Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 6

யெகோவா ஏன் நம்மை படைத்தார்?

யெகோவா ஏன் நம்மை படைத்தார்?

வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி சாலொமோன் அரசன் தீர ஆராய்ந்தார்

நீங்கள் யெகோவாவை அறிவதில் என்ன உட்பட்டிருக்கிறது? கோடிக்கணக்கான மக்களை குழப்பும் கேள்விக்கு, அதாவது ‘நான் ஏன் வாழ்கிறேன்?’ என்பதற்கு விடை காண்பது அதில் உட்பட்டிருக்கிறது. இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கலாம். தன்னுடைய காலத்தில் வாழ்ந்த “பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும்” சீமானாக விளங்கிய ஞானமுள்ள ஓர் அரசன் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய இந்தக் கேள்வியை தீர ஆராய்ந்தார். (2 நாளாகமம் 9:22; பிரசங்கி 2:1-13) சாலொமோன் என்ற இந்த அரசன் சகல அதிகாரத்தையும் பெற்றிருந்தார், செல்வச் செழிப்பில் மிதந்தார், ஞானத்தில் தன்னிகரற்று விளங்கினார். ஆனால் அவருடைய ஆராய்ச்சியின் முடிவுதான் என்ன? “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிரசங்கி 12:13) மற்றவர்களைவிட சாலொமோனுக்கு அதிக அனுபவம் இருப்பதால், அவர் கூறியதை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.—பிரசங்கி 2:12.

2 தேவனுக்குப் பயந்து என சாலொமோன் குறிப்பிடுவது அறிய முடியாத சக்தியின் மீது காட்டும் அச்சத்தை குறிக்கவில்லை. ஆனால் நாம் நேசிக்கும் ஒருவரை புண்படுத்திவிடக் கூடாது என்ற ஆரோக்கியமான பயத்தையே குறிக்கிறது. நீங்கள் ஒருவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிறீர்கள் என்றால், அவரை புண்படுத்தும் எதையும் செய்ய மாட்டீர்கள், எப்போதும் அவரை பிரியப்படுத்தவே விரும்புவீர்கள். யெகோவாவை நேசிக்கும் விஷயத்திலும் நீங்கள் இதுபோலவே உணர்வீர்கள்.

3 பைபிளை படிப்பதால் நம்முடைய படைப்பாளரின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்ளலாம். அவர் பூமியைப் படைத்ததன் நோக்கத்தையும் அறிந்துகொள்ளலாம். “பூமியைப் படைத்து உருவாக்கியவர்” என யெகோவாவை பைபிள் வர்ணிப்பதோடு, “அதை உறுதியாக ஸ்தாபித்தவர், அதை வெறுமையாய் இருக்க படைக்காமல் குடியிருப்புக்காக உருவமைத்தவர்” என்றும் அவரை அழைக்கிறது. (ஏசாயா 45:18, NW) மனிதர் இந்தப் பூமியில் வாழவே யெகோவா அதை தயார்படுத்தினார், பூமியையும் அதிலுள்ள எல்லா படைப்புகளையும் அவர்களே பராமரிக்க வேண்டும். (ஆதியாகமம் 1:28) அப்படியானால், மனிதரை யெகோவா படைத்தது இந்தப் பூமியை பராமரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தானா?

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுளுடன் அர்த்தமுள்ள உறவு இருந்தது

4 இல்லை, அதைவிட மிக உயர்ந்த நோக்கம் அவருக்கு இருந்தது. முதல் மனிதன் ஆதாம், யெகோவாவோடு அர்த்தமுள்ள உறவை வைத்திருந்தான். படைப்பாளரோடு அவனால் நேரடியாக பேச முடிந்தது. யெகோவா சொன்னதை செவிகொடுத்துக் கேட்கவும் தன்னுடைய எண்ணங்களை அவரிடம் தெரிவிக்கவும் முடிந்தது. (ஆதியாகமம் 1:28-30; 3:8-13, 16-19; அப்போஸ்தலர் 17:26-28) ஆகவே, ஆதாமும் அவனுடைய மனைவி ஏவாளும் யெகோவாவை நன்கு அறிந்து அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதற்கு அரிய வாய்ப்பைப் பெற்றனர். யெகோவாவை அறிந்து அவரை பின்பற்றுவது அவர்களுடைய வாழ்க்கையை திருப்தியாக்கியிருக்கும், ஏனெனில் அவர் ‘நித்தியானந்த தேவனாக’ இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) யெகோவா ‘நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளாக’ இருப்பதால், ஏதேன் தோட்டம் என்ற பரதீஸில் என்றென்றும் வாழும் நோக்கத்துடன் முதல் மனிதனை வைத்தார்.—1 தீமோத்தேயு 6:17, பொ.மொ.; ஆதியாகமம் 2:8, 9, 16, 17.

மனித செல்லைப் பற்றி நவீன ஆராய்ச்சிகள் குறிப்பிடுவதென்ன?

5 என்றென்றுமா? என்றென்றும் வாழலாம் என்ற எண்ணத்தை கேலிக்குரிய ஒன்றாக கருதி நீங்கள் அதை ஒதுக்கிவிடலாம், ஆனால் இது கேலிக்குரிய ஒன்றா? செல்கள் முதுமை அடைவதற்குரிய காரணங்களை இப்போது நன்கு அறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். குரோமசோம்களின் முனைகளில் அமைந்துள்ள டெலோமியர் எனும் மரபியல் பொருள், செல் பிரியும் ஒவ்வொரு சமயமும் குறுகிவிடுகிறது. 50 முதல் 100 செல் பிரிதலுக்குப்பின், இந்த டெலோமியர்கள் வலுவிழந்து விடுவதால் பெரும்பாலான செல்களின் பிரிவுறுதல் நின்றுவிடுகிறது. இருந்தாலும், டெலோமிரேஸ் என்ற என்ஸைமின் உதவியால் மனித செல்கள் தொடர்ந்து என்றென்றும் பிரிவுற முடியும் என நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்தக் குறிப்பிட்ட என்ஸைமின் உதவியால்தான் யெகோவா நித்தியகால வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறார் என இது அர்த்தப்படுத்தாது என்றாலும் இது ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகிறது: நித்திய ஜீவன் என்ற எண்ணம் கேலிக்குரியது அல்ல!

6 ஆம், முதல் மனித ஜோடி என்றென்றும் வாழ்வதற்கே படைக்கப்பட்டனர் என பைபிள் சொல்வது நம்பகமானது. முடிவில்லா காலத்திற்கு மனிதர் யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கி வர வேண்டியிருந்தது. மனிதருக்கான அவருடைய நோக்கத்தை நன்கு அறிந்து, அதை நிறைவேற்றுவதன் மூலம் தங்களுடைய பரலோகத் தகப்பனோடு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சலிப்புற்ற வாழ்க்கைக்கே இடமில்லை. இந்தப் பூமியை மகிழ்ச்சி பொங்கும் பரிபூரண சந்ததியால் நிரப்பும் அற்புதமான எதிர்பார்ப்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது. காலங்காலமாக செய்வதற்கு அர்த்தமுள்ள மகிழ்வூட்டும் வேலை அவர்களுக்கு இருந்திருக்கும். உண்மையிலேயே அது திருப்தியான வாழ்க்கையாக இருந்திருக்கும்!—ஆதியாகமம் 1:28.