Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பின் விட்டு வந்தவற்றிற்காக ஏங்காதீர்கள்!

பின் விட்டு வந்தவற்றிற்காக ஏங்காதீர்கள்!

அதிகாரம் 22

பின் விட்டு வந்தவற்றிற்காக ஏங்காதீர்கள்!

கடவுளின் மகிமையான புதிய காரிய ஒழுங்குமுறைக்குள் நுழையும் வாசலில்தானே இன்று நாம் இருக்கிறோமென பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் சந்தேகமில்லாமல் காட்டுகிறது. சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகம், அது உண்டுபண்ணியுள்ள இருதய வேதனை, ஏமாற்றம், துயரம் ஆகியவற்றோடு ஒழிந்துபோய்விட்டிருக்கும். இந்தப் பூமி பரதீஸாக மாற்றப்பட்டிருக்கும், அதில் உண்மையான கடவுளை வணங்குவோர் பரிபூரண மனித வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவித்து மகிழ முடியும். இந்த வாக்குத்தத்தங்களைப் பற்றிய நிச்சயத்தைக் குறித்து, அப்போஸ்தலன் யோவானுக்கு யெகோவா பின்வருமாறு கூறினார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.” (வெளிப்படுத்துதல் 21:1-5) எனினும், இது விகற்பமாகத் தோன்றினாலும், இந்தச் சத்தியங்களை அறிந்த சிலர், கடவுள் தாம் அழிக்கப்போவதாகச் சொல்லுகிற உலகத்தின் வாழ்க்கை முறைக்குத் திரும்பிச் செல்கின்றனர். எவ்வளவு விசனகரமானது! அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்?

2 கடவுளுடைய ராஜ்யத்தையும் அது செய்யப் போகிறவற்றையும் பற்றிய நற்செய்தியை அவர்கள் முதல் கேள்விப்பட்டபோது, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஒருவர் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய தன் தெளிந்துணர்வை ஆழமாக்கிக்கொண்டு மேலும் அதைத் தன் சொந்த வாழ்க்கையில் முழுமையாய்ப் பொருத்திப் பிரயோகிக்க வழிகளைத் தேடிக்கொண்டு, கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறவேண்டியதும் முக்கியம். (எபிரெயர் 6:1, 11, 12) மதித்துணர்வில்லாமை எவரையாவது இதைச் செய்ய அசட்டையாயிருந்துவிட செய்தால், கடவுளைச் சேவிக்கும் சிலாக்கியத்தை அருமையானதாக அவன் தொடர்ந்து கருதமாட்டான். அத்தகைய ஆள், தான் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதன் தேவையையும், இப்பொழுது செய்யும்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பிரசங்க மற்றும் சீஷராக்கும் வேலையில் தன்னால் கூடியவரை முழுமையாய்ப் பங்குகொள்வதன் முக்கியத்துவத்தையும் மதித்துணரத் தவறி, அதே சமயத்தில் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் பொருள்சம்பந்த ஆசீர்வாதங்களுக்காகப் பொறுமையற்றவனாகலாம். பொருள்சம்பந்த உடைமைகளையும் இன்ப மகிழ்ச்சியாகத் தோன்றுகிறவற்றையும் நாடும் ஆசைகளைத் திருப்திசெய்வதே மேலும் மேலும் அதிகமாய் அவனுடைய நேரத்தை எடுக்கத் தொடங்கலாம். ஆவிக்குரிய அக்கறைகளை அவன் இரண்டாவதாக வைக்கிறான். எல்லாம் திடீரென்று ஏற்படுகிறதில்லை, அவ்வப்போது சிறிது சிறிதாய் அவன் உலகத்துக்குள் திரும்ப இழுக்கப்பட்டுப் போகிறான்.—1 தீமோத்தேயு 6:9, 10.

