எல்லாவற்றையும் உண்டாக்கினவர்
அதிகாரம் 3
எல்லாவற்றையும் உண்டாக்கினவர்
எனக்கு அதிசயமான ஒன்று தெரியும். உனக்கு அதைக் கேட்கப் பிரியமா? — உன் கையைப் பார். உன் விரல்களை மடக்கு. இப்பொழுது ஏதாவதொன்றைப் பொறுக்கி எடு. உன் கை பல காரியங்களைச் செய்யக்கூடும், அவற்றை அது நன்றாய்ச் செய்யவும்கூடும். இந்தக் கையை உண்டாக்கினவர் யார் என்று உனக்குத் தெரியுமா? — கடவுள் அதை உண்டாக்கினார்.
என் முகத்தைப் பார். நீ என்ன பார்க்கிறாய்? — நீ என் வாயையும், என் மூக்கையும், என் இரண்டு கண்களையும் பார்க்கிறாய். நீ அவற்றை எப்படிப் பார்க்க முடிகிறது? — உன் சொந்தக் கண்களாலேயே. இந்தக் கண்களை உண்டாக்கினவர் யார்? — கடவுளே. இது அதிசயமாக இருக்கிறது அல்லவா? —
உன் கண்களால் நீ பல காரியங்களைக் காணக்கூடும். நீ பூக்களைப் பார்க்கக்கூடும். நீ பறவைகளைப் பார்க்கக்கூடும். பசும் புல்லையும் நீல வானத்தையும் நீ பார்க்கலாம்.
ஆனால் இவற்றை யார் உண்டாக்கினார்? — யாராவது ஒரு மனிதன் இவற்றை உண்டாக்கினானா? — இல்லை. மனிதர் ஒரு வீட்டை உண்டாக்கக்கூடும். ஆனால் ஒரு மனிதனும் வளருகிற புல்லை உண்டாக்க முடியாது. மனிதர் ஒரு பறவையையோ, ஒரு பூவையோ, உயிருள்ள வேறு எந்தப் பொருளையோ உண்டாக்க முடியாது. இது உனக்குத் தெரியுமா? —
கடவுளே இவை எல்லாவற்றையும் உண்டாக்கினவர். கடவுள் வானங்களையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஆட்களையுங்கூட உண்டாக்கினார். அவர் முதல் மனிதனையும் முதல் மனுஷியையும் சிருஷ்டித்தார். பெரிய போதகராகிய இயேசு இதைக் கற்பித்தார்.—மத்தேயு 19:4-6.
கடவுள் மனிதனையும் மனுஷியையும் உண்டாக்கினார் என்பது இயேசுவுக்கு எப்படித் தெரியும்? கடவுள் அவர்களை உண்டாக்கினதை இயேசு பார்த்தாரா? — ஆம், அவர் பார்த்தார். கடவுள்
மனிதனையும் மனுஷியையும் உண்டாக்குகையில் இயேசு கடவுளுடன் இருந்தார். இயேசு, கடவுள் உண்டாக்கின முதல் ஆளாக இருந்தார். அவர் ஒரு தூதனாக இருந்தார், தம்முடைய தகப்பனுடன் அவர் பரலோகத்தில் வாழ்ந்துகொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தார்.“மனுஷனை உண்டாக்குவோமாக,” என்று கடவுள் சொன்னதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது. கடவுள் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று உனக்குத் தெரியுமா? — பின்னால் பூமிக்கு வந்த இந்தப் பெரிய போதகரான தம்முடைய குமாரனிடமே அவர் பேசிக்கொண்டிருந்தார்!—ஆதியாகமம் 1:26.
கடவுள் செய்திருக்கிற ஒவ்வொன்றும் அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. கடவுள் சூரியனை உண்டாக்கினார். சூரியன் நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது, நம்மை அனலுடன் வைக்கிறது. நமக்குச் சூரியன் இல்லாவிட்டால் எல்லாம் குளிர்ந்திருக்கும், பூமியில் உயிரே இராது. கடவுள் சூரியனை உண்டாக்கினதற்காக நீ சந்தோஷமுள்ளவனாய் இருக்கிறாய் அல்லவா? —
கடவுள் மழை பெய்யும்படியாகவுங்கூட செய்கிறார். மழை பெய்கையில் நீ வெளியே விளையாடப் போக முடியாததால் ஒருவேளை சில சமயங்களில் மழை உனக்குப் பிரியம் இராது. ஆனால் பூக்கள் வளரும்படி மழை உதவி செய்கிறது.
ஆகவே நாம் அழகிய பூக்களைப் பார்க்கையில், அவற்றிற்காக யாருக்கு நாம் நன்றி செலுத்துவோம்? — கடவுளுக்கே. மேலும், நல்ல ருசியுள்ள பழங்களையும் காய்கறிகளையும் நாம் சாப்பிடுகையில் யாருக்கு நன்றி செலுத்தவேண்டும்? — நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும், ஏனென்றால் அவருடைய சூரியனும் மழையுமே பொருட்களை வளரச் செய்கின்றன. இந்த அதிசயமான காரியங்களையெல்லாம் நமக்குச் செய்வதற்குக் கடவுள் அவ்வளவு நல்லவராக இருக்கிறார்.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? — கடவுள் பரலோகத்தில் வாசம் செய்கிறார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது.
