Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாபெரும் சிலையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

மாபெரும் சிலையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

அதிகாரம் நான்கு

மாபெரும் சிலையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ராஜா நேபுகாத்நேச்சார், யூதாவிலிருந்து தானியேலையும் “தேசத்தின் பராக்கிரமசாலிகளையும்” சிறைப்பிடித்து வந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. (2 இராஜாக்கள் 24:15) இளம் தானியேல் அரசவையில் பணிபுரிந்துவருகிறார்; உயிருக்கு உலைவைக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. இதை நாம் ஏன் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால், யெகோவா தேவன் தலையிட்ட விதம், தானியேலின் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாத்தது மட்டுமல்லாமல், பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி—இந்நாள்வரை தோன்றியிருக்கும்—உலக வல்லரசுகளைப் பற்றி நமக்கு ஒரு கண்ணோட்டமும் அளிக்கிறது.

அரசருக்கு ஒரு சிக்கல்

2“நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது” என தானியேல் தீர்க்கதரிசி எழுதினார். (தானியேல் 2:1) கனவு கண்டவர் நேபுகாத்நேச்சார்; பாபிலோன் சாம்ராஜ்யத்தின் ராஜா. பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிக்க யெகோவா தேவன் அவரை அனுமதித்தபோது அவர் உலக ஆட்சியாளரானார் எனலாம். நேபுகாத்நேச்சார் உலகை ஆட்சிபுரிந்த இரண்டாம் வருடத்தில் (பொ.ச.மு. 606/605) கடவுள் தந்த கனவால் அரண்டுபோனார்.

3இந்தக் கனவு அவர் மனதை அரித்ததால் உறக்கமின்றி தவித்தார். இயல்பாகவே, அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள துடித்தார். ஆனால், பராக்கிரமமுள்ள இந்த ராஜாவுக்கு அந்தக் கனவு ஞாபகமில்லை! ஆகவே அவர் பாபிலோனின் சாஸ்திரிகளையும் ஜோசியர்களையும் சூனியக்காரரையும் வரவழைத்து, தான் கண்ட கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆனால் அது அவர்களது சக்திக்கு மீறியதாக இருந்ததால், கைவிரித்துவிட்டனர். அவர்களது கையாலாகத்தனத்தால் நேபுகாத்நேச்சார் கடுங்கோபம் கொண்டு, “பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி” கட்டளையிட்டார். அப்படியென்றால், இந்தக் கட்டளையை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவரை தீர்க்கதரிசியாகிய தானியேலும் நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும். ஏன்? ஏனென்றால் அவரும் அனனியா, மீஷாவேல், அசரியா ஆகிய அவரது மூன்று எபிரெய நண்பர்களும் பாபிலோனிய ஞானிகளாக கருதப்பட்டனர்.—தானியேல் 2:2-14.

உதவிக்கு வருகிறார் தானியேல்

4நேபுகாத்நேச்சார் இப்படிப்பட்ட கொடூரமான கட்டளையிட்டதற்கான காரணத்தை அறிந்துகொண்ட பின்னர் “தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.” அனுமதி கொடுக்கப்பட்டது. வீடு திரும்பிய தானியேலும் அவரது மூன்று நண்பர்களும், ‘இந்த மறைபொருளைக் குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்டு’ ஜெபித்தனர். அதே இரவில் யெகோவா தானியேலுக்கு அந்தக் கனவின் அர்த்தத்தை தரிசனத்தில் வெளிப்படுத்தினார். தானியேல் நன்றியோடு இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.” கனவைப் புரியவைத்ததற்காக தானியேல் யெகோவாவைத் துதித்தார். —தானியேல் 2:15-23.

5மறுநாள், பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யும் உத்தரவு பெற்ற மெய்க்காப்பாளர்களின் தலைவனான ஆரியோகை தானியேல் சந்தித்தார். தானியேலால் கனவின் அர்த்தத்தை விளக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட ஆரியோகு அவரைக் கூட்டிக்கொண்டு ராஜாவினிடம் விரைந்தார். தனக்கு எவ்விதத்திலும் பெருமை தேடிக்கொள்ளாதவாறு, தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் இவ்வாறு சொன்னார்: “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.” பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நேபுகாத்நேச்சாரின் நாளிலிருந்து நம்நாள் வரை, ஏன் அதற்குப் பிற்பாடு நடக்கவிருக்கும் உலக சம்பவங்களையும் சுருக்கமாக சொல்ல தானியேல் தயாராயிருந்தார்.—தானியேல் 2:24-30.

கனவை சொல்கிறார்

6தானியேலின் இந்த விளக்கத்தை நேபுகாத்நேச்சார் கூர்ந்து கவனித்துக் கேட்டார்: “ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும் [“செம்பும்,” NW] அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் [“செம்பும்,” NW] வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.”​—தானியேல் 2:31-35.

7நேபுகாத்நேச்சார் கண்ட கனவை தானியேல் சொன்னபோது அவர் எப்படி மெய்சிலிர்த்துப் போயிருப்பார்! ஆனாலும் ஒரு சிக்கல், அவர் அந்தக் கனவின் அர்த்தத்தையும் சொன்னால்தான் பாபிலோனிய ஞானிகளின் தலை தப்பும். தன் சார்பாகவும் தன் மூன்று எபிரெய நண்பர்களின் சார்பாகவும் தானியேல் பேசினார்: “சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.”​—தானியேல் 2:⁠36.

