Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல

என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல

அதிகாரம் 1

என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல

பூமியில் மகிழ்ச்சியான வாழ்க்கை—ஒரு குறுகிய காலத்திற்குங்கூட இதை அனுபவித்து மகிழ்வது கூடிய காரியமாகத் தோன்றுவதில்லை. ஒரு சில பிரச்னைகளைக் குறிப்பிட—நோய், முதுமை, பசி, குற்றச் செயல் ஆகியவை அடிக்கடி வாழ்க்கையை, துயர் மிகுந்ததாக்குகின்றன. ஆகையால், பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதைப் பற்றிப் பேசுவது உண்மைக்கு கண்களை மூடிக்கொள்வதாயிருக்கிறது என்று நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். அதைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணாக்குவதே, என்றுமாக வாழ்வது வெறும் ஒரு கனவே என்பதாக நீங்கள் ஒருவேளை உணரக்கூடும்.

2 சந்தேகமில்லாமல் பெரும்பான்மையர் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள். அப்படியானால், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்பதைக் குறித்து ஏன் அவ்வளவு நிச்சயமாய் இருக்கலாம்? நித்திய வாழ்க்கை வெறும் ஒரு கனவல்ல என்று நாம் ஏன் நம்பலாம்?

நாம் ஏன் நம்பலாம்

3 ஈடற்ற உன்னத அதிகாரியாகிய, சர்வ வல்லமையுள்ள கடவுள், நம்முடைய தேவையைத் திருப்தி செய்வதற்கு வேண்டிய எல்லாவற்றோடும் இந்தப் பூமியை ஆயத்தம் செய்திருந்ததன் காரணமாக நாம் நம்பலாம். அவர் இந்தப் பூமியை நமக்கு ஏற்ற விதமாக முழு நிறைவாய் உண்டாக்கினார்! மனிதனும் மனுஷியும் இந்தப் பூமிக்குரிய வீட்டில்—என்றென்றும்—நிறைவாகத் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கேதுவான மிகச் சிறந்த முறையில் அவர் அவர்களைப் படைத்தார்.—சங்கீதம் 115:16.

4 மனித உடலின் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் சக்தியைப்பற்றி விஞ்ஞானிகள் வெகுகாலமாக அறிந்திருக்கின்றனர். அதிசயமான வழி வகைகளின் மூலமாய் உடலின் உயிரணுக்கள், தேவைக்குத் தகுந்தாற்போல் புதுப்பிக்கவோ சரிப்படுத்தவோ படுகின்றன. தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் இந்தக் காரியம், என்றென்றும் நடந்துகொண்டிருக்க வேண்டுமென்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அது அப்படி நடக்கிறதில்லை. ஏன் என்பதை விஞ்ஞானிகள் விளக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் ஏன் வயோதிபராகிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் முழுமையாய் விளங்கிக் கொள்ளவில்லை. சரியான நிலைமைகளின் கீழ் மனிதர் என்றென்றும் வாழக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.—சங்கீதம் 139:14.

5 என்றபோதிலும், மக்கள் பூமியில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதே உண்மையில் கடவுளுடைய நோக்கமாய் இருக்கிறதா? அப்படி இருக்கிறதென்றால், நித்திய வாழ்க்கை வெறும் ஓர் ஆவலோ கனவோ அல்ல—அது நிச்சயமாய் வரும்! கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிச் சொல்லுகிற இந்தப் புத்தகமாகிய பைபிள், இந்தக் காரியத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது? அது கடவுளை, “பூமியை . . . செய்து படைத்து, அதை உருவாக்கினவர்” என்று அழைத்து, அவரே, “பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காக உருவாக்கி நிலைப்படுத்தினவர்,” என்று சொல்லுகிறது.—ஏசாயா 45:18, தி.மொ.

