Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தப்பிப்பிழைப்போருக்குக் காத்திருக்கும் வாழ்க்கை மாதிரி

தப்பிப்பிழைப்போருக்குக் காத்திருக்கும் வாழ்க்கை மாதிரி

அதிகாரம் 4

தப்பிப்பிழைப்போருக்குக் காத்திருக்கும் வாழ்க்கை மாதிரி

யெகோவாவின் நாளின்” வருகை திகிலூட்டுவதாக இருந்தாலும், அது பூமியைக் குடியிருப்புக்கு உதவாதப் பாழ் நிலையில் விட்டுச் செல்லாது. அதன் விளைவுகள் அணுசக்திப் போர் பாடழிவைப் போலிரா, அணுசக்திப் போர் உயிரின வாழ்க்கைச் சூழலைத் தாறுமாறாக்கிப் போட்டு, தப்பிப்பிழைப்போர் அணுசக்தி கதிர்வீச்சுவினால் பயங்கர பாதிப்புகளை அனுபவித்து அவதிப்படும்படி செய்யுமென அஞ்சப்படுகிறது. மனித குடியிருப்புக்கு உதவாதபடி இந்தப் பூமியைக் கெடுத்துப் போடுவதற்குப் பதிலாக சிருஷ்டிகர், “பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்கப்போகிறார்.—யோவேல் 2:30, 31; வெளிப்படுத்துதல் 11:18, தி.மொ.

2அப்பொழுது தங்களைச் சுற்றி கடவுள் கட்டவிழ்த்துவிடப்போகிற அழிவுசெய்யும் சக்திகள் என்னவாயினும் அவர் தங்களைத் தப்புவிக்க முடியுமென்பதில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியரின் மனதில் சற்றேனும் சந்தேகமில்லை. ஒழுக்க நெறியில் சீரழிந்திருந்த சோதோம் கொமோரா பட்டணங்களை “வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி” அழித்தபோது, யெகோவாவின் தூதர்கள் லோத்தையும் அவனுடைய இரண்டு குமாரத்திகளையும் தப்புவித்தனரென்பது அவர்களுக்குத் தெரியும். (ஆதியாகமம் 19:15-17, 24-26) மேலும் மோசேயின் நாட்களில் எகிப்து முழுவதிலும் இருந்த முதற்பேறானவர்கள் அழிக்கப்பட்டபோது, தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றும் யெகோவாவின் தூதன், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் குறிக்கப்பட்ட வீடுகளான, இஸ்ரவேலரின் வீடுகளை விட்டுக் கடந்து போனதையும் அவர்கள் அறிந்துள்ளனர். (யாத்திராகமம் 12:21-29) அவ்வாறே, மிகுந்த உபத்திரவத்தின் அழிக்கும் சீற்றம் தொடங்குகையில், யெகோவாவைத் தங்கள் அடைக்கலமாக்கியிருப்போரை அவர் தப்புவிப்பார்.—சங்கீதம் 91:1, 2, 14-16; ஏசாயா 26:20.

3மெய்யே, மிகுந்த உபத்திரவத்தின் விளைவாக, யெகோவாவால் கொல்லப்பட்டவர்கள் பூமியெங்கும் சிதறி கிடப்பார்கள். தப்பிப்பிழைப்போரின் சுகநலத்தைப் பாதுகாக்க செய்யப்படவேண்டியதைக் கடவுளைப் பார்க்கிலும் நன்றாய் வேறொருவரும் அறியார். வானத்தில் பறக்கும் பறவைகளையும் காட்டு மிருகங்களையும் தம்முடைய “மகா விருந்துக்கு” வரும்படி தாம் அழைப்பாரெனவும் அவை, கொல்லப்பட்டவர்களின் மாம்ச பாகங்களைத் தின்று திருப்தியாகுமெனவும் அவர் நமக்குச் சொல்லுகிறார். (வெளிப்படுத்துதல் 19:17, 18; எசேக்கியேல் 39:17-20) அவை மீதியாய் விடுபவற்றை வேறு வழிவகைகளில் அவர் முடிவு செய்ய முடியும். ஏதேனில் சொல்லப்பட்ட பூமிக்குரிய கடவுளுடைய நோக்கம் அதன் நிறைவேற்றத்தில் முன்னேறும்.

