Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 5

கடவுளை அறிதல்

கடவுளை அறிதல்

உங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், நம்பகமான ஒருவரிடம்தானே செல்வீர்கள்? நீங்கள் பூரணமாக நம்பும் ஒருவரிடமிருந்து ஆலோசனை கிடைத்தால், கைமேல் பலன் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் அதையே செய்ய விரும்புவீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பைபிள் தரும் நடைமுறையான ஆலோசனையிலிருந்து நீங்கள் உண்மையிலேயே பயனடைய வேண்டுமென்றால், அதன் நூலாசிரியரை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது நீங்கள் அவருடைய ‘நண்பராகவும்’ ஆகலாமே!—ஏசாயா 41:8, NW.

ஏசாயா புத்தகத்தின் எபிரெய வாக்கியத்தில் காணப்படும் தெய்வீக பெயர்

2 ஒருவரை உங்களுடைய நண்பராக்கிக்கொள்ள விரும்பினால், முதலில் அவருடைய பெயரைத் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். பைபிளின் கடவுளுக்கு பெயர் இருக்கிறதா? கடவுளே இவ்வாறு அறிவித்தார்: “நானே யெகோவா, என் நாமம் இதுவே; என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8, தி.மொ.) “யெகோவா” என்ற அவரது பெயர் எபிரெய மொழியில் יהוה (வலமிருந்து இடமாக வாசிக்கப்படுகிறது) என எழுதப்பட்டுள்ளது. பைபிளின் எபிரெய வேதாகமத்தில் இந்தப் பெயர் சுமார் 7,000 இடங்களில் காணப்படுகிறது. கடவுளுடைய இந்தப் பெயரின் அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்” என்பதாகும். அதாவது, தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தாம் என்னவாக ஆகவேண்டுமோ அவ்வாறெல்லாம் ஆகிறவர் என்பதையும் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தம்முடைய படைப்புகளை என்னவாக ஆகவைக்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் ஆகவைக்கிறார் என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, எபிரெய மொழியின் இலக்கணப்படி, செய்யப்பட்டுவரும் ஒரு செயலை அவருடைய பெயர் குறிக்கிறது. இதன் அர்த்தம் என்ன? யெகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றியிருக்கிறார், இன்னமும் நிறைவேற்றிவருகிறார் என்பதையே இது தெரிவிக்கிறது. அவர் உயிருள்ள கடவுள், உணர்ச்சியற்ற வெறும் ஒரு சக்தி அல்ல!

3 யெகோவா படைப்பாளரானார். (ஆதியாகமம் 1:1) அவரே ‘வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவன்.’ (அப்போஸ்தலர் 14:15) முதல் மனித ஜோடி ஆதாம் ஏவாள் உட்பட, அனைத்தையும் யெகோவா படைத்தார். இவ்வாறு கடவுள் ‘ஜீவஊற்றாக’ இருக்கிறார். (சங்கீதம் 36:9) அவர் உயிரை பேணிக் காப்பவராகவும் ஆனார். அதன் காரணமாகவே, “அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை.” (அப்போஸ்தலர் 14:17) ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள அநேகர், தங்கள் உயிருக்குக் காரணமான மூதாதையரை வழிபடுகிறார்கள். அப்படியானால், முதல் மனித ஜோடியை படைத்து பிள்ளைகளை பிறப்பிக்கும் திறமையை கொடுத்த படைப்பாளரும், உயிரை பேணிக் காப்பவருமானவருக்கு அவர்கள் எந்தளவுக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும்? இதை ஆழ்ந்து சிந்திப்பது உங்களையும் மகிழ்ச்சியோடு இவ்வாறு சொல்ல வைக்கலாம்: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.

4 பைபிளை படிப்பதால் உங்கள் படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவர் எப்படிப்பட்ட கடவுள் என்பதை கற்றுக்கொள்ளவும் முடியும். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் தெரிவிக்கிறது. (1 யோவான் 4:16; யாத்திராகமம் 34:6, 7) பைபிளை ஆதியாகம புத்தகத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை வாசிக்கையில், அவர் உண்மையிலேயே அன்புள்ள கடவுள் என்பதை எடுத்துரைக்கும் எண்ணற்ற பதிவுகளை காண்பீர்கள். உங்கள் படைப்பாளரை பற்றி நன்கு அறிவதற்கு தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதை ஏன் ஒரு பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது? பைபிள் விஷயங்களை நன்கு தெரிந்தவர்களின் உதவியோடு கவனமாக படியுங்கள். (அப்போஸ்தலர் 8:26-35) அவ்வாறு படிக்கும்போது, அவர் நீதியுள்ள கடவுள் என்பதையும் துன்மார்க்கத்தை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடமாட்டார் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். (உபாகமம் 32:4) அன்பையும் நியாயத்தையும் சமநிலைப்படுத்துவது மனிதனுக்கு எளிதல்ல. ஆனால் யெகோவா தம்முடைய ஞானத்தினால், அந்த குணங்களில் இம்மியும் பிசகாமல் சமநிலையை காத்துவருகிறார். (ரோமர் 11:33; 16:27) அவர் சர்வ வல்லமையுள்ள கடவுள், ஆகவே தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய அவரிடம் வல்லமை இருக்கிறது. (ஆதியாகமம் 17:1) பைபிள் தரும் ஞானமான அறிவுரைகளை கடைப்பிடிக்க முயலுங்கள். அப்போது, அவருடைய ஆலோசனைகள் யாவும் நம்முடைய நன்மைக்கே என்பதை உணர்ந்து உங்கள் படைப்பாளருக்கு இன்னும் அதிக நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.

ஜெபத்தில் நீங்களும் யெகோவாவிடம் நெருங்கி வரலாம்

5 கடவுளிடம் நெருங்கி வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுவே ஜெபம். யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2) “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” செய்ய அவரால் முடியும். (எபேசியர் 3:20) இருந்தாலும், தனக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் மட்டும் உங்களிடம் வரும் ஒரு ‘நண்பரைப்’ பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவரை ஒருவேளை உயர்வாக நினைக்க மாட்டீர்கள். அது போலவே, கடவுளிடம் ஜெபம் பண்ணும்போது உங்களுடைய தேவைகளை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவருக்கு நன்றியையும் துதியையும் செலுத்த விரும்புவீர்கள்.—பிலிப்பியர் 4:6, 7; 1 தெசலோனிக்கேயர் 5:17, 18.