தனித்தன்மைவாய்ந்த ராஜ்யம்

8“ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.” (தானியேல் 2:37, 38) பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமை அழிக்க யெகோவா நேபுகாத்நேச்சாரை பயன்படுத்திய சமயத்திலிருந்து இவ்வார்த்தைகள் அவருக்குப் பொருந்தின. ஏனென்றால், எருசலேமில் அரியணை ஏறிய ராஜாக்கள் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவான தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எருசலேம், பூமியின் மீதான யெகோவாவின் அரசுரிமையை பிரதிநிதித்துவம் செய்யும் கடவுளுடைய மாதிரி ராஜ்யமான யூதாவின் தலைநகர். அந்நகரம் பொ.ச.மு. 607-⁠ல் அழிக்கப்பட்டபோது, கடவுளுடைய மாதிரி ராஜ்யம் முடிவிற்கு வந்தது. (1 நாளாகமம் 29:23; 2 நாளாகமம் 36:17-21) சிலையின் உலோகங்கள் அடையாளப்படுத்தின உலக வல்லரசுகள் அதற்குப்பின் தோன்றவிருந்தன. இவை கடவுளுடைய மாதிரி ராஜ்யத்தின் தலையீடு இல்லாமல் உலகத்தில் அதிகாரம் செலுத்தமுடியும். பூர்வ காலத்தில் அறியப்பட்ட உலோகங்களிலேயே மிக விலைமதிப்பானது பொன். அப்படிப்பட்ட பொன்னாலான தலையைக் குறிக்கும் நேபுகாத்நேச்சார், எருசலேமை அழிப்பதன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கவிழ்த்து, தனிச்சிறப்பைப் பெற்றார்.​—⁠பக்கம் 63-⁠ல், “ராஜவீரர் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்” என்ற தலைப்பின்கீழ் பார்க்கவும்.

943 வருடங்கள் அரசாண்ட நேபுகாத்நேச்சாரின் ராஜவம்சம், பாபிலோனிய சாம்ராஜ்யத்தை மேலும் 43 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது. அவர் மருமகனான நபோனிடஸும் மூத்த மகனான ஏவில் மெரொதாக்கும் அவ்வம்சத்தைச் சேர்ந்த ராஜாக்கள். பொ.ச.மு. 539-⁠ல் நபோனிடஸின் மகனான பெல்ஷாத்சார் இறந்தபோது அவ்வம்சம் முடிவுக்கு வந்தது. (2 இராஜாக்கள் 25:27; தானியேல் 5:30) ஆகவே நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட சிலையின் பொன்னான தலை, அவரை மட்டுமல்ல அந்த முழு பாபிலோனிய அரச பரம்பரையையும் குறித்தது.

10“உமக்குப் பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்” என்று தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் சொன்னார். (தானியேல் 2:39) சிலையின் வெள்ளியினாலான மார்பும் புயமும், நேபுகாத்நேச்சாரின் ராஜ வம்சத்திற்கு அடுத்ததாய் தோன்றும் ராஜ்யத்தை அடையாளப்படுத்தியது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஏசாயா இந்த ராஜ்யத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார். அதை வெல்லப்போகும் அதன் அரசரின் பெயர் கோரேசு என்பதையும் குறிப்பிட்டார். (ஏசாயா 13:1-17; 21:2-9; 44:24–45:7, 13) இது மேதிய-பெர்சிய ராஜ்யம். ஒரு பெரும் நாகரிகமாக உருவெடுத்த மேதிய-பெர்சியா, பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு சளைக்காதபோதிலும் பொன்னினும் சற்று மதிப்பு குறைந்த உலோகத்தால் அதன் ராஜ்யம் அடையாளப்படுத்தப்பட்டது. அது பாபிலோனிய உலக வல்லரசைவிட குறைந்த மதிப்புள்ளதாக காட்டப்படுவதற்கு காரணம், எருசலேமை தலைநகராகக்கொண்ட, கடவுளுடைய மாதிரி ராஜ்யமான யூதாவைக் கவிழ்க்கும் சிறப்பை அது பெறாததே.

11இந்தக் கனவிற்கு அர்த்தமளித்து சுமார் 60 வருடங்களுக்குப் பிற்பாடு, நேபுகாத்நேச்சாரின் ராஜ வம்சம் முடிவுக்கு வந்ததை தானியேல் கண்கூடாக பார்த்தார். பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6-⁠ன் இரவில், மேதிய-பெர்சிய படை, வெல்லமுடியாததாய் தோன்றிய பாபிலோனை வீழ்த்தி பெல்ஷாத்சார் ராஜாவை கொன்றபோது தானியேல் அங்கிருந்தார். பெல்ஷாத்சார் இறந்தபோது அந்தக் கனவு சிலையின் பொன்னாலான தலை, அதாவது பாபிலோனிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

நாடுகடத்தப்பட்ட மக்களை விடுவிக்கும் ராஜ்யம்

12பொ.ச.மு. 539-⁠ல் உலக மகா வல்லரசாக திகழ்ந்த பாபிலோனின் இடத்தைப் பிடித்தது மேதிய-பெர்சியா. 62-வது வயதில், மேதியனாகிய தரியு, கைப்பற்றப்பட்ட பாபிலோன் நகரின் முதல் ஆட்சியாளரானார். (தானியேல் 5:30, 31) கொஞ்ச காலத்திற்கு, அவரும் பெர்சியனாகிய கோரேசும் ஒன்றுசேர்ந்து மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தை ஆண்டனர். தரியு இறந்தபோது, கோரேசு பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஒரே அரசரானார். பாபிலோனிலிருந்த யூதர்களுக்கு, கோரேசின் ஆட்சி, சிறையிருப்பிலிருந்து விடுதலை பெறுவதை அர்த்தப்படுத்தியது. பொ.ச.மு. 537-⁠ல் கோரேசு ஒரு தீர்ப்பாணை வழங்கினார். அதன்படி, பாபிலோனிலிருந்த நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்கள் தாயகத்திற்கே திரும்பி, எருசலேமையும் யெகோவாவின் ஆலயத்தையும் மறுபடியும் கட்ட அனுமதி வழங்கினார். ஆயினும் கடவுளுடைய மாதிரி ராஜ்யம் யூதாவிலும் எருசலேமிலும் மீண்டும் நிலைநாட்டப்படவில்லை.​—2 நாளாகமம் 36:22, 23; எஸ்றா 1:1–2:2அ.

13சொப்பனத்துச் சிலையின் வெள்ளி மார்பும் புயங்களும், மகா கோரேசு முதலான பெர்சிய ராஜாக்களை அடையாளப்படுத்தின. இந்த ராஜ வம்சம் 200-⁠க்கும் அதிக வருடங்கள் நீடித்தது. பொ.ச.மு. 530-⁠ல் ஒரு படையெடுப்பில் கோரேசு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவருக்குப்பின் சுமார் 12 ராஜாக்கள் பெர்சிய அரியணையில் ஏறினர். அவர்களில் குறைந்தபட்சம் இருவராவது, யெகோவாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை நன்கு நடத்தினர். அதில் ஒருவர் முதலாம் தரியு (பெர்சியர்), மற்றொருவர் முதலாம் அர்தசஷ்டா.

