Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

அதிகாரம் 8

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

சொத்துக்களை அழித்து உயிர்களைப் பறித்துக்கொள்ளும் பேரழிவுகள் தாக்கும்போது, ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்கள் சம்பவிக்கின்றன என்பதை அநேகரால் புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்கள் குற்றச்செயல் மற்றும் வன்முறையின் அளவு, கொடூரம் மற்றும் ஒழுக்க வரம்பற்ற தன்மைகளினால் கவலைப்படுகின்றனர். நீங்களும்கூட ‘கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ என்பதாக யோசித்திருக்கலாம்.

2இந்தக் கேள்விக்கு எந்தத் திருப்திகரமான பதிலையும் அவர்களால் காணமுடியாத காரணத்தால், அநேகர் கடவுளில் விசுவாசத்தை இழந்துவிட்டிருக்கின்றனர். அவர் மனிதவர்க்கத்தில் அக்கறையுள்ளவராக இல்லை என்பதாக அவர்கள் நினைக்கின்றனர். துன்பத்தை வாழ்க்கையின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளும் மற்றவர்கள் மனக்கசப்படைந்து மனித சமுதாயத்திலுள்ள எல்லா தீமைக்கும் கடவுளைக் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிப்பட்ட உணர்வுகள் உங்களுக்கு இருந்திருந்தால், ஒருவேளை இந்த விஷயங்களின் பேரில் பைபிளின் கூற்றுகளில் நீங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்களாயிருப்பீர்கள்.

துன்பம் கடவுளிடமிருந்து வருவதில்லை

3நம்மைச் சுற்றிலும் நாம் காணும் துன்பம் யெகோவா தேவனால் உண்டானவை அல்ல என்பதை பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உதாரணமாக, கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) அது இப்படி இருப்பதால், மனிதவர்க்கத்தைத் தொல்லைபடுத்தும் எண்ணற்ற கஷ்டங்களுக்குக் கடவுள் காரணராயிருக்கமாட்டார். பரலோகத்தில் வாழ்வதற்கு தகுதியுள்ளவர்களாக்குவதற்கு அவர் மக்களின்மீது சோதனைகளைக் கொண்டுவருவதுமில்லை அல்லது முந்தைய வாழ்க்கையில் செய்யப்பட்டதாக கருதப்படும் தீமையான காரியங்களுக்காக மக்களைத் துன்பப்படுத்துவதுமில்லை.—ரோமர் 6:7.

4மேலுமாக, கடவுளின் பெயரில் அல்லது கிறிஸ்துவின் பெயரில் அநேக பயங்கரமான காரியங்கள் செய்யப்பட்டிருந்தாலும்கூட, அவர்களில் எவரும் இப்படிப்பட்ட செயல்களை எப்போதாவது அங்கீகரித்திருக்கின்றனர் என்பதை தெரிவிக்க பைபிளில் எதுவும் இல்லை. அவர்களைச் சேவிப்பதாக உரிமைபாராட்டிக்கொண்டு ஆனால் ஏமாற்றி, சுருட்டி, கொலைசெய்து, கொள்ளையடித்து இன்னும் மனிதரின் துன்பத்துக்குக் காரணமாக இருக்கும் அநேக காரியங்களைச் செய்கிறவர்களோடு கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எந்தப் பங்கும் இல்லை. உண்மையில், “துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது.” கடவுள் “துன்மார்க்கருக்கு தூரமாயிருக்கிறார்.”—நீதிமொழிகள் 15:9, 29.

5பைபிள் யெகோவாவை ‘மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறார்,’ என்பதாக விவரிக்கிறது. (யாக்கோபு 5:11) ‘யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்,’ என்பதாக அது அறிவிக்கிறது. (சங்கீதம் 37:28; ஏசாயா 61:8; NW) அவர் பழிவாங்கும் மனப்பான்மையுள்ளவரல்ல. அவர் தம்முடைய படைப்புகளுக்காக இரக்கத்தோடு அக்கறை காண்பித்து அவர்களுடைய நலனுக்காக அவர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்ததைக் கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 14:16, 17) பூமியில் உயிர் தோன்றிய சமயத்திலிருந்தே யெகோவா அதைச் செய்துவந்திருக்கிறார்.