6 கடவுள் எண்ணிய விதத்தில் இந்த பூமி இப்பொழுது குடியேற்றப்பட்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? மக்கள் பெரும்பாலும் பூமியின் எல்லா பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மெய்யே. ஆனால் அவர்களுடைய சிருஷ்டிகர் அவர்களுக்காக நோக்கங் கொண்டிருந்த விதமாக, அவர்கள் ஒற்றுமைப்பட்ட ஒரு குடும்பமாக ஒன்றாய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? இன்று உலகம் பிரிவுற்றிருக்கிறது. அங்கே பகை இருந்துவருகிறது. குற்றச்செயல் நடப்பிக்கப்படுகிறது. போர் தொடுக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பசியுடனும் நோயுற்றும் இருக்கின்றனர். மற்றவர்கள் வீடு, வேலை, செலவுகள் ஆகியவற்றைப் பற்றிய அன்றாடக கவலைகள் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். அது எதுவும் கடவுளை கனப்படுத்துவதாக இல்லை. அப்படியானால், இந்தப் பூமி எவ்வகையில் இருக்க வேண்டுமென்று சர்வ வல்லமையுள்ள கடவுள் தொடக்கத்தில் கருதினாரோ அவ்வகையில் குடியிருக்கப்பட்டில்லை.

7 முதல் மனிதத் தம்பதிகளைப் படைத்தப் பின்பு, கடவுள் அவர்களைப் பூமிக்குரிய ஒரு பரதீஸில் வைத்தார். அவர்கள் பூமியில் வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவித்து மகிழ்ந்திருக்கும்டி அவர் விரும்பினார். தங்கள் பரதீஸை அவர்கள் பூமி முழுவதின் மீதும் பரவச்செய்ய வேண்டுமென்பது அவருடைய நோக்கம். அவர்களுக்குக் கொடுத்த அவருடைய கட்டளைகளால் இது காட்டப்படுகிறது: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . கொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) ஆம், கடவுளுடைய நோக்கமானது, காலப்போக்கில், பூமி முழுவதும், எல்லோரும் ஒன்றாக சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நீதியுள்ள ஒரே மனித குடும்ப ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே.

8 அந்த முதல் மனிதத் தம்பதிகள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போய், இவ்வாறு என்றும் வாழ்ந்திருப்பதற்குத் தகுதியற்றவர்களாக நிரூபித்த போதிலும், தொடக்கத்தில் கொண்டிருந்த கடவுளுடைய நோக்கம் மாறவில்லை. அது கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்! (ஏசாயா 55:11) பைபிள் பின்வருமாறு வாக்குக் கொடுக்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) தம்மைச் சேவிக்கிற மனிதருக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்லுகிறது.—யோவான் 3:14-16, 36; ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4.

வாழ விரும்புவது—எங்கே?

9 நாம் என்றும் வாழ வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாய் இருப்பதற்காக நாம் மெய்யாகவே மகிழ்ச்சியாயிருக்கலாம். ஏனெனில் சற்று எண்ணிப்பாருங்கள்: நீங்களே தீர்மானிக்க வேண்டியதாயிருந்தால், எந்தத் தேதியில் சாக தெரிந்துகொள்வீர்கள்? உங்களால் ஒரு தேதியைத் தெரிந்தெடுக்க முடியாதல்லவா? நீங்கள் சாக விரும்புகிறதில்லை. ஓரளவு உடல்நலமுள்ள வேறு எவருமே அவ்வாறு சாக விரும்புகிறதில்லை. சாவதற்கான விருப்பத்துடன் அல்ல, வாழ்ந்திருப்பதற்கான விருப்பத்துடனேயே கடவுள் நம்மை உண்டாக்கினார். கடவுள் மனிதரை உண்டாக்கின விதத்தைப் பற்றி பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நித்திய கால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்.” (பிரசங்கி 3:11, தி.மொ.) இதன் கருத்தென்ன? பொதுவாய் மக்கள், சாகாமல் மேலும் மேலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கவே விரும்புகின்றனர் என்பதே. முடிவற்ற எதிர் காலத்திற்கான இந்த ஆவலின் காரணமாக மனிதர் என்றும் வாலிபராய் நிலைத்திருப்பதற்கான வழி முறைக்காக வெகுகாலம் தேடிவந்திருக்கின்றனர்.