தொடக்கத்தில் கடவுள் கொண்டிருந்த நோக்கம் வெளிப்படுத்துவது

4யெகோவா ஏதேனில் மனித குடும்பத்துக்குக் கொடுத்த வகையான தொடக்கத்தில், மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போருக்கு எதிர்காலம் வைத்திருப்பது குறிப்பாய்க் காணப்படுகிறது. மனிதவர்க்கத்தின் குடியிருப்புக்குப் பூமியை ஆயத்தம் செய்வதில், சிருஷ்டிகர் ஏராளமான தாவரவர்க்கத்தையும், மேலும், மீன்கள், பறவைகள், தரையில் வாழும் மிருகங்கள் ஆகியவற்றையும் பெருமகிழ்ச்சியுண்டாக்கும் பல வகைகளில் உண்டுபண்ணினார். “கடவுளாகிய யெகோவா கீழ்திசையில் ஏதேனில் ஒரு தோட்டத்தையுண்டாக்கி தாம் உருவாக்கின மனுஷனை அங்கே வைத்தார்.” (ஆதியாகமம் 2:8, தி.மொ.) ஆனால் கடவுள் பூமி முழுவதையும் பரதீஸாக்கி பின்பு அதை மனிதனுக்கு ஒரு பூங்காவாகப் பரிபாலித்து வரவில்லை. அதற்குப் பதில், யெகோவா அந்த முதல் மனித ஜோடிக்கு அதிசயமான ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார், அவர்களை ஆசீர்வதித்து, ஒரு வேலையை அவர்களுக்கு நியமித்தார். அவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்தவும் தங்கள் நிறைவேற்றங்களில் திருப்தியைக் கண்டடையவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் செயல்முறை ஏற்பாடுகளை அவர் அவர்களுக்கு முன் வைத்தார். இது அவர்களுடைய வாழ்க்கையை நோக்கமும் பயனுமுள்ளதாக நிரப்பும். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வேலை எத்தகைய கவர்ச்சியூட்டுவதாயிருந்தது—தெய்வீகக் குணங்களைப் பிரதிபலிக்கும்படி பிள்ளைகளை வளர்த்தலும், பரதீஸை பூமியின் கடைமுனைகள் வரையாக விரிவாக்குதலும், அதையும் அதில் மிகுதியாய் நிறைந்துள்ள படைப்பு உயிரினங்களையும் கவனித்துக் காப்பதும்! ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் அரசாட்சியைத் தொடர்ந்து மதித்து வந்தால் அவர்கள் ஒருபோதும் சாகமாட்டார்கள். அவர்கள் பூமியில் பரிபூரண வாழ்க்கையை என்றென்றும் அனுபவித்து மகிழ்வார்கள்.—ஆதியாகமம் 1:26-28; 2:16, 17.

5நிச்சயமாகவே மிகுந்த உபத்திரவத்துக்குப் பின் உடனடியாக பூமியில் நிலைமைகள் ஏதேனில் இருந்ததைப் போலிரா. ஆனால் பூமிக்கும் மனிதவர்க்கத்துக்கும் கடவுள் தொடக்கத்தில் கொண்டிருந்த நோக்கம் மாறாமல் நிலைத்திருக்கும். பரதீஸ் பூகோளத்தைச் சூழ்ந்திருக்கும், மனிதவர்க்கம் அதைக் கவனிக்கும் பொறுப்பாளராயிருப்பர், அவர்களெல்லாரும் உண்மையான கடவுளை வணங்குவதில் ஒற்றுமைப்பட்டிருப்பர். என்றென்றும் வாழ்ந்து, கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை அனுபவித்து மகிழும் வாய்ப்பு அவர்கள் முன் இருக்கும்.—லூக்கா 23:42, 43; வெளிப்படுத்துதல் 21:3, 4; ரோமர் 8:20, 21.

