Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீங்கள் பாபிலோனின் நடுவிலிருந்து ஓடுங்கள்’

‘நீங்கள் பாபிலோனின் நடுவிலிருந்து ஓடுங்கள்’

அதிகாரம் 11

‘நீங்கள் பாபிலோனின் நடுவிலிருந்து ஓடுங்கள்’

வாழ்க்கையைப் பற்றிய தங்கள் கேள்விகளுக்குத் திருப்திதரும் பதில்களுக்காக நாடித்தேடி, பலர், ஒரு மதத்திலிருந்து மற்றொன்றுக்கு அலைந்து திரிகின்றனர். நம்பிக்கைகளிலும் பழக்கச் செயல்களிலும் சில ஒப்புமைகளையும், மேலும் பல வேறுபாடுகளையும் காண்கின்றனர். கடவுளுடைய சொந்த வார்த்தையை வழிகாட்டியாகப் பயன்படுத்துவதனால் மாத்திரமே, எந்தப் பதில்கள் உண்மையானவை எந்தப் பழக்கச் செயல்கள் கடவுளுக்கு உண்மையில் பிரியமானவையென எவரும் நிச்சயமாயிருக்க முடியும். பைபிளின் மூலம், சிருஷ்டிகர் தம்முடனும் தம்முடைய நோக்கங்களுடனும் நம்மை அறிமுகப்படுத்துகிறார். மேலும் பொய் வணக்கத்தின் தோற்று மூலங்களையும் நாம் காணும்படி வெளிப்படுத்துகிறார். இவ்வாறு செய்து, “மகா பாபிலோன்” என அவர் விவரிப்பதற்கு எதிராக அவர் நம்மை எச்சரித்து அதன் நடுவிலிருந்து வெளியே “ஓடும்படி” துரிதப்படுத்துகிறார். இந்த எச்சரிக்கைக்கு நீங்கள் செவிகொடுத்துவிட்டீர்களா?—வெளிப்படுத்துதல் 18:4, 21; எரேமியா 51:6, தி.மொ.

2“மகா பாபிலோன்” என்பது என்ன? மொத்தமாய் நோக்குகையில், பூர்வ பாபிலோனின் மதத்தில் மூலத் தோற்றத்தைக் கொண்டுள்ள மனப்பான்மைகளை, நம்பிக்கைகளை, அல்லது பழக்கச் செயல்களைக் கடைப்பிடிக்கும் எல்லா மதங்களும் மகா பாபிலோனை உண்டுபண்ணுகின்றன. ஆகையால் பூர்வ பாபிலோனின் தொடக்கத்தையும் மதத்தையும் தானே ஆராய்வதன் மூலம் அதை அடையாளங்கண்டுகொள்ள செய்யும் தனித் தன்மைகளைத் தீர்மானிக்க முடியும்.

3நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்துக்குப் பின் (பின்னால் பாபிலோன் என்றழைக்கப்பட்ட) பாபேல் நகரம் ஒரு கோபுரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டது— இது நிம்ரோது கட்டளையிட்டு ஆதரித்தத் திட்டமென தெரிகிறது. இந்த நிம்ரோது, யெகோவாவுக்கு எதிராக ஒரு கலக மனப்பான்மையையும் தங்களுக்கு முதன்மை நிலையைத் தேடவேண்டுமென்ற ஆசையையும் தன் கூட்டாளிகளில் தோற்றுவித்தான். (ஆதியாகமம் 10:9, 10; 11:1-9) இந்த மனப்பான்மையை இன்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா—கடவுளுடைய வார்த்தையை அசட்டை செய்வதும், பக்தியுள்ளவர்களென உரிமை பாராட்டுவோருங்கூட அவ்வாறு செய்வதும், மேலும் தங்களுக்குத்தாமே கவனத்தை இழுக்க அல்லது முதன்மைநிலையை அடையவுங்கூட மதத்தைப் பயன்படுத்துவதுமான இவற்றைக் காண்கிறீர்களா?