10 இயல்பாய் மனிதர் எங்கே என்றென்றும் வாழ்ந்திருக்க விரும்புகின்றனர்? தாங்கள் வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிற இடமாகிய இங்கே இந்தப் பூமியிலேயே. மனிதன் பூமிக்காக உண்டாக்கப்பட்டான், பூமி மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது. (ஆதியாகமம் 2:8, 9, 15) பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் [கடவுள்] அதை ஸ்தாபித்தார்.” (சங்கீதம் 104:5) பூமி என்றென்றும் நிலைத்திருக்க உண்டாக்கப்பட்டபடியால், மனிதனுங்கூட என்றென்றுமாக வாழவேண்டும். நிச்சயமாகவே, அன்புள்ள கடவுள் மனிதரை என்றென்றும் வாழ்வதற்கான ஆவலுடன் படைத்துவிட்டு அந்த ஆவலை அவர்கள் நிறைவேற்ற முடியாதபடி செய்யமாட்டார்!—1 யோவான் 4:8; சங்கீதம் 133:3.

நீங்கள் விரும்பும் வகையான வாழ்க்கை

11 பின்வரும் பக்கத்தைப் பாருங்கள். இந்த மக்கள் என்ன வகையான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறார்கள்? அவர்களில் ஒருவராக இருக்க நீங்கள் விரும்புவீர்களா? ஆம், நிச்சயமாகவே, என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். பாருங்கள், அவர்கள் எவ்வளவு சுகபலமுள்ளவர்களாயும் இளமை ததும்புகிறவர்களாயும் தோன்றுகின்றனர்! இந்த மக்கள் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றனர் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நீங்கள் நம்புவீர்களா? முதுமையடைந்தவர்கள் மறுபடியும் இளைஞராவார்கள், நோயுற்றவர்கள் சுகமாக்கப்படுவார்கள், முடவர், குருடர், செவிடர், ஊமையர் யாவரும் சுகமடைய செய்யப்படுவார்கள். இயேசு கிறிஸ்து, தாம் பூமியில் இருந்தபோது நோயுற்ற ஆட்களைச் சுகப்படுத்தும் பல அற்புதங்களை நடப்பித்தார். இவ்வாறு செய்ததன் மூலம், சமீபத்தில் நெருங்கியிருக்கிற இந்த மிக மேன்மையான காலத்தில், எப்படி, உயிர் வாழ்வோர் எல்லோரும் பரிபூரண உடல் நலத்தைத் திரும்பப்பெறும்படி செய்யப்படுவர் என்பதை அவர் காட்டினார்.—யோபு 33:25; ஏசாயா 33:24; 35:5, 6; மத்தேயு 15:30, 31.

12 ஆ, எப்பேர்ப்பட்ட அழகிய தோட்ட வீடாக இது இருக்கிறது, பாருங்கள்! கிறிஸ்து வாக்குக் கொடுத்தபடி, இது மெய்யாகவே ஒரு பரதீஸாக இருக்கிறது, கீழ்ப்படியாத அந்த முதல் மனிதனும் மனுஷியும் இழந்த அந்தப் பரதீஸுக்கு ஒப்பாக இருக்கிறது. (லூக்கா 23:43) நிலவியிருக்கும் அந்த சமாதானத்தையும் ஒத்திசைவையும் கவனியுங்கள். எல்லா மரபினரைச் சேர்ந்த மக்களும்—கருமை நிறத்தவரும், வெள்ளையரும், மஞ்சள் நிறத்தவரும்—ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். மிருகங்களுங்கூட சமாதானமாய் இருக்கின்றன. அந்தச் சிறுபிள்ளை சிங்கத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். என்றாலும் அங்கே பயத்திற்குக் காரணமே இல்லை. இதன் சம்பந்தமாக சிருஷ்டிகர் பின்வருமாறு அறிவிக்கிறார்: “சிவிங்கி வெள்ளாட்டுக் குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்று குட்டியும் பால சிங்கமும் கொழுத்த காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். . . . சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங் குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும்.”—ஏசாயா 11:6-9. தி.மொ.

