Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“புதிய வானங்களும் ஒருபுதிய பூமியும்” எவ்வாறுதொடங்குகின்றன

“புதிய வானங்களும் ஒருபுதிய பூமியும்” எவ்வாறுதொடங்குகின்றன

அதிகாரம் 14

“புதிய வானங்களும் ஒரு புதிய பூமியும்” எவ்வாறுதொடங்குகின்றன

வானங்கள் என குறிப்பிடுவது வானவெளியைப் பற்றி, சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி எண்ணும்படி பல ஆட்களைச் செய்விக்கிறது. “வானம்” என்பதை ஆட்சியோடும் பைபிள் சம்பந்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 7:49) சில சமயங்களில் “வானங்கள்” என்பதை சர்வலோகப் பேரரசராகக் கடவுளைத்தாமே குறிப்பதற்கு அது பயன்படுத்துகிறது. (தானியேல் 4:26; மத்தேயு 4:17) மனிதரின் அரசாங்கங்களுங்கூட “வானங்கள்” என குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் அவை தங்கள் குடிமக்களுக்குமேல் நிலைகொண்டிருக்கின்றன. (2 பேதுரு 3:7) அவ்வாறே, “பூமி” அடிக்கடி பூகோளத்தைக் குறிக்கிறது, ஆனால் அது மனித சமுதாயத்தையும் குறிக்கலாம். (ஆதியாகமம் 11:1; சங்கீதம் 96:1) இதைப் பற்றித் தெரிந்திருப்பது “புதிய வானங்களையும் ஒரு புதிய பூமியையும்” பற்றிய கவர்ந்திழுக்கும் வாக்குகளின் உட்பொருளை மதித்துணர உங்களுக்கு உதவிசெய்யும். இந்த வாக்குகளில் சில பூர்வ இஸ்ரவேலரின் நாட்களில் முதல் நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன.

‘நான் சிருஷ்டிப்பவற்றில் மகிழ்ந்திருங்கள்’

2 இஸ்ரவேல் ஜனம் கடவுளுக்குக் கீழ்ப்படிய பயபக்தியுடன் ஒப்புக்கொண்டு, அவருடன் உடன்படிக்கையில் இருந்தது. ஆனால் அவர்கள் உண்மையற்றவர்களானார்கள். இதனால், யெகோவா, தம்முடைய பாதுகாப்பை அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவாரெனவும், எருசலேம் அழிக்கப்படவும் ஜனங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்திக் கொண்டுபோகப்படவும் அனுமதிப்பாரெனவும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். (ஏசாயா 1:2-4; 39:5-7) ஆனால் மனந்திரும்பும் ஒரு மீதிபேர் திரும்ப மீட்டுக் கொண்டுவரப்படுவதையும் அவர் இரக்கமாய் முன்னறிவித்தார்.—ஏசாயா 43:14, 15; 48:20.

3 இது நிச்சயமாய் நடைபெறுமாதலால், இந்த எதிர்கால திரும்பப் புதுப்பிப்பை ஏற்கெனவே நடந்தேறினதுபோல் யெகோவா பேசி, பின்வருமாறு கூறினார்: “இதோ நான் புதிய வானங்களையும் ஒரு புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவை மனதில் நினைவுபடுத்தப்படுவதுமில்லை, இருதயத்துக்குள் அவை தோன்றப் போவதுமில்லை. ஆனால், ஜனங்களே, நீங்கள் களிகூர்ந்து, நான் சிருஷ்டிப்பவற்றில் என்றென்றும் மகிழ்ந்திருங்கள். ஏனெனில் இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் அதன் ஜனத்தைக் களிகூருதலுக்குக் காரணமாகவும் சிருஷ்டிக்கிறேன்.” (ஏசாயா 65:17, 18, NW) மனந்திரும்பும் இஸ்ரவேலுக்கு இது விடுதலையைக் குறிக்கும்.