4பாபிலோனிய மதத்தில் திரித்துவ கடவுட்கள் முதன்மையாயிருந்தன. அனு, பெல், இயா அடங்கிய திரித்துவம் ஒன்றிருந்தது, மற்றொன்று சின், ஷாமாஷ், இஷ்டார் அடங்கியது. கூடுதலாக, பாபிலோனின் வணக்கத்துக்குரிய இடங்கள் விக்கிரகங்களால் நிறைந்திருந்தன. இதெல்லாம், ஒரே ஒரு உண்மையான கடவுளே இருக்கிறார், அவருடைய பெயர் யெகோவா என்ற இந்த உண்மையிலிருந்து கவனத்தை வேறு வழியில் செலுத்த வைத்தன. (உபாகமம் 4:39; யோவான் 17:3) தங்கள் கடவுட்கள் கொண்டிருப்பதாகக் கற்பித்துக்கூறின குணங்களும் நடத்தையும், அவற்றோடுகூட உயிரற்ற விக்கிரகங்களைப் பயன்படுத்தினதும், சிருஷ்டிகரைப் பற்றிய மாறாட்டமான நோக்கைப் பல ஆட்களுக்கு அளித்தன.— எரேமியா 10:10, 14; 50:1, 38; 1 கொரிந்தியர் 10:14, 19-22.

5மரணம் வெறுமென மற்றொரு வகையான வாழ்க்கைக்குச் செல்லும் வழியென பாபிலோனியர் நம்பினர், ஆனால் இது, நம்முடைய முதல் பெற்றோரிடம் கடவுள் சொன்னதற்கு நேர்மாறாயிருந்தது. கிரேக்க தத்துவ ஞானிகள் இந்த எண்ணத்தை விரிவாக்கி, மனிதருக்கு அழியாமையுள்ள ஆத்துமா இருக்கிறதென்று சொன்னார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனால் அவர்கள் மாம்சத்தில் ‘சாவதேயில்லை’ என்று சொன்னது பிசாசின் முதல் பொய்யாகும். என்றென்றும் வாழ்வது மக்கள் காணமுடியாத அவர்களின் ஓர் உள்பகுதியென இப்பொழுது மக்கள் சொல்லப்பட்டு வருகின்றனர். இந்தப் பொய்ப் போதகம், நரக அக்கினியிலும், உத்தரிக்கும் ஸ்தலத்திலும், மூதாதையர் வணக்கத்திலும் இன்னும் மிகப் பலவற்றிலும் நம்பிக்கை வைப்பதற்கு வழிநடத்தினது.—ஆதியாகமம் 3:1-5, தி.மொ.; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4.

6சோதிடம், குறிசொல்லுதல், மந்திரம், படுசூனியம் ஆகிய இந்தப் பழக்கங்களும் பாபிலோனிய மதத்தில் அடங்கியிருக்கின்றன, இவற்றைக் கொண்டு தங்களுக்குச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மற்றவர்களை அடக்கியாளவும் பயன்படுத்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிநடத்துதலை மக்கள் தேடினர். (தானியேல் 2:27; எசேக்கியேல் 21:21) இந்த எல்லாப் பழக்கங்களுக்கும் எதிராக பைபிளில் எச்சரித்திருக்கிறபோதிலும், இன்று இவை எவ்வளவு சாதாரணமாய்ப் பயன்படுத்தப்படுகின்றன! இவற்றில் ஈடுபடுவதன் மூலம், மக்கள் பேய்த்தன ஆவிகளின் கைகளுக்குள் தங்களை நேரடியாகச் சிக்கவைத்துக்கொள்கின்றனர், அவை, தாங்கள் அளிக்கும் உதவிகளுக்காகக் குரூரமான விலையை வற்புறுத்திப் பெறுகின்றன,—உபாகமம் 18:10-12: ஏசாயா 8:19; அப்போஸ்தலர் 16:16; வெளிப்படுத்துதல் 18:21, 23.

7மகா பாபிலோனை மேலுமாக அடையாளங்காட்டி, பைபிள், அரசியல் அதிபதிகளோடு அதன் சட்டவிரோதமான உறவுகளையும், அதன் செல்வத்தையும், கடவுளுடைய உண்மையான ஊழியரின் இரத்தம் உட்பட வெகுவாய் இரத்தஞ் சிந்தினதற்கு அது கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருப்பதையும் பற்றிச் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 17:1-6; 18:24) இந்தக் காரியங்களில் உலகத்தின் மதங்களைப் பற்றிய பதிவு யாவரும் அறிந்ததே.