6தொடக்கத்தில், பழைய உலகத்தின் பாழ்க்கடிப்புகள் யாவற்றையும் சந்தேகமில்லாமல், நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். மீந்துள்ள இராணுவக் கருவிகள் சமாதான உபயோகங்களுக்கான கருவிகளாக மாற்றப்படும். (எசேக்கியேல் 39:8-10; மீகா 4:3-ஐ ஒத்துப் பாருங்கள்.) வயல்களில் இன்னும் இருந்துகொண்டிருக்கும் பயிர்கள், சந்தேகமில்லாமல், தப்பிப்பிழைப்போரை ஆதரிப்பதற்கு அறுவடை செய்யப்படும். பின்பு விதை விதைக்கப்பட்டு புதிய பயிர்கள் அறுவடை செய்யப்படுகையில் பின்வரும் வாக்குத்தத்தம் உண்மையாய் நிறைவேறும்: “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 67:6; உபாகமம் 28:8-ஐ ஒத்துப் பாருங்கள்.) பழைய உலகத்தின் தன்னல மற்றும் பிரிவினைக்கடுத்த மூலக் காரணங்கள் ஒழிந்துபோய்விட்டதால், இனி ஒருபோதும் எவரும் இரவில் பசியோடு படுக்கைக்குப் போகவேண்டிய நிலையில் இரார்.—சங்கீதம் 72:16.

7இது, யெகோவாவின் வழிநடத்துதலையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மதித்துணரும் ஜனங்களாலாகிய உலகமாயிருக்கும். இவை, கடவுளின் சொந்த ஞானத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் முறையில் அளிக்கப்படும். பூமியின் புதிய அரசராக யெகோவா நியமித்துள்ளவர் அவருடைய சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே. கடவுள் அவரைக் கொண்டே இந்தப் பூமியையும் அதன்மீது உயிர்வாழும் பல்வேறு வகைகளான எல்லாவற்றையும் சிருஷ்டித்தாரென பைபிள் வெளிப்படுத்துகிறது. (கொலோசெயர் 1:15-17) பூமியில் உயிர் நீடித்திருப்பதற்கு என்ன தேவைப்படுகிறதென்பதை கடவுளுடைய இந்தக் குமாரன் முற்றிலும் நன்றாய் விளங்கிக்கொண்டிருக்கிறார். மேலும் மனிதவர்க்கம் சார்ந்தக் காரியங்களில் அவர் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கிறார்.—நீதிமொழிகள் 8:30, 31.

8எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் குமாரன் யெகோவாவின் அரசாட்சியை உண்மைப் பற்றுறுதியுடன் கடைப்பிடிக்கிறார். இயேசுவைக் குறித்து பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்டது: “அவர்மேல் யெகோவாவின் ஆவி தங்கும்; அது ஞானத்தையும் உணர்வையும் ஆலோசனையையும் வல்லமையையும் யெகோவாவைப் பற்றிய அறிவையும் பயத்தையும் அருளும் ஆவியாம். யெகோவாவுக்குப் பயப்படுவதே அவருக்கு மிகவும் பிரியமானது.” (ஏசாயா 11:2, 3, தி.மொ.) தம்முடைய பூமிக்குரிய குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவின் வழிகளுக்கு ஒத்திருக்கச் செய்வதில் அதைப்போன்ற மகிழ்ச்சியைக் கண்டடைய அவர் அவர்களுக்கு உதவி செய்வார். அவருடைய அரசாதிகாரத்தின்கீழ், மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போர், நம்முடைய முதல் பெற்றோருக்கு ஏதேனை அவர்களுடைய வீடாகக் கொடுத்தபோது கடவுள் நோக்கங்கொண்டிருந்த வகையான வாழ்க்கைக்குத் திரும்பவும் நிலைநாட்டப்படுவர்.

