Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறு-சிருஷ்டிப்புக்குரிய காலம்

மறு-சிருஷ்டிப்புக்குரிய காலம்

அதிகாரம் 13

மறு-சிருஷ்டிப்புக்குரிய காலம்

சீரழிந்தத் தற்போதைய உலகத்தின் முடிவினூடே தப்பிப்பிழைத்தல் சிறப்பான எதிர்பார்ப்பாகும். இவ்வுலகத்தின் அநீதிகள், பேராசை மற்றும் வன்முறைச் செயல்களிலிருந்து தப்பியோட நாம் ஆவல்கொள்கிறோம். ஆனால் நாம் தப்பிப்பிழைத்தலை இன்னுமதிக விரும்பத்தக்கதாக்குவது வேறு ஒன்று. அது என்ன? “புதிய பூமி”யின் பாகமாகும் எல்லாரும் தங்கள் சொந்த அபூரணங்களிலிருந்தும் நோயிலிருந்தும் வேதனைக்குரிய வாழ்க்கையிலிருந்தும், ஆம், மரணத்திலிருந்துங்கூட விடுதலை செய்யப்படும் வாய்ப்பைக் கொண்டிருப்பாரென்ற இந்த உண்மையேயாகும். (வெளிப்படுத்துதல் 21:1-5) எனினும், அது நடைபெற, பாவம்தானே முற்றிலும் வேரோடு அழிக்கப்பட வேண்டும். இது எப்படிக் கூடியதாகும்? இது “மறு-சிருஷ்டிப்பு” என்று இயேசு கிறிஸ்து விவரித்ததோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

2இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குப் பின்வருமாறு கூறினார்: “மறு-சிருஷ்டிப்பில், மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.” (மத்தேயு 19:28, NW) இந்த மறு-சிருஷ்டிப்பு, பைபிளின் மற்ற மொழிபெயர்ப்புகளில் சொல்லியிருக்கிறபடி “மறு தோற்றத்”தின் காலமாயிருக்கும், “சமஸ்தமும் புதிதாக்கப்படுங்” காலமாயிருக்கும். (ரோதர்ஹாம் மொழிபெயர்த்த தி எம்ஃபஸைஸ்ட் பைபிள் [ஆங்கிலம்]; திருத்திய மொழிபெயர்ப்பு [தமிழ்]) இந்த மறு-சிருஷ்டிப்பின் மூலம், மனிதர், தொடக்கத்தில் மனிதவர்க்கம் கொண்டிருந்த பரிபூரணத்தை மறுபடியும் அனுபவித்து மகிழ முடியும்.

3ஆதாமிலிருந்து சுதந்தரித்தப் பாவத்தினால், அவனுடைய சந்ததி முழுவதும் மரிக்க வேண்டியதாயிற்று, மேலும் பலர் மரணத்துக்கு வழிநடத்தும் துன்பந்தரும் நோயைச் சகிக்க வேண்டியதாயிற்று. (ரோமர் 5:12) மரணத்திலிருந்து விடுதலையை எந்தப் பணத்தைக் கொண்டும் வாங்க முடியாது. அபூரண மனிதன் செய்யக்கூடிய எவ்வகை வேலைகளும் தனக்காயினும் மற்ற எவருக்காயினும் விடுதலையைச் சம்பாதிக்க முடியாது. மனிதவர்க்கம் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பைத் திரும்பப் பெறவேண்டுமென்றால், ஆதாம் இழந்ததற்குச் சரிசம மதிப்புள்ளது, அதாவது பரிபூரண மனித உயிர் பலி செலுத்தப்படவேண்டுமென தெய்வீக நீதி தேவைப்படுத்தியது. ஆதாமின் சந்ததியில் எவரும் செலுத்துவதற்கு இத்தகைய உயிரைக் கொண்டில்லை.—சங்கீதம் 49:7-9; பிரசங்கி 7:20.