14மகா கோரேசுக்குப் பின் மூன்றாவதாக பெர்சிய அரியணையில் ஏறியவர் முதலாம் தரியு. இவருக்கு முன் அரசாண்டவர்கள் இரண்டாம் காம்பைஸஸ், அவர் சகோதரரான பார்டியா (அல்லது ஒருவேளை ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த, அரசகுலத்தில் தோன்றாத கௌமதா என்பவர்) ஆகியோரே. மகா தரியு என்றும் அழைக்கப்படும் முதலாம் தரியு பொ.ச.மு. 521-⁠ல் அரசரானபோது, எருசலேமில் ஆலயத்தை திரும்பக் கட்டும் பணி தடைசெய்யப்பட்டிருந்தது. கோரேசின் தீர்ப்பாணை பத்திரத்தை அக்மேதா ஆவணகாப்பகத்தில் கண்டெடுத்த தரியு, பொ.ச.மு. 520-⁠ல் தடையை நீக்கினார். அதுமட்டுமல்லாமல் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக ராஜாவின் கஜானாவிலிருந்து நன்கொடைகளையும் வழங்கினார்.​—எஸ்றா 6:1-12.

15உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு உதவிய மற்றொரு பெர்சிய அரசர், முதலாம் அர்தசஷ்டா. இவர் பொ.ச.மு. 475-⁠ல், தன் தகப்பனான அகாஸ்வேரு (முதலாம் சஷ்டா)-⁠க்கு அடுத்ததாக அரியணைக்கு வந்தார். அர்தசஷ்டாவின் வலது கை இடது கையைவிட நீளமாக இருந்ததால் அவருக்கு லாங்கிமானஸ் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தின் 20-ஆம் ஆண்டில், அதாவது பொ.ச.மு. 455-⁠ல், தனது பானபாத்திரக்காரரான நெகேமியாவை யூதாவின் ஆளுநராக்கி, எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்ட ஆணையிட்டார். இது தானியேல் 9-வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘எழுபது வார-வருடங்களின்’ ஆரம்பத்தைக் குறித்தது. மேசியா அல்லது கிறிஸ்துவாகிய நசரேயரான இயேசுவின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அது தேதிகளை நிர்ணயித்தது.​—தானியேல் 9:24-27; நெகேமியா 1:1; 2:1-18.

16முதலாம் அர்தசஷ்டாவுக்கு அடுத்து பெர்சிய சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆறு அரசர்களில் கடைசியானவர் மூன்றாம் தரியு. அவரது ஆட்சி பொ.ச.மு. 331-⁠ல் திடீரென முடிவுக்கு வந்தது. அவ்வருடம் பூர்வ நினிவேயிற்கு அருகே அமைந்த கௌகமெலாவில் மகா அலெக்ஸாந்தரிடம் அவர் படுதோல்வி அடைந்தார். இவ்வாறு நேபுகாத்நேச்சாரின் கனவு சிலையின் வெள்ளி பாகம் அடையாளப்படுத்திய மேதிய-பெர்சிய உலக வல்லரசு முடிவுக்கு வந்தது. அடுத்து வரவிருந்த வல்லரசு சில விதங்களில் மேலானதாய் இருந்தது, மற்ற விதங்களில் தரம் குறைந்திருந்தது. நேபுகாத்நேச்சார் கண்ட கனவுக்கு தானியேல் கூடுதலாய் தந்த விளக்கத்தைப் படிக்கையில் இது தெளிவாகிறது.

ராஜ்யம் அளவில் பெரிது, தரத்தில் சிறிது

17அந்த மாபெரும் சிலையின் வயிறும் தொடையும் ‘வேறொரு ராஜ்யம், . . . பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான [“செம்பினாலான,” NW] மூன்றாம் ராஜ்யம்’ என தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் சொன்னார். (தானியேல் 2:32, 39) இம்மூன்றாம் ராஜ்யம் பாபிலோனியாவுக்கும் மேதிய-பெர்சியாவுக்கும் அடுத்ததாய் தோன்றவிருந்தது. செம்பு வெள்ளியைவிட தரம் குறைந்ததுபோல், இப்புதிய உலக வல்லரசு மேதிய-பெர்சியாவைவிட தரம் குறைந்ததாய் இருக்கும். அதாவது, யெகோவாவின் மக்களை விடுவிப்பது போன்ற எந்த சிலாக்கியத்தாலும் அது மகிமை பெறாது. இருந்தாலும் செம்பு போன்ற இந்த ராஜ்யம் “பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும்.” அப்படியென்றால், இது பாபிலோனியாவையும் மேதிய-பெர்சியாவையும்விட பரந்த சாம்ராஜ்யமாயிருக்கும். இந்த உலக வல்லரசைப் பற்றி சரித்திர உண்மைகள் என்ன காட்டுகின்றன?

18பொ.ச.மு. 336-⁠ல் 20 வயதான மூன்றாம் அலெக்ஸாந்தர் மக்கெதோனிய அரியணையில் ஏறினார். கொஞ்ச காலத்திலேயே, பேருக்கும் புகழுக்கும் தணியாத தாகங்கொண்டு மற்ற நாடுகளின் அதிகார பீடத்தையும் கைப்பற்ற யுத்த களத்தில் இறங்கினார். அவர் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததால் மகா அலெக்ஸாந்தர் என அழைக்கப்படலானார். ஒவ்வொரு நாடாக கைப்பற்றி, பெர்சிய எல்லைக்குள் நுழைந்தார். பொ.ச.மு. 331-⁠ல் கௌகமெலாவில் நடந்த யுத்தத்தில் மூன்றாம் தரியுவை அவர் தோற்கடித்தபோது பெர்சிய சாம்ராஜ்யம் வீழ்ந்தது. கிரீஸை புதிய உலக வல்லரசாக்கினார் அலெக்ஸாந்தர்.

