Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?

கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?

அதிகாரம் 1

கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?

கிரக பூமியில் இப்பொழுது வாழும் கோடிக்கணக்கான ஆட்களில் ஒருவரான உங்களுக்கு எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது? ஒருவரையொருவர் உண்மையாய் நேசிக்கும் மக்களுக்குள் சமாதானமும் பாதுகாப்புமுள்ள வாழ்க்கையாக அது இருக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்களா? இதுவும் இதைப் பார்க்கிலும் மிக அதிகமும் உங்களுடையதாகக்கூடும். ஆனால் பெரும்பான்மையர் எதிர்பார்ப்பது இத்தகைய எதிர்காலம் அல்ல. ஏன்?

2அணுக்குண்டுப் போரின் பயமுறுத்தல், மனித குலத்தின் பெரும் பகுதிகளுக்கு எதிர்காலம் என்ற ஏதாவது இருக்குமா என்பதைக் குறித்து வினைமையான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 1945-ல் அணுக்குண்டு முதன்முதல் போரில் பயன்படுத்தினபோது, 70,000-க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பிள்ளைகளும் உடனடியாகக் கொல்லப்பட்டனர். மேலும், பல ஆயிரக்கணக்கானோர் அதைப் பின்தொடர்ந்த நாட்களிலும் ஆண்டுகளிலும் வேதனைப்பட்டு மரணத்தை அனுபவித்தனர். ஆனால் இன்று அம்மாதிரியான ஒரு தனிக் குண்டு முனைப்பகுதி, இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தின எல்லாக் குண்டுகளிலும் மொத்தம் அடங்கியிருந்த வெடிச் சக்திப் பொருளைத் தன்னில் கொண்டிருக்கிறது. இத்தகைய பத்தாயிரக்கணக்கான அணுக்குண்டுப் போர்த் தளவாடங்கள் உடனடியான உபயோகத்துக்காகத் தக்க நிலையில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இவ்வுலகம் ஒரு நாளுக்கு ஏறக்குறைய 2,00,00,00,000 டாலர்கள் (30,00,00,00,000 ரூபாய்) போர்த்தளவாட போட்டியில் செலவிடுகிறது. இது மக்கள் பலரைப் பயங்கர நடுக்கத்தால் திணறிக்கொண்டிருக்க விடுகிறது.

3ஆனால் “மட்டுப்பட்ட அணுக்குண்டுப் போர்” மாத்திரமே இருந்தால் எப்படி? அதன் விளைவுகள் இன்னும் பயமுறுத்துபவையாகவே இருக்கும். பிரசித்திப் பெற்ற விஞ்ஞானி கார்ல் சாகன் சொல்வதன்படி, தேசங்கள் தாங்கள் கொண்டுள்ள அணுக்குண்டு சேமிப்பு அளவில் ஒரு சிறு பின்ன அளவைத்தானே பயன்படுத்தினாலும், “பூகோள நாகரிகம் அழிக்கப்பட்டுப்போகும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. . . . .மேலும், உண்மையில் மனித உயிரினம் அற்றுப்போகும் என்ற சாத்தியமும் இருப்பதாகத் தோன்றுகிறது.” மக்கள் பலர் இத்தகைய எதிர்பார்ப்புகளைத் தங்கள் மனதிலிருந்து விலக்கிப்போட முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது அந்த அபாயத்தை நீக்கிப் போடுகிறதில்லை. விரைவில் பெருகிக் கொண்டிருக்கும் ஓர் எண்ணிக்கையான மற்றவர்கள், தப்பிப்பிழைப்போர் சங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். சிலர் தப்பிப்பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையில், அவர்கள் ஒதுக்கமான நிலப் பகுதிகளில் புகலிடங்களைக் கட்டி, அவற்றில் உணவையும் மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களையும், மேலும், அழையாது நுழையும் வேண்டாதவர்களைத் துரத்திவிடுவதற்குத் துப்பாக்கிகளையும் சேமித்து வைத்திருக்கின்றனர்.