இயேசுவின் ஊழியம் வெளிப்படுத்துவது

9ஆயினும், அந்த வகையான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு, பாவத்தின் தீங்கான விளைவுகளிலிருந்து நமக்கு விடுதலை தேவை. நாமெல்லாரும் ஆதாமிலிருந்து பாவத்தைச் சுதந்தரித்திருக்கிறோம், ஆதாம் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் யெகோவாவின் அரசாட்சிக்கு அவமதிப்பைக் காட்டினபோது தன் பரிபூரணத்தை இழந்தான். பாவத்தின் விளைவுகள் பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன. அது நோயுண்டாக்கலாம், உடல் ஊனங்கள் ஏற்பட செய்யலாம், மேலும் தவறான உள்நோக்கங்களுடன் சிந்திக்கும், பேசும், காரியங்களைச் செய்யும் மனப்போக்கையும் உண்டாக்கலாம். கடைசியில் அது மரணத்தை விளைவிக்கிறது. (ரோமர் 5:12; 6:23) இயேசு, தாம் பூமியில் ஊழியஞ்செய்தபோது, பல அற்புதங்களை நடப்பித்தார், அதை, கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களுக்கு விடுதலை கொண்டுவர அவர் செய்யப்போகிறவற்றைத் தெளிவுபடுத்திக் காட்டின.

10ஆனால், உணர்ச்சியார்வமூட்டும் இயேசுவின் அற்புதங்களைப் பற்றிய பைபிள் விவரங்களைச் சிலர் வாசிக்கையில், அவர்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கின்றனர். ஏன்? ஏனென்றால் சந்தேகக் கோட்பாட்டு முறையே பொதுமக்களிடத்தில் மதிப்புப் பெற்றிருக்கிற ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம். அற்புதங்கள் நம்பத்தக்கவையாயிருக்க இன்று விஞ்ஞானிகள் அவற்றைத் திரும்பச் செய்ய அல்லது அவற்றை விளக்கமுடிய வேண்டுமென சந்தேகவாதிகள் ஒருவேளை உணரலாம். ஆனால் விஞ்ஞானிகள் ஏன் ஆராய்ச்சிக்குப் பேரளவான நேரத்தையும் பணத்தையும் தொடர்ந்து செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்? ஏனென்றால் அவர்கள் விளங்கிக் கொள்ளாத மிக அதிகம் உண்டு. இயேசுவின் ஊழியத்தின்பேரில் நாம் கொண்டுள்ள மனப்பான்மையில் இருக்கும் மெய்யான பிரச்னை என்னவெனில் மனித விவகாரங்களில் கடவுள் தலையிடுவதை ஒப்புக்கொள்ள மனங்கொள்வதேயாகும்.

11பொ.ச. 33-ல் எருசலேமில் ஒரு கூட்டத்தினிடம் அப்போஸ்தலன் பேதுரு இயேசுவைக் குறித்துப் பேசி, “இயேசுவைக்கொண்டு கடவுள், உங்கள் மத்தியில் வல்ல செயல்களையும் அற்புதங்களையும் [முன்னறிகுறிகளையும், NW] அடையாளங்களையுஞ் செய்தார்; இப்படிச் செய்து அவரை இன்னாரென்று உங்களுக்கு விளங்கக் காட்டினார்.” என்றான். (அப்போஸ்தலர் 2:22, தி.மொ.) பேதுரு இங்கே குறித்துக் காட்டினபடி, அந்த அற்புதங்கள் “வல்ல செயல்கள்,” மற்ற மனிதர் அதற்கு நிகராகச் செய்யக்கூடிய அல்லது விளக்கக்கூடிய செயல்களல்ல, ஆனால் இயேசுவின் மூலமாய்க் கடவுளுடைய வல்லமை செயல்பட்டுக்கொண்டிருந்ததற்கே அத்தாட்சியாகும். அவர் உண்மையாகவே மேசியா, கடவுளுடைய சொந்தக் குமாரன் என்பதற்கு அவை “அடையாளங்கள்.” மேலும் அவை “முன்னறிகுறிகளுங்கூட,” இருதயத்துக்கு ஊக்கமூட்டும் எதிர்கால சம்பவங்களைக் குறித்துக் காட்டின நிகழ்ச்சிகள்.