19கௌகமெலாவில் வெற்றி கண்ட பிறகு, பெர்சிய தலைநகரங்களான பாபிலோன், சூஸா, பர்செபலஸ், அக்மேதா ஆகியவற்றை அலெக்ஸாந்தர் கைப்பற்றினார். பெர்சிய சாம்ராஜ்யத்தின் மற்ற பகுதிகளையும் தனக்குக் கீழ்ப்படுத்தி, மேற்கிந்திய பகுதிகளை வென்றார். கைப்பற்றிய நாடுகளெங்கும் கிரேக்க குடியிருப்புகளை ஏற்படுத்தினார். இவ்வாறு கிரேக்க மொழியும் கலாச்சாரமும் பேரரசு முழுவதும் பரவின. சொல்லப்போனால் கிரேக்க சாம்ராஜ்யம் அதற்கு முந்திய எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தோங்கியது. தானியேல் முன்னறிவித்த பிரகாரமாகவே, இந்த செம்பு ராஜ்யம் ‘பூமியையெல்லாம் ஆண்டது.’ இதன் விளைவுகளில் ஒன்று, கிரேக்க மொழி (கொய்னி) சர்வதேச மொழியானது. கருத்துக்களை திருத்தமாக தெரிவிக்கும் திறன்படைத்த இம்மொழி, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதவும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்பவும் மிக ஏற்றதாக இருந்தது.

20மகா அலெக்ஸாந்தர் வெறுமனே எட்டு வருடங்களே உலகப் பேரரசராய் வாழ்ந்தார். 32 வயதே ஆன அலெக்ஸாந்தர் ஒரு விருந்திற்குப்பின் நோயுற்றார். அதன்பின் கொஞ்ச நாட்களுக்குள், பொ.ச.மு. 323, ஜூன் 13 அன்று இறந்தார். காலப்போக்கில், அவரது பேரரசு நான்காக பிரிந்தது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளபதியால் ஆளப்பட்டது. இவ்வாறு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திலிருந்து நான்கு ராஜ்யங்கள் உருவாயின, கடைசியில் ரோம சாம்ராஜ்யம் அவற்றை வென்றது. செம்புபோன்ற உலக வல்லரசு பொ.ச.மு. 30 வரைக்கும்தான் நீடித்தது. அவ்வாண்டில், இந்த நான்கில் கடைசி ராஜ்யம்​—⁠எகிப்தை ஆண்ட தாலமிய ராஜ வம்சம்​—⁠இறுதியில் ரோமின் வலையில் சிக்கியது.

நொறுக்கி சின்னாபின்னமாக்கும் ராஜ்யம்

21சொப்பனத்து சிலையைப் பற்றி தானியேல் தொடர்ந்து விளக்கினார்: ‘நாலாவது ராஜ்யம் [பாபிலோனுக்கும் மேதிய-பெர்சியாவுக்கும் கிரீஸுக்கும் பின்வந்த ராஜ்யம்] இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னாபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.’ (தானியேல் 2:40) பலத்திலும் நொறுக்கும் திறனிலும் இந்த உலக வல்லரசு இரும்பைப்போலிருக்கும். பொன், வெள்ளி, செம்புபோன்ற சாம்ராஜ்யங்களையெல்லாம் மிஞ்சிவிடும். ரோம சாம்ராஜ்யம் அப்படித்தான் திகழ்ந்தது.

22ரோம், கிரேக்க சாம்ராஜ்யத்தை நொறுக்கி சின்னாபின்னமாக்கியது. மேதிய-பெர்சிய, பாபிலோனிய உலக வல்லரசுகளின் மீதமுள்ள பகுதிகளை விழுங்கியது. இயேசு கிறிஸ்து அறிவித்த கடவுளுடைய ராஜ்யத்திற்கு எந்த மதிப்பும் காட்டாமல், பொ.ச. 33-⁠ல் இயேசுவை கழுமரத்தில் அறைந்தது. உண்மைக் கிறிஸ்தவத்தை சின்னாபின்னமாக்க ரோமர்கள் இயேசுவின் சீஷர்களை துன்புறுத்தினர். மேலும் பொ.ச. 70-⁠ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்தார்கள்.

23நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்து சிலையினுடைய இரும்பு கால்கள் ரோம சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல அதிலிருந்து தோன்றவிருந்த அரசியல் அமைப்பையும் படம்பிடித்துக் காட்டின. வெளிப்படுத்துதல் 17:10-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இவ்வார்த்தைகளை கவனியுங்கள்: “அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.” அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வார்த்தைகளை எழுதியபோது, பத்மு தீவிலே ரோமர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தார். விழுந்துவிட்ட ஐந்து ராஜாக்கள், அல்லது உலக வல்லரசுகள், எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ் ஆகியவையே. ஆறாவதான ரோம சாம்ராஜ்யம் அப்போது உலக வல்லரசாக வீற்றிருந்தது. ஆனால் அதுவும் விழவிருந்தது. ஏழாவது ராஜா, ரோமால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்தே தோன்றுவார். அது எந்த உலக வல்லரசு?

24பிரிட்டன் ஒருகாலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் வடமேற்கு பகுதியில் இருந்தது. ஆனால் 1763-⁠ல் பிரிட்டானியா என்ற பிரிட்டிஷ் பேரரசாய் உருவான இது, ஏழு கடல்களை ஆண்டது. 1776-⁠ல் அதன் 13 அமெரிக்க குடியிருப்புகள் சுதந்திரம் பெற, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் உருவானது. இருந்தாலும் பிற்பாடு பிரிட்டனும் ஐக்கிய மாகாணங்களும் கூட்டாட்சி அமைத்து, மற்ற நாடுகளோடு சண்டையிடுவதிலும்சரி சமாதானம் செய்வதிலும்சரி கைகோர்த்தன. இவ்வாறு, ஆங்கிலோ-அமெரிக்க கூட்டாட்சி பைபிள் தீர்க்கதரிசனத்தின் ஏழாவது உலக வல்லரசானது. ரோம சாம்ராஜ்யத்தைப்போலவே, இதுவும் ‘இரும்பைப்போல உரமாய்’ இருந்திருக்கிறது, அதாவது இரும்புபோன்ற அதிகாரம் செலுத்தியிருக்கிறது. ஆகவே சொப்பனத்து சிலையின் இரும்பு கால்கள் ரோம சாம்ராஜ்யத்தையும் ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசையும் உள்ளடக்குகின்றன.

