Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 45

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்று எப்படி காட்டலாம்?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்று எப்படி காட்டலாம்?

இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபம் உனக்குத் தெரியுமா?— உனக்குத் தெரியாது என்றால் அதை பைபிளில் நாம் சேர்ந்து வாசிக்கலாம். மத்தேயு 6:9-13-ல் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை பரமண்டல ஜெபம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற வரியை நீ அதில் கவனித்தாயா? கடவுளுடைய ராஜ்யம் என்னவென்று உனக்குத் தெரியுமா?—

ஒரு நாட்டை அல்லது ஊரை ஆட்சி செய்பவரே ராஜா. அவருடைய அரசாங்கம்தான் ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது. சில நாடுகளில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுகிறார். கடவுளுடைய அரசாங்கத்தின் ஆட்சியாளர் எப்படி அழைக்கப்படுகிறார் தெரியுமா?— ராஜா என்று அழைக்கப்படுகிறார். அதனால்தான் கடவுளுடைய அரசாங்கம் ஒரு ராஜ்யம் என்று சொல்லப்படுகிறது.

யெகோவா தேவன் தன் அரசாங்கத்தின் ராஜாவாக யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?— தன் மகன் இயேசு கிறிஸ்துவை தேர்ந்தெடுத்தார். மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஆட்சியாளரையும்விட அவர் ஏன் சிறந்தவர்?— ஏனென்றால் இயேசு தன் தகப்பன் யெகோவாவை உண்மையிலேயே நேசித்து, எப்போதும் சரியானதையே செய்கிறார்.

இயேசு பெத்லெகேமில் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பு பைபிள் அவருடைய பிறப்பைப் பற்றி சொன்னது. அவரை ராஜாவாக கடவுள் தேர்ந்தெடுப்பார் என்றும் சொன்னது. இதை ஏசாயா 9:6, 7 வசனங்களில் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளிலிருந்து நாம் வாசித்துப் பார்க்கலாம். அது இப்படி சொல்கிறது: “நமக்காக ஒரு குழந்தை பிறந்தார், நமக்காக ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அரசாங்கம் அவர் தோள் மேலிருக்கும்; அவர் பெயர் . . . சமாதானப் பிரபு என்னப்படும். அவருடைய அரசாங்கத்தின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.)

கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர் இங்கே ஏன் “பிரபு” என்று, அதாவது இளவரசர் என்று அழைக்கப்படுகிறார் தெரியுமா?— இந்த இளவரசர் ஒரு ராஜாவின் மகன். ஆமாம், பெரிய ராஜாவாகிய யெகோவாவின் மகன். அதேசமயத்தில் இயேசுவை யெகோவா தன் அரசாங்கத்தின் ராஜாவாக்கினார். அந்த அரசாங்கம் பூமியை ஆயிரம் வருஷங்களுக்கு ஆட்சி செய்யும். (வெளிப்படுத்துதல் 20:6) இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.”—மத்தேயு 4:17.

ராஜ்யம் சமீபமாக வந்துவிட்டதென்று இயேசு ஏன் சொன்னார் என நினைக்கிறாய்?— ஏனென்றால் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்யப் போகிறவர் அவர்கள் நடுவிலேயே இருந்தார்! ஆகவேதான் ‘கடவுளுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 17:21) யெகோவாவின் ராஜா, நீ தொட்டுப் பார்க்கும் அளவுக்கு அவ்வளவு பக்கத்தில் இருந்தால் உனக்குப் பிடிக்கும்தானே?—

அப்படியென்றால் என்ன முக்கியமான வேலை செய்வதற்காக இயேசு இந்தப் பூமிக்கு வந்தார்?— இயேசுவே அதற்கு பதில் சொன்னார். ‘நான் மற்ற ஊர்களிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தியை பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்’ என்றார். (லூக்கா 4:43) தான் மட்டுமே எல்லா ஊர்களிலும் பிரசங்கம் செய்து முடிக்க முடியாது என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே என்ன செய்தார் தெரியுமா?—

என்ன வேலை செய்வதற்காக இயேசு இந்தப் பூமிக்கு வந்தார்?

இயேசு மற்றவர்களை தன்னுடன் அழைத்துச் சென்று, எப்படி பிரசங்கம் செய்வது என்று காட்டினார். அப்போஸ்தலர்களாக அவர் தேர்ந்தெடுத்த 12 பேருக்குத்தான் அவர் முதன்முதலாக கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 10:5, 7) ஆனால் அவர்களுக்கு மட்டும்தான் இந்த வேலையை கற்றுக்கொடுத்தாரா? இல்லை, இன்னும் நிறைய பேருக்கும் அவர் கற்றுக்கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிற்பாடு, இன்னும் 70 சீஷர்களை இரண்டு இரண்டு பேராக அவர் அனுப்பினார். அவர்கள் மக்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார்கள்?— ‘கடவுளுடைய ராஜ்யம் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்’ என்று இயேசு கூறியபடியே கற்றுக்கொடுத்தார்கள். (லூக்கா 10:9) இந்த விதத்தில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்கள் கற்றுக்கொண்டார்கள்.