3 ஒருவன், தான் “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைத்து, நீதி வாசமாயிருக்கும் உலகத்தில் வாழ விரும்புவதாகச் சொல்லலாம். ஆனால் அவன் கூட்டாளிகளைத் தெரிந்துகொள்வது அவன் சொல்வதை ஆதரிக்கிறதா? நிச்சயமாகவே, வேலைசெய்யுமிடத்தில், பள்ளியில், கடைக்குச் செல்கையில், வீட்டிலுங்கூட—யெகோவாவைச் சேவிக்காத ஆட்களுடன் தவிர்க்கமுடியாதத் தொடர்பு ஒவ்வொரு நாளும் இருக்கிறது. ஆனால் வேலை இடைவேளைகளின்போது, பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தொலைபேசியைப் பயன்படுத்தும்போது அல்லது நண்பர்களைக் காணச் செல்கையில், பொழுதுபோக்குச் சமயங்களில், யாருடைய தோழமையை அவன் தெரிந்துகொள்ளுகிறான்? இது உண்மையில் வேறுபாட்டை உண்டுபண்ணுகிறதா? பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “மோசம்போகாதிருங்கள். துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) ஆனால் “துர்ச் சகவாசங்கள்” யாவை? சில ஆட்கள் யெகோவாவை வணங்காதது, வெறுமென தங்கள் சொந்தக் கண்களுக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்வது ஏதாவது வேறுபாட்டை உண்டுபண்ணுகிறதா? நாம் ஏற்கெனவே கற்றிருக்கிறவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனித்தால், அத்தகைய ஆட்கள் “புதிய பூமிக்குள்” தப்பிப்பிழைத்திருக்க மாட்டார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். நண்பர்களைத் தெரிந்தெடுக்கையில் யெகோவாவின் தராதரங்களைக் கூடியளவு குறைக்கும் எவரும், தாங்கள் பின்னால் விட்டு விட்டதாக ஒருகாலத்தில் எண்ணின உலகத்துக்குள் தாங்கள் திரும்ப சென்றுவிட்டிருப்பதைச் சீக்கிரத்தில் காண்பார்கள். ஆனால் வேத எழுத்துக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள எச்சரிக்கை முன்மாதிரிகளை நாம் இருதயத்தில் ஏற்றால், அவை அத்தகைய போக்குக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கும்.—1 கொரிந்தியர் 10:11, தி.மொ.

“நமக்கு எச்சரிப்பாக எழுதப்பட்டுமிருக்கின்றன”

4 யெகோவா இஸ்ரவேலரை எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்ததிலிருந்து விடுதலைசெய்தபோது, அது அவர்களுக்கு எத்தகைய ஆறுதலான தளர்ச்சியாக இருந்திருக்கவேண்டும்! யோசேப்பின் மரணத்துக்குப் பின் அவர்கள் அனுபவித்தக் கொடூரமான ஒடுக்குதல் வெப்பமான அக்கினிச் சூளைக்குள் தாங்கள் தள்ளப்பட்டதுபோல் எகிப்தைத் தோன்றச் செய்தது. (யாத்திராகமம் 1:13, 14; உபாகமம் 4:20) அப்பொழுது யெகோவா பத்து அடிகளை, அல்லது வாதைகளை எகிப்தின்மேல் கொண்டுவந்தார். உண்மையான கடவுளுக்கும் எகிப்தின் கடவுட்களுக்கும் இருந்த வேறுபாடு தெளிவாக விளங்கினது. ஆகவே, இஸ்ரவேலர் அத்தேசத்தை விட்டு வெளியேறினபோது, இஸ்ரவேலரல்லாத “பல ஜாதியாரான திரள் ஜனங்கள்” அவர்களோடுகூட சென்றார்கள், இன்று அவ்வாறே “திரள் கூட்டம்” இவ்வுலகத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேருடன் கூட்டுறவு கொள்ளுகிறது. (யாத்திராகமம் 12:38, தி.மொ.) ஆனால் வெளியேறினபின் சீக்கிரத்திலேயே பாளையத்தில் என்ன நடந்தது?