நீ கடவுளைப் பார்க்க முடியுமா? — முடியாது. ‘ஒரு மனிதனும் கடவுளைக் காண முடியாது,’ என்று பைபிள் சொல்லுகிறது. ஆகவே கடவுளைப் பற்றிய ஒரு படத்தையோ விக்கிரகத்தையோ உண்டுபண்ண ஒருவரும் முயற்சி செய்யக்கூடாது. தம்மைப் பற்றிய ஒரு விக்கிரகத்தை உண்டுபண்ண முயலவேண்டாம் என்றுங்கூட கடவுள் நமக்குச் சொல்லுகிறார். ஆகவே இவற்றைப் போன்ற காரியங்களை நம்முடைய வீட்டில் நாம் வைத்திருக்கக் கூடாது, நாம் வைத்திருக்கலாமா? — —யாத்திராகமம் 33:20; 20:4, 5.
ஆனால் நீ கடவுளைப் பார்க்க முடியாதென்றால், உண்மையில் ஒரு கடவுள் இருக்கிறார் என்று உனக்கு எப்படித் தெரியும்? — இதைப் பற்றி யோசித்துப்பார். நீ காற்றைப் பார்க்க முடியுமா? — முடியாது. காற்றை ஒருவரும் பார்க்க முடியாது. ஆனால் காற்று செய்யும் காரியங்களை நீ பார்க்க முடியும். ஒரு மரத்தின் கிளைகளினூடே காற்று அடிக்கையில், இலைகள் அசைவதை நீ காண முடியும். ஆகவே காற்று இருக்கிறதென்று நீ நம்புகிறாய்.
கடவுள் செய்திருக்கிற காரியங்களையுங்கூட நீ பார்க்க முடியும். உயிருள்ள ஒரு பூவை அல்லது ஒரு பறவையை நீ பார்க்கையில் கடவுள் செய்திருக்கிற ஒன்றை நீ காண்கிறாய். ஆகவே உண்மையில் ஒரு கடவுள் இருக்கிறார் என்று நீ நம்புகிறாய்.
“சூரியனையும் பூமியையும் உண்டாக்கினவர் யார்?” என்று ஆதியாகமம் 1:1.
யாராவது ஒருவர் உன்னைக் கேட்கக்கூடும்? நீ என்ன சொல்வாய்? — கடவுள் அவற்றை உண்டாக்கினார் என்று நீ சொல்லலாம். ‘கடவுள் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தார்,’ என்று பைபிள் சொல்லுகிறது.—“கடவுள் மனிதனையும் மிருகங்களையுங்கூட உண்டாக்கினாரா?” என்று எவராவது உன்னைக் கேட்பார்கள் என்றால் நீ என்ன சொல்வாய்? — “ஆம், கடவுள் மனிதனையும் மிருகங்களையும் உண்டாக்கினார். கடவுள் பறவைகளையுங்கூட உண்டாக்கினார்,” என்று அவருக்குச் சொல். ‘கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்,’ என்று பைபிள் சொல்லுகிறது.—எபேசியர் 3:11.
யாராவது ஒருவர் தனக்குக் கடவுளில் நம்பிக்கை இல்லை என்று உன்னிடம் சொல்லலாம். அப்பொழுது நீ என்ன சொல்வாய்? — நீ ஒரு வீட்டைக் குறிப்பிட்டுக் காட்டலாம் அல்லவா? பின்பு, “அந்த வீட்டை உண்டாக்கினது யார்?” என்று அவரைக் கேள். யாரோ ஒரு மனிதன் அதை உண்டாக்கினான். அந்த வீடு தானே தன்னை உண்டாக்கிக்கொள்ளவில்லை அல்லவா? —
பின்பு அவரைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஒரு பூவை அவருக்குக் காண்பி. “இதை உண்டாக்கினவர் யார்?” என்று அவரைக் கேள். மனிதன் ஒருவனும் அதை உண்டாக்கவில்லை. அந்த வீடு தானே தன்னை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவ்விதமே இந்தப் பூவும் தானே தன்னை உண்டாக்கிக் கொள்ளவில்லை. யாரோ ஒருவர் அதை உண்டாக்கினார். கடவுள் அதை உண்டாக்கினார்.
சற்று நின்று ஒரு பறவையின் பாட்டைக் கவனிக்கும்படி அவரைக் கேள். பின்பு, “இந்தப் பறவைகளை உண்டாக்கி அவற்றிற்குப் பாட கற்பித்தவர் யார்?” என்று அவரைக் கேள். கடவுள் செய்தார். வானங்களையும் பூமியையும் உயிருள்ள யாவற்றையும் உண்டாக்கினவர் கடவுளே! அவரே உயிரைக் கொடுக்கிறவர்.
உயிரோடிருப்பது ஆ, எவ்வளவு நன்றாயிருக்கிறது! பறவைகளின் அழகிய பாட்டுகளை நாம் கேட்கலாம். கடவுள் உண்டாக்கியிருக்கிற பூக்களையும் மற்ற காரியங்களையும் நாம் பார்க்கலாம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற உணவுகளை நாம் சாப்பிடலாம்.
இந்த எல்லாவற்றிற்காகவும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு உயிரைக் கொடுத்ததற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். நாம் உண்மையில் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றால் ஒன்று செய்வோம். அது என்ன? — நாம் கடவுளுக்குச் செவிகொடுத்து, பைபிளில் அவர் நமக்குச் சொல்லுகிற முறைப்படி நாம் அவரை வணங்குவோம். இவ்விதம் எல்லாவற்றையும் உண்டாக்கினவரை நாம் நேசிக்கிறோம் என்று நாம் காட்டலாம்.
(கடவுள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் நாம் அவருக்கு நன்றியறிதலைக் காட்ட வேண்டும். எப்படி? சங்கீதம் 139:14 [138:14, டூயே வெர்ஷன்]; வெளிப்படுத்துதல் 4:11; யோவான் 4:23, 24; 1 யோவான் 5:21 ஆகியவற்றில் எழுதியிருப்பதை வாசியுங்கள்.)