுருக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும், முடியின் நிறம் படிப்படியாக மாறியிருப்பதையும், முடி உதிர்வதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. நாம் கொஞ்சம் ஞாபக சக்தியை இழந்துகொண்டிருப்பதால் கஷ்டப்படலாம். பிள்ளைகள் திருமணம் செய்துகொள்கையில் புதிய உறவுகள் வளர்கின்றன, பேரப்பிள்ளைகள் வரும்போது மறுபடியும் உறவுகள் ஏற்படுகின்றன. உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சிலருக்கு வழக்கமாக செய்யும் வேலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

2 உண்மையில், வயதாகிக்கொண்டே செல்லும் வருடங்கள் சோதனைக் காலமாக இருக்கலாம். (பிரசங்கி 12:1-8) அவ்வாறு இருந்தாலும், பைபிள் காலங்களில் வாழ்ந்துவந்த கடவுளுடைய ஊழியர்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறுதியில் இறந்துபோனாலும், ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் சம்பாதித்துக்கொண்டனர், அவை அவர்களுக்கு வயதான காலத்தில் பெரும் திருப்தியைக் கொண்டுவந்தன. (ஆதியாகமம் 25:8; 35:29; யோபு 12:12, NW; 42:17) அவர்கள் எவ்வாறு சந்தோஷத்தோடு முதியோராவதில் வெற்றியடைந்தனர்? இன்று நாம் காண்கிறபடி, பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதன் மூலமே என்று உறுதியாய் சொல்லலாம்.—சங்கீதம் 119:105; 2 தீமோத்தேயு 3:16, 17.

3. வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பவுல் என்ன புத்திமதியை அளித்தார்?

3 தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் முதியோராகிக் கொண்டிருப்போருக்கு நல்ல அறிவுரை கொடுத்தார். அவர் எழுதினார்: “முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், . . . நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் புத்திசொல்லு.” (தீத்து 2:2, 3, 5) இந்த வார்த்தைகளைக் கவனத்தில்கொண்டு நடப்பது முதியோராகையில் எதிர்ப்படும் சவால்களை மேற்கொள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.

பிள்ளைகள் வீட்டை விட்டுச் செல்கையில் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்

4, 5. பிள்ளைகள் தங்கள் வீட்டை விட்டுச்செல்கையில் பெரும்பாலான பெற்றோர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர், சிலர் எவ்வாறு புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்கின்றனர்?

4 வாழ்க்கைப் பாங்கில் மாற்றங்கள் ஏற்படுகையில், அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்வதை அவை தேவைப்படுத்துகின்றன. வயதுவந்த பிள்ளைகள் திருமணம் செய்துகொள்வதற்கென்று வீட்டை விட்டுச் செல்கையில் இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது! அநேக பெற்றோருக்கு இது, தாங்கள் வயதாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் முதலாவது நினைப்பூட்டுதலாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் வயதுவந்தோராய் ஆனதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தாலும், பிள்ளைகளைத் தனித்து வாழ தயார்படுத்துவதற்கு தங்களாலான எல்லாவற்றையும் செய்தார்களா என்பதைக் குறித்து பெற்றோர் பெரும்பாலும் வருத்தப்படுகின்றனர். பிள்ளைகள் தங்களோடு வீட்டில் இல்லாததைக் குறித்து அவர்கள் வருந்தலாம்.

5 புரிந்துகொள்ளத்தக்க விதத்தில், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றபின்பும்கூட பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய நலனின் பேரில் தொடர்ந்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கின்றனர். “நான் அடிக்கடி அவர்களிடமிருந்து தகவலைப் பெற்றுக்கொண்டால்—அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலைப் பெற்றுக்கொண்டால்—அது என்னை சந்தோஷப்படுத்தும்,” என்று ஒரு தாய் சொன்னார். ஒரு தகப்பன் சொல்கிறார்: “எங்கள் மகள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு, அது மிகவும் வருத்தமிக்க சமயமாய் இருந்தது. அது எங்கள் குடும்பத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது, ஏனென்றால் நாங்கள் எப்போதும் எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்திருக்கிறோம்.” இப்படிப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தங்களோடு இல்லாததை எவ்வாறு சமாளித்திருக்கின்றனர்? அநேகருடைய விஷயங்களில், மற்றவர்கள் பேரில் அக்கறை காண்பித்து அவர்களுக்கு உதவுவதன் மூலமே.