5 “தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி”னார்கள் என்று கிறிஸ்தவ சீஷனாகிய ஸ்தேவான் விளக்கினான். இது அவர்கள் விடுதலைசெய்யப்பட்டு ஒருசில மாதங்களே சென்றபின் நடந்தது. (அப்போஸ்தலர் 7:39, 40) இது உண்மையென உறுதிப்படுத்தினது எது? எகிப்தில் அவர்கள் பழக்கப்பட்டிருந்த வகையான காரியமாக— அவர்கள் ஒரு பொன் கன்றுக் குட்டியை உண்டுபண்ணி, தாங்கள் “யெகோவாவுக்கு உற்சவம்” கொண்டாடுவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் எகிப்தியரின் மாதிரியைப் பின்பற்றினார்கள். (யாத்திராகமம் 32:1-6, தி.மொ.) யெகோவா அவர்கள்மீது கடுங்கோபங்கொண்டார். அவர்களுடைய நடத்தை, சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்துக்கு நேர் மாறாக இருந்தது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்தார்கள். ஏன் இது நேரிட்டது? யெகோவாவின் கட்டளைகளை அவர்கள் அறிந்திருந்தும், அவற்றிற்கும் மெய்ம்மையில் உண்மையான கடவுளே தங்களை வழிநடத்துகிறார் என்ற உண்மைக்கும் இருதய மதித்துணர்வை அவர்கள் தங்களில் கட்டியெழுப்பவில்லையென தெளிவாகத் தெரிகிறது.

6 இஸ்ரவேலரும் அவர்களோடு சென்ற “பல ஜாதியாரான ஜனங்களும்” எகிப்தை விட்டு வெளியேறினபோது அதுவே செய்யவேண்டிய சரியான காரியமென அறிந்திருந்தார்கள். ஆனால் ஓர் ஆண்டு கடந்து சென்ற பின்னும் அவர்கள் இன்னும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இல்லை; “பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்” அவர்களுக்கு இன்னும் வீடுகள் இல்லை. சாப்பிடுவதற்கு பொருள்சம்பந்தமாய் அவர்கள் எல்லாருக்கும் போதியவை இருந்தன, முக்கியமாய் ஆவிக்குரிய ஏராளம் அங்கிருந்தது. யெகோவா அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தாரென்பதற்கு மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் இடைவிடாத அத்தாட்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தன. செங்கடலிலும் சீனாய் மலையிலும் யெகோவாவின் வல்லமையின் ஆச்சரியத்தோடுகூடிய பயபக்தியையூட்டும் அத்தாட்சியைக் கண்டிருந்தார்கள். நியாயப்பிரமாண உடன்படிக்கை ஆவிக்குரிய ஆகார ஊட்டத்தையும் புத்துயிரையும் அவர்களுக்கு அளித்தன. யெகோவாவுக்குப் பிரியமாய் நடந்துகொள்ள தங்கள் நடத்தையில், தங்கள் சிந்தனையில், தங்கள் உள்நோக்கங்களில் சரிசெய்தல் எங்கே தேவைப்படுகிறதென அவர்களுக்குக் காட்டி அவரவர் தனிப்பட்டு செய்வதற்கும் அது அவர்களுக்கு மிகுதியானவை அளித்தது. ஆனால் யெகோவா அவர்களுக்குச் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் நன்றியோடு மதித்துணருவதற்குப் பதிலாக, எகிப்தில் தங்களுக்கிருந்த பொருள் சம்பந்தக் காரியங்களுக்காக அவர்கள் ஆசைக்கொண்டு ஏங்கத் தொடங்கினார்கள். தன்னல ஏக்கம் பலரை அழிவுக்கு வழிநடத்தினது.—எண்ணாகமம் 11:4-6, 31-34.