4 மனித நோக்குநிலையிலிருந்து காண, இத்தகைய காரியம் நடக்கமுடியாததென தோன்றினபோதிலும், வல்லமைவாய்ந்த பாபிலோன் பொ.ச.மு. 539-ல் மேதியர் மற்றும் பெர்சியரின் கைகளுக்குள் வீழ்ந்தது. யூதர்கள் “புதிய வானங்களான” புதிய அரசாங்கத்தின்கீழ் வந்தனர். அந்தப் “புதிய வானங்களில்” மகா கோரேசு முதன்மையான ஒரு பாகத்தை நிரப்பினான். கோரேசு யூத மதத்தைத் தழுவவில்லை, எனினும், தான் செலுத்தின அதிகாரத்தைத் தான் கொண்டிருக்க யெகோவா அனுமதித்தாரெனவும் எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவிக்க யெகோவா தனக்குக் கட்டளையிட்டாரெனவும் அவன் ஒப்புக்கொண்டான். (2 நாளாகமம் 36:23; ஏசாயா 44:28-ஐப் பார்க்கவும்.) பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பப் போய்ச் சேர்ந்து, தேசாதிபதி செருபாபேலும் பிரதான ஆசாரியன் யெசுவாவும் அந்த அரசாங்க “புதிய வானங்களில்” முதன்மை நிலையில் சேவித்தார்கள், திரும்பக் கொண்டுசேர்க்கப்பட்ட யூத மீதிபேர் “ஒரு புதிய பூமி”யை, தேசத்தில் தூய்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டின சுத்தமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை உண்டுபண்ணினார்கள்.—எஸ்றா 5:1, 2.

5 தாங்கள் மனதிலும் இருதயத்திலும் மாறின ஜனங்களென்பதற்கு அறிகுறியாக, அவர்கள், தூய்மை வணக்கத்தின் அக்கறைகளைத் தங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வைத்து, யெகோவாவின் அரசாட்சியை உண்மையில் மதித்து, அவருடைய தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடுக்க வேண்டும். இதற்கு ஒத்தபடி, அவர்கள் யூதா தேசத்துக்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் செய்த முதல் காரியங்களில் ஒன்று, “இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டி” பலிகளைச் செலுத்தினதேயாகும்.—எஸ்றா 3:1-6.

6 பொருளாசை மனப்போக்குகளும் மனிதனுக்குப் பயப்படும் பயமும், ஆலயம் கட்டி முடிப்பதைத் தடைசெய்தபோது, யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு ஜனங்களைக் கண்டித்தார், அவர்கள் செவிகொடுத்தார்கள். (ஆகாய் 1:2, 7, 8, 12; 2:4, 5) பின்னால், மணம் செய்வதைக் குறித்த நியாயப்பிரமாண கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மோசமாய்த் தவறினது அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டபோது, ஜனங்கள் தங்கள் வழிகளைத் திருத்திக் கொண்டார்கள். (எஸ்றா 10:10-12) அடையாளக் குறிப்பாய்க் கடவுளுடைய வார்த்தையைக் காணாதக் கண்களையும் அதற்குச் செவிடாயிருந்தக் காதுகளையும் கொண்டிருந்ததற்குப் பதிலாக, அவர்கள் ஆவிக்குரிய சுகப்படுத்துதலை அனுபவித்துத் தங்கள் தனிப்பட்ட நுட்பத் திறமைகளை யெகோவாவின் சித்தத்துக்கு ஒத்திசைய பயன்படுத்தினார்கள். (ஏசாயா 6:9, 10-உடன் 35:5, 6-ஐ ஒத்துப் பாருங்கள்.) இதன் பலனாக, ஏசாயா 65:20-25-ல் காணப்படும் வாக்குகளுக்கிணங்க கடவுள் அவர்களை வாழ்வுவளம் பெறச் செய்தார்.

7 ஆனால் “புதிய வானங்களையும் ஒரு புதிய பூமியையும்” குறித்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் முற்றிலும் அது மாத்திரம்தானா? நிச்சயமாகவே இல்லை. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மேலுமான ஒரு நிறைவேற்றத்தை ஆவலோடு எதிர்பார்த்தனரென கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு கூறினான். (2 பேதுரு 3:13) அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது இப்பொழுது நம்முடைய கண்களுக்கு முன்னால் திறந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்வகையில்? பெரிய கோரேசாகிய மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டது உட்பட்ட நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டதிலாகும்.