12பைபிளில் இந்தச் சுவிசேஷ விவரங்களை வாசியுங்கள், அவ்வாறு நீங்கள் செய்கையில், இயேசு நடப்பித்த அற்புதங்கள், கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ் பூமியில் வாழப்போகும் மனிதவர்க்கத்துக்கு அவர் செய்யப்போவதன் முன்காட்சியைக் கொடுக்கின்றன என்பதை மனதில் வையுங்கள். பொ.ச. 33-ம் ஆண்டில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது பத்துக் குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கினதுபோல்—அந்தக் காலம் குஷ்டரோகத்தைப்போன்ற உருக்குலைத்து விகாரப்படுத்தும் நோய்களையுடைய ஆட்களைச் சுகப்படுத்திச் சுத்தமாக்கும் காலமாயிருக்கும், அத்தகைய ஆட்களுக்குத் தாம் உதவிசெய்ய முடியுமெனவும் அப்படிச் செய்ய தாம் உண்மையில் விரும்புகிறாரெனவும் அவர் மெய்ப்பித்துக் காட்டினார். (லூக்கா 17:11-19; மாற்கு 1:40-42) பலர் திமிர்வாதத்துக்காளாகி இருக்கின்றனர். படுத்தப்படுக்கையாய்க் கிடந்தத் திமிர்வாதக்காரனை இயேசு சுகப்படுத்தி, அதை அந்த மனிதனின் பாவங்களை மன்னிப்பதோடு சம்பந்தப்படுத்தினதுபோல்—இவர்களுக்கும் சுகப்படுத்துதல் கிடைக்கும்.—மாற்கு 2:1-12.

13குருடரின் கண்கள் திறக்கப்படும், செவிடரின் செவிகள் திறக்கப்படும், பேச்சு ஊறுபாடுகளுள்ளோரின் நாவுகள் கட்டவிழ்க்கப்படும்—முதல் நூற்றாண்டில் கலிலேயாவிலும் தெக்கப்போலியிலும் இயேசு இக்காரியங்களைச் செய்ததுபோல் செய்வார். (மத்தேயு 9:27-30; மாற்கு 7:31-37) இன்று பல ஆட்களுக்கு மருத்துவர் சுகமளிக்க முடிகிறதில்லை. கப்பர்நகூமில் ஒரு பெண்ணின் நிலைமை அவ்வாறே இருந்தது, அவள் “அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடைய”வில்லை. ஆனால் இயேசு அவளைச் சுகப்படுத்தினார், அவளைப்போன்ற மிகப்பலரை அவர் அவ்வாறே சுகப்படுத்துவார். (மாற்கு 5:25-29) புற்றுநோய், இருதயநோய், குளிர்காய்ச்சல்; நத்தைக் காய்ச்சல்—எதுவும் மிகக் கடினமாயிராது, கலிலேயாவில் ஊழியஞ்செய்கையில் அவர் “சகல வியாதிகளையும் சகல நோய்களையும்” சுகப்படுத்தினபோது மெய்ப்பித்துக் காட்டினதுபோலவே இருக்கும்.—மத்தேயு 9:35.

