Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 3

ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியவில்லை

ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியவில்லை

ஒருநாள், ஏவாள் மட்டும் தனியாக இருந்தாள். அப்போது, ஒரு பாம்பு அவளிடம் பேசியது. ‘தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னாராமே, உண்மையா?’ என்று அது கேட்டது. அதற்கு ஏவாள், ‘நாங்கள் எல்லா மரங்களின் பழங்களையும் சாப்பிடலாம். ஒரேவொரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது. அதைச் சாப்பிட்டால், செத்துவிடுவோம்’ என்றாள். அப்போது பாம்பு, ‘இல்லை! நீங்கள் சாக மாட்டீர்கள். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுளைப் போல ஆகிவிடுவீர்கள்’ என்று சொன்னது. அது உண்மையா? இல்லை! அது சுத்தப் பொய். ஆனால், ஏவாள் அதை நம்பினாள். அந்தப் பழத்தைப் பார்க்க பார்க்க, அதைச் சாப்பிட வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அதைப் பறித்து சாப்பிட்டாள், ஆதாமுக்கும் கொடுத்தாள். கடவுள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் செத்துவிடுவோம் என்று தெரிந்தும், ஆதாம் அந்தப் பழத்தைச் சாப்பிட்டான்.

சாயங்காலத்தில், ஆதாம்-ஏவாளிடம் கடவுள் பேசினார். தன்னுடைய பேச்சை ஏன் கேட்கவில்லை என்று கேட்டார். ஏவாள் பாம்புமேல் பழி போட்டாள். ஆதாமோ ஏவாள்மேல் பழி போட்டான். அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாததால், ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களை யெகோவா துரத்திவிட்டார். அவர்கள் அந்தத் தோட்டத்துக்குத் திரும்பி வராமல் இருப்பதற்காக, அதன் வாசலில் தேவதூதர்களை நிறுத்தினார், சுற்றிக்கொண்டே இருக்கிற நெருப்பு வாளையும் வைத்தார்.

ஏவாளிடம் பொய் சொல்லி ஏமாற்றியவனையும் தண்டிக்கப் போவதாக யெகோவா சொன்னார். அவளிடம் பேசியது அந்தப் பாம்பு கிடையாது. ஏனென்றால், பேசுகிற சக்தியை பாம்புகளுக்கு யெகோவா கொடுக்கவில்லை. ஏவாளை ஏமாற்றுவதற்காக, ஒரு கெட்ட தேவதூதன்தான் அந்தப் பாம்பைப் பேச வைத்தான். அவனை பிசாசாகிய சாத்தான் என்று பைபிள் சொல்கிறது. சீக்கிரத்தில், சாத்தானை யெகோவா அழிப்பார். அதற்குப் பிறகு, அவனால் யாரையும் ஏமாற்றி, கெட்டது செய்ய வைக்க முடியாது.

“பிசாசு . . . ஆரம்பத்திலிருந்தே ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை.”—யோவான் 8:44