Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

“நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” இதுவே பவுல் எழுதிய அநேக கடிதங்களில் சபையாருக்குத் தெரிவித்த வாழ்த்துதலாகும். இந்த வாழ்த்துதலையே உங்கள் எல்லாருக்கும் நாங்கள் தெரிவிக்கிறோம்.​—எபே. 1:2.

கிறிஸ்து இயேசுவுடைய மீட்கும்பலியின் மூலம் அருளப்படுகிற யெகோவாவின் கிருபைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! மீட்கும்பலியால் கடவுளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். நம்முடைய சொந்த முயற்சிகளால் அந்நிலையை நாம் அடையவே முடியாது, என்னதான் ஊக்கமாக பைபிளைப் படித்தாலும், நற்செய்தியைப் பிரசங்கித்தாலும், வேறுபல நற்கிரியைகளைச் செய்தாலும் அந்நிலையை நம்மால் அடைய முடியாது. நமக்குக் கிடைக்கிற பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் நம்முடைய முயற்சிகளுக்கான ஊதியம் அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அருளப்படுகிற யெகோவாவுடைய கிருபையின் பரிசுகளே.​—ரோ. 11:6.

சக விசுவாசிகளுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு . . . நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.” முதல் நூற்றாண்டில் எருசலேமின் அழிவுக்கு முன்பு ஓர் “அநுக்கிரக காலம்” இருந்தது. அச்சமயத்தில், யெகோவாவை நேசித்த நல்மனமுள்ளோர் ஆன்மீக இரட்சிப்பை அடைந்தார்கள். கடைசியில், பொ.ச. 70-⁠ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அங்கிருந்து ஓடிப்போன விசுவாசமிக்க யாவரையும் சொல்லர்த்தமான இரட்சிப்புக்கும் அது வழிநடத்தியது.​—2 கொ. 6:1, 2.

இன்றும்கூட, நாம் ஓர் ‘அநுக்கிரக காலத்திலும்’ ‘இரட்சணிய நாளிலும்’ வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தம்முடைய ஊழியர்களாக யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆன்மீக இரட்சிப்பைப் பெற்றுவருகிற நபர்களுக்கு ‘யெகோவாவுடைய பெரிய நாளின்போது’ சொல்லர்த்தமாக இரட்சிக்கப்படுவதற்கான நம்பிக்கை இருக்கிறது.​—செப். 1:14.

யெகோவாவுடைய நாள் சீக்கிரத்தில் வரவிருப்பதால் நமக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. அந்த நாளைப் பற்றி ஜனங்களை எச்சரிக்க வேண்டும், அதோடு யெகோவாவின் கிருபையிலிருந்து நன்மை அடைய அவர்களில் நல்மனமுள்ளோருக்கு உதவவும் வேண்டும்; அப்போதுதான் அவர்களும் இரட்சிக்கப்படுவார்கள். இது எவ்வளவு முக்கியமான பொறுப்பு என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார். “சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” என்று அவர் எழுதினார். தன்னுடைய உணர்ச்சிகளை இவ்வாறு வெளிப்படுத்தவும் செய்தார்: “ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் . . . என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.”​—1 கொ. 9:16; ரோ. 1:14, 15.

ஜனங்களை எச்சரிக்கும் முக்கியமான வேலையை நாம் புறக்கணித்தால் யெகோவா நம்மிடம் கணக்குக் கேட்பார். எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்ன விஷயத்தை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்: “மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப் பழியையோ உன் கையிலே கேட்பேன்.”​—எசே. 3:17, 18.

இந்தக் கடைசி நாட்கள் கையாளுவதற்குக் கடினமானவையாக இருக்கின்றன. குடும்ப விவகாரங்களையும், உலகப்பிரகாரமான வேலையையும், சபை காரியங்களையும், ஊழிய வேலையையும் சமநிலையோடு கவனித்துக்கொள்வது அத்தனை எளிதல்ல. அதோடு, உங்களில் அநேகர் வியாதியையும், மனச்சோர்வையும், வயோதிகத்தையும், ஏன் துன்புறுத்தலையும்கூட சமாளிக்க வேண்டியுள்ளது. உங்களில் பெரும்பாலோர் ‘பாரங்களைச் சுமந்துவருகிறீர்கள்.’ “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு மனமிரங்கிச் சொன்ன விதமாகவே, நாங்களும் உங்களுக்காக மனமிரங்குகிறோம். (மத். 11:28) பெரிய, சிறிய சவால்களுக்கு மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ய பிரயாசப்படுகிற உங்கள் எல்லாரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

உங்களுடைய வைராக்கியமிக்க பிரசங்க வேலையினாலும், போதிக்கும் வேலையினாலும், யெகோவாவின் ஆசீர்வாதத்தினாலும், உலகம் முழுவதும் சராசரியாக 4,762 பேர் ஒவ்வொரு வாரமும் முழுக்காட்டப்படுகிறார்கள். கடந்த ஊழிய ஆண்டில், 1,375 புதிய சபைகள் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே 120-⁠க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிற பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புதிய புத்தகம், இந்த ‘இரட்சணிய நாளில்’ யெகோவாவின் கிருபையிலிருந்தும் சமாதானத்திலிருந்தும் நன்மை அடைய லட்சக்கணக்கானோருக்கு உதவும் என்று நம்புகிறோம், அதற்காக ஜெபிக்கிறோம்.

ஆளும் குழுவினர் உங்களை நேசிக்கிறார்கள், உங்களுக்காக ஜெபம் செய்கிறார்கள் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள். எங்களுக்காக நீங்கள் செய்கிற ஜெபங்களுக்காகவும் உங்களுக்கு நன்றிதெரிவிக்கிறோம்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு