Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிரும் புதிருமான இரு ராஜாக்கள்

எதிரும் புதிருமான இரு ராஜாக்கள்

அதிகாரம் பதிமூன்று

எதிரும் புதிருமான இரு ராஜாக்கள்

பேரரசுரிமைக்காக இரு ராஜாக்களிடையே கடும் போட்டி ஏற்படுகிறது. முதலில் ஒருவர் கை ஓங்குகிறது, பின் மற்றவர் கை ஓங்குகிறது, இப்படியே வருடங்கள் உருண்டோடுகின்றன. சிலசமயம், ஒருவர் பேரரசராய் ஆளுகை செய்கையில் மற்றவர் பல் போன சிங்கம்போல் ஆகிறார். கொஞ்ச காலத்திற்கு சண்டையுமில்லை சச்சரவுமில்லை, ஆனால் திடீரென போர் மூள, மீண்டும் போராட்டம் தொடர்கிறது. இந்த நிஜ வாழ்வு நாடகத்தின் கதாபாத்திரங்கள்: சிரியாவின் ராஜா முதலாம் செலூக்கஸ் நிகேட்டார், எகிப்திய ராஜா தாலமி லேகஸ், சிரியாவின் இளவரசியும் எகிப்திய ராணியுமான முதலாம் க்ளியோபாட்ரா, ரோம பேரரசர்கள் அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ், பால்மைரா ராணி ஸெனோபியா ஆகியோரே. போராட்டத்தின் பிற்பகுதியில் நாசி ஜெர்மனி, கம்யூனிஸ நாடுகள், ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு, சர்வதேச சங்கம், ஐக்கிய நாடுகள் ஆகியவையும் பங்கெடுத்திருக்கின்றன. இதன் இறுதிக்கட்ட காட்சிகள், இந்த அரசியல் அமைப்புகள் எவையும் எதிர்பார்க்காத ஒன்றாய் இருக்கும். சுமார் 2,500 வருடங்களுக்கு முன்பு இந்த விறுவிறுப்பூட்டும் தீர்க்கதரிசனத்தை யெகோவாவின் தூதர் தானியேலுக்கு அறிவித்தார்.​—தானியேல் அதிகாரம் 11.

2இனி வரவிருந்த இரு ராஜாக்களின் பகைமையைக் குறித்து தூதர் விவரமாய் சொல்வதைக் கேட்ட தானியேல் எப்படி மெய்சிலிர்த்துப் போயிருப்பார்! இந்தத் தீர்க்கதரிசனம் நமக்கும் ஆர்வத்திற்குரியது. ஏனென்றால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்த இரு ராஜாக்களின் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. இத்தீர்க்கதரிசன நாடகத்தின் முதல் பகுதி எவ்வாறு நிறைவேறியது என்பதை சரித்திரத்தின் வாயிலாய் அறிந்துகொள்வது, இதன் இறுதி பாகமும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் நம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும். இத்தீர்க்கதரிசனத்திற்கு கவனம் செலுத்துவது, கால ஓட்டத்தில் நாம் எங்கிருக்கிறோம் என தெளிவாய் காட்டும். நம் சார்பாக கடவுள் நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையாக காத்திருந்து, இப்போராட்டத்தில் நடுநிலைமை வகிப்பதற்கான நம் தீர்மானத்தையும் உறுதியாக்கும். (சங்கீதம் 146:3, 5) ஆகவே, யெகோவாவின் தூதர் தானியேலிடம் சொல்வதை ஆவல்பொங்க கேட்போமாக.

கிரேக்க சாம்ராஜ்யத்திற்கு எதிராக

3“மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே [பொ.ச.மு. 539/538] நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்” என்றார் தூதர். (தானியேல் 11:1) தரியு அப்போது உயிரோடு இல்லை, ஆனால் அவரது ஆட்சியே தீர்க்கதரிசன செய்தியின் ஆரம்பம் என்பதை தூதர் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். தானியேலை சிங்கக் கெபியிலிருந்து விடுவிக்கச் சொன்னவர் இதே தரியு ராஜாதான். தனது குடிமக்கள் அனைவரும் தானியேலின் கடவுளுக்குப் பயப்படவேண்டுமென்று கட்டளையிட்டவரும் இவரே. (தானியேல் 6:21-27) இருந்தாலும், தூதர் துணை நின்றது மேதியனாகிய தரியுவுக்காக அல்ல, ஆனால் அவரது கூட்டாளியான, தானியேலின் மக்களது அதிபதி மிகாவேலுக்காக. (தானியேல் 10:12-14-ஐ ஒப்பிடுக.) மிகாவேல் மேதிய-பெர்சிய பேய் அதிபதியோடு போராடியபோது தேவதூதர் இவ்வாறு துணைநின்றார்.

4தேவதூதர் இவ்வாறு தொடர்ந்தார்: “இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.” (தானியேல் 11:2) இந்தப் பெர்சிய அரசர்கள் யார்?

5மகா கோரேசு, இரண்டாம் காம்பைஸஸ், முதலாம் தரியு ஆகியோரே முதல் மூன்று ராஜாக்கள். பார்டியா (ஒருவேளை அரசகுலத்தில் தோன்றாத கௌமதா என்பவர்) வெறுமனே ஏழு மாதங்களுக்கும், நிடின்டு-பெல் இரு மாதங்களுக்குமே ஆளுகை செய்ததால் இத்தீர்க்கதரிசனம் அவர்களது குறுகிய கால ஆட்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொ.ச.மு. 490-⁠ல், மூன்றாம் ராஜாவான முதலாம் தரியு இரண்டாம் முறையாக கிரீஸ்மீது படையெடுக்க முற்பட்டார். இருந்தாலும் பெர்சியர்கள் மாரத்தானில் படுதோல்வி அடைந்து, ஆசியா மைனருக்கு திரும்பினர். மறுபடியும் கிரீஸ்மீது படையெடுக்க தரியு கவனமாக ஏற்பாடுகள் செய்தபோதிலும், நான்கு வருடங்களுக்குள் அவர் இறந்துவிட்டதால் திட்டம் கைகூடாமல்போனது. ஆனால் அதை செயல்படுத்தும் பொறுப்பு அவரது மகனும் “நாலாம்” அரசருமான முதலாம் சஷ்டாவின் தலையில் விழுந்தது. இவர்தான் எஸ்தரை மணம் முடித்த அகாஸ்வேரு ராஜா.—எஸ்தர் 1:1; 2:15-17.

6முதலாம் சஷ்டா உண்மையில் ‘கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிட்டார்.’ இங்கே கிரேக்கு ராஜ்யம் என்பது, கிரீஸின் கீழிருந்த சுயேச்சை நாடுகள் அனைத்தையும் குறிக்கிறது. “லட்சியவாதிகளான அரசவை அங்கத்தினர்களால் தூண்டப்பட்டு, சஷ்டா காலாட்படையோடும் கப்பற்படையோடும் தாக்குதல் நடத்தினார்” என்று மேதிய-பெர்சியர்கள்​—⁠வெற்றிவீரர்களும் தந்திரசாலிகளும் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க சரித்திராசிரியரான ஹேரோடெட்டஸ், “இது வரலாறு காணாத படையெடுப்பு” என எழுதினார். கப்பற்படையினர் “மொத்தம் 5,17,610 பேர் இருந்தனர். காலாட்படையினர் 17,00,000 பேர்; குதிரைப்படையினர் 80,000 பேர்; இவர்களோடு, ஒட்டகங்களில் சென்ற அரபியர்கள், ரதங்களில் சண்டையிட்ட லிபியர்கள் ஆகியோரும் சுமார் 20,000 பேர் இருந்திருக்கலாம். ஆக தரைப் படையினரும் கப்பற்படையினரும் மொத்தமாக 23,17,610 பேர் இருந்தனர்” என்றும் குறிப்பிடுகிறார்.

7முழு வெற்றி பெற வேண்டுமென்ற குறிக்கோளோடு, முதலாம் சஷ்டா பொ.ச.மு. 480-⁠ல் கிரீஸை பலத்த படைகொண்டு தாக்கினார். தர்மாபைலியில் பெர்சியர்களின் தாக்குதலை கிரேக்கர்கள் திட்டமிட்டு தாமதப்படுத்தியபோதும், அதை சமாளித்து பெர்சியர்கள் ஆதன்ஸை நாசம்செய்தனர். இருந்தாலும் சலாமஸில் படுதோல்வி அடைந்தனர். பொ.ச.மு. 479-⁠ல் பிளாட்டியாவில் கிரேக்கர்களுக்கு மீண்டும் வெற்றி கிட்டியது. அடுத்த 143 வருடங்களுக்கு, சஷ்டாவிற்குப் பின் பெர்சிய சாம்ராஜ்யத்தை அரசாண்ட ஏழு ராஜாக்களில் எவருமே கிரீஸ்மீது படையெடுக்கவில்லை. அதன் பின்னரோ கிரீஸில் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா தோன்றினார்.

மாபெரும் ராஜ்யம் நான்காய் பிளவுறுகிறது

8“பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி அதிக வல்லமையோடு அரசாண்டு தனக்கு இஷ்டமானபடி செய்வான்” என தூதர் சொன்னார். (தானியேல் 11:3, தி.மொ.) பொ.ச.மு. 336-⁠ல் மக்கெதோனிய ராஜாவாய் இருபது வயது நிரம்பிய அலெக்ஸாந்தர் ‘எழும்பினார்.’ அவர் ‘பராக்கிரமமுள்ள ராஜாவாக,’ மகா அலெக்ஸாந்தரென பெயரெடுத்தது உண்மையே. தனது தகப்பனான இரண்டாம் பிலிப்பின் திட்டத்தால் தூண்டப்பட்டு, அவர் மத்திய கிழக்கிலிருந்த பெர்சிய மாகாணங்களை தன்வசப்படுத்தினார். அவரது 47,000 படையினர் ஐப்பிராத்து, டைக்ரீஸ் நதிகளைக் கடந்து, கௌகமெலாவில் மூன்றாம் தரியுவின் 2,50,000 படையினரை சிதறடித்தனர். அங்கிருந்து தப்பியோடிய தரியு கொல்லப்பட்டார். இவ்வாறு பெர்சிய அரச வம்சம் முடிவுக்கு வந்தது. இப்போது கிரீஸ் உலக வல்லரசானது. அலெக்ஸாந்தர், ‘அதிக வல்லமையோடு அரசாண்டு தனக்கு இஷ்டமானபடி செய்தார்.’

9உலகத்தின் மீதான அலெக்ஸாந்தரின் ஆட்சி கொஞ்ச காலமே நீடிக்கவிருந்தது. ஏனெனில் தேவதூதர் இவ்வாறு தொடர்ந்து சொன்னார்: “அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.” (தானியேல் 11:4) பொ.ச.மு. 323-⁠ல் பாபிலோனில் இருக்கையில், சுமார் 33 வயதிலேயே அலெக்ஸாந்தர் திடீரென நோயுற்று இறந்தார்.

10அலெக்ஸாந்தரின் பரந்த சாம்ராஜ்யம் அவருடைய “சந்ததியாருக்கு” செல்லவில்லை. அவரது சகோதரரான மூன்றாம் பிலிப்பு அரிடியஸ் ஏழு வருடங்களுக்கும் குறைவாகவே ஆட்சி செய்தார். பொ.ச.மு. 317-⁠ல் அலெக்ஸாந்தரின் தாயார் ஓலிம்பியஸின் சதியால் கொல்லப்பட்டார். அலெக்ஸாந்தரின் மகனான நான்காம் அலெக்ஸாந்தர் பொ.ச.மு. 311 வரை ஆட்சிசெய்தார். அவ்வருடம் தனது தகப்பனின் தளபதிகளில் ஒருவரான கஸாண்டரால் கொல்லப்பட்டார். அலெக்ஸாந்தருக்கு முறைதவறி பிறந்த ஹெராக்குல்ஸ் தன் தகப்பனின் பெயரில் ஆட்சிபீடத்தை கைப்பற்றினார், ஆனால் பொ.ச.மு. 309-⁠ல் கொல்லப்பட்டார். இவ்வாறு அலெக்ஸாந்தருக்கு வாரிசில்லாமல் போகவே, அவரது “ராஜ்யம்” அவரது குடும்பத்தினரிடமிருந்து கைநழுவியது.

11அலெக்ஸாந்தரின் சாவுக்குப் பின், அவரது ராஜ்யம் ‘நாலு திசைகளிலும் பகுக்கப்பட்டது.’ நிலத்தைக் கைப்பற்றுவதற்காக அவருடைய அநேக தளபதிகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். ஒற்றைக்கண் தளபதி முதலாம் ஆன்டிகோனஸ், அலெக்ஸாந்தரின் சாம்ராஜ்யம் முழுவதையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள முயன்றார். ஆனால் ஃப்ரிஜியாவிலுள்ள இப்ஸஸில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்தார். பொ.ச.மு. 301-⁠ம் ஆண்டிற்குள், அலெக்ஸாந்தர் உருவாக்கிய மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆளும் அதிகாரத்தை அவரது நான்கு தளபதிகள் பெற்றனர். தளபதி கஸாண்டர் மக்கெதோனியாவையும் கிரீஸையும் ஆண்டார். ஆசியா மைனரும் த்ரேஸும் லைசிமாக்கஸின் அதிகாரத்தின்கீழ் வந்தன. முதலாம் செலூக்கஸ் நிகேட்டார் மெசப்பொத்தேமியாவுக்கும் சிரியாவுக்கும் அரசரானார். தாலமி லேகஸ் எகிப்தையும் பலஸ்தீனாவையும் பெற்றார். முன்னறிவிக்கப்பட்டபடியே, அலெக்ஸாந்தரின் மாபெரும் சாம்ராஜ்யம் நான்கு கிரேக்க ராஜ்யங்களாய் பிளவுற்றது.

எதிரி ராஜாக்கள் இருவர் எழும்புகின்றனர்

12ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் கஸாண்டர் இறந்துவிட்டார். பொ.ச.மு. 285-ல் லைசிமாக்கஸ் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஐரோப்பிய பகுதியைக் கைப்பற்றினார். பொ.ச.மு. 281-⁠ல், முதலாம் செலூக்கஸ் நிகேட்டாரோடு போரிடுகையில் லைசிமாக்கஸ் கொல்லப்பட்டார். இவ்வாறு பெரும்பான்மையான ஆசிய பகுதிகள் செலூக்கஸின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. பொ.ச.மு. 276-⁠ல் அலெக்ஸாந்தரின் தளபதிகளில் ஒருவரது பேரனான இரண்டாம் ஆன்டிகோனஸ் கானடஸ், மக்கெதோனிய அரியணையில் ஏறினார். காலப்போக்கில் மக்கெதோனியா ரோமைச் சார்ந்திருக்கலாயிற்று, இறுதியாக பொ.ச.மு. 146-⁠ல் ரோமோடு இணைந்துவிட்டது.

13இப்போது நான்கு கிரேக்க ராஜ்யங்களில் இரண்டு மட்டுமே பிரசித்தமாயிருந்தன. ஒன்று, முதலாம் செலூக்கஸ் நிகேட்டாருடையது, மற்றொன்று தாலமி லேகஸினுடையது. செலூக்கஸ் சிரியாவில் செலூக்கிய ராஜபரம்பரையை தோற்றுவித்தார். சிரியாவின் புதிய தலைநகரமான அந்தியோகியாவையும் துறைமுக பட்டிணமான செலூக்கியாவையும் அவர் நிர்மாணித்தார். பிற்காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் அந்தியோகியாவில் பிரசங்கித்தார். இங்குதான் இயேசுவின் சீஷர்களும் முதன்முதலில் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 11:25, 26; 13:1-4) பொ.ச.மு. 281-⁠ல் செலூக்கஸ் கொல்லப்பட்டார், ஆனால் பொ.ச.மு. 64 வரை அவரது ராஜ பரம்பரை ஆளுகை செய்தது. அவ்வருடம் ரோம தளபதியான க்நையுஸ் பாம்பே சிரியாவை ரோம மாகாணமாக்கினார்.

14கிரேக்க ராஜ்யங்களிலேயே வெகு காலம் நீடித்தது தாலமி லேகஸ் அல்லது முதலாம் தாலமியின் ராஜ்யமே. அவர் பொ.ச.மு. 305-⁠ல் ராஜ பட்டத்தை ஏற்றார். அவர் நிறுவிய தாலமிய ராஜ வம்சம் பொ.ச.மு. 30-⁠ல் ரோமிடம் தோல்விகாணும்வரை எகிப்தை தொடர்ந்து ஆட்சிசெய்து வந்தது.

15இவ்வாறு நான்கு கிரேக்க ராஜ்யங்களிலிருந்து இரு வல்லமைமிக்க ராஜாக்கள் தோன்றினார்கள்​—⁠சிரியாவை ஆண்ட முதலாம் செலூக்கஸ் நிகேட்டார், எகிப்தை ஆண்ட முதலாம் தாலமி. இந்த இரு ராஜாக்களோடு ஆரம்பமானதுதான், தானியேல் 11-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும், “வடதிசை ராஜா,” “தென்றிசை ராஜா” ஆகிய இருவரது நீண்ட கால போராட்டம். யெகோவாவின் தூதர் இந்த ராஜாக்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஏனெனில் நூற்றாண்டுகளினூடே இந்த இரு ராஜாக்களும் அவர்களது தேசங்களும் மாறிக்கொண்டே இருக்கும். தேவையில்லா விவரங்களையெல்லாம் தவிர்த்து, போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட அரசர்களையும் சம்பவங்களையும் பற்றியே தூதர் குறிப்பிட்டார்.

ஆரம்பமாகிறது மோதல்

16கேளுங்கள்! கவனத்தைக் கவரும் இந்தப் போராட்டத்தின் ஆரம்பத்தை விவரிப்பவராய் யெகோவாவின் தூதர் சொல்கிறார்: “தென்றிசை ராஜா பலவானாயிருப்பான், அவனுடைய [அலெக்ஸாந்தருடைய] பிரபுக்களில் ஒருவனும் பலமடைவான். இவனோ [வடதிசை ராஜா] அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.” (தானியேல் 11:5, NW) “வடதிசை ராஜா,” “தென்றிசை ராஜா” என்ற பட்டப்பெயர்கள், தானியேலின் மக்களுக்கு வடக்கேயும் தெற்கேயும் ஆளுகைசெய்த ராஜாக்களைக் குறித்தன. அப்போது தானியேலின் மக்கள் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு யூதாவிற்கு திரும்பியிருந்தனர். முதன்முதல் ‘தென்றிசை ராஜா,’ எகிப்தை ஆண்ட முதலாம் தாலமி ஆவார். முதலாம் தாலமியைப் பார்க்கிலும் பலவானாகி, ‘பலத்த ஆளுகைசெய்த’ அலெக்ஸாந்தரின் தளபதிகளில் ஒருவர், சிரியாவின் ராஜாவான முதலாம் செலூக்கஸ் நிகேட்டார் ஆவார். இவரே ‘வடதிசை ராஜாவானார்.’

17போராட்டத்தின் ஆரம்பத்தில், யூத தேசம் தென்றிசை ராஜாவின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. சுமார் பொ.ச.மு. 320 முதற்கொண்டு, முதலாம் தாலமி யூதர்களை எகிப்தில் குடியேறும்படி தூண்டினார். யூத குடியேற்றம் அலெக்சாண்டிரியாவில் செழித்தோங்கியது. அங்குதான் முதலாம் தாலமி புகழ்பெற்ற ஒரு நூலகத்தை நிறுவினார். யூதாவிலிருந்த யூதர்கள் பொ.ச.மு. 198 வரை, எகிப்தை ஆண்ட தாலமிய வம்சத்தின் அல்லது தென்றிசை ராஜாவின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தனர்.

18இரு ராஜாக்களைப் பற்றி தூதர் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.” (தானியேல் 11:6) இது எவ்வாறு நடந்தது?

19இத்தீர்க்கதரிசனம் முதலாம் செலூக்கஸ் நிகேட்டாருக்குப்பின் அரசரான அவரது மகன் முதலாம் ஆண்டியோகஸைப் பற்றி பேசவில்லை. ஏனெனில் அவர் தென்றிசை ராஜாவுக்கு எதிராக தீர்வான யுத்தம் செய்யவில்லை. ஆனால் அவருக்குப்பின் அரசரான இரண்டாம் ஆண்டியோகஸ், முதலாம் தாலமியின் மகனான இரண்டாம் தாலமிக்கு எதிராக நீண்ட போர் தொடுத்தார். ஆக, இரண்டாம் ஆண்டியோகஸும் இரண்டாம் தாலமியும், முறையே வடதிசை ராஜாவாகவும் தென்றிசை ராஜாவாகவும் செயல்பட்டனர். இரண்டாம் ஆண்டியோகஸ் லேயடஸியை மணந்திருந்தார். அவர்களது மகனே இரண்டாம் செலூக்கஸ். இரண்டாம் தாலமிக்கோ பெர்னைஸி என்ற மகள் இருந்தாள். பொ.ச.மு. 250-⁠ல் இந்த இரு ராஜாக்களும் ‘ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணிக்கொண்டார்கள்.’ இந்த ஒப்பந்தத்திற்காக, இரண்டாம் ஆண்டியோகஸ் தன் மனைவி லேயடஸியை விவாகரத்து செய்து, ‘தென்றிசை ராஜாவின் குமாரத்தியான’ பெர்னைஸியை மணம் முடித்தார். லேயடஸியின் மகன்கள் அல்ல, ஆனால் பெர்னைஸிக்குப் பிறந்த மகனே சிரியாவின் அரியணையிலேறும் உரிமையைப் பெற்றார்.

20பெர்னைஸியின் ‘புயமாய்’ அல்லது பக்கபலமாய் இருந்தது அவளது தகப்பனான இரண்டாம் தாலமியே. அவர் பொ.ச.மு. 246-⁠ல் இறந்தபோது, பெர்னைஸிக்கு தன் கணவரோடு இருந்த ‘புயபலம் இராமற்போயிற்று.’ இரண்டாம் ஆண்டியோகஸ் இவளை ஒதுக்கிவிட்டு, லேயடஸியை மறுமணம் செய்தார். இவர்களது மகனையே தன் வாரிசாகவும் அறிவித்தார். லேயடஸியின் சதித்திட்டத்திற்கு பெர்னைஸியும் அவள் மகனும் பலியானார்கள். அத்தாட்சிகளின்படி, பெர்னைஸியை எகிப்திலிருந்து சிரியாவுக்கு ‘அழைத்துவந்த’ அவளது சேவகர்களும் அதேவிதமாய் கொல்லப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், இரண்டாம் ஆண்டியோகஸை லேயடஸி விஷம்கொடுத்துக் கொன்றே விட்டாள். இவ்வாறு ‘அவனுடைய புயம்’ அல்லது வல்லமையும் ‘நிலைநிற்கவில்லை.’ ஆகவே, பெர்னைஸியின் தகப்பன், அதாவது ‘அவளைப் பெற்றவனும்’ அவளை தற்காலிகமாக ‘பலப்படுத்தின’ அவளது சிரியா தேசத்து புருஷனும் இறந்துபோனார்கள். இவ்வாறு லேயடஸியின் மகனான இரண்டாம் செலூக்கஸ் சிரியாவின் ராஜாவானார். இவற்றையெல்லாம் பார்த்த தாலமி வம்சத்தின் அடுத்த ராஜா என்ன செய்தார்?