6. குடும்ப உறவுகளை சரியான நோக்குநிலையில் வைப்பதற்கு எது உதவிசெய்கிறது?

6 பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளும்போது பெற்றோரின் பங்கு மாறிவிடுகிறது. ஆதியாகமம் 2:24 குறிப்பிடுகிறது: ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.’ தலைமை வகிப்பு, நல்ல ஒழுங்கு ஆகிய தெய்வீக நியமங்களைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வது, காரியங்களை அதன் சரியான நோக்குநிலையில் வைப்பதற்கு அவர்களுக்கு உதவும்.—1 கொரிந்தியர் 11:3; 14:33, 40.

7. தன் மகள்கள் திருமணம் செய்துகொள்வதற்கென்று வீட்டை விட்டு சென்றபோது ஒரு தகப்பன் என்ன சிறந்த மனநிலையை வளர்த்துக்கொண்டார்?

7 ஒரு தம்பதியினரின் இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டுச்சென்றவுடன், அத்தம்பதிகள் தங்கள் வாழ்க்கை வெறுமையாக்கப்பட்டதாக உணர்ந்தனர். முதலில் கணவன் தன் மருமகன்கள் மீது கோபங்கொண்டிருந்தார். ஆனால் தலைமை வகிப்பு நியமத்தை அவர் சிந்தித்துப் பார்த்தபோது, தன் மகள்களின் கணவன்மார் இப்போது தங்கள் தங்கள் குடும்பத்துக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொண்டார். ஆகையால், அவருடைய மகள்கள் ஆலோசனை கேட்டபோது, அவர்களுடைய கணவன்மாரின் கருத்தை முதலில் அவர் கேட்டறிந்து, பின்னர் கூடுமானவரை அதற்கு ஆதரவுதர உறுதிசெய்துகொண்டார். அவருடைய மருமகன்கள் இப்போது அவரை நண்பராக கருதி அவருடைய புத்திமதியை வரவேற்கின்றனர்.

8, 9. தங்கள் வளர்ந்த பிள்ளைகளின் சுதந்திரத்துக்கு ஏற்றவாறு சில பெற்றோர் எவ்வாறு தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றனர்?

8 புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள் வேதப்பூர்வமற்ற காரியங்கள் எதையும் செய்யாதபோதும், பெற்றோர் சிறந்தது என்று நினைக்கும் காரியத்தைச் செய்யத் தவறினால் அப்போது என்ன செய்வது? “அவர்கள் யெகோவாவின் நோக்குநிலையைக் காண நாங்கள் எப்போதும் உதவிசெய்கிறோம், ஆனால் அவர்களுடைய தீர்மானத்தை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும், அதை ஏற்றுக்கொண்டு எங்கள் ஆதரவையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு கொடுக்கிறோம்,” என்று திருமணமான பிள்ளைகளையுடைய ஒரு தம்பதியினர் விளக்குகின்றனர்.

9 குறிப்பிட்ட சில ஆசிய தேசங்களில் உள்ள தாய்மார் சிலர் தங்கள் மகன்கள் தனித்து வாழ விரும்புவதற்கு சம்மதிப்பதைக் குறிப்பாக கடினமாய்க் காண்கின்றனர். என்றபோதிலும், அவர்கள் கிறிஸ்தவ ஒழுங்குக்கும் தலைமை வகிப்புக்கும் மரியாதை காண்பித்தால், தங்கள் மருமகள்களோடு கொண்டுள்ள பிணக்கங்களைக் கூடுமானவரை குறைவாக்கலாம். தன் மகன்கள் குடும்பமாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே சென்றது “எப்போதும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் நன்றியுணர்ச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறது,” என்று ஒரு கிறிஸ்தவ பெண் சொல்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் புதிய குடும்பங்களை நிர்வகிப்பதற்கான திறமை பெற்றிருப்பதைக் காணும்போது அவர்கள் மிகவும் கிளர்ச்சியடைகிறார்கள். இது அந்தக் கிறிஸ்தவ பெண்ணும் அவர்களுடைய கணவரும் வயதாகிக்கொண்டே செல்கையில் அவர்களுடைய உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட பாரத்தைக் குறைப்பதாய் இருந்தது.