4அணுக்குண்டுப் போர் ஒருபுறமிருக்க, சுற்றுப்புறத்தைத் தகாப் பிரயோகம் செய்துவரும் முறையின் காரணமாகவும் பூகோளப் பேரழிவு உண்டாகக் கூடிய நிலையில் இருப்பதையும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மைக்கேடு கடுங் கவலைக்கிடமான மூலகாரணமாயிருக்கிறது. திடுக்கிடச் செய்யும் வேகத்தில் காடுகள் பேரளவில் அழிக்கப்படுகின்றன; எனினும் இவையே பூமியின் பிராணவாயு சுழற்சிக்கும், அதன் மழை சுழற்சிக்கும் மண்ணைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானவை. அறியாமையினாலும் பேராசையினாலும், உயிருக்கு ஆதாரமான விளைச்சல் நிலம் பாழாக்கப்படுகிறது. தண்ணீர் தூய்மைக்கேடு செய்யப்படுகிறது, உயிருக்கு ஆபத்தான இரசாயனப் பொருள்களால் அடிக்கடி அவ்வாறு கெடுக்கப்படுகிறது. எனினும் இந்த வள ஆதாரங்கள் மனித உயிரை ஆதரித்துக் காப்பதற்கு இன்றியமையாதத் தேவைகள்.

5மேலுமதிக உடனடியான கவலைக்கேதுவானது, வன்முறைக் குற்றச் செயல்கள் மக்களைத் தங்கள் சொந்த வீடுகளில் கைதிகளாக்குகிற இந்தக் காரியமென நீங்கள் உணரலாம். அரசியல் மற்றும் சமுதாய அமைதிக்குலைவு நிலை வாழ்க்கையை அபாயத்துக்குள்ளாக்குகிறது. விரிவாய்ப் பரந்துள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் உயர்ந்துகொண்டேயிருக்கும் பணவீக்கமும் வறுமையிலும் ஏமாற்றத்திலும் முடிவுறச் செய்கின்றன. பலருடைய குடும்ப வாழ்க்கை திருப்தியற்றிருக்கிறது; குடும்பத்தை ஒன்றாய் இணைக்கவேண்டிய அன்பிணைப்புகள் அநேகமாய் அங்கில்லை. எங்கும் மக்களுடைய மனப்பான்மை “எனக்கே முதல்!” என்றிருக்கிறது.

6அப்படியானால், பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி எதிர்பார்ப்பதற்கு நல்ல ஆதாரத்தை ஒருவர் எங்கே காணமுடியும்? பூமியின் குடிமக்களாக நம்முடைய எதிர்காலம், இந்தப் பிரச்னைகளுக்குப் பொறுப்புள்ள மனிதரும் தேசங்களும் செய்ய மனமுள்ள மற்றும் கூடியவற்றின்பேரிலேயே சார்ந்திருந்தால், எதிர்கால வாய்ப்பு உண்மையில் சோர்வூட்டுவதாகவே இருக்கும்; ஆனால் இவ்வாறு இருக்கிறதா?

புறக்கணிக்கக் கூடாத உண்மைகள்

7பெரும்பாலும் மனிதர், தங்கள் திட்ட முடிவுகளில், பூமியையும் மனிதவர்க்கத்தையும் உண்டாக்கின சிருஷ்டிகரைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது விடுகின்றனர். ஆனால் அவருடைய நோக்கம் என்னவென நாம் எவ்வாறு அறிய முடியும்? பைபிளில் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் அடங்கியிருப்பது தெய்வீகத் தோற்றத்தைக் கொண்டது, கடவுளால் ஏவப்பட்டது என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறது. இந்த உரிமை பாராட்டல் உண்மையா? உண்மையாயிருந்தால், அதற்குப் பொருந்த நடப்பதில் உங்கள் உயிர் சார்ந்திருக்கிறது. இந்தக் காரியம் அவ்வளவு முக்கியமாயிருப்பதால், நீங்கள்தாமே நேரில் பைபிளை ஆராய்ந்து பார்க்க நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். அதன் பல தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தைப் பற்றி நுட்பவிவரமான அறிவை வெளிப்படுத்திக் காட்டுவது முதன்மையாயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் நிலைபேறான மகிழ்ச்சிக்கு மிக அதிக முக்கியமாயுள்ள காரியங்களை அது குறிப்பிட்டுப் பேசுகையில் அதன் ஞானம் இணையற்றது. அத்தாட்சியை நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் ஆழ்ந்து ஆராய்ந்தால், பைபிள் தெய்வீக மூலகாரணரிடமிருந்தே, மனிதவர்க்கத்தை உண்மையில் நேசிக்கிற கடவுளிடமிருந்தே வந்திருக்க முடியுமென நீங்கள் தெளிவாக உணருவீர்களென்று நாங்கள் நம்புகிறோம். a மனித சரித்திரத்தில் இந்தத் தீர்வுகட்டமான காலத்தில் நாம் தப்பிப்பிழைப்பதற்கு இன்றியமையாதத் தகவல் பைபிளில் அடங்கியுள்ளது. சரியாகவே, இது, பூமியில் மிக அதிக விரிவாய் எங்கும் பரவச் செய்யப்பட்டுள்ள புத்தகம்.—2 பேதுரு 1:20, 21; 3:11-14; 2 தீமோத்தேயு 3:1-5, 14-17, ஆகியவற்றைப் பாருங்கள்.

8“கடவுள் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தார்,” என்று அடிப்படை சத்தியமாக பைபிளின் முதல் வசனம் கூறுகிறது. (ஆதியாகமம் 1:1, NW) b கடவுளைப் பெயரற்றவராக விட சில ஆட்கள் தெரிந்துகொள்கிறபோதிலும், பைபிள் அவ்வாறு செய்கிறதில்லை. சிருஷ்டிகரைப் பெயரால் அடையாளங்காட்டி, ஆதியாகமம் 2:4, தி.மொ., “கடவுளாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கி”னார் என நமக்குத் தெரிவிக்கிறது. (ஆதியாகமம் 14:22; யாத்திராகமம் 6:3; 20:11-ஐயும் பாருங்கள்.) பைபிளின் பெரும்பாகம் முதன்முதல் எபிரெயுவில் எழுதப்பட்டது, மேலும் எபிரெய பைபிள் மூலவாக்கியத்தில் கடவுளுடைய சொந்தப் பெயர் பரிசுத்த நான்கெழுத்தில் (יהוה) ஏறக்குறைய 7,000 தடவைகள் தோன்றுகிறது. சில மொழிப்பெயர்ப்பாளர்கள் இதை யாவே என மொழிபெயர்த்திருக்கின்றனர், ஆனால் ஆங்கிலத்தில் இந்தப் பெயர் வெகு சாதாரணமாய்ப் பயன்படுத்தும் முறை ஜெஹோவா (தமிழில் யெகோவா) என்பதாகும்.

9இந்தப் பெயர் கடவுள் பற்றுள்ள மனிதரால் உருவாக்கி அமைக்கப்படவில்லை. சிருஷ்டிகர்தாமே இதைத் தெரிந்துகொண்டார். (யாத்திராகமம் 3:13-15; ஏசாயா 42:8, தி.மொ.) இது, புத்தர், பிரம்மன், அல்லாஹ் அல்லது இயேசு என்ற பெயர்களுடன் பரிமாற்றம் செய்து பயன்படுத்தக்கூடாதப் பெயர். சரியாகவே, தீர்க்கதரிசி மோசே பூர்வ இஸ்ரவேல் ஜனத்துக்குப் பின்வருமாறு நினைப்பூட்டினான்: “உயர வானத்திலும் தாழ பூமியிலும் யெகோவாவே [எபிரெயுவில்: יהוה] [உண்மையான, NW] கடவுள், அவரையன்றி ஒருவருமில்லையென்று நீ இந்நாளில் அறிந்து உன் மனதிலே பதியவைத்துக்கொள்.” (உபாகமம் 4:39, தி.மொ.) இந்தக் கடவுளிடமே இயேசு கிறிஸ்து ஜெபித்தார், இவரையே “ஒரே மெய்த் தேவன்,” என அவர் அழைத்தார். இன்று, பூமியிலுள்ள எல்லாத் தேசங்களிலுமிருந்து வந்திருக்கும் அறிவு பெற்ற ஆட்கள் அவரை வணங்குகிறார்கள்.—யோவான் 17:3, NW; மத்தேயு 4:8-10; 26:39; ரோமர் 3:29.

10யெகோவா பூமியின் சிருஷ்டிகராதலால், இந்த முழு கிரகமும் அவருக்குரியது, இதன் எதிர்காலம் அவருடைய கைகளில் தங்கியிருக்கிறது. (உபாகமம் 10:14; சங்கீதம் 89:11) மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைக் கையாளுவது கடவுளுடைய திறமைக்கு அப்பாற்பட்டதாக இல்லை. அணுக்குண்டுப் போரை எதிர்பார்ப்பது மனிதர்களைத் திகிலடைய செய்கிறது. ஆனால் எண்ணற்றக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் மலைத்துப் போகவைக்கும் அளவில் நடந்தேறும் அணுசக்தி இயக்கங்களை யாருடைய சட்டங்கள் அடக்கியாளுகின்றன? கிரக பூமியில் உயிரைப் பாதுகாப்பதற்குத் தேவையான அறிவும் வல்லமையும் கடவுளுக்கு இல்லையா? அவ்வாறே மனிதர் அறியாமையிலும் தன்னலத்திலும் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மைக்கேடு செய்திருப்பதால் தோன்றியுள்ள பிரச்னைகள் சர்வ வல்லமையுள்ள கடவுளின் நோக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. பூமியையும் அதிலுள்ள கவர்ச்சியூட்டும் உயிர்வகைகளையும் படைப்பதற்குத் தேவையான ஞானத்தையும் வல்லமையையும் கொண்டிருந்த அவர், தமக்குச் சித்தமானால் அவற்றிற்குச் சுத்தமாக்கப்பட்ட தொடக்கத்தைக் கொடுக்கவும் முடியும். (ஏசாயா 40:26; சங்கீதம் 104:24) அப்படியானால், நம்முடைய கிரக வீட்டின் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கம் என்ன?

பூமி எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?

11பூமியையும் அதில் உயிர்வாழும் யாவற்றையும் அழிப்பதே கடவுளுடைய நோக்கமா? முடிவில் நம்முடைய சூரியன் வெடித்த வண்ணம் உருவளவில் மிகப்பெரிதாவதை அனுபவித்து பூமியை முழுவதும் மூடிக்கொள்ளும் என்று வான்கணிப்பாளர் சிலர் கோட்பாட்டளவில் கருதுகின்றனர். சர்வலோக இயற்கையமைப்பின் இயல்பின் காரணமாக, சூரியன் இனிமேலும் பிரகாசிக்காத மற்றும் பூமி இனிமேலும் உயிரை ஆதரிக்காத அந்தக் காலம் வரவேண்டுமென விவாதிப்போரும் உண்டு. ஆனால் இவர்கள் கருதுவது சரிதானா? சக்தியும் சடப்பொருளும் உண்டாகியிருக்கச் செய்தவரும், நாம் உயிர்வாழ்வது அதன்பேரில் சார்ந்திருக்கிற சட்டங்களைத் தொடங்கி வைத்தவருமாகிய சிருஷ்டிகர் என்ன சொல்லுகிறார்?—யோபு 38:1-6, 21; சங்கீதம் 146:3-6.

12பூமியின் நீடிப்பு காலத்தோடு ஒப்பிட்டு மனிதனின் வாழ்க்கை நீடிப்பு காலத்தைப் பற்றி எழுதும்படி ஞானமுள்ள அரசன் சாலொமோனை யெகோவா ஏவினார். பிரசங்கி 1:4-ல் சாலொமோன் பின்வரும் வார்த்தைகளை எழுதினான்: “ஒரு சந்ததி பாகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.” இதன் உண்மைக்கு மனித சரித்திரம் சாட்சி பகருகிறது. மனிதவர்க்கத்தின் ஒரு சந்ததி சென்றபின் அதனிடத்தை இன்னொரு சந்ததி நிரப்பி வருகிறபோதிலும், இந்தப் பூமியோ, நாம் அதன்மேல் வாழும் பூகோளமோ நீடித்து நிலைத்திருக்கிறது. ஆனால் எவ்வளவு காலத்துக்கு? ஆங்கில பைபிள், பரிசுத்த வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிபெயர்ப்பின் சொல் நேர்ப்பொருள் மொழிபெயர்ப்பின்படி, அது “வரையறையில்லாக் காலத்துக்கு” ஆகும். இது குறிப்பதென்ன?

13“வரையறையில்லாக் காலம்” என இங்கு மொழிபெயர்த்துள்ள எபிரெய சொல் ‘ஓ-லாம்’, தற்போதைய நோக்குநிலையில் வரையறையற்றிருக்கிற அல்லது பார்வைக்கு மறைக்கப்பட்டிருக்கிற ஆனால் நீடித்தக் காலமான, காலப் பகுதியை அடிப்படையாய்க் குறிக்கிறது. இது, என்றென்றும் எனவும் குறிக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு குறிக்கிறதா? அல்லது ஒருவேளை இப்பொழுது நமக்கு மறைந்துள்ள, திட்டமாய்த் தெரியாத எதிர்காலத்தில் எப்போதாவது, பூமி அதன் முடிவுக்கு வருமென இந்தச் சொற்றாடர் குறிப்பாய்த் தெரிவிக்கிறதா? ‘வரையறையில்லாக் காலத்துக்குத்’ தொடர்ந்திருக்குமென பைபிளில் சொல்லியுள்ள சில காரியங்கள் கடைசியில் உண்மையாக முடிவடைந்தன. (எண்ணாகமம் 25:13; எபிரெயர் 7:12, ஒத்துப் பாருங்கள்.) ஆனால் ‘ஓ-லாம்’ என்ற சொல்லை நித்தியமாக இருப்பதோடும் வேத எழுத்துக்கள் இணைக்கின்றன—உதாரணமாக, சிருஷ்டிகர்தாமே அவ்வாறு குறிக்கப்படுகிறார். (சங்கீதம் 90:2-ஐயும் 1 தீமோத்தேயு 1:17-ஐயும் ஒத்துப் பாருங்கள்.) பூமி சம்பந்தப்பட்டதில் இந்தச் சொற்றொடர் குறிப்பதென்னவென்பதைக் குறித்து நாம் சந்தேகத்தில் விடப்பட்டில்லை. சங்கீதம், 104:5-ல் நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “பூமி ஒருபோதும் [வரையறையில்லாக் காலத்துக்கும் அல்லது என்றென்றும், NW] c நிலைபெயராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.”—சங்கீதம் 119:90-ஐயும் பாருங்கள்.

14என்றென்றும் நிலைத்திருக்கப்போவது விளைச்சல் வளமற்ற வெறும் வறண்ட பூகோளம் அல்ல. எரேமியா 10:10-12-ல் (NW) நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது: “யெகோவாவே உண்மையில் கடவுள். . . . அவரே தமது வல்லமையினால் பூமியை உண்டாக்கினவர், விளைச்சல் வளமிக்க நிலவுலகைத் தம்முடைய ஞானத்தினால் உறுதியாய் நிலைநாட்டுகிறவர், தம்முடைய தெளிந்தறிவால் வானங்களை விரித்தவர்.” அவர் “பூமியை” உண்டாக்கினது மட்டுமல்ல “விளைச்சல் வளமிக்க நிலவுலகை”யும் உறுதியாய் நிலைநாட்டினார் என்பதைக் கவனியுங்கள். இந்தப் பிந்திய சொற்றொடருக்குப் பதிலாக, மொழிபெயர்ப்பாளர் பலர், ‘டெவெல்’ என்ற இந்த எபிரெய சொல்லை வெறுமென “உலகம்” என்று மொழிபெயர்க்கின்றனர். எனினும், உவில்லியம் உவில்சன் என்பவர் எழுதின பழைய ஏற்பாடு சொல் ஆராய்ச்சிகள் என்று ஆங்கிலத்திலுள்ள புத்தகத்தின்படி ‘டெவெல்’ என்பது, “இந்தப் பூமி, செழிப்பாயும் குடியிருக்கப்பட்டதாயும், குடியிருக்கத்தக்க பூகோளம், உலகம்” என பொருள்படுகிறது. இந்தச் செழிப்பான, குடியிருக்கப்பட்ட பூமியைக் குறித்த யெகோவாவின் நோக்கத்தைப் பற்றி, சங்கீதம் 96:10-ல் (NW) திரும்ப நம்பிக்கையூட்டி பின்வருமாறு அறிவித்திருக்கிறது: “யெகோவாதாமே அரசராகிவிட்டார். விளைச்சல் வளமிக்க நிலவுலகும் தள்ளாடச் செய்ய முடியாதபடி உறுதியாய் நிலைநாட்டப்பட்டதாகிறது.”—ஏசாயா 45:18-ஐயும் பாருங்கள்.

