Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2

கிரேக்க வேதாகமத்தில் கடவுளின் பெயர்

கிரேக்க வேதாகமத்தில் கடவுளின் பெயர்

முதன்முதல் எழுதப்பட்ட “பழைய ஏற்பாடு” (எபிரெய வேதாகமம்) சுருள்களில், கடவுளுடைய பெயர் (יהוה) கிட்டத்தட்ட 7,000 தடவை வருகிறது, இதை பைபிள் அறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், முதன்முதல் எழுதப்பட்ட “புதிய ஏற்பாடு” (கிரேக்க வேதாகமம்) சுருள்களில் அந்தப் பெயர் இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். இதனால், பெரும்பாலான நவீன பைபிள்கள் யெகோவா என்ற பெயரை “புதிய ஏற்பாட்டில்” பயன்படுத்துவதில்லை. “புதிய ஏற்பாட்டை” எழுதியவர்கள் “பழைய ஏற்பாட்டிலுள்ள” பல வசனங்களை மேற்கோள் காட்டினார்கள், அதாவது அப்படியே எடுத்து எழுதினார்கள். ஆனால் அந்த வசனங்களை மொழிபெயர்த்தவர்கள் கடவுளுடைய பெயர் வருகிற இடத்தில் “கர்த்தர்” என்று போட்டுவிட்டார்கள்.

ஆனால் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பில் மொத்தம் 237 தடவை யெகோவா என்ற பெயர் இருக்கிறது. இதை மொழிபெயர்த்தவர்கள் பின்வரும் விஷயங்களை யோசித்தே இந்த முடிவுக்கு வந்தார்கள்: (1) இன்றைக்கு நம்மிடம் “புதிய ஏற்பாட்டின்” அசல் சுருள்கள் இல்லை. ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள்தான் இருக்கின்றன (அதாவது, அசல் சுருள்களைப் பார்த்து எழுதப்பட்ட நகல்கள்தான் இருக்கின்றன). பெரும்பாலான நகல்கள் அசல் சுருள்கள் எழுதப்பட்டு குறைந்தது இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்டவை. (2) இதற்கிடையே, கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர்கள் கடவுளுடைய பெயர் (יהוה) இருந்த இடங்களில் கைரியாஸ் (கர்த்தர்) என்ற கிரேக்க வார்த்தையைப் போட்டுவிட்டார்கள்; அல்லது, கைரியாஸ் என்று ஏற்கெனவே போடப்பட்ட நகல்களைப் பார்த்து நகலெடுத்தார்கள்.

“புதிய ஏற்பாட்டின்” அசல் சுருள்களில் கடவுளுடைய பெயர் கண்டிப்பாக இருந்தது என்ற முடிவுக்கு புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் வந்திருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இதோ:

  • இயேசு காலத்திலும் அப்போஸ்தலர் காலத்திலும் பயன்படுத்தப்பட்ட “பழைய ஏற்பாடு” பிரதிகளில் கடவுளுடைய பெயர் எல்லா இடத்திலும் இருந்தது. இது உண்மை இல்லை என்று முன்பு சிலர் வாதாடினார்கள். ஆனால், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த “பழைய ஏற்பாடு” நகல்கள் கும்ரான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இது உண்மைதான் என்பது நிரூபணமாகிவிட்டது.

  • இயேசு காலத்திலும் அப்போஸ்தலர் காலத்திலும் பயன்படுத்தப்பட்ட செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயர் இருந்தது. செப்டுவஜின்ட் (எபிரெயுவில் இருந்து கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு) கையெழுத்து பிரதிகளில் கடவுளுடைய பெயர் இல்லை எனப் பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில், இயேசுவின் காலத்தைச் சேர்ந்த செப்டுவஜின்ட் நகல்களின் மிகப் பழமையான சில துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கடவுளுடைய பெயர் எபிரெயு மொழியில் எழுதப்பட்டிருந்த விஷயம் ஆராய்ச்சியில் தெரிய வந்தது. இதிலிருந்து, இயேசுவின் நாளிலிருந்த செப்டுவஜின்ட் நகல்களில் கடவுளுடைய பெயர் இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குள், முக்கியமான செப்டுவஜின்ட் நகல்களில் (கோடக்ஸ் வாட்டிகானஸ், கோடக்ஸ் சைனைட்டிகஸ் போன்ற நகல்களில்) கடவுளுடைய பெயர் ஒரு இடத்தில்கூட இல்லாமல் போய்விட்டது. (ஆனால் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் அந்தப் பெயர் இருந்தது.) அதனால், அந்தக் காலம் முதற்கொண்டு இருந்து வருகிற “புதிய ஏற்பாடு” நகல்களில் கடவுளுடைய பெயர் இல்லாதது ஆச்சரியமில்லை.

