Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

அன்புள்ள சக யெகோவாவின் சாட்சிகளுக்கு:

சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவின் பெயரைத் தாங்கியிருக்க நாம் எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்திருக்கிறோம்! அந்தப் பெயர் நிலையானது, அழியாதது, ஈடிணையற்றது. அந்தப் பெயரைத் தாங்கியிருக்கும் வாய்ப்பை யெகோவாவே நமக்கு அளித்திருக்கிறார்; முக்கியமாக 1931-ஆம் ஆண்டு முதற்கொண்டு அந்தத் தனிச்சிறப்புமிக்க பெயரால் நாம் அறியப்பட்டிருக்கிறோம். (ஏசா. 43:10) யெகோவாவின் சாட்சிகளென நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.

கடவுளுடைய பெயரை முற்றிலுமாய்த் துடைத்தழித்துப் போட பிசாசு அயராது முயற்சி செய்து வருகிறான். அவனுடைய கட்டுப்பாட்டிலுள்ள உலக நாடுகள் யெகோவாவின் பெயரை வெறுத்தொதுக்குகின்றன. பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன், கடவுளுடைய பெயரை வெறுத்து, அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அதை நீக்கிவிட்டிருக்கிறது. ஆனால், இயேசு தம்முடைய தகப்பனின் பெயருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டினார்; தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்த ஜெபத்தில் அதற்கு முதலிடம் கொடுத்தார். “ஆகவே, நீங்கள் இவ்விதமாக ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்’” என்று சொன்னார். (மத். 6:9) பின்னர், அவர் தம்முடைய தகப்பனிடம் மனந்திறந்து ஜெபம் செய்தபோது, “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உங்களுடைய பெயரை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று சொன்னார். (யோவா. 17:6) அவருடைய அருமையான முன்மாதிரியை நாம் பின்பற்ற விரும்புவதால், உலகெங்கும் யெகோவாவின் பெயரை ஊக்கமாய் அறிவிப்பதற்கு எப்போதையும்விட இப்போது திடத்தீர்மானமாய் இருப்போமாக.

‘நற்செய்தியைக் குறித்து முழுமையாய்ச் சாட்சி கொடுங்கள்’ என்ற 2009-ஆம் வருடத்திற்கான வசனம், நம்முடைய ஊழியத்தை முழுமையாய்ச் செய்துமுடிக்க நம்மைத் தூண்டுவித்தது. (அப். 20:24) கடந்த ஊழிய ஆண்டில் நாம் எடுத்த முயற்சிகளை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவின் பெயருக்குப் புகழும் மகிமையும் ஏற்படும் விதத்தில் உலகெங்கும் அபார சாட்சி கொடுக்கப்பட்டது. நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்பதிலும், அன்றாடப் பிரச்சினைகளுக்குப் பரிகாரங்களை நாடுகிற நல்மனமுள்ள ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கற்பிப்பதிலும் புதிய உச்சநிலை எண்ணிக்கையாக 73,13,173 பிரஸ்தாபிகள் ஈடுபட்டார்கள். கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்பில் 1,81,68,323 பேர் கலந்துகொண்டார்கள்; இது, இன்னும் லட்சக்கணக்கானோர் இந்தக் கெட்ட சகாப்தம் முடிவடைவதற்கு முன்பாக யெகோவாவின் பெயரில் கூப்பிட ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதைக் காட்டுகிறது.

யெகோவா அனுமதிக்கும்வரை, அவருடைய அரசாங்கத்தின் நற்செய்தியை நாம் தொடர்ந்து பக்திவைராக்கியத்தோடு அறிவிப்போம்; நம்முடைய பிராந்தியங்களில் உள்ளவர்களைச் சந்திக்க எல்லா விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வோம். (மத். 24:14; மாற். 13:10) ஆகவே, எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு யெகோவாவின் பெயரையும் அவருடைய நோக்கத்தையும் அறிவிக்க முயற்சி செய்வோமாக; அதற்கு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது, தெரு ஊழியம் செய்வது, கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் சாட்சி கொடுப்பது, அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது என எல்லா விதங்களிலும் முயற்சி செய்வோமாக.

சீக்கிரத்தில் யெகோவா தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார் என நாம் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. (எசே. 36:23) கடவுளுடைய பெயரை அவமதிக்கிற எல்லாருடைய வாயும் அடைக்கப்படுவதற்கான நாள் வேகமாய் நெருங்கி வருகிறது. யெகோவாவின் பெயரை எல்லாருக்கும் அறிவித்து அவருடைய சர்வலோகப் பேரரசாட்சியை ஆதரித்து வந்திருக்கிற அவருடைய உண்மை ஊழியர்கள் அனைவருக்கும் அது எப்பேர்ப்பட்ட மகத்தான நாளாக இருக்கும்!

யெகோவா தம்முடைய மக்கள்மீது எந்தளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது, “விழிப்புடன் இருங்கள்” என்ற தலைப்பில் 2009-ல் உலகெங்கும் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் வெகு தெளிவாகத் தெரிந்தது. இவை, நம்முடைய தேவராஜ்ய வரலாற்றில் ஒரு மைல்கல்லாய் இருந்தன; யெகோவாவின் நாளுக்காக விழிப்புடன் இருப்பது எந்தளவு அவசியம் என்பதை நன்கு மனதில் பதிய வைத்துக்கொள்ள நம்மைத் தூண்டின.—மாற். 13:37; 1 தெ. 5:1, 2, 4.

யெகோவா உண்மையிலேயே நமக்கு நன்மை செய்கிறார்; நம்முடைய இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார். அவர் நம்மைப் பசும் புல்வெளிமீது இளைப்பாறச் செய்கிறார்; அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறார்.—சங். 23:1, 2, பொது மொழிபெயர்ப்பு; 100:2, 5.

வரவிருக்கும் மாதங்களில் யெகோவாவுக்கு நீங்கள் ஊக்கமாய்ச் சேவை செய்து வருகையில் அவர் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்பதில் நிச்சயமாய் இருங்கள்!

உலகெங்குமுள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்குக் கனிவான கிறிஸ்தவ அன்பை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு