Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிரும் புதிருமான ராஜாக்களின் முடிவு நெருங்குகிறது

எதிரும் புதிருமான ராஜாக்களின் முடிவு நெருங்குகிறது

அதிகாரம் பதினாறு

எதிரும் புதிருமான ராஜாக்களின் முடிவு நெருங்குகிறது

ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ரஷ்யாவின் அரசியல் சூழலைக் குறித்து பிரெஞ்சு தத்துவஞானியும் சரித்திராசிரியருமான அலெக்ஸி டெ டோக்வில் 1835-⁠ல் இவ்வாறு எழுதினார்: “ஒன்று முழு சுதந்திரத்தோடு செயல்படுகிறது; மற்றொன்று அடிமைத்தனத்தில் இருக்கிறது. அவற்றின் . . . பாதைகளே வேறு; இருந்தாலும் காலத்தின் கோலமெனும் புரியா புதிரால் இவை ஒவ்வொன்றும் பாதி உலகின் தலையெழுத்தையே எழுதும் அதிகாரத்தை ஒருநாள் பெறும் என்றே தோன்றுகிறது.” இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தக் கணிப்பு எந்தளவு உண்மையாயிற்று? சரித்திராசிரியர் ஜே. எம். ராபர்ட்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “இரண்டாம் உலகப் போரின் முடிவில், உண்மையில் இரண்டு மாபெரும், மிக வித்தியாசப்பட்ட அதிகாரங்களின் கையில் உலகின் தலையெழுத்தே அடங்கியிருந்ததாய் தோன்றியது; ஒன்று ரஷ்யா, மற்றொன்று அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்.”

2இரண்டு உலகப் போர்களின்போதும், தென்றிசை ராஜாவின்​—⁠ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின்​—⁠முக்கிய எதிரியாக, ஜெர்மனியே வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை வகித்தது. இருந்தாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அது பிளவுற்றது. மேற்கு ஜெர்மனி தென்றிசை ராஜாவோடு கூட்டுசேர்ந்தது. கிழக்கு ஜெர்மனியோ மற்றொரு வல்லமைமிக்க அமைப்போடு​—⁠சோவியத் யூனியன் தலைமையிலான கம்யூனிஸ நாடுகளின் கூட்டமைப்போடு⁠—⁠சேர்ந்துகொண்டது. இந்தக் கூட்டமைப்பு அல்லது அரசியல் அமைப்பு வடதிசை ராஜாவாக, ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை வல்லரசுக்கு எதிராக பலங்கொண்டு எழும்பியது. இந்த இரு ராஜாக்களின் பகைமை 1948-⁠ல் பனிப்போர் என்ற ரூபத்தில் எழுந்தது. இப்போர் 1989 வரை நீடித்தது. இதற்கு முன் ஜெர்மானிய வடதிசை ராஜா “பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக” செயல்பட்டிருந்தான். (தானியேல் 11:28, 30) இப்போது கம்யூனிஸ கூட்டமைப்பு இந்த உடன்படிக்கையைக் குறித்ததில் எவ்வாறு செயல்படும்?

உண்மை கிறிஸ்தவர்கள் இடறலடைந்தாலும் நிலைநிற்கிறார்கள்

3“உடன்படிக்கைக்கு விரோதமாய் பொல்லாங்கு செய்பவர்களை அவன் [வடதிசை ராஜா] இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; ஆனால் தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் நிலைநின்று, திறமையாய் செயல்படுவார்கள். ஜனங்களில் உட்பார்வையுள்ளவர்கள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அவர்கள் சில நாட்களுக்கு பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் இடறலடையச் செய்யப்படுவார்கள்” என்றார் தேவதூதன்.​—தானியேல் 11:32, 33, NW.

4‘உடன்படிக்கைக்கு விரோதமாய் பொல்லாங்கு செய்பவர்கள்’ கிறிஸ்தவமண்டல குருமார்களாகத்தான் இருக்க முடியும். இவர்கள் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டினாலும் தங்கள் செயல்களால் கிறிஸ்தவத்தையே அவமதிக்கின்றனர். சோவியத் யூனியனில் மதம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் உவால்டர் கோலார்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “[இரண்டாம் உலகப் போரின்போது] சோவியத் அரசாங்கம், தாயகத்தின் தற்காப்புக்காக சர்ச்சுகளிடமிருந்து பொருள் உதவியையும் தார்மீக ஆதரவையும் பெற முயற்சித்தது.” போருக்குப்பின் சர்ச் தலைவர்கள் அதே நட்புறவை காத்துக்கொள்ள முயன்றனர்; அப்போது வடதிசை ராஜாவாக செயல்பட்ட வல்லரசு நாத்திகத்தைக் கடைப்பிடித்தபோதிலும் இந்த நட்புறவை நாடினர். இவ்வாறு, கிறிஸ்தவமண்டலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் பாகமானது; யெகோவாவின் கண்களில் அருவருக்கத்தக்க விசுவாசத்துரோக அமைப்பானது.​—யோவான் 17:16; யாக்கோபு 4:⁠4.

5‘தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்களும்,’ ‘உட்பார்வையுள்ளவர்களுமான’ உண்மைக் கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? வடதிசை ராஜாவின் ஆட்சியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சரியாகவே ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிந்தபோதிலும்,’ அவர்கள் உலகின் பாகமாக இருக்கவில்லை. (ரோமர் 13:1; யோவான் 18:36) ‘இராயனுடையதை இராயனுக்கு’ செலுத்த கவனமாயிருந்த அவர்கள், ‘தேவனுடையதை தேவனுக்கு’ செலுத்தவும் தவறவில்லை. (மத்தேயு 22:21) ஆனால் இது அவர்களது உத்தமத்தன்மைக்கு சவாலாய் அமைந்தது.​—2 தீமோத்தேயு 3:⁠12.

6இதன் காரணமாக உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘இடறலடைந்தார்கள்,’ ஆனாலும் ‘நிலைநின்றார்கள்.’ அவர்கள் கடுமையாய் துன்புறுத்தப்பட்டு, சிலசமயம் கொலையும் செய்யப்பட்டார்கள். இந்த விதத்தில் இடறலடைந்தார்கள். ஆனால் பெரும்பான்மையோர் உத்தமத்தைக் காத்துக்கொண்டதன் அர்த்தத்தில் அவர்கள் நிலைநின்றார்கள். இயேசுவைப் போலவே அவர்கள் உலகத்தை ஜெயித்தார்கள். (யோவான் 16:33) மேலும், சிறைச்சாலைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் போடப்பட்டபோதிலும் அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்தவேயில்லை. இவ்வாறு அவர்கள் ‘அநேகருக்கு அறிவை உணர்த்தினார்கள்.’ வடதிசை ராஜாவால் ஆளப்பட்ட பெரும்பாலான நாடுகளில் துன்புறுத்துதல் அதிகமானபோதும் யெகோவாவின் சாட்சிகளது எண்ணிக்கை அதிகரித்தது. ‘உட்பார்வையுள்ளவர்களின்’ விசுவாசத்தால், ‘திரள் கூட்டத்தாரும்’ அவ்விடங்களில் தொடர்ந்து அதிகரித்துவந்திருக்கின்றனர்.​—வெளிப்படுத்துதல் 7:9-14.

யெகோவாவின் மக்கள் சுத்திகரிக்கப்படுகிறார்கள்

7‘இப்படி அவர்கள் [கடவுளுடைய மக்கள்] விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்’ என தூதன் சொன்னார். (தானியேல் 11:34அ) இரண்டாம் உலகப் போரில் தென்றிசை ராஜா வெற்றி பெற்றதால், எதிரி ராஜாவின் ஆட்சியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு துன்பம் கொஞ்சம் தணிந்தது. (வெளிப்படுத்துதல் 12:15, 16-ஐ ஒப்பிடுக.) அதேவிதமாய் அடுத்துவந்த வடதிசை ராஜாவால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் அவ்வப்போது ஓரளவு சுதந்திரம் கிட்டியது. பனிப்போர் முடியும் தறுவாயில், உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உணர்ந்த அநேக அதிகாரிகள் அவர்களை சட்டப்பூர்வமாய் அங்கீகரித்தனர். எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே சென்ற திரள் கூட்டத்தாரிடமிருந்தும் உதவி வந்தது. இவர்கள் விசுவாசமுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் பிரசங்கிப்பிற்கு செவிசாய்த்து, அவர்களுக்கு உதவினர்.​—மத்தேயு 25:34-40.

8பனிப்போர் சமயத்தில், கடவுளை சேவிப்பதில் ஆர்வமிருப்பதாய் சொல்லிக்கொண்ட எல்லாரும் நல்ல நோக்கத்தோடு செயல்படவில்லை. “அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்” என தூதன் எச்சரித்திருந்தார். (தானியேல் 11:34ஆ) கணிசமான எண்ணிக்கையினர் சத்தியத்தில் அக்கறை காண்பித்தனர், ஆனால் கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க முன்வரவில்லை. அதேசமயம் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்களாய் தோன்றியவர்கள் உண்மையில் அரசாங்க வேவுக்காரர்களாய் இருந்தனர். ஒரு நாட்டிலிருந்து வந்த அறிக்கை கூறுவதாவது: “இப்படிப்பட்ட நெறியில்லாத சிலர், தீவிர பொதுவுடைமைவாதிகள். கர்த்தருடைய அமைப்பிற்குள் மெல்ல நுழைந்து, மிகுந்த பக்திமான்கள்போல் காட்டிக்கொண்ட இவர்கள் சபையில் சில முக்கிய பொறுப்புகளைக்கூட வகித்தார்கள்.”

9தூதன் இவ்வாறு தொடர்ந்தார்: “அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள் [“இடறலடையச் செய்யப்படுவார்கள்,” NW]; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.” (தானியேல் 11:35) இவ்வாறு சபைக்குள் ஊடுருவியிருந்தவர்கள், உத்தமமுள்ள சில கிறிஸ்தவர்களை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். யெகோவா தமது மக்களை புடமிடுகிறதற்கும் சுத்திகரிக்கிறதற்கும் இவற்றை அனுமதித்தார். இயேசு தாம் ‘பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டது’ போலவே, இந்த உத்தமர்களும் விசுவாசப் பரீட்சையிலிருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டனர். (எபிரெயர் 5:8; யாக்கோபு 1:2, 3; ஒப்பிடுக: மல்கியா 3:3.) இவ்வாறு அவர்கள் ‘புடமிடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்படுகின்றனர்.’

10யெகோவாவின் மக்கள் “முடிவுகாலபரியந்தம்” இடறலையும் சுத்திகரிப்பையும் எதிர்ப்பட வேண்டியிருந்தது. இந்தப் பொல்லாத உலகின் முடிவுவரை துன்புறுத்துதலை அவர்கள் எதிர்பார்ப்பது உண்மைதான். இருந்தாலும், வடதிசை ராஜாவினுடைய தாக்குதலின் விளைவாக கடவுளுடைய மக்கள் ‘குறித்தகாலத்திற்கு’ சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டனர். ஆகவே தானியேல் 11:35-⁠ல், ‘முடிவுகாலம்’ என்பது, கடவுளது மக்கள் வடதிசை ராஜாவின் தாக்குதலை சகித்து, சுத்திகரிக்கப்படுவதற்குத் தேவைப்படும் காலப்பகுதியின் முடிவைக் குறிக்கவேண்டும். இப்படியாக, அவர்களது இடறல், யெகோவாவின் குறித்தகாலத்தில் முடிந்தது.

ராஜா தன்னை உயர்த்துகிறார்

11வடதிசை ராஜாவைக் குறித்து தூதன் இவ்வாறு தொடர்ந்தார்: ‘ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, [யெகோவாவின் பேரரசுரிமையை ஏற்க மறுத்து] தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும் [“விருப்பத்தையும்,” NW], எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்குவான்.’​—தானியேல் 11:36, 37.

12இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வகையில், வடதிசை ராஜா, கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவ கடவுளைப் போன்ற ‘தன் பிதாக்களின் தேவர்களை’ புறக்கணித்தான். கம்யூனிஸ கூட்டமைப்பு நாத்திகத்தை தீவிரமாக முன்னேற்றுவித்தது. இவ்வாறு வடதிசை ராஜா, தன்னையே கடவுளாக்கி, ‘எல்லாருக்கும் மேலாக தன்னை உயர்த்திக்கொண்டான்.’ ‘ஸ்திரீகளின் விருப்பத்தை’ மதியாமல்​—⁠அதாவது தனது ராஜ்யத்தில் பணிப்பெண்கள்போல் சேவித்த வட வியட்நாம் போன்ற தனக்குக் கீழ்ப்பட்ட நாடுகளின் விருப்பத்தை மதியாமல்—ராஜா ‘தனக்கு இஷ்டமானபடி செய்தான்.’

13தீர்க்கதரிசனத்தை தூதன் இவ்வாறு தொடர்ந்தார்: “அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.” (தானியேல் 11:38) சொல்லப்போனால், வடதிசை ராஜா ‘அரண்களின் தேவனான’ விஞ்ஞானப்பூர்வ நவீன ராணுவத்தில் நம்பிக்கை வைத்தான். இரட்சிப்பிற்காக இந்தத் ‘தேவனை’ நம்பி, அதன் பலிபீடத்தில் பேரளவான செல்வத்தை காணிக்கையாக செலுத்தினான்.

14‘அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் [“திறமையாய் செயல்படுவான்,” NW] . . . அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.’ (தானியேல் 11:39) வடதிசை ராஜா தனது ராணுவ ‘அந்நிய தேவனில்’ நம்பிக்கை வைத்து, மிகத் ‘திறமையாய்’ செயல்பட்டு, “கடைசிநாட்களில்” விஞ்சமுடியாத ராணுவ பலம்படைத்தவனாய் நிரூபித்தான். (2 தீமோத்தேயு 3:1) அவனது கொள்கையை ஆதரித்தவர்களுக்கு அரசியல் ஆதரவும் பண ஆதரவும் சிலசமயம் ராணுவ ஆதரவும் வழங்கப்பட்டது.

முடிவுகாலத்தில் ‘தள்ளுதல்’

15“முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனை தள்ளுவான்” என தூதன் தானியேலிடம் சொன்னார். (தானியேல் 11:40அ, NW) ‘முடிவுகாலத்தில்’ வடதிசை ராஜா, தென்றிசை ராஜாவால் ‘தள்ளப்பட்டிருக்கிறானா’? (தானியேல் 12:4, 9) ஆம், நிச்சயமாகவே. முதல் உலகப் போருக்குப்பின், முன்னாளைய வடதிசை ராஜாவான ஜெர்மனிமீது, நிபந்தனைக்குரிய ஒப்பந்தம் திணிக்கப்பட்டதானது நிச்சயமாகவே ‘தள்ளுவதாய்,’ அதாவது எதிர்த்தாக்குதலுக்கான ஒரு தூண்டுதலாய் அமைந்தது. இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப்பின், தென்றிசை ராஜா, தனது எதிரியை பயங்கர அணு ஆயுதங்களால் தாக்க தயாராயிருந்தான். அவனுக்கு எதிராக வல்லமைமிக்க ராணுவ கூட்டமைப்பான வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பையும் (NATO) உருவாக்கினான். NATO-⁠ன் பணியைக் குறித்து பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஒருவர் சொல்கிறார்: “அது, அச்சமயத்தில் ஐரோப்பிய சமாதானத்திற்கு பயங்கர அச்சுறுத்தலாய் கருதப்பட்ட யூஎஸ்எஸ்ஆரைக் ‘கட்டுப்படுத்துவதற்கான’ முக்கிய கருவியாய் இருந்தது. 40 வருடங்கள் பணியாற்றிய இது, முழு வெற்றிபெற்றது.” பனிப்போர் நடந்தேறுகையில், தென்றிசை ராஜாவின் ‘தள்ளுதல்,’ உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த வேவுபார்த்தல், அதோடு அரசியல் தந்திரம், ராணுவ தாக்குதல் ஆகியவற்றையும் உட்படுத்தியது.

16வடதிசை ராஜா எவ்வாறு பிரதிபலித்தான்? “வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.” (தானியேல் 11:40ஆ) கடைசி நாட்களுக்குரிய சரித்திர உண்மைகள், வடதிசை ராஜா கடைப்பிடித்த விரிவாக்கக் கொள்கைக்கு சான்றளிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது, நாசி “ராஜா” சுற்றுவட்டார தேசங்களுக்குள் பிரவேசித்து, அவற்றைப் பிரவாகித்து, தன் எல்லைகளை விஸ்தரித்தான். அந்தப் போரின் முடிவில், வெற்றிபெற்ற “ராஜா” வல்லமைமிக்க சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். பனிப் போரின்போது வடதிசை ராஜா, ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நடந்த போர்களிலும் கிளர்ச்சிகளிலும் மறைமுகமாக தன் எதிரியோடு சண்டையிட்டான். அவன் உண்மைக் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி, அவர்களது ஊழியத்தை தடைசெய்தான், இருந்தாலும் அதை ஒரேயடியாக நிறுத்த அவனால் முடியவில்லை. ராணுவ தாக்குதலாலும் அரசியல் தந்திரத்தாலும் அநேக நாடுகளைக் கைப்பற்றினான். இதையேதான் தூதன் இப்படி முன்னறிவித்திருந்தார்: “அவன் சிங்காரமான தேசத்திலும் [யெகோவாவின் மக்களது ஆவிக்குரிய நிலைமை] வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்.”​—தானியேல் 11:41அ.

17இருந்தாலும் வடதிசை ராஜாவால் உலகையே வெல்ல முடியவில்லை. தூதன் இவ்வாறு முன்னறிவித்தார்: “ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.” (தானியேல் 11:41ஆ) பூர்வ காலங்களில், ஏதோமும் மோவாபும் அம்மோனும், தென்றிசை ராஜாவின் பேரரசான எகிப்துக்கும் வடதிசை ராஜாவின் பேரரசான சிரியாவுக்கும் இடையே அமைந்திருந்தன. நவீன காலங்களில் அவை, வடதிசை ராஜா குறிவைத்தும் கைப்பற்ற முடியாமல் போன தேசங்களையும் அமைப்புகளையும் குறிக்கின்றன.

எகிப்து தப்புவதில்லை

18யெகோவாவின் தூதன் தொடர்ந்ததாவது: “அவன் [வடதிசை ராஜா] தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. எகிப்தினுடைய [“மறைவான பொக்கிஷங்களாகிய,” NW] பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.” (தானியேல் 11:42, 43) தென்றிசை ராஜாவான ‘எகிப்துகூட,’ வடதிசை ராஜாவின் விரிவாக்கக் கொள்கையின் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை. உதாரணத்திற்கு, வியட்நாமில் தென்றிசை ராஜா படுதோல்வி அடைந்தான். ‘லீபியரையும் எத்தியோப்பியரையும்’ பற்றியென்ன? பூர்வ எகிப்தின் அண்டை நாட்டவரான இவர்கள், நவீன ‘எகிப்தின்’ (தென்றிசை ராஜாவின்) புவியியல் சார்ந்த அண்டை நாட்டவருக்கு முன்நிழலாக இருக்கிறார்கள். சிலசமயம், இவர்கள் வடதிசை ராஜாவின் ‘பின்சென்றவர்களாய்,’ அல்லது அவனைப் பின்பற்றியவர்களாய் இருந்திருக்கிறார்கள்.

19வடதிசை ராஜா ‘எகிப்தினுடைய மறைவான பொக்கிஷங்களை’ ஆண்டிருக்கிறானா? தென்றிசை ராஜா தன் நிதி வளங்களைப் பயன்படுத்திய விதத்தின்மீது அவன் பெரும் செல்வாக்கு செலுத்தியிருப்பது உண்மை. எதிரியினால் திகிலடைந்த தென்றிசை ராஜா, மிகுந்த பலம்படைத்த தரைப் படையையும் கப்பற்படையையும் விமானப் படையையும் பராமரிப்பதற்கு பெருந்தொகையை செலவிட்டிருக்கிறான். தென்றிசை ராஜா தன் செல்வத்தை கையாளும் விதத்தை இந்தளவுக்கு வடதிசை ராஜா ‘ஆண்டுகொண்டிருக்கிறான்,’ அல்லது கட்டுப்படுத்தியிருக்கிறான்.

இறுதித் தாக்குதல்

20ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மற்ற காரியங்களிலும், வடதிசை ராஜாவுக்கும் தென்றிசை ராஜாவுக்கும் நிலவும் பகைமை முடிவை நெருங்குகிறது. இனிவரவிருக்கும் ஒரு யுத்தத்தின் விவரங்களைப் பற்றி யெகோவாவின் தூதன் சொன்னார்: “சூரியன் உதிக்கும் திசையிலிருந்தும் வடக்கிலிருந்தும் வரும் செய்திகள் அவனை [வடதிசை ராஜாவை] கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம் பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், மகா சமுத்திரத்திற்கும் சிங்காரமான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையே தன் அரமனையாகிய கூடாரங்களை நாட்டுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.”​—தானியேல் 11:44, 45, NW.

21டிசம்பர் 1991-⁠ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது, இந்த வடதிசை ராஜாவுக்கு படுதோல்வி ஏற்பட்டது. அப்படியென்றால், தானியேல் 11:44, 45 நிறைவேறுகையில் வடதிசை ராஜாவாக இருக்கப்போவது யார்? அவன் முன்னாளைய சோவியத் யூனியனின் நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருப்பானா? அல்லது ஏற்கெனவே பலமுறை நடந்திருப்பதுபோல் இம்முறையும் அவனது அடையாளம் முழுமையாய் மாறிவிடுமா? இன்னும் கூடுதலான தேசங்கள் அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதால் உருவாகும் புதிய ஆயுதப் போட்டி இந்த ராஜாவின் அடையாளத்தைப் பாதிக்குமா? இக்கேள்விகளுக்கு காலமே பதில்சொல்லும். ஊகிக்காமலிருப்பதே புத்திசாலித்தனம். வடதிசை ராஜா இறுதியாக தாக்குதல் நடத்துகையில், பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்றுள்ள அனைவரும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை தெளிவாய் புரிந்துகொள்வார்கள்.​—⁠பக்கம் 284-⁠ல், “தானியேல் 11-ஆம் அதிகாரத்திலுள்ள ராஜாக்களின் பட்டியல்” என்ற தலைப்பின்கீழ் காண்க.

22இருந்தாலும் வடதிசை ராஜா விரைவில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறான் என்பது நமக்குத் தெரிந்ததே. “சூரியன் உதிக்கும் திசையிலிருந்தும் வடக்கிலிருந்தும் வரும்” செய்திகளால் தூண்டப்பட்டு, ‘அநேகரை அழிக்க’ அவன் தாக்குதல் நடத்துவான். யாரைத் தாக்குவான்? இவ்வாறு தாக்கும்படி தூண்டும் “செய்திகள்” யாவை?

திகிலுண்டாக்கும் செய்திகளால் கலக்கம்

23பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் முடிவைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கவிருக்கும் யுத்தமான’ அர்மகெதோனுக்கு முன்பு, உண்மை வணக்கத்தின் இந்த மகா எதிரி “அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்.” (வெளிப்படுத்துதல் 16:14, 16; 18:2-8) கடவுளது உக்கிரத்தின் ஆறாவது கலசத்தை அடையாளப்பூர்வ ஐப்பிராத்து நதி மீது ஊற்றுவது, அவளது அழிவுக்கு முன்நிழலாய் இருக்கிறது. “அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி” நதி வற்றிப்போகிறது. (வெளிப்படுத்துதல் 16:12) இந்த ராஜாக்கள் யார்? யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவுமே!​—ஏசாயா 41:2; 46:10, 11-ஐ ஒப்பிடுக.

24மகா பாபிலோனின் அழிவு வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தத்ரூபமாய் விவரிக்கப்பட்டிருக்கிறது: “நீ கண்ட பத்துக் கொம்புகளும் [முடிவு காலத்தில் ஆட்சிசெய்யும் ராஜாக்கள்] மூர்க்க மிருகமும் [ஐக்கிய நாட்டு சங்கம்] அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் முழுமையாய் சுட்டெரித்துப் போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16, NW) ஆட்சியாளர்கள் ஏன் மகா பாபிலோனை அழிப்பார்கள்? ஏனெனில் ‘தேவன் . . . தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கு . . . அவர்களுடைய இருதயங்களை ஏவுவார்.’ (வெளிப்படுத்துதல் 17:17) இந்த ஆட்சியாளர்களில் வடதிசை ராஜாவும் அடங்குவான். யெகோவா மத வேசியை ஒழித்துக்கட்டும்படி மனித தலைவர்களின் இதயத்தை ஏவும் இந்த நடவடிக்கையே ‘சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும்’ செய்தியாய் இருக்கலாம்.

25ஆனால் வடதிசை ராஜாவின் கோபத்திற்கு முக்கிய குறியிலக்கு உண்டு. அவன் ‘மகா சமுத்திரத்திற்கும் சிங்காரமான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்’ என தூதன் சொல்கிறார். தானியேலின் காலத்தில் மகா சமுத்திரம் என்பது, மத்தியதரைக் கடலாக இருந்தது. பரிசுத்த பர்வதம் என்பது ஒருசமயத்தில் கடவுளுடைய ஆலயம் அமைந்திருந்த சீயோனாக இருந்தது. ஆகவே தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, உக்கிரங்கொண்ட வடதிசை ராஜா கடவுளது மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறான். ஆவிக்குரிய கருத்தில், ‘மகா சமுத்திரத்திற்கும் பரிசுத்த பர்வதத்திற்கும் இடையே’ அமைந்த இவ்விடம், யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களது ஆவிக்குரிய நிலைமையைக் குறிக்கிறது. இவர்கள் கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் மனிதவர்க்க ‘கடலிலிருந்து’ வெளியே வந்தவர்கள்; பரலோக சீயோன் மலையில் இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்யும் நம்பிக்கை பெற்றவர்கள்.​—ஏசாயா 57:20; எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:⁠1.

26தானியேலின் காலத்தில் வாழ்ந்த எசேக்கியேலும், “கடைசி நாட்களிலே” கடவுளுடைய மக்கள் தாக்கப்படுவார்களென முன்னறிவித்தார். மாகோகின் கோகாகிய பிசாசாகிய சாத்தானே சண்டையை தூண்டிவிடுவான் என அவர் சொன்னார். (எசேக்கியேல் 38:14, 16) அடையாளப்பூர்வமாக, எந்தத் திசையிலிருந்து கோகு வருகிறான்? “வடக்கே தொலைதூரப் பகுதியிலிருந்து” வருவானென எசேக்கியேல் மூலம் யெகோவா சொல்கிறார். (எசேக்கியேல் 38:15, NW) இது எந்தளவுக்கு கடுமையான தாக்குதலாய் இருந்தாலும், யெகோவாவின் மக்களை அழிக்காது. இந்தத் திடீர் மோதல், கோகின் படைகளை அழிக்க யெகோவா சாதுரியமாக நடவடிக்கை எடுப்பதன் விளைவாக இருக்கும். ஆக, யெகோவா சாத்தானிடம் சொல்வதாவது: ‘நான் . . . உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னை . . . புறப்படப்பண்ணுவேன்.’ “உன்னை வடதிசைக் கடைகோடிகளிலிருந்து இஸ்ரவேல் மலைகளில் எழும்பி வரப்பண்ணுவேன்.” (எசேக்கியேல் 38:4; 39:2, தி.மொ.) ஆகவே வடதிசை ராஜாவின் கோபத்தைக் கிளறும், ‘வடக்கிலிருந்து வரும்’ செய்தி, யெகோவாவிடமிருந்தே வரவேண்டும். ஆனால் “சூரியன் உதிக்கும் திசையிலிருந்தும் வடக்கிலிருந்தும் வரும்” செய்திகள் இறுதியில் என்னவாக இருக்கும் என்பதை காலமே சொல்லும், கடவுளே தீர்மானிப்பார்.

27கோகு, ‘தேவனுடைய இஸ்ரவேலர்களது’ செழிப்பைக் கண்டு, முழுமூச்சாக தாக்குதலில் இறங்குகிறான். ஏனெனில் இவர்களும் ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தாரும்’ இனியும் அவனது உலகத்தின் பாகமல்ல. (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16; 17:15, 16; 1 யோவான் 5:19) ‘தேசங்களிலிருந்து கூட்டிச்சேர்க்கப்பட்ட மக்களை,’ அதாவது ‘[ஆவிக்குரிய] சொத்தையும் உடைமைகளையும் குவித்துக்கொள்ளும்’ மக்களை கோகு ஏளனமாக பார்க்கிறான். (எசேக்கியேல் 38:12, NW) கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய நிலைமையை, சுலபமாய் வெல்லக்கூடிய ‘மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசமாக’ கருதுகிறான். மனிதவர்க்கத்தின்மீது முழு அதிகாரம் செலுத்துவதற்கு தடையாயிருக்கும் இந்த தேசத்தை ஒழித்துக்கட்ட தன்னாலான அனைத்தையும் செய்கிறான். ஆனாலும் தோல்வியடைகிறான். (எசேக்கியேல் 38:12, 18; 39:4) வடதிசை ராஜா உட்பட, பூமியின் ராஜாக்கள் அனைவரும் யெகோவாவின் மக்களை தாக்குகையில் அவர்கள் ‘முடிவடைவார்கள்.’

‘ராஜா முடிவுக்கு வருவான்’

28வடதிசை ராஜாவின் இறுதித் தாக்குதல் தென்றிசை ராஜாவுக்கு எதிராக இருக்காது. ஆகவே வடதிசை ராஜா தனது மகா எதிரியின் கைகளில் அழிவைக் காண்பதில்லை. அதேவிதமாய், தென்றிசை ராஜாவும் வடதிசை ராஜாவால் அழிவதில்லை. தென்றிசை ராஜா, “[மனித] கையினாலல்ல,” ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தால் அழிக்கப்படுவான். a (தானியேல் 8:25) சொல்லப்போனால், அர்மகெதோன் யுத்தத்தில், அனைத்து பூமிக்குரிய ராஜாக்களையும் கடவுளது ராஜ்யம் நீக்கிப்போடும். வடதிசை ராஜாவுக்கும் இதே கதிதான். (தானியேல் 2:44) இந்த இறுதி யுத்தத்திற்கு வழிநடத்தும் சம்பவங்களைத்தான் தானியேல் 11:44, 45 விவரிக்கின்றன. ஆக, வடதிசை ராஜா ‘ஒத்தாசை பண்ணுவாரில்லாமல்’ அழிவை சந்திக்கவிருப்பது ஆச்சரியமல்லவே!

[அடிக்குறிப்புகள்]

a இப்புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தைக் காண்க.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• வடதிசை ராஜாவின் அடையாளம் எவ்வாறு இரண்டாம் உலகப் போருக்குப்பின் மாறியது?

• வடதிசை ராஜாவுக்கும் தென்றிசை ராஜாவுக்கும் இறுதியாக என்ன நடக்கும்?

• இரு ராஜாக்களின் பகைமையைப் பற்றி சொல்லும் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாய்த்ததால் நீங்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறீர்கள்?

[கேள்விகள்]

1, 2. இரண்டாம் உலகப் போருக்குப்பின் எவ்வாறு வடதிசை ராஜாவின் அடையாளம் மாறியது?

3, 4. ‘உடன்படிக்கைக்கு விரோதமாய் பொல்லாங்கு செய்பவர்கள்’ யார், வடதிசை ராஜாவோடு அவர்களுக்கு என்ன தொடர்பு இருந்திருக்கிறது?

5, 6. ‘தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள்’ யார், வடதிசை ராஜாவின் ஆட்சியில் அவர்களது நிலை என்ன?

7. வடதிசை ராஜாவின் ஆட்சியில் வாழ்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு ‘கொஞ்சம் ஒத்தாசை’ கிடைத்தது?

8. சிலர் எவ்வாறு ‘இச்சக வார்த்தைகளோடே’ கடவுளுடைய ஜனங்களோடு ஒட்டிக்கொண்டார்கள்?

9. சபைக்குள் ஊடுருவியிருந்தவர்களால் உண்மை கிறிஸ்தவர்கள் சிலர் ‘இடறலடையும்படி’ யெகோவா ஏன் அனுமதித்தார்?

10. “முடிவுகாலபரியந்தம்” என்ற பதத்தின் அர்த்தம் என்ன?

11. யெகோவாவின் பேரரசுரிமையைக் குறித்த வடதிசை ராஜாவின் மனப்பான்மையைப் பற்றி தூதன் என்ன சொன்னார்?

12, 13. (அ) எந்த விதத்தில் வடதிசை ராஜா ‘தன் பிதாக்களின் தேவர்களை’ புறக்கணித்தான்? (ஆ) வடதிசை ராஜா எந்த ‘ஸ்திரீகளின் விருப்பத்தை’ மதிக்கவில்லை? (இ) எந்தத் ‘தேவனை’ வடதிசை ராஜா மகிமைப்படுத்தினான்?

14. வடதிசை ராஜா எவ்வாறு “திறமையாய் செயல்பட்டான்”?

15. எவ்வாறு தென்றிசை ராஜா வடதிசை ராஜாவை ‘தள்ளினான்’?

16. தென்றிசை ராஜாவின் தள்ளுதலுக்கு வடதிசை ராஜா எவ்வாறு பிரதிபலித்தான்?

17. வடதிசை ராஜாவினால் உலகையே வெல்ல முடிந்ததா?

18, 19. தென்றிசை ராஜா எந்த விதங்களில் தன் எதிரிமீது செல்வாக்கு செலுத்தியிருக்கிறான்?

20. வடதிசை ராஜாவின் இறுதித் தாக்குதலை தூதன் எவ்வாறு விவரித்தார்?

21. வடதிசை ராஜாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?

22. வடதிசை ராஜாவின் இறுதி தாக்குதலைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?

23. (அ) அர்மகெதோனுக்கு முன்பு என்ன குறிப்பிடத்தக்க சம்பவம் நடக்கவேண்டும்? (ஆ) ‘சூரியன் உதிக்கும் திசையிலிருந்துவரும் ராஜாக்கள்’ யார்?

24. யெகோவாவின் எந்த நடவடிக்கையால் வடதிசை ராஜா கலக்கமடைவான்?

25. (அ) வடதிசை ராஜாவின் முக்கிய குறியிலக்கு என்ன? (ஆ) வடதிசை ராஜா எங்கே ‘தன் அரமனையாகிய கூடாரங்களைப்’ போடுகிறான்?

26. எசேக்கியேல் தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, ‘வடக்கிலிருந்து வரும்’ செய்தி யாரிடமிருந்து வரலாம்?

27. (அ) கடவுளுடைய மக்களைத் தாக்குவதற்காக வடதிசை ராஜா உட்பட, எல்லா தேசங்களையும் கோகு ஏன் ஏவுவான்? (ஆ) கோகுவின் தாக்குதலின் முடிவென்ன?

28. வடதிசை, தென்றிசை ராஜாக்களின் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

[பக்கம் 284-ன் அட்டவணை/படம்]

தானியேல் 11-ஆம் அதிகாரத்திலுள்ள ராஜாக்களின் பட்டியல்

வடதிசை தென்றிசை

ராஜா ராஜா

தானியேல் 11:5 முதலாம் செலூக்கஸ் நிகேட்டார் முதலாம் தாலமி

தானியேல் 11:6 இரண்டாம் ஆண்டியோகஸ் இரண்டாம் தாலமி

(மனைவி லேயடஸி) (மகள் பெர்னைஸி)

தானியேல் 11:7-9 இரண்டாம் செலூக்கஸ் மூன்றாம் தாலமி

தானியேல் 11:10-12 மூன்றாம் ஆண்டியோகஸ் நான்காம் தாலமி

தானியேல் 11:13-19 மூன்றாம் ஆண்டியோகஸ் ஐந்தாம் தாலமி

(மகள், முதலாம் க்ளியோபாட்ரா) வாரிசு: ஆறாம் தாலமி

வாரிசுகள்:

நான்காம் செலூக்கஸ் மற்றும்

நான்காம் ஆண்டியோகஸ்

தானியேல் 11:20 அகஸ்டஸ்

தானியேல் 11:21-24 டைபீரியஸ்

தானியேல் 11:25, 26 ஆரேலியன் ஸெனோபியா ராணி

ரோம சாம்ராஜ்யம்

வீழ்ச்சியடைகிறது

தானியேல் 11:27-30அ ஜெர்மானிய பேரரசு பிரிட்டன், அதன்பின்

(முதல் உலகப் போர்) ஆங்கிலோ-அமெரிக்க

உலக வல்லரசு

தானியேல் 11:30ஆ, 31 ஹிட்லரின் மூன்றாம் ரைக் ஆங்கிலோ-அமெரிக்க

(இரண்டாம் உலகப் போர்) உலக வல்லரசு

தானியேல் 11:32-43 கம்யூனிஸ கூட்டமைப்பு ஆங்கிலோ-அமெரிக்க

(பனிப் போர்) உலக வல்லரசு

தானியேல் 11:44, 45 இன்னும் எழவில்லை b ஆங்கிலோ-அமெரிக்க

உலக வல்லரசு

[அடிக்குறிப்பு]

b தானியேல் 11-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம், வெவ்வேறு காலங்களில் வடதிசை ராஜாவாகவும் தென்றிசை ராஜாவாகவும் செயலாற்றும் ஆட்சியாளர்களின் பெயர்களை முன்னறிவிப்பதில்லை. சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த பிறகே அவர்களது அடையாளம் தெரியவருகிறது. மேலும் இவர்களது போராட்டம் துண்டு துண்டாக நடப்பதால், இடையிடையே போரே இல்லாத காலங்களும் இருந்தன. ஒரு ராஜாவின் கை ஓங்குகையில் மற்றவர் கை தளர்ந்திருக்கிறது.

[பக்கம் 271-ன் முழுபடம்]

[பக்கம் 279-ன் படங்கள்]

தென்றிசை ராஜாவின் ‘தள்ளுதல்,’ உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த வேவுபார்த்தலையும் ராணுவ அச்சுறுத்தலையும் உட்படுத்தியிருக்கிறது