உங்கள் திருமண பிணைப்புக்கு புத்துணர்ச்சியூட்டுதல்

10, 11. நடுத்தரவயதின் சில கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு என்ன வேதப்பூர்வமான புத்திமதி ஆட்களுக்கு உதவும்?

10 ஆட்கள் நடுத்தர வயதை அடைகையில் பல்வேறு விதங்களில் பிரதிபலிக்கின்றனர். சில ஆண்கள் இளவயதினராய் காட்சியளிப்பதற்கு முயற்சிசெய்து வித்தியாசமாய் உடுத்துகின்றனர். மாதவிடாய் முடிவுறும் பருவம் கொண்டுவரும் மாற்றங்களைக் குறித்து பெரும்பாலான பெண்கள் கவலைப்படுகின்றனர். விசனகரமாக, சில நடுத்தர வயதுள்ள நபர்கள், எதிர்பாலாரைச் சேர்ந்த இளம் அங்கத்தினர்களோடு பசப்புக்காதல் புரிவதன்மூலம் தங்கள் துணை கோபப்படுவதற்கும் பொறாமைப்படுவதற்கும் தூண்டுகின்றனர். ஆனால் தேவபக்தியுள்ள ஆண்களோ “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து” தவறான விருப்பங்களைத் தவிர்க்கின்றனர். (1 பேதுரு 4:7) அதேபோல் முதிர்ச்சிவாய்ந்த பெண்களும் தங்கள் கணவர்களை நேசிப்பதாலும் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவதாலும் தங்கள் திருமணங்களில் நிலையானத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு உழைக்கின்றனர்.

11 “திறமைசாலியான மனைவி,” “உயிரோடிருக்கிற நாளெல்லாம் தீமையையல்ல, நன்மையையே” தன் கணவனுக்கு செய்வதாக அவளைப் புகழ்ந்து பேசுவதை லேமுவேல் ராஜா பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பதிவுசெய்து வைத்தார். தன் மனைவி நடுத்தர வயதின்போது, எப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான அமைதியைக் கெடுக்கும் காரியங்களை அனுபவித்தாலும், அதை எவ்வாறு முயன்று சமாளிக்கிறாள் என்பதை ஒரு கிறிஸ்தவ கணவன் போற்றுவதற்கு தவறமாட்டார். அவருடைய அன்பு ‘அவளைப் புகழுவதற்கு’ அவரைத் தூண்டுவிக்கும்.—நீதிமொழிகள் 31:10, 12, 29; NW.

12. வருடங்கள் கடந்து செல்லச்செல்ல தம்பதியினர் எவ்வாறு நெருங்கி வரலாம்?

12 அதிக வேலைகள் நிறைந்த பிள்ளை-வளர்ப்பு காலப்பகுதியின்போது, நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை சந்தோஷத்தோடு ஒருபுறம் ஒதுக்கிவைத்திருப்பீர்கள். அவர்கள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு உங்கள் திருமண வாழ்க்கையை மறுபடியும் ஒருமுகப்படுத்துவதற்கான சமயமாய் இது இருக்கிறது. “என் மகள்கள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு, திருமணத்திற்கு முன் பழகியதைப் போல் நான் என் மனைவியோடு மறுபடியும் பழக ஆரம்பித்தேன்,” என்று ஒரு கணவர் சொல்கிறார். மற்றொரு கணவர் சொல்கிறார்: “நாங்கள் எங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம், உடற்பயிற்சி செய்வதற்கான அவசியத்தைக் குறித்தும் ஒருவருக்கொருவர் நினைப்பூட்டிக் கொள்கிறோம்.” தனிமையை உணராமல் இருப்பதற்காக அவரும் அவருடைய மனைவியும் சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களை உபசரிக்கின்றனர். ஆம், மற்றவர்கள் பேரில் காண்பிக்கும் அக்கறை ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அதற்கும் மேலாக அது யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது.—பிலிப்பியர் 2:4; எபிரெயர் 13:2, 16.