13 மனிதருக்காகக் கடவுள் நோக்கங் கொள்கிற அந்தப் பரதீஸில், மகிழ்ந்திருப்பதற்கு எல்லாக் காரணமும் இருக்கும். சாப்பிடுவதற்கு ஏராளமான நல்ல பொருட்களைப் பூமி விளைவிக்கும். இனி ஒருபோதும் எவரும் பசியாக இரார். (சங்கீதம் 72:16; 67:6) போர்கள், குற்றச் செயல்கள், வன்முறை, பகையும், தன்னலமுங்கூட, கடந்தகால காரியங்களாக இருக்கும். ஆம், அவை என்றுமாக ஒழிந்துபோய்விட்டிருக்கும்! (சங்கீதம் 46:8, 9; 37:9-11) இதெல்லாம் கூடிய காரியமென்று நீங்கள் நம்புகிறீர்களா?

14 இதை எண்ணிப் பாருங்கள்: உங்களுக்கு வல்லமையிருந்தால், மனிதருக்குத் துன்பமுண்டாக்குகிற எல்லாக் காரியங்களையும் நீங்கள் முடிவுக்குக் கொண்டுவருவீர்களா? மனித இருதயம் வாஞ்சிக்கிற நிலைமைகளை நீங்கள் கொண்டுவருவீர்களா? நிச்சயமாகவே நீங்கள் செய்வீர்கள். நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பன் அதையே செய்வார். அவர் நம்முடைய தேவைகளையும் வாஞ்சைகளையும் திருப்தி செய்வார், எப்படியெனில் சங்கீதம் 145:16 கடவுளைக் குறித்து: “நீர் உம்முடைய கையைத் திறந்து உயிருள்ள ஒவ்வொன்றின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்,” என்று சொல்லுகிறது. ஆனால் இது எப்பொழுது நடைபெறும்?

மகத்தான ஆசீர்வாதங்கள் அருகில் இருக்கின்றன

15பூமியில் இந்தச் சிறந்த ஆசீர்வாதங்களைக் கூடிய காரியமாக்க, அக்கிரமத்தையும் அதற்குக் காரணமாயுள்ளவர்களையும் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுக்கிறார். அதே சமயத்தில் தம்மைச் சேவிக்கிறவர்களை அவர் பாதுகாப்பார், ஏனெனில் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகிறது: “கடவுளின் சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறான்.” (1 யோவான் 2:17, தி.மொ.) ஆ, அது எப்பேர்ப்பட்ட மாற்றமாயிருக்கும்! இந்த உலகத்தின் முடிவு நம்முடைய பூமியின் முடிவைக் குறிக்காது. அதற்கு மாறாக, நோவாவின் நாளில் உலகமெங்கும் உண்டான அந்த ஜலப்பிரளயத்தில் நடந்ததைப் போலவே, அது பொல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் மாத்திரமே முடிவைக் குறிக்கும். கடவுளைச் சேவித்துக் கொண்டிருக்கிறவர்கள் இந்த முடிவைத் தப்பிப் பிழைப்பார்கள். அப்பொழுது, சுத்தமாக்கப்பட்ட ஒரு பூமியில், அவர்கள், தங்களுக்குத் தீங்கு செய்யவும் தங்களை ஒடுக்கவும் விரும்பின எல்லோரிலிருந்தும் விடுதலையானவர்களாய்ச் சுயாதீனத்தை அனுபவித்து மகிழுவார்கள்.—மத்தேயு 24:3, 37-39; நீதிமொழிகள் 2:21, 22.