சத்தியத்தின்பேரில் உங்கள் அன்பு எவ்வளவு மிகுந்தது

8ஒருவன் மகா பாபிலோனின் எந்தப் பாகத்தையாவது சேர்ந்திருந்து, அதன் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து அல்லது அதன் வழிகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் இவ்வாறு யாரைக் கனப்படுத்துகிறான்? நிச்சயமாகவே யெகோவாவை அல்ல. அதற்குப் பதில், இத்தகைய ஆள், உண்மையில், மனிதவர்க்கத்தின் மனதைக் குருடாக்கிப்போடுகிற, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளுக்கு” முன்பாகவே வணங்குகிறான்.—2 கொரிந்தியர் 4:4.

9இம்முறையில் இத்தனை பல ஆட்கள் தவறாக வழிநடத்தப்பட முடிந்தது எவ்வாறு? “சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனபடியால்,” அவர்கள் சாத்தானின் கண்ணிக்கு இரையாக விழுந்தார்களென பைபிள் பதிலளிக்கிறது. (2  தெசலோனிக்கேயர் 2:9-12, தி.மொ.) இது நம்மை ஆச்சரியப்பட செய்ய வேண்டியதில்லை. வீட்டிலோ, வாணிக நடவடிக்கையிலோ, தங்கள் சொந்தக் குற்றங்குறைபாடுகளை எதிர்ப்படுகையில் எப்பொழுதும் சத்தியத்தையே பேசும் எத்தனை ஆட்கள் உங்களுக்குத் தெரியும்? கடவுளுடைய சத்திய வார்த்தையாகிய பைபிளில் சொல்லியிருப்பதைக் காட்டுகையில் எத்தனைபேர், அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி, தங்கள் முந்தின நம்பிக்கைகளை அல்லது பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு, தங்கள் வாழ்க்கை நடைமுறையை மாற்றிக்கொள்ளவும் மனமுடையோராய் இருக்கின்றனர்? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா?

10சத்தியத்துக்கு இத்தகைய அன்பு கொண்டுள்ள ஆட்களுக்காக யெகோவா தேடிக்கொண்டிருக்கிறார். அவர்தாமேயும் “சத்தியபரர்” (சங்கீதம் 31:5) அவருடைய வார்த்தையின் போதகங்கள் வெறுங் கற்பனையல்ல. அவை சத்தியம். சமாரியாவிலிருந்த ஒரு பெண்ணிடம் இயேசு பின்வருமாறு கூறினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், . . . தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:23, 24) இத்தகைய ஆளாயிருக்கவே நீங்கள் விரும்புகிறீர்களா?

விடுதலைக்குக் கடவுள் செய்துள்ள ஏற்பாடு

11பாபிலோனின் கொடுங்கோன்மையான ஆட்சியிலிருந்து விடுதலை செய்வாரென்ற வாக்கை யெகோவா, நமக்கு வழிநடத்துதலை அளிப்பதற்கு, நெடுங்காலத்துக்கு முன்னதாகவே பைபிளில் பதிவு செய்யும்படி செய்தார். யூதர்களும், அவர்களோடுகூட இஸ்ரவேலரல்லாத நிதனீமியரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டக்கூடும்படி மகா கோரேசு அவர்களை விடுதலை செய்தபோது இது ஒரு நிறைவேற்றமடைந்தது. ஆனால் அதோடு அது முடிந்துவிடவில்லை. அப்பொழுது நடந்தேறியது பெரிய கோரேசான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டாகப்போகும் மேலுமான விடுதலையைக் குறிப்பிட்டுக் காட்டினது. அவருடைய வழிநடத்தும் கட்டளைகளை நாம் பின்பற்றுவது, தங்களுக்கே மேன்மையைத் தேடும் மனிதரால் தவறாக வழிநடத்தப்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது; பின்வருமாறு கூறும் தீர்க்கதரிசனம் முக்கியமாய் இயேசுவுக்குப் பொருந்தினது: “பின்னும் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, ரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப் பண்ணவும்; கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப் போங்கள் என்றும், இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.” (ஏசாயா 49:8, 9) இது இயேசுவில் எப்படி நிறைவேற்றமடைந்தது?