பரிபூரணமான ஆரம்பம்

6நாமனைவருமே வேதனையையும் துன்பத்தையும் பார்த்தும் உணர்ந்தும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே துன்பமில்லா ஒரு காலத்தைப்பற்றி கற்பனைசெய்வது நமக்குக் கடினமாக இருக்கலாம், ஆனால் மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் காரியங்கள் அவ்விதமாகத்தான் இருந்தன. ஒருசில தேசங்களின் புராணக் கதைகளும்கூட இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான ஆரம்பத்தைப்பற்றி குறிப்பிடுகின்றன. கிரேக்க புராணங்களில், முதல் “மனிதனின் ஐந்து சகாப்தங்கள்,” “பொற்காலம்,” என்பதாக அழைக்கப்பட்டிருந்தது. அதில் மனிதர்கள் கடினமான வேலை, வேதனை, மற்றும் முதிர் வயதின் விளைவுகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். புராணக் கதைகளில் வரும் எல்லோ எம்பரர் (ஹூயங்-டி) ஆட்சியின்போது மக்கள் சமாதானமாக வாழ்ந்து வானிலையோடும் விலங்குகளோடும்கூட ஒத்திசைவை அனுபவித்து வாழ்ந்துவந்தனர் என்பதாக சீனர்கள் சொல்கின்றனர். பெர்சியர்கள், எகிப்தியர்கள், திபத்து நாட்டவர், பெரு நாட்டவர், மெக்ஸிகோ நாட்டவர் ஆகிய அனைவருமே மனிதவர்க்க சரித்திரத்தின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியும் பரிபூரணமுமான ஒரு காலத்தைப் பற்றிய புராணக் கதைகளைக் கொண்டிருக்கின்றனர்.

7தேசங்களின் கட்டுக்கதைகள் வெறுமனே எழுதப்பட்ட மிகப் பழமையான மனித சரித்திரப் பதிவாகிய பைபிளை எதிரொலிக்கின்றன. கடவுள் முதல் மனித ஜோடியை, ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டம் என்றழைக்கப்பட்ட ஒரு பரதீஸில் வைத்து இவ்விதமாக அவர்களுக்குக் கட்டளையிட்டார் என்பதாக அது நமக்கு தெரிவிக்கிறது: “நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்”துங்கள். (ஆதியாகமம் 1:28) நம்முடைய முதல் பெற்றோர் பரிபூரணத்தை அனுபவித்து மகிழ்ந்தனர், நிலையான சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் பரிபூரண மனித குடும்பம் வாழும் ஒரு பரதீஸாக முழு பூமியும் மாறுவதைக் காணும் எதிர்பார்ப்பை உடையவர்களாக இருந்தனர். பூமியையும் மனிதவர்க்கத்தையும் படைத்ததில் அதுவே கடவுளுடைய நோக்கமாக இருந்தது.—ஏசாயா 45:18.

தீய எண்ணமுடைய ஒரு சவால்

8கடவுளுடைய தயவில் நிலைத்திருப்பதற்கு, ஆதாமும் ஏவாளும் “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்” புசிப்பதிலிருந்து விலகியிருந்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 2:16, 17) அவர்கள் யெகோவாவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்திருந்தால், மனித வாழ்க்கையைக் கெடுக்க எந்தத் துன்பமும் இருந்திருக்காது. கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம், யெகோவாவிடமாக அவர்களுக்கிருக்கும் அன்பையும் அவருக்கு தங்களுடைய உண்மைத்தவறாமையையும் காண்பித்திருப்பார்கள். (1 யோவான் 5:3) ஆனால் நாம் 6-ம் அதிகாரத்தில் கற்றுக்கொண்டபடி, காரியங்கள் அவ்விதமாக நடந்தேறவில்லை. சாத்தானால் தூண்டப்பட்டு, ஏவாள் விருட்சத்திலிருந்து கனியை சாப்பிட்டாள். பின்னால், ஆதாமும் விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டான்.