16 ஆனால்: ‘நிலைமைகள் சீர்ப்பட்டுக் கொண்டல்ல, மேலும் மேலும் மோசமாகிக் கொண்டேதான் போகின்றன. இப்படியிருக்க, இந்த மகத்தான மாற்றம், அருகிலிருக்கிறதென்று நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?’ என்று எவராவது கேட்கக்கூடும். இயேசு கிறிஸ்து, தம்மை எதிர்காலத்தில் பின்பற்றுபவர்கள், இந்த உலகத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய காலம் இதுவேயென்று தெரிந்து கொள்ளும்படியாக, அவர்கள் கவனிக்க வேண்டிய பல காரியங்களை முன்னறிவித்தார். இந்த ஒழுங்கு முறையின் கடைசி நாட்கள், பெரும்படியான போர்கள், உணவு குறைபாடுகள், பெரும் பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் மிகுதியாதல், அன்பு தணிந்துகொண்டு போதல் ஆகிய இப்படிப்பட்ட காரியங்களால் குறிக்கப்படும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:3-12) “வெளியேற வழி தெரியாமல் தேசங்களின் தத்தளிப்பு” அப்பொழுது உண்டாயிருக்குமென்றும் அவர் கூறினார். (லூக்கா 21:25, NW) இன்னும், “கடைசி நாட்களில் கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள் வரும்,” என்றும் பைபிள் மேலுமாகச் சொல்லுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, NW) இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவை இதே நிலைமைகள்தாமே அல்லவா?

17 உலக நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்கிற பலர் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப்போகும் நிலையில், இருக்கிறதென்று சொல்லுகின்றனர். உதாரணமாக, அ.ஐ.மா. மியாமி, ஹெரல்ட் பத்திரிகையின் பதிப்பாசிரியர், பின்வருமாறு எழுதினார்: “பாதியளவான பகுத்தறிவுள்ள மனமுடைய எவரும், கடந்த ஒரு சில ஆண்டுகளின் புரட்சி இயல்பு வாய்ந்த நிகழ்ச்சிகளை ஒன்றுபடுத்திப் பார்த்து, இந்த உலகம் ஒரு சரித்திர முக்கியத்துவமான வாசலில் இருக்கிறதென்பதைக் காணக்கூடும். . . . மனிதர் வாழும் முறையை இது என்றுமாக மாற்றிவிடும்.” இதைப் போலவே, அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளராகிய லூயி மம்ஃபர்ட் பின்வருமாறு கூறினார்: “நாகரீகமானது கீழ்நோக்கி சரிந்துகொண்டே போகிறது. வெகு நிச்சயமாகவே . . . கடந்த காலத்தில் நாகரீகங்கள் கீழ்நோக்கி சரிந்துகொண்டு போனபோது அது, அநேகமாய் அந்த குறிப்பிட்ட இடத்தின் சம்பவமாக இருந்தது. இப்பொழுதோ, உலகம், நவீன போக்குவரத்துச் சாதனங்களால் மிக நெருங்க ஒன்றோடொன்று பிணைத்து இணைத்து வைக்கப்பட்டிருக்க, நாகரிகம் கீழ்நோக்கி வீழ்கையில், இந்த முழு கிரகமும் கீழ்நோக்கி வீழ்ந்துகொண்டு போகிறது.”

18 இன்று இந்த உலகத்தில் இருக்கும் இதே நிலைமைகள்தாமே இந்த முழு காரிய ஒழுங்குமுறையின் அழிவு நிறைவேறப் போகிற அந்தக் காலத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுகின்றன. ஆம், இப்பொழுது வெகு சீக்கிரத்தில், கடவுள், இந்தப் பூமியைப் பாழாக்கவிருக்கிற எல்லோரையும் அதிலிருந்து அகற்றி பூமியைச் சுத்திகரிப்பார். (வெளிப்படுத்துதல் 11:18) தம்முடைய நீதியுள்ள அரசாங்கம் பூமி முழுவதையும் ஆளுவதற்கு வழியை உண்டுபண்ண அவர் தற்கால அரசாங்கங்களை நீக்கிப் போடுவார். இந்த ராஜ்ய அரசாங்கத்திற்காகவே ஜெபிக்கும்படி கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.—தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.

