Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 49

கெட்ட ராணிக்குத் தண்டனை

கெட்ட ராணிக்குத் தண்டனை

ஆகாப் ராஜாவின் அரண்மனை யெஸ்ரயேலில் இருந்தது. அந்த அரண்மனையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால், நாபோத் என்பவரின் திராட்சைத் தோட்டம் தெரியும். ஆகாப் ராஜா அந்தத் தோட்டத்தை வாங்க ஆசைப்பட்டார். அதனால், அதைத் தன்னிடம் விற்றுவிடும்படி நாபோத்திடம் கேட்டார். ஆனால் நாபோத் முடியாது என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் பரம்பரைச் சொத்தை விற்கக் கூடாது என்பது யெகோவாவின் சட்டம். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததற்காக நாபோத்தை ஆகாப் மதித்தாரா? இல்லை. ஆகாபுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தன் படுக்கை அறைக்குப் போய் படுத்துக்கொண்டார், வெளியே வரவே இல்லை. சாப்பாடும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆகாபின் மனைவி யேசபேல் ஒரு பொல்லாத ராணி. அவள் ஆகாபிடம், ‘நீங்கள் இஸ்ரவேலின் ராஜா. ஆசைப்பட்ட எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் அந்த நிலத்தை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்’ என்று சொன்னாள். பிறகு, நகரத்திலிருந்த பெரியோர்களுக்கு அவள் கடிதங்களை எழுதினாள். கடவுளைப் பழித்துப் பேசியதாக நாபோத்மேல் பழிபோட்டு, அவரைக் கல்லால் அடித்துக் கொல்லும்படி அதில் எழுதியிருந்தாள். யேசபேல் சொன்னபடியே அந்தப் பெரியோர்கள் செய்தார்கள். அதற்குப் பிறகு அவள் ஆகாபிடம், ‘நாபோத் செத்துவிட்டான். திராட்சைத் தோட்டம் இனி உங்களுக்குத்தான்’ என்று சொன்னாள்.

அப்பாவியாக இருந்த நாபோத்தை மட்டுமே யேசபேல் கொலை செய்யவில்லை. யெகோவாமேல் அன்பு காட்டிய இன்னும் நிறைய பேரைக் கொலை செய்திருக்கிறாள். அவள் பொய்க் கடவுள்களை வணங்கினாள், நிறைய கெட்ட காரியங்களைச் செய்தாள். அதையெல்லாம் யெகோவா பார்த்தார். அவளை அவர் என்ன செய்வார்?

ஆகாப் இறந்த பிறகு, அவருடைய மகன் யோராம் ராஜாவாக ஆனார். யேசபேலையும் அவளுடைய குடும்பத்தையும் தண்டிப்பதற்கு யெகூ என்பவரை யெகோவா அனுப்பினார்.

யேசபேல் இருந்த யெஸ்ரயேல் நகரத்துக்கு யெகூ தன்னுடைய ரதத்தைக் ஓட்டிக்கொண்டு வந்தார். யோராமும் யெகூவைப் பார்க்க தன்னுடைய ரதத்தில் வந்தார். அவர் யெகூவிடம், ‘உனக்கும் எனக்கும் சமாதானம்தானே?’ என்று கேட்டார். அதற்கு யெகூ, ‘உன்னுடைய அம்மா யேசபேல் இவ்வளவு கெட்ட காரியங்களைச் செய்யும்போது எப்படி சமாதானம் இருக்கும்?’ என்று கேட்டார். யோராம் தன்னுடைய ரதத்தைத் திருப்பிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தார். அப்போது யெகூ யோராமின்மேல் அம்பை எறிந்தார். யோராம் செத்துப்போனார்.

பிறகு, யேசபேலின் அரண்மனைக்கு யெகூ போனார். அவர் வருவது தெரிந்ததும் யேசபேல் தலையை வாரிக்கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொண்டாள். பிறகு, மாடியில் ஜன்னல் பக்கத்தில் காத்துக்கொண்டிருந்தாள். யெகூ வந்தவுடன் அவரிடம் கோபமாகப் பேசினாள். அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்களிடம், “அவளைக் கீழே தள்ளுங்கள்!” என்று யெகூ கத்தினார். அவர்கள் ஜன்னல் வழியாக அவளைத் தள்ளிவிட்டார்கள். அவள் கீழே விழுந்து செத்துப்போனாள்.

பிறகு, ஆகாபின் 70 மகன்களை யெகூ கொன்றுபோட்டார். பாகால் வணக்கத்தையும் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டினார். இந்தப் பாடத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டாய்? யெகோவாவுக்கு எல்லாமே தெரியும். அவர் சரியான நேரத்தில் கெட்டவர்களை அழித்துவிடுவார்.

“ஆரம்பத்தில் பேராசையோடு சம்பாதித்த சொத்து, கடைசியில் அவனுக்கு ஆசீர்வாதமாக இருக்காது.” —நீதிமொழிகள் 20:21