Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள்—அவர் யார்?

கடவுள்—அவர் யார்?

அதிகாரம் 4

கடவுள்—அவர் யார்?

உலகமெங்கும் பல கடவுட்கள் வணங்கப்படுகின்றனர். ஷின்டோ மதம், புத்த மதம், இந்து மதம், மற்றும் குல தெய்வ விழிபாட்டு மதங்கள் ஆகியவற்றில் கோடிக்கணக்கான கடவுட்கள் இருக்கின்றனர். இயேசுவின் அப்போஸ்தலருடைய நாட்களில் தேயுஸ், ஹெர்மேஸ் போன்ற இப்படிப்பட்ட கடவுட்கள் வணங்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 14:11, 12, தி.மொ.) ஆகவே, “அநேக தேவர்கள்” இருப்பதாக பைபிள் ஒத்துக் கொள்ளுகிறது, ஆனால், “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது,” என்றும் அது சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 8:5, 6) ‘இந்தக் கடவுள் யார்?’ என்று உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?

2 ‘அவரே கர்த்தர்,’ என்று பலர் பதிலுரைக்கின்றனர். அல்லது ‘அவர் பரலோகத்திலுள்ள ஓர் ஆவி’ என்று அவர்கள் சொல்லலாம். ஓர் அகராதி கடவுளை “ஈடற்ற உன்னதர்” என்றழைக்கிறது. ‘கடவுளுடைய பெயர் என்ன? என்று கேட்கையில், சிலர், ‘இயேசு’ என்று பதிலுரைக்கின்றனர். மற்றவர்கள் கடவுளை ஓர் ஆளாக அல்ல, எங்கும் இருக்கிற ஒரு வல்லமை வாய்ந்த சக்தி என்பதாகவே எண்ணுகின்றனர். சிலர், கடவுள் உண்டா என்றுங்கூட சந்தேகிக்கின்றனர். அவர் இருக்கிறார் என்று நாம் நிச்சயமாய் இருக்கக்கூடுமா?

கடவுள் உண்மையில் இருக்கிறார்

3 நீங்கள் ஓர் அழகிய கட்டடத்தைப் பார்க்கையில், அதை யார் கட்டியிருப்பார் என்று எப்பொழுதாவது அதிசயத்திருக்கிறீர்களா? அந்தக் கட்டடத்தை ஒருவருமே கட்டவில்லை, அது வெறுமென தானாகவே உண்டாயிற்று, என்று எவராவது உங்களுக்குச் சொல்வாரானால் நீங்கள் அதை நம்புவீர்களா? நிச்சயமாகவே நம்பமாட்டீர்கள்! பைபிள் எழுத்தாளன் ஒருவன் சொன்னதுபோல்: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்.” இது எல்லோருக்கும் தெரியும். அப்படியானால்: “எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் தேவன்,” என்ற, இந்தப் பைபிள் எழுத்தாளனின் நியாயமான முடிவை நாம் ஏற்கலாமல்லவா?—எபிரெயர் 3:4.

4 கோடான கோடி நட்சத்திரங்களடங்கிய இந்தச் சர்வலோகத்தைக் கவனியுங்கள். என்றபோதிலும் இவையாவும் ஒன்றுக்கொன்று பூரணமாக சம்பந்தப்பட்டதாய் இயங்கிடச் செய்யும் சட்டங்களுக்கேற்ப வானங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. “அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?” என்பது வெகு காலத்திற்கு முன்பாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியாகும். இதற்குக் கொடுக்கப்பட்ட பதில் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாய் இருக்கிறது: “அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.” (ஏசாயா 40:26) இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தங்களைத் தாமே உண்டாக்கிக் கொண்டன என்றும், அப்பேர்ப்பட்ட அதிசயமான ஒழுங்கில் சுற்றிவரும் அந்தப் பெரும் நட்சத்திர ஒழுங்குமுறைகளை எவ்வித வழிநடத்துதலும் இல்லாமல் அமைத்துக் கொண்டன என்றும் நினைப்பது நிச்சயமாகவே முட்டாள்தனமாயிருக்கும்!—சங்கீதம் 14:1.

5 மிக உயர்வான முறையில் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட சர்வலோகம் வெறுமென தானாகவே வந்திருக்க முடியாது. மிகுந்த வல்லமையுடைய அறிவு கூர்மையுள்ள சிருஷ்டிகரே இதை உண்டாக்க வேண்டியவராக இருந்தார். (சங்கீதம் 19:1, 2) ஒரு வணிகர், தாம் ஏன் கடவுள் நம்பிக்கையுடையவராக இருக்கிறார் என்று கேட்கப்பட்டபோது அவர், தம்முடைய தொழிற்சாலையில், இறைச்சி வெட்டும் கருவியின் 17 பாகங்களை ஒன்றாக இணைக்கக் கற்றுக் கொள்வதற்கு ஒரு பெண் இரண்டு நாட்கள் எடுக்கிறாள் என்று விளக்கி, மேலும் பின்வருமாறு கூறினார்: “நான் சாதாரண வெட்டுக்கருவி உற்பத்தியாளன்தான், ஆனால் இது எனக்கு நிச்சயமாய்த் தெரியும், இறைச்சி வெட்டும் கருவியின் இந்தப் 17 பாகங்களை ஒரு கழுவும் தொட்டியில் போட்டு அடுத்த 17 பில்லியன் (1,700 கோடி) ஆண்டுகள் குலுக்கலாம், என்றாலும் ஓர் இறைச்சி வெட்டும் கருவி உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது.” பூமியிலுள்ள பல வகைகளான உயிர்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம், ஒரு இறைச்சி வெட்டும் கருவியைப் பார்க்கிலும் அதிக சிக்கலானது. இப்படிப்பட்ட ஒரு கருவியைச் செய்ய திறமைவாய்ந்த செயலாளன் தேவைப்படுகிறானென்றால், எல்லா காரியங்களையும் படைப்பதற்கு சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் தேவைப்பட்டார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர் செய்திருப்பவற்றிற்கு நற்புகழ் அவருக்கே செல்ல வேண்டுமல்லவா?—வெளிப்படுத்துதல் 4:11; அப்போஸ்தலர் 14:15-17; 17:24-26.

கடவுள் உண்மையான ஓர் ஆளா?