9சம்பவித்த காரியத்தின் வினைமையான தன்மையை உங்களால் காணமுடிகிறதா? மகா உன்னதமானவராக யெகோவாவின் ஸ்தானத்தை சாத்தான் தாக்கிக்கொண்டிருந்தான். “நீங்கள் சாகவே சாவதில்லை,” என்பதாகச் சொல்வதன் மூலம் பிசாசு “சாகவே சாவாய்,” என்ற கடவுளுடைய வார்த்தைகளுக்கு முரணாகப் பேசிக்கொண்டிருந்தான். எது நல்லது, எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பதற்கு கடவுள் தேவைப்படாதபடிக்கு அவரைப் போலாகிவிடக்கூடிய அந்தச் சாத்தியத்தைக் குறித்து யெகோவா ஆதாமையும் ஏவாளையும் அறியாமையில் வைத்திருக்கிறார் என்பதைச் சாத்தானின் மேலுமான வார்த்தைகள் குறிப்பிட்டுக் காட்டின. ஆகவே சாத்தானின் சவால் சர்வலோக அரசராக யெகோவாவின் ஸ்தானத்தின் உரிமையையும் தகுதியையும் மறுத்துப்பேசுவதாக இருந்தது.—ஆதியாகமம் 2:17; 3:1-6.

10கடவுளுக்குக் கீழ்ப்படிவது அவர்களுக்கு அனுகூலமாயிருக்கும் வரையில் மாத்திரமே மக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருப்பர் என்பதாவும்கூட பிசாசாகிய சாத்தான் மறைமுகமாக குறிப்பிட்டான். வேறு வார்த்தைகளில், மனிதரின் உத்தமத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டது. எந்த மனிதனும் தானாகவே கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருக்கமாட்டார் என்பதாக சாத்தான் குற்றஞ்சாட்டினான். சாத்தானின் தீய நோக்கமுடைய இந்த உரிமைபாராட்டுதல் பொ.ச.மு. 1600-க்கு முன்பாக பெரிய சோதனையை அனுபவித்த உண்மையுள்ள யெகோவாவின் ஒரு ஊழியனாகிய யோபைப் பற்றிய பைபிளின் பதிவில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. யோபு புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களை நீங்கள் வாசிக்கையில், மனிதரின் துன்பத்துக்கான காரணத்தைப் பற்றியும் கடவுள் ஏன் அதை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றியும் உட்பார்வையை நீங்கள் அடையலாம்.

11‘உத்தமனும் சன்மார்க்கனுமாயிருந்த,’ யோபு சாத்தானின் தாக்குதலின்கீழ் வந்தான். முதலாவது, “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் யோபுவுக்குக் கெட்ட நோக்கங்கள் இருப்பதாக சாத்தான் சுட்டிக்காட்டினான். பின்னர், யோபுவைப் பாதுகாத்து அவனை ஆசீர்வதிப்பதன் மூலம் அவனுடைய உத்தமத்தை யெகோவா விலைக்குவாங்கியதாக குற்றஞ்சாட்டுவதன் மூலம் பிசாசு தந்திரமாக கடவுளையும் யோபுவையும் பழித்துக்கூறினான். “ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்,” என்று சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டான்.—யோபு 1:8-11.

12கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட எல்லா நல்ல காரியங்களுக்காக மட்டுமே யோபு யெகோவாவை சேவித்துக் கொண்டிருந்தாரா? சோதனையின்கீழ் யோபுவின் உத்தமத்தன்மை பழுதுபடாதிருக்குமா? முறையே, யெகோவா தம்முடைய ஊழியக்காரன் சோதிக்கப்படுவதை அனுமதிப்பதற்கு அவரில் போதிய அளவு நம்பிக்கையுடையவராக இருந்தாரா? யோபுவின்மீது மிகவும் கடுமையான சோதனைகளைக் கொண்டுவருவதற்கு சாத்தானை அனுமதிப்பாரேயானல் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட முடியும். யோபு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளபடி, கடவுள் அனுமதித்திருந்த சோதனையின்கீழ் யோபுவின் உண்மையுள்ள போக்கு, யெகோவாவின் நீதியையும் மனிதனின் உத்தமத்தையும் முழுமையாக நிலைநாட்டுவதாக இருந்தது.—யோபு 42:1, 2, 12.

13என்றபோதிலும் ஏதேன் தோட்டத்திலும் யோபு என்ற மனிதனுக்கும் சம்பவித்த காரியங்களும் ஆழமான முக்கியத்துவமுடையவையாக இருக்கின்றன. இன்றுள்ள நாம் உட்பட, சாத்தான் எழுப்பிய விவாதங்கள் எல்லா மனிதவர்க்கத்தையும் உட்படுத்துகின்றன. கடவுளுடைய பெயர் தூஷிக்கப்பட்டது, அவருடைய அரசுரிமை சவாலிடப்பட்டது. கடவுளுடைய படைப்பாகிய மனிதனின் நேர்மை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இந்த விவாதங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