ஒட்டிக்கொள்ளாத கலவை

25அடுத்ததாக தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறினதாவது: “பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும். நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.”​—தானியேல் 2:41-43.

26நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்து சிலையில், ஒன்றன்பின் ஒன்றாக வரவிருந்த உலக வல்லரசுகளை அடையாளப்படுத்திக் காட்டிய வெவ்வேறு பாகங்கள் தலையிலிருந்து ஆரம்பித்து பாதங்களில் முடிந்தன. ஆகவே ‘களிமண்ணோடே இரும்பு கலந்த’ பாதங்களும் கால்விரல்களும், ‘முடிவு காலத்தில்’ செயல்படும் இறுதிக்கட்ட மனித ஆட்சியைக் குறிக்கும்.​—தானியேல் 12:⁠4.

27இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் பேரரசு கால் பங்குக்கும் அதிகமான உலக மக்களை ஆண்டது. இன்னும் பல லட்சக்கணக்கானோரை மற்ற ஐரோப்பிய பேரரசுகள் ஆண்டன. ஆனால் முதல் உலகப் போருக்குப் பின் சாம்ராஜ்யங்களுக்குப் பதிலாக பல தேசங்கள் உருவாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தப் போக்கு தீவிரமானது. தேசாபிமானம் வளர வளர, உலகெங்கும் தேசங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. சிலையின் பத்து கால்விரல்கள் இப்படிப்பட்ட அனைத்து சமகாலத்திய அதிகாரங்களையும் அரசாங்கங்களையும் குறிக்கின்றன. ஏனென்றால் பைபிளில் சிலசமயம், பத்து என்ற எண் பூமிக்குரிய முழுமையைக் குறிக்கிறது.​—⁠ஒப்பிடுக: யாத்திராகமம் 34:28; மத்தேயு 25:1; வெளிப்படுத்துதல் 2:⁠10.

28நாம் இப்போது ‘முடிவுகாலத்தில்’ வாழ்வதால், சிலையின் பாதங்களுக்கு வந்துவிட்டோம். களிமண்ணும் இரும்பும் கலந்த சிலையின் பாதங்களும் கால்விரல்களும் அடையாளப்படுத்தும் அரசாங்கங்களில் சில இரும்புபோன்று இருக்கின்றன. இதற்கு உதாரணம், எதேச்சாதிகார அல்லது கொடுங்கோன்மை அரசுகள். மற்றவை களிமண் போன்றவை. எந்த அர்த்தத்தில்? களிமண்ணை ‘மனித வம்சமாக’ குறிப்பிட்டுப் பேசினார் தானியேல். (தானியேல் 2:43, NW) மனித வம்சம், வலுவற்ற களிமண்ணால் ஆனது. என்றாலும், காலாகாலமாக இருந்துவந்திருக்கும் இரும்புபோன்ற ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு செவிகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். தங்களை ஆளும் அரசுகள் தங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டுமென விரும்புகிறார்கள் பொதுமக்கள். (யோபு 10:9) இரும்போடு களிமண் கலக்க முடியாததுபோலவே கொடுங்கோன்மையோடு பொதுமக்கள் ஒன்றுபடுவதும் முடியாத காரியம். சிலை நொறுங்கும் சமயம், உலகம் அரசியல்ரீதியில் பிளவுபட்டிருக்கப்போவது உறுதி!

29பாதங்களும் கால்விரல்களும் இவ்வாறு பிளவுபட்டிருப்பதால் முழு சிலையும் நொறுங்கி விழுமா? அதற்கு என்ன நேரிடும்?

பரபரப்பூட்டும் உச்சக்கட்டம்!

30சொப்பனத்தின் உச்சக்கட்டத்தை கவனியுங்கள். ராஜாவிடம் தானியேல் இப்படிச் சொன்னார்: “நீர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் [“செம்பும்,” NW] வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.”​—தானியேல் 2:34, 35.

31தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சி இதற்கு விளக்கமளித்தது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் [“செம்பையும்,” NW] களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்.”​—தானியேல் 2:44, 45.

32தான் கண்ட கனவும் அதன் அர்த்தமும் விளக்கப்பட்டதை போற்றிய நேபுகாத்நேச்சார், தானியேலின் கடவுள் மட்டுமே “ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார்” என ஒப்புக்கொண்டார். அவர் தானியேலையும் அவரது மூன்று எபிரெய நண்பர்களையும் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். (தானியேல் 2:46-49) தானியேல் தந்த ‘அர்த்தம் சத்தியம்’ என்றாலும் இந்நாளில் அது எதைக் குறிக்கிறது?

‘பெரிய பர்வதம் ஒன்று பூமியை நிரப்புகிறது’

33அக்டோபர் 1914-⁠ல் ‘புறஜாதியாரின் காலம்’ முடிவடைந்தபோது, ‘பரலோகத்தின் தேவன்’ தம் பரலோக ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அபிஷேகம் செய்யப்பட்ட தம் குமாரனான இயேசு கிறிஸ்துவை அப்போது ‘ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும்’ முடிசூட்டினார்.  a (லூக்கா 21:24; வெளிப்படுத்துதல் 12:1-5; 19:16) ஆகவே மனித கரங்களால் அல்ல, ஆனால் தெய்வீக சக்தியால் மேசியானிய ராஜ்யமென்ற “கல்,” யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையென்ற ‘மலையிலிருந்து’ பெயர்க்கப்பட்டது. இந்தப் பரலோக அரசாங்கம் இயேசு கிறிஸ்துவின் கைகளில் உள்ளது. கடவுள் அவருக்கு சாவாமையை அருளியுள்ளார். (ரோமர் 6:9; 1 தீமோத்தேயு 6:15, 16) ஆகவே, ‘நம்முடைய கர்த்தருக்கும் [கடவுளுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யம்’​—⁠யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையின் வெளிக்காட்டு​—⁠வேறு எவர் கையிலும் ஒப்படைக்கப்படாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும்.​—வெளிப்படுத்துதல் 11:⁠15.

