Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 93

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகிறார்

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகிறார்

கலிலேயாவில், இயேசு தன்னுடைய சீஷர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நீங்கள் போய், எல்லா தேசத்து மக்களையும் சீஷர்களாக ஆக்குங்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்த எல்லா விஷயங்களையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து, ஞானஸ்நானம் கொடுங்கள்’ என்ற மிக முக்கியமான கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். ‘நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்’ என்று சத்தியமும் செய்தார்.

அவர் உயிரோடு எழுந்த பிறகு, 40 நாட்களுக்கு கலிலேயாவிலும் எருசலேமிலும் இருந்த நூற்றுக்கணக்கான சீஷர்களுக்கு முன் தோன்றினார். அவர்களுக்கு முக்கியமான விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார், நிறைய அற்புதங்களையும் செய்தார். பிறகு, இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களைக் கடைசி தடவையாக ஒலிவ மலையில் சந்தித்தார். அவர்களிடம், ‘நீங்கள் எருசலேமை விட்டுப் போகாதீர்கள். என் அப்பா சத்தியம் செய்து கொடுத்தது உங்களுக்குக் கிடைக்கும்வரை காத்திருங்கள்’ என்று சொன்னார்.

அவர் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை. அதனால், ‘நீங்கள் இப்போது இஸ்ரவேலின் ராஜாவாக ஆகப்போகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு, ‘யெகோவா என்னை ராஜாவாக்கும் நேரம் இன்னும் வரவில்லை. சீக்கிரத்தில், கடவுளுடைய சக்தியால் உங்களுக்குப் பலம் கிடைக்கும். அப்போது, நீங்கள் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள். நீங்கள் போய் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், ரொம்ப தூரத்தில் இருக்கிற இடங்களிலும் பிரசங்க வேலையைச் செய்யுங்கள்’ என்று சொன்னார்.

பிறகு, இயேசு அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை மறைத்துக்கொண்டது. சீஷர்கள் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் மறைந்துவிட்டார்.

அவருடைய சீஷர்கள் ஒலிவ மலையிலிருந்து கிளம்பி, எருசலேமுக்குப் போனார்கள். அவர்கள் ஒரு மாடி அறையில் தவறாமல் கூடிவந்து ஜெபம் செய்தார்கள். இயேசு கூடுதலான அறிவுரைகளைக் கொடுக்கும்வரை காத்திருந்தார்கள்.

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14