விவாதங்களை எவ்வாறு தீர்ப்பது

14உதாரணத்துக்கு, அநேக பிள்ளைகளோடுகூட ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் நீங்கள் அன்புள்ள ஒரு பெற்றோராக இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை உங்கள் அயலகத்தாரில் ஒருவர் பொய்களைப் பரப்பி மோசமான ஒரு பெற்றோராக நீங்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டுவதாக வைத்துக்கொள்வோம். உங்களுடைய பிள்ளைகள் உங்களை நேசிப்பதில்லை, மேலான ஒரு வழி தெரியாத காரணத்தால் மாத்திரமே அவர்கள் உங்களோடு இருக்கிறார்கள், எவராவது ஒரு வழியை அவர்களுக்குக் காண்பித்தால் அவர்கள் புறப்பட்டுவிடுவார்கள் என்பதாக அயலகத்தார் சொன்னால் அப்போது என்ன? ‘அபத்தமானது!’ என்பதாக நீங்கள் சொல்லக்கூடும். ஆம், ஆனால் நீங்கள் அதை எவ்வாறு நிரூபிப்பீர்கள்? சில பெற்றோர்கள் கடுங்கோபத்தோடு பிரதிபலிக்கலாம். அதிகமான பிரச்சினைகளை உருவாக்குவதோடுகூட, இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான பிரதிபலிப்பு பொய்களை ஆதரிப்பதாக இருக்கும். உங்களைப் பழிதூற்றுபவர் அவருடைய உரிமைபாராட்டலை நிரூபிப்பதற்கும் உங்களுடைய பிள்ளைகள் உங்களை உண்மையில் நேசிக்கிறார்கள் என்பதை உறுதிசெய்வதற்கும் சந்தர்ப்பதை அனுமதிப்பதே இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையைக் கையாளுவதற்கு திருப்திகரமான ஒரு வழியாக இருக்கும்.

15யெகோவா அன்புள்ள பெற்றோரைப் போல இருக்கிறார். ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளுக்கு ஒப்பிடப்படலாம், சாத்தான் பொய் சொல்லும் அயலானின் பாத்திரத்துக்குப் பொருத்தமாயிருக்கிறான். கடவுள் ஞானமாக சாத்தான், ஆதாம் மற்றும் ஏவாளை உடனடியாக அழித்துவிடவில்லை, ஆனால் தவறு செய்த இவர்களை கொஞ்ச காலத்துக்குத் தொடர்ந்து வாழும்படி அனுமதித்தார். பிள்ளைகளைப் பிறப்பித்து குடும்பத்தை ஆரம்பிப்பதற்கு நம்முடைய முதல் பெற்றோருக்கு இது காலத்தை அனுமதித்தது, விவாதங்களைத் தீர்க்கும்பொருட்டு பிசாசுக்கு அவனுடைய உரிமைபாராட்டல் உண்மையாக இருந்ததா என்பதை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே, ஒருசில மனிதர்கள் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்து இவ்விதமாக சாத்தானை ஒரு பொய்யனாக நிரூபிப்பர் என்பதை கடவுள் அறிந்திருந்தார். யெகோவா அவரை நேசிப்பவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து, உதவியும் செய்வதற்காக அவருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—2 நாளாகமம் 16:9; நீதிமொழிகள் 15:3.

என்ன நிரூபிக்கப்பட்டிருக்கிறது?

16ஏறக்குறைய மனித சரித்திரம் முழுவதிலுமாக, சாத்தான் மனிதவர்க்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக திட்டங்களைத் தீட்டுவதற்கு முழுமையாக சுதந்திரம் பெற்றவனாய் இருந்திருக்கிறான். மற்ற காரியங்களோடுகூட, அவன் அரசியல் அதிகாரங்கள்மீது செல்வாக்கை பிரயோகித்து யெகோவாவுக்குப் பதிலாக தந்திரமாக அவனுக்கே வணக்கத்தை செலுத்தும் மதங்களை அவன் ஊக்குவித்திருக்கிறான். இப்படியாக பிசாசு ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக’ ஆகியிருக்கிறான், அவன் “உலகத்தின் அதிபதி” என்று அழைக்கப்படுகிறான். (2 கொரிந்தியர் 4:4, NW; யோவான் 12:31) ஆம், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) சாத்தான் எல்லா மனிதவர்க்கத்தையும் யெகோவா தேவனிடமிருந்து இழுத்துக்கொள்ள முடியும் என்ற தன்னுடைய உரிமைபாராட்டலை நிரூபித்துவிட்டான் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை! சாத்தானை உயிரோடு இன்னும் இருக்கும்படியாக அனுமதித்திருக்கும் அதே சமயத்தில், யெகோவா தம்முடைய சொந்த நோக்கத்தை நிறைவேற்ற செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால் கடவுள் அக்கிரமத்தை அனுமதித்திருப்பதைக் குறித்து பைபிள் என்ன வெளிப்படுத்துகிறது?