சகோதரிக்காக வஞ்சம் தீர்க்கிறார் ஒரு ராஜா

21“அவளுடைய வேர்களின் முளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி இராணுவத்தோடே வந்து வடதேச ராஜாவின் கோட்டைக்குள் புகுந்து அவர்களோடே யுத்தம் செய்து மேற்கொள்வான்” என்றார் தூதர். (தானியேல் 11:7, தி.மொ.) பெர்னைஸியினுடைய பெற்றோர்களெனும் ‘வேர்களில்’ தோன்றிய “முளை” அவளது சகோதரனே. இவர் தன் தகப்பன் இறந்தவுடன் தென்றிசை ராஜாவாக, எகிப்திய பார்வோன் மூன்றாம் தாலமியாக ‘எழும்பினார்.’ உடனடியாக தன் சகோதரியைக் கொன்றவர்களை வஞ்சம் தீர்க்கும் படலத்தில் இறங்கினார். ‘வடதேச ராஜாவின் கோட்டைக்கு’ எதிராக, அதாவது சிரியாவின் ராஜாவான இரண்டாம் செலூக்கஸுக்கு எதிராக படையெடுத்துச் சென்றார். இரண்டாம் செலூக்கஸைக் கொண்டுதான் பெர்னைஸியையும் அவளது மகனையும் லேயடஸி கொன்றிருந்தாள். மூன்றாம் தாலமி, அந்தியோகியாவின் கோட்டையைக் கைப்பற்றி லேயடஸியைத் தீர்த்துக்கட்டினார். வடதிசை ராஜாவின் எல்லைக்குள் கிழக்குநோக்கி சென்று, பாபிலோனியாவை சூறையாடி, பின் இந்தியாவை நோக்கி படையெடுத்தார்.

22அடுத்ததாக என்ன நடந்தது? தேவதூதர் சொல்கிறார்: “அவர்களுடைய தெய்வங்களோடும், விக்கிரகங்களோடும், வெள்ளியும் பொன்னுமான அருமையான பொருட்களோடும், சிறைப்பிடித்தவர்களோடும் எகிப்திற்கு வருவான். இவன் சில வருடங்களுக்கு வடதிசை ராஜாவிடமிருந்து எட்டி நிற்பான்.” (தானியேல் 11:8, NW) 200-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன், பெர்சிய ராஜாவான இரண்டாம் காம்பைஸஸ் எகிப்தைக் கைப்பற்றி, ‘அவர்களுடைய விக்கிரகங்களான’ எகிப்திய தெய்வங்களை கொள்ளையடித்து சென்றிருந்தார். மூன்றாம் தாலமி, பெர்சியாவின் முன்னாள் தலைநகரான சூஸாவை சூறையாடி, இந்தத் தெய்வங்களை மீட்டு, எகிப்திற்கு ‘சிறைப்பிடித்து வந்தார்.’ அநேகமநேக ‘வெள்ளியும் பொன்னுமான அருமையான பொருட்களை’ கொள்ளைப் பொருட்களாக எடுத்தும்வந்தார். உள்நாட்டு கலகத்தைத் தீர்க்க எகிப்திற்கு திரும்பவேண்டியிருந்ததால், மூன்றாம் தாலமி ‘வடதிசை ராஜாவிடமிருந்து எட்டி நின்றார்.’ அதாவது, கூடுதலாக எவ்விதத்திலும் தாக்குதல் நடத்தாதிருந்தார்.

பழிவாங்குகிறார் சிரியா தேசத்து ராஜா

23வடதிசை ராஜா எவ்வாறு பிரதிபலித்தார்? தானியேலிடம் சொல்லப்பட்டதாவது: “இவன் தென்தேச ராஜாவின் ராஜ்யத்துக்கு விரோதமாக வருவான், எனினும் தன் தேசத்துக்குத் திரும்ப வேண்டியதாகும்.” (தானியேல் 11:9, தி.மொ.) வடதிசை ராஜாவான சிரியா தேசத்து அரசர் இரண்டாம் செலூக்கஸும் பதிலுக்கு தாக்கினார். அவர் எகிப்திய தென்றிசை ராஜாவின் ‘ராஜ்யத்திற்குள்’ அல்லது எல்லைப்பகுதிக்குள் நுழைந்தார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார். தனது படையினரில் கொஞ்சம் பேரே மீந்திருக்க, இரண்டாம் செலூக்கஸ் ‘தன் தேசத்துக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.’ ஆக, சுமார் பொ.ச.மு. 242-⁠ல் சிரியாவின் தலைநகரான அந்தியோகியாவிற்கு திரும்பினார். அவர் இறந்த பிறகு அவர் மகனான மூன்றாம் செலூக்கஸ் அரசரானார்.

24சிரியாவின் ராஜாவான இரண்டாம் செலூக்கஸின் சந்ததியினரைப் பற்றி என்ன முன்னறிவிக்கப்பட்டது? தூதர் தானியேலிடம் சொன்னார்: “அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.” (தானியேல் 11:10) மூன்று வருடத்திற்குள் மூன்றாம் செலூக்கஸ் கொல்லப்பட, அவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவருக்குப்பின் அவரது சகோதரரான மூன்றாம் ஆண்டியோகஸ் சிரியாவின் ராஜாவானார். இரண்டாம் செலூக்கஸின் இந்த மகன், அப்போதைய தென்றிசை ராஜாவான நான்காம் தாலமிக்கு எதிராக பலத்த சேனைகளை ஒன்றுதிரட்டினார். இப்புதிய சிரியா தேசத்து வடதிசை ராஜா எகிப்திற்கு எதிராக வெற்றிகரமாய் சண்டையிட்டு, துறைமுக பட்டிணமான செலூக்கியாவையும், சிலி-சிரிய மாகாணத்தையும், தீரு மற்றும் தாலமேயஸ் நகரங்களையும், அருகிலிருந்த பட்டணங்களையும் திரும்பப் பெற்றார். இவர் நான்காம் தாலமியின் படையை தோற்கடித்து, அநேக யூத நகரங்களைக் கைப்பற்றினார். பொ.ச.மு. 217-⁠ன் இளவேனிற்காலத்தில், மூன்றாம் ஆண்டியோகஸ், தாலமேயஸ் நகரை விட்டு வடக்கே சென்று, சிரியாவிலுள்ள தன் ‘அரண்மட்டும் யுத்தங்கலந்து சேர்ந்தான்.’ ஆனால் விரைவில் நிலைமை தலைகீழாகவிருந்தது.

நிலைமை தலைகீழாகிறது

25யெகோவாவின் தூதன் அடுத்து முன்னறிவிப்பதை தானியேலைப் போல் நாமும் ஆர்வத்தோடு கேட்கலாம்: “அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்.” (தானியேல் 11:11) தென்றிசை ராஜாவான நான்காம் தாலமி தன் எதிரியைச் சந்திக்க 75,000 படை வீரர்களோடு வடக்கே சென்றார். வடதிசை ராஜாவான சிரியா தேசத்து மூன்றாம் ஆண்டியோகஸ், 68,000 பேர்கொண்ட ‘பெரிய சேனையை’ அவருக்கு எதிராக திரட்டினார். ஆனால் எகிப்தின் எல்லையருகே அமைந்த கரையோர நகரமான ரஃபையாவில் நடந்த யுத்தத்தில் “இந்தச் சேனை” தென்றிசை ராஜாவின் ‘கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.’