8 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, யெகோவா தேவன், தம்முடைய குமாரன் தம் சத்துருக்களின் நடுவே ஆளத் தொடங்குவதற்கு அவருக்கு அதிகாரமளித்தது 1914-ல் ஆகும். நெடுங்காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த “புதிய வானங்கள்” அப்பொழுது உண்டாயிருக்கலாயிற்று. நடைபெற்ற அது, பூர்வ இஸ்ரவேலின் விடுதலையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கிலும் மிக அதிக உயர் சிறப்பு வாய்ந்திருந்தது. (சங்கீதம் 110:2; தானியேல் 7:13, 14) 1914-ல் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாங்கம் உண்மையில் பரலோகத்தில்தானே இருந்து ஆட்சி செலுத்துகிறது, மேலும் பூமி முழுவதன்மீதும் கடவுள் அதற்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவைப் பின்பற்றும் ஆவியால்-அபிஷேகஞ் செய்யப்பட்டவர்கள் (ஏற்கெனவே மரித்தவர்கள்) பரலோகத்தில் தங்கள் கர்த்தருடன் அரசரும் ஆசாரியருமாயிருக்கும்படி பின்னால் உயிர்த்தெழுப்பப்பட்டதோடு இந்த அரசாங்கம் பெரிதாக்கப்படுதல் நடந்தேறியது. இந்த ராஜ்ய வகுப்பின் மற்ற உறுப்பினர் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கையில் அவர்களும், வளர்ந்துகொண்டேயிருக்கும் இந்தப் “புதிய வானங்களின்” உறுப்பினர் தொகுதியில் கூட்டப்பட்டு வருகின்றனர். (1 தெசலோனிக்கேயர் 4:14-17; வெளிப்படுத்துதல் 14:13) பெரும்பாலும், கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளில் பெரும்பான்மையர் இப்பொழுது அந்தப் பரலோக ராஜ்யத்தில் செயல்படுகின்றனர். ஆவியால் பிறந்தக் கிறிஸ்தவர்கள் இவ்வாறு கிறிஸ்துவுடன் சேர்ந்து புதிய எருசலேம் ஆகின்றனர், இதைக் குறித்து யெகோவா பின்வருமாறு கூறினார்: “இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் அதன் ஜனத்தை களிகூருதலுக்குக் காரணமாகவும் சிருஷ்டிக்கிறேன்.”—ஏசாயா 65:18, NW.

9 பரலோகங்களில் மாத்திரமல்ல பூமியிலுங்கூட யெகோவா “களிகூருதலுக்குக் காரணத்தை” உண்டுபண்ணியிருக்கிறார். ராஜ்ய சுதந்தரவாளிகளின் ஒரு மீதிபேர் இன்னும் பூமிக்குரிய காட்சியில் இருக்கின்றனர். முதல் உலகப் போரின்போது கிறிஸ்தவமண்டல பாதிரிமார், இந்த பைபிள் மாணாக்கருக்கு எதிராகப் பொய்க் குற்றச் சாட்டுகளைச் சுமத்தவும் அவர்களுடைய நிர்வாகக் குழுவின் உறுப்பினரை நீண்டகால சிறையிருப்புத் தீர்ப்புப் பெறச்செய்யவும் போர்க்கால வெறியை விரைவில் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் 1919-ல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர், உண்மையில் மகா பாபிலோன் பின்னின்று தூண்டிவிட்ட சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். யெகோவாவின் ஆவியின் உதவியைக் கொண்டு, தூய்மை வணக்கத்துக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் அக்கறைகளுக்கும் தனிப்பட முழுவதும் ஒப்படைத்த ஜனங்களாக அவர்கள் மறுபடியும் ஒழுங்குபடுத்தி அமைந்தனர்.