    “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உங்களுடைய பெயரை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். எல்லோருக்கும் ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்துவேன்’ என்றும் சொன்னார்

  • கடவுளுடைய பெயரை இயேசு அடிக்கடி பயன்படுத்தினார், அதை மற்றவர்களுக்குச் சொன்னார் என்பதை “புதிய ஏற்பாட்டில்” காணலாம். “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உங்களுடைய பெயரை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கடவுளிடம் ஜெபம் செய்யும்போது இயேசு சொன்னார். அதோடு, எல்லோருக்கும் ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்துவேன்’ என்றும் சொன்னார்.—யோவான் 17:6, 11, 12, 26.

  • “பழைய ஏற்பாட்டைப்” போல “புதிய ஏற்பாடும்” கடவுளுடைய சக்தியின் உதவியால் எழுதப்பட்டது. இதுவும் பைபிளின் ஒரு பகுதிதான்; அப்படியிருக்கும்போது, திடீரென இதில் மட்டும் எப்படி யெகோவாவின் பெயர் இல்லாமல் போகும்? சுமார் கி.பி. 50-ஆம் ஆண்டில் எருசலேமிலிருந்த மூப்பர்களிடம் சீடராகிய யாக்கோபு இப்படிச் சொன்னார்: “கடவுள் முதல் தடவையாகப் புறதேசத்தார்மீது தம் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தம்முடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் நன்றாக விவரித்துச் சொன்னார்.” (அப்போஸ்தலர் 15:14) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யாருமே கடவுளுடைய பெயரை அறியாமலோ பயன்படுத்தாமலோ இருந்திருந்தால் யாக்கோபு இப்படி சொல்லியிருப்பாரா?

  • “புதிய ஏற்பாட்டில்” கடவுளுடைய பெயரின் சுருக்கம் காணப்படுகிறது. வெளிப்படுத்துதல் 19:1, 3, 4, 6 ஆகிய வசனங்களின் அடிக்குறிப்பில் “ஹல்லேலோயா” என்ற வார்த்தை காணப்படுகிறது. இந்த வார்த்தையில் கடவுளுடைய பெயர் இருக்கிறது. இந்த எபிரெய வார்த்தையின் அர்த்தம் “யா என்பவரைப் புகழுங்கள்” என்பதாகும். “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம். “புதிய ஏற்பாட்டில்” வருகிற நிறைய பெயர்களின் அர்த்தத்தைப் பார்த்தால் அவற்றில் கடவுளுடைய பெயர் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். சொல்லப்போனால், இயேசு என்ற பெயருக்கே, “யெகோவா விடுவிக்கிறார்” என்பது அர்த்தம் எனச் சில புத்தகங்கள் சொல்கின்றன.

  • யூத கிறிஸ்தவர்கள் எழுதிய புத்தகங்களில் கடவுளுடைய பெயர் இருக்கிறது என்று பழைய யூத புத்தகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் எழுதிய புத்தகங்களை ஓய்வுநாளில் எரிக்கலாம் என்று டோஸெப்டா என்ற புத்தகம் சொல்கிறது (டோஸெப்டா என்ற புத்தகத்தில் வாய்மொழிச் சட்டங்கள் உள்ளன; இது சுமார் கி.பி. 300-ஆம் ஆண்டில் எழுதி முடிக்கப்பட்டது). அந்தப் புத்தகத்தில் கடவுளுடைய பெயர் இருந்தாலும் அதை எரித்துவிடலாம் என்றும் அது சொல்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த கலிலேயரான ரபீ யோசே இப்படிச் சொன்னதாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது: ஓய்வுநாள் தவிர மற்ற நாட்களில், “அந்தப் புத்தகங்களில் [அதாவது கிறிஸ்தவ புத்தகங்களில்] கடவுளுடைய பெயர் வருகிற இடங்களை வெட்டி எடுத்து பத்திரமாக வைத்துவிடுவார்கள், மற்ற பக்கங்களை எரித்துவிடுவார்கள்.”

  • “புதிய ஏற்பாட்டை” எழுதியவர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள வசனங்களை அதில் மேற்கோள் காட்டினார்கள்; அந்த வசனங்களில் கடவுளுடைய பெயர் இருந்திருக்கலாம் எனச் சில பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். “புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயர்” என்ற தலைப்பில் த ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள வசனங்களை அதில் எடுத்து எழுதினார்கள். அந்த வசனங்கள் சிலவற்றில் அல்லது எல்லாவற்றிலும் கடவுளுடைய பெயர் இருந்தது, அதாவது யாவே என்ற பெயர் இருந்தது, என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.” பேராசிரியர் ஜார்ஜ் ஹோவார்ட் இவ்வாறு எழுதினார்: ‘முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய செப்டுவஜின்ட் பைபிளில், கடவுளுடைய பெயர் இருந்தது. அதனால் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியபோது கடவுளுடைய பெயரை எடுத்திருக்க மாட்டார்கள்.’