26தீர்க்கதரிசனம் இவ்வாறு தொடர்கிறது: “அவன் இந்தச் சேனையை நீக்கின பின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான் [“தன் பலத்த அதிகாரத்தைப் பயன்படுத்தமாட்டான்,” NW].” (தானியேல் 11:12) தென்றிசை ராஜாவான நான்காம் தாலமி, சிரியாவின் 10,000 காலாட்படையினரையும், 300 குதிரைப்படையினரையும் கொன்று ‘நீக்கினார்.’ பின் 4,000 பேரை சிறைபிடித்துச் சென்றார். அதன்பின் இந்த ராஜாக்கள் ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, மூன்றாம் ஆண்டியோகஸ் சிரியாவின் துறைமுகப் பட்டணமான செலூக்கியாவை தக்கவைத்துக்கொண்டு, ஃபினிஷியாவையும் சிலி-சிரியாவையும் திருப்பிக்கொடுத்தார். இவ்வாறு வெற்றிகண்ட எகிப்திய தென்றிசை ராஜாவின் இதயம் ‘கர்வங்கொண்டது,’ முக்கியமாய் யெகோவாவிற்கு எதிராக. யூத தேசம் நான்காம் தாலமியின் அதிகாரத்திலேயே இருந்தது. இருந்தாலும் அவர் தன் ‘பலத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி’ சிரியாவின் வடதிசை ராஜாவை மேலும் வெல்ல முயலவில்லை. அதற்கு மாறாக, ஊதாரி ஆனார். அதன்பின் அவரது ஐந்து வயது மகனான ஐந்தாம் தாலமி எகிப்தின் ராஜாவானார். இவர் ராஜாவாகி சில வருடங்களுக்குப் பிறகே மூன்றாம் ஆண்டியோகஸ் இறந்தார்.

வீரதீரர் திரும்புகிறார்

27மூன்றாம் ஆண்டியோகஸ் தனது வீரதீர செயல்கள் அனைத்திற்காகவும் மகா ஆண்டியோகஸ் என அழைக்கப்படலானார். அவரைக் குறித்து தூதர் சொன்னார்: “[“காலங்களின் முடிவில்,” NW] சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.” (தானியேல் 11:13) இங்கே ‘காலங்கள்’ என்பது, ரஃபையாவில் எகிப்தியர்கள் சிரியர்களை வீழ்த்தியதிலிருந்து 16 அல்லது அதற்கும் அதிகமான வருடங்களைக் குறிக்கிறது. இளம் ஐந்தாம் தாலமி தென்றிசை ராஜாவானபோது, மூன்றாம் ஆண்டியோகஸ் எகிப்திய தென்றிசை ராஜாவிடம் இழந்த பகுதிகளை மீட்க ‘முந்தின சேனையிலும் பெரிதான சேனையோடு’ புறப்பட்டார். இதற்காக மக்கெதோனிய ராஜாவான ஐந்தாம் பிலிப்போடு கூட்டு சேர்ந்தார்.

28தென்றிசை ராஜாவின் ராஜ்யத்தில் உள்நாட்டு பிரச்சினைகளும் இருந்தன. “அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்” என்று தூதர் சொன்னார். (தானியேல் 11:14அ) அநேகர் ‘தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக எழும்பத்தான்’ செய்தார்கள். மூன்றாம் ஆண்டியோகஸின் படைகளையும் அவரது மக்கெதோனிய கூட்டுப் படையையும் எதிர்ப்பட வேண்டியதோடு, இந்த இளம் ராஜா தன் சொந்த நாடான எகிப்திலும் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இவர் பெயரில் ஆட்சிசெய்த இவரது காப்பாளரான அகாதக்ளிஸ் எகிப்தியர்களை ஆணவத்தோடு நடத்தியதால், அநேகர் கலகம் செய்தனர். தூதர் தொடர்ந்தார்: “உன் ஜனத்தாரில் திருடர்களின் மகன்களும், தங்கள் பங்கிற்கு, ஒரு கனவை நிறைவேற்ற வேண்டுமென எழும்புவார்கள், ஆனால் இடறலடைவார்கள்.” (தானியேல் 11:14ஆ, NW) தானியேலின் மக்களில் சிலரும் ‘திருடர்களின் மகன்களாக’ அல்லது புரட்சிக்காரர்களாக ஆனார்கள். ஆனால் இந்த யூதர்கள், தங்கள் தாயகத்தை புறஜாதியாரின் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்கு என்ன ‘கனவு’ கண்டிருந்தாலும் அவை மாயையே; அவர்கள் “இடறலடைவார்கள்,” அதாவது தோல்வியடைவார்கள்.

29யெகோவாவின் தூதர் தொடர்ந்து முன்னறிவித்ததாவது: “வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணுள்ள நகரைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமும் நில்லாமற்போம்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது. ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் நிற்பான்; அவன் கையால் அழிவுண்டாகும்.”​—தானியேல் 11:15, 16, NW.

30‘தென்றிசை ராஜாவின் புயபலங்கள்,’ அதாவது ஐந்தாம் தாலமியின் ராணுவ சேனைகள் வடக்கேயிருந்து வந்த தாக்குதலுக்கு பணிந்துவிட்டன. பனியஸிலிருந்து (பிலிப்புச்செசரியா) மூன்றாம் ஆண்டியோகஸ் எகிப்திய தளபதியான ஸ்கோபஸையும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனத்தையும்,’ அதாவது தெரிவுசெய்யப்பட்ட 10,000 வீரரையும் சீதோனுக்கு விரட்டினார். இதுவே ‘அரணுள்ள நகரம்.’ அங்கே மூன்றாம் ஆண்டியோகஸ் “கொத்தளம் போட்டு,” பொ.ச.மு. 198-⁠ல் இந்த ஃபினிஷிய துறைமுகப் பட்டணத்தைக் கைப்பற்றினார். அவர் ‘தன் இஷ்டப்படிச் செய்தார்’; ஏனெனில் எகிப்திய தென்றிசை ராஜாவின் படைகளால் இவரை வெல்ல முடியவில்லை. அதன்பின் மூன்றாம் ஆண்டியோகஸ் ‘சிங்காரமான தேசத்திற்கு,’ அதாவது யூதாவின் தலைநகரான எருசலேமுக்கு எதிராக படையெடுத்துச் சென்றார். பொ.ச.மு. 198-⁠ல், எருசலேமும் யூதாவும் எகிப்திய தென்றிசை ராஜாவிடமிருந்து சிரியா தேசத்து வடதிசை ராஜாவிடம் கைமாறின. இவ்வாறு வடதிசை ராஜாவான மூன்றாம் ஆண்டியோகஸ், ‘சிங்காரமான தேசத்தில் நிற்க’ ஆரம்பித்தான். எதிர்த்த அனைத்து யூதர்களும் எகிப்தியர்களும் ‘அவன் கையால் அழிந்தார்கள்.’ இந்த வடதிசை ராஜாவால் எவ்வளவு காலத்திற்கு தன் இஷ்டப்படி நடக்க முடியும்?

வீரதீரரை அடக்குகிறது ரோம்

31யெகோவாவின் தூதர் நமக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்: “அவன் [வடதிசை ராஜா] தன் முழு ராஜ்யத்தின் வல்லமையோடும் யுத்தத்திற்குப்போக தீர்மானிப்பான், எனினும் மற்றவனோடே சமாதானம் பண்ணுவான்; அவன் திறம்பட செயல்படுவான். தன் குமாரத்திகளில் ஒருத்தியை அவனுக்கு மனைவியாகக் கொடுப்பான், அவளுக்கோ அது அழிவாகும். அவள் நிலைத்திருக்க மாட்டாள், இவன் பட்சத்தில் நில்லாள்.”—தானியேல் 11:17, NW.