10 எனினும், அவர்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும், பொ.ச.மு. 537-ல் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த யூதர்களினுடையவற்றிற்கு வேறுபட்டன. ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினர் தங்களுக்குப் “பரலோகங்களில் வைக்கப்பட்டுள்ள” சுதந்தரத்தையே ஆவலோடு எதிர்நோக்கினர். (1 பேதுரு 1:3-5) ஆனால் அந்தப் பரிசை அவர்கள் உண்மையில் பெறுவதற்கு முன்னால், அவர்கள் செய்வதற்கு யெகோவா ஒரு வேலையை வைத்திருந்தார். இதைக் குறித்து, அவர் தீர்க்கதரிசனமாய்ப் பின்வருமாறு கூறினார்: “நான் வானத்தை [வானங்களை, NW] நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.” (ஏசாயா 51:16) தம்முடைய ஊழியர்கள் பூமியெங்கும் அறிவிக்கும்படி, அவர் தம்முடைய “வார்த்தையை,” தம்முடைய செய்தியை, அவர்களுடைய வாய்க்குள் வைத்தார். “புதிய வானங்களைக்” கடவுள் அவ்வளவு உறுதியாய் நிலைநாட்டியிருக்க மனிதரோ பேய்களோ அவற்றை வேரோடு பிடுங்க முடியாதென்று அவர்கள் திட நம்பிக்கையுடன் யாவருக்கும் தெரியப்படுத்தத் தொடங்கினர். பரலோக சீயோனின் இந்தப் பிரதிநிதிகளை யெகோவா நடத்தின முறை அவர்களை அவருடைய ஜனங்களாகத் தெளிவாய் அடையாளங் கண்டுகொள்ள செய்தது. இவ்வுலகத்தின் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கப்படியான பாழ் நிலைக்கு நேர்மாறாக, ஆவிக்குரிய இஸ்ரவேலர் குடியேறின “தேசம்,” அவர்களுடைய நடவடிக்கை எல்லை, ஆவிக்குரிய மதிப்புகளும் செயல்களும் செழித்தோங்கும் இடமாயிற்று, இது ஆவிக்குரிய பரதீஸ்! (ஏசாயா 32:1-4; 35:1-7; 65:13, 14; சங்கீதம் 85:1, 8-13) ஆனால் ஏசாயா 65:17-ல் முன்னறிவித்துள்ள அந்தப் “புதிய பூமி”யைப் பற்றியதென்ன?

“புதிய பூமி”க்காக ஆயத்தம் செய்தல்

11 முக்கியமாய் 1935 முதல், பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனடையும் எதிர்பார்ப்பைக் கொண்ட திரள் கூட்டமான ஆட்களைக் கூட்டிச் சேர்ப்பதற்கான காலம் வந்துவிட்டதென்று, ஆவிக்குரிய இஸ்ரவேலரின் உறுப்பினர் காணும்படி யெகோவா செய்தார். ராஜ்ய சுதந்தரவாளிகளின் “சிறு மந்தை”யோடு ஒப்பிட, அவர்கள் நிச்சயமாகவே திரள் கூட்டமாகிவிட்டனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10) இவர்களும், ஆவிக்குரிய பரதீஸுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இவர்கள், பொ.ச.மு. 537-லும், அதற்குப் பின்னும் யூதர்களுடன் பாபிலோனை விட்டு வெளிவந்த இஸ்ரவேலரல்லாதவர்களால் முன்குறித்துக் காட்டப்பட்டனர். (எஸ்றா 2:58, 64, 65; 8:17, 20) யெகோவாவின் தற்கால சாட்சிகளாலாகிய, பூமிக்குரிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ள இந்தத் திரள் கூட்டத்தார் யாவரும் “புதிய பூமி”யின் எதிர்கால உறுப்பினர்.