4இரக்கமாய், யெகோவா தாமே, தம்முடைய ஒரே பேறான குமாரன் தன் உயிரை “சரி ஒப்பான மீட்கும் பொருளாகச்” செலுத்தும்படி, அவரைப் பரிபூரண மனிதனாக பூமிக்கு அனுப்புவதனால் தேவைப்பட்ட ஏற்பாட்டைச் செய்தார். (1 தீமோத்தேயு 2:5, 6) கடவுளின் தகுதியற்றத் தயவுக்கும் மனிதவர்க்கத்தின்பேரிலுள்ள அவருடைய அன்புக்கும் எத்தகைய பெரும் உயர்வான மெய்ப்பிப்பு! இதன் பலனாகக் கிடைக்கக்கூடிய உயிரை நாம் சம்பளமாகச் சம்பாதிக்க முடியாது; ஆனால் அது கடவுள் கொடுக்கும் பரிசாகும். எனினும் இந்தத் தெய்வீக ஏற்பாடு தங்களுக்குத் தேவையென உண்மையாய் உணர்ந்து ஒப்புக்கொண்டு, அதில் விசுவாசங்காட்டி அந்த விசுவாசத்தைக் கடவுளுடைய குமாரனுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் மெய்ப்பித்துக் காட்டுகிறவர்களுக்கு மாத்திரமே அது கொடுக்கப்படுகிறது. (ரோமர் 6:23; யோவான் 3:16, 36) ஆனால் இந்தப் பலியின் நன்மைகளை மனிதவர்க்கம் எப்போது அனுபவிக்கும்?

கிறிஸ்துவின் பலியினால் இப்பொழுது உண்டாகும் நன்மைகள்

5இயேசு கிறிஸ்து (கடவுளின் பெரிய பிரதான ஆசாரியனாகப் பாகம் வகித்து) பரலோகத்தில் கடவுளின் முன்னிலையில் தம்முடைய பலியின் விலைமதிப்பை அளித்தப் பின் உடனடியாக நன்மைகள் மனித உயிரைப் பாதிக்கத் தொடங்கின. முதலாவதாக, கிறிஸ்துவுடன் சுதந்தரவாளிகளாக இருக்கும்படி அழைக்கப்பட்டு, பரலோகத்தில் அவரோடு அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவிக்கப்போகிறவர்கள் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே முதல் தொடங்கி, இந்த நன்மைகளை அனுபவிக்க ஆரம்பித்தனர். (அப்போஸ்தலர் 2:32, 33; கொலோசெயர் 1:13, 14) பின்பு, முனைப்பான பிரகாரம் 1935-ல், பூமியில் நித்திய ஜீவனடையும் நம்பிக்கைகொண்ட ஆட்கள் தங்களை வெளிப்படுத்திக் காட்டத் தொடங்கினர். இவர்களுடைய நம்பிக்கையும், கிறிஸ்துவின் பலியால் கூடியதாக்கப்பட்டது. (1 யோவான் 2:1, 2) இந்தப் பலிக்குரிய விலைமதிப்பின் படிப்படியான இந்தப் பிரயோகம், பூர்வ இஸ்ரவேலின் பிராயச்சித்த நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளால் குறித்துக் காட்டப்பட்டது.

6இஸ்ரவேலின் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்திலும், பின்னால் ஆலயத்திலும் லேவிய வம்சத்து ஆரோனின் குடும்பத்தினனான ஓர் உறுப்பினன் பிரதான ஆசாரியனாகச் சேவித்தான். ஆரோனின் வீட்டாரான மற்ற ஆண்கள் அவனுக்கடியில் ஆசாரியராகச் சேவித்தார்கள், மேலும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள் உதவிக்காரராகச் சேவித்தார்கள். பாவ நிவாரணம் செய்ய, பிரதான ஆசாரியன் இரண்டு மிருகங்களைப் பலியிட்டான், அவை ஒவ்வொன்றின் இரத்தமும் யெகோவா கட்டளையிட்டபடியே, மகா பரிசுத்த ஸ்தலத்தில் தனித்தனியே செலுத்தப்பட்டது. முதலாவது, ஓர் இளங்காளையை ஆரோனிய பிரதான ஆசாரியன் “தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும்” செலுத்தினான், இதில் லேவி கோத்திரம் முழுவதும் அடங்கியது. (லேவியராகமம் 16:11, 14) அடுத்தப்படி, வெள்ளாட்டுக்கடா, மற்றப் பன்னிரண்டு கோத்திரங்களான ‘ஜனத்துக்காகப்’ பாவநிவாரண பலியாகச் செலுத்தப்பட்டது. (லேவியராகமம் 16:15) கூடுதலாக, உயிருள்ள ஒரு வெள்ளாட்டுக்கடாவின் தலையின்மேல் இஸ்ரவேலர் யாவரின் பாவங்களையும் அறிக்கையிட்டு அது வனாந்தரத்துக்குள் கொண்டுசென்று விடப்பட்டது. (லேவியராகமம் 16:21, 22) இவை யாவும் குறித்ததென்ன?

