Skip to content

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?

அநேக மக்கள் மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள்—கடவுள். ஆனால் குறிப்பிடத்தக்க விதமாக, இயேசு கிறிஸ்துவோ அவருடைய பிதாவோ இந்த உலகத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று பைபிள் எந்த இடத்திலேயும் சொல்லவில்லை. மாறாக, இயேசு சொன்னார்: “இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.” மேலும் அவர் சொன்னார்: “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.”—யோவான் 12:31; 14:30; 16:11.

ஆகவே, இந்த உலகத்தின் அதிபதி இயேசுவுக்கு எதிராக இருக்கிறான். இது யாராக இருக்கக்கூடும்?

உலக நிலைமைகள் சுட்டிக்காட்டும் குறிப்பு

நல்ல எண்ணமுள்ள மனிதர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், சரித்திரம் முழுவதிலுமே உலகம் பயங்கரமாகத் துன்பப்பட்டிருக்கிறது. தலையங்க எழுத்தாளர், காலஞ்சென்ற டேவிட் லாரன்ஸ்-ஐ குழப்பமடையச்செய்ததுபோல், இது சிந்திக்கும் ஆட்களை குழப்பமடையச்செய்கிறது: “‘பூமியின்மீது சமாதானம்’—ஏறக்குறைய ஒவ்வொருவரும் அதை விரும்புகின்றனர். ‘மனிதரிடமாக நல்லெண்ணம்’—ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து மக்களும் ஒருவரிலொருவர் அதை உணருகின்றனர். அப்படியானால் என்ன தவறு இருக்கிறது? மக்களிடத்தில் சமாதானத்திற்கான ஆசைகள் இருந்தபோதிலும், ஏன் போரால் அச்சுறுத்தப்படுகின்றனர்?”

இது முரணாகத் தோன்றுகிறது அல்லவா? சமாதானத்துடன் வாழ்வதே மக்களின் இயல்பான ஆசை, இருந்தபோதிலும் அவர்கள் பொதுவாக ஒருவரையொருவர் அத்தனை கொடுமையாகப் பகைக்கவும் கொல்லவும் செய்கின்றனர். இயல்புமீறியக் கொடூரமானச் செயல்கள் மனித உணர்ச்சியற்றத்தன்மையுடன் நிகழ்வதைச் சிந்தித்துப்பாருங்கள். விஷவாயுக் கூடங்கள், சித்திரவதை முகாம்கள், நெருப்பைக்கக்கும் கருவிகள், நாபம் எரிகுண்டுகள், மற்ற கடுங்கொடிய முறைகள் ஆகியவற்றை மனிதர்கள் இரக்கமற்ற விதத்தில் ஒருவரையொருவர் சித்திரவதைச் செய்வதற்கும் கொலை செய்வதற்கும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சமாதானத்தையும் சந்தோஷத்தையும் வாஞ்சிக்கிற மனிதர்கள், மற்றவர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட கொடிய பொல்லாப்பைச் செய்வதற்கு அவர்கள்தாமே விருப்பமுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்ன சக்திகள் இத்தகைய வெறுக்கத்தக்கச் செயல்களுக்கு மனிதர்களை உந்துவிக்கின்றன அல்லது அட்டூழியங்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக உணருகிற நிலைமைகளுக்குள் அவர்களைத் திட்டமிட்டு இயக்குகின்றன? இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களைச் செய்வதற்கு ஏதோவொரு பொல்லாத, காணக்கூடாத சக்தி மக்களைச் செல்வாக்குச் செலுத்திவருகிறதா என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

உலகத்தின் அதிபதிகள் அடையாளங்கண்டுகொள்ளப்பட்டனர்

இந்த விஷயத்தைக்குறித்து ஊகிக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் புத்திக்கூர்மையான, காணக்கூடாத ஓர் ஆள் மனிதர்களையும் தேசங்களையும் கட்டுப்படுத்தி ஆளுகிறான் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அது சொல்லுகிறது: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கி”றது. மேலும் பைபிள் அவனை அடையாளங்காட்டிச் சொல்கிறது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட[வன்].”—1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9.

இயேசு ஒரு சமயம் “பிசாசினால் சோதிக்கப்படும்”போது, இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தானின் பங்கைக்குறித்து இயேசு சந்தேகிக்கவில்லை. என்ன நடந்தது என்பதைப் பைபிள் இவ்விதமாக விளக்குகிறது: “பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே என்றார்.”—மத்தேயு 4:1, 8-10.

இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். சாத்தான் “உலகத்தின் சகல ராஜ்யங்களையும்” அளிப்பதன்மூலம் இயேசுவை சோதித்தான். என்றபோதிலும், சாத்தான் உண்மையில் இந்த ராஜ்யங்களின் அதிபதியாக இல்லையென்றால், சாத்தான் அளிக்க முன்வந்தது உண்மையில் ஒரு சோதனையாக இருந்திருக்குமா? இல்லை, அது அவ்வாறு இருந்திருக்காது. மேலும் கவனியுங்கள், இந்த உலக அரசாங்கங்கள் அனைத்தும் சாத்தானுடையது என்பதை இயேசு மறுக்கவில்லை, அவற்றின்மீது சாத்தானுக்கு அதிகாரம் இல்லாதிருந்தால், அவர் மறுத்திருப்பார். ஆகவே, பிசாசான சாத்தான் நிஜமாகவே உலகத்தின் காணக்கூடாத அதிபதியாக இருக்கிறான்! உண்மையில், பைபிள் அவனை “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்றழைக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) என்றபோதிலும், எவ்விதமாக இப்படிப்பட்ட ஒரு பொல்லாத ஆள் இந்த அதிகாரமுள்ள ஸ்தானத்திற்குள் வந்தான்?

சாத்தானாக மாறியவன் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தூதனாக இருந்தான், ஆனால் அவன் கடவுளின் ஸ்தானத்தைக்குறித்துப் பொறாமைப்பட்டான். கடவுளுடைய நேர்மையான அரசுரிமைக்கு எதிராக அவன் சவால்விட்டான். இதை நிறைவேற்ற, முதல் மனுஷியாகிய ஏவாளை வஞ்சிப்பதற்கு ஒரு சர்ப்பத்தை அவன் சார்புப் பேச்சாளராகப் பயன்படுத்தினான், இவ்வாறு கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கு பதிலாக, அவளையும் அவளுடைய கணவனாகிய ஆதாமையும் தான் விரும்பியதைச் செய்யும்படி வைத்தான். (ஆதியாகமம் 3:1-6; 2 கொரிந்தியர் 11:3) ஆதாம் ஏவாளின் இன்னும் பிறவாமலிருந்த சந்ததியார் அனைவரையும் கடவுளிடமிருந்து விலகச்செய்ய முடியும் என்றும் அவன் வாதாடினான். ஆகவே அவனுடைய சவாலை நிரூபிக்க முயற்சிசெய்வதற்கு கடவுள் சாத்தானுக்குக் காலத்தை அனுமதித்தார், ஆனால் சாத்தான் வெற்றியடையவில்லை.—யோபு 1:6-12; 2:1-10.

குறிப்பிடத்தக்க விதமாக, சாத்தான் அவனுடைய உலக ஆட்சியில் தனிமையானவனாக இல்லை. கடவுளுக்கு எதிரான கலகத்தனத்தில் அவனோடுகூட சேர்ந்துகொள்வதற்கு மற்ற சில தேவதூதர்களையும் இணங்கச்செய்வதில் அவன் வெற்றியடைந்தான். இவர்கள் பேய்களாக, அவனுடைய ஆவி உடந்தையாட்களாக ஆனார்கள். இவர்களைக்குறித்து, கிறிஸ்தவர்களை பைபிள் உந்துவிக்கையில் சொல்லுகிறது: “பிசாசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக உறுதியாக நில்லுங்கள்; ஏனெனில் நமக்குப் போராட்டம் இருக்கிறது, மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, ஆனால் . . . இந்த அந்தகார உலக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராகவும் இருக்கிறது.”—எபேசியர் 6:11, 12, NW.

பொல்லாத ஆவிகளை எதிர்த்துநில்லுங்கள்

இந்தக் காணக்கூடாத, பொல்லாத உலக ஆட்சியாளர்கள் மனிதவர்க்கம் அனைத்தையும் கடவுளின் வணக்கத்திலிருந்து திருப்பி மோசம்போக்குவதற்கு உறுதியுள்ளவர்களாயும் இருக்கின்றனர். பொல்லாத ஆவிகள் இதைச் செய்யும் ஒரு வழி, மரித்தவர்கள் உணர்வுள்ளவர்களாய் இல்லை என்று கடவுளுடைய வார்த்தைத் தெளிவாகக் காட்டுகிறபோதிலும்கூட, மரணத்திற்குப் பின் உயிர்வாழ்தல் இருக்கிறது என்ற எண்ணத்தை ஊக்குவிப்பதன்மூலமாகும். (ஆதியாகமம் 2:17; 3:19; எசேக்கியேல் 18:4; சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 9:5, 10) இவ்விதமாக, ஒரு பொல்லாத ஆவி, மரித்திருக்கிற ஒருவரின் குரலைப் பின்பற்றி, காணக்கூடாத மண்டலத்திலிருந்து ஆவி மத்தியஸ்தர்மூலம் அல்லது ஒரு “குரலின்”மூலம், உயிர்வாழ்கிற ஒருவரின் உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் பேசக்கூடும். அந்தக் “குரல்” பிரிந்துபோன ஒருவரைப்போலவே பாசாங்குசெய்யும், ஆனால் உண்மையில் அது ஒரு பேய்!