13. தம்பதியினர் ஒன்றுசேர்ந்து முதியோராகையில் ஒளிவுமறைவின்றி இருப்பதும் நேர்மையாய் இருப்பதும் என்ன பங்கை வகிக்கிறது?

13 உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையேயுள்ள கருத்து பரிமாற்றத்தில் முறிவு ஏற்படும்படி அனுமதிக்காதீர்கள். ஒன்றுசேர்ந்து ஒளிவுமறைவின்றி தாராளமாகப் பேசுங்கள். (நீதிமொழிகள் 17:27) “ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதன் மூலமும் கரிசனையுள்ளவர்களாய் இருப்பதன் மூலமும் நாங்கள் ஒருவர் பேரில் ஒருவர் கொண்டிருக்கும் எங்கள் புரிந்துகொள்ளுதலை அதிகரித்துக்கொள்கிறோம்,” என்று ஒரு கணவன் குறிப்பிடுகிறார். அதை அவருடைய மனைவியும் ஒப்புக்கொண்டு சொல்கிறார்: “நாங்கள் முதிர்வயதை அடைந்துவிட்ட நிலையில், ஒன்றுசேர்ந்து டீ குடிப்பதிலும், பேசுவதிலும், ஒருவருக்கொருவர் வேலையில் உதவிசெய்துகொள்வதிலும் அதிக மகிழ்ச்சியடைகிறோம்.” நீங்கள் உங்கள் திருமண பிணைப்பை உறுதியாய் நிலைத்திருக்கச் செய்வதற்கு கபடமற்றவர்களாயும் ஒளிவுமறைவற்றவர்களாயும் இருப்பது உதவக்கூடும், அது திருமணத்தை அழித்துப்போடுபவனாகிய சாத்தானின் தாக்குதல்களைக் குலைத்துப் போடுவதற்கு மனதுக்கு விரிதிறத்தை அளிக்கிறது.

உங்கள் பேரப்பிள்ளைகளை அனுபவித்து மகிழுங்கள்

14. தீமோத்தேயு ஒரு கிறிஸ்தவராக வளருவதற்கு அவருடைய பாட்டி என்ன பங்கை வகித்தார்?

14 முதியோருக்கு பேரப்பிள்ளைகள் ‘கிரீடமாய்’ இருக்கின்றனர். (நீதிமொழிகள் 17:6) பேரப்பிள்ளைகளோடு கூடிவாழ்ந்து அவர்களுடைய நட்பை அனுபவிப்பது உண்மையில் பெருமகிழ்ச்சி தருவதாயும் கிளர்ச்சியூட்டுவதாயும் புத்துணர்ச்சியளிப்பதாயும் இருக்கக்கூடும். லோவிசாள் என்ற பாட்டியம்மாவைப் பற்றி பைபிள் நல்ல விதத்தில் பேசுகிறது. அவர் தன் மகள் ஐனிக்கேயாளோடு சேர்ந்து சிசுப்பருவத்திலிருந்த தன் பேரன் தீமோத்தேயுவோடுகூட தன் நம்பிக்கைகளை பகிர்ந்துகொண்டார். தன் தாயும் தன் பாட்டியம்மாவும் பைபிள் சத்தியத்தை உயர்வாய் மதித்துப் போற்றியதை அறிந்தவனாய் இந்த இளைஞன் வளர்ந்தான்.—2 தீமோத்தேயு 1:5; 3:14, 15.

15. பேரப்பிள்ளைகளைக் குறித்த விஷயத்தில், தாத்தாபாட்டிமார் என்ன மதிப்புவாய்ந்த உதவியை அளிக்கலாம், ஆனால் அவர்கள் எதைத் தவிர்க்க வேண்டும்?