14மரித்தோருக்கு—மிகுந்த உபத்திரவத்தில் கடவுள் அழிப்பவர்களுக்கல்ல, நூற்றாண்டுகளினூடே மரித்த கோடிக்கணக்கான மற்றவர்களுக்கு—திரும்ப உயிர்வாழ்வதற்கும், முன்னொருபோதும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாதிருந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கவும் வாய்ப்புள்ள ஒரு காலமாகவும் அது இருக்கும். தப்பிப்பிழைப்போருக்கு இது எதைக் குறிக்கும்? நாயீன் ஊருக்கருகில், விதவையாயிருந்தத் தாயின் ஒரே குமாரனைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவருவதனால் இயேசு அவளுடைய வருத்தத்தின் கண்ணீர்களைத் துடைத்தார். கப்பர்நகூமில் ஒரு சிறு பெண்ணின் பெற்றோருக்கு அவர்கள் பிள்ளையை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினதனால் மிக ஆழ்ந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தார். (லூக்கா 7:11-16; மாற்கு 5:35-42) நீங்கள் நேசித்தவர்கள் மரித்தோரிலிருந்து திரும்பி வருகையில் நீங்கள் அங்கே அருகிலிருக்க விரும்புகிறீர்களா? அதுவே “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைப்போரின் சிலிர்ப்பூட்டும் அனுபவமாயிருக்கும்.

15அப்பொழுது வாழ்க்கை, இப்பொழுது மக்களை அடிக்கடி வருத்திச் சோர்வூட்டும் திரும்பத்திரும்ப ஏற்படுகிற இருதய வேதனையும் துக்கமுமாக இராது, இது இயேசுவின் அற்புதங்களால் மட்டுமல்ல அவருடைய போதகங்களாலும் காட்டப்பட்டிருக்கிறது, ஏனெனில் உண்மையில் அவருடைய சீஷராயிருப்பவர்கள் மாத்திரமே “புதிய பூமிக்குள்” தப்பிப்பிழைப்பார்கள். (யோவான் 3:36) ஆவிக்குரிய மதிப்புகளைப் பொருள் சம்பந்த முயற்சிகளுக்கு முன்னதாக வைக்கும்படியும், யெகோவாவில் நம்பிக்கை வைக்கவும், அவரிடமே வழிநடத்துதலுக்காக நோக்கவும் அவருடைய ஆசீர்வாதங்களை நன்றியோடு மதித்துணரவும் அவர் தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். அன்புடனும் மனத்தாழ்மையுடனும் இருக்க வேண்டியதும், மற்றவர்களைப் பற்றி ஆழ்ந்த அக்கறைகொள்வதும், அவர்களுக்காகத் தன்னை அளிப்பதுமான இவற்றின் முக்கியத்துவத்தை வார்த்தையாலும் முன்மாதிரியாலும் இயேசு அறிவுறுத்தினார். கிறிஸ்துவின் சீஷர்களாகி, இந்த நியமங்களை உண்மையில் பொருத்திப் பிரயோகிக்கிறவர்கள் ஏற்கெனவே தங்கள் ஆத்துமாக்களுக்கு மிகுந்த இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்கள், மேலும் அவர்கள், தங்கள் முறையாக, மற்றவர்களுக்கு இளைப்பாறுதலைக் கொண்டுவருகிறார்கள். (மத்தேயு 11:28, 29; யோவான் 13:34, 35) இது, தற்போதைய அன்பற்ற உலகம் ஒழிந்துவிடுகையில் இன்னும் உயிரோடிருப்பவர்கள் அனுபவித்து மகிழப்போகிற வகையான வாழ்க்கையின் வெறும் முன்னனுபவமேயாகும். இப்பொழுது நீங்கள் ஞானமாய்ச் செயல்பட்டால், அந்த வாழ்க்கை உங்களுடையதாய் இருக்க முடியும்.

[கேள்விகள்]

1. வரப்போகிற “யெகோவாவின் நாள்” ஏன் பூமியைப் பாழ்நிலையில் விடாது? (ஏசாயா 45:18)

2. உண்மையுள்ளவர்களை யெகோவா மிகுந்த உபத்திரவத்தினூடே தப்புவிப்பாரென்று எது நமக்கு நம்பிக்கையளிக்கிறது?

3. மிகப் பெரிய எண்ணிக்கையான செத்தப் பிணங்கள் தப்பிப்பிழைப்போரின் சுகநலத்தை ஏன் கெடுக்கப்போவதில்லை?