7இதன் நிறைவேற்றம் இயேசு கிறிஸ்துவின் அந்த ஒரே பலியில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறதென அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறான். “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். . . . தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக.” (எபிரெயர் 9:24-26) அப்படியானால் இஸ்ரவேலின் பிராயச்சித்த நாளில் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட மிருகங்களின் இரத்தம் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது? இது இயேசுவின் பரிபூரண மனித பலி நிறைவேற்றும் வெவ்வேறு அம்சங்களுக்குக் கவனத்தைச் செலுத்த வைக்கவேயாகும். இன்னுமொரு அம்சம், உயிருள்ள வெள்ளாட்டுக்கடாவின் தலையின்மேல் அந்த ஜனத்தின் பாவங்களை அறிக்கையிட்டு, பின்பு அதை வனாந்தரத்துக்குள் கொண்டுசென்று விடுவதால் விளக்கமாகத் தெரியச் செய்யப்பட்டது.

8ஆரோனின் வீட்டாருக்காகப் பலி செலுத்தப்பட்ட காளையின் இரத்தம் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் முதலாவதாகக் கொண்டு செல்லப்பட்டதைப் போலவே, இயேசுவின் பலியின் நன்மைகள், பரலோக ஆசாரியத்துவத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து உழைக்கப் போகிறவர்களுக்காக முதலாவது பயன்படுத்தப்பட்டது. இது பொ.ச. 33 முதற்கொண்டு செய்யப்பட்டது. ஆரோனைப் போல், தனக்காகப் பிராயச்சித்தம் செய்ய இயேசு கிறிஸ்துவுக்குப் பாவங்கள் இல்லை, ஆனால் கிறிஸ்துவுக்கடியில் உழைக்கப்போகிற ஆசாரியர்களுக்கு இருந்தன. அவர்கள் லேவியின் கோத்திரத்தால் படமாகக் குறிக்கப்பட்டனர். (1 பேதுரு 2:4, 5) “ஜனத்துக்காக” இரண்டாவது செலுத்தப்பட்ட பாவநிவாரண பலிக்குரிய வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தைச் செலுத்தினது, பரலோக வகுப்பாருக்குப் பின், மனிதவர்க்கத்தின் மற்றவர்கள் இயேசுவின் பலியிலிருந்து நன்மையடைவார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டினது. இவர்கள் பூமியில் திரும்பக் கொண்டுவரப்பட்ட பரதீஸில் ஜீவனடையவிருக்கும் ஆட்களாயிருப்பர். இவர்கள், பிராயச்சித்த நாளில் “[ஆசாரியரல்லாத] இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களால்” படமாகக் குறிக்கப்பட்டனர். (மத்தேயு 19:28; சங்கீதம் 37:29) இந்த எல்லாருக்காகவும் இயேசு மரித்தது மட்டுமல்லாமல், தாம் எவர்களுக்காகப் பலிக்குரிய மரணத்தில் மரித்தாரோ அவர்களின் பாவங்களை உண்மையில் சுமந்தும் தீர்க்கிறார், இவ்வாறு அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவருகிறார். இது, உயிருள்ள வெள்ளாட்டுக்கடாவின்மேல் இஸ்ரவேலரின் பாவங்களை அறிக்கையிட்டபின்பு, இனி ஒருபோதும் காணப்படாதபடி, அது கடைசியாக வனாந்தரத்துக்குள் கொண்டு சென்று விடப்பட்டதால் குறிப்பிட்டுக் காட்டப்பட்டது.—சங்கீதம் 103:12; ஏசாயா 53:4-6.