7 இதற்குச் சிறிது காலத்துக்குப் பின், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்க்கும்படி மோசே ஆட்களை அனுப்பினான். அவர்கள் திரும்பி வந்தபோது, அது நிச்சயமாகவே “பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்,” என்று அவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் வேவுபார்க்கச் சென்றவர்களில் பத்துபேர் அங்கேயிருந்த ஜனங்களைக் குறித்து பயப்பட்டார்கள் அவர்களுடைய அரண்காப்புள்ள பட்டணங்கள் அவர்களுக்குத் திகிலூட்டின. அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வைக்கவில்லை, மற்றவர்களுடைய இருதயமும் பயத்தால் நடுங்கும்படி செய்தனர். மறுபடியும் ஒருமுறையாக அவர்கள் எண்ணங்கள் எகிப்துக்குத் திரும்பிச் சென்றன, அங்கே திரும்பிப் போகும்படியான திட்டங்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களுடைய விசுவாசக் குறைவினால், 20-ம் அதற்கு மேற்பட்டதுமான வயதிலிருந்த அந்தச் சந்ததி முழுவதும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஒருபோதும் பிரவேசியாமல் கடைசியாக அந்த வனாந்தரத்திலேயே மரித்தனர்.—எண்ணாகமம் 13:27-33; 14:1-4, 29.

8 400-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால், இதே பாடம் வேறுபட்ட சூழ்நிலையில் முனைப்பாய்க் கற்பிக்கப்பட்டது. ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்து, ஒழுக்கப் பிரகாரமாய்ச் சீரழிந்தும் ஆனால் பொருள் சம்பந்தமாய்ச் செழிப்பாயும் இருந்த சோதோமில் வாழத் தெரிந்துகொண்டான். சோதோமின் மற்றும் அதன் மாவட்டத்தின் ஒழுக்கக்கேடு அவ்வளவு படுமோசமாயிருந்ததால், அது திரும்ப ஒருபோதும் கட்டப்படாதபடி, அதை அழித்துப்போடும்படி யெகோவா தீர்மானித்தார். லோத்துவையும் அவனுடைய வீட்டாரையும் காப்பாற்றும்படி தேவதூதர்கள் அனுப்பப்பட்டனர். எதிர்காலத்தில் தன் மருமக்களாகப்போகிறவர்களை எச்சரித்தபோது, அவர்களுடைய கண்களில் ‘அவன் பரியாசம் பண்ணுவதாகத் தோன்றினது.’ ஆனால் அது பரியாசமல்ல. சூரியன் உதிக்கும் சமயத்தில் தேவதூதர்கள் லோத்துவையும் அவனுடைய குடும்பத்தையும் பட்டணத்துக்கு வெளியில் செல்ல துரிதப்படுத்தி பின்னால் திரும்பிப் பாராமல் தப்பியோடும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். கீழ்ப்படிதலின்பேரில் அவர்களுடைய உயிர் சார்ந்திருந்தது. லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள், அவர்கள் அழியாது தப்புவிக்கப்பட்டனர். ஆனால் லோத்தின் மனைவியோ பின்னால் விட்டுவந்த பொருள்சம்பந்தமானவற்றை விட்டுப் பிரிய தனக்கு மனமில்லாமல் தயங்கினதாகத் தெரிகிறது. பின்னால் பார்க்கத் திரும்பினபோது, அவள் உப்புத் தூணாகி, தன் உயிரை இழந்தாள். இது குறிப்பதை நாம் ஒவ்வொருவரும் இருதயத்தில் ஏற்றிருக்கிறோமா? இந்தக் குறிப்பை நாம் தவறவிடாதபடி, இயேசு, நம்முடைய நாளில் இந்தப் பழைய ஒழுங்குமுறையிலிருந்து தப்பியோடுவதன் அவசரத்தைக் குறித்து எச்சரிக்கையில் இதையும் அதில் உள்ளடக்கினார். பொருளுடைமைகளைப் பற்றி மட்டுக்குமீறி கவலைகொள்வதற்கு எதிராக எச்சரிக்கையிலேயே அவர்: “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்,” என்று சுருக்கமாய்க் கூறினார். (ஆதியாகமம் 19:12-26; லூக்கா 17:31, 32) இஸ்ரவேலரையும் லோத்தின் மனைவியையும் கண்ணியில் அகப்படுத்தின படுகுழிகளுக்கு எதிராக எது நம்மைப் பாதுகாக்க முடியும்?

‘அதிலும் மேன்மையான இடத்தையே நாடினார்கள்’

9 பின்னால் திரும்பிப் பார்க்கும்படியான வசீகரத்தைத் தவிர்க்க, முன்னால் இருப்பதில் பெருகிக்கொண்டுபோகும் விசுவாசத்தை நாம் வளர்க்க வேண்டும். எபிரெயர் 11:1-ல் விசுவாசம் “எதிர்நோக்கி ஆசிக்கிறவைகளில் நமக்கு உறுதி, காணப்படாதவைகளில் நமக்கு நிச்சயம்,” என விளக்கப்பட்டிருக்கிறது. கடவுள் வாக்குக் கொடுத்திருப்பதை நாம் சுதந்தரித்துக்கொள்வோம் என்பதற்கு இது, உரிமை ஸ்தாபிக்கும் பத்திரத்தைப்போல், ஓர் உறுதியாக அல்லது உத்தரவாதமாக இருக்கிறது. விசுவாசம் வல்லமைவாய்ந்த அத்தாட்சியின்மேல் ஆதாரங்கொண்டிருக்கிறது, இதன் பலனாக மாம்ச கண்ணால் காணமுடியாதவற்றில் நம்பிக்கை வைக்க நமக்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன. அது பேதமை அல்ல, அல்லது ஏதோ நன்றாய்த் தொனிக்கிறது என்ற வெறும் காரணத்தால் அதை நம்ப தயாராயிருப்பதல்ல. உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்க, அதற்கு ஆதாரமாயுள்ள அத்தாட்சியோடு நாம்தாமே நன்றாய் அறிமுகமாவதற்குப் போதிய அக்கறைகொள்ளவேண்டும். மேலும் நாம் கற்பது நம்முடைய சொந்த வாழ்க்கையோடு எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறதென கவனமாய் ஆழ்ந்து யோசித்து, அதற்கு உண்மையான இருதயப் பூர்வ மதித்துணர்வை வளர்க்கவேண்டும்.

10 ஆபிரகாமுக்கு அத்தகைய விசுவாசம் இருந்தது. அதன் பலனாக, யெகோவாவின் கட்டளையின்பேரில் ஆபிரகாம் கல்தேயாவிலிருந்த ஊர் என்ற செழுமையான நகரத்தை விட்டுவிட்டு, தான் முன்னொருபோதும் பார்த்திராத தூர தேசமாகிய கானானுக்கு இடம் பெயர்ந்து சென்றான். அங்கே பாதுகாப்புக்காக எந்த நகர-ராஜ்யத்துடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் பரதேசியாகத் தங்கியிருந்தான். “[உண்மையான, NW] அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு [யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்துக்கு] அவன் காத்திருந்தான்; அதன் சிற்பாசாரியும் அதைக் கட்டுகிறவரும் கடவுளே.” கல்தேயாவில் நடத்தின வாழ்க்கைக்காக அவன் தொடர்ந்து ஏங்கிக்கொண்டிருந்தால், அவன் சந்தேகமில்லாமல் அங்கே திரும்பிச் சென்றிருப்பான். அதற்குப் பதில், அவன் ‘அதிலும் மேன்மையான இடத்தையே, அதாவது, பரலோகத்துக்குரியதான ஒன்றையே நாடினான்.’ (எபிரெயர் 11:8-16, தி.மொ.) அந்த “மேன்மையான இடத்துக்காக” ஆபிரகாம் நாடிக்கொண்டிருந்தது, ஒருசில ஆண்டுகளுக்கே அல்ல, பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மாத்திரமேயும் அல்ல. அவன் ஊர் தேசத்தைவிட்டு 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் தான் மரணமடையும் வரையிலும் அவ்வாறு தொடர்ந்து நாடிக்கொண்டிருந்தான். தனக்கு விசுவாசம் இருந்ததென அவன் வெறுமென சொல்லவில்லை; தன் செயல்களில் அதைக் காட்டினான். இதன் பலனாக அவனுடைய பரிசு அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. உயிர்த்தெழுதலின் எதிர்பார்ப்பு அவனுக்கு அவ்வளவு நிச்சயமாயிருப்பதால், இயேசு சொன்னபிரகாரம், ‘கடவுளுக்கு ஆபிரகாம் ஜீவனுள்ளவனாயிருக்கிறான்.’—லூக்கா 20:37, 38, தி.மொ.; யாக்கோபு 2:18.

11 ஆனால் ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கையும், ஈசாக்கின் குமாரன் யாக்கோபையும் பற்றியதென்ன? கல்தேயரின் வாழ்க்கை முறையை அவர்கள் ஒருபோதும் ருசிபார்த்ததில்லை. அது எவ்வாறிருந்ததென தாங்கள்தாமே கண்டுபிடித்துக்கொள்ள அதைக் காரணமாக அவர்கள் கருதவில்லை. யெகோவாவின் வாக்குத்தத்தங்களைப் பற்றித் தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் கற்றறிந்தபோது அவற்றைத் தங்கள் இருதயத்தில் வைத்துச் செயல்பட்டார்கள். ஆபிரகாமுடையதைப் போன்ற விசுவாசத்தைத் தங்களில் வளர்த்தார்கள். அவர்களுங்கூட, ‘அதிலும் மேன்மையான இடத்தையே நாடினார்கள்’ கடவுள் அவர்களைக் குறித்து வெட்கப்படவில்லை.—எபிரெயர் 11:9, 16, 20, 21; ஆதியாகமம் 26:24, 25; 28:20-22.

12 மறுபட்சத்தில், யாக்கோபின் சகோதரன் ஏசா ஆவிக்குரிய காரியங்களை மதித்துணரவில்லை. யெகோவாவின் வணக்கத்தாராயிராத பெண்களை அவன் மணஞ்செய்தான். பரிசுத்தமான காரியங்களை உயர்வாக மதித்துக் காப்பாற்றுவதற்குப் பதில், ஒரு வேளை சாப்பாட்டுக்காகத் தன் சேஷ்ட புத்திர சிலாக்கியத்தை அவன் விற்றுப் போட்டான். (ஆதியாகமம் 25:29-34; 26:34, 35; எபிரெயர் 12:14-17) அவன் உடல் மற்றும் பொருள் சம்பந்த திருப்தியை இப்பொழுதே நாடித்தேடின ஒருவன். யாக்கோபின் குமாரத்தி, தீனாளும் வினைமையான தொந்தரவுக்குள் சிக்கினாள். ஏன்? ஏனெனில் புறமதத்தினரான “தேசத்துப் பெண்களுடன்” கூட்டுறவுகொள்ள விரும்பினாள்.—ஆதியாகமம் 34:1, 2.

13 ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபைப்போல், நீங்கள் “அதிலும் மேன்மையான இடத்தையே,” யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின்கீழ் வாழ்வதையே நாடினால், இவ்வுலகத்துக்குள் திரும்ப இழுக்கப்பட உங்களை அனுமதியாதீர்கள். இவ்வுலகம் நிலையான எதிர்காலத்தை அளிக்கிறதில்லை என்பதை நினைவில் வையுங்கள். “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” ஆ, அது எத்தகைய நிறைவான திருப்தி தரும் வாழ்க்கையாக இருக்கும்!—1 யோவான் 2:17.