15 இந்த விசேஷமான அம்சத்தில் தாத்தாபாட்டிமார் பெருமதிப்புவாய்ந்த உதவியை அளிக்கலாம். தாத்தாபாட்டிமாரே, ஏற்கெனவே யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி நீங்கள் பெற்றிருக்கும் அறிவை முதலில் உங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொண்டீர்கள். இப்போது நீங்கள் அதேபோல் மற்றொரு சந்ததியோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளலாம்! பைபிள் கதைகளை தங்கள் தாத்தாபாட்டிமார் விவரமாக எடுத்துரைப்பதைக் கேட்பதில் அநேக இளம்பிள்ளைகள் கிளர்ச்சியடைகின்றனர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களை ஆழமாகப் பதியவைக்க வேண்டிய பொறுப்பை தாத்தாபாட்டிமாராகிய நீங்கள் எடுத்துக்கொள்வதில்லை. (உபாகமம் 6:7) மாறாக, நீங்கள் தகப்பனின் பொறுப்பை நிறைவுசெய்வதற்கு உதவிசெய்கிறீர்கள். உங்கள் ஜெபம் சங்கீதக்காரனின் ஜெபத்தைப் போன்று இருப்பதாக: “இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங்கீதம் 71:18; 78:5, 6.

16. தாத்தாபாட்டிமார் தங்கள் குடும்பத்தில் மனத்தாங்கள் ஏற்படுவதற்கு காரணமாய் இருப்பதை எவ்வாறு தவிர்க்கலாம்?

16 விசனகரமாக, தாத்தாபாட்டிமாரில் சிலர் பேரப்பிள்ளைகளுக்கு அளவுக்குமீறி செல்லம் கொடுத்து கெடுத்து விடுவதால், தாத்தாபாட்டிமாருக்கும் வயதுவந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே மனத்தாங்கல்கள் வளர ஆரம்பிக்கின்றன. உங்கள் பேரப்பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் விஷயங்களை வெளிப்படுத்த மனவிருப்பமில்லாமல் இருந்தால், நீங்கள் காண்பிக்கும் உண்மையான தயவு விஷயங்களை உங்களிடம் ஒருவேளை சொல்வதை சுலபமாக்கலாம். செல்லம் கொடுக்கும் தாத்தாபாட்டிமார், பெற்றோருக்கு எதிராக இருந்து தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று சில சமயங்களில் இளைஞர்கள் நினைக்கின்றனர். அப்போது என்ன செய்வது? ஞானமாய் நடந்துகொண்டு, உங்கள் பேரப்பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும்படி உற்சாகப்படுத்துங்கள். இது யெகோவாவுக்குப் பிரியமானது என்று விளக்குங்கள். (எபேசியர் 6:1-3) தேவைப்படுமானால், இளைஞர்கள் தங்கள் பெற்றோரை அணுகி பேசுவதற்கு நீங்கள் வழியைத் திறந்துவைக்க முன்வாருங்கள். நீங்கள் பல வருடங்களாக கற்றுக்கொண்டவற்றை உங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி கலந்து பேசுங்கள். உங்கள் நேர்மைத்தன்மையும் கபடமற்றத்தன்மையும் அவர்களுக்கு பயன் தருவதாய் இருக்கக்கூடும்.

முதியோராகையில் அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்ளுங்கள்

17. வயதாகிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் சங்கீதக்காரனின் என்ன தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும்?

17 வருடங்கள் கடந்து செல்லச்செல்ல, முன்பு செய்ததைப் போன்று அல்லது விரும்பும் எல்லாவற்றையும் செய்யமுடியாமல் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒருவர் எவ்வாறு முதியோராகும் நிலையை ஏற்றுக்கொண்டு சமாளிக்கிறார்? உங்கள் மனதில் நீங்கள் 30 வயதுள்ளவராய் இருப்பதைப் போன்று உணரலாம், ஆனால் கண்ணாடியில் ஒரு கண்ணோட்டமிடுவது, ஒரு வித்தியாசமான உண்மை நிலையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. உற்சாகம் இழந்துவிடாதீர்கள். சங்கீதக்காரன் யெகோவாவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்: “முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.” நான் சங்கீதக்காரனின் தீர்மானத்தைப் பின்பற்றுவேன் என்று உங்கள் உள்ளத்தில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்னார்: “நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”—சங்கீதம் 71:9, 14.

18. முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர் வேலையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் காலத்தை எவ்வாறு பலன்தரும் விதத்தில் உபயோகிக்கலாம்?