34“அந்த ராஜாக்களின் நாட்களிலே” ராஜ்யம் பிறந்தது. (தானியேல் 2:44) அந்த ராஜாக்கள் என்ற பதம், சிலையின் பத்து கால்விரல்கள் அடையாளப்படுத்திய ராஜாக்களை மட்டுமல்ல, இரும்பு, செம்பு, வெள்ளி, பொன் போன்ற ராஜாக்களையும் குறித்தது. 1914-⁠ல் பாபிலோனிய, பெர்சிய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்கள் உலக வல்லரசுகளாக இல்லாதபோதிலும், அந்த ராஜ்யங்களின் சிறு பகுதிகள் இன்னும் மீந்திருந்தன. ஒட்டோமன் துருக்கிய பேரரசு பாபிலோனியாவை கைப்பற்றியிருந்தது. பெர்சியா (ஈரான்), கிரீஸ், இத்தாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களில் கூட்டணி அரசுகள் செயல்பட்டுவந்தன.

35இந்த அடையாளப்பூர்வ சிலையின் பாதங்களில் கடவுளுடைய பரலோக ராஜ்யம் விரைவில் மோதும். உலோகச் சிலை அடையாளப்படுத்தும் எல்லா ராஜ்யங்களையும் அது நொறுக்கித்தள்ளும். சொல்லப்போனால், ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தில்’ அந்தக் “கல்” சிலையை அவ்வளவு பலமாக மோதுவதால் சிலை சுக்கு நூறாக நொறுங்கி தவிடுபொடியாகிவிடும். போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகும் பதரைப்போல் கடவுள் அனுப்பும் சூறைக்காற்றில் அவை அடித்துக்கொண்டு போகப்படும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அதன்பின் அந்தக் கல் ஒரு பர்வதமாகி பூமியை நிரப்பியதுபோல், கடவுளுடைய ராஜ்யம், “பூமியையெல்லாம்” ஆளும் அரசாங்க-பர்வதமாகும்.​—தானியேல் 2:⁠35.

36மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் இருந்தாலும், பூமியெங்கும் அதிகாரம் செலுத்தும். பூமியிலுள்ள கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைப் பொழியும். இந்த நிலையான அரசாங்கம், ‘என்றென்றைக்கும் அழியாது,’ ‘வேறே ஜனத்துக்கும் விடப்படாது.’ சாவைத் தவிர்க்க முடியாத மனித ஆட்சியாளர்களின் ராஜ்யத்தைப் போலிராமல், அது “என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) அந்த ராஜ்யத்தின் குடிமக( )னாகும் நல்வாய்ப்பை நீங்களும் பெறுவீர்களாக!

[அடிக்குறிப்புகள்]

a இப்புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தைக் காண்க.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட மாபெரும் சிலையின் வெவ்வேறு பாகங்கள் அடையாளப்படுத்தும் உலக வல்லரசுகள் யாவை?

• இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களும் கால்விரல்களும் என்ன உலக நிலையை அடையாளப்படுத்துகின்றன?

• எப்போது, எந்த ‘மலையிலிருந்து’ அந்தக் “கல்” பெயர்க்கப்பட்டது?

• எப்போது அந்தக் “கல்” சிலைமீது மோதும்?

[கேள்விகள்]

1. ராஜா நேபுகாத்நேச்சார், தானியேலையும் மற்றவர்களையும் சிறைப்பிடித்துச் சென்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலையை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

2. நேபுகாத்நேச்சார் எப்போது தனது முதல் தீர்க்கதரிசன சொப்பனங்கண்டார்?

3. ராஜாவின் கனவை எவரால் விளக்க முடியவில்லை, இதனால் நேபுகாத்நேச்சார் செய்ததென்ன?

4. (அ) நேபுகாத்நேச்சாரின் கனவையும் அதன் அர்த்தத்தையும் தானியேல் எவ்வாறு தெரிந்துகொண்டார்? (ஆ) யெகோவா தேவனுக்கு தானியேல் எவ்வாறு நன்றிசொன்னார்?

5. (அ) ராஜாவின் முன்னிலையில் தானியேல் எவ்வாறு யெகோவாவிற்கு புகழ்சேர்த்தார்? (ஆ) தானியேல் தந்த விளக்கம் நமக்கு ஏன் அக்கறைக்குரியது?

6, 7. ராஜா கண்ட சொப்பனமென தானியேல் சொன்னது என்ன?

8. (அ) பொன்னான தலை யார் அல்லது எது என தானியேல் விளக்கினார்? (ஆ) பொன்னான தலை தோன்றியது எப்போது?

9. பொன்னான தலை எதை அடையாளப்படுத்தியது?

10. (அ) பாபிலோனிய உலக வல்லரசு நீடிக்காது என்பதை நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் எவ்வாறு காட்டியது? (ஆ) பாபிலோனைக் கைப்பற்ற போகிறவரைப் பற்றி தீர்க்கதரிசியாகிய ஏசாயா என்ன சொன்னார்? (இ) எந்த விதத்தில் மேதிய-பெர்சியா பாபிலோனைவிட குறைந்த மதிப்புள்ளதாய் இருந்தது?

11. நேபுகாத்நேச்சாரின் ராஜ வம்சம் எப்போது முடிவுக்கு வந்தது?

12. பொ.ச.மு. 537-⁠ல் கோரேசு வழங்கிய தீர்ப்பாணை எவ்வாறு நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு பயனளித்தது?

13. நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்துச் சிலையின் வெள்ளி மார்பும் புயங்களும் எதை அடையாளப்படுத்தின?

14, 15. மகா தரியுவும் முதலாம் அர்தசஷ்டாவும் யூதர்களுக்கு எவ்வாறு உதவியளித்தார்கள்?

16. மேதிய-பெர்சிய உலக வல்லரசு எப்போது முடிவுக்கு வந்தது, அதன் கடைசி அரசர் யார்?

17-19. (அ) செம்பு வயிறும் தொடைகளும் எந்த உலக வல்லரசை அடையாளப்படுத்தின, அதன் ஆட்சி எவ்வளவு விஸ்தாரமாயிருந்தது? (ஆ) மூன்றாம் அலெக்ஸாந்தர் யார்? (இ) எவ்வாறு கிரேக்க மொழி சர்வதேச மொழியானது, அது எதற்கு மிக ஏற்றதாக இருந்தது?