12யெகோவா இயேசுவின் ஜெபங்களுக்குப் பதிலளித்தார். மதப் பொய்ம்மையை இயேசு தைரியத்துடன் வெளிப்படுத்திக் காட்டி, ‘விடுதலையாக்கும் சத்தியத்தை’ யாவருக்கும் தெரியப்படுத்தினபோது அவர் நிச்சயமாகவே தம்முடைய குமாரனுக்கு உதவிசெய்து அவரைப் பாதுகாத்தார். (யோவான் 8:32) இயேசுவை அழிக்க சாத்தான் செய்த முயற்சிகளின் மத்தியிலும், பூமியில் தம்முடைய குமாரன் செய்ய வேண்டிய வேலையைச் செய்து முடிக்கும் வரையிலும் யெகோவா அவரைப் பாதுகாத்தார். பின்பு அவர் பரலோகத்தில் அழியாமைக்குரிய வாழ்க்கைக்கு இயேசுவை எழுப்பி, அங்கே விடுதலை செய்யும் தம்முடைய வேலையைத் தொடர்ந்து செய்ய வைத்தார்; மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து ஜனங்கள் விடுதலை செய்யப்படுவார்களென்று கடவுள் அவரை ஓர் “உடன்படிக்கையாக,” அல்லது வாக்குறுதியாகக் கொடுத்தார். உயிர்த்தெழுப்பப்பட்டு மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வாறே மகா பாபிலோனின் மத இருளிலிருந்து நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் விடுதலை செய்யப்படுவதும் நிச்சயம்; இந்த விடுதலையிலிருந்து நீங்கள் பயனடைவீர்களா?

13விடுதலையின் பரப்பளவைக் குறித்து யெகோவா பின்வருமாறு முன்னறிவித்தார்: “பூமியின் கடைசிபரியந்தமும் என்னால் வரும் இரட்சிப்பாயிருக்கும்படி உன்னைப் புறஜாதியாருக்கு வெளிச்சமாக ஏற்படுத்தினேன்.” (ஏசாயா 49:6, தி.மொ.) ஆகவே, பொ.ச. 36-ல் புறஜாதியாரை, அல்லது யூதரல்லாத ஜாதிகளின் ஜனங்களை ஆவிக்குரிய இஸ்ரவேலின் சபைக்குள் கொண்டுவருவது தொடங்கப்பட்டது. எனினும், புறஜாதியாரை, ஆவியால்-அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ சபையோடு சேர்த்தது, இயேசு “புறஜாதியாருக்கு வெளிச்சமாக” சேவிப்பதன் முழு அளவாக இல்லை.

14பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழப்போகிற “மற்றச் செம்மறியாடுகளை”யும் தாம் கூட்டிச் சேர்ப்பாரென இயேசு அறிந்திருந்தார். (யோவான் 10:16, NW) இவர்கள், பொ.ச.மு. 537-ல் யூதர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினபோது அவர்களைச் சேர்ந்துகொண்டு வெளியேறின இஸ்ரவேலரல்லாத நிதனீமியராலும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரராலும் முன்குறித்துக் காட்டப்பட்டனர். (எஸ்றா 2:1, 43-58) தற்காலங்களில், ஏற்கெனவே இவர்களின் ஒரு திரள் கூட்டத்தார் மகா பாபிலோனை விட்டு “வெளியே வாருங்கள்” என்ற கட்டளைக்குச் செவிகொடுத்திருக்கின்றனர். இவர்கள் ஏசாயா 49:10-ல் பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்ட உயிர்ப்பூட்டும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை இப்பொழுது அனுபவித்து மகிழ்கின்றனர்: “அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; [வாட்டும், NW] உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார்.” வெளிப்படுத்துதல் 7:9, 16, 17-ல் இந்த ஆசீர்வாதங்கள் சரியாகவே “மற்றச் செம்மறியாடுகளின்” “திரள் கூட்டத்துக்குப்” பொருத்திப் பிரயோகிக்கப்படுகின்றன.

