Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 1அ

வணக்கம் என்றால் என்ன?

வணக்கம் என்றால் என்ன?

வணக்கம் என்ற வார்த்தையை, “கடவுள்மீது அன்பையும் மரியாதையையும் காட்டும் செயல்” என விளக்கலாம். பைபிளில், “வணக்கம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் மூலமொழி வார்த்தைகள், மனிதருக்கோ உயிரினங்களுக்கோ ஒருவர் காட்டும் ஆழ்ந்த மரியாதையைக் குறிக்கலாம். (மத். 28:9) அந்த வார்த்தைகள், கடவுளுக்குச் செலுத்தப்படும் பக்திக்குரிய செயலைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். (யோவா. 4:23, 24) அந்த வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது சூழமைவைப் பொறுத்தே இருக்கிறது.

நம் படைப்பாளரும் உன்னதப் பேரரசருமாகிய யெகோவா மட்டுமே நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர். (வெளி. 4:10, 11) நாம் யெகோவாவை வணங்குகிறோம் என்பதை, அவருடைய உன்னதப் பேரரசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலமும், அவருடைய பெயருக்கு மகிமை சேர்ப்பதன் மூலமும் காட்டுகிறோம். (சங். 86:9; மத். 6:9, 10) இந்த இரண்டு விஷயங்களுக்கும்தான், அதாவது யெகோவாவுடைய உன்னதப் பேரரசாட்சிக்கும் அவருடைய பெயருக்கும்தான், எசேக்கியேல் புத்தகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. “உன்னதப் பேரரசராகிய யெகோவா” என்ற சொற்றொடர், எசேக்கியேல் புத்தகத்தில் மட்டும் 217 தடவை காணப்படுகிறது. “நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்” என்பதைப் போன்ற சொற்றொடர்கள் 55 தடவை காணப்படுகின்றன.—எசே. 2:4; 6:7.

வணக்கம் என்பது வெறுமனே ஒரு உணர்வு அல்ல. உண்மையான வணக்கத்தில் செயல்கள் உட்பட்டிருக்கின்றன. (யாக். 2:26) யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் உன்னதப் பேரரசராகிய அவருக்குக் கீழ்ப்படிவோம் என்றும், அவருடைய பெயருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுவோம் என்றும் வாக்குக் கொடுக்கிறோம். மூன்றாவது சோதனைக்கு இயேசு கொடுத்த பதிலடியை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர் வணக்கத்தை ‘பரிசுத்த சேவையோடு’ சம்பந்தப்படுத்திப் பேசினார். (மத். 4:10) யெகோவாவை வணங்குகிற நாம் அவருக்குச் சேவை செய்ய மனதார விரும்புகிறோம். * (உபா. 10:12) நம் வணக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடும்போது, அதுவும் தியாகங்கள் செய்து அவற்றில் ஈடுபடும்போது, நாம் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்கிறோம் என்று அர்த்தம். எவையெல்லாம் நம் வணக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட செயல்கள்?

பல வழிகளில் நம்மால் பரிசுத்த சேவை செய்ய முடியும். அவை எல்லாமே யெகோவாவின் பார்வையில் அருமையானவை. மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போது... கூட்டங்களுக்காக ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது... வணக்கத்துக்கான இடங்களைக் கட்டும்போது... அவற்றைப் பராமரிக்கும்போது... நாம் பரிசுத்த சேவையில் ஈடுபடுகிறோம். அதோடு, குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்ளும்போது... நிவாரணப் பணியில் ஈடுபடும்போது... மாநாடுகளில் வாலண்டியர்களாகச் சேவை செய்யும்போது... அல்லது பெத்தேலில் சேவை செய்யும்போது... நாம் பரிசுத்த சேவையில் ஈடுபடுகிறோம். (எபி. 13:16; யாக். 1:27) நம் மனதிலும் இதயத்திலும் தூய வணக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால், நம் கடவுளான யெகோவாவுக்கு “இரவும் பகலும் . . . பரிசுத்த சேவை” செய்வோம். அது நம் மனதைச் சந்தோஷத்தால் நிரப்பும்.—வெளி. 7:15.

^ பாரா. 5 வணக்கம் என்ற பொருளைத் தரும் எபிரெய வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு சேவை என்ற அர்த்தமும் இருக்கிறது. அப்படியென்றால், வணக்கத்தில் சேவையும் உட்பட்டிருக்கிறது.