20. மகா அலெக்ஸாந்தரின் மரணத்திற்குப் பிறகு கிரேக்க சாம்ராஜ்யம் என்னவாயிற்று?

21. ‘நாலாவது ராஜ்யத்தை’ தானியேல் எவ்வாறு விவரித்தார்?

22. ரோம சாம்ராஜ்யம் எவ்வாறு இரும்புபோன்று இருந்தது?

23, 24. சிலையின் கால்கள் ரோம சாம்ராஜ்யத்தை மட்டுமல்லாமல் வேறெதையும் அடையாளப்படுத்துகின்றன?

25. சிலையின் பாதங்களையும் கால்விரல்களையும் பற்றி தானியேல் என்ன சொன்னார்?

26. பாதங்களும் கால்விரல்களும் அடையாளப்படுத்திய வல்லரசு எப்போது தோன்றவிருந்தது?

27. (அ) இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களும் கால்விரல்களும் என்ன உலக நிலையை அடையாளப்படுத்துகின்றன? (ஆ) சிலையின் பத்து கால்விரல்கள் எதை அடையாளப்படுத்துகின்றன?

28, 29. (அ) தானியேலின்படி, களிமண் எதை அர்த்தப்படுத்தியது? (ஆ) இரும்பும் களிமண்ணும் சேர்ந்த கலவையைப் பற்றி என்ன சொல்லலாம்?

30. நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தினுடைய உச்சக்கட்டத்தை விளக்குக.

31, 32. நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தின் இறுதி பாகத்தைக் குறித்து என்ன முன்னறிவிக்கப்பட்டது?

33. எந்த ‘மலையிலிருந்து’ அந்தக் “கல்” பெயர்க்கப்பட்டது? எப்போது, எப்படி அது நடந்தது?

34. “அந்த ராஜாக்களின் நாட்களிலே” ராஜ்யம் பிறந்தது எப்படி?

35. அந்தக் “கல்” சிலையை எப்போது மோதும், சிலை எந்தளவுக்கு முழுமையாய் தகர்த்தெறியும்?

36. மேசியானிய ராஜ்யத்தை நிலையான அரசாங்கமென ஏன் சொல்லலாம்?

[பக்கம் 63-67-ன் பெட்டி/படங்கள்]

ராஜவீரர் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்

பாபிலோனின் பட்டத்து இளவரசரும் அவரது படையினரும் சிரியாவிலுள்ள கர்கேமிசுவில் பார்வோன் நேகோவின் எகிப்திய சேனைகளை வீழ்த்துகின்றனர். தோல்விகண்ட எகிப்தியர்கள் தெற்கே எகிப்தை நோக்கி தப்பி ஓடுகின்றனர், பாபிலோனியர்கள் அவர்களைத் துரத்திச்செல்கின்றனர். ஆனால் ஜெயங்கொண்ட இளவரசருக்கு பாபிலோனிலிருந்து ஒரு செய்தி வர, எகிப்தியர்களைப் பின்தொடருவதை விட்டுவிடுகிறார். அவரது தகப்பன் நபோபொலாசார் இறந்த செய்திதான் அது. எகிப்தியர்களை சிறைப்பிடித்து, சூறையாடிய பொருட்களை கொண்டுவரும் பொறுப்பை தனது தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நேபுகாத்நேச்சார் உடனடியாக நாடு திரும்பி, தகப்பனின் அரியணையில் ஏறுகிறார்.

இவ்வாறு பொ.ச.மு. 624-⁠ல் நேபுகாத்நேச்சார் பாபிலோனிய ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து, பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் அரசரானார். அவரது 43 வருட ஆட்சியின்போது, ஒருகாலத்தில் அசீரிய உலக வல்லரசின் பிடியிலிருந்த பகுதிகளைக் கைப்பற்றி, வடக்கே சிரியாவையும் மேற்கே பலஸ்தீனாவையும் வென்று எகிப்தின் எல்லை வரையாக தன் பேரரசை விஸ்தரித்தார்.​—⁠வரைபடத்தைக் காண்க.

அவரது ஆட்சியின் நான்காம் வருடத்தில் (பொ.ச.மு. 620), நேபுகாத்நேச்சார் யூதாவை தனது அடிமை நாடாக்கினார். (2 இராஜாக்கள் 24:⁠1) மூன்று வருடங்களுக்குப் பிற்பாடு, யூதர்கள் கலகம் செய்ததால் எருசலேமை பாபிலோன் முற்றுகையிட்டது. யோயாக்கீனையும் தானியேலையும் மற்றவர்களையும் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் சென்றார். யெகோவாவின் ஆலய பாத்திரங்கள் சிலவற்றையும் ராஜா சூறையாடிச்சென்றார். யோயாக்கீனின் சிறிய தகப்பனான சிதேக்கியாவை யூதாவின் சிற்றரசராக்கினார்.​—⁠2 இராஜாக்கள் 24:2-17; தானியேல் 1:6, 7.

சிறிது காலத்திற்குப் பிறகு, சிதேக்கியாவும் எகிப்தியர்களோடு கூட்டுசேர்ந்துகொண்டு கலகம் செய்தார். நேபுகாத்நேச்சார் மறுபடியும் எருசலேமை முற்றுகையிட்டார். பொ.ச.மு. 607-⁠ல் அவர் மதிலை உடைத்து, ஆலயத்தைக் கொளுத்தி, நகரை அழித்தார். சிதேக்கியாவின் மகன்கள் எல்லாரையும் கொன்றுபோட்டு, அவரையும் குருடாக்கி, விலங்கிட்டு, பாபிலோனுக்கு கைதியாக இழுத்துச்சென்றார். பெரும்பான்மையரை நேபுகாத்நேச்சார் சிறைப்பிடித்துச் சென்றார். மீதமிருந்த ஆலய பாத்திரங்களையும் பாபிலோனுக்குக் கொண்டுசென்றார். இவ்வாறு “யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.”​—⁠2 இராஜாக்கள் 24:18–25:⁠21.