6 தாங்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்று பெரும்பான்மையர் சொல்லுகிறபோதிலும் பலர் அவரை உண்மையான ஓர் ஆளாக எண்ணுகிறதில்லை. அவர் உண்மையான ஓர் ஆள்தானா? புத்திக் கூர்மை எங்கேயோ அங்கே ஒரு மனதும் இருக்கிறதென்பதை காணமுடிகிறது. உதாரணமாக, “என் மனதில் ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லை,” என்று நாம் சொல்லக்கூடும். ஒரு மனம் எங்கே இருக்கிறதோ அங்கே திட்டவட்டமான உருவைக் கொண்ட ஓர் உடலில் ஒரு மூளை இருக்கிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அப்படியானால், எல்லா படைப்புக்கும் உத்தரவாதமுள்ள அந்த மிகப் பெரிய மனம், அந்த மிகப் பெரிய ஆளாகிய, சர்வ வல்லமையுள்ள கடவுளுடையது. சடப்பொருளான உடல் அவருக்கு இல்லையென்ற போதிலும், ஆவிக்குரிய உடல் அவருக்கு இருக்கிறது. ஓர் ஆவி ஆளுக்கு உடல் இருக்கிறதா? ஆம், ‘ஜென்ம சரீரமுண்டென்றால் ஆவிக்குரிய சரீரமுமுண்டு,’ என்று பைபிள் சொல்லுகிறது.—1 கொரிந்தியர் 15:44; யோவான் 4:24.

7 கடவுள் ஆவிக்குரிய உடலையுடைய ஓர் ஆளாக இருப்பதனால், அவர் வாழ்வதற்கு ஓர் இடம் வேண்டும். பரலோகங்கள் கடவுளுடைய “[ஸ்தாபிக்கப்பட்ட] வாசஸ்தலம்” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (1 இராஜாக்கள் 8:43) மேலும், “கிறிஸ்துவானவர் . . . பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்,” என்றும் நாம் சொல்லப்படுகிறோம். (எபிரெயர் 9:24) சில மனிதர் கடவுளுடன் வாழும்படி பரலோக வாழ்க்கைக்குரிய பரிசளிக்கப்படுவார்கள், அந்தச் சமயத்தில் அவர்கள் ஆவி உடலைப் பெற்றுக் கொள்வார்கள், அப்பொழுது அவர்கள் கடவுளைக் காண்பார்கள், மேலும் அவரைப் போலும் இருப்பார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. (1 யோவான் 3:2) இதுவுங்கூட கடவுள் ஓர் ஆள் என்றும், அவருக்கு ஓர் உடல் உண்டென்றும் காட்டுகிறது.

8 ஆனால் எவராவது பின்வருமாறு கேட்கக்கூடும்: ‘கடவுள் பரலோகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கிற ஒரு மெய்யான ஆளாக இருக்கிறாரென்றால், எங்கும் நடக்கிற எல்லாவற்றையும் அவர் எப்படிக் காணக்கூடும்? மேலும் அவருடைய வல்லமை சர்வலோகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் எப்படி உணரப்படக்கூடும்? (2 நாளாகமம் 16:9) கடவுள் ஓர் ஆள் என்ற இந்த உண்மை அவருடைய வல்லமையையோ மேன்மையையோ எவ்வகையிலும் மட்டுப்படுத்துகிறதில்லை. மேலும் அவர் பேரிலுள்ள நம்முடைய மரியாதையையும் அது குறைத்துவிடக்கூடாது. (1 நாளாகமம் 29:11-13) இதை விளங்கிக் கொள்ள நமக்கு உதவி செய்வதற்கு ஒரு மின்சக்தி உண்டாக்கும் பொறியின் பரந்த செயல் விளைவுகளைக் கவனியுங்கள்.

9 மின்சக்தி உண்டாக்கும் ஒரு பொறி ஒரு நகரத்திலோ அல்லது அதற்கு அண்மையிலோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது. என்றாலும் அதன் மின்சக்தி அந்தப் பகுதி முழுவதிலும் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வருகிறது. கடவுளைக் குறித்ததிலும் இதுவே உண்மையாய் இருக்கிறது. அவர் பரலோகங்களில் இருக்கிறார். (ஏசாயா 57:15; சங்கீதம் 123:1) என்றபோதிலும் அவருடைய செயல்படுத்துகிற காணக் கூடாத சக்தியாகிய, அவருடைய பரிசுத்த ஆவி, சர்வலோகம் முழுவதன் மீதும் எங்கும் உணரப்படக் கூடியதாய் இருக்கிறது. தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு கடவுள் வானங்களையும், இந்தப் பூமியையும் உயிருள்ள எல்லாவற்றையும் படைத்தார். (சங்கீதம் 33:6; ஆதியாகமம் 1:2; சங்கீதம் 104:30) இவற்றைப் படைப்பதற்குக் கடவுள் சரீரத்தில் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தொலைவில் இருக்கிற போதிலும் தாம் விரும்புகிற எல்லாவற்றையும் செய்யும்படி தம்முடைய செயல்படுத்தும் சக்தியாகிய, தம்முடைய ஆவியை அனுப்பக்கூடும். ஆ, எப்பேர்ப்பட்ட அதிசயமான கடவுள்!—எரேமியா 10:12; தானியேல் 4:35.

கடவுள் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறார்?

10 நாம் கடவுளை நன்றாக அறியவருகிறோமென்றால் அவரை நேசிப்பதில் அதிகமதிகமாக வளருவோம். கடவுள் அப்படிப்பட்ட ஆளாக இருக்கிறாரா? ‘ஒருவேளை அப்படி இருக்கலாம், ஆனால், நாம் கடவுளைக் காணமுடியாதிருக்க, அவரைப்பற்றி நாம் எப்படி அறியவரலாம்?’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். (யோவான் 1:18) பைபிள் பின்வருமாறு சொல்லுகையில் ஒரு வழியைக் காட்டுகிறது: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படும்.” (ரோமர் 1:20) ஆகவே கடவுள் படைத்திருக்கிற காரியங்களை நாம் உண்மையில் ஆராய்ந்து பார்த்து அவற்றைப் பற்றிச் சிந்திப்போமானால், கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை விளங்கிக்கொள்ள அவை நமக்கு உதவி செய்யக்கூடும்.