18 அநேகர் உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, யெகோவாவுக்குத் தங்கள் துதியை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்காக முன்கூட்டியே தயாரித்திருக்கின்றனர். “எங்கள் மகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நான் என்ன செய்வேன் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன்,” என்று வேலையிலிருந்து இப்போது ஓய்வுபெற்றிருக்கும் ஒரு தந்தை விளக்குகிறார். “நான் முழு-நேர பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பித்து விடுவேன் என்று உறுதியாய் இருந்தேன். யெகோவாவை முழுமையாக சேவிப்பதற்காக என் வியாபாரத்தை விற்றுவிட்டேன். யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபித்தேன்.” நீங்கள் வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருந்தால், நம் மகத்தான படைப்பாளரின் உறுதிமொழியிலிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்.”—ஏசாயா 46:4.

19. வயதாகிக்கொண்டே செல்வோருக்கு என்ன புத்திமதி அளிக்கப்பட்டிருக்கிறது?

19 உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதற்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுதல் சுலபமானதாக இல்லாமல் இருக்கலாம். முதியோர் ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாய்’ இருக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் புத்திமதி கூறினார். சோம்பலுள்ள வாழ்க்கையை நாடும் மனநிலைக்கு இடங்கொடுத்துவிடாமல், கட்டுப்பாட்டோடு இருப்பதை இது பொதுவாக தேவைப்படுத்துகிறது. வேலையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் ஓய்வுபெற்ற பிறகு, வழக்கமாக செய்யும் வேலைகளில் ஒழுங்கும் சுய-சிட்சையும் மிகவும் அதிகமாக தேவைப்படலாம். ஆகையால், ‘கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, . . . கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருப்பதன்மூலம் சுறுசுறுப்பாயிருங்கள். (1 கொரிந்தியர் 15:58) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கென்று உங்கள் நடவடிக்கைகளை விரிவாக்குங்கள். (2 கொரிந்தியர் 6:13, NW) முதிர்வயதுக்கேற்ற அளவில் நற்செய்தியை வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதன்மூலம் அநேக கிறிஸ்தவர்கள் இதைச் செய்கின்றனர். முதியோராகிக்கொண்டே இருக்கையில், ‘விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ இருங்கள்.—தீத்து 2:2.

மரணத்தில் உங்கள் துணைவரை இழந்த நிலையை சமாளித்தல்

20, 21. (அ) தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் திருமணமான தம்பதியை எது இறுதியில் பிரிக்க வேண்டும்? (ஆ) மரணத்தில் துணைவரை இழந்துவிட்டிருக்கும் ஒருவருக்கு என்ன பைபிள் போதனை ஆறுதலளிக்கிறது, இழப்புக்கு ஆளான துணைவர்களுக்கு அன்னாள் எவ்வாறு ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்?

20 தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் திருமணமான தம்பதிகள் இறுதியில் மரணத்தால் பிரிக்கப்படுவது விசனகரமான உண்மை. ஆனால் உண்மையில் அது மெய்வாழ்வில் நடக்கிறது. தங்கள் அன்பானவர்கள் இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் தாங்கள் அவர்களை மறுபடியும் காண்பர் என்பதையும் இழப்புக்கு ஆளான கிறிஸ்தவ துணைவர்கள் அறிந்திருக்கின்றனர். (யோவான் 11:11, 25) ஆனால் இழப்போ, இன்னும் தாங்கமுடியாததாய் இருக்கிறது. உயிரோடிருக்கும் துணைவர் எவ்வாறு அதை சமாளிக்கலாம்? *

21 பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திப் பார்ப்பது உதவியாயிருக்கும். அன்னாளுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தபோதிலும் அவர்கள் கணவனை இழந்துவிட்டிருந்தார்கள், அவர்களைப் பற்றி நாம் வாசிக்கும்போது அவர்களுக்கு வயது 84. அவர்கள் தன் கணவனை இழந்தபோது வருத்தப்பட்டிருப்பார்கள் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்கள் அதை எவ்வாறு சமாளித்தார்கள்? அவர்கள் யெகோவா தேவனுக்கு ஆலயத்தில் இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்தார்கள். (லூக்கா 2:36-38, NW) சந்தேகத்துக்கு இடமின்றி, ஜெபத்தோடுகூடிய சேவையால் நிறைந்திருந்த அன்னாளின் வாழ்க்கை, ஒரு விதவையாக இருந்த காரணத்தால் அனுபவித்த துக்கத்துக்கும் தனிமைக்கும் பெரும் மாற்றுமருந்தாக இருந்தது.