இஸ்ரவேலில் ரொம்ப காலத்திற்கு முன்பு, புதிதாக ராஜாக்களாக ஆனவர்கள் கழுதைக்குட்டியின் மீது ஊர்வலம் சென்றார்கள். மக்கள் எல்லாரும் பார்ப்பதற்காக அப்படி சென்றார்கள். இயேசுவும் கடைசி முறையாக எருசலேமுக்கு போனபோது அப்படித்தான் சென்றார். ஏனென்றால் அவர் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆட்சி செய்ய இருந்தார். ஆனால் அவர் ராஜாவாக இருப்பதை மக்கள் விரும்பினார்களா?—

அவர் கழுதைக்குட்டி மேல் சென்றபோது கூட்டத்தாரில் நிறைய பேர் தங்கள் மேலாடைகளை அவருக்கு முன்பாக தெருவில் விரித்தார்கள். மற்றவர்கள் மரக் கிளைகளை வெட்டி அவற்றை தெருவில் போட்டார்கள். இதன் மூலம், இயேசு தங்கள் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ‘யெகோவாவின் பெயரில் வருகிற ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்!’ என்று சத்தமிட்டார்கள். ஆனால் எல்லாருமே சந்தோஷமாக இருக்கவில்லை. சில மதத் தலைவர்கள் இயேசுவிடம், ‘உம்முடைய சீஷர்களை அமைதியாக இருக்கச் சொல்லும்’ என்றுகூட சொன்னார்கள்.—லூக்கா 19:28-40.

இயேசு தங்கள் ராஜாவாக இருக்க வேண்டும் என்று விரும்பிய மக்கள் பிறகு ஏன் மனம் மாறினார்கள்?

ஐந்து நாட்களுக்குப் பிறகு இயேசு கைது செய்யப்பட்டார். ஆளுநரான பொந்தியு பிலாத்துவின் மாளிகைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இயேசு தன்னை ஒரு ராஜா என சொல்கிறார் என்றும் ரோம அரசாங்கத்தை எதிர்க்கிறார் என்றும் எதிரிகள் குற்றம் சொன்னார்கள். ஆகவே இயேசுவிடம் இதைப் பற்றி பிலாத்து கேட்டார். அரசாங்கத்தை தான் பறிக்க முயற்சி செய்யவில்லை என்று இயேசு சொன்னார். ‘என் ராஜ்யம் இந்த உலகத்தின் பாகமல்ல’ என்று பிலாத்துவிடம் கூறினார்.—யோவான் 18:36.

பிறகு பிலாத்து மாளிகைக்கு வெளியே சென்று, இயேசுவிடம் எந்தக் குற்றத்தையும் தான் காணவில்லை என்று மக்களிடம் சொன்னார். ஆனால் இப்போதோ, இயேசு தங்கள் ராஜாவாக இருப்பதை மக்கள் விரும்பவில்லை. அவர் விடுதலை செய்யப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. (யோவான் 18:37-40) இயேசுவுடன் மறுபடியும் பேசிய பிறகு, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை பிலாத்து உறுதியாக நம்பினார். ஆகவே கடைசி முறையாக இயேசுவை வெளியே கொண்டு வந்து நிறுத்தி, ‘பாருங்கள்! உங்கள் ராஜா!’ என்றார். ஆனால் மக்கள், ‘அவனைக் கொண்டு போங்கள்! அவனைக் கொண்டு போங்கள்! கழுமரத்தில் அறையுங்கள்!’ என்று கூச்சல் போட்டார்கள்.

‘உங்கள் ராஜாவை கழுமரத்தில் அறையட்டுமா?’ என்று பிலாத்து கேட்டார். ‘எங்களுக்கு இராயனைத் தவிர வேறு ராஜா யாரும் இல்லை’ என்று பிரதான ஆசாரியர்கள் சொன்னார்கள். எவ்வளவு கெட்டவர்கள் பார்த்தாயா! அந்தப் பொல்லாத ஆசாரியர்கள் இயேசுவை எதிர்க்கும்படி மக்களை தூண்டிவிட்டார்கள்!—யோவான் 19:1-16.