11 நாம் பார்த்திருக்கிறபடி, நட்சத்திரங்கள் நிறைந்த வானங்களைச் சற்று நோக்கிப் பார்ப்பது தானே கடவுளுடைய உன்னத மேன்மையையும் மகா வல்லமையையும் பற்றி நிச்சயமாகவே நமக்குச் சொல்லுகிறது! (சங்கீதம் 8:3, 4; ஏசாயா 40:26) பின்பு இந்தப் பூமியைக் கவனித்துப் பாருங்கள். இந்தப் பூமி சூரியனிலிருந்து நுட்பமாய்ச் சரியான அளவு வெப்பத்தையும் ஒளியையும் அடைவதற்கேதுவான வகையில் கடவுள் அதை வானங்களில் வைத்தார். நீர் சுழற்சியைக் கவனியுங்கள். பூமிக்கு நீர் பாய்ச்சுவதற்கு மழை பெய்கிறது. இந்த நீர் ஓடி நதிகளுக்குள் சேருகிறது. நதிகள் ஓடி கடல்களுக்குள் சேருகின்றன; சூரியன் இந்த நீரைக் கடல்களிலிருந்து நீராவியாக மேலே இழுத்துக் கொள்ளுகிறது, இந்த நீராவி மறுபடியுமாக பூமிக்கு நீர் பாய்ச்சுவதற்கு மழையாகப் பெய்கிறது. (பிரசங்கி 1:7) மனிதனுக்கும் மிருகங்களுக்கும் தேவையான உணவு, தங்குமிடம், மற்றும் எல்லா காரியங்களையும் அளிப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கும்படி கடவுள் வைத்திருக்கும் அதிசயமான சுழற்சிகள் இன்னும் எத்தனையோ பல இருக்கின்றன! இந்த எல்லா அதிசயமான காரியங்களும் கடவுள் எப்படிப்பட்ட ஆள் என்பதைப் பற்றி நமக்கு என்ன சொல்லுகின்றன? அவர் மகா ஞானமுள்ள கடவுள் என்றும் அவர் மிக அதிக தயாளமுள்ளவர், தம்முடைய படைப்புகளை அக்கறையோடு கவனிப்பவர் என்றும் சொல்லுகின்றன.—நீதிமொழிகள் 3:19, 20; சங்கீதம் 104:13-15, 24, 25.

12 உங்கள் சொந்த உடலைக் கவனியுங்கள். அது சந்தேகமில்லாமல் வெறுமென உயிர் வாழ்வதைப் பார்க்கிலும் அதிகம் செய்யும்படி உண்டாக்கப்பட்டது. உண்மையாகவே வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கும்படி அது அதிசயமாய்த் திட்டமிட்டமைக்கப்பட்டது. (சங்கீதம் 139:14) நம்முடைய கண்கள் வெறுமென கருப்பிலும் வெள்ளையிலுமே அல்ல, நிறத்தில் காணக் கூடியனவாக இருக்கின்றன; மேலும் மகிழ்ந்து அனுபவிக்கும்படி இந்த உலகம் ஏராளமான நிறங்களால் நிரம்பியிருக்கிறது. நம்மால் முகரவும் சுவைக்கவும் முடிகிறது. ஆகவே சாப்பிடுவது வெறுமென அவசியமான ஓர் செயல்தானே அல்ல; அது மிகுந்த இன்பந்தரக்கூடியதாய் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதத் தேவையல்ல, ஆனால் இவை, அன்பும், தயாளமும், கனிவான யோசனையுமுள்ள கடவுள் கொடுத்திருக்கிற பரிசுகள்.—ஆதியாகமம் 2:9; 1 யோவான் 4:8.

13 கடவுள் மனிதவர்க்கத்தோடு கையாண்டிருக்கிற முறைகளைக் கவனித்துப் பார்ப்பதுங்கூட அவர் எப்படிப்பட்ட கடவுளென்று காட்டுகின்றன. அவர் உறுதியான நீதி உணர்வுடையவராக இருக்கிறார். குறிப்பிட்ட சில ஜாதியாருக்குப் பட்சபாதம் காட்டுகிறவராக அவர் இல்லை. (அப்போஸ்தலர் 10: 34, 35) மேலும், அவர் இரக்கமும் உருக்கமுமுள்ளவர். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தாம் விடுதலை செய்த இஸ்ரவேல் ஜனத்துடன் அவர் கையாண்ட முறைகளைப் பற்றி பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவரோ . . . இரக்கமுள்ளவராய் . . . அவர்கள் மாம்சமென்று . . . நினைவுகூர்ந்தார்.” என்றபோதிலும் இஸ்ரவேலர் அடிக்கடி கீழ்ப்படியாமற் போனார்கள். இது கடவுளை விசனப்படுத்தியது. பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “அவர்கள் . . . அவரை விசனப்படுத்தினார்கள் . . . இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள் [மனவேதனையடைய செய்தார்கள், NW].” (சங்கீதம் 78:38-41; 103: 8, 13, 14) மறுபட்சத்தில், தம்முடைய ஊழியர்கள் தம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கையில், கடவுள் மகிழ்ச்சியடைகிறார். (நீதிமொழிகள் 27:11) மேலும் கடவுள், தம்முடைய ஊழியர்களைச் சத்துருக்கள் துன்புறுத்துகையில் தாம் எப்படி உணருகிறார் என்பதையும் விவரிக்கிறார்: “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.” (சகரியா 2:8) எல்லா ஜாதியாரும் ஜனத்தாருமாகிய தாழ்ந்த அற்ப மனிதர்பேரில் இவ்வளவு பிரியமாயிருக்கும் ஒரு கடவுளை நேசிக்கும்படி நீங்கள் தூண்டப்படுகிறீர்களல்லவா?—ஏசாயா 40:22; யோவான் 3:16.

கடவுள் இயேசுவா அல்லது ஒரு திரித்துவமா?

14 இந்த அதிசயமான கடவுள் யார்? அவருடைய பெயர் இயேசு என்று சில ஆட்கள் சொல்கின்றனர். அவர் ஒரு திரித்துவம் என்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள், “திரித்துவம்” என்ற இந்தச் சொல் பைபிளில் காணப்படாதபோதிலும் அவ்வாறு சொல்லுகின்றனர். இந்தத் திரித்துவ போதகத்தின் பிரகாரம், ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர், அதாவது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே கடவுள்” என்பதாகும். பல மத அமைப்புகள் இதை ஒரு “விளங்காப் புதிர்” என்று ஒப்புக் கொள்ளுகிற போதிலும் இதைக் கற்பிக்கின்றனர். கடவுளைப் பற்றிய இப்படிப்பட்ட கருத்துக்கள் திருத்தமானவையா?