15இவ்வாறு, நாம் அதில் வாழும் இந்தக் கிரக பூமியைக் குறித்தே இயேசு கிறிஸ்து கடவுளிடம் பின்வருமாறு ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றுவோருக்குக் கற்பித்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.

16பூமியின் உடைமையாளரை மதியாமலும் தாங்கள் ஒருவருக்கொருவர் அன்பற்றும் இருக்கும் ஜனங்களால் இந்தப் பூமி குடியிருக்கப்பட்டிருப்பது யெகோவாவின் சித்தமல்ல. வெகு காலத்துக்கு முன்னால் அவர் பின்வருமாறு வாக்குக் கொடுத்தார்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ [யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள், NW] பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9, 29) பைபிளில் குறிப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிற “வரப்போகும் குடியிருக்கப்பட்ட பூமி” கடவுளுக்குப் பயப்படும் மற்றும் தங்கள் உடன்தோழரான மனிதரை உள்ளப்பூர்வமாய் நேசிக்கும் மக்களால் குடியேற்றப்பட்டிருக்கும். (எபிரெயர் 2:5, NW; லூக்கா 10:25-28-ஐ ஒத்துப் பாருங்கள்.) கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின்கீழ் நடைபெறப்போகும் மாற்றங்கள் அவ்வளவு பேரளவாயிருக்குமாதலால் பைபிளில் “புதிய பூமி”யென பேசப்பட்டிருக்கிறது—வேறு பூகோளம் அல்ல, ஆனால், மனிதனின் சிருஷ்டிகர், தம்முடைய பூமிக்குரிய படைப்பைத் தொடங்கின காலம் முதல் நோக்கங்கொண்ட பரதீஸான நிலைமைகளின் மத்தியில் வாழப்போகும் புதிய மனித சமுதாயமேயாகும்.வெளிப்படுத்துதல் 21:1-5; ஆதியாகமம் 2:7-9, 15.

17அந்தப் “புதிய பூமியை” நிலைநாட்டுவதற்கு முன்னால், ஒரு பெரிய அழிவு—மனிதவர்க்கம் இதுவரை அனுபவித்த எதையும் மிக மிஞ்சும் ஓர் அழிவு கட்டாயமாக வரவேண்டியிருக்கிறது. இந்தப் பூமிக்குத்தானேயும் மற்றும் அதன் சிருஷ்டிகருக்கு உண்மையாய் நன்றியறிதலுள்ள யாவருக்கும் நன்மையுண்டாக அவர்,பூமியைப் பாழாக்குகிறவர்களை அழிப்பார்.” (வெளிப்படுத்துதல் 11:17, 18, NW) இதைச் செய்வதற்குரிய கடவுளுடைய குறித்த நேரம் வெகு அருகில் இருக்கிறது! அது செய்து முடிக்கப்படுகையில், தப்பிப்பிழைப்போருக்குள் நீங்கள் காணப்படுவீர்களா?—1 யோவான் 2:17; நீதிமாழிகள் 2:21, 22.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் Is the Bible Really the Word of God? என்ற புத்தகத்தைப் பாருங்கள்.

b மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிட்டிருந்தால் தவிர, இந்தப் புத்தத்திலுள்ள பைபிள் வசனங்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

c ஆகவே, பிரசங்கி 1:4-ல் பயன்படுத்தியுள்ளபடி ‘ஓ-லாம்’ “என்றென்றைக்கும்” என்ற கருத்துடையதென சொற்களஞ்சிய ஆசிரியர் சிலர் விளங்கிக்கொள்கின்றனர். தி நியூ இங்லிஷ் பைபிள், ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் வெர்ஷன், தி ஜெருசலெம் பைபிள், தி பைபிள் இன் லிவ்விங் இங்லிஷ், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் இன்னும் மற்றவை இம்முறையில் இதை மொழிபெயர்த்திருக்கின்றன.

[கேள்விகள்]

1 என்ன வகையான எதிர்காலத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், ஏன்?

2, 3. அணுக்குண்டுப் போரின் பயமுறுத்தல் எவ்வாறு மக்கள் பலர் எதிர்காலத்தைக் கருதும் முறையைப் பாதிக்கிறது?

4. சுற்றுப்புறத்தைத் தகாப் பிரயோகம் செய்வது ஏன் பெரிய ஆபத்தாகக் கருதப்படுகிறது?

5, 6. வேறு என்ன சூழ்நிலைமைகள், வாழ்க்கை பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்படி மக்கள் எதிர்பார்க்காதபடி தடுத்து வைக்கின்றன?

7. (எ) பைபிள் கடவுளுடைய வார்த்தையென்று என்ன அத்தாட்சி காட்டுகிறது? (பி) பைபிள் சொல்வதை மக்கள் அறிவது ஏன் இன்றியமையாதது?

8. கிரக பூமியின் சிருஷ்டிகரை என்ன பெயரால் பைபிள் அடையாளங் காட்டுகிறது?

9. (எ) கடவுளுக்கு அந்தப் பெயரைத் தொடங்கி வைத்தவர் யார்? (பி) கடவுளுடைய பெயர் நமக்கு எவ்வளவு முக்கியமானது? (யோவேல் 2:32; மீகா 4:5)

10. அணுக்குண்டுப் போரின் பயமுறுத்தலும் தூய்மைக்கேடு செய்துள்ள தீங்கும், பூமிக்காகக் கடவுள் கொண்டிருக்கும் நோக்கத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியாது?

11. (எ) கடைசியில் பூமிக்கு என்ன நடக்குமென விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர்? (பி) அவர்களைப் பார்க்கிலும் யாருக்கு இந்தக் காரியங்களைப் பற்றி அதிகம் தெரியும்? ஏன்?

12. பிரசங்கி 1:4-ல் உள்ள வார்த்தைகள் எவ்வாறு உண்மையாய் நிரூபித்திருக்கின்றன?

13. (எ) “வரையறையில்லாக் காலம்” எதைக் குறிக்கலாம்? (பி) அப்படியானால், பூமி என்றென்றும் நிலைத்திருக்குமென நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?

14. இந்தப் பூகோளம் ஏதோவொரு நாள் விளைச்சல் வளமற்றப் பாழ்நிலமாகாதென நாம் எப்படி அறிவோம்?

15. இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குக் கற்பித்த ஜெபத்தோடு இந்த உண்மைகள் எவ்வாறு ஒத்திருக்கின்றன?

16. (எ) என்ன வகையான ஆட்கள் அப்பொழுது பூமியில் வாழ்வார்கள்? (பி) பைபிளில் பேசப்பட்டுள்ள “புதிய பூமி” என்ன?

17. தப்பிப்பிழைப்பதற்குக் கடவுள் கட்டளையிட்டுள்ள தகுதிகளை இப்பொழுது கற்பது ஏன் முக்கியம்?

[முழுபக்கம் 5-ன் படம்]