“என் ஜனங்களே, அவளை விட்டு வெளியே வாருங்கள்”

15கடவுள் அளித்துள்ள ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவது மகா பாபிலோனுக்கு எதைக் குறிக்குமென, தேவாவியால் ஏவப்பட்ட ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டப்பட்டது. அது மிக நிச்சயமாய் வருவதை முன்னிட்டு, பரலோகத்திலிருந்து வந்த ஒரு தூதன் கடவுளுக்குப் பதிலாகப் பேசி பின்வருமாறு துரிதப்படுத்தினான்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்; அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:4, 5.

16ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினர் இந்தக் கட்டளைக்குச் செவிகொடுத்திருக்கின்றனர், மற்றவர்களும் அவ்வாறே செய்யும்படி இப்பொழுது அவர்களைத் துரிதப்படுத்துகின்றனர். ஒருவன் உண்மையான வணக்கத்தைப் பொய் வணக்கத்தோடு கலந்துகொண்டிருந்தால் அவன் கடவுளைப் பிரியப்படுத்த முடியாதென அவர்கள் அறிந்துள்ளனர். ஒருவன் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொண்டு ஆனால் இன்னும் மகா பாபிலோனோடு தன் இணைப்புகளைத் துண்டித்துப்போடாதிருந்தால், தான் அதன் பாகமாயில்லையென அவன் எப்படிச் சொல்ல முடியும்? அதன் மத ஆராதனைகளுக்கு ஒருபோதும் செல்கிறதில்லையெனினும், தான் வேலை செய்யுமிடத்தில் அல்லது தன் உறவினரோடு அதன் மத விடுமுறைகளில் பங்குகொண்டால், அவன் இன்னும் அசுத்தமானதைத் தொட்டுக்கொண்டிருக்கிறான். (ஏசாயா 52:11) ஆத்துமா அழியாமை கோட்பாட்டில் நம்பிக்கையை அல்லது தீய ஆவிகளுக்குப் பயப்படும் குருட்டு நம்பிக்கையான பயத்தைப் பிரதிபலிக்கிற குடும்பப் பாரம்பரியங்களில் அவன் பங்குகொண்டால், அவன் இன்னும் அதன் பாவங்களில் பங்குகொள்கிறான். நாம் திட்டமான தீர்மானம் செய்யாமல் இங்குமங்குமாக இருக்க முடியாது. யெகோவாவே உண்மையான கடவுள் என்று நாம் நம்பினால், அப்பொழுது நாம் அவர் ஒருவரை மாத்திரமே சேவிக்க வேண்டும்.—1 இராஜாக்கள் 18:21.

17எல்லாத் தேசத்தையும் கோத்திரத்தையும் மொழியையும் சேர்ந்த ஜனங்களுக்குப் பின்வரும் இந்த உருக்கமான அழைப்புக் கொடுக்கப்படுகிறது: ஒரே உண்மையான கடவுளாகிய, யெகோவாவை வணங்குவதில் சேர்ந்துகொள்ளுங்கள்! (வெளிப்படுத்துதல் 14:6, 7) அப்படிச் செய்ய, பின்வரும் கட்டளைக்குச் செவிகொடுத்த கடவுளுடைய பூர்வகால ஊழியரின் மாதிரியையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்: “நீங்கள் பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, ஒவ்வொருவனும் தன்தன் உயிரைத் தப்புவியுங்கள்.”—எரேமியா 51:6, தி.மொ.

[கேள்விகள்]

1. (எ) எவ்வகையான வணக்கம் கடவுளுக்குப் பிரியமானதென்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (பி) எதிலிருந்து ஓடும்படி கடவுள் நம்மைத் துரிதப்படுத்துகிறார்?

2. “மகா பாபிலோன்” என்பது என்ன?