15 இயேசு எப்பொழுதாவது தாம் கடவுள் என்று சொன்னாரா? இல்லை, அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, பைபிளில் அவர் “தேவனுடைய குமாரன்” என்றே அழைக்கப்படுகிறார். மேலும் அவர், “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்,” என்று சொன்னார். (யோவான் 10:34-36; 14:28) மேலும், இயேசு, தாமோ தூதர்களோ அறியாதவையும், ஆனால் கடவுள் மாத்திரமே அறிந்திருந்தவையுமான சில காரியங்கள் இருந்தனவென்று விளக்கினார். (மாற்கு 13:32) மேலும், ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு கடவுளிடம் ஜெபித்து பின்வருமாறு கூறினார்: “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது,” என்று ஜெபம் பண்ணினார். (லூக்கா 22:42) இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுளாக இருந்தாரென்றால், அவர் தம்மிடம்தாமே ஜெபித்திருக்க மாட்டார் அல்லவா? உண்மையில், இயேசுவின் மரணத்தைப் பின்தொடர்ந்து வேத வசனமானது: “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்,” என்று சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 2:32) இவ்வாறு சர்வ வல்லமையுள்ள கடவுளும் இயேசுவும் தெளிவாகவே இரண்டு தனித்தனி ஆட்கள். அவருடைய மரணத்துக்கும் உயிர்தெழுதலுக்கும் பரலோகத்துக்கு ஏறிப் போனதற்குப் பின்புங்கூட, இயேசு இன்னும் தம்முடைய தகப்பனுக்கு சமமானவராக இல்லை.—1 கொரிந்தியர் 11:3; 15:28.

16 ஆனால், இயேசு ஒரு கடவுள் என்று பைபிளில் அழைக்கப்படுகிறாரல்லவா?’ என்று எவராவது கேட்கலாம். இது உண்மையே. என்றபோதிலும், சாத்தானுங்கூட ஒரு கடவுள் என்று அழைக்கப்படுகிறான். (2 கொரிந்தியர் 4:4) இயேசுவை “அந்த வார்த்தை” என்று குறிப்பிடுகிற யோவான் 1:1-ல், பைபிள் மொழி பெயர்ப்புகள் சில பின்வருமாறு கூறுகின்றன: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” ஆனால் 2-வது வசனம், அந்த வார்த்தை “ஆதியிலே தேவனோடு இருந்தார்,” என்று சொல்வதைக் கவனியுங்கள். மனிதர் இயேசுவைக் கண்டிருக்கையில், 18-வது வசனம், “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,” என்று சொல்லுகிறது. (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) ஆகவே சில மொழி பெயர்ப்புகள் 1-ம் வசனத்தைப் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கையில் மூல மொழியின் திருத்தமான கருத்தைக் கொடுக்கின்றனவென்று நாம் காண்கிறோம். “அந்த வார்த்தை கடவுளுடன் இருந்தது. மேலும் அந்த வார்த்தை தெய்வத் தன்மை வாய்ந்ததாக இருந்தது,” அல்லது “ஒரு கடவுளாக,” இருந்தது, அதாவது, அந்த வார்த்தை வல்லமை வாய்ந்ததாய்க் கடவுளைப் போன்ற ஒன்றாக இருந்தது. (அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன்) இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் அல்ல என்பது தெளிவாய் இருக்கிறது. உண்மையில், இயேசு, தம்முடைய தகப்பனை “என் தேவன்” என்றும் “ஒரே மெய்த் தேவன்” என்றும் பேசினார்.—யோவான் 20:17; 17:3, NW.

17 திரித்துவத்தின் மூன்றாம் ஆள் எனப்படுகிற “பரிசுத்த ஆவி”யைக் குறித்ததில், இது ஓர் ஆள் அல்ல, ஆனால் கடவுளுடைய கிரியை செய்யும் சக்தி என்று நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். யோவான் தண்ணீரில் முழுக்காட்டி வந்தது போல, இயேசு பரிசுத்த ஆவியில் முழுக்காட்டுவார் என்று முழுக்காட்டுபவனாகிய யோவான் சொன்னான். ஆகவே, அந்தத் தண்ணீர் ஓர் ஆளல்லாததைப் போலவே, பரிசுத்த ஆவியும் ஓர் ஆளல்ல. (மத்தேயு 3:11) இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பின்தொடர்ந்து எருசலேமில் கூடியிருந்த, அவரைப் பின்பற்றினவர்களின் பேரில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது, யோவான் முன்னறிவித்தது நிறைவேற்றமடைந்தது. “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே “நிரப்பப்பட்டார்கள்” என்று பைபிள் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 2:4) அவர்கள் ஓர் ஆளால் “நிரப்பப்பட்டார்களா”? இல்லை, அவர்கள் கடவுளுடைய கிரியை செய்யும் சக்தியால் நிரப்பப்பட்டார்கள். இவ்வாறு, திரித்துவம் பைபிள் போதகமல்ல என்று உண்மைகள் தெளிவாக்குகின்றன. உண்மையில் இயேசு பூமியில் இருந்ததற்கு வெகு காலத்துக்கு முன்பாக பூர்வ எகிப்து, பாபிலோன் ஆகியவற்றைப் போன்ற இடங்களில் தெய்வங்கள் மும்மூன்று தொகுதிகளாக அல்லது திரித்துவங்களாக வணங்கப்பட்டு வந்தனர்.

கடவுளுடைய பெயர்

18 சந்தேகமில்லாமல், உங்களுக்குத் தெரிந்திருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை உடையவர்களாக இருக்கிறார்கள். மற்ற எல்லோரிலிருந்தும் தம்மைத் தனியே பிரித்துக் காட்ட கடவுளுங்கூட ஒரு தனிப்பட்ட பெயரை உடையவராயிருக்கிறார். “கடவுள்” என்பது அவருடைய பெயரல்லவா?’ என்று சிலர் கேட்கலாம். இல்லை, ஏனெனில், “முதல்வர்,” “அரசர்,” “நியாயாதிபதி” ஆகியவை பதவிப் பெயர்களாக இருப்பதைப் போலவே “கடவுள்” என்பதும் வெறும் ஒரு பதவிப் பெயரே. கடவுளுடைய பெயரை நாம் பைபிளிலிருந்து கற்றறிகிறோம், அங்கே அது ஏறக்குறைய 7,000 தடவைகள் தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் சங்கீதம் 83:17 பின்வருமாறு வாசிக்கிறது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,” . . . மேலும், பெரும்பான்மையான பைபிள்களில் வெளிப்படுத்துதல் 19:1-6-ல் கடவுளுடைய பெயர், “அல்லேலூயா” அல்லது “ஹல்லேலூஜா” என்ற தொடரின் பாகமாகக் காணப்படுகிறது. இதன் கருத்து “யாவைத் துதி” என்பதாகும். “யா” என்பது யெகோவா என்பதற்குச் சுருக்கமாகும்.

19 சில ஆட்கள் தங்கள் பைபிளில் கடவுளுடைய பெயரைக் காண்பதில் ஆச்சரியமடைகிறார்கள். இது பெரும்பாலும், அவர்களுடைய பைபிள் கடவுளுடைய பெயரை வெகு அரிதாகப் பயன்படுத்தும் ஒன்றாக இருப்பதன் காரணமாகவேயாகும். உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு தனிப்பட “யெகோவா” என்ற இந்தப் பெயரை யாத்திராகமம் 6: 2, 3; சங்கீதம் 68:4; 83:17; ஏசாயா 12:2; 26:4; எரேமியா 16:21; 33:2; ஓசியா 12:5 ஆகிய இடங்களில் மாத்திரமே பயன்படுத்துகிறது. என்ற போதிலும் இந்தப் பைபிள் கடவுளுடைய பெயரை “கர்த்தர்” அல்லது “தேவன்” என்ற பதவிப் பெயரால் மொழிபெயர்க்கையில் “கர்த்தர்,” “தேவன்” என்றவாறு தடித்த எழுத்துக்களில் வைக்கிறது. ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளில் LORD , GOD” என்று பெரிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரண சொற்களாகிய “Lord,” “God” என்பவற்றிலிருந்து அதைத் தனியே பிரித்து வைக்கிறது. இதைச் சங்கீதம் 110:1-ல் (ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில்) கவனியுங்கள்.

20‘ ஆனால் மூல பைபிள் வாக்கியத்தில் கடவுளுடைய பெயர், காணப்படுகிற அதற்குரிய ஒவ்வொரு இடத்திலும் அது ஏன் பயன்படுத்தப்படுகிறதில்லை? கர்த்தர், தேவன் என்ற பதவிப் பெயர்களே ஏன் பொதுவாய்ப் பயன்படுத்தப்படுகின்றன?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆங்கில அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் அதன் முன்னுரையில், அது ஏன் கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதைப் பயன்படுத்துகிறதென்பதையும், இந்தப் பெயர் ஏன் வெகு காலமாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் பின்வருமாறு விளக்குகிறது: “இந்த அமெரிக்க திருத்திய மொழிபெயர்ப்பாளர்கள், கவனமாக ஆழ்ந்து ஆலோசித்தப் பின்பு, இந்தத் தெய்வீகப் பெயர் வாய்விட்டு சொல்லக்கூடாத அளவுக்கு அதிக பரிசுத்தமுள்ளது என்ற யூதரின் ஒரு மூட நம்பிக்கை, ஆங்கில அல்லது வேறு எந்த மொழிபெயர்ப்பிலும் இனிமேல் செல்வாக்குச் செலுத்திடக் கூடாதென்ற ஒருமித்தத் தீர்மானத்திற்கு வந்தார்கள் . . . இந்தத் தனிப்பட்ட பெயர், அதன் பரிசுத்தக் கருத்துத் தொடர்புகளின் எல்லா நிறைவுகளுடனும், மறுக்கமுடியாத உரிமை பெற்றுள்ள பரிசுத்த வாக்கியத்தில், அதனிடத்திற்கு இப்பொழுது திரும்பக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறது.” ஆம், பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மனிதர், கடவுளுடைய பெயர் விட்டு விடப்பட்டிருந்ததன் காரணங்கள் நல்லதல்லவென்று உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள் அதை பைபிளில் அதனுடைய சரியான இடங்களில் திரும்ப வைத்தார்கள்.

21 என்றபோதிலும், (ஆங்கிலத்தில்) “ஜெஹோவா” என்ற இந்தச் சொல் பயன்படுத்தப்படக் கூடாது, ஏனென்றால், அது உண்மையில் கடவுளுடைய பெயர் அல்ல என்று விவாதிக்கும் சிலர் இருக்கின்றனர். உதாரணமாக, அதன் முக்கியப் பகுதியில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தாத கத்தோலிக்க டூ வே வெர்ஷன், யாத்திராகமம் 6:3-க்குக் கொடுக்கும் அதன் அடிக் குறிப்பில் பின்வருமாறு சொல்லுகிறது: “தற்காலத்தவர் சிலர் ஜெஹோவா என்ற பெயரை அமைத்திருக்கின்றனர். . . . எபிரெய மூல வாக்கியத்திலுள்ள இந்தப் பெயரின் மெய்யான உச்சரிப்பு, வெகுகாலம் வழங்காமையினால், இப்பொழுது அநேகமாய் முற்றிலும் வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டிருக்கிறது.”

22 ஆம், இந்தக் கத்தோலிக்க பைபிள் இங்கே சொல்லுகிற பிரகாரம், கடவுளுடைய பெயர் எபிரெய மூல வாக்கியத்தில் நிச்சயமாகவே காணப்படுகிறது. எபிரெயுவானது பைபிளின் முதல் 39 புத்தகங்கள் எழுதப்பட்ட மொழியாயிருக்கிறது. அங்கே இந்தப் பெயர் ய்ஹ்வ்ஹ் என்ற நான்கு எபிரெய எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. பூர்வ காலங்களில் எபிரெய மொழியானது, சொற்களுக்குச் சரியான தொனியைக் கொடுக்க நமக்கு உதவி செய்யும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ போன்ற உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. ஆகையால், இன்றைய பிரச்னை என்னவென்றால், ய்ஹ்வ்ஹ் என்ற மெய்யெழுத்துக்களோடு எபிரெயர் சரியாய் எந்த உயிரெழுத்துக்களைப் பயன்படுத்தினர் என்பதை அறிவதற்கு எந்த வழியும் இல்லாதிருப்பதேயாகும்.

23 இந்தப் பிரச்னையை விளங்கிக் கொள்ள நமக்கு உதவிசெய்ய “வீடு” என்ற இந்தச் சொல்லைக் கவனியுங்கள். இது தொடக்கத்திலிருந்து உயிரெழுத்து இல்லாமல் எப்பொழுதுமே “வ்ட்” என்று எழுதப்பட்டு வந்ததென்றும், மேலும் காலப்போக்கில், இந்தச் சொல் ஒருபோதும் உச்சரிக்கப்படவில்லை என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியானால், இப்பொழுதிலிருந்து 1,000 ஆண்டுகளுக்கப்பால் வாழும் ஓர் ஆள் “வ்ட்” என்பதை எழுத்தில் காண்கையில், அதை எப்படி உச்சரிப்பதென்று அவனுக்கு எப்படித் தெரியும்? அது உச்சரிக்கப்படுவதை அவன் ஒருபோதும் காதால் கேட்டிராததால், மேலும் அந்தச் சொல்லில் சேர்க்கப்பட வேண்டிய உயிரெழுத்துக்கள் யாவை என்று அவனுக்குத் தெரியாததால், அதன் சரியான உச்சரிப்பு இன்னதென்று நிச்சயமாய் அவனுக்குத் தெரியாது. கடவுளுடைய பெயரைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. “யாவே” என்ற உச்சரிப்பு திருத்தமானதென்று சில நிபுணர் எண்ணுகிறபோதிலும், அது சரியாய் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதென்று அறியப்படாமல் இருக்கிறது. என்றபோதிலும், ஆங்கிலத்தில் “ஜெஹோவா” [தமிழில் “யேகோவா”] என்பது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வெகு விரிவாகவும் அறியப்பட்டு வந்திருக்கிறது.

24 என்றபோதிலும், கடவுளுடைய பெயரை, அது முதன் முதலில் உச்சரிக்கப்பட்ட சரியான உச்சரிப்பு முறையில், நாம் ஒருவேளை உச்சரிக்கிறதில்லையென்றாலும், அதை நாம் பயன்படுத்த வேண்டுமா? பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற ஆட்களின் பெயர்களை மூல எபிரெயுவில் உச்சரிக்கப்பட்ட முறையில் நாம் உச்சரிக்காவிட்டாலும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக, இயேசுவின் பெயர் எபிரெயுவில் “யெஷூவா” என்று உச்சரிக்கப்படுகிறது. அதைப் போலவே, பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற கடவுளுடைய பெயரை, நாம் “யாவே” என்றோ, “ஜெஹோவா” அல்லது நம்முடைய மொழியில் பொதுவாய் வழங்கப்படுகிற மற்றொரு முறையிலோ நாம் உச்சரித்தாலும் சரி, கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது சரியானதாய் இருக்கிறது. அந்தப் பெயரைப் பயன்படுத்தத் தவறுவதே பிழையாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால், அதைப் பயன்படுத்தாதவர்கள், கடவுள் “தம்முடைய நாமத்திற்காகப்” பிரித்தெடுத்து வருகிற அந்த ‘ஜனத்தோடு’ அடையாளங் கண்டுகொள்ளப்பட மாட்டார்கள். (அப்போஸ்தலர் 15:14) நாம் கடவுளுடைய பெயரைத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், இயேசு பூமியிலிருந்தபோது செய்தபடியே, மற்றவர்களுக்கு முன்பாக அதைப் புகழ்ந்து கனப்படுத்தவும் வேண்டும்.—மத்தேயு 6:9; யோவான் 17:6, 26.

நோக்கமுள்ள கடவுள்

25 யெகோவாவுக்கு ஒரு தொடக்கம் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு முடிவும் ஒருபோதும் இராது, இதை விளங்கிக் கொள்வது நம்முடைய மனதுக்குக் கடினமாக இருக்கலாம். அவர் “நித்தியத்தின் ராஜா.” (சங்கீதம் 90:2; 1 தீமோத்தேயு 1:17) தாம் படைப்பு வேலையை தொடங்குவதற்கு முன்பாக, யெகோவா, இப்பிரபஞ்சத்தில் தன்னந் தனிமையாக இருந்தார். என்றபோதிலும், அவர் தனிமை உணர்ச்சியுள்ளவராக இருந்திருக்க முடியாது, ஏனெனில் அவர் தம்மில் தாமே முழு நிறைவையுடையவராக இருக்கிறார், குறைவற்றவராக இருக்கிறார். படைப்பதற்கு, மற்றவர்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்க அவர்களுக்கு உயிரைக் கொடுப்பதற்கு, அன்பே, அவரைத் தூண்டுவித்தது. கடவுளுடைய முதல் படைப்புகள் அவரைப் போலவே ஆவி ஆட்கள். மனிதருக்காகப் பூமியை ஆயத்தப்படுத்துவதற்கு முன்பாகவே அவருக்குப் பரலோகக் குமாரர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு இருந்தது. அவர்கள், வாழ்க்கையிலும், அவர்கள் செய்யும்படி தாம் கொடுத்த அந்தச் சேவையிலும் மிகுந்த இன்பத்தைக் கண்டடையும்படி யெகோவா அவர்களுக்காக நோக்கங் கொண்டார்.—யோபு 38: 4, 7.

26 பூமி ஆயத்தப்படுத்தப்பட்ட போது, யெகோவா, ஆதாம் ஏவாளாகிய இந்தத் தம்பதிகளை, ஏற்கெனவே பரதீஸாக்கப்பட்டிருந்த பூமியின் ஒரு பாகத்தில் வைத்தார். தமக்குக் கீழ்ப்படிந்து தம்மை வணங்குகிறவர்களாகவும், பரதீஸை பூமி முழுவதன் மீதும் விரிவாக்குகிறவர்களாகவும் இருக்கும் பிள்ளைகளை அவர்கள் பிறப்பிக்கவேண்டுமென்பது அவருடைய நோக்கம். (ஆதியாகமம் 1:27, 28) என்றபோதிலும், நாம் கற்றிருக்கிறபடி, அந்தச் சிறப்பான நோக்கம் குறுக்கிட்டுத் தடுக்கப்பட்டது. ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போகத் தெரிந்து கொண்டனர், அவருடைய நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. என்றாலும் அது கட்டாயமாகவே நிறைவேற்றப்படும், ஏனென்றால் தாம் நோக்கங் கொள்வதை நிறைவேற்றாமலிருப்பது யெகோவா தோல்வியை ஒப்புக் கொள்வதாயிருக்கும். இதை அவர் ஒருபோதும் செய்ய முடியாது! “எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்,” என்று அவர் அறிவிக்கிறார்.—ஏசாயா 46: 10, 11.

27 கடவுளுடைய நோக்கத்தில் நீங்கள் எங்கே பொருந்தக் கூடுமென்பதைக் காண்கிறீர்களா? இது, கடவுளுடைய சித்தம் என்னவென்று ஆழ்ந்து ஆலோசியாமல், வெறுமென உங்களுக்கு விருப்பமான எதையாவது செய்வதன் மூலமாக அல்ல. சாத்தானும் ஆதாமும் ஏவாளும் இதையே செய்தார்கள். கடவுளுடைய சித்தம் இன்னதென்று அவர்கள் தெரிந்திருந்தார்கள், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. கடவுள் அவர்களைக் கணக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் வைத்தார். நாமுங்கூட கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோமா? ஆம், ஏனென்றால் கடவுள் நம்முடைய உயிரின் மூலகாரணராக இருக்கிறார். நம்முடைய உயிர் அவர்பேரில் சார்ந்திருக்கிறது. (சங்கீதம் 36:9; மத்தேயு 5:45) அப்படியானால், நம்மைக் குறித்த கடவுளுடைய நோக்கத்திற்கிசைய நாம் எந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையை நடத்தி வருகிறோம்? இதைப் பற்றி நாம் மிகுந்த கவனத்துடன் சிந்திக்க வேண்டும், ஏனென்றால் நித்திய ஜீவனடைவதற்கான நம்முடைய வாய்ப்பு அதன்பேரில் சார்ந்திருக்கிறது.

யெகோவாவை வணங்குவது எப்படி

28 யெகோவாவை நாம் எப்படி வணங்குகிறோம் என்பது முக்கியமானது. அவர் சொல்லுகிற முறையிலேயே நாம் அவரை வணங்க வேண்டும். இது, நாம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிற முறையிலிருந்து ஒருவேளை வேறுபட்டாலுங்கூட நாம் அவ்வாறு செய்ய வேண்டும். உதாரணமாக, தங்கள் வணக்கத்தில் விக்கிரகங்களைப் பயன்படுத்துவது சில ஆட்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அவர்கள் ஒருவேளை, தாங்கள் அந்த விக்கிரகத்தை வணங்குகிறதில்லை என்றும், அதைக் காண்பதும் தொடுவதும் கடவுளை வணங்கத் தங்களுக்கு உதவி செய்கிறதென்றும் சொல்லக் கூடும். என்றபோதிலும் விக்கிரகங்களின் உதவியைக் கொண்டு நாம் அவரை வணங்கும்படி கடவுள் விரும்புகிறாரா?

29 இல்லை, அவர் விரும்புகிறதில்லை. இந்தக் காரணத்தினிமித்தமாகவே, கடவுள் இஸ்ரவேலருக்கு எவ்வித காணக்கூடிய உருவத்திலும் ஒருபோதும் தோன்றவில்லை என்று மோசே அவர்களிடம் சொன்னான். (உபாகமம் 4:15-19) உண்மையில், பத்துக் கற்பனைகளில் ஒன்று பின்வருமாறு சொல்லுகிறது: “[எவற்றிற்கும்] ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” (யாத்திராகமம் 20: 4, 5; கத்தோலிக்க பைபிளிலும் பாருங்கள்.) யெகோவாவை மாத்திரமே வணங்க வேண்டும். ஒரு விக்கிரகத்தைச் செய்வது, அல்லது அதற்கு முன்பாகப் பணிவது, அல்லது யெகோவாவைத் தவிர எவரையோ எதையோ வணங்குவது எவ்வளவு தவறானதென்று பைபிள் திரும்பத் திரும்பக் காட்டுகிறது.—ஏசாயா 44:14-20; 46: 6, 7; சங்கீதம் 115:4-8.

30 அப்படியானால், நாம் ஒருவேளை எதிர்பார்த்திருக்கக் கூடியபடி இயேசு ஒருபோதும் வணக்கத்தில் விக்கிரகங்களைப் பயன்படுத்தவில்லை. “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்,” என்று அவர் விளக்கினார். (யோவான் 4:24) இந்த அறிவுரைக்கு ஒத்திசைந்து நடப்பவர்களாய், தொடக்கக் காலத்தில் இயேசுவைப் பின்பற்றினவர்கள் ஒருவருமே வணக்கத்தில் உதவிகளாக விக்கிரகங்களைப் பயன்படுத்தவில்லை. உண்மையில், அவருடைய அப்போஸ்தலனாகிய பவுல்: “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்,” என்று எழுதினான். (2 கொரிந்தியர் 5:6) மேலும் அவருடைய அப்போஸ்தலனாகிய யோவான்: “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக,” என்று எச்சரித்தான். (1 யோவான் 5:21) உங்கள் வீட்டைச் சுற்றிப் பார்வையிட்டு, இந்த அறிவுரையை நீங்கள் பின்பற்றி வருகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது நல்லதல்லவா?—உபாகமம் 7:25.

31 சிருஷ்டிகராகிய யெகோவா தாமே கட்டளையிடுகிற விதத்தில் அவரை வணங்கிவருவது உண்மையான மகிழ்ச்சியை நமக்கு, நிச்சயமாகவே கொண்டுவரும். (எரேமியா 14:22) அவருடைய கட்டளைகள் நம்முடைய நன்மைக்கானவை, நம்முடைய நித்திய சுகநலத்தை நோக்கமாகக் கொண்டவை என்று பைபிள் காட்டுகிறது. கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சட்டம் ஏன் அவ்வளவு முக்கியமானது, அல்லது அது நம்முடைய நன்மைக்காக எப்படி உண்மையில் செயல்படுகிறது என்பதை நாம், நம்முடைய மட்டுப்பட்ட அறிவின் மற்றும் அனுபவத்தின் காரணமாக முற்றிலுமாய் மதித்துணராத சில சமயங்கள் இருக்கலாம் என்பது மெய்யே. என்றபோதிலும், நமக்குத் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும் மிக மிக அதிகம் கடவுளுக்குத் தெரியும் என்ற நம்முடைய உறுதியான நம்பிக்கை முழு இருதயத்தோடு அவருக்குக் கீழ்ப்படியும்படி நம்மைத் தூண்டி இயக்க வேண்டும். (சங்கீதம் 19:7-11) அப்படியானால் பின்வரும் இந்த அழைப்பை ஏற்று, யெகோவாவைப் பற்றி நம்மால் கூடிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள எல்லா முயற்சியும் எடுப்போமாக: “நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். அவர் நமது கடவுள், நாம் அவர் மேய்ச்சலின் ஜனமும் அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.”—சங்கீதம் 95: 6, 7, தி.மொ.

[கேள்விகள்]

1. (எ) மக்கள் என்ன கடவுட்களை வணங்கிவந்திருக்கின்றனர்? (பி) “தேவர்களுக்கும்,” “தேவனுக்கும்” என்ன வேறுபாட்டை பைபிள் காட்டுகிறது?

2. கடவுளைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் யாவை?

3. ஒரு வீடு எப்படி உண்டாயிருக்கலாயிற்று?

4. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் எப்படி உண்டாயின?