[கேள்விகள்]

1. (எ) உடனடியாக அடுத்துள்ள எதிர்காலத்தில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியருக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன? (பி) எனினும், சிலர் என்ன செய்திருக்கின்றனர்?

2. (எ) இத்தகைய விளைவைத் தவிர்க்க, சத்தியத்தை முதல் கற்றறிந்தப்பின் ஒருவன் என்ன செய்யவேண்டும்? (பி) இதைச் செய்ய அவன் தவறினால், எது அவனுடைய சிந்தனையில் முதலிடத்தை ஏற்கும்? அதன் விளைவென்ன?

3. (எ) யெகோவாவை வணங்காத ஆட்களை நண்பர்களாகத் தெரிந்துகொள்வது ஏன் அபாயகரமானது? (பி) எந்தச் சமயங்களில் ஒருவன் அத்தகைய ஆட்களுடன் தளர்ந்தக் கூட்டுறவில் தன்னை எளிதில் காணலாம்?

4. (எ) எகிப்தில் யோசேப்பின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேலர் எவ்வகையான வாழ்க்கையை அனுபவித்தனர்? (பி) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது ஏன் “பல ஜாதியாரான திரள் ஜனங்கள்” அவர்களைச் சேர்ந்துகொண்டனர்? (சி) இந்தத் தீர்க்கதரிசன நாடகம் எவ்வாறு நம்முடைய நாளில் நிறைவேற்றமடைந்திருக்கிறது?

5. (எ) அவர்களுடைய விடுதலைக்குப் பின் சீக்கிரத்திலேயே அவர்கள் எவ்வாறு ‘எகிப்துக்குத் திரும்பினார்கள்’? (பி) அது ஏன் நேரிட்டது?

6. (எ) வனாந்தரத்தில் யெகோவா அவர்களுக்கு என்ன ஏற்பாடுகளைச் செய்தார்? (1 கொரிந்தியர் 10:3, 4) (பி) எகிப்தில் தங்களுக்குக் கிடைத்தவற்றிற்காகச் சிலர் ஏன் ஏங்கத் தொடங்கினர்?

7. (எ) வேவு பார்க்கச் சென்றவர்கள் தங்கள் அறிக்கைகளைக் கொண்டுவந்தபோது ஜனங்கள் ஏன் எகிப்துக்குத் திரும்பிப் போவதைப் பற்றிப் பேசினார்கள்? (பி) அதன் விளைவென்ன? (எபிரெயர் 3:17, 19)

8. (எ) சோதோம் அழிக்கப்பட்டபோது லோத்தும் அவனுடைய குடும்பமும் தப்புவிக்கப்பட, அவர்கள் என்ன செய்யவேண்டியிருந்தது? (பி) லோத்தின் மனைவி ஏன் உப்புத்தூண் ஆனாள்? (சி) என்ன எச்சரிப்பு செய்தி அதில் நமக்கு அடங்கியிருக்கிறது?

9. விசுவாசம் என்றாலென்ன? அதை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?

10. (எ) ஆபிரகாம் தன் விசுவாசத்துக்கு எவ்வாறு அத்தாட்சியைக் கொடுத்தான்? எவ்வளவு காலத்துக்கு? (பி) அவன் செய்தது சரியென நாம் எவ்வாறு அறிவோம்?

11. தங்களுக்கும் விசுவாசம் இருந்ததை ஈசாக்கும் யாக்கோபும் எவ்வாறு காட்டினார்கள்?

12. எது ஏசாவையும் தீனாளையும் வினைமையான தொந்தரவுக்குள் வழிநடத்தினது?

13. (எ) இன்று உலகத்தின் பாகமாயிருக்கிற ஆட்களுக்கு வாழ்க்கை உண்மையில் எவ்வாறு இருக்கிறது? (பி) அதற்குள் திரும்ப இழுக்கப்படுவதற்கு எதிராக எது நம்மை பாதுகாக்கும்?

[பக்கம் 172-ன் படம்]

லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!