12 மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போரும் பரிபூரண மனித ஜீவனடையும் எதிர்பார்ப்பைத் தங்கள் முன் கொண்டிருப்போருமான இவர்கள், அந்தப் “புதிய பூமி”யின் முதல் உறுப்பினராயிருக்க, உண்மையில் அதன் அடிப்படை ஆதாரமாக அமைவர். அந்த ஆதாரம் பழுதற்றிருப்பது முக்கியம். ஆகையால், இப்பொழுதே அவர்கள் யெகோவாவின் வழிகளில் முற்றும் முழுமையாகக் கற்பிக்கப்படுகின்றனர். சர்வலோக அரசாட்சியைப் பற்றிய விவாதத்தை இருதயப் பூர்வமாய் மதித்துணர அவர்கள் உதவி செய்யப்படுகிறார்கள். ‘தங்கள் சுய புத்தியின்மேல் சாயாமல், தங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பது’ எவ்வளவு இன்றியமையாததென அவர்கள் கற்றுவருகிறார்கள். (நீதிமொழிகள் 3:5, 6) “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியைப்” பிரசங்கிப்பதில் இப்பொழுது முழுமையாய்ப் பங்குகொள்வதன் மூலம் கடவுளுடைய ராஜ்யத்தை ஆர்வத்துடனும் உண்மைப் பற்றுறுதியுடனும் ஆதரிப்போராகத் தங்களை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. (மத்தேயு 24:14, NW) சகல தேசங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்துவரும் ஜனங்கள் அன்புள்ள சகோதரத்துவத்தில் ஒன்று சேர்ந்து உழைக்கும் ஒரு பூகோள சமுதாயத்தின் பாகமாயிருப்பது குறிப்பதை அவர்கள் அனுபவிக்கிறார்கள். (யோவான் 13:35; அப்போஸ்தலர் 10:34, 35) இந்தக் கல்வித் திட்டத்திலிருந்து முழுமையாய்ப் பயனடைய தனிப்பட்டவராய் நீங்கள் உங்களைக் கருத்துடன் ஈடுபடுத்துகிறீர்களா? அப்படிச் செய்யும் யாவருக்கும் அதிசயமான எதிர்பார்ப்புகள் எதிரில் இருக்கின்றன.

“புதிய பூமி” நடைமுறை மெய்ம்மையாகிறது

13 “ஒரு புதிய பூமி”யைக் கொண்டுவருவாரென யெகோவா கொடுத்த வாக்கின் கடைசியான, முழு நிறைவேற்றம் முன்னால் பொ.ச.மு. 537-ல் நடைபெற்றதைப் பார்க்கிலும் மிக அதிக சிறப்பு வாய்ந்திருக்கும். “புதிய பூமி” ஆகிறவர்கள் மகா பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜனங்களாயிருப்பது மட்டுமல்லாமல், அந்தப் பொய் மத உலகப் பேரரசு முழுவதுமே என்றென்றுமாக அழிக்கப்பட்டுப் போயிருக்கும். (வெளிப்படுத்துதல் 18:21) ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் அந்த முதல் நிறைவேற்றத்தில் உண்மையாயிருந்ததுபோல், இந்த நீதியுள்ள மனித சமுதாயம்—இந்தப் “புதிய பூமி”—யெகோவாவை நிந்தித்து அவருடைய ஊழியரைத் துன்புறுத்தும் தேசங்களால் சூழப்பட்டிராது. மனித அரசாங்கங்களெல்லாம், யெகோவாவின் அரசாட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த மறுத்ததால், நொறுக்கி அழிக்கப்பட்டுப் போயிருக்கும், மேலும் தற்போதைய பொல்லாத மனித சமுதாயமும் பூமியிலிருந்து முழுமையாய் ஒழிக்கப்பட்டிருக்கும். (தானியேல் 2:44; நீதிமொழிகள் 2:21, 22) யெகோவாவை உயர்வாய் மதித்து, அவருடைய வழிகளில் மிகுந்த மனமகிழ்ச்சியைக் கண்டடைகிறவர்களே, கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குமுறை தொடங்குகையில், கிரகமாகிய பூமியில் குடியிருக்கும் ஒரே ஜனங்களாயிருப்பர்.—சங்கீதம் 37:4, 9.

14 அந்த மகிமையான காலத்துக்கே அப்போஸ்தலன் பேதுரு தேவாவியால் ஏவப்பட்ட தன்னுடைய இரண்டாவது நிருபத்தில் கவனம் செலுத்த வைத்தான். (2 பேதுரு 3:13) மனக்கிளர்ச்சியூட்டும் அதே எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டு, அப்போஸ்தலன் யோவான் தனக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்துதலின் நுட்பவிவரங்களை அறிவித்து, பின்வருமாறு கூறுகிறான்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” (வெளிப்படுத்துதல் 21:1) மிகுந்த உபத்திரவம் முடிவுற்று சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸ்ஸுக்குள்ளாக்கப்படுகையில், ஒரு புதிய சகாப்தம் தொடங்கும். சாத்தானின் மற்றும் அவனுடைய பேய்களின் இழிவான செல்வாக்கு ஒழிந்து போய்விட்டிருக்கும். அவனுடைய காரிய ஒழுங்குமுறை முழுவதும் அழிக்கப்பட்டுப் போயிருக்கும். யெகோவாவின் அரசாட்சியைப் புறக்கணிக்கும் அரசாங்கங்களின் தலையிடுதல் எதுவும் இல்லாமல், “புதிய வானம்,” யெகோவா தம்முடைய சிருஷ்டிகளுக்குக் கொண்டுள்ள அன்பான நோக்கத்தை அப்பொழுது நிறைவேற்றும். அந்தப் “புதிய வானத்”தின் கீழ் “திரள் கூட்டத்தாரால்” ஆகிய உண்மையான “புதிய பூமி” இருக்கும், அவர்களுக்கே கடவுள் அழகும், ஏராளமும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைந்த பூகோள பரதீஸில் முடிவற்ற வாழ்க்கையின் மிக மதிப்புவாய்ந்த எதிர்பார்ப்பை ஏற்கும்படி நீட்டுகிறார். மரித்த மானிடரை உயிர்த்தெழுப்புவதற்குக் கடவுள் நியமித்துள்ள காலம் வருகையில், இவர்களும், நீதி வாசமாயிருக்கப்போகும் அந்தப் “புதிய பூமி”யின் பாகமாகும் வாய்ப்பைக் கொண்டிருப்பர்.—வெளிப்படுத்துதல் 20:12, 13.

15 அப்பொழுது மனிதவர்க்கத்துக்காகக் கடவுள் வைத்திருப்பவற்றைக் குறித்து, அப்போஸ்தலன் யோவான் பரலோகத்திலிருந்து கூறும் பின்வரும் அறிவிப்பைக் கேட்டான்: “இதோ, கடவுள் தங்கும் கூடாரம் மனுஷரிடத்திலிருக்கிறது; அவர்களிடத்தில் அவர் தங்குவார். அவர்கள் அவர் ஜனங்களாயிருப்பார்கள், கடவுள் தாமே அவர்களோடிருப்பார். அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா; முந்தினவை ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4, தி.மொ.) ஆ, அது எவ்வளவு மகிழ்ச்சிதரும் வாழ்க்கையாயிருக்கும்!

16 அந்தப் “புதிய பூமியில்” வாழ்க்கை எவ்வாறிருக்கும் என்பதற்கு, ஏதேனில் இருந்த நிலைமைகளும் இயேசு நடப்பித்த அற்புதங்களும் பெருமகிழ்ச்சி நிரம்பிய முன்காட்சிகளை அளிக்கின்றன. கூடுதலாக, ஏசாயா 11:6-9-லும் 35:1-7-லும் 65:20-25-லும் உள்ள தீர்க்கதரிசனங்களின் அம்சங்கள், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு மிகுந்த ஆசீர்வாதமுண்டாக, அப்பொழுது இயற்கை இயல்பான நிறைவேற்றமடையும். எல்லா வகையிலும் பரதீஸாகியிருக்கும் பூமியில், இன்றியமையாதத் தேவையான ஆவிக்குரிய ஆரோக்கியமும் செழுமையுமுள்ள நிலைமைகளை உடல் மற்றும் மன பரிபூரணத்தோடுகூட அனுபவித்து மகிழ முடிகையில் எத்தகைய புத்துயிரளிக்கும்! இத்தகைய அதிசயமான எதிர்பார்ப்புகள் நமக்கு முன்னிருக்க, இந்த எல்லாவற்றின் மகா உன்னத சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு நன்றியறிதலோடு நம்முடைய குரல்களை எழுப்பாமல் நாம் எவ்வாறிருக்க முடியும்!

[கேள்விகள்]

1. (எ) பைபிளில், “வானங்கள்” என எது அடிக்கடி குறிக்கப்படுகிறது? (பி) சில பகுதிகளில் “பூமி” என்பதன் கருத்தென்ன?

2. இஸ்ரவேல் நாடுகடத்திக் கொண்டுபோகப்பட யெகோவா ஏன் அனுமதித்தார், ஆனால் எதையும் அவர் முன்னறிவித்தார்?