4. முதல் மனித ஜோடிக்கு என்ன வகையான தொடக்கத்தை யெகோவா கொடுத்தார், அது ஏன் நமக்குத் தனிப்பட்ட அக்கறைக்குரியதாயிருக்கிறது?

5. ஆகவே, மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போருக்கு முன் என்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்?

6. (எ) இராணுவக் கருவிகள் எவற்றிற்கும் என்னவாகும்? (பி) ஏன் ஒருவரும் இனி ஒருபோதும் பசியோடிருக்க வேண்டிய நிலையில் இரார்?

7. பூமியின் புதிய அரசரை யெகோவா தெரிந்தெடுத்தது எவ்வாறு கடவுளுடைய சொந்த ஞானத்தையும் அன்பையும் பிரதிபலிக்கிறது?

8. யெகோவாவின் அரசாட்சிக்கு என்ன பிரதிபலிப்பைத் தங்களில் வளர்க்கும்படி கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய குடிமக்களுக்கு உதவிசெய்வார்?

9. (எ) சுதந்தரித்தப் பாவத்தின் தீங்கான விளைவுகள் சில யாவை? (பி) இயேசுவின் அற்புதங்கள் என்ன நம்பிக்கை அளிக்கின்றன?

10. விஞ்ஞானிகள் அதே மாதிரிப்படி செய்ய முடியாத அற்புதங்களை இயேசு நடப்பிக்க முடியுமென்பது ஏன் நியாயமற்றதாயில்லை?

11. அப்போஸ்தலர் 2:22-ல் இயேசுவின் அற்புதங்களை விவரிக்க என்ன சொற்றொடர்கள் பயன்படுத்தியிருக்கின்றன? இவை எவற்றைக் குறித்துக் காட்டுகின்றன?

12. (எ) குஷ்டரோகங் கொண்டிருந்த ஆட்களைச் சுகப்படுத்தி சுத்தமாக்குவதைப் பற்றிய விவரங்கள் ஊக்கமூட்டுபவையாக நீங்கள் ஏன் காண்கிறீர்கள்? (பி) திமிர்வாதக்காரனை இயேசு சுகப்படுத்தினதைப் பற்றியதில் எது முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது?

13. பின் குறிப்பிடப்படும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையளிக்கும் இயேசுவின் ஒவ்வொரு அற்புதத்தைக் கூறுங்கள்: (எ) குருடருக்கு, (பி) செவிடருக்கு அல்லது பேச்சு ஊறுபாடுள்ளோருக்கு, (சி) பல மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றும் நோய்த் தீராதிருப்போருக்கு (டி) நோய்களின் மற்றும் பலவீனங்களின் எல்லா வகைகளையும் இயேசு சுகப்படுத்தக் கூடியவரென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

14. இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்பினதைப் பற்றிய விவரங்கள், தப்பிப்பிழைப்போருக்கு உயிர்த்தெழுதல் எதைக் குறிக்குமென்பதை எவ்வாறு காட்டுகின்றன?

15. (எ) எவ்வகையான ஆட்கள் அப்பொழுது பூமியில் வாழ்வார்கள் என்பதை இயேசுவின் போதகங்கள் எவ்வாறு காட்டுகின்றன? (பி) அந்த வகையான வாழ்க்கையின் முன்னனுபவத்தை நாம் எம்முறையில் இப்பொழுது கொண்டிருக்க முடியும்?

[பக்கம் 33-ன் பெட்டி/படம்]

தாடக்கத்தில் மனிதவர்க்கத்துக்குக் கடவுள் கொண்டிருந்த நோக்கம்

கடவுளுடைய குணங்களைப் பிரதிபலிக்கும் மனிதரால் பூமியை நிரப்புவது

பரதீஸைப் பூமியெங்கும் விரிவாக்கி அதையும் அதன் மிருக வாழ்க்கையையும் கவனிப்பது

பூமியில் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வது