17 அக்கிரமமும் துன்பமும் யெகோவாவால் உண்டாவது இல்லை. சாத்தான் இந்த உலகத்துக்கு அதிபதியாகவும் இந்தக் காரிய ஒழுங்குமுறைக்குக் கடவுளாகவும் இருப்பதன் காரணமாக, அவனும் அவன் பக்கத்திலிருப்பவர்களுமே மனித சமுதாயத்தின் தற்போதைய நிலைமைக்கும் மனிதவர்க்கம் அனுபவித்திருக்கும் எல்லா துயரங்களுக்கும் பொறுப்புள்ளவர்களாயிருக்கின்றனர். இப்படிப்பட்ட கஷ்டங்களுக்குக் கடவுள் காரணர் என்பதாக எவரும் சரியாக சொல்லமுடியாது.—ரோமர் 9:14.

18அக்கிரமத்தையும் துன்பத்தையும் யெகோவா அனுமதித்திருப்பது கடவுளிடமிருந்து பிரிந்து சுதந்திரமாக வாழ்வது மேம்பட்ட ஒரு உலகத்தை கொண்டுவரவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. மறுக்க முடியாத வண்ணமாக வரலாறு ஒன்றன் பின் ஒன்றாக பேராபத்துக்களினால் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் மனிதர்கள் தங்களுடைய சொந்த தன்னிச்சையான போக்கைப் பின்தொடருவதற்கு தெரிந்துகொண்டிருக்கின்றனர், மேலும் கடவுளுடைய வார்த்தைக்கும் விருப்பத்துக்கும் உண்மையில் எந்த மதிப்பையும் காண்பிக்காதிருக்கிறார்கள். யெகோவாவின் பண்டைய மக்களும் அவர்களுடைய தலைவர்களும் உண்மையற்றவர்களாய் ‘பிரபலமான போக்கைப்’ பின்தொடர்ந்து அவருடைய வார்த்தையைத் தள்ளிவிட்டபோது, விளைவுகள் மிகவும் விபரீதமாக இருந்தன. தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம் கடவுள் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?” (எரேமியா 8:5, 6, 9, NW) யெகோவாவின் தராதரங்களைப் பின்பற்ற தவறிய காரணத்தால், மனிதவர்க்கம் பொதுவில் கொந்தளிப்பான ஒரு சமுத்திரத்தில் அலைக்கழிக்கப்படும் சுக்கானில்லாத ஒரு கப்பலைப் போல ஆகிவிட்டிருக்கிறது.

19கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருப்பதானது சாத்தானால் முழு மனிதவர்க்கத்தையும் யெகோவாவிடமிருந்து விலகிச்செல்லும்படியாகச் செய்ய முடியவில்லை என்பதையும்கூட நிரூபித்திருக்கிறது. தங்கள்மீது என்ன சோதனைகளும் அல்லது இடர்பாடுகளும் கொண்டுவரப்பட்டபோதிலும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்த தனி ஆட்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு காண்பிக்கிறது. நூற்றாண்டுகளினூடாக, யெகோவா அவருடைய ஊழியர்களின் சார்பாக தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணியிருக்கிறார், அவருடைய பெயரும் பூமி முழுவதிலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. (யாத்திராகமம் 9:16; 1 சாமுவேல் 12:22) எபிரெயர் 11-ம் அதிகாரம் ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே உள்ளிட்ட உண்மையுள்ளவர்களின் ஒரு நீண்ட பட்டியலைப் பற்றி நமக்குச் சொல்கிறது. எபிரெயர் 12:1 அவர்களை ‘மேகம் போன்ற திரளான சாட்சிகள்’ என்பதாக அழைக்கிறது. யெகோவாவில் அசைக்கமுடியாத விசுவாசத்துக்கு அவர்கள் முன்மாதிரிகளாக இருந்தார்கள். நவீன காலங்களிலும்கூட, அநேகர் கடவுளுக்குத் தங்களுடைய முறிக்கமுடியாத உத்தமத்தில் தங்கள் உயிர்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசம் மற்றும் அன்பினால், இப்படிப்பட்ட தனி ஆட்கள் சாத்தான் எல்லா மனிதர்களையும் கடவுளுக்கு எதிராக திருப்பிவிடமுடியாது என்பதை முடிவாக நிரூபித்தனர்.