32வடதிசை ராஜாவான மூன்றாம் ஆண்டியோகஸ், ‘தன் முழு ராஜ்யத்தின் வல்லமையோடும்’ எகிப்தின்மீது ஆதிக்கம்செலுத்த ‘தீர்மானித்தான்.’ ஆனால் ரோமின் கோரிக்கைகளால் மூன்றாம் ஆண்டியோகஸ் மனம் மாறி, தென்றிசை ராஜாவான ஐந்தாம் தாலமியோடு ‘சமாதானம் பண்ணினான்.’ இவரும் மக்கெதோனிய ராஜாவான ஐந்தாம் பிலிப்பும் கூட்டு சேர்ந்து, இளம் எகிப்திய ராஜாவின் ஆட்சிப்பகுதிகளை கைப்பற்ற தீர்மானித்தபோது, ஐந்தாம் தாலமியின் பாதுகாவலர்கள் ரோமின் உதவியை நாடினர். தன் ஆதிக்க எல்லையை விஸ்தரிக்கக் கிடைத்த வாய்ப்பாய் இதைக் கருதி, ரோம் அதன் பலத்தைக் காட்டியது.

33ரோம் தலையிட்டதால் மூன்றாம் ஆண்டியோகஸ் தென்றிசை ராஜாவோடு சமாதானம் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார். தன் ‘குமாரத்திகளில் ஒருத்தியான’ முதலாம் க்ளியோபாட்ராவை ஐந்தாம் தாலமிக்கு மணம் முடிக்க முடிவுசெய்தார். இவ்வாறு ரோமின் கோரிக்கைப்படி, தான் கைப்பற்றிய பகுதிகளை ஒப்படைத்துவிடுவதற்கு பதிலாக வெறுமனே பெயரளவில் கைமாற்ற திட்டமிட்டார். எப்படியெனில், தன் மகளுக்கு சீதனமாக, ‘சிங்காரமான தேசமாகிய’ யூதா உட்பட்ட பல மாகாணங்களைக் கொடுப்பதாய் அறிவித்தார். இருந்தாலும் பொ.ச.மு. 193-⁠ல் திருமணம் நடந்தபோது, சிரியா தேசத்து ராஜா இந்த மாகாணங்களை ஐந்தாம் தாலமிக்கு தரவில்லை. இது, அரசியல் லாபத்திற்காக, அதாவது எகிப்தை சிரியாவுக்கு அடிபணியவைக்க நடத்தப்பட்ட திருமணமாயிற்று. இருந்தாலும் திட்டம் தோல்விகண்டது. ஏனெனில் முதலாம் க்ளியோபாட்ரா ‘இவன் பட்சத்தில் நிற்காமல்,’ பிற்பாடு தனது கணவர் பக்கமாக சேர்ந்துகொண்டாள். மூன்றாம் ஆண்டியோகஸுக்கும் ரோமர்களுக்கும் போர் மூண்டபோது, எகிப்து ரோமை ஆதரித்தது.

34வடதிசை ராஜா எதிர்ப்படவிருந்த தோல்வியைக் குறித்து தூதர் தொடர்ந்தார்: ‘பின்பு இவன் [மூன்றாம் ஆண்டியோகஸ்] தன் முகத்தை கடலோர பட்டணங்களிடமாக திருப்பி, அவற்றில் அநேகத்தைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு படைத்தலைவன் [ரோம்] இவன் செய்கிற நிந்தையை தனக்கு [ரோம்] ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் [மூன்றாம் ஆண்டியோகஸ்] செய்த நிந்தை இவன் மேலேயே வரச்செய்வான். இவனோ [மூன்றாம் ஆண்டியோகஸ்] தன் முகத்தை மீண்டும் தன் சொந்த தேசத்தின் அரண்களுக்கு நேராகவே திருப்பிக்கொள்வான்; அங்கே கண்டிப்பாக இடறி விழுந்து காணப்படாமற்போவான்.’தானியேல் 11:18, 19, NW.

35இந்தக் ‘கடலோர பட்டணங்கள்’ மக்கெதோனியா, கிரீஸ், ஆசியா மைனர் ஆகியவற்றைக் குறித்தன. பொ.ச.மு. 192-⁠ல் கிரீஸில் ஒரு யுத்தம் மூண்டது, இதனால் மூன்றாம் ஆண்டியோகஸ் கிரீஸுக்கு வர தூண்டப்பட்டார். சிரியா தேசத்து ராஜா அங்கே இன்னும்பல இடங்களைக் கைப்பற்ற முயன்றதால் ஆத்திரம்கொண்ட ரோம், முறைப்படி போருக்கு அழைப்பு விடுத்தது. மூன்றாம் ஆண்டியோகஸ் தர்மாபைலியில் ரோமர்களிடம் தோல்விகண்டார். பொ.ச.மு. 190-⁠ல் மாக்னீஷா யுத்தத்தில் தோல்விகண்டு சுமார் ஒரு வருடத்திற்குள், கிரீஸிலும், ஆசியா மைனரிலும், டாரஸ் மலைகளுக்கு மேற்கேயிருந்த பகுதிகளிலும் தனக்கு சொந்தமாயிருந்த எல்லாவற்றையும் அவர் துறக்கவேண்டியதாயிற்று. ரோம் பெரும்தொகையை கப்பம்கட்டும்படி கோரி, சிரியா தேசத்து வடதிசை ராஜாமீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. கிரீஸிலிருந்தும் ஆசியா மைனரிலிருந்தும் துரத்தப்பட்டவராய், கிட்டத்தட்ட முழு கப்பற்படையையும் இழந்த மூன்றாம் ஆண்டியோகஸ், ‘தன் முகத்தைத் தன் சொந்த தேசத்தின் [சிரியாவின்] அரண்களுக்கு நேராகவே திருப்பிக்கொண்டார்,’ அதாவது சிரியாவிற்கே திரும்பிவிட்டார். ரோமர்கள் ‘இவன் செய்த நிந்தையை இவன் மேலேயே வரச்செய்திருந்தனர்.’ பொ.ச.மு. 187-⁠ல் பெர்சியாவிலிருந்த எலமேயஸில் ஒரு கோயிலை கொள்ளையடிக்க முற்பட்டபோது மூன்றாம் ஆண்டியோகஸ் இறந்துபோனார். இவ்வாறு மரணத்தில் ‘விழுந்தார்.’ இவரது மகனான நான்காம் செலூக்கஸ் அடுத்த வடதிசை ராஜாவானார்.

யுத்தம் தொடர்கிறது

36தென்றிசை ராஜா ஐந்தாம் தாலமி, க்ளியோபாட்ராவை மணம் முடித்ததால் தனக்கு சீதனமாய் வந்து சேர்ந்திருக்க வேண்டிய மாகாணங்களைக் கைப்பற்ற முயன்றார்; ஆனால் இவர் விஷம்வைத்துக் கொல்லப்படவே, திட்டம் தோல்வியடைந்தது. அடுத்து பட்டத்திற்கு வந்தவர் ஆறாம் தாலமி. நான்காம் செலூக்கஸ் என்னவானார்? ரோமுக்கு பெரும் தொகையை கப்பங்கட்ட வேண்டியிருந்ததால், எருசலேம் ஆலயத்திலிருந்ததாய் சொல்லப்படும் பொக்கிஷங்களை பறிமுதல் செய்யும்படி தன் கஜானா அதிகாரியான ஹிலியோடோரஸை அனுப்பினார். பதவி மோகம்பிடித்த இவரோ நான்காம் செலூக்கஸைக் கொன்றுவிட்டார். இருந்தாலும் பெர்கமம் ராஜாவான யூமனிஸும் அவரது சகோதரரான ஆடலஸும் சேர்ந்து, கொல்லப்பட்ட ராஜாவின் சகோதரரான நான்காம் ஆண்டியோகஸை ராஜாவாக்கினார்கள்.