9கிறிஸ்துவின் மூலமாய் யெகோவா செய்த அன்புள்ள ஏற்பாட்டில் விசுவாசங்காட்டும் யாவருக்கும், அவர்களுடைய முந்தின வாழ்க்கை முறை என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், பாவங்களுக்கு உண்மையான மன்னிப்பும், கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான நிலைநிற்கையும் இப்பொழுது கூடியவையாயிருக்கின்றன. சுத்தமான மனச்சாட்சியுடன் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்யும் இந்த விலைமதியா ஆசீர்வாதத்தை அவர்கள் அனுபவித்து மகிழ முடியும். (1 கொரிந்தியர் 6:9-11; எபிரெயர் 9:13, 14) ஆனால் இது, பாவத்தின் எல்லாப் பாதிப்புகளிலிருந்தும் விடுதலையான வாழ்க்கை அவர்களுக்கு இப்பொழுது அளிக்கப்பட்டதென குறிக்கிறதில்லை. (1 யோவான் 1:8-10; ரோமர் 7:21-25) கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆளப்போகிறவர்கள், தங்கள் பூமிக்குரிய வாழ்க்கைப் போக்கை முடித்து பரலோகங்களில் சாவாமைக்குரிய ஜீவனுக்கு எழுப்பப்படுகையிலேயே அத்தகைய வாழ்க்கையை மெய்யாய் அனுபவிப்பர். மனிதவர்க்கத்தின் மற்றவர்களுக்கு, மறு-சிருஷ்டிப்பின் மூலம் பாவத்திலிருந்து முழுமையான விடுதலை கூடியதாக்கப்படும்.

“மறு-சிருஷ்டிப்பில்”

10இயேசு சொன்னபடி, “மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது,” இந்த மறு-சிருஷ்டிப்பு நடக்கும். (மத்தேயு 19:28, NW) அவர் சிங்காசனத்தில் ஏற்றப்பட்டபோது, நிச்சயமாகவே, எல்லாம் உடனடியாக நடக்கவில்லை. பொ.ச. 1914-ல் இயேசு சிங்காசனத்திலேற்றப்பட்ட பின், அவர் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் வெளியே தள்ளி பரலோகங்களை முதல் சுத்தப்படுத்தினார். பின்பு அவர் தம்மைப் பின்பற்றின அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் பரலோக மகிமைக்கு உயிர்த்தெழுப்பத் தொடங்கினார். (வெளிப்படுத்துதல் 12:5, 7-12; 1 தெசலோனிக்கேயர் 4:15-17) கிறிஸ்துவின் உண்மையுள்ள அப்போஸ்தலருக்கு வாக்குக்கொடுக்கப்பட்ட “பன்னிரண்டு சிங்காசனங்கள்” அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், 1,44,000 பேரைச் சேர்ந்த மற்ற எல்லாருங்கூட படிப்படியாய் மரித்தோரிலிருந்து அவரவர் உயிர்த்தெழுப்பப்படுகையில் பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்யப்படுகின்றனர்.—வெளிப்படுத்துதல் 3:21.

11பரலோக வகுப்பை உண்டுபண்ண ஆட்களைத் தெரிந்தெடுப்பது முடிவடைந்தபோது, முக்கியமாய் 1935 முதற்கொண்டு, “மற்றச் செம்மறியாடுகளா”லாகிய திரள் கூட்டத்தாரைக் கூட்டிச் சேர்ப்பது தொடங்கியது. இவர்களும் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்து,’ கிறிஸ்துவின் பலியிலிருந்து வரும் நன்மைகளை அனுபவித்து மகிழத் தொடங்கினர். “மெய்யான நீதியிலும் பக்தியிலும் கடவுளுக்கிசைய [கடவுளுடைய சித்தத்துக்கு இசைய, NW] சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [சுபாவத்தை, NW] தரித்துக்கொள்ள” இவர்களுக்கு உதவியளிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; எபேசியர் 4:20-24, தி.மொ.) பெருகிக்கொண்டே வரும் எண்ணிக்கையில் இவர்கள், திரும்பப் புதுப்பிக்கப்படும் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்குத் தங்களை வழிநடத்தக்கூடிய, கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்துள்ள ஏற்பாடுகளிலிருந்து நன்மையடைந்து கொண்டிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:17; 22:17.