இன்றும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இயேசு தங்கள் ராஜாவாக இருப்பதை நிறைய பேர் விரும்புவதில்லை. அவர்கள் கடவுளை நம்புவதாக சொல்லலாம். ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுளோ கிறிஸ்துவோ சொல்வது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. தங்களுடைய அரசாங்கங்களே இந்தப் பூமியில் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நாம் என்ன நினைக்கிறோம்? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அது செய்யப்போகும் எல்லா அருமையான காரியங்களைப் பற்றியும் நாம் கற்றுக்கொள்ளும்போது கடவுளைப் பற்றி எப்படி உணருகிறோம்?— நாம் அவரை நேசிக்கிறோம் அல்லவா?— கடவுளை நேசிப்பதை நாம் எப்படி காட்டலாம்? அவரது ராஜ்ய ஆட்சியின்கீழ் வாழ விரும்புவதை எப்படி காட்டலாம்?—

இயேசு ஏன் முழுக்காட்டுதல் பெற்றார், அதை ஏற்றுக்கொண்டதை கடவுள் எப்படி காட்டினார்?

இயேசுவைப் போலவே நடந்துகொள்வதன் மூலம் நாம் அதை கடவுளுக்குக் காட்டலாம். யெகோவா மீது அன்பிருப்பதை இயேசு எப்படி காட்டினார்?— ‘அவருக்குப் பிரியமானதையே நான் எப்போதும் செய்கிறேன்’ என்று இயேசு விளக்கினார். (யோவான் 8:29) ஆம், ‘கடவுளுடைய விருப்பத்தை செய்யவும்,’ ‘அவரது வேலையை செய்து முடிக்கவும்’ இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். (எபிரெயர் 10:7; யோவான் 4:34) பிரசங்க வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு இயேசு என்ன செய்தார் என்பதைக் கவனி.

யோவான் ஸ்நானனை சந்திக்க இயேசு யோர்தான் நதிக்கு சென்றார். அவர்கள் இருவரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள். யோவான் இயேசுவை தண்ணீருக்குள் முக்கி வெளியே எடுத்தார். யோவான் ஏன் இயேசுவை இப்படி முழுக்காட்டினார் தெரியுமா?—

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் நாம் எங்கெல்லாம் பேசலாம்?

தன்னை முழுக்காட்டும்படி இயேசுதான் யோவானிடம் கேட்டார். ஆனால் இயேசு முழுக்காட்டப்பட வேண்டும் என்று கடவுள் விரும்பியது நமக்கு எப்படி தெரியும்?— இயேசு தண்ணீரிலிருந்து வெளியே வந்தவுடன் வானத்திலிருந்து கடவுளுடைய குரலைக் கேட்டார். ‘நீ என் அன்பு மகன், நான் உன் மேல் பிரியமாயிருக்கிறேன்’ என்று கடவுள் சொன்னார். பிறகு தன் பரிசுத்த ஆவியை புறா வடிவில் இயேசு மீது இறங்கச் செய்தார். ஆகவே முழுக்காட்டப்படுவதன் மூலம், தன் வாழ்நாள் முழுவதும், அதாவது என்றென்றும் யெகோவாவை சேவிக்க விரும்புவதை இயேசு காட்டினார்.—மாற்கு 1:9-11.

நீ இன்னமும் ஒரு சிறு பிள்ளை. ஆனால் வளர்ந்த பிறகு நீ என்ன செய்யப் போகிறாய்?— நீயும் இயேசுவைப் போல் முழுக்காட்டுதல் பெறுவாயா?— நீ அவரை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் ‘அவருடைய கால் தடங்களை பின்பற்றும்படி அவர் உதாரணமாக இருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:21) நீ முழுக்காட்டுதல் பெறும்போது, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ உண்மையிலேயே விரும்புவதைக் காட்டுவாய். ஆனால் வெறுமனே முழுக்காட்டுதல் பெற்றால் மட்டும் போதாது.

இயேசு கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் ‘இந்த உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது’ என்று இயேசு சொன்னார். இந்த உலக காரியங்களில் நாம் ஈடுபட்டால் அவருக்குக் கீழ்ப்படிவோமா? இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் உலக காரியங்களிலிருந்து விலகியிருந்தார்கள். (யோவான் 17:14) அதற்கு பதிலாக என்ன செய்தார்கள்?— கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசினார்கள். அதுதான் அவர்களது வாழ்க்கையில் மிக முக்கியமான வேலையாக இருந்தது. அதை நாமும் செய்ய முடியுமா?— செய்ய முடியும். கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டும் என்று இருதயப்பூர்வமாக ஜெபித்தோம் என்றால் அந்த வேலையை கண்டிப்பாக செய்வோம்.

கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டும் என்று நாம் விரும்புவதை எப்படி காட்டலாம் என சில வசனங்கள் சொல்கின்றன. அதை வாசித்துத் தெரிந்துகொள்ளலாமா? மத்தேயு 6:24-33; 24:14; 1 யோவான் 2:15-17; 5:3.