37இந்தப் புதிய வடதிசை ராஜாவான நான்காம் ஆண்டியோகஸ், யெகோவாவின் வணக்கத்தை அடியோடு நீக்கி, தன்னை கடவுளுக்கு மேலாக உயர்த்த முற்பட்டார். யெகோவாவிற்கே சவால்விடும் விதத்தில் எருசலேமின் ஆலயத்தை ஜீயஸ் அல்லது ஜூப்பிடர் தெய்வத்திற்கு பிரதிஷ்டை செய்தார். பொ.ச.மு. 167 டிசம்பரில், ஆலய பிரகாரத்தில் புறமத கடவுளுக்கு பலிபீடம் அமைக்கப்பட்டது. அதுவும் யெகோவாவிற்கு தினமும் சர்வாங்க தகனபலி செலுத்தப்பட்ட பெரிய பலிபீடத்தின் மீதே இது கட்டப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு, இந்தப் புதிய பலிபீடத்தின்மீது ஜீயஸ் தெய்வத்திற்கு பலிசெலுத்தப்பட்டது. இவ்வாறு புனிதத்தன்மையை கெடுத்ததால் மக்கபேயர்களின் தலைமையில் யூதர்கள் கொதித்தெழுந்தார்கள். நான்காம் ஆண்டியோகஸ் இவர்களோடு மூன்று வருடங்கள் போரிட்டார். பொ.ச.மு. 164-⁠ல், புனிதத்தன்மைக்கு கேடுவிளைவிக்கப்பட்ட அதே தேதியில், யூதாஸ் மக்கபேயஸ் ஆலயத்தை மீண்டும் யெகோவாவிற்கே பிரதிஷ்டை செய்தார். ஹானுக்கா என்ற பிரதிஷ்டை பண்டிகையையும் துவக்கி வைத்தார்.—யோவான் 10:⁠22.

38மக்கபேயர்கள் பொ.ச.மு. 161-⁠ல் ரோமோடு சமாதான ஒப்பந்தம் செய்து, பொ.ச.மு. 104-⁠ல் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் சிரியா தேசத்து வடதிசை ராஜாவுக்கும் பகை நீடித்தது. இறுதியில் பிரச்சினையைத் தீர்த்துவைக்க ரோம் அழைக்கப்பட்டது. பொ.ச.மு. 63-⁠ல் ரோம தளபதியான நேயஸ் பாம்பி, எருசலேமை மூன்று மாதம் முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். பொ.ச.மு. 39-⁠ல், ரோம பேரவை ஏதோமியரான ஏரோதை யூதேயாவின் ராஜாவாக்கியது. பொ.ச.மு. 37-⁠ல் எருசலேமை இவர் கைப்பற்றவே, மக்கபேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

39இரு எதிரி ராஜாக்களைக் குறித்த தீர்க்கதரிசனத்தின் முதல் பாகம் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறியதை கவனிக்கையில் உள்ளம் சிலிர்க்கிறதல்லவா? சொல்லப்போனால், தானியேலுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டதிலிருந்து சுமார் 500 வருடங்கள் அடங்கிய சரித்திரத்தைப் புரட்டி, வடதிசை தென்றிசை ராஜாக்களை அடையாளங்காண்பதில் என்னே பூரிப்பு! இருந்தாலும், இந்த இரு ராஜாக்களின் ஸ்தானத்தை பலர் ஏற்றிருக்கின்றனர். ஏனெனில் இந்த ராஜாக்களின் சண்டை இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த சமயம்வரையும் நம் நாள்வரையும்கூட நீடித்திருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஆவலைக் கிளறும் விவரங்களை சரித்திர நிகழ்ச்சிகளோடு ஒத்துப்பார்ப்பதன் மூலம், நாம் இந்த இரு ராஜாக்களையும் அடையாளங்காண முடியும்.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• கிரேக்க ராஜ்யங்களிலிருந்து எந்த இரு வல்லமைமிக்க ராஜாக்களின் வம்சங்கள் தோன்றின, இவர்களால் எந்த போராட்டம் ஆரம்பமானது?

தானியேல் 11:6-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, எவ்வாறு இரு ராஜாக்களும் ‘ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணினார்கள்’?

• யுத்தம் எவ்வாறு இவர்களிடையே தொடர்ந்தது:

இரண்டாம் செலூக்கஸ் மற்றும் மூன்றாம் தாலமி (தானியேல் 11:7-9)

மூன்றாம் ஆண்டியோகஸ் மற்றும் நான்காம் தாலமி (தானியேல் 11:10-12)

மூன்றாம் ஆண்டியோகஸ் மற்றும் ஐந்தாம் தாலமி (தானியேல் 11:13-16)

• முதலாம் க்ளியோபாட்ராவுக்கும் ஐந்தாம் தாலமிக்கும் நடந்த திருமணத்தின் நோக்கமென்ன, ஏன் திட்டம் தோல்விகண்டது? (தானியேல் 11:17-19)

தானியேல் 11:1-19 வசனங்களைச் சிந்தித்ததால் நீங்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறீர்கள்?

[கேள்விகள்]

1, 2. தானியேல் 11-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏன் ஆர்வம்காட்ட வேண்டும்?

3. “மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே” தூதர் யாருக்கு துணைநின்றார்?

4, 5. முன்னறிவிக்கப்பட்ட நான்கு பெர்சிய ராஜாக்கள் யார்?

6, 7. (அ) நான்காம் ராஜா எவ்வாறு ‘கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிட்டார்’? (ஆ) கிரீஸுக்கு எதிராக சஷ்டா படையெடுத்ததன் விளைவு என்ன?

8. எந்தப் ‘பராக்கிரமமுள்ள ராஜா’ எழும்பினார், அவர் எவ்வாறு ‘அதிக வல்லமையோடு அரசாண்டார்’?

9, 10. அலெக்ஸாந்தரின் ராஜ்யத்தை அவரது சந்ததியார் பெறமாட்டார்கள் என தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது எவ்வாறு உண்மையாயிற்று?

11. அலெக்ஸாந்தரின் ராஜ்யம் எவ்வாறு ‘வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்பட்டது’?

12, 13. (அ) நான்கு கிரேக்க ராஜ்யங்களின் எண்ணிக்கை எவ்வாறு இரண்டாகக் குறைந்தது? (ஆ) செலூக்கஸ் சிரியாவில் எந்த ராஜ பரம்பரையைத் தோற்றுவித்தார்?

14. தாலமிய ராஜ வம்சம் எப்போது எகிப்தில் ஆரம்பமானது?

15. நான்கு கிரேக்க ராஜ்யங்களிலிருந்து எந்த இரு வல்லமைமிக்க ராஜாக்கள் தோன்றினார்கள், இவர்களால் துவங்கிய போராட்டம் என்ன?

16. (அ) இந்த இரு ராஜாக்கள் எந்த மக்களுக்கு வடக்கேயும் தெற்கேயும் இருந்தார்கள்? (ஆ) முதன்முதல் ‘வடதிசை ராஜாவும்,’ ‘தென்றிசை ராஜாவும்’ யாவர்?

17. வடதிசை ராஜாவுக்கும் தென்றிசை ராஜாவுக்கும் போராட்டம் ஆரம்பித்த சமயத்தில் யூத தேசம் யாருடைய ஆதிக்கத்தின்கீழ் இருந்தது?

18, 19. காலப்போக்கில் இந்த இரு எதிரி ராஜாக்கள் எவ்வாறு ‘ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணிக்கொண்டார்கள்’?