12இப்பொழுது, சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படும். சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸ்ஸுக்குட்படுத்தப்படுவர். மனிதவர்க்கத்துக்கு ஆயிர ஆண்டு நியாயத்தீர்ப்பு நாள் தொடங்கும். இயேசு கிறிஸ்துவே தலைமை வகிக்கும் நியாயாதிபதியாக இருப்பார், எல்லாரும் யெகோவாவின் நீதியுள்ள வழிகளைக் கற்று அவற்றிற்கு உடன்பட்டு நடக்கக்கூடும்படி, எல்லாருக்கும் முழு வாய்ப்பும் மிகுதியான உதவியும் கொடுக்கப்படும்படி அவர் பார்த்துக் கொள்வார். மரணபரியந்தம் உத்தமத்தைக் காத்தவர்களாகத் தங்களை நிரூபித்த, கிறிஸ்துவைப் பின்பற்றின அபிஷேகஞ் செய்யப்பட்டவர்கள், ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கும்’ வேலையில் அவருடன் பங்குகொள்வார்கள். (லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 20:4, 6) இது, பிறப்பினால் இஸ்ரவேலின் சந்ததியாராயிருப்போரை மாத்திரமே அவர்கள் நியாயந்தீர்ப்பார்களென்று கருத்துக்கொள்கிறதில்லை. அதற்கும் மேலாக, பிராயச்சித்த நாளில் “இஸ்ரவேலின் [ஆசாரியரல்லாத] பன்னிரண்டு கோத்திரத்தாரால்” முன்குறித்துக் காட்டப்பட்ட எல்லாரையும் அவர்கள் நியாயந்தீர்ப்பார்கள். இது மீட்கப்பட்ட மனிதவர்க்க உலகம் முழுவதையும் உட்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 6:2) மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போரே, மனிதவர்க்கத்தை முன்னேற்றுவிக்கச் செய்யப்படும் இந்தத் திட்டத்திலிருந்து முதல் நன்மையடைவர். ஆனால் நூற்றுக்கோடிக் கணக்கான இன்னும் பலரும் இதில் பங்கு கொள்வர், எப்படியெனில், நியாயந்தீர்க்கப்படுவோரில் “உயிருள்ளோரும் மரித்தோரும்” உள்ளடங்கியிருப்பர். (2 தீமோத்தேயு 4:1; அப்போஸ்தலர் 24:15) மீட்பு கிரயமான கிறிஸ்துவின் பலியால் மீட்கப்பட்ட மரித்தோர் திரும்பி வருகையில் ஆ, எவ்வளவு மகிழ்ச்சி உணர்ச்சியுண்டாகும்! நேசமானவர்கள் திரும்ப ஒன்றுபடுகையில் எத்தகைய மகிழ்ச்சிக்குரிய கண்ணீர் ததும்பும்!

13பாவம் விளைவித்த உடல் மற்றும் மனம் சம்பந்த பலவீனக் கேடுகளிலிருந்து கடைசியாக மனிதவர்க்கம் விடுதலை செய்யப்படும் காலமாக இது இருக்கும். பூமியிலிருந்தபோது, இயேசு, திமிர்வாதக்காரரையும், குருடரையும் செவிடரையும் ஊமையரையும், மாம்சம் உருக்குலைக்கப்பட்ட அல்லது நோய் அவர்கள் பலத்தை உறிஞ்சிவிட்டிருந்த ஆட்களையும் உடனடியாகச் சுகப்படுத்தினார். அந்த வல்லமைவாய்ந்தச் செயல்கள், தம்முடைய ஆயிர ஆண்டு ஆட்சியின்போது மனிதவர்க்கம் முழுவதற்கும் அவர் செய்யப்போகிறவற்றின் வெறும் ஒரு முன்னனுபவமாகத்தானே இருந்தன. யெகோவாவின் இரக்கத்தின் இத்தகைய அதிசயமான அத்தாட்சியைக் கண்கூடாகக் கண்டு அல்லது அனுபவித்து பின்பு அவருடைய அரசாட்சியை அவமதித்துப் புறக்கணிக்கிறவர்கள், நல்ல காரணத்துடனேயே என்றென்றுமிராதபடி அழிக்கப்படுவர். ஆனால் யெகோவாவின் நீதியுள்ள வழிகளில் கற்பித்துப் பயிற்றுவிக்கப்படுவதன் மூலம், உண்மையான விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டுவோரின் சிந்தனையும் உள்நோக்கங்களும் படிப்படியாய் முன்னேற்றமடைந்து அவர்கள் முழு பரிபூரணத்தை அடைவார்கள். யெகோவாவை நேசிக்கும் இத்தகையோர் உண்மையில் மறு-தோற்றத்தை, மறு-சிருஷ்டிப்பை அனுபவித்திருப்பர். நித்திய பிதாவாகிய இயேசு கிறிஸ்து தங்களுடைய புதிய தகப்பனாக, வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போலிருக்கும்.—ஏசாயா 26:9; 9:6.

14அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில் கடைசி பரீட்சையைத் தேறின பின்பு, யெகோவா தேவன் அவர்களைக் கிறிஸ்துவின் மூலமாய் தம்முடைய சொந்தக் குமாரர்களாக, தம்முடைய பரிபூரண சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக ஏற்றுக்கொள்வார். இது—மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்போருக்கு மட்டுமல்ல, பரதீஸான பூமியில் உயிர்வாழும் மகிழ்ச்சியில் பங்குகொள்ள கொண்டுவரப்படும் மரித்தோர் யாவருக்குங்கூட—எத்தகைய ஊக்கமூட்டும் எதிர்பார்ப்பு!—ரோமர் 8:20, 21.

[கேள்விகள்]

1. (எ) “புதிய பூமிக்குள்” தப்பிப்பிழைப்போருக்கு என்ன அதிசயமான வாய்ப்பு காத்திருக்கும்? (பி) ஆனால் அதற்கு எது தேவைப்படும்?

2. மத்தேயு 19:28-ல் குறிப்பிட்டுள்ள “மறு-சிருஷ்டிப்பு” என்பதென்ன?

3. (எ) ஆதாமின் பாவத்தின் விளைவாய் என்ன உண்டாயிற்று? (பி) ஆதாமின் சந்ததியார் ஒருவரும் ஏன், சுதந்தரித்தப் பாவத்தின் விளைவுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை?

4. (எ) தேவைப்பட்ட மீட்கும் பொருள் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது? (பி) நாம் அதிலிருந்து எவ்வாறு நன்மையடையலாம்?

5. (எ) கிறிஸ்துவின் பலியிலிருந்து முதலாவது நன்மையடைந்தவர்கள் யாவர்? (பி) வேறு எந்த வகுப்பாரும் நன்மையடைந்துள்ளனர், முக்கியமாய் எப்பொழுது முதற்கொண்டு?

6. பிராயச்சித்த நாளில் நடந்ததைச் சுருக்கமாய்க் குறிப்பிடுங்கள்.

7. (எ) எந்த ஒரே பலி அங்கு முன்குறித்துக் காட்டப்பட்டது? (பி) ஒன்றுக்கு மேற்பட்ட பலிக்குரிய மிருகம் அங்கே ஏன் பயன்படுத்தப்பட்டது?

8. (எ) கிறிஸ்துவின் பலியிலிருந்து யார் நன்மையடைவரென பிராயச்சித்த நாளின் நிகழ்ச்சி நடைமுறைகள் எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டின? (பி) ‘ஜனத்துக்காகச்’ செலுத்தப்பட்ட பாவநிவாரண பலி இயேசுவின் பலியின் என்ன பிரயோகத்தைக் குறிப்பிட்டுக் காட்டினது? (சி) ஒரு வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்துக்குள் கொண்டுசென்றுவிட்டது மேலுமான என்ன உண்மையை விளக்கிக் காட்டினது?

9. (எ) கிறிஸ்துவின் பலியில் விசுவாசங் காட்டுபவர்கள் என்ன ஆசீர்வாதங்களை இப்பொழுது அனுபவிக்கின்றனர்? (பி) மேலுமான என்ன நன்மைகள் பின்னால் வரும்?

10. (எ) மறு-சிருஷ்டிப்பு எப்போது தொடங்கினது? (பி) இயேசு கொடுத்த வாக்கின் நிறைவேற்றமாக எவருக்காவது இன்னும் சிங்காசனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றனவா?

11. எவ்வகையில் “மற்றச் செம்மறியாடுகள்” மறு-சிருஷ்டிப்பின் பலன்களை ஏற்கெனவே உணருகிறார்கள்?

12. (எ) இயேசு இங்கே குறிப்பிட்ட ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்’ யாரை முன்குறித்துக் காட்டினர்? (பி) தப்பிப்பிழைப்போர் மட்டுமல்லாமல் வேறு எவரும் மறு-சிருஷ்டிப்பிலிருந்து நன்மையடைவர்?

13. ஆயிர ஆண்டு நாளின் பலன்கள் எவ்வாறு உண்மையில் மறு-சிருஷ்டிப்பாயிருக்கும்?

14. கடைசி பரீட்சையை தேறும் யாவருக்கும் என்ன மிக மதிப்புள்ள உறவை அனுபவித்து மகிழும் சிலாக்கியம் அருளப்படும்?