Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 23

நற்செய்தி பரவுகிறது

நற்செய்தி பரவுகிறது

பவுல் தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சென்று பிரசங்கிக்கிறார்

பவுல் மதம் மாறிய பிறகு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தீவிரமாய்ப் பிரசங்கித்தார். ஆனால், எதிர்த்தவருக்கே இப்போது எதிர்ப்பு கிளம்பியது! என்றாலும், அப்போஸ்தலன் பவுல் சற்றும் சளைக்காமல் பலமுறை வெகு தூரம் பயணம் செய்து, கடவுளுடைய ஆதிநோக்கத்தை நிறைவேற்றப்போகும் அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கித்தார்.

முதல் பயணத்தில் லீஸ்திரா என்ற இடத்திற்கு பவுல் சென்றபோது பிறவியிலேயே கால் ஊனமாயிருந்த ஒருவனைக் குணப்படுத்தினார். அதைக் கண்ட ஜனங்கள், பவுலையும் அவரோடு சென்ற பர்னபாவையும் “தெய்வங்கள்” என்று சொல்லி கூச்சல்போட ஆரம்பித்தார்கள். தங்களுக்குப் பூஜை செய்ய வந்தவர்களைத் தடுப்பதற்குள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் போதும்போதும் என்றாகிவிட்டது. ஆனால், பிற்பாடு அதே ஜனங்கள் பவுலின் எதிரிகளுடைய தூண்டுதலால் அவர்மீது கல்லெறிந்தார்கள்; அவர் செத்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து போய்விட்டார்கள். ஆனால், பவுல் பிழைத்துக்கொண்டார்; பின்னர், சீடர்களுக்கு உற்சாகமளிப்பதற்காக அதே பட்டணத்திற்குத் திரும்பிச் சென்றார்.

யூதரல்லாத கிறிஸ்தவர்கள் மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்லி யூத கிறிஸ்தவர்கள் சிலர் வாதாடினார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் பவுல் சென்றார். அவர்கள் வேதவசனங்களைத் தீர ஆராய்ந்து கடவுளுடைய சக்தியின் அருளால் ஒரு முடிவிற்கு வந்தார்கள்; விக்கிரக வழிபாட்டிலிருந்தும், இரத்தத்திலிருந்தும், இரத்தம் வெளியேற்றப்படாத மாம்சத்தை சாப்பிடுவதிலிருந்தும், பாலியல் முறைகேட்டிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சபைகளுக்கு எழுதினார்கள். இந்தக் கட்டளைகள் ‘முக்கியமானவை’ என்றாலும், இவற்றைக் கடைப்பிடிக்க மோசேயின் திருச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமிருக்கவில்லை.அப்போஸ்தலர் 15:28, 29.

பவுல் தனது இரண்டாம் பயணத்தின்போது பெரோயா (இன்று, கிரீஸ் நாட்டில் உள்ளது) என்ற இடத்திற்குச் சென்று பிரசங்கித்தார். அங்கிருந்த யூதர்கள் அவர் சொன்னதை ஆர்வமாய்க் கேட்டார்கள்; அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் உண்மையிலேயே சரிதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேதவசனங்களைத் தினமும் ஆராய்ந்து பார்த்தார்கள். அங்கும் பவுலுக்கு எதிர்ப்பு கிளம்பியது; அதனால் ஏதன்சுக்குப் போய் பிரசங்கித்தார். அங்கிருந்த மேதைகள்முன் வலிமைமிக்க விதத்தில் சொற்பொழிவு ஆற்றினார். பவுலின் சாதுரியத்திற்கும், கூர்மதிக்கும், நாவன்மைக்கும் அந்தச் சொற்பொழிவு சிறந்த எடுத்துக்காட்டு.

மூன்றாம் பயணத்தை முடித்த பிறகு பவுல் எருசலேமுக்குச் சென்றார். அங்கிருந்த கோயிலுக்கு அவர் போனபோது யூதர்கள் சிலர் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தோடு கலவரத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், ரோம படைவீரர்கள் குறுக்கிட்டு, பவுலிடம் விசாரணை செய்தார்கள். பவுல் ஒரு ரோம குடிமகனாக இருந்ததால், பின்னர் ரோம ஆளுநர் பெலிக்ஸ் முன்னிலையில் தன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். பவுல்மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை யூதர்களால் நிரூபிக்க முடியவில்லை. பெஸ்து என்ற மற்றொரு ரோம ஆளுநர் தன்னை யூதர்களிடம் ஒப்படைத்துவிடாதிருக்க, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று பவுல் கூறினார். அதற்கு பெஸ்து, “ரோம அரசனிடமே நீ போகலாம்” என்றார்.—அப்போஸ்தலர் 25:11, 12.

வழக்கு விசாரணைக்காக பவுல் ஒரு கப்பலில் இத்தாலிக்குக் கொண்டு செல்லப்பட்டார். கப்பல் சேதமடைந்ததால் குளிர்காலம் முடியும்வரை மால்டா தீவில் அவர் தங்க வேண்டியிருந்தது. கடைசியாக ரோமுக்கு வந்துசேர்ந்த பின்பு இரண்டு வருடங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், பக்திவைராக்கியமிக்க இந்த அப்போஸ்தலன் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்தார்.

—ஆதாரம்: அப்போஸ்தலர் 11:22–28:31.