20கடைசியாக, அக்கிரமமும் துன்பமும் தொடர்ந்திருப்பதை யெகோவா அனுமதித்திருப்பது, படைப்பாளரான யெகோவா மாத்திரமே, மனிதவர்க்கத்தின்மீது அவர்களுடைய நித்திய ஆசீர்வாதத்துக்கும் மகிழ்ச்சிக்குமாக ஆட்சிசெய்வதற்கு திறமையும் உரிமையும் உடையவராக இருக்கிறார் என்பதற்கு நிரூபணங்களை அளித்திருக்கிறது. நூற்றாண்டுகளாக, மனிதவர்க்கம் அநேக விதமான அரசாங்கங்களை முயற்சி செய்து பார்த்திருக்கிறது. ஆனால் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? இன்று தேசங்கள் எதிர்ப்படும் சிக்கலான பிரச்சினைகளும் நெருக்கடி நிலைமைகளும், உண்மையிலேயே பைபிள் சுட்டிக்காட்டும் வண்ணமாக ‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகைச் செய்கிறான்,’ என்பதற்கு போதுமான அத்தாட்சியாக இருக்கிறது. (பிரசங்கி 8:9) யெகோவா மாத்திரமே நம்மைத் தப்புவித்து அவருடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்ற முடியும். இதை அவர் எவ்வாறு செய்வார் மற்றும் எப்போது?

21ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்ட உடனேயே, இரட்சிப்பின் வழிமூலத்தைப் பற்றிய தம்முடைய நோக்கத்தை கடவுள் அறிவித்தார். சாத்தானைக் குறித்து யெகோவா இவ்விதமாகத்தான் அறிவித்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) அந்த அறிவிப்பானது, பிசாசு அவனுடைய தீய செயல்களை என்றென்றுமாக செய்துகொண்டிருக்க அனுமதிக்கப்படமாட்டான் என்பதற்கு உத்தரவாதமளித்தது. மேசியானிய ராஜ்யத்தின் ராஜாவாக, வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்து ‘சாத்தானை தலையில் நசுக்கிவிடுவார்.’ ஆம், “சீக்கிரமாய்” இயேசு கலகக்காரனாகிய சாத்தானை நசுக்கிவிடுவார்!—ரோமர் 16:20.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

22உட்பட்டிருக்கும் விவாதங்களை அறிந்தவர்களாய், நீங்கள் யாருடைய பக்கத்தில் நிற்பீர்கள்? உங்களுடைய செயல்களின் மூலமாக நீங்கள் யெகோவாவின் உண்மையுள்ள ஆதரவாளர் என்பதை நிரூபிப்பீர்களா? சாத்தான் அவனுடைய காலம் கொஞ்சம் என்பதை அறிந்திருக்கும் காரணத்தால், கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள்மீது தன்னுடைய கோபத்தைத் தாராளமாக வெளிப்படுத்த அவனால் முடிந்த அனைத்தையும் செய்வான். (வெளிப்படுத்துதல் 12:12) ஆனால் உதவிக்காக நீங்கள் கடவுளை நோக்கியிருக்கலாம், ஏனென்றால் ‘தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று எவ்வாறு இரட்சிப்பது என்று யெகோவா அறிந்திருக்கிறார்.’ (2 பேதுரு 2:9, NW) நீங்கள் தாங்கிக்கொள்வதற்கும் அதிகமாக சோதிக்கப்பட அவர் உங்களை அனுமதிக்கமாட்டார், சோதனைகளைச் சகித்திருக்கக்கூடும்படியாக அதிலிருந்து தப்பிக்கொள்ளும் வழியையும் அவர் உண்டாக்குவார்.—1 கொரிந்தியர் 10:13.

