Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 53

யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்

யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்

யேசபேலுக்கு அத்தாலியாள் என்ற மகள் இருந்தாள். அவளும் தன் அம்மா மாதிரியே ரொம்ப மோசமானவள். அவளை யூதாவின் ராஜா கல்யாணம் செய்துகொண்டார். அத்தாலியாளின் கணவர் இறந்த பிறகு, அவளுடைய மகன் யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரும் இறந்த பிறகு, அத்தாலியாள் ஆட்சி செய்ய ஆரம்பித்தாள். தன்னுடைய இடத்தை யாரும் பிடித்துவிடக் கூடாது என்று நினைத்தாள். அதனால், ராஜ பரம்பரையையே அழித்துப்போட முயற்சி செய்தாள். தன்னுடைய பேரன்களைக்கூட கொன்றுபோட்டாள். எல்லாரும் அவளைப் பார்த்து பயந்தார்கள்.

அத்தாலியாள் செய்தது பெரிய தப்பு என்பது தலைமைக் குரு யோய்தாவுக்கும் அவருடைய மனைவி யோசேபாளுக்கும் தெரியும். அதனால், தங்களுடைய உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல், அத்தாலியாளின் பேரன்களில் ஒருவனைக் காப்பாற்றினார்கள். அவன் பெயர் யோவாஸ். குழந்தையாக இருந்த அவனை ஆலயத்தில் வைத்து வளர்த்தார்கள்.

யோவாசுக்கு ஏழு வயதானபோது, யோய்தா எல்லா தலைவர்களையும் லேவியர்களையும் ஒன்றுகூட்டி, ‘ஆலயத்தின் கதவுகளுக்குப் பக்கத்தில் காவலுக்கு நில்லுங்கள். யாரையும் உள்ளே விடாதீர்கள்’ என்று சொன்னார். பிறகு யோவாசை யூதாவின் ராஜாவாக்கி, அவன் தலையில் கிரீடத்தை வைத்தார். மக்கள் எல்லாரும், ‘ராஜா வாழ்க!’ என்று சத்தமாகச் சொன்னார்கள்.

மக்கள் போடுகிற சத்தம் அத்தாலியாள் ராணியின் காதில் விழுந்தது. அவள் வேகவேகமாக ஆலயத்துக்கு வந்தாள். புது ராஜாவைப் பார்த்ததும், “சதி! சதி!” என்று கத்தினாள். தலைவர்கள் அந்தப் பொல்லாத ராணியை இழுத்துக்கொண்டு போய் கொன்றுபோட்டார்கள். ஆனால், அவளால் கெட்டுப்போயிருந்த தேசத்தை எப்படிச் சரிசெய்வது?

அந்தத் தேசத்து மக்கள் யெகோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய யோய்தா உதவி செய்தார். அதன்படி, யெகோவாவை மட்டுமே வணங்குவோம் என்று மக்கள் சத்தியம் செய்தார்கள். பாகால் கோயிலை உடைத்து, சிலைகளை நொறுக்கிப் போடும்படி மக்களிடம் யோய்தா சொன்னார். மக்கள் திரும்பவும் யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் வணங்குவதற்காக குருமார்களையும் லேவியர்களையும் நியமித்தார். சுத்தமாக இல்லாதவர்கள் ஆலயத்துக்குள் நுழையாமல் இருப்பதற்காக காவலாளிகளை வைத்தார். பிறகு, யோய்தாவும் தலைவர்களும் யோவாசை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போய் சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள். யூதா மக்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். இப்போது பொல்லாத அத்தாலியாளின் தொல்லையும் இல்லை, பாகால் வணக்கமும் இல்லை. அதனால், மக்கள் யெகோவாவை நிம்மதியாக வணங்க முடிந்தது. யோய்தா தைரியமாக நடந்துகொண்டதால் எத்தனை பேருக்கு நன்மை கிடைத்தது பார்த்தாயா?

“உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள். உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில் அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.”—மத்தேயு 10:28