3. (எ) பூர்வ பாபிலோன் எவ்வாறு தோன்றலாயிற்று? அதைத் தோற்றுவித்தவன் என்ன மனப்பான்மையை ஊக்குவித்தான்? (பி) அந்த மனப்பான்மை இன்று மதங்களில் எம்முறைகளில் பிரதிபலிக்கிறது?

4. பாபிலோனிய தன்மை வாய்ந்த மதம் கடவுளைப் பற்றிய சத்தியத்தைத்தானேயும் எவ்வாறு புரட்டியிருக்கிறது?

5. (எ) மரணத்தைப் பற்றிய பாபிலோனிய நம்பிக்கை உண்மையில் எவ்வாறு சாத்தான் ஏவாளுக்குச் சொன்ன பொய்யின் ஒப்பனையேயாகும்? (பி) வேறு என்ன போதகங்களுக்கு இது வழிநடத்தினது?

6. (எ) இன்று சாதாரணமாயுள்ள வேறு என்ன பழக்கங்களும் பாபிலோனிய மதத்தில் வேர் கொண்டவை? (பி) இது எவ்வளவு அபாயகரமானது?

7. மகா பாபிலோன் (எ) அரசியல் அதிபதிகளோடு சட்ட விரோதமான உறவுகளைக் கொண்டிருக்கிறது (பி) மிகுந்த செல்வங்களைக் கொண்டிருக்கிறது (சி) இரத்தஞ் சிந்தினதற்கு உத்தரவாதமுள்ளது என்னும் இவற்றிற்கு என்ன அத்தாட்சியை நீங்கள் காண்கிறீர்கள்?

8. மகா பாபிலோனின் கடவுள் உண்மையில் யார்?

9. இத்தனை மிகப் பல ஜனங்களை மதப்பிரகாரம் தவறாக வழிநடத்த சாத்தானுக்கு எவ்வாறு முடிந்தது?

10. (எ) எந்த வகையான ஆட்களுக்காக யெகோவா தேடிக்கொண்டிருக்கிறார்? (பி) நாம் அத்தகையோரென எவ்வாறு காட்டலாம்?

11. (எ) ஏசாயா 49:8, 9-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டுள்ளது? (பி) இதன் முதல் நிறைவேற்றம் எப்போது நடந்தது? (சி) இது ஏன் நமக்கு அக்கறைக்குரியதாயிருக்கிறது?

12. (எ) அந்தத் தீர்க்கதரிசனம் இயேசுவில் எவ்வாறு நிறைவேறினது? (லூக்கா 4:16-18) (பி) இதில் நமக்கு என்ன ஊக்கமூட்டுதல் இருக்கிறது?

13. பொ.ச. 36 முதற்கொண்டு இயேசு எவ்வாறு “புறஜாதியாருக்கு வெளிச்சமாக” நிரூபித்தார்?

14. (எ) “புறஜாதியாரிலிருந்து” வரும் வேறு எவருக்கும் இயேசு வெளிச்சமாக இருக்க வேண்டும்? (பி) பூர்வ பாபிலோனை விட்டு வெளியேறின எந்த வகுப்பார் இவர்களை முன்குறித்துக் காட்டினர்? (சி) ஏசாயா 49:10-ன் நிறைவேற்றமாக ஆவிக்குரிய என்ன ஆசீர்வாதங்களை அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து மகிழ்கின்றனர்?

15. பைபிள் ஏன், கடவுளுடைய ஜனங்களாயிருக்க விரும்புகிறவர்களை மகா பாபிலோனிலிருந்து வெளியேறும்படி துரிதப்படுத்துகிறது?

16. இந்தக் கட்டளைக்கு நாம் உண்மையில் செவிகொடுத்துவிட்டோமா என்பதை எது குறிப்பாகத் தெரிவிக்கக்கூடும்?

17. (எ) வெளிப்படுத்துதல் 14:6, 7-ல் காட்டியிருக்கிற பிரகாரம், என்ன செய்யும்படி எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கு அழைப்புக் கொடுக்கப்படுகிறது? (பி) யெகோவா ஏற்கத்தக்க முறையில் அவரை வணங்குவதற்கு, வேறு என்ன கட்டளைக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும்?