ஆகவே, நீங்கள் எப்பொழுதாவது இப்படிப்பட்ட ஒரு “குரலைக்” கேட்பீர்களாகில், ஏமாற்றமடையாதேயுங்கள். அது எதைச் சொன்னாலும் நிராகரித்துவிடுங்கள், மேலும் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை எதிரொலியுங்கள்: “அப்பாலே போ, சாத்தானே.” (மத்தேயு 4:10; யாக்கோபு 4:7) உங்களைப் பொல்லாத ஆவிகளோடு தொடர்புகொள்ளச் செய்வதற்கு ஆவி மண்டலத்தைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலை அனுமதிக்காதீர்கள். இப்படிப்பட்டத் தொடர்பு ஆவிக்கொள்கை என்றழைக்கப்படுகிறது, கடவுள் தம்முடைய வணக்கத்தாரை அதன் எல்லா விதங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கிறார். “குறிசொல்லுகிறவனும் . . . சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிற”வனுமாகிய எவரையும் பைபிள் கண்டனம் செய்கிறது.—உபாகமம் 18:10-12; கலாத்தியர் 5:19-21; வெளிப்படுத்துதல் 21:8.

ஆவிக்கொள்கை ஒரு நபரைப் பேய்களின் செல்வாக்கின்கீழ் கொண்டுவருகிற காரணத்தால், எவ்வளவு வேடிக்கையாக, அல்லது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாகத் தோன்றினாலுஞ்சரி, அதன் எல்லா பழக்கங்களையும் எதிர்த்து நில்லுங்கள். இந்தப் பழக்கங்கள் பளிங்கு-பந்தை உற்றுப்பார்த்தல், குறிசொல்லும் எழுத்துப் பலகைகள், ESP, ஒருவரின் கையிலுள்ள கோடுகளைப் பரிசோதித்தல் (கைரேகை சாஸ்திரம்), சோதிடம் ஆகியவற்றை உட்படுத்துகின்றன. பேய்கள் தங்களுடைய இடமாக்கிக்கொள்கிற வீடுகளில் கூச்சல்களையும் மற்ற சடப்பொருள் சார்ந்த வியப்புக்குரிய காரியங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

அதோடுகூட, ஒழுக்கயீனமான மற்றும் இயற்கைக்கு மாறானப் பாலுறவு நடத்தைகளை முக்கியப்படுத்திக்காட்டுகிற இலக்கியங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னேற்றுவிப்பதன்மூலம் மனிதர்களின் பாவமுள்ள மனச்சாய்வை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தவறான எண்ணங்கள் மனதிலிருந்து அகற்றப்படாவிட்டால், அழிக்கமுடியாத எண்ணப்பதிவுகளை ஏற்படுத்தி, ஒழுக்கயீனமாக— பேய்கள்தானே செய்கிறதுபோல்—நடப்பதற்கு மனிதர்களை வழிநடத்தும் என்பதைப் பேய்கள் அறிந்திருக்கின்றன.—ஆதியாகமம் 6:1, 2; 1 தெசலோனிக்கேயர் 4:3-8; யூதா 6.

இந்த உலகம் பொல்லாத ஆவிகளால் ஆளப்படுகிறது என்ற எண்ணத்தைக்குறித்து அநேகர் பரியாசஞ்செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுடைய அவநம்பிக்கை ஆச்சரியமானதல்ல, ஏனென்றால் பைபிள் சொல்லுகிறது: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:14) அவனும் அவனுடைய பேய்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்ற உண்மைக்கு அநேகரைக் குருடாக்குவதில் அவனுடைய மிக அதிக தந்திரமான வஞ்சித்தலானது இருந்திருக்கிறது. ஆனால் ஏமாற்றமடையாதீர்கள்! பிசாசும் அவனுடைய பேய்களும் உண்மையில் இருக்கின்றனர், நீங்கள் அவர்களைத் தொடர்ந்து எதிர்த்து நிற்பது அவசியம்.—1 பேதுரு 5:8, 9.

மகிழ்ச்சிகரமாகவே, சாத்தானும் அவனுடைய சேனைகளும் இனிமேலும் இல்லாத காலம் இப்பொழுது சமீபமாயிருக்கிறது! ‘உலகம் [அதனுடைய பேய் ஆட்சியாளர்கள் உட்பட] ஒழிந்துபோகிறது,’ என்று பைபிள் உறுதியளிக்கிறது, “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) அந்தக் கெட்ட செல்வாக்கு நீக்கப்பட்டிருப்பது என்னே ஒரு விடுதலையாக இருக்கும்! ஆகவே, நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்து, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவிக்கிறவர்கள் மத்தியில் இருப்போமாக.—சங்கீதம் 37:9-11, 29; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.

மற்றபடி குறிப்பிட்டிருந்தால் தவிர, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.

[பக்கம் 4-ன் படம்]

இந்த உலக அரசாங்கங்கள் அனைத்தும் சாத்தானுடையதாக இல்லையென்றால், இயேசுவுக்கு அவன் அளித்திருக்கமுடியுமா?