3. ஏசாயா 65:17-லுள்ள வாக்கு எதைக் குறித்தது?

4. (எ) முன்னறிவித்த விடுதலை எப்போது வந்தது? (பி) அக்காலத்திலிருந்த “புதிய வானங்களும்” “புதிய பூமி”யும் யாவை?

5, 6. (எ) அவர்கள் உண்மையில் மாறின ஜனங்களென்பதற்கு எது அறிகுறியாயிருக்கும்? (பி) யெகோவா அவர்களைக் கண்டித்தபோது, நாடுகடத்திக் கொண்டுபோகப்படுவதற்கு முன்னால் அவர்கள் பிரதிபலித்ததற்கு எவ்வாறு வேறுபட்டிருந்தது?

7. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்துக்கு மேலுமான நிறைவேற்றம் இருக்க வேண்டுமென நாம் எப்படி அறிவோம்?

8. (எ) இந்தப் “புதிய வானங்களை” யெகோவா எப்பொழுது உண்டாயிருக்கச் செய்தார்? இது, இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தோடு ஒப்பிட எவ்வாறு இருக்கிறது? (பி) இந்தப் “புதிய வானங்களின்” உறுப்பினருடைய எண்ணிக்கை எவ்வாறு படிப்படியாய்ப் பெரிதாக்கப்படுகிறது?

9. 1919-ல் இங்கே இந்தப் பூமியில்தானே என்ன “களிகூருதலுக்குக் காரணத்தை” யெகோவா உண்டுபண்ணினார்?

10. (எ) இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரின் எதிர்பார்ப்புகள் எவ்வாறு பொ.ச.மு. 537-ல் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த யூதர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வேறுபட்டன? (பி) செய்வதற்கு என்ன வேலையை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார்? (சி) அவர்கள் இன்னும் பூமியிலிருக்கையில் அவர்களை எவ்வாறு நிறைவாய் ஆசீர்வதித்திருக்கிறார்? அவர்கள் அனுபவித்து மகிழும் நிலைமைகளை இடக்குறிப்பு கொடுத்துள்ள வேதவசனங்கள் எவ்வாறு விவரிக்கின்றன?

11. (எ) “புதிய பூமியின்” உறுப்பினராயிருக்கப் போகிறவர்களை முக்கியமாய் எப்பொழுதிருந்து யெகோவா ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்? (பி) பூர்வ பாபிலோனை விட்டு வெளிவந்த எந்த ஜனங்கள் இவர்களை முன்குறித்துக் காட்டினர்?

12. “புதிய பூமியின்” பொருத்தமான அடிப்படை ஆதாரமாயிருக்கும்படி ஆட்கள் இப்பொழுது எவ்வாறு ஆயத்தம் செய்யப்படுகின்றனர்?

13. வரவிருக்கும் “புதிய பூமி” எவ்வாறு, பொ.ச.மு. 537-ல் நிகழ்ந்ததைப் பார்க்கிலும் யெகோவாவின் வாக்கின் மிகப் பெரும் சிறப்பான நிறைவேற்றமாயிருக்கும்?

14. (எ) 2 பேதுரு 3:13-ம் வெளிப்படுத்துதல் 21:1-ம் எப்பொழுது நிறைவேறும்? (பி) “புதிய வானம்” அப்பொழுது என்ன வேறுபட்ட சூழ்நிலைமைகளில் செயல்படும்? (சி) “புதிய பூமி”யின் பாகமாக வேறு எவரும் சேர்க்கப்படுவர்?

15. வெளிப்படுத்துதல் 21:3, 4-லுள்ள வாக்குத்தத்தம் உங்களுக்கு ஏன் முக்கியம்?

16. எதிர்காலத்தைக் குறித்து, பின்வருபவற்றிலுள்ள வாக்குகள் என்ன எதிர்பார்ப்புகளை நம்முடைய இருதயத்தில் தூண்டுகின்றன: (எ) ஏசாயா 11:6-9? (பி) ஏசாயா 35:1-7? (சி) ஏசாயா 65:20-25? (டி) இந்த மகிழ்ச்சி நிரம்பிய எதிர்பார்ப்புகளை நமக்குக் கூடியவையாக்குகிறவர் யார்?