20. (அ) பெர்னைஸியின் ‘புயம்’ எவ்வாறு இல்லாமல்போயிற்று? (ஆ) பெர்னைஸியும், அவளை ‘அழைத்துவந்தவர்களும்,’ ‘பலப்படுத்தினவரும்’ எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? (இ) இரண்டாம் ஆண்டியோகஸ் ‘தன் புயத்தை’ அல்லது வல்லமையை இழந்த பிற்பாடு சிரியாவின் ராஜாவானது யார்?

21. (அ) பெர்னைஸியினுடைய “வேர்களின்” “முளை” யார், அவர் எவ்வாறு ‘எழும்பினார்’? (ஆ) மூன்றாம் தாலமி எவ்வாறு ‘வடதேச ராஜாவின் கோட்டைக்கு’ எதிராக சென்று, அவரை வென்றார்?

22. மூன்றாம் தாலமி எகிப்திற்கு எதை திரும்ப எடுத்துவந்தார், அவர் ஏன் கொஞ்ச காலத்திற்கு ‘வடதிசை ராஜாவிடமிருந்து எட்டி நின்றார்’?

23. தென்றிசை ராஜாவின் ராஜ்யத்திற்குள் நுழைந்த வடதிசை ராஜா பிற்பாடு ஏன் ‘தன் தேசத்துக்குத் திரும்பினார்’?

24. (அ) மூன்றாம் செலூக்கஸுக்கு என்ன நேரிட்டது? (ஆ) சிரியாவின் ராஜாவான மூன்றாம் ஆண்டியோகஸ் எவ்வாறு தென்றிசை ராஜாவின் எல்லைப்பகுதியை ‘வெள்ளம்போலக் கடந்துசென்றார்’?

25. நான்காம் தாலமியும் மூன்றாம் ஆண்டியோகஸும் எங்கே யுத்தம் செய்தார்கள், எகிப்திய தென்றிசை ராஜாவின் ‘கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது’ எது?

26. (அ) ரஃபையாவில் நடந்த யுத்தத்தில் தென்றிசை ராஜா எந்தச் ‘சேனையை’ அழித்தார், அங்கே செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் என்ன? (ஆ) நான்காம் தாலமி எவ்வாறு ‘தன் பலத்த அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை’? (இ) யார் அடுத்த தென்றிசை ராஜாவானது?

27. வடதிசை ராஜா எகிப்தின் பிடியிலிருந்து நாடுகளை மீட்க எவ்வாறு “காலங்களின் முடிவில்” திரும்பினார்?

28. இளம் தென்றிசை ராஜா என்ன பிரச்சினைகளைச் சந்தித்தார்?

29, 30. (அ) ‘தென்றிசை ராஜாவின் புயபலங்கள்’ எவ்வாறு வடக்கேயிருந்து வந்த தாக்குதலுக்குப் பணிந்தன? (ஆ) வடதிசை ராஜா எவ்வாறு ‘சிங்காரமான தேசத்தில் நின்றான்’?

31, 32. வடதிசை ராஜா ஏன் இறுதியில் தென்றிசை ராஜாவோடு ‘சமாதானம் பண்ணினான்’?

33. (அ) மூன்றாம் ஆண்டியோகஸும் ஐந்தாம் தாலமியும் என்ன சமாதான ஒப்பந்தம் செய்தனர்? (ஆ) முதலாம் க்ளியோபாட்ராவுக்கும் ஐந்தாம் தாலமிக்கும் நடந்த திருமணத்தின் நோக்கமென்ன, ஏன் திட்டம் தோல்விகண்டது?

34, 35.(அ) வடதிசை ராஜா எந்த ‘கடலோர பட்டணங்களுக்கு’ எதிராக முகத்தைத் திருப்பினார்? (ஆ) வடதிசை ராஜா ஏற்படுத்திய ‘நிந்தையை’ எவ்வாறு ரோம் ஒழியப்பண்ணிற்று? (இ) மூன்றாம் ஆண்டியோகஸ் எவ்வாறு இறந்தார், யார் அடுத்த வடதிசை ராஜாவானார்?

36. (அ) தென்றிசை ராஜா எவ்வாறு தொடர்ந்து போரிட முயன்றார், ஆனால் அவருக்கு என்னவாயிற்று? (ஆ) நான்காம் செலூக்கஸ் எவ்வாறு இறந்தார், அவருக்குப்பின் அரசரானது யார்?

37. (அ) நான்காம் ஆண்டியோகஸ் எவ்வாறு யெகோவா தேவனுக்கும் மேலாக தன்னை உயர்த்த முயன்றார்? (ஆ) நான்காம் ஆண்டியோகஸ் எருசலேம் ஆலயத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்ததால் என்ன நடந்தது?

38. மக்கபேயர்களின் ஆட்சி எவ்வாறு முடிவுக்கு வந்தது?

39. தானியேல் 11:1-19-ஐ சிந்தித்ததிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறீர்கள்?

[பக்கம் 228-ன் அட்டவணை/படங்கள்]

தானியேல் 11:5-19-⁠ல் உள்ள ராஜாக்களின் பட்டியல்

வடதிசை தென்றிசை

ராஜா ராஜா

தானியேல் 11:5 முதலாம் செலூக்கஸ் நிகேட்டார் முதலாம் தாலமி

தானியேல் 11:6 இரண்டாம் ஆண்டியோகஸ் இரண்டாம் தாலமி

(மனைவி லேயடஸி) (மகள் பெர்னைஸி)

தானியேல் 11:7-9 இரண்டாம் செலூக்கஸ் மூன்றாம் தாலமி

தானியேல் 11:10-12 மூன்றாம் ஆண்டியோகஸ் நான்காம் தாலமி

தானியேல் 11:13-19 மூன்றாம் ஆண்டியோகஸ் ஐந்தாம் தாலமி

(மகள் முதலாம் க்ளியோபாட்ரா) வாரிசு:

வாரிசுகள்: ஆறாம் தாலமி

நான்காம் செலூக்கஸ்

நான்காம் ஆண்டியோகஸ்

[படம்]

இரண்டாம் தாலமி, அவர் மனைவியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயம்

[படம்]

முதலாம் செலூக்கஸ் நிகேட்டார்

[படம்]

மூன்றாம் ஆண்டியோகஸ்

[படம்]

ஆறாம் தாலமி

[படம்]

எகிப்தின் கர்னாக்கிலுள்ள, மூன்றாம் தாலமியின் கோட்டை முன்வாயில்

[பக்கம் 216, 217-ன் அட்டவணை/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

“வடதிசை ராஜா,” “தென்றிசை ராஜா” என்ற பெயர்கள், தானியேலின் மக்கள் வாழ்ந்த தேசத்தின் வடக்கிலும் தெற்கிலும் இருந்த ராஜாக்களைக் குறிக்கின்றன

மக்கெதோனியா

கிரீஸ்

ஆசியா மைனர்

இஸ்ரேல்

லிபியா

எகிப்து

எத்தியோப்பியா

சிரியா

பாபிலோன்

அரேபியா

[படம்]

இரண்டாம் தாலமி

[படம்]

மகா ஆண்டியோகஸ்

[படம்]

மகா ஆண்டியோகஸின் தீர்ப்பாணைகள் கொண்ட கற்பலகை

[படம்]

ஐந்தாம் தாலமியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்

[படம்]

எகிப்தின் மேற்பகுதியிலுள்ள இத்ஃபுவில், மூன்றாம் தாலமியும் அவரது வாரிசுகளும் இந்த ஹோரஸ் ஆலயத்தை கட்டினர்

[பக்கம் 210-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

[பக்கம் 215-ன் படம்]

முதலாம் செலூக்கஸ் நிகேட்டார்

[பக்கம் 218-ன் படம்]

முதலாம் தாலமி