19 நீங்கள் உயிரை நேசித்து கடவுளுடைய ஆட்சியின்கீழ் பூமியில் என்றும் வாழ விரும்புகிறீர்களென்றால், அப்பொழுது கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் அவர் கட்டளைகளையும் பற்றிய திருத்தமான அறிவை உட்கொள்ள விரைவுபட வேண்டும். இயேசு கிறிஸ்து கடவுளிடம் ஜெபத்தில் பின்வருமாறு சொன்னார்: “ஒரே மெய்க் கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் உட்கிரகித்து வருவதே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) நாம் என்றுமாக வாழ்ந்திருக்கக்கூடும்—அது வெறும் கனவல்ல என்று அறிவது ஆ, எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியைத் தருகிறது! ஆனால் கடவுளிடமிருந்து வரும் இந்த மிகச் சிறந்த ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ, நாம், இந்த ஆசீர்வாதத்தை உண்மையாய் அடைவதிலிருந்து நம்மைத் தடுத்துவைக்க முயலுகிற ஒரு சத்துருவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

[கேள்விகள்]

1, 2. மக்கள் பூமியில் மகிழ்ச்சியுடன் என்றும் வாழலாம் என்று நம்புவது ஏன் கடினமாய் இருக்கிறது?

3. மக்கள் பூமியில் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கும்படியே கடவுள் விரும்புகிறார் என்று எது காட்டுகிறது?

4. மனித உடல் என்றும் வாழும்படி உண்டாக்கப்பட்டதென்பதைக் காட்டும் எதை விஞ்ஞானிகள் கற்றறிந்திருக்கிறார்கள்?

5. பூமியைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

6. (எ) இன்று பூமியில் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன? (பி) நிலைமைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பமா?

7. கடவுள், முதல் மனிதத் தம்பதிகளைப் படைத்தபோது பூமியைக் குறித்த அவருடைய நோக்கம் என்னவாக இருந்தது?

8. அந்த முதல் தம்பதிகள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போன போதிலும், பூமியைக் குறித்த கடவுளுடைய நோக்கம் மாறவில்லை என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

9. (எ) மக்கள் பொதுவாய் என்ன ஆவலை உடையவர்களாக இருக்கிறார்கள்? (பி) ‘நித்திய கால நினைவை அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்’ என்று பைபிள் என்ன அர்த்தத்துடன் சொல்லுகிறது?

10. (எ) மனிதன் இயல்பாய் எங்கே என்றென்றும் வாழ்ந்திருக்க விரும்புகிறான்? (பி) பூமியில் என்றென்றும் வாழ்ந்திருப்பதைக் கடவுள் நமக்குக் கூடிய காரியமாக்குவார் என்று ஏன் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்?

11. மக்கள் முழு நிறைவான உடல் நலத்தில் என்றென்றும் வாழக்கூடும் என்று காட்ட பைபிள் என்ன சொல்லுகிறது?

12. இந்தப் படங்களில் என்ன நிலைமைகளை நாம் காண்கிறோம்?

13. கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுகையில் பூமியிலிருந்து என்ன ஒழிந்துபோய்விட்டிருக்கும்?

14. கடவுள் துன்பத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்று நீங்கள் நம்பும்படி செய்விப்பது எது?

15. (எ) இந்த உலகத்தின் முடிவு பூமிக்கு எதைக் குறிக்கும்? (பி) பொல்லாத மக்களுக்கு இது எதைக் குறிக்கும்? (சி) கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு இது எதைக் குறிக்கும்?

16. என்ன நிகழ்ச்சிகள் ‘கடைசி நாட்களைக்’ குறிப்பதாக முன்னறிவிக்கப்பட்டன?

17. இன்றைய நிலைமைகளைப் பற்றி சிந்தனையுள்ள ஆட்கள் என்ன சொல்லி வந்திருக்கின்றனர்?

18. (எ) எதிர்காலத்தைப் பற்றி உலக நிலைமைகள் என்ன காட்டுகின்றன? (பி) தற்கால அரசாங்கங்களின் இடத்தை எது ஏற்கும்?

19. நாம் என்றும் வாழ விரும்புவோமென்றால், என்ன செய்யவேண்டும்?

[பக்கம் 8, 9-ன் படம்]

இந்த உலகம் இவ்வாறு இருக்கும்படியா கடவுள் கருதினார்?

[பக்கம் 11-ன் முழுபடம்]