5 (எ) இறைச்சி வெட்டும் ஒரு கருவியை உண்டுபண்ண அதற்குரிய துண்டுகள் தாமேயும் தாங்களாக ஒன்றாய் இணைந்தமைவதற்கு என்ன தற்செயல் வாய்ப்பு இருக்கிறது? (பி) நம்முடைய சர்வலோகத்தைப் பற்றியதில் இது என்ன காட்டுகிறது?

6. கடவுள் மெய்யான ஓர் ஆள் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

7. (எ) கடவுளுக்கு ஓர் இடம் இருக்கிறது, அங்கே அவர் வாழ்கிறார் என்று எது காட்டுகிறது? (பி) அவருக்கு ஓர் உடல் இருக்கிறதென்று எது காட்டுகிறது?

8, 9. (எ) மின்சக்தி உண்டாக்கும் பொறியின் உதாரணம் எப்படிக் கடவுளுடைய பரந்த, சகலத்தையும் எட்டக்கூடிய வல்லமையை விளக்கிக் காட்டக்கூடும்? (பி) கடவுளுடைய பரிசுத்த ஆவி என்பது என்ன, அது என்ன செய்யகூடும்?

10. நாம் கடவுளை அறியக்கூடிய ஒரு வழி என்ன?

11. கடவுள் உண்டாக்கியிருக்கிற காரியங்களிலிருந்து அவரைப் பற்றி நாம் என்ன கற்றறியக்கூடும்?

12. உங்கள் சொந்த உடல்தானேயும் கடவுளைப் பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

13. மனிதரோடு கடவுள் கையாண்ட முறையிலிருந்து அவரைப் பற்றி நீங்கள் என்ன கற்றறிகிறீர்கள்?

14. திரித்துவ போதகம் என்பது என்ன?

15. கடவுளும் இயேசுவும் சமமாயிராத இரண்டு தனித்தனி ஆட்கள் என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

16. “கடவுள்” என்பதாக இயேசு குறிப்பிடப்பட்டிருக்கிறபோதிலும் அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளல்ல என்று எது காட்டுகிறது?

17. இயேசுவைப் பின்பற்றினவர்களின்மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதானது, பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல என்று எப்படி நிரூபிக்கிறது?

18. (எ) “கடவுள்” என்பதே சர்வவல்லமையுள்ள கடவுளுடைய தனிப்பட்ட பெயரா? (பி) அவருடைய தனிப்பட்ட பெயரென்ன?

19. (எ) கடவுளுடைய பெயரைத் தங்கள் பைபிளில் காண்கையில் சிலர் ஏன் ஆச்சரியமடைகின்றனர்? (பி) தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் இந்தப் பெயர் எங்கே காணப்படுகிறது?

20. (எ) கடவுளுடைய பெயர் ஏன் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறதில்லை? (பி) அது பயன்படுத்தப்பட வேண்டுமா?

21. யெகோவா என்ற இந்தப் பெயரைப் பற்றி கத்தோலிக்க பைபிள் டூவே மொழிபெயர்ப்பு என்ன சொல்லுகிறது?

22. (எ) எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் எப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது? (பி) கடவுளுடைய பெயர் முதல் முதலில் எப்படி உச்சரிக்கப்பட்டதென்பதை அறிவது ஏன் ஒரு பிரச்னையாக இருக்கிறது?

23. “வீடு” என்பதற்கு “வ்ட்” என்ற உதாரணம் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதன் பிரச்னையை விளங்கிக் கொள்ள நமக்கு எப்படி உதவி செய்கிறது?

24. (எ) முரண்பாடற்றவர்களாக இருக்க, நாம் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது ஏன் தகுதியானது? (பி) அப்போஸ்தலர் 15:14-ஐக் கருதுகையில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியமானது?

25. (எ) கடவுளைப் பற்றிய என்ன காரியங்கள் நாம் விளங்கிக் கொள்வதற்குக் கடினமாயிருக்கலாம்? (பி) படைப்பு வேலையைத் தொடங்கும்படி யெகோவாவைத் தூண்டுவித்தது எது?

26. இந்தப் பூமியைக் குறித்துக் கடவுளுடைய நோக்கம் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

27. (எ) நாம் ஏன் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம்? (பி) என்ன கேள்வியை நாம் மிகுந்த கவனத்துடன் சிந்திக்க வேண்டும்?

28. கடவுளை வணங்குவதற்குச் சிலர் பயன்படுத்தியிருக்கிற உதவிகள் யாவை?

29. வணக்கத்தில் விக்கிரகங்களைப் பயன்படுத்துவது தவறு என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

30. (எ) விக்கிரகங்களைப் பயன்படுத்துவது தவறு என்று காட்டுகிற எதை இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் சொன்னார்கள்? (பி) உபாகமம் 7:25-ன் பிரகாரம் விக்கிரகங்களை என்ன செய்ய வேண்டும்?

31. (எ) கடவுளுடைய குறிப்பிட்ட ஒரு சட்டத்தின் காரணத்தை நாம் ஒருவேளை விளங்கிக் கொள்ளாவிட்டாலுங்கூட, அதற்குக் கீழ்ப்படியும்படி எது நம்மைத் தூண்டி இயக்குவிக்கும்? (பி) நாம் என்ன செய்ய முயலவேண்டும்? என்ன அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

[பக்கம் 42-ன் பெட்டி]

தமிழ் யூனியன் மொழி பெயர்ப்பில் கடவுளுடைய பெயர் தோன்றுகிற ஒன்பது இடங்களில் ஐந்து இடங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன

யாத்திராகமம் 6:3

3 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

சங்கீதம் 83:17

17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

ஏசாயா 12:2

2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

ஏசாயா 26:4

4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

[பக்கம் 34, 35-ன் படங்கள்]

ஒரு வீடு ஒருவனால் உண்டாக்கப்பட்டிருக்க, மிகச் சிக்கலான இந்த சர்வலோகமும் ஒருவரால் உண்டாக்கப்பட்டிருக்கவேண்டும்

[பக்கம் 39-ன் படம்]

இயேசு கடவுளிடம் ஜெபித்து, தம்முடைய சித்தமல்ல, கடவுளுடைய சித்தமே செய்யப்படவேண்டுமென்று கேட்டதால், இந்த இருவரும் ஒரே ஆளாக இருக்கமுடியாது

[பக்கம் 40, 41-ன் படம்]

பரிசுத்த ஆவி, ஒரே சமயத்தில் ஏறக்குறைய 120 சீஷர்களை நிரப்பியிருக்கையில் அது எப்படி ஓர் ஆளாக இருக்கக்கூடும்?

[பக்கம் 45-ன் படம்]

வணக்கத்தில் சிலைகளைப் பயன்படுத்துவது சரியா?