22. சில விதவைகளும் மனைவிகளை இழந்தோரும் தனிமையை எவ்வாறு சமாளித்திருக்கின்றனர்?

22 “பேசுவதற்கு துணைவர் இல்லாமல் இருப்பதுதான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கிறது” என்று பத்து வருடங்களுக்கு முன்பு விதவையான 72 வயது பெண் விளக்குகிறார். “என் கணவர் நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருந்தார். நாங்கள் சபையைப் பற்றியும் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதைப் பற்றியும் பேசுவோம்.” மற்றொரு விதவை சொல்கிறார்: “காலம் கடந்து செல்வது புண்ணை ஆற்றினாலும், ஒருவர் தனக்கிருக்கும் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார் என்பதுதான் குணப்படுவதற்கு உதவியாயிருக்கும் என்று சொல்வது இன்னும் திருத்தமாய் இருப்பதாக நான் காண்கிறேன். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு ஒரு சிறந்த நிலையில் இருக்கிறீர்கள்.” மனைவியை இழந்த 67 வயதான ஒருவர் சொல்கிறார்: “இழப்பை சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு உங்களையே அளிப்பதாகும்.”

வயதான காலத்தில் கடவுளால் உயர்வாய் மதிக்கப்படுதல்

23, 24. முதியோருக்கு, குறிப்பாக துணைவர்களை மரணத்தில் இழந்தோருக்கு, பைபிள் என்ன பெரும் ஆறுதலை அளிக்கிறது?

23 பெரிதும் நேசித்த ஒரு துணைவரை மரணம் எடுத்துக்கொள்கிறபோதிலும், யெகோவா எப்போதும் உண்மையுள்ளவராகவும் எப்போதும் நம்பத்தக்கவராகவும் நிலைத்திருக்கிறார். “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்,” என்று பண்டையகால தாவீது ராஜா பாடினார், “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.”—சங்கீதம் 27:4.

24 “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவிக்கிறார். (1 தீமோத்தேயு 5:3) நெருங்கிய உறவினர்களைக் கொண்டிராத தகுதிவாய்ந்த விதவைகளுக்கு சபையிலிருந்து பொருளாதார ஆதரவு தேவைப்பட்டிருக்கலாம் என்பதை இந்தக் கட்டளையைப் பின்தொடர்ந்து வரும் புத்திமதி குறிப்பிடுகிறது. எனினும், ‘கனம்பண்ணுங்கள்’ என்று அறிவுரை கொடுப்பதன் கருத்து, அவர்களுக்கு மதிப்புத்தர வேண்டும் என்ற கருத்தையும்கூட சேர்த்துக்கொள்கிறது. யெகோவா அவர்களை மதிக்கிறார், அவர்களை தாங்கி ஆதரிப்பார் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து தேவபக்தியுள்ள விதவைகளும் மனைவியை இழந்தவர்களும் என்னே ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம்!—யாக்கோபு 1:27.

25. முதியோருக்கு என்ன இலக்கு இன்னும் இருக்கிறது?

25 “முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை,” என்று கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை அறிவிக்கிறது. “நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31; 20:29) திருமணமானவர்களாய் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும், மறுபடியும் யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வையுங்கள். இவ்வாறு நீங்கள் இப்போது கடவுளோடு ஒரு நல்ல பெயரையும், முதிர்வயதின் வேதனைகள் இல்லா ஓர் உலகில் நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பையும் பெற்றிருப்பீர்கள் என்று உறுதியாயிருங்கள்.—சங்கீதம் 37:3-5; ஏசாயா 65:20.

^ இப்பொருளின் பேரில் கூடுதலான விவரமான கலந்தாலோசிப்புக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.