  • பிரபல பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் “புதிய ஏற்பாட்டில்” கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மொழிபெயர்ப்பாளர்களில் சிலர், புதிய உலக மொழிபெயர்ப்பு தயாராவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களுடைய படைப்புகளும்: ஹெர்மன் ஹைன்ஃபெட்டர் எழுதிய எ லிட்ரல் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த நியு டெஸ்டமென்ட் . . . ஃப்ரம் த டெக்ஸ்ட் ஆஃப் த வாடிகன் மேனுஸ்கிரிப்ட் (1863); பென்ஜமின் வில்சன் எழுதிய த எம்ஃபடிக் டயக்லாட் (1864); ஜார்ஜ் பாக்கர் ஸ்டீவன்ஸ் எழுதிய எபிஸில்ஸ் ஆஃப் பால் இன் மார்டன் இங்லிஷ் (1898); டபிள்யூ. ஜி. ரதர்ஃபர்டு எழுதிய செயின்ட் பால்ஸ் எபிஸில்ஸ் டு த ரோமன்ஸ் (1900); லண்டன் பிஷப் ஜெ.டபிள்யு.சி. வேன்ட் எழுதிய தி நியு டெஸ்டமென்ட் லெட்டர்ஸ் (1946). மேலும், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைபிளை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த பெப்லோ பெஸ்ஸன் என்பவர், “ஜெஹோவா” என்ற பெயரை லூக்கா 2:15-லும் யூதா 14-லும் பயன்படுத்தியிருக்கிறார்; அதோடு கடவுளுடைய பெயர் இருக்க வேண்டிய இடங்களை கிட்டத்தட்ட 100 அடிக்குறிப்புகளில் சுட்டிக்காட்டுகிறார். இந்த மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 16-ஆம் நூற்றாண்டிலேயே, சில பைபிள்களில் கடவுளுடைய பெயர் இருந்தது. உதாரணமாக, அந்தச் சமயத்தில் “புதிய ஏற்பாட்டை” எபிரெயுவில் மொழிபெயர்த்தவர்கள், அதில் கடவுளுடைய பெயரை (יהוה) நிறைய இடங்களில் எழுதினார்கள். ஜெர்மன் மொழியில் மட்டும், குறைந்தபட்சம் 11 மொழிபெயர்ப்புகள் “ஜெஹோவா” என்ற பெயரை (“யாவே” என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பை) “புதிய ஏற்பாட்டில்” பயன்படுத்தியிருக்கின்றன; நான்கு மொழிபெயர்ப்பாளர்கள் “கர்த்தர்” என்ற வார்த்தைக்குப் பக்கத்தில் “ஜெஹோவா” என்று அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கிறார்கள். 70-க்கும் மேற்பட்ட ஜெர்மன் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை அடிக்குறிப்புகளில் அல்லது விளக்கவுரைகளில் பயன்படுத்தியிருக்கின்றன.

  • நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் வெளிவந்த “புதிய ஏற்பாடு” பைபிள்களில் கடவுளுடைய பெயர் இருக்கிறது. ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் பேசப்படும் நிறைய மொழிகளில் பைபிள் கிடைக்கிறது. அவற்றை மொழிபெயர்த்தவர்கள் கடவுளுடைய பெயரைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். (12, 13 பக்கங்களில் உள்ள பட்டியலைப் பாருங்கள்.) மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். இவற்றில் சில மொழிபெயர்ப்புகள் சமீபத்தில்தான் வெளிவந்தன. உதாரணமாக, ரோட்டுமன் பைபிளில் (1999) “48 வசனங்களில் 51 தடவை “ஜிஹோவா” என்ற பெயர் இருக்கிறது; இந்தோனேஷியாவைச் சேர்ந்த பாடாக் (டோபா) மொழிபெயர்ப்பில் (1989) “ஜஹோவா” என்ற பெயர் 110 தடவை வருகிறது.

மாற்கு 12:29, 30-ல் கடவுளுடைய பெயர், 1816-ல் ஹவாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்

எனவே, “புதிய ஏற்பாட்டில்” யெகோவா என்ற கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியதற்கு ஆணித்தரமான அத்தாட்சிகள் இருக்கின்றன. அதனால்தான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை மொழிபெயர்த்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடவுளுடைய பெயர்மீது அவர்களுக்கு மிகுந்த மதிப்புமரியாதை இருக்கிறது, பைபிள் எழுத்தாளர்கள் எழுதிய எதையும் நீக்கிவிடக் கூடாதென்ற பயபக்தியும் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 22:18, 19.