23சாத்தானுக்கும் அவனைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் எதிராக ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நடவடிக்கை எடுக்கப்போகும் அந்தக் காலத்தை நாம் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கலாம். (வெளிப்படுத்துதல் 20:1-3) மனிதவர்க்கம் அனுபவித்திருக்கும் ஆபத்துக்களுக்கும் குழப்பங்களுக்கும் பொறுப்பாயிருந்திருக்கும் அனைவரையும் இயேசு ஒழித்துவிடுவார். அந்தச் சமயம் வரையாக, விசேஷமாக வேதனைதரும் ஒரு வகையான துன்பம் மரணத்தில் நம்முடைய அன்பானவர்களை இழப்பதாகும். அடுத்த அதிகாரத்தை வாசித்து அவர்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

மனிதருக்குத் துன்பத்தை யெகோவா உண்டுபண்ணுவதில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

ஏதேனில் சாத்தான் எழுப்பின என்ன விவாதங்கள் யோபுவின் நாளில் தெளிவாக்கப்பட்டன?

கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பது எதை நிரூபித்திருக்கிறது?

[கேள்விகள்]

1, 2. மனிதரின் துன்பத்துக்கு மக்கள் அநேகமாக எவ்விதமாக பிரதிபலிக்கின்றனர்?

3, 4. தீமையும் துன்பமும் யெகோவாவிடமிருந்து வருவதில்லை என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

5. யெகோவாவின் சில பண்புகள் யாவை, தம்முடைய படைப்புகளைக் குறித்து அவர் எவ்வாறு உணருகிறார்?

6. ஒருசில புராணங்கள் மனிதவர்க்கத்தின் ஆரம்ப கால வரலாறுபற்றி எவ்விதமாக குறிப்பிடுகின்றன?

7. கடவுள் ஏன் பூமியையும் மனிதவர்க்கத்தையும் படைத்தார்?

8. ஆதாமும் ஏவாளும் என்ன கட்டளைக்குக் கீழ்ப்படியும்படியாக எதிர்பார்க்கப்பட்டனர், ஆனால் என்ன நடந்தது?

9. யெகோவாவை உட்படுத்தும் என்ன விவாதத்தை சாத்தான் எழுப்பினான்?

10. மனிதர்களைப்பற்றி சாத்தான் மறைமுகமாக என்ன குறிப்பிட்டான்?

11. யோபு எப்படிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் சாத்தான் என்ன குற்றஞ்சாட்டினான்?

12. (அ) யோபுவை சோதிக்கும்படியாக கடவுள் சாத்தானை அனுமதித்தால் மட்டுமே என்ன கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட முடியும்? (ஆ) யோபுவின் சோதனை எதில் விளைவடைந்தது?

13. ஏதேனிலும் யோபுவுக்கு சம்பவித்ததிலும் நாம் எவ்வாறு உட்பட்டிருக்கிறோம்?

14. தீய எண்ணமுடைய ஒரு சவாலை எதிர்ப்படுகையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபர் என்ன செய்யக்கூடும்?

15. சாத்தானின் சவாலைக் கையாள யெகோவா எவ்விதமாக தெரிந்துகொண்டார்?

16. உலகம் சாத்தானின் அதிகாரத்திற்குள் வந்தது எவ்வாறு?

17. அக்கிரமம் மற்றும் துன்பத்துக்கான காரணத்தின் சம்பந்தமாக நாம் எதை மனதில் வைக்கவேண்டும்?

18. அக்கிரமத்தையும் துன்பத்தையும் யெகோவா அனுமதித்திருப்பதானது, கடவுளிடமிருந்து பிரிந்து சுதந்திரமாக வாழும் எண்ணத்தைக் குறித்து என்ன நிரூபித்திருக்கிறது?

19. சாத்தான் எல்லா மனிதர்களையும் கடவுளுக்கு எதிராக திருப்பிட முடியாது என்பதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?

20. அக்கிரமமும் துன்பமும் தொடர்ந்திருப்பதை யெகோவா அனுமதித்திருப்பது கடவுள் மற்றும் மனிதவர்க்கத்தின் சம்பந்தமாக எதை நிரூபித்திருக்கிறது?

21. சாத்தானுக்கு என்ன செய்யப்படும், இதைச் செய்து முடிக்க யார் பயன்படுத்தப்படுவார்?

22. (அ) என்ன கேள்விகளை நீங்கள் எதிர்ப்பட வேண்டும்? (ஆ) கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்கள்மீது சாத்தான் தன் கோபத்தைத் தாராளமாக வெளிப்படுத்தினாலும் அவர்கள் எதைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம்?

23. நம்பிக்கையோடு நாம் எதை எதிர்நோக்கியிருக்கலாம்?