நேபுகாத்நேச்சார் தீருவை 13 வருடங்கள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். முற்றுகையின்போது வீரர்களின் தலை, கவசத்தால் உரசப்பட்டு “மொட்டையாயிற்று,” முற்றுகை சுவரெழுப்புவதற்காக கட்டுமானப் பொருட்களை சுமந்து சுமந்து அவர்களது தோள்பட்டையின் “தோலும் உரிந்துபோயிற்று.” (எசேக்கியேல் 29:18) இறுதியில் பாபிலோனிய படையிடம் தீரு சரணடைந்தது.

பாபிலோனிய ராஜா, போர்த் தந்திரங்களைக் கையாளுவதில் வல்லவர் என்பதில் சந்தேகமில்லை. சில சரித்திர புத்தகங்கள், முக்கியமாய் பாபிலோனிய புத்தகங்கள், அவரை நியாயம் காக்கும் அரசரென விவரிக்கின்றன. அவர் நியாயமுள்ளவர் என வேதவசனங்கள் இவ்வளவு குறிப்பாக சொல்லுவதில்லை. அதேசமயம், சிதேக்கியா கலகம் செய்தாலும் ‘பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போனால்’ நியாயமாய் நடத்தப்படுவாரென தீர்க்கதரிசியாகிய எரேமியா சொன்னார். (எரேமியா 38:17, 18) எருசலேமின் அழிவிற்குப் பிறகு நேபுகாத்நேச்சார் எரேமியாவை மரியாதையோடு நடத்தினார். அவரைக் குறித்து ராஜா இட்ட கட்டளையாவது: ‘அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து.’​—⁠எரேமியா 39:11, 12; 40:1-4.

சிறந்த நிர்வாகியான நேபுகாத்நேச்சார், தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ​—⁠எபிரெயுவில், அனனியா, மீஷாவேல், அசரியா​—⁠ஆகியோரின் குணங்களையும் திறமைகளையும் சட்டென்று புரிந்துகொண்டார். ஆகவே ராஜா அவர்களைப் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்தினார்.​—⁠தானியேல் 1:6, 7, 19-21; 2:⁠49.

நேபுகாத்நேச்சார் பாபிலோனின் முக்கிய கடவுளாகிய மார்டுக்கின் தீவிர பக்தர். தனது எல்லா வெற்றிகளுக்குமான புகழாரத்தை இக்கடவுளுக்கே சூட்டினார். பாபிலோனில் மார்டுக்கிற்கும் மற்ற அநேக பாபிலோனிய தெய்வங்களுக்கும் ஆலயங்களைக் கட்டி, அவற்றை அழகுபடுத்தினார். தூரா சமவெளியில் அவர் நிறுத்திய பொற்சிலை மார்டுக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கலாம். போருக்கு செல்வதற்குமுன் குறி கேட்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததாய்த் தெரிகிறது.

பாபிலோனைப் புதுப்பித்ததைக் குறித்தும் நேபுகாத்நேச்சார் தற்பெருமை கொண்டார். அச்சமயத்தில் இதுவே மாபெரும் மதில்கள்கொண்ட ஒப்பற்ற நகரமாய் விளங்கியது. தன் தந்தை கட்ட ஆரம்பித்திருந்த மாபெரும் இரட்டை மதில்களைக் கட்டி முடிப்பதன் மூலம் நேபுகாத்நேச்சார் இத்தலைநகரை தகர்க்க முடியாததாய் தோன்றச் செய்தார். நகரின் மையத்தில் அமைந்திருந்த பழைய மாளிகை ஒன்றை புதுப்பித்து, வடக்கே சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் கோடைகால மாளிகையைக் கட்டினார். அவரது மேதிய ராணி தன் தாயகத்திலிருந்த குன்றுகளையும் காடுகளையும் நினைத்து ஏங்கியதால், அவளது ஆசைக்காக நேபுகாத்நேச்சார் தொங்கும் தோட்டத்தை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இது பண்டைய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று.

பாபிலோனிய அரண்மனையில் உலாவியவாறே, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என பெருமையாக சொல்லிக்கொண்டார் ராஜா. “இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே” அவர் பைத்தியமானார். தானியேல் முன்னுரைத்தபடியே, ஏழு வருடங்கள் அவர் ஆட்சி செய்ய தகுதியற்றவராய் புல்லைத் தின்றார். அந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு நேபுகாத்நேச்சார் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்றார். பொ.ச.மு. 582-⁠ல் இறக்கும்வரை ஆட்சிசெய்தார்.​—⁠தானியேல் 4:30-36.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

கீழ்க்கண்டவற்றில் நேபுகாத்நேச்சாரைப் பற்றி என்ன சொல்லலாம்

• போர்த் தந்திரத்தில்?

• நிர்வாகத்தில்?

• மார்டுக்கின் வணக்கத்தில்?

• கட்டடக் கலையில்?

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பாபிலோனிய சாம்ராஜ்யம்

செங்கடல்

எருசலேம்

ஐப்பிராத்து நதி

டைக்ரீஸ் நதி

நினிவே

சூஸா

பாபிலோன்

ஊர்

[படம்]

மாபெரும் மதில்கள்கொண்ட ஒப்பற்ற நகரமாய் விளங்கிய பாபிலோன்

[படம்]

மார்டுக்கின் சின்னமான டிராகன்

[படம்]

பாபிலோனின் புகழ்பெற்ற தொங்கும் தோட்டம்

[பக்கம் 56-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தானியேல் தீர்க்கதரிசனத்தின் உலக வல்லரசுகள்

மாபெரும் சிலை (தானியேல் 2:31-45)

பாபிலோனியா பொ.ச.மு. 607 முதற்கொண்டு

மேதிய-பெர்சியா பொ.ச.மு. 539 முதற்கொண்டு

கிரீஸ் பொ.ச.மு 331 முதற்கொண்டு

ரோம் பொ.ச.மு. 30 முதற்கொண்டு

ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு பொ.ச. 1763 முதற்கொண்டு

அரசியல்ரீதியாக பிளவுபட்ட உலகம் முடிவு காலத்தில்

[பக்கம் 47-ன் முழுபடம்]

[பக்கம் 58-ன் முழுபடம்]